Pages

திங்கள், ஜூன் 21, 2010

சரித்திரம் மறக்கலாமா ? - அஞ்சலை அம்மாளின் வரலாறு

சரித்திரம் மறக்கலாமா ? - அஞ்சலை அம்மாளின் வரலாறு
சந்தனமுல்லை




”விடுதலைக்கு மகளிரெல்லாம் 
வேட்கை கொண்டனம்” - என்று பாரதி, பெண் விடுதலைக்கு அறைகூவல் விட்ட காலகட்டத்தில் பெண் விடுதலையை விட தாய்நாட்டின் விடுதலை முக்கியம் என்று களத்தில் குதித்தவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் தெய்வத்தாய் என்றும் வேலு நாச்சியார் என்றும் போற்றப்படும் திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்கள். 1921ல் இந்திய சுதந்திரப் போர் அரங்கில் இறங்குகிறார். சாதாரண நெசவு குடும்பத்தில் பிறந்தவர். குறைந்த படிப்பறிவு இருந்தாலும் அறிவும் துணிவும் அனுபவமும் எப்படி வந்திருக்கும்? இவை இந்த சமூகம் பாய்ச்சிய வீர ரத்தத்தின் வெளிப்பாடு அல்லவா! 

”விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை 
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்” - என்று பாரதி முழங்கிய கனவை நனவாக்கியவர் அல்லவா இவர். சமகால பெண்ணிய எழுத்தாளர் அம்பை மிகவும் ஆதங்கத்துடன் ஒரு கதையில் சொல்வார் -இந்தப் பெண்கள் அறிவையும், திறமையையும், சமையலறையிலே முடக்கி வைத்துக் கொள்கிறார்களே - தோராயமாக ஒரு பெண்ணின் ஆயுள் காலத்தில் 2,92,000 தோசை சுடுபவளாக இருக்கிறாளே! ஆனால், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மரபு என்னும் விலங்கை உடைத்தெறிந்துவிட்டு வாழ்வு என்பது குடும்ப வாழ்வு மட்டுமல்ல, சமுதாய வாழ்வும்தான் என்று முழங்கி குடும்பத்தினருடான் வீதியில் இறங்கியவர் அஞ்சலை அம்மாள்.

ஆம், இவர் நேருவின் குடும்பம் போல என்று சிலர் சிலாகித்து எழுதுகின்றனர். பேசுகின்றனர். ஆனால், இவர்கள் இன்னும் ஒருபடி மேல் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும். நேருவுக்கு பொருளாதார பலம் இருந்தது. குடும்பமும் சிறிய குடும்பம்தான். ஆனால், இவர் குடும்பமோ பெரிய குடும்பம். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பம். அன்றைய உழைப்புதான் அன்றைய சாப்பாடு என்றிருக்கும் போது எந்த துணிவில் அவர் சுதந்திர போரில் இறங்கியிருப்பார்? அதுவும் அந்த காலத்தைச் சேர்ந்த பெண்! பெண்களை நான்கு சுவர்களுக்குள்ளேயே வைத்து வெட்டி வீரம் பேசும் சமூகம்! ஆய்வுக்குரிய சிந்தனையாக எடுத்துக் கொள்ளவும். அமெரிக்க பெண்கள் விடுதலை போராட்ட வீராங்கனை பெட்டி ஃப்ரைடன் நீண்ட நாள் போராட்ட அனுபவத்திலிருந்து சொல்வது - “ஆண்கள் ஒரு தனி வர்க்கமல்ல. பெண்கள் ஒரு தனிவர்க்கமல்ல. பெண்கள் மட்டும் தனியாக முன்னேறலாம் என்று நினைப்பது தவறு”. தான் மட்டுமல்லாமல், கணவருடன், குழந்தைகளுடன் போராட்டத்தில் இறங்குகிறார்.

கணவர் - முருகப் படையாச்சி
பெண் - லீலாவதி
மகன்கள் - காந்தி,ஜெயில்வீரன்(தற்போது ஜெயவீரன்) 

கர்ப்பிணியாக சிறைபுகுந்து பேறுகாலத்தில் அனுமதியுடன் வெளியே வந்து ஆண் மகவுடன் மறுபடியும் சிறை புகுகிறார், சிறை அதிகாரிகள், ஜெயில் வீரன் என்று குழந்தைக்கு பெயரிட்டு இப்போது ஜெயவீரனாக கடலூரில் வசிக்கிறார். 

எப்படி ஒரு பெண்ணால் இது சாத்தியமாயிற்று?

“நாங்கள் இந்தியப் பெண்மணிகள்
நாங்கள் மலரினும் மென்மையானவர்
நாங்கள் சுட்டெரிக்கும் தீச்சுடர்கள்” - என்ற ஒரு பெண் கவிஞரின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்திய விடுதலைக்காக தீவிரவாதியாக மாறிய மாடம் காமா, நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து போராடிய அருணா ஆசிப் அலிக்கும் சற்றும் குறைந்தவரல்லர் அஞ்சலை அம்மாள்.


1921 - சுதந்திர போராட்டத்தில் இறங்குகிறார்.
1927 - நீலன் சிலை அகற்றும் போரில் ஒரு வருடம் சிறை தண்டனை - சென்னையில்
1931 - உப்புக்காய்ச்சல் போராட்டத்தில் ஆறுமாத சிறை தண்டனை - கடலூரில்
1933 - மறியல் போரில் மூன்று மாத சிறை - கடலூரில்
1940 - தனி நபர் சத்தியாகிரகத்தில் முதலில் 6 மாதம்
1940 - 18 மாதங்கள் - வேலூர்
1943 - 8 மாதம் 2 வாரம் - பெல்லாரி

ஆக, நான்கு வருடம் ஐந்தரை மாதம் சிறைவாசம். தமிழ்நாட்டில் முதன் முதலில் சத்தியாகிரகத்தில் சிறை புகுந்த பெண்கள் என்ற பெருமைக்குரியவர்கள் : 

1. அஞ்சலை அம்மாள்
2. மதுரை பத்மாசனி அம்மாள்

கள்ளுக்கடை இருக்குமிடமெல்லாம் அச்சிட்ட (குடியை கைவிடத் தூண்டும்) நோட்டீஸ்களை வழங்கிக் கொண்டே அஞ்சலை அம்மாள் மறியல் செய்வார். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மகாநாட்டுக்கு தலைமை தாங்கி ஒரு பெண்கள் படையுடன் அஞ்சலையம்மாள் கைதானார். பிறகு ஜில்லாபோர்டு உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து 20-06-1961 இல் அமரரானார். 

இவருடைய மகள் அம்மாப்பொண்ணு என்கிற லீலாவதி (காந்தி இட்ட பெயர்) 
தன்னுடைய 9வது வயதில் நீலன் என்ற கொடுங்கோலன் சிலையை அகற்றுவதற்காக தாயுடன் சென்னை வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவர்களுடன் தந்தையும் போராடும் போது அனைவரும் கைது செய்யப்பட்டு லீலாவதி செனனி சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார். 1931ல் விடுதலையான பிறகு காந்தியின் வார்தா ஆசிரமத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சேவையில் ஈடுபட்டார். 

இவருடைய கண்வர் திரு.ஜமதக்னி வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்தில் உள்ள கடப்பேரி என்ற சிற்றூரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். காந்தியடிகளில் முதல் இயக்கம் முதல் இறுதி இயக்கம் வரையில் எல்லாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தவர். தமிழ்,ஆங்கிலம்,இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றில் புலமை பெற்று பல விருதுகளை குவித்தவர். ஜமதக்னி அவர்களின்நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைப் பற்றி ஆர்வியின் தளத்தில் காணலாம். 
இவர்களுடைய புதல்வி திருமதி.சாந்தி பெரியார் சிந்தனையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று சென்னையில் வசிக்கிறார்.

ஆக, இவ்வளவு தியாகங்கள் செய்த குடும்பம் வரலாற்று ஏடுகளில் எங்கே உள்ளது? இந்த சரித்திர சுவடுகள் பெண்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில்/ தென்மாவட்டத்தில் சுதந்திரபோராட்டத்திற்கு பங்களித்த எத்தனை பெண்கள் உடனே நம் நினைவுக்கு வருகின்றனர்? பெண்களின் போராட்டங்களை இந்த சமூகம் மறைக்கிறது அல்லது மறக்கிறது! 

சிறையில் அடைபட்டிருக்கும்போது கடலூரில் அஞ்சலை அம்மாளின் வீடு ஏலத்திற்கு வந்தபோது, ஒரு முஸ்லீம் குடும்ப நண்பர் சமயத்தில் உதவி செய்கிறார். அஞ்சலை அம்மாளின் குழந்தைகளை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. பொருளாதார பிரச்சினை ஒரு புறம், பாதுகாப்பின்மை ஒரு புறம் - அதன் தாக்கம் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.

அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது? யார் இதை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பது? யார் யாருக்கோ சிலை நிறுவும் அரசாங்கம் அவர்களை எப்படி மறக்கலாம்?இவர்கள் சாதி, மதங்கள் தாண்டி வெளியில் வந்து போராடியவர்கள் ஆயிற்றே! History என்பது his-story மட்டுமல்ல her-storyயையும் உள்ளடக்கியது தானே! அரசு செய்ய மறந்தால் அல்லது மறுத்தால் இந்த சமுதாயமாவது அன்னாருக்கு சிலையெடுத்து சரித்திரத்தை திரும்பி பார்க்க வைக்கட்டும்! 


”போற்றித்தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
”போற்றித்தாய்” என்று பொற்குழலூதடா!!


நன்றி: சந்தனமுல்லை
http://www.tamilmanam.net/printer_friendly.php?id=565960

விடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்




இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போயின. வரலாற்றுத் தரப்படி நிலையில் இத்தகைய பிழைகள் இன்று வரைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவர்தான் விடுதலைப் போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்பாள்.


கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ஆம் எண் இல்லத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள் திண்ணைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெணமணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும். 


1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே அஞ்சலையம்மாளின் பொது வாழ்க்கைத் தொடங்கி விட்டது. 1927 ஆம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம், 1930-உப்பு சத்தியாகிரகப்போர், 1933-கள்ளுக் கடை மறியல், 1940- தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு கடலுர், திருச்சி வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் நானகரை ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றவர். குறிப்பாக வேலுர் பெண்கள் சிறை அவர் அடிக்கடி சென்று வந்த சிறையாகும். 1932 ஆம் ஆண்டு வேலுர் பெண்கள் சிறையில் 727 ஆம் எண் கைதியாக அஞ்சலையம்மாள் இருந்த போது அவர் நிறை மாத கர்ப்பிணி, சிறையிலேயே குழந்தை பிறந்துவிடுமென்பதால் அவரை வெளியில் அனுப்பி குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனால் சிறையில் குழந்தை பிறந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை.

 அப்போது பிறந்தவர்தான் ஜெயவீரன் இன்றும் கடலூர் முதுநகரில் சின்னஞ்சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள நற்குணம் என்ற சிற்றூரில் முருகப்படையாட்சி என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். அஞ்சலையம்மாளின் அரசியல் பணிக்கு உறுதுணையாகக் கணவரும் கடலுரிலேயே தங்கி விடுதலைப் போரில் பங்கேற்று அவரும் பல முறை சிறை சென்றுள்ளார். இவர்களின் மூத்த மகள் அம்மாப்பொண்ணு ஒன்பது வயதிலேயே நீலன் சிலையகற்றும் போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அவரை காந்தியடிகள் வார்தாவுக்கு அழைத்துச் சென்று லீலாவதி எனப் பெயர் சூட்டி சபர்மதி ஆசிரமத்தில் வளர்த்தார். அங்கு செவிலியர் படிப்பை முடித்து சென்னை வந்ததும் தன்னைப்போலவே இளம் வயதில் விடுதலைப் போரில் ஈடுபட்ட பன்மொழிப் புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்து கொண்டார். 



காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அஞ்சலையம்மாள் அரும்பாடு பட்டுள்ளார். கடலூரில் அஞ்சலையம்மாளின் இல்லம் எப்போதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த வண்ணமிருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்காக செலவிட்டிருக்கிறார். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது நல்ல உள்ளம் கொண்ட சிலர் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலையம்மாள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.

1946 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. "கதர் என்று மகாத்மா கொண்டு வந்தார், கிராமங்களில் நூற்றால் ஒரு சிட்டம் இரண்டரை அணா விற்கிறது. இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போகாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கத்திலே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமில்லாமல் கவுரவமாய் இருப்போம்... கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப்
போய்விடுவார்கள். பத்து மணிக்கு அவர்களுக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டு இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" .(சட்டமன்ற அவைக்குறிபு தொகுதி-1,பக்.317,மே,ஜூன்-1946) ஏழைப் பணக்காரர் நிலையை ஒப்பிட்டு பேசியது அவரின் பொது உடைமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. 



உழவு, நெசவு ஆகிய இரு தொழில்களையும் அவர் குடும்பத்தினர் செய்துள்ளனர். இருப்பினும் நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாகச்செய்துள்ளனர். இவர் கணவர் முருகப்படையாட்சி 1932 ஆம் ஆண்டு கடலுர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு வயது 56 தொழில் நெசவு என்று சிறைப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஞசலையம்மாளும் அவர் கணவர் முருகப்படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தரி நெசவு செய்து நீண்டநாள் கட்சிப்பணி செய்துள்ளனர். நெசவு செய்த கைத்தரி துணிகளைச் சுமந்து கொண்டு தந்தைப் பெரியாரோடு சென்று சிற்றூர்களில் விற்றுள்ளனர். அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றியுள்ளார். அப்போது அவரின் முயற்சியால் தான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ் கதிர் கருவி கொண்டுவரப் பட்டுள்ளது. ஒரு முறை கடலூருக்கு காந்தியடிகள் வந்த போது அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு மாறு வேடத்தில் காந்தியடிகளை குதிரை வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளை தென்னாட்டின் ஜான்ஸிராணி என அழைத்தாராம்.


பண்ணுருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் நல்ல குடி நீர் கிடைக்காமல் மக்கள் நரம்பு சிலந்தி நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அத்தகைய சிற்றூர்களில் அஞ்சலையம்மாள் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார். வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்கு பாசன நீர் செல்லும் பெரிய வாய்க்காலில் ஒரு கிளை வாய்க்காலை ஏற்படுத்தி தீர்த்தாம்பாளையம் என்ற சிற்றூருக்கு பாசன வசதி செய்தார் அவ்வாய்க்கால் இன்றும் அஞ்சலை வாய்க்கால் என்றே குறிப்பிடப் படுகிறது. 


இத்தகைய வரலாற்று நாயகியை நம் வரலாற்றுப் பாட நூல்கள் எப்படி சிறப்பித்துள்ளது தெரியுமா? கடலூர் அஞ்சலையம்மாள் விடுதலை வீரர்களுக்குக் காவல் துறை வளாகத்திலேயே உணவு சமைத்துக் கொடுத்தார் அதனால் அவர் சிறைத் தண்டனைப் பெற்றார் என எழுதப்பட்டுள்ளது அஞ்சலையம்மாளின் வரலாறு. 


பெண் என்பவள் சமைக்கப் பிறந்தவள் என்னும் ஆணாதிக்கப் பொதுப் புத்தியின் வெளிப்பாடுதான் இது.


நன்றி: http://cuddaloreseidhi.blogspot.com/2010/01/blog-post_03.html

செவ்வாய், ஜூன் 15, 2010

ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு அஞ்சுவது யார்?

நடப்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஜாதிவாரியான மக்கள் தொகை புள்ளி விவரங்களையும் அரசு திரட்டும் என்று மத்திய அரசு அறிவித்தது முதல், இது நாட்டிற்குக் கேடு பயக்கும் என்றும், ஜாதிச் சண்டைகளை இது பெருமளவில் ஏற்படுத்தும் என்றும் கூறி ஊடகங்கள் ஒரு பெரும் தவறான பரப்புரையை மேற்கொண்டன. தற்போது நிலவும் குழப்பத்தைப் போக்கி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், அவர்களுக்கான நலஉதவித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும், ஜாதிவாரி மக்கள் தொகை புள்ளி விவரங்கள் மிகுந்த உதவியாக இருக்கும் என்று ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாக இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பது என்ற முடிவை அரசு தானாக மேற்கொள்ளவில்லை. நாடு முழுவதிலும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் தலைவர்கள் அதைக் கோரினர். ஜாதிவாரி மக்கள் தொகையின் சரியான புள்ளி விவரங்களைப் பெறுவதற்கு ஏற்றவாறு மக்கள் தொகைக் கணக்-கெடுப்பை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள உச்ச நீதி-மன்றம் ஆணையிட்டு இருந்தது.

2001 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் கூட இவ்வாறு ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டும் என்ற பலமான கோரிக்கை இருந்தது. இந்தப் புள்ளி விவரங்கள் திரட்டப்படும் என்று உதவிப் பிரதமர் எல்.கே.அத்வானி கூறியது பதிவாகியுள்ளது. ஆனால் வலதுசாரி ஆதிக்க சக்திகள் குறிப்பாக சமூக இயலாளர்கள் மற்றும், மனித-இயல்பு இயலாளர்களின் குழு ஒன்று, அத்தகைய கணக்கெடுப்பு ஆளும் உயர்ஜாதி மற்றும் சமூகங்களின் நலனுக்கு எதிரானது என்பதால், அதை மேற்கொள்ள வேண்டாம் என்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஆலோசனை கூறினர்.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உயர்ஜாதியினர்தான் எதிர்க்கின்றனர்

அதிகார மய்யங்களை இன்னமும் தங்களின் பிடியில் வைத்திருக்கும் உயர்ஜாதியினரிடமிருந்துதான் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்-கான எதிர்ப்பு வருகிறது. இதர ஜாதியினர் எப்போதுமே அதை எதிர்த்தது இல்லை. கொள்கை வகுப்பவர்களுக்கும், பொது மக்களுக்கும் ஒவ்வொரு ஜாதியிலும் இருக்கும் மக்கள் தொகை தெரிய வந்தால், சமூகம் மேலும் பிளவுபட்டுப்போகும் என்ற விவாதம் தவறாக வழிகாட்டுவதாகும்.

தங்கள் ஜாதி மக்கள் தொகை அதிகம் என்று ஒவ்வொரு ஜாதியினரும் கூறுவதை எவ்வாறு மறுக்க முடியும்?

ஜாதி கலாச்சாரம் நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் இருக்கிறது. உயர்ஜாதி மக்கள் மொத்தத்தில் 15 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர் என்று தாழ்த்தப்பட்ட பிரிவினர் கூறுகின்றனர். இது தவறாகவும் கூட இருக்கலாம். கீழ் ஜாதிகள் பலவற்றில் மக்கள் தொகை எண்-ணிக்கை மிகைப்படுத்திக் கூறப்படு-கின்றது. ஒவ்வொரு ஜாதியும் தங்களின் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்று உரிமை கோரி தங்களுக்குச் சேரவேண்டிய சரியான பங்கினை அளிக்கக் கேட்கின்றனர். அவர்களின் கோரிக்கை தவறானது என்று அவர்களுக்கு எவ்வாறு கூறுவது? அன்றாட வாழ்க்கை முறையில் ஜாதி என்பது இது போன்ற ஒரு முக்கியமான அம்சமாக விளங்கும் நிலையில், உங்கள் ஜாதியில் இவ்-வளவு மக்கள் தொகைதான் உள்ளது, இதற்கு மேல் நீங்கள் உரிமை கோரமுடியாது என்று அவர்களிடம் சொல்வதற்கு, ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் கையில் தயாராக இருக்க வேண்டும்.

ஜாதியின் அடிப்படையிலேயே அனைத்தையும் விநியோகிக்க நம்மால் முடியாது என்பது உண்மைதான். கல்வி அறிவு பெற்றவர் விகிதாசாரம் மற்றும் பிரதிநிதித்துவ அளவு ஆகியவை குறித்த ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள்தான் சரியான அடிப்படையாக இருக்கும். மக்கள் தொகைக் கணக்கை நாம் ஒரு முறை சொல்லிவிட்டால், அந்த ஆதாரத்திற்கு எந்த எதிர்ப்பும் இருக்க முடியாது.

மேல் ஜாதியினரின் அச்சம்

கீழ் ஜாதி மக்கள் தொகை பற்றிய விரிவான புள்ளி விவரங்கள் ஒரு முறை கிடைத்து விட்டால், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற துறைகளில் சரியான அளவு விகிதாசார பிரதி-நிதித்துவம் கோருவதற்கான அடிப்படையாக ஆகிவிடுமே என்று உயர்ஜாதியினர் அஞ்சுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் ஒரு முறை கிடைத்துவிட்டால், இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 விழுக்காடு உயர் அளவு பற்றி கேள்வி எழுப்பப் பட-லாம். ஒட்டு மொத்த தாராளமான மக்களாட்சி நடைமுறை நீடித்து நிலைக்க இது உதவும். எண்ணிக்-கையின் அடிப்படையிலான மக்களாட்சி இன்னும் ஆழம் நிறைந்ததாக ஆகிவிடும்.

மக்களாட்சி முறையே எண்ணிக்கையின் அடிப்படையிலானதுதானே?

கம்யூனிசம் போல் அல்லாமல் மக்களாட்சி என்பது உண்மையில் ஓர் எண்ணிக்கை முறையாகும். ஓர் அரசை ஏற்படுத்தும்போது கம்யூனிசம் எண்ணிக்கையைப் பார்ப்பதில்லை. மக்களாட்சி முறையில், அரசு ஒரு தேர்தல் நடைமுறை மூலம் உருவாக்கப்படுகிறது. இது போன்றதொரு நடைமுறையில், பால், இனம், மதம், ஜாதி போன்ற அனைத்து கோணங்களிலும் மக்கள் எண்ணப்படவேண்டும். எண்ணிக்கையின் அடிப்படையிலான மக்களாட்சி முறையில், சமூகத்தின் எந்தப் பிரிவினர் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரமுடியும்.

மதவாரி கணக்கெடுப்பு இல்லாமல் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்று எப்படி தெரியவந்தது?

மதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதால், இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஆட்சி அதிகாரத்துக்கு அவர்கள் உரிமை கோருகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, நாடு பிரிவதைத் தடுக்க முகம்மது அலி ஜின்னாவை இந்தியாவின் முதல் பிரதமராக ஆக்க வேண்டும் என்று காந்தி கேட்டபோது, இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு நாடு இந்தியா என்பதால், ஒரு முஸ்லிம் பிரதமரை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஜவஹர்லால் நேருவும், சர்தார் படேலும் கூறினர். இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள் என்ற கண்ணோட்டம் எங்கிருந்து வந்தது? அது எண்ணிக்கையில் இருந்து வந்தது.

எண்ணிக்கை அடிப்படையில் பெண்கள் அதிகாரத்துக்கு வரமுடியாதா?

இதே வாதத்தையே வைத்துக் கொண்டு, மதப் பிரிவினையைக் கடந்து, பெண்கள் தங்களை எண்ணிக்கொண்டு, ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதிகாரத்துக்கு வந்தால், அதில் என்ன தவறு இருக்க முடியும்? மொத்த மக்கள் தொகையில் பெண்கள் 50 விழுக்காடு இருக்கின்றனர். பாலியல் மக்களாட்சிக்கு போராட அவர்கள் விரும்பினால், அவர்களாலும் அதிகாரத்திற்கு வரமுடியும். அப்படிப் பார்த்தால், பால் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் எழவேண்டும் அல்லவா?

மக்கள் ஆட்சி முறையில் உயர்ஜாதியினர் தனிமைப்படுத்தப்பட்டு விடவும் கூடும் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், கீழ் ஜாதி மக்களின் உறுதியான ஆதரவுடன் இந்தியாவின் மக்களாட்சி சிறப்பாக செயல்படும். தங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தங்களின் பங்கைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். இந்த மாதிரியான ஒரு மாற்றம் ஏற்பட்டால், மக்களாட்சி முறையில் இருந்தே உயர்ஜாதியினர் தனிமைப்படுத்தப்பட்டுவிடக்கூடும். பெண்களால் ஆளப்படும் ஒரு மாநிலத்தையோ அல்லது நாட்டையோ பெண்களாட்சி முறை என்று அவர்களால் அழைக்க முடியுமா?

அனைத்து கோட்பாடுகளுமே, வசதியான இடம் என்று அறியப்பட்டுள்ள ஒரு வசதியின் மீது கட்டமைக்கப்பட்டவைதான் என்று ஆழ்ந்த சிந்தனையின்பால் வெளிப்பட்ட சமூகமனோதத்துவம் கூறுகிறது. சிவப்பு நிறம் கொண்ட உயர்ஜாதியினர் வெள்ளையர் சமூகத்தில் வாழ்ந்தால், அவர்கள் காணும் சிவப்பு நிறத்தின் அடியில் கருப்பு நிறமும் மறைந்து இருப்பதைக் காண்பர். வெள்ளையர் சமூகத்தில் சிவப்பு நிற மனிதர்கள் இணக்கமாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. ஆனால், இந்தியாவில் தங்கள் சிவப்பு நிறத்தைப் பெருமையாகக் கருதும் அவர்கள் கருப்பு நிறத்தவர்களை இணக்கமாக ஏற்றுக் கொள்வதில்லை.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன் இந்தியாவில் ஜாதியே இருக்கவில்லையா?

ஆங்கிலேயர் காலனி நாடுகளில் மேற்கொண்ட நடைமுறைதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியைக் கணக்கிடுவது என்று உயர்ஜாதி அறிவாளிகள் பலர் கூறுகின்றனர். ஆங்கி-லேயர் இத்தகைய ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முறையை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பு இந்தியாவில் ஜாதியே இல்லாமல் இருந்தது போல அவர்கள் பேசுகின்றனர். இந்த வாதத்தை வைத்துப் பார்த்தால், மதவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தும் முன், இந்தியாவில் மதங்களே இல்லாமல் இருந்திருக்க வேண்டுமே? இது போன்ற கருத்துப் பார்வையற்ற கரும்புள்ளிகள் இந்தியாவில் பல இடங்களில் இருப்ப-தால்தான், நாம் இன்றும் அறிவியல் களத்தில் பின்தங்கியே இருக்கிறோம்.

நமது மக்களாட்சி நடைமுறை பலம் பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் மட்டுமன்றி அனைத்து ஜாதியினருமே கணக்கிடப்பட வேண்டும். எனது கோட்பாடும் கரும்புள்ளியாக இருக்கலாம்; ஆனால் அது தீங்கை நீக்கும் ஓர் எதிர்மறை பாதிப்பாகவும் இருக்கக் கூடும்.

நன்றி: டெக்கான் கிரானிகல்,
11.6.2010 இல்காஞ்சா அய்லய்யா அவர்கள் எழுதிய கட்டுரை
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்--"விடுதலை” 14-6-2010

நன்றி: தமிழ்ஓவியா

http://thamizhoviya.blogspot.com/2010/06/blog-post_15.html