Pages

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

தமிழ் பதிவுலகின் மதுபான விவாதம் குறித்து கருத்து சொன்னவர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால்  "மதுபானம் தீமை என்றால் மதம் மட்டும் தீமையில்லையா?" என்று கேட்கப்பட்டது. இதுகுறித்து நான் "குடியால் அழியுமா பதிவுலகம்?" என்று எழுதியபோது என்னை 'சாதிவெறியன்' என்று சொல்லி சிலர் "ஜாதி மதத்தை விடக்கொடியது" என்றார்கள். ஆக மது, மதம், சாதி என்கிற மூன்றும் இணைத்து பேசப்பட்டுள்ளதால் இவை மூன்றிலும் மிகவும் தீமையானது எது என்கிற கேள்வி எழுகிறது.

மது, மதம், சாதி இவை மூன்றையும் ஒன்றாக இணைக்கும் புள்ளி என்று ஏதாவது ஒன்று இருக்குமானால் அது 'அடையாளம்' ஒன்று மட்டும்தான். இவர் இந்த சாதி, இவர் இந்த மதம், இவர் ஒரு குடிகாரர் - என்கிற ஏதோ ஒரு அடையாத்தை இவை ஏற்படுத்துகின்றன. சிலருக்கு இந்த மூன்று அடையாளங்களும் ஒன்றாக அமையலாம்.

ஆனாலும், இத்தகைய ஒரு அடையாளம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதும் அந்த அடையாளத்தை தவிர்க்க முடியுமா என்பதும் அடிப்படையில் மாறுபட்டதாகும்.

1. சாதி அடையாளம் 

சாதி என்கிற அடையாளத்தை ஒருவர் உருவாக்குவதும் இல்லை. அவர் அதை நீக்க முடிவதும் இல்லை. அது நம்முடையக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும். பிறக்கும் போது சாதியுடனே இந்தியாவில் குழந்தைகள் பிறக்கின்றன. இறந்து சுடுகாட்டில் அடக்கம் நடக்கும் வரை சாதி இந்தியர்களை விட்டு அகலுவதில்லை. அகற்ற முடிவதும் இல்லை. எனவே, சாதி தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு அப்பாற்பட்டதாகும். (மதமாற்றம் ஒரு சில நிகழ்வுகளில், ஒரே தலைமுறையில் சாதியை அகற்றுகிறதா? என்பது விவாதத்திற்கு உரியது. ஒப்பீட்டளவில் இஸ்லாம் சாதி ஏற்றத்தாழ்வை களைந்துள்ளது)

2. மத அடையாளம் 

மதம் என்கிற அடையாளம் பெரும்பாலும் பிறக்கும்போதே வருகிறது. ஆனாலும், பிறந்த மதத்தை விட்டு வெளியேறி வேறு மதத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பு ஒப்பீட்டளவில் இரண்டு மதங்களில் இல்லை. இஸ்லாம் எவரையும் வெளியேற அனுமதிப்பது இல்லை என்று நான் எங்கோ படித்ததாக ஞாபகம். இந்துமதம் வெளியிலிருந்து எவரையும் தனது மதத்தில் சேர்த்துக்கொள்வது இல்லை (எந்த சாதியில் சேர்ப்பது என்கிற குழப்பமே இதற்கு காரணமாகும்).  எனவே, மதத்தினை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.

("இஸ்லாம் தன்னில் இருந்து மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை என்பது இஸ்லாமிய அடிப்படையில் சரியான புரிதல் கிடையாது" என்று இஸ்லாமிய சகோதரர்கள் கூறியுள்ளனர். விளக்கத்திற்கு நன்றி. இஸ்லாமிய நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப் போன்று, திருக்குர்ஆன் அத்யாயம் 2 அல் பகறாவில் "தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ - நிர்பந்தமோ இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. (2:256) "There shall be no compulsion in [acceptance of] the religion.")

3. குடிகாரர் அடையாளம் 

குடிகாரர் என்கிற அடையாளம் முற்றிலும் வேறுபட்ட ஒரு அடையாளம் ஆகும். இது பிறப்பினால் வருவது இல்லை. தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே வருகிறது. வந்தபின் இந்த அடையாளம் போவது இல்லை. எனவே, குடிகாரன் என்கிற அடையாளத்தை தேர்வு செய்ய முடியும், கைவிடுவது மிக மிகக் கடினம்.

சட்டமும் அடையாளங்களும்

அடையாளங்களில் மாறுபாடு இருப்பது போலவே, சட்டத்தின் பார்வையிலும் இந்த அடையாளங்கள் மாறுகின்றன.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மதமற்றவர்கள் என்று எவருமே கிடையாது. எவரெல்லாம் - இஸ்லாமியர், கிறித்தவர், பார்சி, சீக்கியர் இல்லையோ, அவர்கள் எல்லாம் இந்துக்கள். எனவே, இந்தியாவில் எவரேனும் ஒருவர் தனக்கு மதம் இல்லை என்று சொன்னால் - அவர் சட்டப்படி இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

மற்றபடி - இந்தியாவில் ஒவ்வொருவரும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற, பரப்ப உரிமை உண்டு. அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி மதம் ஒரு அடிப்படை உரிமை ஆகும்.

சாதியைப் பொருத்த வரை ஒருவர் தன்னை சாதி இல்லாதவன் என்று கூறிக்கொள்ளலாம். ஆனாலும், இதற்கென்று தனிப்பிரிவு இல்லை. கல்வி, வேலை வாய்ப்புகளில் இவர்கள் பொதுப்பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதாவது இடஒதுக்கீட்டு சட்டங்களின் முன்பாக பார்ப்பனரும் சாதி அற்றவரும் ஒன்றுதான்.

அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடும் சிறப்பு முன்னேற்றத் திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டப்பிரிவுகள் 15 (4), 16 (4), 340 ஆகியவற்றின் கீழ் அரசின் கடமை ஆகும். மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கு சாதியே அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. எனவே, சாதி அடையாளம் அரசின் பார்வையில் ஒரு முக்கியமான மேம்பாடு மற்றும் நீதிக்கான அளவுகோள் ஆகும்.

குடிகாரர் என்கிற அடையாளம் முற்றிலும் வேறுபட்ட ஒரு அடையாளம். அரசியல் சட்டத்தின் 47 ஏழாம் பிரிவு மதுபானத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்தப் பிரிவு வழிகாட்டிநெறி என்பதால் இதனை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றத் தேவை இல்லை.

எது மிக மோசமானத் தீமை?

மது, மதம், சாதி என்கிற மூன்று தீமைகளில்:

1. மதம் 

மதம் ஒரு தீமை என்பது தவறான பதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், உலகின் எந்த இடத்திலும் எந்த சட்டத்திலும் மதம் ஒரு தீமை என்று குறிப்பிடப்படவில்லை. அதிலும் இந்தியாவில் மதம் என்பது ஒரு அடிப்படை உரிமை.
CONSTITUTION OF INDIA Article 25: "all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion"

உலகில் மிக உயர்வான சட்ட அடிப்படையாக மதிக்கப்படும் பன்னாட்டு மனிதஉரிமைகள் பிரகடனத்தில் மதம் ஒரு உரிமையாக ஏற்கப்பட்டுள்ளது.

UNIVERSAL DECLARATION OF HUMAN RIGHTS Article 18: "Everyone has the right to freedom of thought, conscience and religion; this right includes freedom to change his religion or belief, and freedom, either alone or in community with others and in public or private, to manifest his religion or belief in teaching, practice, worship and observance."

எனவே, உலகெங்கும் அடிப்படை உரிமை என்று கூறப்பட்டுள்ள மதத்தை 'தீமை' என்று கூறுவது மிகத்தவறான, மனிதஉரிமைக்கு எதிரான வாதமாகும்.

மதம் குறித்து வீசப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாமும் உண்மையில் மதவாதம் அல்லது வகுப்புவாதம் எனப்படுகிற COMMUNALISM ஆகும். தமிழ்நாட்டின் 95 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் ஏதோ ஒரு சமயத்தை நம்புகிறார்கள். அவர்களில் 0.001 அளவினர் கூட வகுப்புவாதிகள் அல்ல. எனவே, COMMUNALISM வேறு, RELIGION வேறு என்று புரிந்துகொள்ளாதவர்களிடம் பேசிப் பயன் இல்லை. விரிவாகக் காண: RELIGION AND COMMUNALISM by Asghar Ali Engineer

மதவாதம் என்று வரும்போது அதனை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைத்துப் பார்ப்பது தவறு. மதவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள் என்பதும், மதக்கலவரம் என்றாலே அது இஸ்லாமியர்களின் வேலை என்பதும் ஒருவகையான பார்வைக் கோளாறு.
இந்தியாவில் இஸ்லாம் ஒரு சிறுபான்மை மதம். அதுமட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் எல்லாவிதமான மனித மேம்பாட்டு அளவுகோளிலும் மிக மிக பின்தங்கி இருப்பவர்கள். எனவே, "ஒருபக்கம் மக்கள் தொகையில் சிறுபான்மை, மறுபக்கம் சமூக பொருளாதார நிலையில் மிக மிக பின்தங்கிய நிலை" என்கிற இரட்டைத் தாக்குதல். இதுவல்லாமல், "அதிகரித்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம்" - இவற்றுக்கு இடையே "இஸ்லாமியர்கள் மத அடையாளத்தின் பேரில் ஒன்றிணைவதும் உரிமைக் கேட்பதும்" தவிர்க்க முடியாததும் நியாயமானதும் ஆகும். 

இந்த நியாயமானக் குரல்தான் பலநேரங்களில் 'மதத்தீமை' என்று மற்றவர்களால், குறிப்பாக சில இந்துக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது. இது இந்துக்களின் பார்வைக் கோளாறுதானே தவிர இஸ்லாமியர்களின் தவறு அல்ல. (அதே நேர்த்தில் மதத் தீவிரவாதம் என்பது இந்தியாவில் முதன்மையாக இந்துமதத்திலும் இரண்டாவதாக இஸ்லாமிலும் ஓரளவிற்கு இருக்கிறது என்பதை மறைக்க முடியாது. இந்துத்வ தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம் எனும் இரண்டு தீவிரவாதக் கூட்டமும் ஒன்றை ஒன்று வளர்த்து விடுவதால் - இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதரவானக் கூட்டம்தான்).
2. மதுபானம் 

மதுபானம் ஒரு மிகப்பெரிய தீமையாக வளர்ந்து வருகிறது. வகுப்புவாதம் அல்லது சாதியுடன் ஒப்பிட்டால் - ஒப்பீட்டளவில் மதுபானத் தீமை எளிதானது. அதாவது மதுபானத்தால் ஏற்படும் கேடு பெரிது என்றாலும் அதை ஒழிப்பதோ கட்டுக்குள் வைப்பதோ சாத்தியமானதே ஆகும். (இதுகுறித்து எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன்)
3. சாதிதான் மிகப்பெரிய தீமை

மதுபானம், மதவெறி - இவற்றுடன் ஒரு பேச்சுக்காக ஒப்பிட்டோமானால் - இந்தியாவில் சாதிதான் மிகப்பெரிய தீமை.

சாதி என்பது மிகக்கடுமையான ஒரு இடஒதுக்கீட்டு முறையாக கடந்த 2000 ஆம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஒருவர் பிறக்கிற சாதியின் அடிப்படையிலேயே அவருக்கான பலவிதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனராக பிறப்பவருக்கு கிடைக்கும் வாய்ப்பும் மதிப்பும் வேறாகவும், ஒரு பிணம் எரிக்கும் சாதியில் பிறக்கும் நபருக்கு கிடைக்கும் வாய்ப்பும் மதிப்பும் வேறாகவும் இருந்துள்ளது. குறைவான உழைப்புக்கு அதிக மதிப்பு, மரியாதை, ஊதியம். ஆனால், கடின உழைப்புக்கு குறைந்த மதிப்பு, இழிவுத்தன்மை, குறைந்த ஊதியம் என்கிற நிலையை சாதி ஏற்படுத்தி வைத்திருந்தது.

அதைவிடக் கொடுமையாக - எந்த ஒரு வேலையும் பரம்பரை பரம்பரையாகத் திணிக்கப்பட்டது. தனக்கான வேலையைத் தானே தேர்ந்தெடுக்கும் ஒரு அடிப்படை உரிமையை சாதி முற்றிலுமாக மறுத்தது. கல்வி, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தல், வழிபாட்டு உரிமை என எல்லாவற்றையும் சாதி மறுத்தது. உணவு, உடை, வாழ்விடம் என எல்லாவற்றையும் சாதியே தீர்மானித்தது

சாதியின் இந்த பெருங்கேடு இப்போதும் பெரிதாக மாறிவிடவில்லை. 

கல்வியில் சாதி

2005 -06 ஆம்ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்பநல கணக்கெடுப்பில் பின்வரும் புள்ளிவிவரங்கள் உள்ளன:

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவரின் படிப்பு: 
மேல்நிலைப் பள்ளி (+2) படிப்புக்கும் கீழாக படித்தோர் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேர்?
(அதாவது சாதியின் மக்கள்தொகையில் குறைவாகப் படித்தோர்)

பட்டியல் இனத்தவர் = 92 %

பழங்குடி இனத்தவர் = 94 %

இதர பிறடுத்தப்பட்ட வகுப்பினர் = 87 %

முன்னேறிய வகுப்பினர் = 45 %

வேலைவாய்ப்பில் சாதி

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவரின் வேலை:
அதிகவருவாய் கிடைக்கும் தொழில்முறை, தொழில்நுட்ப, மேலாண்மைப் பணிகளில் இருப்போர் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேர்?
 (அதாவது சாதியின் மக்கள்தொகையில் மிக அதிகமாக சம்பாதிப்போர்)

பட்டியல் இனத்தவர் = 5 %

பழங்குடி இனத்தவர் = 0 %

இதர பிறடுத்தப்பட்ட வகுப்பினர் = 8 %

முன்னேறிய வகுப்பினர் = 44 %

ஆக, நல்ல வேலையில் இல்லை, போதுமான படிப்பும் இல்லை என்கிற கீழான நிலையில் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தினர் SC/ST/OBC பிரிவினர் இன்றும் வாழ்வதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது சாதிதான்.

தனியார் நிறுவனங்களில் சாதி

பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக உள்ள சுக்தியோ தொராட் என்பவர், 2005 - 2007 ஆண்டுகளில் பத்திரிகைகளில் வெளியான தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு, ஒரே மாதிரியான உயர் படிப்பு தகுதிகளுடன் விண்ணப்பங்களை தயார் செய்து - சாதியை மட்டும் உயர்சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என மாற்றி அனுப்பி - எத்தனை பேருக்கு நேர்காணல் அழைப்பு வருகிறது என ஆய்வு செய்தார்.

உயர் சாதியினர் 100 பேருக்கு நேர்காணல் அழைப்பு வந்தால், தாழ்த்தப்பட்ட சாதியினர் 67 பேருக்கு மட்டுமே நேர்காணல் அழைப்பு வந்தது.

அதாவது தகுதிகள் அனைத்தும் ஒன்று, சாதி மட்டும் வேறு என்பதற்காகவே - நேர்காணல் அழைப்பு அனுப்பப்படவில்லை. நேர்காணல் அழைப்புக்கே இந்த நிலை என்றால், நேர்காணலில் என்ன நடக்கும் என்று சொல்லத்தேவை இல்லை.

இந்தியாவின் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் - முதன்மையான 1000 நிறுவனங்ளின் கார்ப்பரேட் நிர்வாக உறுப்பினர்களாக (Corporate Board Members) இருப்பவர்களின் சாதி எது? என ஒரு ஆய்வு 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதில் பின்வரும் புள்ளி விவரங்கள் தெரியவந்தன.

Corporate Board Members in Top 1000 Indian Companies:

பட்டியல் இனத்தவர்/பழங்குடி இனத்தவர் = 3.5 %

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் = 3.8 %

முன்னேறிய வகுப்பினர் = 92.6 %

இப்படியாக பொருளாதாரம் மற்றும் வாய்ப்புகளில் இப்போதும் சாதிதான் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறது.
சாதியும் மதிப்பும்

வெறும் வெருமானம் மட்டுமல்ல - மதிப்பு, மரியாதை, இதர தேவைகள் என எதை எடுத்தாலும் தடைக்கல்லாக இருப்பது சாதிதான்.

சென்னை நகரில் தான் ஒரு தாழ்த்தப்பட்டு பிரிவு ஆள் என்று சொல்லி வாடகைக்கு வீடு தேடிப்பாருங்கள். சாதியின் நிலை என்ன என்று தெரியும்.

சென்னை தமிழ் பதிவர் சந்திப்பில் மூத்தபதிவர்களுக்கு பொன்னாடை போர்த்திய நிகழ்வைத் தொகுத்து வழங்கிய நண்பர் ஒரு கதை சொன்னார்.

'டெல்லி கணேஷ் எனும் நடிகர் ஏவிஎம் திரைப்பட நிறுவனத்தின் பின்புற சுடுகாட்டில் இருந்த ஒரு வெட்டியா'ன்' இடம் பேசிக்கொண்டிருந்தார். நடிகர் ஒருநாள் சாலையில் சென்ற போது அங்குவந்த வெட்டியா'ன்' சுடுகாட்டுக்கு எப்ப வருவீங்க' என்று கேட்டா'ன்'" - என்று ஒரு நகைச்சுவை கதை சொன்னார்.

இதுவே, மைலாப்பூர் சிவன் கோவில் பார்ப்பன பூசாரியை டெல்லி கணேஷ் சந்தித்திருந்தால் இந்தக்கதை எப்படி இருந்திருக்கும்?

'டெல்லி கணேஷ் எனும் நடிகர் மைலாப்பூர் சிவன் கோவிலில் இருந்த ஒரு அய்ய'ர்' இடம் பேசிக்கொண்டிருந்தார். நடிகர் ஒருநாள் சாலையில் சென்ற போது அங்குவந்த அய்ய'ர்'  கோவிலுக்கு எப்ப வருவீங்க' என்று கேட்டா'ர்'" - என்று கதை சொல்லியிருப்பார்.

இதற்காக இந்த தொகுப்பாளரை நாம் குறைசொல்ல முடியாது. கோவிலில் பூசை செய்யும் சாதி மதிப்பு மிக்கது. பிணத்தை எரிக்கும் சாதி கீழானது என்பது நமது பொது புத்தியில் பதிந்துள்ளது.

சாதிக் கேடு ஒழிய இன்னும் பல தலை முறைகள் ஆகலாம். இப்போது உயிரோடு இருப்பவர்கள் தமது வாழ்நாளில் சாதி ஏற்றத்தாழ்வை களைய முடியாது. எனவே - எல்லாக் கேடுகளிலும் பெருங்கேடு என்பது சாதியால் நேரும் கேடே ஆகும்.

15 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல அலசல் சார்...

மூன்றுமே மன நோய்கள்... அவர்களாக திருந்தினால் தான் உண்டு...

மனிதனிடம் இதை விட தீமையாக குணங்கள் நிறைய உள்ளன... அனைத்திற்கும் மன மாற்றம் வேண்டும்...

தனி மனித ஒழுக்கம் வளர வேண்டும்... நன்றி...

கிராமத்து காக்கை சொன்னது…

விரிவான அலசல் அருமை

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.அருள்,
அருமையான பொறுமையான விரிவான அலசல். நன்றி சகோ.

///இஸ்லாம் எவரையும் வெளியேற அனுமதிப்பது இல்லை.///---தவறு சகோ.அருள்.

''இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை.'' (திருக்குர்ஆன், 002:256)

''இந்த உண்மை (மார்க்கம்) உங்கள் இறைவனிடமிருந்து வந்ததாகும். எனவே விரும்பியவர் நம்பட்டும். விரும்பியவர் மறுக்கட்டும்'' (திருக்குர்ஆன், 018:029)

---இப்படித்தான் இறைவனின் கூற்று உள்ளது.

மற்றபடி, நல்லதொரு அலசல்.

Aashiq Ahamed சொன்னது…

சகோதரர் அருள்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

மற்றுமொரு ஆக்கப்பூர்வமான கட்டுரை. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

//இஸ்லாம் எவரையும் வெளியேற அனுமதிப்பது இல்லை//

இது பலரால் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட விசயமாகும். முஹம்மது ஆஷிக் அழகாக நான் சொல்ல வந்ததை கூறிவிட்டார். மேலும் சில சிந்தனைகளை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். குர்ஆன் மூலமாக இறைவன் பலவற்றையும் தெளிவாக வரையரைத்துவிட்டான். இஸ்லாமில் இருந்து வெளியேறும் இந்த நிகழ்வு என்பது நிச்சயம் சாதாரணமானது அல்ல. அதனை நிச்சயம் குர்ஆன் வரையரைத்து இருக்க வேண்டும். ஆனால் இஸ்லாமில் இருந்து வெளியேரியவர்களை பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது அவர்களுக்கான தீர்ப்பு என்பது மறுமையில் தான் என்று கூறுகின்றது. ஆகையால் இஸ்லாம் தன்னில் இருந்து மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை என்பது இஸ்லாமிய அடிப்படையில் சரியான புரிதல் கிடையாது.

நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

vimalavidya சொன்னது…

VERY Informative article and analysis...Congratulations Arul Rathinam ! Continue pl..again again like this debatable topics..vimalavidya@gmail.com

சார்வாகன் சொன்னது…



சகோ அருள் நல்ல பதிவு,
//சாதிக் கேடு ஒழிய இன்னும் பல தலை முறைகள் ஆகலாம். இப்போது உயிரோடு இருப்பவர்கள் தமது வாழ்நாளில் சாதி ஏற்றத்தாழ்வை களைய முடியாது. எனவே - எல்லாக் கேடுகளிலும் பெருங்கேடு என்பது சாதியால் நேரும் கேடே ஆகும்.//

சாதி என்பது ஒழிய வேண்டும் என்ற உங்கள் கருத்தை வழி மொழிவதில் நமக்கு
மகிழ்ச்சியே. சாதி வரும் தலைமுறைகளில் ஒழியும் என்ற உங்கள் கணிப்பு சீக்கிரம் பலிக்கட்டும்.\
*******
இஸ்லாமிய மத பிரச்சார சகோக்கள் இருவரின் கருத்தும் தவறு. நடைமுறையில் உள்ள சட்டங்களை முஸ்லிம்கள் எபோதும் மறைப்பர்கள் என்னும் விதிக்கு எ.கா மாதிரி பேசுவதை விள்க்குகிறேன்.
இஸ்லாமிய மத ஆட்சி நடக்கும் இடங்களில் இஸ்லாமில் இருந்து மதம் மாறுவது தடை செய்யப் பட்ட ஒன்று.தண்டனைக்கு உரிய விடயம்.
எ.கா சவுதி சட்டம்

http://en.wikipedia.org/wiki/Apostasy_in_Islam
he majority of Muslim scholars hold to the traditional view that apostasy is punishable by death or imprisonment until repentance, at least for adult men of sound mind.[2][3][4] Several contemporary Muslim scholars, including influential Islamic reformers have rejected this, arguing for religious freedom instead.[5][3][6][7] According to Islamic law apostasy is identified by a list of actions such as conversion to another religion, denying the existence of God, rejecting the prophets, mocking God or the prophets, idol worship, rejecting the sharia, or permitting behavior that is forbidden by the sharia

சவுதியில் பிற மத கடவுள்களை வழிபாடு செய்வதே குற்றம்.என்னும் போது மத மாறலாம் என எப்படித்தான் இரண்டு ஆஸிக்கினாலும் இப்படி கூற முடிகிறதோ!!!

http://en.wikipedia.org/wiki/Freedom_of_religion_in_Saudi_Arabia

The Kingdom of Saudi Arabia is an Islamic theocratic monarchy in which Islam is the official religion. Although no law requires citizens or passport holders to be Muslim, almost all citizens are Muslims. Children born to Muslim fathers are by law deemed Muslim, and conversion from Islam to another religion is considered apostasy and punishable by death. Blasphemy against Sunni Islam is also punishable by death, but the more common penalty is a long prison sentence. There have been no confirmed reports of executions for either apostasy or blasphemy in recent years.[1]
Religious freedom is virtually non-existent. The Government does not provide legal recognition or protection for freedom of religion, and it is severely restricted in practice. As a matter of policy, the Government guarantees and protects the right to private worship for all, including non-Muslims who gather in homes for religious practice; however, this right is not always respected in practice and is not defined in law.[2] Moreover, the public practice of non-Muslim religions is prohibited.[1] The Saudi Mutaween (Arabic: مطوعين), or Committee for the Propagation of Virtue and the Prevention of Vice (i.e., the religious police) enforces the prohibition on the public practice of non-Muslim religions. Sharia Law applies to all people inside Saudi Arabia, regardless of religion.

நன்றி

அருள் சொன்னது…

@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
@Aashiq Ahamed
@சார்வாகன்

"இஸ்லாம் தன்னில் இருந்து மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை என்பது இஸ்லாமிய அடிப்படையில் சரியான புரிதல் கிடையாது" என்று மேலே இஸ்லாமிய சகோதரர்கள் கூறியுள்ளனர். விளக்கத்திற்கு நன்றி.

இஸ்லாம் மதத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து வேறு மதத்திற்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்று நான் எங்கோ படித்ததாக ஞாபகம். அது தவறாக இருக்கலாம். இஸ்லாமிலிருந்து எவரும் வெளியேறியதாக நான் அறிந்திருக்கவில்லை.

மற்றபடி, திருக்குர்ஆன் என்ன சொல்லியிருக்கிறது? ஹதித் தொகுப்புகளில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் நான் அறிந்ததல்ல.

இஸ்லாமிய நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப் போன்று, திருக்குர்ஆன் அத்யாயம் 2 அல் பகறாவில் "தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ - நிர்பந்தமோ இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. (2:256) "There shall be no compulsion in [acceptance of] the religion."

அவ்வாறே, திருக்குர்ஆன் அத்யாயம் 18 அல் கஹ்ஃபுவில் "இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்" என்று கூறப்பட்டுள்ளது. (18:29). "The truth is from your Lord, so whoever wills - let him believe; and whoever wills - let him disbelieve."

எனினும் இஸ்லாம் மதம் மாற அனுமதிப்பதில்லை என்று கூறுகிறவர்கள் வேறு சில பிரிவுகளைச் சுட்டுகின்றனர்:

திருக்குர்ஆன் அத்யாயம் 4 அன்னிஸாவில் "அவர்கள் (ஹிஜ்ரத்தைப்) புறக்கணித்துவிட்டால், அவர்களை நீங்கள் எங்குக் கண்டாலும் பிடித்துக் கொன்றுவிடுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. (4:89). "if they turn away, then seize them and kill them wherever you find them"

திருக்குர்ஆன் அத்யாயம் 9 அத்தவ்பாவில் "உடன்படிக்கை செய்துகொண்டபிறகு இவர்கள் தங்களது சத்தியங்களை முறித்துவிட்டு உங்களுடைய மார்க்கத்தை தாக்க முற்பட்டால், இறைநிராகரிப்பின் தலைவர்களோடு போர் புரியுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. (9:12). "if they break their oaths after their treaty and defame your religion, then fight the leaders of disbelief,"

மேற்கண்ட திருக்குர்ஆன் வாசகங்கள் - நேரடியாக மதம் மாறுபவர்களை எதிர்க்கவில்லை. அவை கலகம் செய்பவர்களையும் எதிர்த்து சண்டையிட வருகிறவர்களுக்கு எதிராகவும் போர்புரியவே கட்டளையிடுவதாகத் தெரிகிறது.

அதேநேரத்தில், திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளவற்றை மட்டும்தான் இஸ்லாமியர்கள் இப்போது பின்பற்றுகின்றனரா? அல்லது அதையும் தாண்டி திருக்குர்ஆனில் இல்லாதக் கட்டுப்பாடுகளையும் கட்டாயமாக்குகிறார்களா? என்பது குறித்து இஸ்லாமிய நண்பர்கள்தான் கவலைப்பட வேண்டும்.

குறிப்பாக, ஹதித் தொகுப்புகள் மதம் மாறுவோரைத் தண்டிக்கக் கூறுவதாக சொல்கிறார்கள். அது உண்மையா? அவ்வாறு இஸ்லாமில் நடக்கிறதா?

சசிகலா சொன்னது…

மது மதம் ஜாதி இவை மூன்றும் இல்லாவிட்டாலும் உயிர் வாழ முடியுமே பின்பு எதற்கு இவை என்பதே என் கருத்து.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

///சவுதியில் பிற மத கடவுள்களை வழிபாடு செய்வதே குற்றம்.என்னும் போது மத மாறலாம் என எப்படித்தான் இரண்டு ஆஸிக்கினாலும் இப்படி கூற முடிகிறதோ!!!///


உலக முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டியன குர்ஆனும் ஹதீஸும் மட்டுமே. சவூதி நாட்டு சட்டங்கள் சவூதிகளுக்கு மட்டுமே.

குர்ஆன் / ஹதீஸ் க்கு மாறாக உள்ள சவூதி சட்டங்கள் உலக இஸ்லாமிய சட்டங்கள் ஆகா.

உதாரணமாக, ஹஜ்ஜுக்கு ஒரு இந்தியர் செல்ல விசா-பாஸ்போர்ட் எல்லாம் இஸ்லாத்தில் தேவை இல்லை. சவூதி கேட்கிறது. பெண்களை வாகனம் ஓட்ட அது அனுமதிப்பதில்லை. மக்களை சிகரட் பிடிக்க அனுமதிக்கிறது. சிகரட் விற்பனனையையும் அனுமதிக்கிறது. இதுபோல மாறுபடும் சவூதியின் சட்டங்கள் பற்றி இப்படி நிறைய சொல்லலாம்..! ஆனால்,எத்தனை சொன்னாலும்... தமிழ் இணைய நாத்திக குறைமதியாளர்கள்... 'இஸ்லாம் என்றாலே அத்தாரிட்டி அது சவூதி சட்டங்கள்தான்... குர்ஆன் /ஹதீஸ் எல்லாம் இல்லை' என்றுதான் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து ஓலமிட்டு வருகிறார்கள்..! உண்மையை அறிந்து கொண்டே பொய் சொப்வர்கள் இவர்கள்..!

சவூதியின் ஒரு சட்டம், சென்னையில் வாழும் ஓர் இந்தியரை பாதிக்காது என்பதையாவது இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்..! (எனில், 'செங்கல்பட்டில் வாழும் இந்தியரை பாதிக்கும் தானே..?' ---போன்ற கேனத்தனமாக கேள்விகள் தான் அடுத்த பின்னூட்டத்தில் கேட்பார்கள்)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

சகோ.அருள்...
ஆழமாக புரிந்து அழகாக கேள்வி கேட்கிறீர்கள். நன்றி சகோ.

////மேற்கண்ட திருக்குர்ஆன் வாசகங்கள் - நேரடியாக மதம் மாறுபவர்களை எதிர்க்கவில்லை. அவை கலகம் செய்பவர்களையும், எதிர்த்து சண்டையிட வருகிறவர்களுக்கு எதிராகவும் போர்புரியவே கட்டளையிடுவதாகத் தெரிகிறது.////----yes...! exactly..! சரியான புரிதல் சகோ..!

////அதேநேரத்தில், திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளவற்றை மட்டும்தான் இஸ்லாமியர்கள் இப்போது பின்பற்றுகின்றனரா?அல்லது அதையும் தாண்டி திருக்குர்ஆனில் இல்லாதக் கட்டுப்பாடுகளையும் கட்டாயமாக்குகிறார்களா? என்பது குறித்து இஸ்லாமிய நண்பர்கள்தான் கவலைப்பட வேண்டும்.////---செமை..! சூப்பர் கருத்து..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

சகோ.அருள்...

////குறிப்பாக, ஹதித் தொகுப்புகள் மதம் மாறுவோரைத் தண்டிக்கக் கூறுவதாக சொல்கிறார்கள். அது உண்மையா? அவ்வாறு இஸ்லாமில் நடக்கிறதா?////

---நல்ல கேள்வி சகோ.அருள்..!

குர்ஆன் என்ன சொல்கிறது என்று உங்களுக்கு தெளிவாக புரிந்து விட்டது. அதற்கு மாற்றமாக ஒரு ஹதீஸின் கருத்துக்கள் இருந்தால்... அது சரியான பின்பற்றத்தக்க்க ஹதீஸ் இல்லை என்றே நாம் நிராகரிக்க வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள், சகோ. இதுதான் ஹதீஸ் ஏற்புத்தன்மை பற்றிய மிக முக்கிய அடிப்படை விதி..!

இதன் அடிப்படையில்... மதம் மாறுவோரைத் தண்டிக்கக் கூறுவதாக ஒரு ஹதீஸ் சொல்லுமேயானால் அதுவும் அப்பட்டமான குர்ஆனுக்கு முரண்படும் நிராகரிக்கப்பட வேண்டிய ஹதீஸ்தான்.

இதோ... இதற்கு இன்னும் உறுதியான குர்ஆன் ஆதாரம்..!

குர்ஆன்-4:137=================
"நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை."

இந்த வசனத்தை ஆழமாக கவனிப்போம். ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார். பின்னர் மதம்
மாறி விடுகிறார். இப்போது 'அவர் கொல்லப்பட வேண்டும்' என்பது சட்டம் என்று இருந்திருக்குமேயானால்,
அடுத்து அவர் இறை நம்பிக்கை கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும்.........
இப்படி எதற்குமே வழியில்லாமல் போய் விடுமே..?

நம்பிக்கைக் கொள்கிறார்
பிறகு மறுக்கிறார்
மீண்டும் நம்பிக்கைக் கொள்கிறார்
அதையும் மறுத்து வெளியேறுகிறார்
பின்னர் இறை நிராகரிப்பில் நிலைத்து நின்று மரணிக்கிறார் என்று இறைவன்
சுட்டிக்காட்டுவதிலிருந்து மனிதர்களுக்கு எத்துனை சுதந்திரமான வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகின்றது. "கொல்லப்பட வேண்டும்" என்ற
புரிதலை இந்த வசனமும் அடியோடு மறுக்கின்றது.

குர்ஆன்-3:91=====================
(ஏக இறைவனை) மறுத்து, (பின்னர்) மறுத்த நிலையில் மரணித்தோர், பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை (மறுமையில்-நரகில்) உண்டு. அவர்களுக்கு (அங்கே) உதவுவோர் யாருமில்லை.

நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பது பற்றி பேசும் தொடரிலேயே இறைவன் இந்த
வசனத்தையும் முன் வைத்துள்ளதை கவனியுங்கள் சகோ.அருள்.

நம்பிக்கை கொண்டபின் நிராகரிப்பவர்கள் கொல்லப்பட
வேண்டும் என்றால் "நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ.." என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே இஸ்லாத்தை ஏற்று பிறகு மதம் மாறி போனவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டமல்ல என்பதை நான் தெளிவாக விளங்கிக்கொண்டேன்.

படைப்பாளி சொன்னது…

சா தீதான் பற்றி விட்டால் ஊரை உலகை மனிதனின் உயிரை அழித்துவிடும்..சாதீ(மை)

Doha Talkies சொன்னது…

நல்ல நிஜமான பதிவு நண்பரே.
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

Aashiq Ahamed சொன்னது…

@ அருள்,

இன்டர்நெட் கிடைப்பதில் பிரச்சனை என்பதால் உடனடியாக பதில் கொடுக்க முடிவதில்லை.

ஹதீஸ் கலையை பொறுத்த மட்டில், அது குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அந்த குறிப்பிட்ட ஹதீஸ் நிராகரிக்கப்பட்டுவிடும். யாருக்கு கொலை தண்டனை கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறும் போது அதில் இஸ்லாமில் இருந்து வெளியேறியவர்கள் இல்லை. கவனிக்கவும். குர்ஆன் இது குறித்து பேசாமல் இருந்தாலும் நாம் வேறு மாதிரியான எண்ணங்களை கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் இஸ்லாமில் இருந்து வெளியேரியவர்களை பற்றி குர்ஆன் பேசுகின்றது. அதே நேரம் அப்படியானவர்களுக்கு எவ்வித தண்டனையையும் அது தெரிவிக்கவில்லை. அவர்களுக்கான தீர்ப்பு என்பது மறுமையில் மட்டுமே என்று விளக்கம் கொடுக்கின்றது. ஆக, இஸ்லாம் தன்னில் இருந்து யாரையும் வெளியேற அனுமதிப்பதில்லை என்ற கருத்து இஸ்லாமிய அடிப்படையில் தவறானது.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

அ. வேல்முருகன் சொன்னது…

மதமோ, சாதியோ உருவாக்கப்பட்டது,அல்லது மனிதனால் தேர்ந்தெடுக்கப்படுகிறது,

மது கேளிக்கைக்காக கொண்டு வரப்பட்டு மனிதன் அதில் மூழ்கி கிடக்கிறான்.

மதம் மது ஒருவகை போதை அதிலிருந்து மீள்வது அவரவர் கையில்.

சாதி திணிக்கப்பட்டது, மதம் மாறினாலும் கூடவே வரும்

இனகலப்பு ஏற்படும் போது வேண்டுமானால் போகலாம் அல்லது சமூகம் வளர்ச்சியடைந்த நிலையில் மனிதர்கள் சாதியை விட்டுடொழிக்கும் போது ஏற்படலாம்

இட ஒதுக்கீடு என்பது இந்த சமூக அமைப்பில் ஒரு ஏமாற்று வித்தை
இதில் உயர் வகுப்பினர்தான் வரமுடியும். கீழ்வகுப்பினருக்குதான் அடிபடை தேவையே பூர்த்தியாக வில்லையே அவன் எப்படி 90% முன்னிலை பெறுவது.

உயர் வகுப்பினரின் அடித்தளம் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு குலையாமல் பாதுகாக்கப்படுகிறது.

மற்றபடி

இனிய சந்திப்பு
பதிவர் விழாவில்

நன்றி