Pages

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

ஒரு சாதனைத் தலைவியின் மரணம்.


வாங்கரி மாத்தாய் - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக போராடியதற்காக நோபல் பரிசு பெற்றவர். கென்ய நாட்டில் இவரது முன்முயற்சியால் வளர்க்கப்பட்ட மரங்கள் ஐந்து கோடி. ஐக்கிய நாடு அவையின் உலகளாவிய நூறு கோடி மரம் வளர்ப்பு திட்டத்தின் வழிகாட்டி இவர்தான். வாழ்நாள் முழுவதும் பசுமைப்போராளியாக வாழ்ந்த வாங்கரி மாத்தாய் 25.09.2011 அன்று தனது 71ஆம் வயதில் புற்றுநோயால் மறைந்தார். இது உலகின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஓர் இழப்பாகும்.


வாங்கரி மாத்தாய் அவர்களுடன் நான். 
இடம்: நைரோபி, கென்யா, செப்டம்பர் 2007


“What I have learned over the years is that we must be patient, persistent, and committed. When we are planting trees sometimes people will say to me, ‘I don't want to plant this tree, because it will not grow fast enough’. I have to keep reminding them that the trees they are cutting today were not planted by them, but by those who came before. So they must plant the trees that will benefit communities in the future.”



Wangari Maathai, Unbowed: One Woman’s Story


வாங்கரி மாத்தாய் மறைவு குறித்த பத்திரிகை செய்தி:

அமைதிக்காக நோபல் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணியான வாங்கரி மாத்தாய் (71) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

கென்யாவைச் சேர்ந்த வாங்கரி மாத்தாய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். நைரோபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

1977-ல் கிரீண் பெல்ட் இயக்கத்தை நிறுவி அதன் மூலம் மரக்கன்று நடும் பணியை செய்து வந்தார் மாத்தாய். கென்யா முழுவதும் அவரது இயக்கம் இதுவரை சுமார் 5 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது.

கென்யாவில் எங்கெல்லாம் காடுகளுக்கு மனிதர்களால் அச்சுறுத்தல் இருந்ததோ அங்கெல்லாம் மாத்தாய் சென்று காடுகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவார். அவரது இந்தப் பணியால் கென்ய மக்கள் மட்டுமல்லாது உலக அளவிலான சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், வன ஆர்வலர்களும் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முன்மாதிரியாகவும் வாங்கரி மாத்தாய் திகழ்ந்தார்.

கென்யாவில் உயர்ந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதை மாத்தாய் கடுமையாக எதிர்த்தார். அந்நாட்டின் அதிபராக டேனியல் அரேப் மோய் இருந்த போது காடுகள் அழிக்கப்படுவதையும், உயர்ந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதையும் எதிர்த்து மாத்தாய் தொடர் போராட்டங்களை நடத்தினார். அப்போதெல்லாம் மாத்தாய் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். போராட்டத்தால் அவர் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இருப்பினும் அவர் தனது சமூகப் பணியை தொடர்ந்து செய்து வந்தார். சுற்றுச்சூழல் அவசியத்தை வலியுறுத்தியதுடன் உலக அமைதியையும் மாத்தாய் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இவரது இந்த அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதத்தில் அமைதிக்கான நோபல் விருது 2004-ல் வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த உயரிய விருதைப் பெறும் முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி என்ற பெருமையடைந்தார்.
இதனிடையே, 2002-ல் கென்ய நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 முதல் 2005 வரை சுற்றுச்சூழல் துணை அமைச்சராகப் பதவி வகித்தார்.

வியாழன், செப்டம்பர் 08, 2011

ராசபட்சேவின் "போலி விசாரணை" அம்பலம்! போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பும் நாடகத்தை தகர்த்தது அம்னெஸ்டி.


"இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு. எனவே, அங்கு நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை இலங்கை அரசே விசாரித்து நீதி வழங்கும்" என்கிற நாடகத்தை பன்னாட்டரங்கில் நடத்தி வந்தது ராசபட்சே கூட்டம். பன்னாட்டு விசாரணை முயற்சிக்கு எதிரான இந்த நாடகத்திற்கு இந்தியாவின் அபார ஆதரவும் உண்டு.

ஆனால், இந்த நாடகத்தின் உண்மை நிலையை அம்பலப்படுத்தியுள்ளது அம்னெஸ்டி அமைப்பு. 
அந்த அறிக்கையை இங்கே காணலாம்:


Sri Lanka: When will they get justice? Failures of Sri Lanka's Lessons Learnt and Reconciliation Commission


இதுகுறித்து தினமணி செய்தி:

இலங்கை அரசின் விசாரணைக்கு ஆம்னஸ்டி கண்டனம்

வாஷிங்டன், செப்.7: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி கட்டத்தில் நிராயுதபாணிகளான தமிழர்களை வஞ்சகமாக போர்ப் பகுதியில் தள்ளி, தப்பவிடாமல் பீரங்கிகளுக்கும் தானியங்கி துப்பாக்கிகளுக்கும் இரையாக்கி ஆயிரக்கணக்கானவர்களை காக்கை, குருவிகளைப் போல சுட்டுக்கொன்ற ராணுவத்தின் கயமையை முறையாக விசாரிக்காமல் பூசி மெழுகப் பார்க்கிறது இலங்கை அரசு நியமித்த விசாரணைக் கமிஷன் என்று லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட "ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கற்ற பாடங்கள் மூலம் சமரசம் காண்பதற்கான கமிஷன் (எல்.எல்.ஆர்.சி.) என்ற பெயரில் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான கமிஷனை இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச நியமித்திருந்தார்.

போரின் கடைசி கட்டத்தில் தமிழர்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர் என்ற எதிர்ப்பிரசாரத்தை இலங்கை அரசு மேற்கொண்டது.

அப்படியே நடந்திருந்தது என்றாலும் இலங்கை அரசின் விசாரணை வெளிப்படையாகக் கூறப்பட்ட புகார்களைக்கூட விசாரிக்காமல், பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் வெளியான தகவல்களைக் கூட சரிபார்க்காமல் முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கிற கதையாக, இருபத்தொராவது நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மனித இனப் படுகொலையை எதுவுமே நடக்காத மாதிரி மூடி மறைத்துவிட்டது. இதைத்தான் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தமிழர்களில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள்கூட விட்டுவைக்கப்படாமல் போர் தீவிரமாக நடந்த பகுதியையே போர் நிறுத்தப் பகுதியாக அறிவித்து, அடிபட்டவர்கள் பெயரளவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மருத்துவ முகாம்களையும் இரக்கமின்றி தாக்கி அழித்த விடியோ ஆதாரங்களைக் கூட புனைந்தது, செயற்கையானது என்று கூறி நிராகரித்துவிட்டது இலங்கை அரசு.

ஐக்கிய நாடுகள் சபையால் அனுப்பப்பட்ட நடுநிலைப் பார்வையாளர்களும் சமாதானத் தூதர்களும் போர் தொடங்கும் முன்னதாக இலங்கையிலிருந்து புறப்பட்டபோது தமிழர்கள் அவர்களைப் போக வேண்டாம் என்று கெஞ்சி கதறியதன் காரணம் என்னவென்று பிறகு நடந்த படுகொலைகள் எடுத்துக்காட்டிவிட்டன.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்கூட, இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தபோது இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவது நடுநிலையாளர்களை, மனித உரிமை ஆர்வலர்களை திடுக்கிடச் செய்கிறது.

இந்த நிலையில் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மீண்டும் இந்த அக்கிரமத்தைப் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழர்களுக்கு ஈழம் கிடைக்காவிட்டாலும் அவர்கள் பட்ட துயரத்துக்கு சிறிதளாவது நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்தியிருக்கிறது. போர்க் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியை, போர்க் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்படும் அதிபரே நியமித்த குழு மேற்கொள்ளும் என்று உலகம் எதிர்பார்ப்பது வெட்டிவேலைதான்.

சர்வதேச சமூகம் வேறு ஏதாவது வழிமுறைகள் மூலம்தான் உலுத்தர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி நியாயம் கேட்க வேண்டும்.

திட்டமிட்ட படுகொலைகளையும் ஏராளமான தமிழர்கள் கைதும் செய்யப்படாமல் காவலிலும் வைக்கப்படாமல் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்களையும் சரியாக விசாரிக்கவில்லை என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் ஆசிய-பசிபிக் பகுதி இயக்குநர் சாம் ஜாரிஃபி சுட்டிக்காட்டுகிறார். அவரது அறிக்கை 69 பக்கங்களுக்குத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. "அவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?' என்று பொருத்தமான தலைப்பையும் இட்டிருக்கிறார்.

இலங்கை அரசு நியமித்த கமிஷன் விசாரித்து அளித்த அறிக்கையானது சர்வதேச தரத்துக்கு வெகு தொலைவில் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

உண்மைகள் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் நடந்த விசாரணைகளிலிருந்து என்ன மாதிரி அறிக்கை தயாரிக்க முடியும்? இப்படிப்பட்ட தகுதிக்குறைவான அறிக்கையைத்தான் இலங்கை அரசால் தர முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பொருமுகின்றனர். இனியாவது சர்வதேசச் சமுதாயம் விழித்தெழுந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை உரிய கண்ணோட்டத்தில் பார்த்து போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

செவ்வாய், செப்டம்பர் 06, 2011


21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி!




இன்றைய தினமலரில் வெளிவந்துள்ள செய்தி:

"தமிழர்களின் உரிமைக் குரலாக, போர்வாளாக , 1951ல் உதயமாகிய உண்மையின் உரைகல்லான தினமலர், இன்று 61வது பிறந்தநாளில் அடி எடுத்து வைக்கிறது."


இதைவிட கொடூரமான ஒரு நகைச்சுவை ஏதாவது இருக்குமா? இதைவிட கேவலமாக யாராவது தமிழர்களை, தமிழ்நாட்டை, தமிழ்மொழியைக் கேவலப்படுத்த முடியுமா?

சனி, செப்டம்பர் 03, 2011

அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

ராசீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் தூக்குதண்டனையை எதிர்நோக்கியுள்ள மூன்று பேர் காப்பற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் ஒரு எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இதற்காக அரசியல் ரீதியான வேறுபாடுகள் கைவிடப்பட்டு,  வழக்கத்திலில்லாத வகையில் எல்லோரும் ஒருகுரலாக ஒலிக்கும் சூழலும் ஓரளவுக்கு கனிந்துள்ளது.

இந்த நம்பிக்கையளிக்கும் சூழலில் - இரண்டு வகையான முன் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1. சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி தூக்கு தண்டனையை ரத்து செய்வது,
2. அரசியல் ரீதியான முயற்சிகள் மூலமாக தண்டனையைக் குறைப்பது,

இந்த இரண்டு முயற்சிகளில் எது வெற்றி பெற்றாலும் - மூன்று உயிர்கள் காப்பாற்றப்படும். இந்த இரண்டு வழிகளில் எளிதான, உடனடி பலன் கிடைக்கும் வழி என்பது "அரசியல் ரீதியான" தீர்வாகவே இருக்கும். அதிலும், அரசியல் ரீதியான தீர்வு என்பது - நீண்டகால நோக்கில் தமிழ் நாட்டிலிருந்து மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கவும் வழிவகுக்கக்கூடும்.
அரசியல் ரீதியிலான ஒரு தீர்வினை முன்வைத்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது ஒரு அவசியத் தேவை எனக் கருதலாம். அது ஏன் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்:


1. "தன்னால் முடியாது" என்கிற நிலைபாட்டிலிருந்து முதல்வர் மாறவேண்டும்.

கடந்த 29.8,2011 அன்று சட்டமன்றத்தில் ஓர் அறிக்கையை முதலமைச்சர் வாசித்தார். அதில் "5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் - மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1) - இன்படி கட்டளையிடுகிறது" என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல், "மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்தவித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் அந்த அறிக்கையை இங்கே காண்கhttp://www.tn.gov.in/seithi_veliyeedu/pr29Aug11/pr290811_110.pdf

இதற்கு மறுநாள் 30.8.2011 அன்றே, "மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது" என்கிற தீர்மானத்தை தமிழக முதல்வர் தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார். மேலும் "இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது. இது இந்திய அரசினை தார்மீக சிக்கலில் ஆழ்த்தக்கூடியது. தூக்குதண்டனையைத் தடுக்க வேண்டும் என்கிற தமிழர்களின் போராட்டத்திற்கு இந்த தீர்மானம் வலு சேர்க்கக் கூடியது. அதே நேரத்தில் இந்த தீர்மானம் சட்டப்படியாக கட்டுப்படுத்தக் கூடியது அல்ல என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு அடிப்படையான விடயத்தை கவனிக்கத் தவறக்கூடாது. அது, தமிழக முதல்வர் குடியரசு தலைவரைக் கேட்டுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றினாலும் கூட, தனக்கு அதிகாரம் இல்லை என்கிற நிலைபாட்டினை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்பதுதான். தமிழக முதல்வருக்கு அதிகாரம் இல்லை என்கிற கருத்து மிகத் தவறான வாதம் ஆகும். இது மாற்றப்பட்டாக வேண்டும்.

2. தமிழக முதல்வருக்கு அதிகாரம் உண்டு. எப்படி?

தூக்கு தண்டனை கைதியின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தால், அதன்பிறகு "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1) - இன்படி மத்திய அரசு கட்டளையிடுகிறது" என்கிறார் முதல்வர்.

மத்திய உள்துறை அமைச்சரகம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு அனுப்பிய ஒரு உத்தரவைத்தான் முதலமைச்சர் குறிப்பிடுகிறார். அரசியலமைப்பின் 257 (1) என்பது "மத்திய அரசின் நிருவாக வரம்பில் மாநில அரசு தலையிடக்கூடாது" என்கிற பிரிவாகும். இதற்கும், அரசியலமைப்பின் 161 ஆம் பிரிவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஏனெனில், 161 ஆம் பிரிவு மாநில அரசின் தனிப்பட்ட இறையாண்மை அதிகாரம் ஆகும். இதற்கும் மத்திய அரசின் நிருவாகத்திற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை.

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரதாப் சிங் கைரோனை கொலைசெய்த குற்றத்திற்காக தூக்குதண்டனை அளிக்கப்பட்ட கைதி தயா சிங். இவரது கருணை மனுவை ஆளுநரும் நிராகரித்து, குடியரசுத் தலைவரும் நிராகரித்த பின்னர் அவர் இரண்டாம் முறையாக ஆளுநரிடம் கருணை மனு கொடுத்தார். அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் அரியானா அரசு மத்திய அரசியம் விளக்கம் கேட்டது. கருணை மனு மீது முடிவெடுக்க இரண்டு ஆண்டுகள் தாமதம் ஆனதால் - தயா சிங்கின் கடிதத்தை வழக்காக எடுத்துக்கொண்டது உச்ச நீதி மன்றம்.

உச்சநீதி மன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் 5.3.1991 நாளிட்ட கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சரகம் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பியது. அக்கடிதத்தில்தான் "குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை" என்கிற கருத்தை திணித்தது மத்திய உள்துறை அமைச்சகம். அந்தக் கடிதத்தைதான் சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டி "எந்தவித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை" என்று கூறினார் தமிழக முதலமைச்சர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் - எந்த தயா சிங் வழக்கிற்காக இக்கடிதத்தை மத்திய அரசு எழுதியதோ, அதே வழக்கில் அக்கடிதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பஞ்சாப் முன்னாள் முதல்வர் கொலைக் குற்றவாளியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும் 24.4.1991 அன்று உத்தரவிட்டது. ஆக, மத்திய அரசின் கடிதம் செத்துப்பிறந்த குழந்தையைப் போன்றதே ஆகும். அதற்கு அதிகாரம் எதுவும் இல்லை.

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Daya Singh v Union of India, 1991 (3) SCC 61


மன்னிப்பு - ஒரு வானளாவிய அதிகாரம்!

இந்தியாவில் நீதிமன்றங்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மட்டும்தான் உண்டு. அந்த தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது. தண்டனையை நிறைவேற்றுவது அல்லது அதனை மன்னிப்பது அரசாங்கத்தின் அதிகாரம் ஆகும். இந்த மன்னிப்புக்கும் நீதிமன்ற தண்டனைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

குற்றம் எதுவானாலும் விசாரணை தொடங்கும் முன்பு, விசாரணை நடக்கும் போது, தண்டனை அளிக்கப்பட்ட பின்பு என எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் எந்த ஒரு குற்றவாளியையும் மன்னிக்கலாம். இது ஒரு உச்சபட்சமான அதிகாரம் ஆகும்.
இந்திய அரசியல் அமைப்பின் 72 ஆம் பிரிவில் குடியரசுத் தலைவருக்கும், 161 ஆம் பிரிவின்படி மாநில ஆளுநருக்கும் இந்த மன்னிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னிக்கும் அதிகாரம் ஒரு வானளாவிய அதிகாரம் என்பதைக் குறிக்கும்வகையில், உச்சநீதிமன்றம்: இங்கிலாந்து நாட்டில் மன்னருக்கும், அமெரிக்காவில் அதிபருக்கும் உள்ள மன்னிக்கும் அதிகாரம் இந்தியாவில் ஆளுநருக்கும் குடியரசு தலைவருக்கும் உண்டு என்கிறது.

"The view of the language of Articles 72 and 161,..the President and the Governors of the States in India had the same powers of pardon both in nature and effect, as is enjoyed by King in Great Britain and the President in the United States. Therefore, in India also the pardoning power can be exercised before, during, or after trial."

Nanavati v. State of Maharashtra AIR 1961 S.C. 112

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Nanavati v. State of Maharashtra AIR 1961 S.C. 112

ஆளுநரை விட குடியரசுத் தலைவர் மேலானவர் அல்ல.

மன்னிக்கும் அதிகாரத்தின் படி, ஆளுநரை விட குடியரசுத் தலைவர் மேலானவர் அல்ல. உயர்நீதி மன்றத்தில் நிராகரிக்கப்படும் வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவது போல - ஆளுநர் கருணை மனுவை நிராகரித்தால் அதன் பிறகு குடியரசுத் தலைவரிடம் மேல்முறையீடு செய்யப்படுவதாக கருணை மனுவை பலரும் நினைக்கின்றனர். உணமை அதுவல்ல.

ஆளுநரிடம் முறையிடுவதும், குடியரசுத் தலைவரிடம் முறையிடுவதும் - இரண்டும் இரண்டு தனித்தனி கருணை கோரிக்கைகளாகும். இருவரில் யாராவது ஒருவர் மன்னிப்பு வழங்கினால் போதும். இந்த இருவரது அதிகாரங்களும் தனித்தனி சமமான அதிகாரங்கள் ஆகும். இந்த மன்னிப்பு விடயத்தில் மட்டும் ஒருவரைவிட மற்றொருவர் மேலானவர் அல்ல.

அதாவது, ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரத்தைவிட குடியரசுத் தலைவரது மன்னிக்கும் அதிகாரம் மேலானது அல்ல. எனவே, "குடியரசுத் தலைவரே நிராகரித்து விட்டார், ஆளுநர் என்ன செய்ய முடியும்?" என்கிற பேச்சுக்கே இடமில்லை. இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது:

The Governor vis a vis his Cabinet is no higher than the President save and narrow area which does not include Article 161. 


Maru Ram v Union of India (1981) SCC 1073

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Maru Ram v Union of India (1981) SCC 1073

ஆளுநர் மாநில அரசின் பேச்சைக் கேட்க வேண்டும்.

மாநில அரசாங்கம் கருணை மனுவை பரிந்துரை செய்தாலும் கூட, மாநில ஆளுநர் அதனை நிராகரித்தால் என்ன செய்வது? என்கிற கேள்வி எழலாம் (மாநில ஆளுநர் மத்திய அரசின் முகவர்தானே). இதற்கும் கூட உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

அரசியலமைப்பின் 161 ஆம் பிரிவில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது உண்மையில் மாநில அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமே ஆகும். கருணை மனு விடயத்தில் மாநில அமைச்சரவை என்ன சொல்கிறதோ, அதனை மாநில ஆளுநர் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும். மாநில அமைச்சரவை மன்னிப்பு வழங்கச் சொன்னால், ஆளுநர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மன்னிப்பு வழங்கிதான் ஆகவேண்டும் என்கிறது உச்சநீதி மன்றம்:

The constitutional conclusion is that the Governor is but a shorthand expression for the State Government and the President is an abbreviation for the Central Government…the Governor is The formal head and sole repository of the executive power but is incapable of acting except on, and according to, the advice of his council of ministers. The upshot is that the State Government, whether the Governor likes it or not, can advise and act under Art. 161, the Governor being bound by that advice.

Maru Ram v Union of India (1981) SCC 1073


அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Maru Ram v Union of India (1981) SCC 1073

மாநில அரசின் மன்னிக்கும் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது.

மன்னிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு எனும்போது, அதில் மத்திய அரசு தலையிடலாமா? என்றால், மத்திய அரசால் தலையிட முடியாது என்பதே முடிவாகும்.

இந்தியாவில் அரசாங்கத்தின் அதிகாரம் என்பது மூன்று வழிகளில் பெறப்படுகிறது. 1. அரசியல் அமைப்பு, 2. சட்டங்கள், 3. நிருவாக உத்தரவுகள். இவற்றில் உத்தரவுகளைவிட சட்டம் மேலானது, சட்டத்தைவிட அரசியலமைப்பு மேலானது.

மன்னிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு அரசியல் அமைப்பு அளித்துள்ளது. ஆனால், ஒரு சாதாரண நிருவாக உத்தரவால் "மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கட்டளையிடுகிறது" என்கிறார் முதலமைச்சர். இது ஏற்புடையது அல்ல. அரசியல் அமைப்பு மாநில அரசுக்கு அளித்துள்ள முழுமையான, கட்டற்ற, விதிகளால் தடுக்க முடியாத அதிகாரத்தில் தலையிடும் உரிமை மத்திய அரசுக்கு கிடையாது.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளில், மன்னிக்கும் அதிகாரம் என்பது ஓர் இறையாண்மை அதிகாரம் எனவும், அது முழுமையான, மாற்ற முடியாத அதிகாரம் எனவும் குறிப்பிடுகிறது. குற்றவாளிகளை மன்னிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு சாதாரண உத்தரவால் மட்டுமல்ல, நாடாளுமன்ற சட்டங்களால் கூட மாற்ற முடியாது.

அதாவது, தூக்குதண்டனைக் கைதிகளை மன்னிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிற ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் கூட - அந்த சட்டம் தமிழ்நாடு அரசைக் கட்டுப்படுத்தாது.

“sovereign power to grant pardon has been recognised in our Constitution in Articles 72 & 161”


State (Govt. of NCT Delhi) v Premraj (2003(7) SCC 121


The power under Articles 72 and 161 of the Constitution is absolute and cannot be lettered by any statutory provision... This power cannot be altered, modified or interfered with in any manner whatsoever by any statutory provisions or Prison Rules. 


State of Punjab v Joginder Singh, 1990 (2) SCC 661

அந்த தீர்ப்புகளை இங்கே காணலாம்: 1.`State (Govt. of NCT Delhi) v Premraj (2003(7) SCC 121   2. State of Punjab v Joginder Singh, 1990 (2) SCC 661

ஏற்கனவே கருணை மனுவை நிராகரித்த பின்னர் மீண்டும் எப்படி மன்னிப்பது?

கடந்த 19.4.2000 அன்று கலைஞரது அமைச்சரவைதான் கருணை மனுவை நிராகரித்தது. ஆனால், ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ ஒரே ஒருமுறைதான் கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்கிற விதி எதுவும் இல்லை. மாறாக ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ மீண்டும் மீண்டும் கருணை மனுக்களை ப்ரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது:

The rejection of one clemency petition does not exhaust the power of the President or the Governor.


`G. Krishta Goud and J Bhoomaiah v State of Andhra Pradesh (1976(1) SCC 157

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: `G. Krishta Goud and J Bhoomaiah v State of Andhra Pradesh (1976(1) SCC 157

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தின் கோவிந்தசாமி என்பவரது கருணை மனுவை முதல் முறை நிராகரித்த குடியரசுத் தலைவர் இரண்டாம் முறையாக மன்னித்த வரலாறு ஏற்கனவே உள்ளது. கருணை மனு விடயத்தில் குடியரசுத் தலைவரது அதிகாரமும் ஆளுநரின் அதிகாரமும் ஒன்றுதான் எனும்போது - மாநில ஆளுநர் இரண்டாம் முறையாக கருணை மனுவைப் பரிசீலிப்பது சாத்தியமே.

என்ன செய்யவேண்டும்?

தூக்கு தண்டனையிலிருந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் இரண்டாவது முறையாக ஆளுநரிடம் கருணை மனு அளித்து - அதன் மீது மாநில அமைச்சரவை தூக்குதண்டனையைக் குறைத்து பரிந்துரைக்க வேண்டும்.
அந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்று தூக்குதண்டனையைக் குறைத்துதான் ஆக வேண்டும் என்பது விதி.

அதுமட்டுமல்ல - தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைப்பது மட்டுமல்ல, இருபதாண்டு சிறைவாசத்தைக் கடந்துள்ள அவர்களை மன்னித்து விடுதலை செய்வதுகூட மாநில அரசால் முடிகிற எளிய செயல்தான்.

எனவே, அரசியல் அமைப்பின் 161 ஆம் பிரிவின் கீழ் மாநில முதலமைச்சர் மன்னிக்க முன்வரவேண்டும் என ஆர்வமுடைய எல்லோரும் வலியுறுத்த வேண்டும். இதுவே அவசரப் பணியாகும்.

முக்கிய இணைப்புகள்.

1. மருத்துவர் இராமதாசு அவர்கள் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் -இங்கே காண்க. (தமிழ்)


2. PUCL அமைப்பு முதல்வருக்கு எழுதியக் கடிதம்- இங்கே காண்க: Commutation Petition to CM of Tamil Nadu by PUCL (ஆங்கிலம்)


3. மரண தண்டனை - மறு ஆய்வு தேவை எனும் PUCL ஆவணம்-இங்கே காண்க: Clemency petition - Perarivalan, Santhan, Murugan by PUCL - Tamil (தமிழ்)


4. பேரறிவாளன் கருணை மனு நூல் இங்கே காண்க: An Appeal from the Death Row (RAJIV MURDER CASE - THE TRUTH SPEAKS) (ஆங்கிலம்)


5. Lethal Lottery - The Death Penalty in India: A study of Supreme Court judgments in death penalty cases 1950-2006 (ஆங்கிலம்)

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

ராஜீவ் கொலை: மர்மம் விலகுமா?

ராசீவ் காந்தியைக் கொலை செய்தது யார்? இந்தக் கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இதுகுறித்து கீழே அளிக்கப்பட்டுள்ள காணொளி நேர்காணல் இணைப்பை பாருங்கள்:  

1. கொலை நடப்பதற்கு 15 நிமிடம் முன்னதாக எடுக்கப்பட்ட நிழற்படத்தில் பொட்டு இல்லாமல் இருக்கும் தணு என சொல்லப்படுகிற பெண், கொலை நடந்தபின் துண்டிக்கப்பட்ட அதே பெண்ணின் தலையில் பொட்டு வைக்கப்பட்டிருப்பது எப்படி?

2. கொலை சம்பவத்தின் ஒளிப்பதிவு நாடாவை வாங்கிய அப்போதைய ஐ.பி. இயக்குநர் எம்.கே.நாராயணன் அதனை இன்னமும் திருப்பித்தராதது ஏன்? அதன் மூலம் மறைக்கப்பட்டது என்ன?

3. அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ராசீவ் கொலை வழக்கு ஆவணங்கள் காணாமல் போனது எப்படி? இதுகுறித்து தா.பாண்டியன் கேட்டபோதும் ப.சிதம்பரம் அதை அலட்சியப்படுத்தியது எதற்காக?

4. ராசீவ் கொலை தொடர்பான விசாரணை தொடங்கும் முன்பாகவே - கொலை நடந்த இரவே, கொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான் என அப்போதைய சட்ட அமைச்சர் சுப்ரமணியன் சாமி அவசரமாக அறிவித்தது ஏன்?

5. திருப்பெரும்புதூரில் அவசரமாக ராசீவ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதில் மார்கரட் ஆல்வாவின் பங்கு என்ன? மார்கரட் ஆல்வாவின் சொந்தமாநிலமான கருநாடகத்தை சேர்ந்த கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப் பட்டதன் பின்னணி என்ன? அவர் சில நபர்களைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தார் என ரகோத்தமன் கூறுவதை ஏன் விசாரிக்கவில்லை?

இப்படியாக விடைதெரியாத பல கேள்விகளை எழுப்புகிறது இந்த இணைப்பு