Pages

Saturday, June 09, 2012

குழப்பும் வினவு: கார்களைக் கட்டுப்படுத்தினால் ஏழைகளுக்கு ஆபத்தாம்!  

வினவு வலைதளத்தில் "சென்னைக்கு வருகிறது ”டிராபிக் ஜாம்” வரி!" எனும் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையின் போக்குவரத்து சிக்கலை விளக்கும் இந்த கட்டுரை - அந்த சிக்கலுக்கான ஒரு நியாயமான தீர்வினை அநியாயம் என்று விளாசுகிறது! இது என்னவகையான 'இசம்' என்று விளங்கவில்லை!
வினவின் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

"சென்னை மற்றும் புறநகர் சாலைகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தனியார் வாகனங்கள் மீது ”டிராபிக் ஜாம்” வரி விதிக்கும் திட்டத்தைக் தமிழக அரசு கொண்டு வரவிருக்கிறது.


சென்னை நகரிலும், அதன் புறநகர் சாலைகளிலும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தனியார் வாகனங்கள் மீது நெரிசல் வரி விதிக்கும் திட்டத்தைக் கொண்டுவரப் போவதாகவும்; இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை மாநகருக்குள் அமைந்துள்ள அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர்லால் நேரு சாலை ஆகிய மூன்றிலும் இவ்வரி விதிக்கும் நடைமுறை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தொடங்கிவிடுமென்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.


இந்த வரி விதிப்பைத் தவிர்க்க எண்ணும் தனியார் வாகன ஓட்டிகள், இந்தச் சாலைகளுக்குள் நுழையாமல் சுற்றிச் செல்ல வேண்டும்; இல்லையேல், அவர்கள் இந்தச் சாலைகளில் செல்லப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.  இதன் மூலம் இச்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துவிட முடியும் என அரசு வாதிடுகிறது"

-- என்கிறது வினவின் கட்டுரை.

கூடவே, "போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வரி போடும் திட்டம் ஏற்கெனவே சிங்கப்பூர், ஹாங்ஹாங், இலண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது.  அக்கொள்ளையைத் தமிழகத்திலும் இறக்குமதி செய்ய எத்தணிக்கிறது, பாசிச ஜெயா கும்பல்." என்கிறது வினவு!

தமிழக அரசின் மேற்கண்ட வாதத்தில் எந்த தவறும் இருப்பதாகக் கருத முடியாது. ஆனாலும், வினவு இக்கருத்தினை எதற்காக எதிர்க்கிறது என்பது விளங்கவில்லை. மாறாக, தமிழக அரசின் இந்த முயற்சி சரிதான் என்பதை நியாயப்படுத்துவதற்கான பல கருத்துகள் வினவின் கட்டுரையிலேயே உள்ளன என்பது ஒரு முரண்நகையாகும்.

எடுத்துக்காட்டாக, "போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எந்தவொரு இடத்தை அவதானித்தாலும், பொது வாகனங்களைவிட, தனியாருக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்கள்தான் முண்டியடித்துக்கொண்டு உருமி நிற்பதைக் காணமுடியும்.  இந்தத் தனியார் வாகனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, அவைகள் நகரத்தின் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வந்து போவதற்கு கட்டுப்பாடு விதிக்கவோ விரும்பாத அரசு" என்று குறிப்பிடுகிறது வினவு.

தனியார் வாகனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அவைகள் நகரத்தின் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வந்து போவதற்கு கட்டுப்பாடு விதிக்கவும் கூடிய ஒரு முறைதான் "நெரிசல் கட்டணம்" என்று வினவுக்கு விளங்காமல் போனது எப்படி?

நெரிசல் கட்டணம் - மிகச்சிறந்த தீர்வு

பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதில் "நெரிசல் கட்டணம்" விதிப்பது ஒரு மிகச்சிறந்த முறையாகும் (அது மட்டுமே தீர்வு அல்ல, அதுவும் ஒரு தீர்வு).
இன்றைய போக்குவரத்து கொள்கை அல்லது போக்குவரத்து முன்னுரிமையில் வாகனங்கள் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, மக்களை முன்னிலைப் படுத்துவதே சரியான, நீதியான முறையாகும். 'வாக்களிக்க மட்டும் ஒரு ஆளுக்கு ஒரு ஓட்டு' என்பது போதாது, சாலையிலும் ஒவ்வொருவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.

சென்னையின் சாலையில் சுமார் 80 விழுக்காடு இடத்தை கார்களும், இருசக்கர வாகனங்களும் அடைத்துச் செல்கின்றன. ஆனால், மொத்த பயணிகளில் சுமார் 25 விழுக்காட்டினர் மட்டுமே கார்களிலும் இருசக்கர ஊர்திகளிலும் பயணிக்கின்றனர். மீதமுள்ள 75 விழுக்காடு மக்களின் பயணம் பேருந்து, மிதிவண்டி, நடைபயணத்தின் வழிதான் நடக்கிறது.

ஒரு பேருந்தின் இடத்தை 3 கார்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஒரு பேருந்தில் 60 – 70 பேர் செல்லும் நிலையில், 3 கார்களில் சராசரியாக 6 பேர்தான் செல்கிறார்கள். எல்லோருக்கும் பொதுவான இடத்தை பணம் படைத்தவர் ஆக்கிரமிப்பது என்ன நீதி?
கார், பேருந்து, மிதிவண்டி - ஒரே அளவு மக்கள் பயணிக்க சாலையில் தேவைப்படும் இடம்.

சாலை என்பது அரசின் பணத்தில், மக்கள் பணத்தில் போடப்படுகிறது. அதில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே அளவுதான் உரிமை உண்டு. அளவுக்கதிகமாக பொது இடத்தை ஆக்கிரமிப்பவர் மீது அதற்கான உண்மைச் செலவை வசூலித்து அதனை ஏழைக்கான போக்குவரத்துக்கு செலவிட வேண்டும் என்பதுதான் நெரிசல் கட்டணத்தின் தத்துவம் ஆகும்.

தனியார் கார்களுக்கு கட்டணம் விதப்பதென்பது அவற்றை சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தி – பொதுப்போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்பதுதற்காகத்தான். மேலும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனியார் கார்கள் மீது விதிக்கும் கட்டணத்தை பொதுப்போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக செலவிடுகின்றனர்.
காரில் போகிறவன் அவனுக்கு உரிமையானதை விட அதிக இடத்தை அக்கிரமிக்கிறான். அப்படிப்பட்ட மிதமிஞ்சிய பயன்பாட்டினால் காசில்லாதவனுக்கு இடம் கிடைக்காமல் போகிறது. இந்நிலையில் காரில் போகிறவன்மீது கட்டணம் விதிப்பது எவ்வாறு காசில்லாதவனுக்கு எதிரானதாகும்?

சிங்கப்பூர் காட்டும் சிறந்த வழி

சிங்கப்பூர் முதலாளித்துவ நாடு. ஆனால், பணம் படைத்தோரின் கார்களைக் கட்டுப்படுத்துவதில் அது மிகச்சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது.சிங்கப்பூரில் நினைத்தபோதெல்லாம் கார் வாங்கிவிட முடியாது. மாறாக, இந்த மாதம் இத்தனைக் கார்கள்தான் புதிதாக வாங்கப்படலாம் என்கிற உச்ச அளவை அரசாங்கமே நிர்ணயிக்கிறது. அதற்கான அனுமதிச் சீட்டுகளை ஏலத்திற்கு விடுகிறார்கள். 1000 அனுமதிச் சீட்டுகள் உண்டென்றால், ஏலம் கேட்பவர்களை கேட்கும் தொகைக்கு ஏற்ப பட்டியலிடுகின்றனர். முதலாமவர் ஒரு சீட்டினை 2 கோடிக்கு கேட்கிறார்,1000 ஆவது நபர் 20 லட்சத்துக்கு கேட்கிறார் என்றால் -  மொத்தமுள்ள 1000 அனுமதிச் சீட்டுகள் விலையும் 20 லடசம்தான். இவ்வாறாக கடந்த மார்ச் மாதம் ஒரு அனுமதிச் சீட்டு இந்திய மதிப்பில் 39 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஆக, முதலில் 39 லட்சம் அரசுக்கு பணம் செலுத்தி ஒதுக்கீட்டு அனுமதிச் சீட்டு வாங்கிய பின்புதான் - அதைக்காட்டி கார் வங்க முடியும். அப்படி கார் வாங்கினாலும், அதனை நினைத்தபடி ஓட்டிவிட முடியாது. நெரிசலான சாலையில் பயணிக்கும் பொது நெரிசலான நேரத்துக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். எப்படி, செல்பேசியில் பேசப் பேச கட்டணம் பிடிக்கப்படுகிறதோ, அதுபோல - நெரிசலான நேரத்தில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை கார் வைத்திருப்போரிடம் மின்னணு முறையில் தானாகவே வசூல் செய்துவிடுவார்கள்.

அதுமட்டுமில்லாமல் - சாலைகளிலோ, கட்டடங்களிலோ இலவச வாகன நிறுத்தம் என்பது எதுவும் இல்லாத அளவுக்கு ஒழித்துவிட்டார்கள். எனவே, காரை எடுத்துச்சென்று எங்கு நிறுத்தினாலும் அதற்கு மணிக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டும்.

இப்படியாக கார் முதலாளிகளிடம் வசூலிக்கும் பணத்தில் - பேருந்து, தொடர்வண்டி, நடைபாதை வசதிகளை மிகப்பெரிய அளவில் செய்துதருகிறார்கள். இப்போது சிங்கப்பூரில் ஒரு இடத்திலிருந்து நகரின் வேறு எந்த இடத்திற்கும் மிக நவீனமான நடைபாதையில் நடந்து போக முடியும். கார் மூலம் சென்றடைவதைவிட வேகமாக தொடர்வண்டி மூலம் நகரின் எந்த மூலைக்கும் பயணிக்க முடியும்.

இப்படியெல்லாம் கார்கள் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதால் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் நன்மைதானே தவிற, கேடு எதுவும் இல்லை.

சென்னை நகரின் தேவை என்ன ?

சென்னை நகரில் 'நெரிசல் கட்டணம்' கட்டாயமாக நடமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனாலும் பலப்பல பன்னாட்டு கார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள ஒரு மாநிலத்தில் இதனை அரசு விரும்புமா? அதற்கு கார் நிறுவனங்கள் அனுமதிக்குமா? என்பது கேள்விக்குறியது. சென்னையில் சொந்த வாகன நிறுத்தம் உள்ளவர்கள் மட்டுமே புதிதாக கார் வாங்கலாம் என்கிற விதியைக் கட்டாயமாக்குவது குறித்து நீண்டகாலமாக பேசுகிறார்கள். ஆனால் இன்னமும் அதைக்கூட நடைமுறைப் படுத்தவில்லை.

சென்ன நகருக்கான சரியான போக்குவரத்து என்பது பின்வரும் நிலைகளின் மூலம் அடையப்பட வேண்டும். (பாட்டாளி மக்கள் கட்சியின் "சென்னை பெருநகருக்கான மாற்று போக்குவரத்து திட்டம்" எனும் ஆவணத்தில் இதுகுறித்து விரிவாகக் காணலாம்:

1. எல்லா சாலைகளிலும் சரியான நடைபாதை,
2. மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 ஆக அதிகரித்தல்,
3. முதன்மை சாலைகளில் இலவச வாகன நிறுத்தங்களை ஒழித்தல்,
4. அகமதாபாத் நகரில் உள்ளது போல பேருந்து விரைவு போக்குவரத்து திட்டம் (BRT),
5. தனியார் கார்கள் மீது நெரிசல் கட்டணம் (இருசக்கர வண்டிகள் மீதல்ல),
6. பள்ளிகளிச் சேர்க்கையில் “அண்மைப்பள்ளி முறையை” கட்டாயமாக்குதல்

- இவைதான் நெரிசலைத் தீர்க்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படையில்தான் முன்னுரிமைகளும் அமைய வேண்டும். இதில் எதைச்செய்தாலும் அது ஒட்டுமொத்த போக்குவரத்துக்கு நன்மையாகவே அமையும்.

ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு மேம்பாலம், அடுக்குமாடி வாகன நிறுத்தம், கூடுதல் சாலை, மோனோ ரயில் என்று நிலைமையை இன்னும் மோசமாக்கக்கூடிய திட்டங்களைத்தான் அரசாங்கமும் பன்னாட்டு நிறுவனங்களும் முன்வைக்கின்றன.

இந்நிலையில், உழைக்கும் மக்களுக்காக பேசுவதாகக் கூறும் வினவு நெரிசல் கட்டணத்தை எதிர்ப்பதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

3 comments:

Robin said...

பணக்காரர்கள்தான் கார் வைத்திருப்பார்கள் என்ற நிலை எப்போதோ மாறிவிட்டது. இப்போதெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் கார் வைத்திருக்கின்றனர். இதில் பலர் தனியாகச் செல்லும்போது இரண்டு சக்கர வாகனங்களிலும் குடும்பத்தோடு செல்லும்போது காரிலும் செல்கின்றனர்.

தனியார் வாகனங்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள் நியாயமான கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் இதனால் நடுத்தர வர்க்கத்தினரே அதிகமாகப் பாதிக்கப்படுவர்.

Santhose said...

//சாலை என்பது அரசின் பணத்தில், மக்கள் பணத்தில் போடப்படுகிறது. அதில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே அளவுதான் உரிமை உண்டு.//

Rich people only paying tax not poor

dondu(#11168674346665545885) said...

நான் நினைத்ததையே நீங்களும் கூறியுள்ளீர்கள். நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்