Pages

Wednesday, September 19, 2012

விநாயகர் சதுர்த்தியும் தமிழர்களின் வீரமும் - அறியாத தகவல்கள்!

விநாயகர் சதுர்த்தி தமிழர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகை அல்ல. விநாயகர் தமிழ்நாட்டின் முதல் கடவுளும் அல்ல. கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் விநாயகர் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் அப்படி ஒருவர் குறிக்கப்படவில்லை. எனினும் விநாயகர் தமிழ்நாட்டிற்கு வந்ததின் பின்னணியில் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.

பல்லவ - சாளுக்கிய போர்

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். 
 புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போர் - கற்பனைப் படம்
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி).
பாதாமி
இந்த போரின் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் மிக முக்கியமான நிகழ்வுகள் அமைந்துள்ளன. தமிழ்நாடெங்கும் உள்ள திரௌபதி அம்மன் கோவில்கள் இதனால் ஏற்பட்டவைதான். கூவாகம் கூத்தாண்டவர் இந்த நிகழ்வோடு தொடர்புடைய சாமிதான். இன்றும் பெங்களூரு நகரின் முதன்மை திருவிழாவாக இருக்கும் 'கரகா' திருவிழா இதன் தொடர்ச்சியே. தமிழ்நாடெங்கும் கோவில் திருவிழாக்களில் நடக்கும் பாரதம் படிக்கும் பழக்கம் இதனால் ஏற்பட்டதுதான். அவ்வாறே, புலிகேசியின் பாதாமி நகரைத் தாக்கி அழித்து அதன் நினைவாகக் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவர்தான் விநாயகரும்.

சாளுக்கிய மன்னன் புலிகேசி - வன்னிய புராணம் - கூத்தாண்டவர்

நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். வன்னியர்கள் வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது. இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர் சமூகத்தினரிடையேதான். பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.
திரௌபதி அம்மன்
சாளுக்கிய மன்னன் புலிகேசியை வாதாபி சூரனாக சித்தரித்து, அவனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன்.

வாதாபி அரக்கனை அழிக்கப்புறப்படும் போது வீரவன்னியராசனின் மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை.
போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இதுதான் வன்னியக் கூத்து ஆகும்.

இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இப்படியாக வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை - பாரதக் கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகள் கதை ஆகிவிட்டது.
கூவாகம் கூத்தாண்டவர்
கூவாகம், கொத்தட்டை, அண்ணாமைலை நகர், தேவனாம் பட்டினம், தைலாபுரம், பிள்ளையார் குப்பம் ஆகிய கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கோவை சிங்காநல்லூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. அனைத்து கூத்தாண்டவர் கோவில்களும் வன்னியர்களின் கோவிலாக உள்ளன. அவற்றில் பூசாரிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். இக்கோவிலுக்கு வழிபட வரும் சுற்றுக்கிராம மக்கள் அரவாணிகள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். தமது வேண்டுதலுக்காக தாலி கட்டிக்கொள்கின்றனர்.
மாமல்லபுரம் திரௌபதியம்மன் 
வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. பாரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. பாரதக் கதையின் பாதிப்பால் திரௌபதை அம்மன் கோவில்கள் உருவாயின. பல்லவர்களின் மாமல்லபுர கோவில்களில் திரௌபதிக்கும் கோவில் உள்ளது. எல்லா திரௌபதியம்மன் ஆலயங்களும் வன்னியர் கோவில்களாக நீடிக்கின்றன. வன்னியர்களே பூசாரிகளாக உள்ளனர். பெங்களூரின் முக்கிய விழாவான தர்மராஜா கோவிலின் கரகா திருவிழா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
திருச்செங்காட்டன்குடி வாதாபி கணபதி
நரசிம்மவர்ம்மனின் படை கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகரைத் தாக்கி அழித்தது என்பதற்கான கல்வெட்டு இப்போதும் பாதாமி நகரில் இருக்கிறது. அங்கிருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலை திருவாரூர் அருகே திருச்செங்காட்டன்குடி எனும் ஊரில் இருக்கிறது. தமிழ்நாட்டி விநாயகரை வாதாபி கணபதி என்றும் அழைக்கின்றனர்.

இப்போது இந்துத்வா அமைப்புகளால் ஊக்குவிக்கப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கும் - வாதாபி கணபதியின் வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

14 comments:

வெற்றிவேல் said...

அருமை நண்பா... முதல் வருகை.

நானும் இதுபற்றி தற்போதுதான் ஒரு பதிவு எழுதினேன், மறக்காமல் வந்து கருத்து கூறுங்கள்...
http://iravinpunnagai.blogspot.in/2012/09/blog-post_19.html

அன்பு துரை said...
This comment has been removed by the author.
Robin said...

//வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை.// ஆதாரம்?

அருள் said...

Robin கூறியது...

//வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை.// ஆதாரம்?

"பல்லவ மன்னன் செய்தது ஒன்றுதான்; பாரதக்கதை படிக்க வேண்டும்; அதுவும் போர்க்குணம் எழவேண்டும்; அதைத்தூண்டுவதற்கு வழியாகத்தான் பாரதக்கதை படிக்கச் செய்தான்."..."பாரதக் கூத்து நடக்க ஏற்பாடு செய்யப்பட்ட காலத்தில்தான் திரௌபதியம்மன் கொயில்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்".."திரௌபதியம்மன் கோயில் பூசாரியாக எல்லா மாவட்டங்களிலும் வன்னியர்களே இருக்கிறார்கள்"

விரிவாகக் காண: பக்கம் 70, 73, தமிழ்நாட்டில் திரௌபதியம்மன் வழிபாடு, 'தமிழ்ச் சமுதாயமும் நாட்டுப்புறப் பண்பாடும்' நூல், முனைவர் துளசி. இராமசாமி 1997, விழிகள் வெளியீடு

"வாதாவி நகரை அழித்தது பற்றியே நரசிம்மன் வாதாவி என்னும் அரக்கனை அழித்த அகத்தியன் போன்றவன் என்று கூறப்பட்டான்".."(வன்னிய புராணத்தில்) வன்னியராசனின் வாதாவி வெற்றிக்குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது."

விரிவாகக் காண: பக்கம் 152, 153, 'தெருக்கூத்து' நூல், முனைவர் சு. இராசரத்தினம் 2007, காவ்யா வெளியீடு

Robin said...

//ஏற்பட்டிருக்க வேண்டும்// என்று வெறும் யூகத்தில் சொல்லப்பட்டதை //ஏற்பட வேண்டும் என்பதற்காக // என்று திரித்து எழுதியிருக்கிறீர்கள், கவனியுங்கள்.

//பல்லவர்களின் மாமல்லபுர கோவில்களில் திரௌபதிக்கும் கோவில் உள்ளது// கோயில் கட்டியிருக்கிறார்கள் என்றால் திரௌபதியை கடவுளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? போர்க் குணம் ஏற்படவேண்டும் என்பதற்காக (தாங்களே நம்பாத ஒன்றிற்கு) யாராவது கோயில் கட்டி வழிபடுவார்களா?

அருள் said...

@Robin

"போர்க்குணம் ஏற்பட வேண்டும், போர்க்குணம் எழவேண்டும்" என்பதற்காக பாரதம் படிக்கச்செய்தான், "பாரதம் படிக்கச்செய்ததால் திரௌபதியம்மன் கோயில்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்" -- என விரிவாக முனைவர் துளசி. இராமசாமியின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதில் திரிப்பதற்கு என்ன இருக்கிறது?

"போர்க்காக ஆள் திரட்ட பல்லவ மன்னன் பாரதக் கதை படிக்கச் செய்தான்" எனும் செவிவழிச் செய்திகளையும், அதற்கு ஆதாரமாக செப்புப்பட்டயங்களையும், கல்வெட்டு ஆதாரங்களையும் குறிப்பிட்டுள்ளார் அவர். அந்த ஆய்வுக்கட்டுரையை முடியுமானால் படித்துப் பார்க்கவும்.

R.Puratchimani said...


/ வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை.//

பாரதக்கதை என்றால் மகாபாரதம் தானே. மகாபாரதம் ஆறாம் நூற்றாண்டில் உருவான கற்பனைக்கதை என்கிறீர்களா?

திண்டுக்கல் தனபாலன் said...

சில தகவல்கள் அறியாதவை... நன்றி...

சார்வாகன் said...


வணக்கம் சகோ,
நல்ல பதிவு.என்றாலும் உங்களின் பெரும்பானமை பதிவுகள் குறிப்பிட்ட இனம் பற்றியே தகவல் தருவதை தவிர்க்கலாம்.
1.//மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்//
மகாபாரதத்தை வில்லி பாரதம் என தமிழில் இயற்றிய வில்லிபுத்தூரார் காலம் 13ஆம் நூற்றாண்டு என குறிப்பிடப்படுகிறது. ஆகவே சமஸ்கிருதத்தில் திரௌபதி கதை பாடப்பட்டு வந்தது என சொல்ல வருகிறீர்களா??
[[http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01125m1.htm
பிறப்பு
இவர் தென் பெண்ணை ஆறு பாய்கிற திருமுனைப்பாடி என்னும் பகுதியில் உள்ள சனியூரில் பிறந்துள்ளார். இவர் தந்தை வீரராகவாசாரி ஆவார். இவர் வைணவ அந்தணர்.
5.3.1. வில்லிபுத்தூரார் காலம்
வில்லிபுத்தூராரின் காலத்தைத் திட்டவட்டமாய் அறிய இயலவில்லை. வக்க பாகையில் அரசனாக இருந்தவன் கொங்கர் கோன் வரபதி ஆட்கொண்டான் ஆவான். இவனே வில்லிபுத்தூராரை ஆதரித்தவன். இவனை இரட்டைப் புலவர்களும் பாடி உள்ளனர். இதே இரட்டையரே இராச நாராயணச் சம்புவராயன் என்ற காடவர் குல மன்னனையும் பாடி உள்ளனர். ஆக, வரபதி ஆட்கொண்டான், வில்லிபுத்தூரார், இரட்டைப் புலவர்கள், சம்புவராயன் ஆகியோரை ஒரே காலத்தைச் சேர்ந்தவராகக் கருத முடியும்.
இவர்களுள் சம்புவராயன் காலம் கி.பி. 1331 - 1383 என்று வரலாற்று ஆசிரியர்களால் வரையறை செய்யப்படுகிறது. ஆதலால் வில்லிபுத்தூரார் காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு என்று கொள்வதற்கு இடம் உண்டு.]]
2. தமிழ்நாட்டில் உள மிக பழமையான் திரௌபதி கோயில் எது?

நன்றி!!

முனைவர் மு.இளங்கோவன் said...

அருமையான பதிவு அருள். வாழ்துதகள். முகநூலில் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறை ஆர்வலர் குழுவில் இக்கட்டுரையைப் படிக்கும்படி பதிந்துள்ளேன்.

PUTHIYATHENRAL said...

வணக்கம். இது ஒரு வரலாற்று பதிவு. சிறப்பாக எழுதி இருக்கீங்கள் வாழ்த்துக்கள் தோழரே.

Easy (EZ) Editorial Calendar said...

மிக அருமையான வரலாற்று பதிவு....உங்கள் பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தமிழ் காமெடி உலகம் said...

யாரும் எதிர்பார்க்காத வரலாறை சொல்லி இருக்கிறிர்கள்..உங்கள் பகிர்வுக்கு மிக நன்றி..

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

கோமதி அரசு said...

நரசிம்ம பல்லவரின் படைத்தளபதி பரஞ்சோதி அவர்கள் வாதாபியை வென்று அங்கிருந்து வாதாபி கணபதியை கொண்டு வந்தார் என்று தெரியும்.திருசெங்காட்டுகுடி கோவிலில் பார்த்து இருக்கிறேன்.

வட மாநிலத்தில் கார்த்தியேகன் தான் மூத்தவர் விநாயகர் சின்னவர் என்றும் சொல்வார்கள்.

புரணாங்களும், வரலாறும் ஏதோ சொன்னாலும் முன்னோர்கள் இறை பக்தியை சிறு வயது முதலே வளர்த்து விட்டதால் அதில் பயணிப்பதால் மனதுக்கு நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படுகிறது.

உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.