Pages

செவ்வாய், மே 31, 2011

இந்தியாவின் மூடத்தனமும் ஜெர்மனியின் முன் எச்சரிக்கையும்!


உலக வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வொன்று ஜெர்மன் நாட்டில் நடந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகின் மிகமுன்னேறிய நாடான ஜெர்மனி "அணுசக்திக்கு விடை கொடுப்பதாக" அறிவித்துள்ளது. அதாவது, ஜெர்மனியுடன் ஒப்பிடும்போது தொழில்நுட்பத்தில் பின் தங்கியுள்ள இந்தியா புதிய அணுசக்தி திட்டங்களை தொடங்கும் இந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாடு அதை ஒரே அடியாக ஒழிக்க முன்வந்துள்ளது.

ஜெர்மன் மட்டுமல்ல, ஜப்பான் நாடும் கூட அண்மை சுனாமியில் சிக்கி சீரழிந்த பின்னர் புத்திவந்து 38 அணு உலைகளை மூடிவருகிறது.

மக்கள் எழுச்சி

ஜெர்மன் நாட்டின் அணுமின் நிலையங்கள் மூடும் திட்டம் தானாக வந்ததல்ல. அது மக்கள் எழுச்சியால் உருவானது. செர்னோபில் அணு உலை கதிர்வீச்சால் ஜெர்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போதிருந்தே ஆயிரக்கணக்கானோர் அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆளும் கிறித்தவ ஜனநாயகக் கட்சியின் அணுசக்தி ஆதரவு திட்டங்களை ஜெர்மன் பசுமைக் கட்சி கடுமையாக எதிர்த்தது. மார்ச் 2011 இல் நடந்த Baden-Wuerttemberg எனும் மாநிலத் தேர்தலில் கிறித்தவ ஜனநாயகக் கட்சி படுதோல்வியடைந்து பசுமைக் கட்சி ஆட்சியை பிடித்தது. (உலகிலேயே பசுமைக் கட்சி ஒரு மாநில ஆட்சியை பிடிப்பது இதுதான் முதல் முறை).
ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தனது கோள்கைகள் வலுவிழந்து வருவதை உணர்ந்த ஆளும் ஜெர்மன் தேசிய அரசாங்கம், இப்போது அணுசக்திக்கு முடிவு கட்ட முன்வந்துள்ளது. இதன்படி, இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தையும் 2022-க்குள் மூடிவிட அந்நாடு முடிவு எடுத்துள்ளது.

ஜெர்மன் அரசின் அறிவிப்பு

அணுசக்தி பிரச்னை தொடர்பாக 30.05.2011 அன்று நடந்த கூட்டத்தில் 'அணுமின் நிலையங்களை ஒரேயடியாக மூடுவது' என்று எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த கிறித்தவ ஜனநாயகக் கட்சி பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் "எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன" என்று கூறியுள்ளார்.

இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோட்ஜென் "இந்த முடிவு இறுதியானது. மாற்றப்படாதது. நாட்டில் மொத்தம் 17 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், பழைமையான 8 அணுமின் நிலையங்களின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்படும். 6 அணுமின் நிலையங்கள் 2021-லும், 3 அதிநவீன அணுமின் நிலையங்கள் 2022-லும் மூடப்படும்" என்று கூறியுள்ளார்.
அணுமின் உற்பத்தியின் இழப்பை ஈடுகட்டும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஜெர்மனி மாற வேண்டியுள்ளது. இதற்காக எரிசக்தித் துறையில் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டின் 40 சதவீத மின் தேவையை அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய உயிர் மலிவானது!

இந்தியாவின் மின் தேவையில் வெறும் 2.5 சதவீதத்தை மட்டுமே இந்தியாவின் இப்போதைய 20 அணுமின் திட்டங்கள் நிறைவு செய்கின்றன. இதனை 2050 ஆண்டு வாக்கில் 25 சதவீதமாக அதிகரிக்கப் போகிறார்களாம். பொருளாதாரத்திலும் தொழில்நுபத்திலும் இந்தியாவைவிட பன்மடங்கு முன்னேறியுள்ள ஜெர்மனியிலேயே "அணுசக்தி பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்காது" என்றால் - அது பின் தங்கிய இந்தியாவில் மட்டும் எப்படி நன்மையானதாக அமையும்?

தங்கள்து மின் தேவையில் 40 சதவீத மின்சாரத்திற்கு மாற்று வழியை ஜெர்மனி தேடும் போது, வெறும் 2.5 சதவீத மின்சக்திக்கு மாற்றுவழி கண்டுபிடிக்க இந்தியாவால் முடியாதா? அணுசக்தி முட்டாள்தனத்தை இந்திய ஆட்சியாளர்கள் எப்போது கைவிடுவார்களோ?

அமெரிக்க நிறுவனங்களின் லாபத்தைவிட இந்திய மக்களின் உயிர் மலிவானது என்கிற நிலை நீடிக்கும் வரை இந்த மூடத்தனம் தொடரவே செய்யும்.


திங்கள், மே 30, 2011

உண்மைத்தமிழனின் உளறல் - ஹெல்மெட் அவசியமா?


இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காக மன்னிக்க வேண்டுகிறேன். இதற்கு உண்மைத்தமிழனின "ஹெல்மெட் அவசியமா..?" எனும் கட்டுரைதான் காரணம். உண்மைத்தமிழன் அவர்களின் பல அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான கட்டுரைகளை கண்டு நான் வியந்திருக்கிறேன். பதிவுலகில் அவர் ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கி வருகிறார். ஆனால், தலைக்கவசம் அணிவது குறித்த அவரது கட்டுரை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. இப்படி பொறுப்பற்ற கட்டுரையை அவர் எழுதியிருப்பது ஒரு வாய்ப்புக்கேடான நிகழ்வு.

சாலைவிபத்துகள் - சாதாரண நிகழ்வா?

உலகெங்கும் சாலைவிபத்துகளில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் சாகிறார்கள். 5 கோடி பேர் காயமடைகின்றனர். அதில் பலர் நிரந்தரமாக உடல் உறுப்புகளை இழக்கின்றனர். இவை அனைத்தும் தவிர்க்கக் கூடியவை.

உலகிலேயே மிக அதிகமானோர் சாலைவிபத்துகளில் பலியாகும் நாடு இந்தியா. இங்கு 2009 ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 27 ஆயிரம்பேர் சாலைவிபத்துகளில் இறந்துள்ளனர். இந்திய அளவில் மிக அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. 2009 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த 60,794 விபத்துகளில் 13,746 விபத்துகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.

அதாவது ஆயிரம் இந்தியர்களில் 57 பேர்தான் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் நடக்கும் 1000 சாலைவிபத்துகளில் 144 விபத்துகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன.

அகில இந்திய மாநகரங்களில் புதுதில்லிக்கு அடுத்ததாக அதிக விபத்துகள் நடக்கும் மாநகரம் சென்னை. இங்கு 2010 ஆம் ஆண்டில் சாலைவிபத்துகளில் 1415 பேர் இறந்துள்ளனர்.
சாலைவிபத்துகள் அரசின் குறைபாட்டால் நேர்பவை. இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு இதனை புரிந்துகொள்ள முடியும். உலகில் சாலை விபத்துகளை கணக்கிட - ஒரு லட்சம் வாகனங்கள் சாலையில் ஓடினால், அதனால் ஒரு ஆண்டில் எத்தனைபேர் இறக்கின்றனர்? - என்பதை வைத்து கணக்கிடுகின்றனர். இதன்படி நெதர்லாந்து நாட்டில் ஒரு லட்சம் வாகனங்களுக்கு 5 பேர் சாலைவிபத்தில் இறக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் 8 பேர், சீனாவில் 56 பேர். ஆனால் இந்தியாவில் 146 பேர்!

தலைக்கவசம் - சாலைவிபத்து இறப்பை தடுக்கும் மிக முக்கிய நடவடிக்கை.

சாலைவிபத்துகளால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க நான்கு முக்கிய நடவடிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை, 1. வேகக்கட்டுப்பாடு, 2. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தல், 3. தலைக்கவசம், 4. மகிழுந்துகளில் வார்ப்பட்டைக் கட்டாயம் - ஆகியனவே அந்த நடவடிக்கைகள் ஆகும். இதுகுறித்த உலக சுகாதார நிறுவன அறிக்கை இதோ: GLOBAL STATUS REPORT ON ROAD SAFETY

தலைக்கவசம் எனும் ஒற்றை நடவடிக்கை மூலம் இருசக்கர மோட்டார் வாகனங்களில் செல்வோரின் சாலைவிபத்து மரணத்தில் 42% இறப்புகளை தடுக்க முடியும், 69% தலைக்காயத்தை தடுக்க முடியும்.
"Head injuries represent the most devastating injury subcategory for motorcyclists. Victims who survive a head injury often suffer brain damage that impedes their ability to continue as a breadwinner, and in fact may require a lifetime of personal care that can drain resources from already impoverished families.


The logic for using helmets to address this issue is straightforward: helmet use makes a difference. A 2005 Cochrane Study highlights that use of a helmet reduces risk of a fatality by an average of 42% and of severe injury by 69%. By extension, high rates of helmet use lead to fewer deaths, shorter hospital stays, and speedier recoveries, all of which reduce the economic burden on society, and the emotional burden on families. Despite these simple truths, helmet use remains low in many countries." http://www.helmetvaccine.org/about/challenge.html

2009 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்றவர்களில் 3251 பேர் மரணமடைந்துள்ளனர் என்கிறது தேசிய குற்ற ஆவணப்பிரிவு. தலைக்கவசம் இவர்களில் பலரது உயிரைக்காப்பாற்றி இருக்கும்.

//விபத்துக்கள் ஏற்படுவதும் வாழ்க்கையில் சகஜம்தானே. விபத்து என்பதே தற்செயலாக நடப்பதுதான். இந்த விபத்தால் ஒருவன் வாழ்க்கை கதை முடிகிறது என்றால் அவன் காலன் வசம் போய்விட்டான் என்று பொருள்.


"இல்லை. இல்லை.. காலனை வெல்வோம்.. காப்பாற்ற ஆயுதம் உண்டு. அணிந்து கொள்ளுவோம்.." என்று மனிதர்களாகிய நாம் அவ்வப்போது கூக்குரலிடுகிறோம். காரணம், நமக்குள் இருக்கும் வாழ்க்கையின் மீதான ஆசை. அப்படி ஒரு ஆசைதான் இந்த ஹெல்மெட் மேட்டர்.// என்கிறார் உண்மைத்தமிழன்.

சாலை விபத்துகளை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள் முடியாது. இப்போது உலகெங்கும் சுமார் 13 லடசம் பேர் ஆண்டுதோரும் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். இதில் அதிகமானோர் அதிக வாகனங்கள் உள்ள மேலைநாடுகளில் இறப்பதில்லை. 90% விபத்துகள் ஏழை நாடுகளில்தான் நேருகின்றன. அதிலும் இந்தியா உலகில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

இதை இப்படியே விட்டால் 2030 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 24 லட்சம் பேராக இறப்புகள் அதிகரிக்கும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. இன்று உலகின் அனைத்து மரணங்களுக்குமான காரணங்களில் 9 ஆவது இடத்தில் (மொத்த மரணத்தில் 2.2%) உள்ள சாலை விபத்துகள் 2030 ஆம் ஆண்டில் 5 ஆவது காரணமாக (மொத்த மரணத்தில் 3.6%) மாறும் எனக் கணிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டுக்கு ஒரு கெட்ட செய்தி.

சாலை விபத்துகளில் 95% மனித தவறுகளால் நேருபவை. மனித தவறு இயல்பு, அரசாங்கம்தான் உரிய கொள்கைகள் மூலம் நிலைமையை மாற்ற வேண்டும். ஒருலட்சம் வாகனங்களுக்கு 5 பேர் மட்டுமே இறப்பு என்கிற நிலை நெதர்லாந்தில் உள்ளது என்றால், அது இந்தியாவில் மட்டும் ஏன் 146 பேராக இருக்க வேண்டும்? அரசாங்கமே இதற்கு காரணம்.

"என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" 

"என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" என்கிறார் உண்மைத்தமிழன். அவர் குறிப்பிடும் 'இவர்கள்' அரசாங்கம் ஆகும். தற்கொலை செய்வது கூட சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட ஒன்று. எனவே, எவரையும் இயல்புக்கு மாறாக சாக அனுமதிக்க முடியாது. அதிலும் சாலை விபத்தென்பது பலநேரங்களில் "தற்கொலை குண்டாக" நடக்கிறது. அதிவேகத்தில் செல்பவர்களும் குடித்துவிட்டு ஓட்டுபவர்களும் தாங்கள் மட்டும் சாகாமல், தற்கொலை குண்டு போல அடுத்தவரையும் கொலை செய்கிறார்கள்.

சாலைவிபத்து மரணங்கள் இளம் வயதில்/உழைக்கும் வயதில் நேர்கின்றன. 15 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டோரின் அகால மரணத்திற்கு முதல் காரணம் சாலைவிபத்துதான் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த வயதில் ஒருவர் இறப்பது அரசாங்கத்திற்கு பெரும் இழப்பாகும். ஏனெனில் கல்வி, நலவாழ்வு என பலவழிகளிலும் அரசின் பணம் அவர்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. மேலும், அடிபட்டு சிகிச்சை அளிப்பதும் அரசின் பொறுப்பாகிறது, அரசின் பணம் செலவாகிறது. அடுத்து சட்டம் ஒழுங்கு - நீதிவிசாரணை என பல வழிகளில் தனிமனித விபத்துகள் அரசை பாதிக்கின்றன.

எனவே, உண்மைத்தமிழனின் கருத்தை புறந்தள்ளிவிட்டு, தயவு செய்து அனைவரும் தலைக்கவசம் அணியுங்கள்.

சாலை விபத்து: முதலிடம் தமிழ்நாடு!!

சாலை விபத்துகள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன. அவை தடுக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை உலகம் முழுவதும் பத்தாண்டுகளுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இப்போது ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை 24 லட்சம் பேராக அதிகரித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

சாலைப் பாதுகாப்பு செயல்பாட்டுக்கான பத்தாண்டுகள் 2011 - 2020 பிரச்சாரத்தின் மூலம் இப்போது நடக்கும் சாலை விபத்துகள் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிற்குள் பாதியளவாக குறைக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை இலக்கு நிர்ணயித்துள்ளது.

உலகில் முதலிடம் இந்தியா. இந்தியாவில் முதலிடம் தமிழ்நாடு.

உலகிலேயே மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது. அகில இந்திய அளவில் மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சாலை விபத்துகளில் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அதில் 13 ஆயிரத்து 700 பேர் தமிழ் நாட்டில் மட்டும் இறந்துள்ளனர். இது இந்தியாவின் சாலை விபத்து சாவுகளில் பத்து சதவீதம் ஆகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
சாலை விபத்துகளில் இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் 16 முதல் 29 வயதுக்குள் இளம் வயதில் இறந்துவிடுகின்றனர். இது ஈடுசெய்ய முடியாத இழப்பாகிவிடுகிறது.

இந்தியாவின் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகளுக்கு மதுப்பழக்கம் காரணமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளுக்கு மதுபானம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

சாலைவிபத்துகளை தடுப்பது எப்படி?

தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கான ஒரு செயல் திட்டத்தை வகுத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக தடுத்தல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குதல், வாகன வேகத்தை கட்டுப்படுத்துதல், மகிழுந்துகளில் செல்வோர் வார்ப்பட்டை அணிவதை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தேவை.

உலகம் முழுவது சாலை விபத்துகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா.சபை சொன்னாலும் - உலகிலேயே மிக அதிக விபத்துகள் இந்தியாவிலும், இந்தியாவிலேயே மிக அதிக சாலை விபத்துகள் தமிழ்நாட்டிலும் நடப்பதால், இந்த சாலைப் பாதுகாப்பு பிரச்சாரம் தமிழ்நாட்டிற்கே மிக முக்கியமானதாகும்.
எனவே, இந்த நேரத்தில் அரசாங்கமும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தமிழ்நாட்டின் சாலை விபத்துகளை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.

http://decadeofaction.org/

http://www.flickr.com/groups/roadsafetydecade

மே - 31, உலக புகையிலை எதிர்ப்பு நாள்

மே 31 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை எதிர்ப்பு நாளாக பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டில் "உலகளாவிய புகையிலைக் கட்டுப்பாடு உடனபடிக்கையை (WHO FCTC) செயல்படுத்துவதை" வலியுறுத்தி இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

புகையிலை உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி. புகைபிடிப்பதாலும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலும், அடுத்தவர் விடும் புகையை சுவாசிக்க நேருவதாலும் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம்பேர் அகால மரணமடைகின்றனர்இந்தியாவில் மட்டும் இதனால் 10 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறந்து போகிறார்கள்.


தற்போது புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி வருபவர்களில் - இரண்டுபேரில் ஒருவர் அதனாலேயே பாதிக்கப்பட்டு கடும் துன்பத்திற்கு பிறகு கொடிய மரணத்தை சந்திப்பார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. அதாவது, இப்போது நமது கண்ணெதிரில் இரண்டுபேர் புகையிலையப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்றால், அதில் ஒருவரை அந்த புகையிலையே கொடூரமாகக் கொலை செய்துவிடும்.


புகையிலைப் பொருட்களால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, தோல்நோய்கள் எனப் பல கேடுகள் நேருகின்றன. புகையிலையில் உள்ள 4000 நச்சு வேதிப்பொருட்களில் 250 ரசாயனங்களால் உடல்நலம் கடுமையாகப் பாதிப்படைகிறது. அவற்றில் 50 ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன்.
புகையிலைத் தீமையை தடுப்பது எப்படி?

உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய புகையிலைக் கட்டுப்பாடு விதிகளை (WHO FCTC) தமிழ்நாட்டில் செயல்படுத்துவதுதான் புகையிலையால் ஏற்படும் கொடும் தீமைகளை ஒழிக்கும் ஒரே வழியாகும். இந்த உடன்படிக்கையில் இந்திய அரசு கையொப்பமிட்டுள்ளதால், இதனை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு கடமைப் பட்டுள்ளது. குறிப்பாக மூன்று நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். அவை:

1. பொது இடங்களில் புகைபிடிப்பதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

அடுத்தவர் அருகே புகைபிடிப்பதால், புகையிலையின் தீமைகள் புகைபிடிக்காத அப்பாவிகளையும் பாதிக்கின்றன. பெண்களும் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். புகைபிடிப்பவர் வெளிவிடும் புகையில் 85% புகை கண்ணுக்கும் தெரியாது, நாற்றமும் அடிக்காது. புகைத்தவர் போனபிறகும் புகைபிடித்த அறைக்குள் புகை இருக்கும். எனவே, பொது இடங்களிலும், பணி இடங்களிலும் புகைபிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

2. புகையிலைப்பொருள் விளம்பரங்களை அகற்ற வேண்டும்.

உலகிலேயே தனது வாடிக்கையாளரை திட்டமிட்டு படுகொலை செய்யும் ஒரே நுகர்பொருள் புகையிலைதான். தனது வாடிக்கையாளர்களை தானே கொன்றுவிடுவதால், புதிய வாடிக்கையாளரை பிடிக்க வேண்டியக் கட்டாயத்தில் புகையிலை நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் புகையிலைப் பொருள் விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. எனவே, கடைகளில் விளம்பரம், சினிமா மூலம் விளம்பரம், தண்ணீர், ஹெல்மெட் போன்ற வேறு பொருட்கள் மூலம் விளம்பரம் - என மறைமுக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இவற்றை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்.

3. எல்லாவிதமான புகையிலைப் பொருட்கள் மீதும் அதிக வரிவிதிக்க வேண்டும்.

புகையிலைப் பொருட்கள் மீது அதிக வரிவிதிப்பது ஒரு மிகச்சிறந்த நடவடிக்கை. இதனால், புகையிலைப் பொருள் பயன்பாடு குறையும், குறிப்பாக சிறுவர்கள் புகைபிடிக்க தொடங்குவது தடுக்கப்படும். ஏற்கனவே புகைப்பவர்கள் அதைலிருந்து விடுபட விலை உயர்வு வழிசெய்யும். அரசாங்கத்தின் வருவாயும் அதிகமாகும். எனவே, எல்லா புகையிலைப் பொருட்கள் மீதும் ஒரே அளவாக மிக அதிக மதிப்புக்கூட்டல் வரி விதிக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரிழப்பைத் தடுக்கும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

புகையிலைத் தீமையை ஒழிக்க உறுதி கொள்ளுங்கள். தமிழ்நாடளவில் புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசினைக் கோருங்கள். இதற்காக தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதுங்கள். - மாதிரி கடிதங்களை பெற தொடர்புகொள்க: tobaccofreemail@gmail.com 


பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை குறித்த கையேடு
Smokefree Public Place Booklet - Tamil

சமச்சீர்க்கல்வி: மறைந்திருக்கும் சாதிவெறி!

சமச்சீர் கல்வியின் மூலமாக தமிழ்நாட்டில் 'பொதுப்பள்ளி முறை'யை நடைமுறைப்படுத்த முயன்றது முந்தைய அரசு. ஆனால், புதிதாக பதவியேற்ற அரசு எடுத்த எடுப்பிலேயே சமச்சீர் கல்வி முயற்சியை குப்பைக்கு அனுப்பிவிட்டது. மனுநீதி இன்னும் மறையவில்லை என்பதற்கும் ஆதிக்க சாதியினரின் அதிகாரம் குறையவில்லை என்பதற்கும் இது ஓர் எடுத்துக்காட்டு.

இதன்மூலம் 1954 ஆம் ஆண்டின் வரலாறு தலைகீழாக திரும்பியுள்ளது. அப்போது சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இராஜாஜி  கொண்டுவந்த குலக்கல்வி திட்டம் காமராசரால் தூக்கி எறியப்பட்டு, எல்லோருக்கும் கல்வியளிக்க வழிசெய்யப்பட்டது. 


இப்போது 2011 இல் எல்லோருக்கும் ஒரேவிதமான தரமான கல்வி என்கிற இலக்கு தூக்கி எறியப்பட்டு, ஆதிக்க மேல்சாதியினர் வீட்டு பிள்ளைகளும், பணம் படைத்தோரின் குழந்தைகளும் தரமாக படித்தால் போதும் என்கிற நிலை வந்துள்ளது. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமச்சீர் கல்வி திட்டத்தை தற்போதைய அரசு கைவிட்டதன் பின்னணி சாதிவெறிதான்! அன்று இராஜாஜி தோற்று காமராஜர் வென்றார், இன்று காமராஜரின் கனவு தோற்று இராஜாஜியின் கனவு நனவாகியுள்ளது.

பொதுப்பள்ளி முறை என்றால் என்ன?

ஏழையான, ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த, கிராமப்புறத்தில் வாழும் படிக்காத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்குக் கிடைக்கும் கல்வி ஒருவிதமாகவும், அதேசமயம், வசதிபடைத்த, மேல்சாதியைச் சார்ந்த, நகர்ப்புறத்தில் வாழும், படித்த பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைக்குக் கிடைக்கும் கல்வி வேறொரு விதமாகவும் இருக்கும் நிலை என்பது நாகரீக சமூகம் என்பதற்கே இழுக்கானதாகும். பள்ளிகளுக்கு இடையேயும் கல்வி முறைகளுக்கு இடையேயும் ஏற்றத்தாழவு இருப்பது சமூக அநீதி. இந்த அவலத்தை மாற்றும் முறைதான் பொதுப்பள்ளி முறை (Common School System) ஆகும்.
பொதுப்பள்ளி முறையில் பலவிதமான கல்வி முறைகள் என்பது ஒழித்துக்கட்டப்படும், எல்லாம் ஒரே முறையாக மாற்றப்படும். சாதி, மொழி, பாலினம், இனம், வாழிடம், பொருளாதார நிலை போன்ற எந்த வேறுபாடும் இன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் சம அளவு தரமுடைய கல்வி வழங்கப்படும். பள்ளிகளுக்கிடையே தரவேறுபாடுகள் களையப்பட்டு எல்லா பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும்.

பொதுப்பள்ளி முறையில் மூன்று அடிப்படைகள் முதன்மையானவை:

1. ஒரே விதமான பாடத்திட்டம்/கலைத்திட்டம். 
2. மொழிப்பாடங்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் மாநிலத்தின் முதல் மொழியில் (அதாவது பெரும்பான்மை மக்களின் தாய் மொழியில்) இருக்கும்.
3. பள்ளிச்சேர்க்கை என்பது அண்மைப்பள்ளி முறையில் நடக்கும் (Neighbourhood School System - அதாவது ஒரு குறிப்பிட்ட சுற்றளவு தொலைவில் வசிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கப்படுவர்).

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை முழுவதுமாக பின்பற்றி தமிழ்நாட்டின் சமச்சீர் கல்வி அமையவில்லை என்பது உண்மை. ஆனால், அதைநோக்கிய திசையில் அது இருந்தது. குறிப்பாக, பொதுபாடத்திட்டம் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

பொதுப்பள்ளி முறை - வரலாறு.

1966 கோத்தாரி குழு

சுதந்திர இந்தியாவின் கல்விக்கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட கோத்தாரி குழு 1966 ஆம் ஆண்டு தமது அறிக்கையை அளித்தது. அதில் "ஏழை, பணக்காரர் என்கிற அடிப்படையில் பள்ளிகள் அமைந்துள்ளதை மாற்றி பள்ளிக்கல்வி என்பது சாதி, சமய, சமுதாய, பொருளதார அடிப்படையில் குழந்தைகளுக்கான கல்வியில் வேறுபாடு காட்டாமல் பொதுப்பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று பரிந்துரைத்தது. கூடவே, அவரவர் வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில்தான் குழந்தைகளைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

1967 நாடாளுமன்றக் குழு

1967 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 'கல்விக்கொள்கைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு'வின் அறிக்கை "ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் தனித்தனியாக பள்ளிகள் இருக்கும் முறை ஒழிக்கப்பட்டு, எல்லோரும் ஒன்றாகப் படிக்கும் பொதுப்பள்ளி முறை/அண்மைப்பள்ளி முறை தேவை என்று பரிந்துரைத்தது. இதனையொட்டி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையும் பொதுப்பள்ளி முறையை வலியுறுத்தியது.

1986 தேசியக்கல்விக் கொள்கை

1986 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசியக்கல்விக் கொள்கையில் "பொதுப்பள்ளி முறையை அடைவதற்கான திசையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்" என்று கூறப்பட்டது.

1988 மத்திய அரசின் கல்வி வழிகாட்டுக்குழு

1988 ஆம் ஆண்டின் மத்திய அரசின் கல்வி வழிகாட்டுக்குழு "பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் பொதுப்பள்ளி முறையை செயல்படுத்துவதற்காக செயல் திட்டத்தை" அளித்தது.

1990 ஆச்சார்ய இராமமூர்த்திக் குழு

1990 ஆம் ஆண்டில் தேசிய கல்விக்கொள்கையை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட 'ஆச்சார்ய இராமமூர்த்திக் குழு' தனது பரிந்துரைகளில் "பொதுப்பள்ளி முறை"யை வலுயுறுத்தியது.

1993 யஷ்பால் குழு

பாடத்திட்ட சுமையை குறைப்பதற்காக 1993 இல் அமைக்கப்பட்ட யஷ்பால் குழு தனது அறிக்கையில் மத்திய அரசு நேரடியாக நடத்தும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் மட்டுமே CBSE பாடம் இருக்க வேண்டும் என்றும், மற்ற எல்லா பள்ளிகளும் மாநில அரசின் பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.

2005 NCERT தேசிய பாடத்திட்ட வரையரை

2005 ஆம் ஆண்டின் NCERT தேசிய பாடத்திட்ட வரையரையில் "பொதுப்பள்ளி முறையே அதன் இலக்கு" எனக்கூறி மாநிலங்களுக்கு பரிந்துரை செய்தது.

2010 புதிய அரசியல் சாசனக் கடமை

1950 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசிய சாசனத்தில் 45 ஆம் பிரிவு ''இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டுப் பத்தாண்டுகளுக்குள் குழந்தைகள் அனைவரும் பதினான்கு வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெற்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்'' என்றது. ஆனால், இந்த பிரிவு அரசுக்கான ஒரு வழிகாட்டி நெறியாக மட்டுமே இருந்ததால், இதனை எவரும் கட்டாயப்படுத்த முடியவில்லை.

ஆனால் புதிய அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் 2009 இல் பள்ளிக்கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் 21அ பிரிவில் "அரசு கட்டாயம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கவேண்டும்" என்கிற் புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2010 முதல் "பொதுப்பள்ளி முறை என்பது தானாகவே நாடெங்கும் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்".

ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி இன்னும் "ஆளுக்கொரு கல்வி" என்கிற அநீதி நீடிப்பது ஏன்? பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என பலவற்றுக்கு பின்னர் வந்த சச்சீக்கல்வி தூக்கி எறியப்பட்டது எதற்காக? 


மேல்சாதிக்காரனும் பணம் படைத்தோரும் மட்டுமே படித்தால் போதும், மற்றவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும் என்கிற கொடுமைக்கு பின்னால் இருப்பது சாதிவெறிதான். இன்னும் பதினைந்து, இருபது ஆண்டுகள் கழித்துக்கூட - சூத்திரன் வீட்டு பிள்ளைகள் தங்க்ளது வீட்டு பிள்ளைகளுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்கிற கொடூரமான ஆதிக்க சாதி மனத்தின் வெளிப்பாடுதான் - சமச்சீர்கல்விக்கு தடைவரக் காரணமாகும்.

கடந்தகால வரலாறு - ராஜாஜியின் குலக்கல்வி

1953 இல் சென்னை மாநில முதல்வர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்றார். மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்ட அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினார் ராஜாஜி.

திட்டம்: பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது. மாணவர்கள் ஒரு நேரமுறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.
இரண்டாவது நேரமுறையில் மாணவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து அவர்களது தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.

இரண்டாம் நேர முறையில் தொழில்களைக் கற்பது தவிர மாணவர்கள் தமது ஊர்களில் பொதுப்பணிகளில் – கட்டிடங்கள் கட்டுதல், தூய்மைப்படுத்தும் வேலைகள், சாலைகளைச் செப்பனிடுதல் ஈடுபடுத்தப்படுவர்

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பது-தானே பார்ப்பனர்களின் மனுதர்ம சாஸ்திரம்? 1952 ஜூன் 13 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார் ராஜாஜி எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது? நீங்கள் துணியைக் கிழிக்காமல் சலவை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று உபதேசம் செய்தார்.

இத்திட்டத்திற்கு எதிராக பெரியாரின் தி.க வும் அண்ணாவின் திமுகவும் பல போராட்டங்களை நடத்தின. ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பெரும் புயலைக் கிளப்பினார் தந்தை பெரியார். 1954 சனவரி 24 இல் ஈரோட்டில் குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்டினைக் கூட்டி, அனல் பறக்கும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தால் 50 விழுக்காடு மாணவர்களும், 70 விழுக்காடு மாணவிகளும் படிப்பை நிறுத்திய அதிர்ச்சிக்கு உரிய தகவலை தந்தை பெரியார் வெளியிட்டார்.

ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால், கழகத் தோழர்களே, தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக வைத்திருங்கள். நாள் குறிப்பிடுவேன், அக்ரகாரத்திற்குத் தீ வையுங்கள் என்று அபாய அறிவிப்பைச் செய்தார்! பொது மக்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டது.

ராஜகோபாலாச்சாரி, மார்ச் 1954 இல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் முதல்வராகிய காமராஜர் திட்டத்தின் எதிர்ப்பாளர். காமராஜின் ஆட்சி காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கியதால், மாணவர்கள் பள்ளியில் சேரும் எண்ணிக்கை பத்தாண்டுகளுக்குள் இரட்டிப்பானது.

என்ன செய்வது? இப்போது பெரியார் இல்லையே?!

புதன், மே 11, 2011

பதிவுலகின் மாமேதைகள்!


பதிவுலகில் மாமேதைகள் சிலர் இருக்கின்றனர். அதில் நான் இங்கு குறிப்பிடுவது கக்கு - மாணிக்கம் என்கிற ஒரு மாமேதையை.

பசுமைத் தாயகம் அமைப்பு சில நாட்களுக்கு முன்பு இந்திய கிரிகெட் அணித்தலைவர் டோனி மதுபான விளம்பரங்களில் நடிப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்தியது. அடுத்ததாக அந்த விளம்பரங்களும் அகற்றப்பட்டன.

இந்த செயலை பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக் கழகத்தில் ஆய்வாளராக இருக்கும் Dr Kerry O'Brien என்பவர் மிகவும் வரவேற்றார்.

 (Well Done! This is great to see you all so strongly confronting the use of cricket (and its stars), and the IPL, by the alcohol industry for the promotion of alcohol consumption in India, and indeed those who view the IPL in other countries.


I have been monitoring the IPL for the past 2 years and the prevelance of alcohol advertising within it. It is staggering the amount of progress that the alcohol industry has made in India in such a short period of time. As a interested and concerned reseacher in this area, but novice to India, I have watched with a amazement and dread how quickly alcohol marketing has progressed in india since the inception of the IPL) 

அவரது ஆய்வு குறித்து இங்கே காணலாம்:

Evidence mounting on the harms of alcohol industry sponsorship of sport

அவர் மட்டுமின்றி, முன்னாள் கிரிக்கெட் வீரர் திலிப் சர்தேசாயின் மனைவி நந்தினி சர்தேசாய், மனநல மருத்துவர்கள் டாக்டர் ஹரீஷ் ஷெட்டி, டாக்டர் ஆஷிஷ் தேஷ்பாண்டே, மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் சேகர் சல்கார் என பலரும் டோனி மதுபான விளம்பரங்களில் நடிப்பதை கண்டித்தனர். அவர்களது கருத்தை இங்கே காணலாம்:

Mahi re, that's not the way

பெரும் அறிவாளிகள், ஆய்வாளர்கள் எல்லாம் இவ்வாறு கூறும்போது, அதிரடி ஹாஜா என்பவர் "டோனியால் இந்த நாடே குடிக்கிறதா?" என ஒரு பதிவு எழுதினார்.  அதில் "டோனி விளம்பரத்தில் நடிப்பது அவரின் தனிப்பட்ட உரிமை....அதில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று அவர் கூறியிருந்தார். இந்திய சட்டப்படி மதுபான விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டவை என்பது கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அது போகட்டும்!

அந்த பதிவில், கக்கு - மாணிக்கம் என்பவர் ஒரு பின்னூட்டமிட்டார். அதில் "டாஸ்மாக் ஏலம் எடுத்து நடத்துபவர்களில் பாதிக்குமேல் வன்னியர்கள். அங்கு கடை ஊழியர்கள் வன்னியர்கள். அவர்கள் இருப்பதை காண்பித்து நிலைநிருத்தவேன்டாமா?" என்று இவர் கூறியிருந்தார்.

ஆக, டாஸ்மாக் என்பது அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனம், அதனை எவரும் ஏலத்தில் எடுக்க முடியாது என்பது கூட தெரியாமல் கக்கு மாணிக்கம் "டாஸ்மாக் ஏலம் எடுத்து நடத்துபவர்களில் பாதிக்குமேல் வன்னியர்கள்" என்று உளறிக்கொட்டியிருந்தார். வன்னியர்கள் மீது அவருக்கு அப்படி என்ன காழ்ப்புணர்வோ?!

இந்த லூசுத்தனங்களுக்கெல்லாம் பதில் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக நான் பின்வரும் பின்னூட்டத்தை இட்டேன் - "டோனி மது விளம்பரங்களில் நடிப்பதும் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக மதுபான விளம்பரங்கள் செய்யப்படுவதும் எவ்வளவு பெரிய கேடாக முடியும் என்பது நான் சொன்னால் உங்களுக்கு விளங்காது. இந்தியாவின் மிகப்பெரிய மதுபான அதிபர் விஜய மல்லயா என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்:

“F1 and Cricket are part and parcel of our business tools for promotion, and are sports in which, not only I am interested, but in which India is hugely interested.

Why do you think I paid $112m for Royal Challengers cricket team?

In India…cricket is almost like a religion. You then have the young demographic, new consumers coming into my industry, who are going to turn 21, coming of legal drinking age.

The same people are going to watch cricket, are going to enter the consumer sector of India, and advertisers are going to look at that ever-increasing consumer sector.” 

- Vijay Mallya, chairman of the United Breweries Group (the king of India Liquor Industry)


http://www.bbc.co.uk/news/business-12217018


இந்த பின்னூட்டத்தை, கக்கு - மாணிக்கத்திற்கான பதில் என்பதால், அவரது பதிவிலும் போட்டு வைத்தேன்.

இதற்காக என்னைப்பற்றி, எனது படத்தையும் போட்டு "இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா ஓட்ட வட நாராயணா!" என்று தனி பதிவு எழுதி வைத்துள்ளார் கக்கு - மாணிக்கம்.

என்னை இவர் கேலி பேசுவதை குறித்து நான் சொல்ல எதுவும் இல்லை. அது அவரது விருப்பம், உரிமை. ஆனால், அதிமேதாவி என நினைத்து அவர் உளறியுள்ள சில கருத்துகளுக்கு விளக்கமளிப்பது எனது கடமை.

கக்கு மாணிக்கத்தின் "மேதாவி" கருத்து 1. "சுய புத்தியும் இல்லாமல் தான் என்ன செய்கிறோம் என்ற அறிவற்றவர்கள் மதுவால் சீரழிவது உண்மை. இது போன்ற நிலையயில் உள்ளவர்கள் மது இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது ஒன்றை பிடித்துக்கொண்டு சீரழிந்துதான் போவார்கள்" என்கிறார் கக்கு - மாணிக்கம்.

ஆனால், இளம் சிறார்கள், குறிப்பாக 20 வயதுக்கு கீழானவர்களின் பகுத்தாயும் திறன் முழுமையாக வளர்ச்சி அடைவது இல்லை என்றும், இந்த வயதில் குடிக்க கற்பவர்கள் - பெரியவர்களாகும் போது குடி நோயர்களாக ஆவர் என்பது ஆய்வு முடிவுகள் ஆகும்.

"Underage Alcohol Use can cause changes in the structure and function of the developing brain, especially when kids drink heavily. This is a major concern because (1) the brain continues to develop into the mid-20s, (2) so many adolescents begin to drink at a young age, and (3) so many youth binge when they drink" என்கிறது அமெரிக்க அரசின் Surgeon General’s Call to Action To Prevent and Reduce Underage Drinking அறிக்கை.

ஆனால், பெரியவர்கள் குடிப்பதற்கும் சிறுவர்கள் குடிகாரர்களாக ஆவதற்கும் இடையே உள்ள வேறுபாடு கூடத்தெரியாமல் - குடிப்பழக்கத்தைப் பற்றி 'எல்லாம் அறிந்த மேதாவி' போல பேசுகிறார் கக்கு மாணிக்கம்.

அதிலும் இளைஞர்களின் குடிப்பழக்கத்திற்கு அவர்களது சுற்றுப்புறமே காரணம் என்கிறது அந்த அறிக்கை, அதாவது சிறுவர்கள் குடிப்பதற்கு நண்பர்கள், உறவினர், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், விளம்பரம் போன்ற "வெளி" தூண்டுதலே காரணம்.

கக்கு மாணிக்கத்தின் "மேதாவி" கருத்து 2. "வல்லரசு நாடுகள் என்று நாம் கூழைக்கும்பிடு போடுகிறோமே அவர்கள் எல்லாம் கூட பரம்பரையாக குடிகின்றவர்கள்தான். அவர்கள் அறிவிலும் , புத்தியிலும் , பொருளாதாரத்திலும் மேலோங்கித்தான் இருக்கிறார்கள். மதுவிலக்கு வேண்டும் என்று ஜம்பம் பேசும் நாம் தான் அவர்களிடம் கை ஏந்தி நிற்கிறோம். இன்று நாம் அனுபவிக்கும் அணைத்து அறிவியல் வசதிகளும் தினமும் பீர் குடிக்கும் ஐரோப்பியர்களின் மூளையினால் அன்றி இந்திய கண்டுபிடிப்புகள் ஏதாவது ஒன்று உண்டா? ஏனைய்யா உண்மை நடப்பை நம்ப மாறுகிறீர்கள்?" - என்கிறார் கக்கு - மாணிக்கம்.

இது என்னவகையான வியாக்கியானம் என்று புரியவில்லை. மேலை நாடுகள் என்றால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முதன்மையானவை. அமெரிக்காவில் இளம்பருவத்தினர் குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற முன்முயற்சியை அரசாங்கமே மேற்கொள்கிறது. அந்த விவரங்களை இங்கே காணலாம்: Surgeon General’s Call to Action To Prevent and Reduce Underage Drinking

ஐரோப்பிய நாடுகளிலும் மது விளம்பரங்களை தடுக்க அரசுகள் முன்வருகின்றன. அதுகுறித்து இங்கே காணலாம்http://www.eucam.info/

உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கும் உலக சுகாதார நிறுவனம் மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்த உலகளாவிய கொள்கையை உருவாக்கியுள்ளது. அதற்கான தீர்மானம் 21.5.2010 இல் உலக சுகாதார பேரவையில் ஏற்கப்பட்டு - இப்போது உலக சட்டமாக உருவாகி வருகிறது. அதுகுறித்து இங்கே காணலாம்: http://www.who.int/substance_abuse/activities/gsrhua/en/index.html

உண்மை இப்படியிருக்க, ஐரோப்பிய நாடுகள் குடியை போற்றிப்புகழ்வது போலவும், ஏதோ இந்தியாவில் சிலர் மட்டும் இல்லாததை பேசுவது போலவும் அள்ளி விடுகிறார் அதிமேதாவி கக்கு மாணிக்கம்.

என்னமோ போங்க! "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்கிற முதுமொழி உண்மைதானோ?!

திங்கள், மே 09, 2011

டோனியை எதிர்த்து போராட்டம்: மதுபான விளம்பரங்கள் அகற்றப்பட்டன 


இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனியின் படத்துடன் McDowells VSOP விளம்பரம் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் நடுவண் நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாசு அவர்கள் 2.5.2011 அன்று டோனிக்கு கடிதம் எழுதினார்.

இதனைத்தொடர்ந்து, மகேந்திரசிங் டோனி மதுமான விளம்பரங்களில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று பசுமைத்தாயகம் அமைப்பினர் 4.5.2011 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை வந்திருந்த டோனி சென்னை அடையாறில் பார்க் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். இந்த விடுதி முன்பு திரண்ட பசுமைத் தாயகம் அமைப்பினர் "மதுபான விளம்பரங்களில் டோனி நடிக்கக்கூடாது. சென்னையில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்" எனக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 7.5.2011 அன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த McDowells VSOP விளம்பரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. 
படம் 1: McDowells VSOP மதுபான விளம்பரதில் டோனி (1.5.2011). இடம்: பாம்குரோவ் விடுதி அருகில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,தி.நகர், சென்னை
படம் 2: McDowells VSOP மதுபான விளம்பரம் நீக்கம் (7.5.2011). இடம்: பாம்குரோவ் விடுதி அருகில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,தி.நகர், சென்னை
படம் 3: பசுமைத் தாயகம் ஆர்ப்பாட்டம் (4.5.2011) - பார்க் ஷெராட்டன் நட்சத்திர விடுதி முன்பு

 "முன்னாள் நடுவண் நலவாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களது கோரிக்கைக்கு ஏற்ப, சென்னை நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மதுபான விளம்பரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டதை வரவேற்கலாம். அதேநேரத்தில், ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் பல மதுபான நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு - மதுபானங்களை சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் திணிக்கின்றன என்பதை மறைத்துவிட முடியாது. 

இந்த தவறான செயலில் இருந்து அனைத்து ஐ.பி.எல். அணிகளும் விலக வேண்டும். எந்த ஒரு அணியும் இனி எந்த ஒரு மதுபான நிறுவனத்திடமிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணமோ பொருளோ வாங்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களான கோடிக்கணக்கான இளைஞர்களை காப்பாற்ற ஐ.பி.எல். அணியினர் முன்வர வேண்டும்" 

சனி, மே 07, 2011

டோனியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு!

ஐ.பி.எல் போட்டிக்காக சென்னை வந்திருந்த இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி தங்கியிருந்த பார்க் ஷெராட்டன் நட்சத்திர விடுதி முன்பு - மதுபான விளம்பரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமைத்தாயகம் அமைப்பினர் 4.5.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
"மதுபானத்தைத் திணிக்கும் விளம்பரங்களுக்காக கிரிக்கெட் பயன்படுத்தப் படக்கூடாது. மகேந்திர சிங் டோனி மெக்டவல் வி.எஸ்.ஓ.பி எனும் விளம்பரத்திலிருந்து விலக வேண்டும்" என பசுமைத்தாயகம் அமைப்பினர் முழக்கமிட்டனர்.

இப்போராட்ட்த்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
டோனி பங்கேற்கும் McDowells VSOP விளம்பரம்
டோனியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

பத்திரிகை செய்திக் குறிப்பினை காண இங்கே சொடுக்கவும்: http://www.scribd.com/full/54829888?access_key=key-cn22vktyryrjaqtzu1t

விரிவாகக் காண:

வியாழன், மே 05, 2011

குழப்பும் வினவு: போற்க்குற்ற விசாரணையின் எதிரி யார்?


"சர்வதேச சமூகம் என்று தமிழினவாதிகளால் சித்தரிக்கப்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் எவையும் ராஜபக்சேவுக்கு எதிராக இல்லை. அப்படி இருப்பதைப் போல தமிழினவாதிகள் இன்னமும் நம்புகின்றனர்." என்கிற ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது வினவு. (காண்க:ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!)



1. எதிரி யார், நண்பன் யார்?

வினவின் கட்டுரையில் - ஏகாதிபத்திய அரசுகள் என அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எதிரிகளாக சித்தரிக்கப்படுகின்றன. ஆனால், இலங்கை மீதான மனித உரிமை அவை விவாதத்தை மிகக் கடுமையாக எதிர்த்த கியூபா குறித்து எதுவும் கூறப்படவில்லை. கூடவே, பொலிவியாவும் நிகரகுவாவும் கூட இலங்கையை ஆதரித்தன.

தமிழனுக்கு என்று ஒரு நாடும் இல்லை. பன்னாட்டு அரசியலில் நாடுகளின் சார்பான கருத்துகள்தான் ஓரளவுக்கு எடுபடுகின்றன. இந்நிலையில் - போர்க்குற்றவாளியான இலங்கைக்கு ஆதவாக கியூபா முன்நிற்கிறது. மறுபுறம் ஐ.நா. பாதுகாப்பு அவையில் - அமெரிக்காவின் எதிரிக் கூட்டமாகக் கருதப்படும் ரசியாவும் சீனாவும் தான் இலங்கையை தீவிரமாக ஆதரிக்கின்றன.

உண்மை இவ்வாறிருக்க - அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தமிழனின் எதிரிகள் என்று கூறுவது எப்படி?

'அமெரிக்காவோ அல்லது மற்ற மேற்குலக நாடுகளோ மனித உரிமைகளை மதிப்பவர்கள் - தமிழின உரிமைகளை ஆதரிப்பவர்கள்' என்று நான் கூறவில்லை. ஒரு நாடு இந்த போற்க்குற்ற விசாரணை விடயத்தில் இலங்கையை எதிர்க்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம் என்று நான் கருதுகிறேன். பன்னாட்டு அரசியலில் இலங்கையை ஒரு நாடு எதிர்ப்பதற்கு பல்வேறு உள்நோக்கங்கள் இருக்கும். அந்த உள்நோக்கங்களை தமிழர்கள் ஆராய்வது வீண் வேலை. 

இன்றைய நிலையில், ஒரு நாடு இலங்கையின் போற்க்குற்றங்களை பன்னாட்டு அமைப்பின் மூலம் விசாரிக்க கோருகிறதா? இல்லையா? - என்கிற ஒற்றை கருத்தின் மீதுதான் தமிழர்கள் நாடுகளை அடையாளம் காண முடியும்.

2. வினவின் தவறான கருத்து.

வினவின் கட்டுரையில் "2009ஆம் ஆண்டில் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில் என்ற எவ்வித அதிகாரமும் இல்லாத அமைப்பின் வாயிலாக, ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதிப் போரின்போது நடந்த ஈழத் தமிழினப் படுகொலையையும் போர்க் குற்றங்களையும் சாடி அனைத்துலக மனித உரிமைக்கான தன்னார்வ அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததால் ஜனநாயக நாடகமாடுவதற்காகவும், ஐரோப்பிய நாடுகளில் போராடிய புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தற்காலிக மன ஆறுதல் தருவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட பாசிபிச சதியாகவே இப்படியொரு தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது." என்று கூறப்பட்டுள்ளது.

இது தவறான தகவலாகும். வினவு கூறியுள்ளது போல ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை மீது கண்டனத் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, "இலங்கை அரசை பாராட்டிதான் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது". இதில் கொடுமை என்னவென்றால், இலங்கை மீதான பாராட்டு தீர்மானத்தை கொண்டுவந்த நாடு இலங்கையே தான்.

கடைசியில் இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்தன, 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன, 6 நாடுகள் வாக்களிக்கவில்லை. (தீர்மானத்தை இங்கே காண்க). இவ்வாறு, இலங்கை அரசை பாராட்டி தீர்மானம் நிரைவேற்றப்பட்டதைத் தான் - "ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்கிறது வினவு.

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் நடந்தவை குறித்து விவாக இங்கே காண்க: 

வினவு கட்டுரையின் முடிவில் " ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி, உலகெங்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்குவதும், ஏகாதிபத்திய சதிகளை அம்பலப்படுத்தி, அக்கும்பலைத் தண்டிக்க மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைத்து இறுதிவரை முன்னெடுத்துச் செல்வதும்தான் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.

ஈழத்தமிழருக்காக 'ஏகாதிபத்திய சதியை முறியடிப்பதெல்லாம்' தேவையற்ற வேலை. இப்போதைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட மேற்குலக நாடுகளை - 'இலங்கையில் ஒரு பன்னாட்டு விசாரணை' என்கிற மையப்புள்ளியில் திரட்டுவதே அவசரமான தேவையாகும். இன்னும் சொல்லப்போனால், புலிகளின் ஆதரவாளரா, எதிரியா என்றெல்லாம் கூட இந்த நேரத்தில் பிரித்துப் பார்க்காமல் அனைவரையும் ஒற்றை கோரிக்கையின் கீழ் அணிதிரட்டுவது அவசியம்.

இதில் ஏகாதிபத்தியம், ஈராக், ஆப்கானின் மீது தாக்குதல், இஸ்ரேல் சிக்கல், இந்தியாவின் பசுமை வேட்டை, காசுமீர சிக்கல் - என்று எல்லா பிரச்சினைகளையும் ஒன்றாகப் போட்டு குழப்புவது வீண் வேலை.