Pages

வியாழன், ஏப்ரல் 07, 2016

வைகோ சாதிவெறிப் பேச்சின் வரலாற்று பின்னணி: மன்னிக்க முடியுமா?

"உலகத்தின் மிகப்பழமையான தொழிலை (விபச்சாரம்) கலைஞர் செய்யலாம். கலைஞருக்கு நாதஸ்வரம் வாசிக்கும் தொழிலும் தெரியும். அதனால் சொல்கிறேன்" - என்று வைகோ கூறியுள்ளார். 

'நாதஸ்வரத்தையும் விபச்சாரத்தையும்' இணைத்து வைகோ பேசியிருப்பது 'பலரும் கவனிக்கத் தவறிய' ஒரு கொடூரமான சாதிவெறி நிகழ்வாகும். உலக வரலாறெல்லாம் பேசும் வைகோ - தமிழ்நாட்டு வரலாற்றையும் அறிந்தவர். எனவே, தெரிந்தே செய்த அவரது இந்தச் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல.
ஆனால், வைகோவின் பேச்சில் ஒரு மாபெரும் வரலாற்றுக் கொடுமை ஒளிந்திருப்பதை கவனிக்காதது போல, 'மன்னிப்பு' எனும் வார்த்தையைக் காரணம் காட்டி பல முற்போக்கு போராளிகள் சர்வ சாதாரணமாக கடந்து போகிறார்கள். எனவே, இந்த நேரத்தில் பழைய வரலாற்றை சுட்டிக்காட்டுவது நமது கடமை ஆகிறது.

('மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் நியாயமான பேச்சுகளை இட்டுக்கட்டி, அதற்கு சாதிச் சாயம் பூசுவதுடன் நிற்காமல், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பேசும் அதே முற்போக்கு வேடதாரிக் கூட்டம் - வைகோ பேசியுள்ள அப்பட்டமான சாதிவெறி பேச்சினைக் கண்டும் காணாமல் போகிறது)

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கருப்பின மக்களைக் குறிக்கும் நிக்கர் (Nigger, Negro) எனும் வார்த்தையை தடைசெய்திருக்கிறது. ஜெர்மன் நாட்டில் நாசிகள் என்கிற வார்த்தையை மற்றவர்களை நோக்கி பேசுவதில்லை. ஹிட்லர் ஆரிய இன மேம்பாட்டைக் குறிக்கும் விதமாக பயன்படுத்திய 'தந்தையர் தேசம்' (Fatherland) போன்ற வார்த்தைகள் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலும் சில சாதிகளை, சில மொழி பேசுவோரை இழிவுபடுத்தும் விதமான சொற்களும், சொற்றொடர்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, வன்னியர்களை 'பள்ளி' என்று சொல்வது இழிவுபடுத்தும் சொல் என்கிறது வன்னிய புராணம். இதுபோன்று, சமூகத்தால் ஏற்கப்படாத சொற்களை வரலாற்று ரீதியிலான நேர்மையான ஆய்வுகள் தவிர, வேறு எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது.

அந்த வகையில், நாதஸ்வரம் என்பதையும் விபச்சாரத்தையும் இணைத்துப் பேசுவது தமிழ்நாட்டில் ஏற்க முடியாததும், ஏற்கக் கூடாததும் ஆகும். 

இசையும் இசை வேளாளர்களும்

தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான நபர்கள் இசை வேளாளர் மரபிலிருந்து வந்தனர். பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி எனப்படும் மாபெரும் இசை மேதை இந்த சமூகத்தை சேர்ந்தவர். இவரது பெயரில் உள்ள எம்.எஸ். என்பது அவரது தந்தை பெயர் அல்ல. அது மதுரை சண்முகவடிவு அம்மாள் என்கிற அவரது தாயார் பெயராகும். சுப்பிரமணிய அய்யர் என்பவர்தான் தனது தந்தை என்று எம். எஸ். சுப்புலட்சுமி பிற்காலத்தில் அவராக கூறியுள்ளார்.

மதுரை புஷ்பவனம், காரைக்குடி சாம்பசிவ அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், சுப்ரமணிய அய்யர் உள்ளிட்டவர்களுக்கு மதுரை சண்முகவடிவு அம்மாளுடன் உறவு இருந்ததாக டி.ஜெ.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ்: இசையில் ஒரு வாழ்க்கை’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது (MS - A Life in Music, 2004 T. J. S. George). 
காங்கிரசு கட்சியை சேர்ந்த கல்கி சதாசிவம் கட்சிப்பணிக்காக சென்னையிலிருந்து மதுரைக்கு சென்றபோது அவருக்கும் எம். எஸ். சுப்புலட்சுமிக்கும் 1936 ஆம் ஆண்டில் தொடர்பு ஏற்பட்டது. தனது 20 ஆவது வயதில் தாயை விட்டு பிரிந்து, மதுரையிலிருந்து சென்னைக்கு ஓடிவந்து ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருந்த 32 வயது சதாசிவத்துடன் சேர்ந்து கொண்டார் சுப்புலட்சுமி. நான்காண்டுகளுக்கு பின்னர் சதாசிவத்தின் மனைவி அபிதகுசலாம்பாள் இறந்த பின்னர் அவர் சுப்புலட்சுமியை இரண்டாம் மணம் செய்துகொண்டார்.

சதாசிவத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்கப் போன சுப்புலட்சுமி, கதாநாயகன் ஜி.என்.பாலசுப்ரமணியம் எனும் திரைப்பட கதாநாயகரை காதலித்தார். எனினும் அது திருமணத்தில் முடியவில்லை.

- மிகவும் வலிமிகுந்த தேவதாசி வாழ்க்கை முறையிலிருந்து வந்த எம்.எஸ். சுப்புலட்சுமிதான் பிற்காலத்தில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதைப் பெற்றார்.

இசை வேளாளர்களின் வலி மிகுந்த வரலாறு

இந்தியா என்பது ஒரு விலங்குக்காட்சி சாலை போன்றது. இந்திய சமூகத்தில், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஒவ்வொன்றும் வேறுபட்டது. ஒரு சாதியினரின் வலியை மற்ற சாதியினரால் உணரவே முடியாது என்பதுதான் இந்திய நாட்டின் தனித்தன்மை ஆகும்.

சில சாதிகள் சமூகப் படிநிலையில் எப்போதும் மேல்நிலையில் இருந்து வருகின்றன. சில சாதிகள் மேலான நிலையில் இருந்து வஞ்சிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில சாதிகள் மிகவும் கீழான நிலையில் இருந்து போராடி ஓரளவுக்கு மேலே வந்துள்ளனர். சில சாதியினர் இன்னமும் கீழான நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சமூக படிநிலையில் இருக்கும் இடம் மற்றும் இடப்பெயர்வுக்கு ஏற்ப சாதிகள் குறித்த எண்ணமும் வலியும் வேறுபடுகிறது. அந்த வகையில் இசை வேளாளர் சமூகத்தின் வரலாறும் வலி மிகுந்ததே ஆகும்.
இசை வேளாளர்களை 'மேளக்காரன்' சாதி என்று தென்னிந்திய குலங்களும் குடிகளும் நூலில் (1855) எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். தஞ்சை மாவட்டத்தில் இருந்த அனைத்து கோவில் நாட்டியப் பெண்களும் தமிழ் மேளக்கார சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று எட்கர் தர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

(தேவதாசிகள் என்போர் உலகின் மிகப்பழைய தொழிலை செய்தனர் என்றும், அவர்களே இசையின் மூலமாக இருந்தனர் என்றும் 1855 ஆம் ஆண்டிலேயே எட்கர் தர்ஸ்டன் கூறினார். அதே வார்த்தைகளை இன்று வைகோ பயனபடுத்தியுள்ளார்.

Dēvadāsis are dancing-girls attached to the Tamil temples, who subsist by dancing and music, and the practice of ‘the oldest profession in the world'. The dancing-girl castes, and their allies the Mēlakkārans, are now practically the sole repository of Indian music, the system of which is probably one of the oldest in the world.- Castes and Tribes of Southern India, Volume 2, 1855, By Edgar Thurston)

சி.ஆர். டே எனும் ஆய்வாளர் தனது The music and musical instruments of southern India and the Deccan, 1891 (C. R. Day) நூலில், "பெரிய மேளம் என்பது கோவிலில் இசையை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. நாதஸ்வரத்தை முதன்மையாகக் கொண்ட இக்குழுவில் ஒத்து, தவில், தாளம், சங்கு என பல இசை வாத்தியங்கள் உண்டு என்கிறார். அதே நேரத்தில் சின்ன மேளம் எனப்படுவது நாட்டியமாடும் பெண்களும் இசை வாத்தியக்குழுவும் அடங்கியது" என்கிறார்.

இசை வேளாளர் என்பது ஒரே சாதீய வழியில் வந்த சமூகம் அல்ல என்று கருதப்படுகிறது. பொதுவாக கைக்கோளர் மற்றும் வெள்ளாளர் சமூகங்களில் இருந்து வந்தவர்கள் இசை வேளாளர்கள் ஆயினர் என்று எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். இவர்கள் தம்மை 'பிள்ளை' என்றும் 'முதலியார்' என்றும் அழைத்துக்கொண்டனர். 

தஞ்சை மாவட்டத்தில் இருந்த இசை வேளாளர்கள் தம்மை 'கள்ளர், வெள்ளாளர், அகமுடையோர்' சமூகத்திலிருந்து எதிபாராத விபத்தாக இசை வேளாளர் சமூகமாக மாறியவர்கள் என்று கூறிக்கொண்டனர்.

நெசவுத் தொழிலில் ஈடுபட்ட கைக்கோளர் வகுப்பிலிருந்து பிரிந்தவர்கள் தேவதாசிகள் என்றும், நட்டுவாங்கம் எனப்பட்ட தேவதாசி சமூக ஆண்கள் விலை கொடுத்து வேற்று சாதியினரின் பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கி தேவதாசிகள் ஆக்கினர் என்றும் Francis Buchanan என்பவர் 1807 ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார் (A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar, 1807)

தமிழ்சினிமாவின் தொடக்க கால நடிகைகள் பலரும் இசைவேளாள சமூகத்தினர்தான். டி.ஆர். ராஜகுமாரி, எம்.என். மதுரம் என அக்காலத்தில் புகழ்பெற்ற முதல் தலைமுறை நடிகைகள் இவர்களே. தில்லானா மோகனாம்பாள் எனும் புகழ்பெற்ற திரைப்படம் இச்சமூகத்தின் துயர நிலையை காட்டுவதாக உள்ளது.

இசை வேளாளர் மக்கள் தொகை 1901 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 10,727 பேர் ஆகும்.

கர்நாடக சங்கீதம், நாட்டியத்தின் அவலம்

இன்று கர்நாடக சங்கீதமும் நாட்டியமும் புகழப்படுகிறது. பல பெண்கள் அதனை பெருமையாக நினைக்கின்றனர். ஆனால், நூறாண்டுகளுக்கு முன்பு நிலைமை இதற்கு தலைகீழானதாகும். அக்காலத்தில், பொது அரங்கில் பாடும், ஆடும் பெண்கள் அனைவருமே தேவதாசி சமூகத்தினராக இருந்தனர். இன்றிருப்பது போல பிராமணப் பெண்களோ மற்ற சாதியினரோ பாடவும் ஆடவும் முன்வரவில்லை. ஏனெனில், அக்காலத்தில் பாடலும் ஆடலும் பாலியல் சுரண்டலுடன் இணைந்திருந்தது.

ஒருபக்கம் கர்நாடக சங்கீதத்தையும் நாட்டியத்தையும் ஆடற்கலையையும் காப்பாற்றி வளர்க்கும் சமூகமாக அவர்கள் பார்க்கப்பட்டனர். இன்னொரு பக்கம் பிராமணர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் தாசிகளாக அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேவதாசி முறைக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் இந்தியாவின் முதல் சட்டசபை பெண் உறுப்பினரும் அவர்தான்.  இவரது தந்தை நாராயணசாமி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். (அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை தோற்றுவித்தவரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிதான். சுந்தர ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டதால், இவர் 'ரெட்டி' என்று அழைக்கப்பட்டார்).
தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போராடிய போது தமிழ்நாட்டின் பிராமணர்களும், காங்கிரசு கட்சியினரும், ஜமீன்தார்களும் அதனை கடுமையாக எதிர்த்தனர். 1927 ஆம் ஆண்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த போது, அதனை எதிர்த்தவர்களில் தீரர் சத்தியமூர்த்தி, சி.பி. இராமசாமி அய்யர் பொன்ற புகழ்பெற்ற நபர்களும் இருந்தனர். 

சத்தியமூர்த்தி அவர்கள், "தேவதாசிகள் என்பவர்கள் ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள், அவர்கள் தேவர்களின் அதாவது தெய்வங்களின் அடிமை என்கிற புனிதத்தன்மை பெற்றவர்கள். அதை ஏன் ஒழிக்க வேண்டுமென்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, "தேவதாசி முறை புனிதமானது என்றால், தேவதாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றால், அந்தத் தொழிலை எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? உங்கள் பிராமணக் குடும்பத்திலிருந்து எந்தப் பெண்ணையாவது தேவதாசி ஆக்குங்களேன்!" என்று கேட்டார்.

ஆனாலும் பிராமண தலைவர்கள் தேவதாசி முறையை ஒழிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பாரம்பரியமான இசை அழியும், நாட்டியம் அழியும், இந்துமத பண்பாடு அழியும் என்றெல்லாம் இவர்கள் மிரட்டினர். கூடவே, கோவில் நிலங்கள் தேவதாசிகள் பெயரில் உள்ளன. அந்தச் சொத்துக்களை இழக்க நேரிடும் என்று கூறினர்.

அதைவிட ஒருபடி மேலே சென்று 'எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் தாயார் மதுரை சண்முகவடிவு மூலமாக, அக்காலத்தில் சென்னையில் புகழ்பெற்றிருந்த வீணை தனம்மாள் உள்ளிட்ட இசைவேளாள மரபினரை ஒன்று திரட்டி, தேவதாசி முறையை ஒழிக்கக் கூடாது' என்று 1929 ஆம் ஆண்டில் போராட்டம் நடத்தினர்.

கடைசியில் நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் 1947 ஆம் ஆண்டில்தான் தேவதாசி முறை சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டது. தேவதாசி முறையை ஒழிக்கப்போராடியதும் இசைவேளாளர் வகுப்பை சார்ந்த முத்துலட்சுமி ரெட்டியும், மூவாலூர் இராமாமிர்தம் அம்மாளும்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுதந்திர இந்தியாவில் நிலை என்ன?

இசைவேளாளர், சின்ன மேளம், பெரிய மேளம், நட்டுவாங்கம், மேளக்காரர் என்று அழைக்கப்பட்ட சமூகங்களும் தேவதாசி முறையும் நெருங்கிய தொடர்புடையாதாக இருந்தது. 1947 ஆம் ஆண்டில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும், தேவதாசிகளாக இருந்த பெண்களின் சோகம் மறையவில்லை.
சில பெண்கள் தம்மை சராசரி சமூகத்துடன் ஏதோ ஒரு வழியில் இணைத்துக்கொண்டனர். சிலர் பிராமணர்களுடன் இணைந்தனர். பலர் இரண்டாம் மனைவியாக வாழ்ந்தனர். ஆனால், வெளி சமூகத்தில் தமது சாதியை சொல்ல வெட்கப்பட்டனர். இதுகுறித்து கனடா நாட்டின் மெக்ஹில் பல்கலைக்கழக பேராசிரியர் தவேஷ் சொனேஜி எழுதிய Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India, 2011 ஆய்வு நூலில் தேவதாசி முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிற்கால நிலையை விரிவாக பதிவு செய்துள்ளார்.
பள்ளிகளின் பெண் குழந்தைகளை இசை வேளாளர் என்று பதிவு செய்யக்கூட பெண்கள் அஞ்சினர் என்று குறிப்பிடும் தவேஷ் சொனேஜி; அரசியல் ரீதியில் ஆண்கள் மட்டும் உச்சநிலைக்கு வளர்ந்தனர் என்கிறார். அதற்கு உதாரணமாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக வந்த அண்ணாதுரையும் கருணாநிதியும் இசைவேளாளப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகிறார். (அறிஞர் அண்ணா அவர்களின் தாயார் பங்காரு அம்மாள் கோயில் பணியாளர் என்பது சொனேஜி தவேசின் ஆய்வு கருத்தாகும்)
வைகோவின் இனவெறிப் பேச்சு

இந்த வரலாற்று பின்னணியில் இருந்து 'நாதஸ்வரத்தையும் விபச்சாரத்தையும்' இணைத்து வைகோ பேசியிருப்பதை கவனித்தால் -  அவரது பேச்சின் சாதிவெறிக் கொடூரத்தை புரிந்துகொள்ள முடியும்.

ஒரு கொடூரமான பாலியல் சுரண்டலில் இருந்து போராடி மீண்ட சமூகம்; அதன் பழைய நினைவுகளை முற்றிலுமாக மறக்க விரும்பும் காலத்தில், கிண்டலும் கேலியுமாக சமூகத்தை கொச்சைப் படுத்தியது உண்மையில் ஒரு இனவெறி கருத்தாகும். வைகோ மன்னிக்க முடியாதவர்.

ஆதாரம்:

1. Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India, 2011, Davesh Soneji

2. From the Tanjore Court to the Madras Music Academy, A Social History of Music in South India, 2006  Lakshmi Subramanian

3. MS - A Life in Music, 2004 T. J. S. George

4. The music and musical instruments of southern India and the Deccan, 1891,  C. R. Day, 1860-1900

5. Castes and Tribes of Southern India 1855, By Edgar Thurston

6. A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar, 1807, Francis Buchanan, 

தொடர்புடைய இடுகைகள்:

1. வைகோவின் சாதிவெறி: வேடிக்கை பார்க்கும் கொம்யூனிஸ்ட் கும்பல்!

2. தேர்தல் 2016: தமிழக அரசியலின் உண்மை நிலை என்ன?

புதன், ஏப்ரல் 06, 2016

வைகோவின் சாதிவெறி: வேடிக்கை பார்க்கும் கொம்யூனிஸ்ட் கும்பல்!

வைகோ இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 'கலைஞருக்கு நாதஸ்வரம் வாசிக்கும் தொழில் தெரியும்' என்றும், 'ஆதிமனிதன் செய்த தொழிலை (விபச்சாரம்) செய்யலாம்' என்றும் பேசியுள்ளார்.

இப்படி,  நாதஸ்வரம் என சாதித்தொழிலை சுட்டிக்காட்டியும், விபச்சாரத் தொழிலை ஒரு தலைவர் மீது சுட்டியும் வைகோ பேசியது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. கூடவே, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் 'கலைஞரை இறைத்தூதராக சித்தரித்தார்கள். இதனை இஸ்லாமியர்கள் அனுமதிக்கலாமா?' என்றும் பேசியுள்ளார்.

சாதிவெறிப் பேச்சையும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் வைகோ பேசுவதையும் கண்டுகொள்ளாமல் போவது தமிழக அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல.
வைகோவின் சாதிவெறி பேச்சு

குறிப்பு: வைகோ இவ்வாறு பேசிய இடத்தில் திருமாவளவனும், முத்தரசனும், இராமகிருஷ்ணனும் இருந்தார்கள். வைகோவின் இந்த அநாகரீக பேச்சை வேடிக்கப் பார்த்தனர்.

செய்தி: "மாரியம்மன் மீது ஆணை... நான் சாதியைக் குறிப்பிட்டு பேசவில்லை" என வைகோ விளக்கம். (கலைஞருக்கு நாதஸ்வரம் வாசிக்கத் தெரியும் என்பது சாதிவெறி பேச்சு இல்லையா?)

பழைய வரலாறு: காத்திருக்கும் காந்தாரி அம்மன்
காத்திருக்கும் காந்தாரி அம்மன்
நெல்லை மாவட்டம் குறிஞ்சாக்குளத்தில் தலித் இன மக்கள் தங்களுக்கென்று காந்தாரி அம்மன் கோவிலை கட்டமுயன்றதற்காக, 1992  மார்ச் 16 -ல் தலித் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள். முதல் குற்றவாளி வைகோ அவர்களின் தம்பி ரவிச்சந்திரன். இரண்டாம் குற்றவாளி வைகோ அவர்களின் மாமா சங்குவெட்டி மோகன்தாசு நாயுடு.

காந்தாரியம்மன் கோவில் பீடம் இன்னமும் அப்படியேதான் நிற்கிறது. இன்றுவரை சாமியை கோவிலில் வைக்க தலித்துகளால் முடியவில்லை. தலித் மக்களுக்கு சொந்தமான ஊரில், தலித் மக்களுக்கு சொந்தமான நிலத்தில், தலித் மக்களின் சாமியை கோவிலில் வைத்து வழிபட 24 ஆண்டுகளாக முடியவில்லை.

கேப்டன் விஜயகாந்த் கூட்டணி செயல்வீரர்கள் இப்போதாவது காந்தாரி அம்மனை கோவிலுக்குள் அனுப்ப முடியுமா?

----------------------------------------
ஒரு பின்னணி கட்டுரை:
தேர்தல் 2016: தமிழக அரசியலின் உண்மை நிலை என்ன?

ஞாயிறு, ஏப்ரல் 03, 2016

தமிழக தேர்தல் 2016: மக்கள் மனநிலையைக் காட்டும் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ALLEN & MILLER மற்றும் Nature’s Watchdog என்ற நிறுவனகள் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 2, 2016 வெளியிடப்பட்டுள்ளது. இக்கருத்துக்கணிப்பில் தமிழக மக்களின் மனநிலை தெளிவாக கணிக்கப்பட்டுள்ளது.  கருத்துக்கணிப்பின் விவரங்கள் இதோ:

மார்ச் 12-ஆம் தேதியிலிருந்து மார்ச் 26 வரை, தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள 120 சட்டமன்ற தொகுதிகளில், 10800 பேரிடம் அரசியல் சுழல், பிரதான பிரச்சனைகள், மற்றும் தலைவர்கள் பற்றிய கருத்து கணிப்பு விவரங்கள் பின்வருமாறு:
1. மது, ஊழல், நிர்வாக சீர்கேடு, விவசாயிகளின் நலன், பிரதான பிரச்சனைகளாக பார்க்கபடுகின்றன.

2. இந்த தேர்தலின் பிரதான முதல்வர் போட்டி வேட்பாளர்களாக ஜெயலலிதாவும், அன்புமணியும் திகழ்கின்றனர்.

3. பாமகவின் அன்புமணிக்கு எதிர்கட்சி தலைவராகும் வாய்ப்பு உள்ளது.

4. தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் முதல்வராக வாய்ப்பளிக்க பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அம்சங்கள்

1. தமிழகத்தின் மாவட்ட அளவில் மது தலையாய பிரச்சனையாக 51.2% பேரால் பார்க்கபடுகிறது. ஊழல் 29.6% ., நிர்வாக சீர்கேடு 11.3% என்றும், கருத்து இல்லை என்று 7.9% பேர் தெரிவித்துள்ளனர்.

2 .நகரங்களை பொருத்தமட்டில் அனைத்து பிரச்சனைகளை காட்டிலும் ஊழல் 40.6% பேரால் முதன்மை பிரச்சனையாக பார்க்கபடுகிறது.

3. இளையதலைமுறை வாக்காளர்கள் பொதுவாக ஊழலையும், நிர்வாக சீர்கேட்டையும் முதன்மை பிரச்சனையாக பார்க்கின்றனர்.

4. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை திமுக 19.5%., அதிமுக 0.4%., பாமக 55.7%., தேமுதிக 6.2%., மதிமுக 8.2%., கொண்டு வருவர் என கருத்து தெரிவித்துள்ளனர்.
5. நகரங்களை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக பாமகவுக்கு 57.5%., பேர் மதுவிலக்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

6. தமிழகத்தில் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு மாவட்டங்கள் அளவில் இல்லை என்று 74.1%., பேரும் ஆம் என்று 23.3%., பேரும் கருத்து இல்லை என்று 2.7%., பேரும் தெரிவித்துள்ளனர்.

7. அரசியல் கட்சிகள் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்கிறார்கள் என்று மாவட்டங்கள் அளவில் 54.1%., பேரும், இல்லை என்று 27.7% பேரும், கருத்து இல்லை என்று 18.2% பேரும் தெரிவித்துள்ளனர்.

8. நகரங்களில் 63% பேர் ஆம் என்றும், 19.8% பேர் இல்லை என்றும் 16.4% பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

9. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்/கட்சிக்கோ வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு மாவட்டங்கள் அளவில் 80.4% ஆம் என்றும், 10.6% பேர் இல்லை என்றும் ,கருத்து இல்லை என்று 9.0% பேரும் தெரிவித்துள்ளனர்.

10. நகரங்கள் சராசரியில் 81.0% பேர் இல்லை என்றும் ,9.5% பேர் ஆம் என்றும், 9.6% பேர் கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

11. மாவட்டங்கள் அளவில் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்ற மனநிலை உள்ளதா? என்ற கேள்விக்கு ஆம் என்று 52.5% பேரும், இல்லை என்று 32.0% பேரும் கருத்து இல்லை என்று 15.6% பேரும் தெரிவித்துள்ளனர்.
12. நகரங்களிலும் பெருவாரியாக 58.7% பேர் ஆம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

13. இளைய தலைமுறை வாக்காளர்கள் பெரும்பாலானோரிடம் இதே மன நிலை அதிகம் காணப்படுகிறது.

14. இலவச திட்டங்கள் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என 46.6% பேர் மாவட்ட அளவிலும் 42% பேர் நகரங்கள் அளவிலும், இல்லை என்று 44.4% மாவட்ட அளவிலும், 48.5% பேர் நகர அளவிலும் கருத்து இல்லை என 9% பேரும் தெரிவித்துள்ளனர்.
15. தமிழக முதல்வராக செல்வி ஜெயலலித்தாவின் செயல்பாடு குறித்து 41% பேர் நன்று என்றும், 50.1% பேர் மோசம் என்றும் 8% பேர் கருத்து இல்லை என்று மாவட்டங்கள் அளவில் தெரிவித்துள்ளனர்.
16. நகரங்களில் 60.19% பேர் மோசம் என்றும், 29.6% பேர் நன்று என்றும், 11.4% பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

17.சட்டசபை எதிர்கட்சி தலைவராக விஜயகாந்தின் செயல்பாடு குறித்து 8.9% நன்று என்றும், 88.6% பேர் மோசம் என்றும், 2.5% பேர் கருத்து இல்லை என்று மாவட்டங்கள் அளவில் கருத்து தெரிவித்துள்ளனர்.
18. நகரங்களில் 11.3% பேரும், மோசம் என்று 80.7% பேரும், 8.0% கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

19. தமிழகத்தில் முதல்வராக இந்த முறை யாருக்கு வாய்ப்பளிக்கலாம் என்று நீங்கள் கருதிகிறீர்கள்? என்ற கேள்விக்கு ஜெயலலிதா 35.9% பேரும், கலைஞர் 24.4% பேரும், விஜயகாந்த் 7.9% பேரும், அன்புமணி இராமதாஸ் 27.6% பேரும் மற்றவர்கள் 4.2% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சனி, ஏப்ரல் 02, 2016

தேர்தல் 2016: தமிழக அரசியலின் உண்மை நிலை என்ன?

இந்திய தேர்தல் முறையே ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். உலகில் இரண்டுவிதமான ஜனநாயக தேர்தல்கள்தான் நேர்மையானவை என்று கருதப்படுகின்றன. 1. கருத்தொற்றுமை ஜனநாயகம் (Consensus democracy), 2. பெரும்பான்மை ஜனநாயகம் (Majoritarian Democracy). இவை இரண்டுமே இந்தியாவில் இல்லை. தமிழ்நாட்டிலும் இல்லை. இங்கு இருப்பது ஒரு சிறுபான்மை ஆதிக்க ஜனநாயக முறை ஆகும். இதில் பெரும்பான்மையினரின் விருப்பங்கள் மதிக்கப்படுவது இல்லை.
மிகச்சிறந்த தேர்தல் முறை என்பது எல்லா வாக்காளர்களின் வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் விகிதாச்சார தேர்தல் முறை (Proportional representation) ஆகும். இதுவே கருத்தொற்றுமை ஜனநாயகம் (Consensus democracy) என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக பெரும்பான்மை ஜனநாயகம் (Majoritarian Democracy) ஏற்கப்பட்ட முறை ஆகும். பெரும்பான்மை முறையில் 50% +1 வாக்கு அல்லது அதற்கு மேலாக ஆதரவு பெற்றவர்களே வெற்றி பெற்றவர்கள் ஆகும்.

ஆனால், இந்தியாவில் 'முதலில் வந்தவரே வெற்றி பெற்றவர்' (First Past the Post - FPTP) என்கிற மிக மோசமான தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நடக்கும் பெரும்பாலான தேர்தல்களில் 50% அளவுக்கு கீழான வாக்குகளை பெற்ற கட்சிகளே ஆட்சியமைத்துள்ளன. எடுத்துக்காட்டாக, 2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த மோடி அரசு சுமார் 31% வாக்குகளை மட்டுமே பெற்றது. மீதமுள்ள 69% வாக்காளர்கள் மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

தமிழக தேர்தலில் நடப்பது என்ன?

இந்திய தேர்தலே ஜனநாயகத்துக்கு எதிரானதாக இருக்கும் நிலையில், எதிர்வரும் மே மாதம் 16 ஆம் நாள் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் - ஒரு நயவஞ்சக தேர்தல் பாதையில் பயணிக்கிறது. ஊடகங்கள் கட்டமைக்கும் பார்வையில் இந்த தேர்தல் நடைபெறவில்லை. உண்மை அதற்கும் அப்பால் இருக்கிறது.

நன்மைக்கும் தீமைக்கும் எதிரான போராக மாறியுள்ள இந்த தேர்தலில் உண்மையை விட, பொய்யே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தப் போரில், நியாயம் வெல்ல வேண்டும் என்று விரும்பினால் - முதலில் தேர்தல் களத்தில் நடப்பது என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான ஒரு முயற்சியே இக்கட்டுரை ஆகும்:

1. தேர்தல் களத்தில் நிற்கும் கட்சிகள்/அணிகள் எத்தனை?

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் கணக்குகளின் படி, 50 கட்சிகள் தேர்தல் களத்தில் இருந்தன. இந்த முறையும் இதற்கு இணையான எண்ணிக்கையில் கட்சிகள் தேர்தல் களத்தில் இருக்கும். ஆனால், இந்த 50 கட்சிகளுக்கும் இடையே போட்டி என்று கருத முடியாது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டிடும் கட்சிகள் அல்லது அணிகளின் எண்ணிக்கையை வைத்தே போட்டியை கணிக்க முடியும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் அல்லது அணிகள் என்று பார்க்கும் போது - தற்போது

1. அதிமுக, 
2. திமுக, 
3. பாமக, 
4. தேமுதிக, 
5. பாஜக, 
6, நாம் தமிழர் 

- ஆகிய ஆறு முனைகளில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில், சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமது வலிமையை மெய்ப்பித்துள்ள கட்சிகளையும், இதுவரை தேர்தல் அரசியலில் வெற்றி பெறாத அல்லது கணிசமான வாக்குகளைப் பெறாத கட்சிகளையும் சமமாக பார்க்க முடியாது. அந்த வகையில் 1. அதிமுக, 2. திமுக, 3. பாமக, 4. தேமுதிக, 5. பாஜக ஆகிய கட்சிகளுடன் சீமான் அவர்களின் 'நாம் தமிழர்' கட்சியை ஒப்பிட முடியாது.

இதனை 'நாம் தமிழர்' கட்சியை குறைத்து மதிப்பிடுவதாகக் கருத முடியாது. எந்த ஒரு போட்டியிலும் முதலில் தகுதிச்சுற்று என்றும், பின்னர் பிரதானப் போட்டி என்றும் இருப்பது போல - தேர்தலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யாத வரை, நாம் தமிழர் கட்சியை ஒரு பிரதானக் கட்சியாகக் கருதக் கூடாது.

ஆக மொத்தத்தில், 

1. அதிமுக, 
2. திமுக, 
3. பாமக, 
4. தேமுதிக, 
5. பாஜக 

- ஆகிய 5 கட்சிகள் அல்லது அணிகள்தான் 2016 தமிழக தேர்தல் களத்தில் உள்ளன.

2. தேர்தல் களத்தில் நிற்கும் முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்?

தற்போதைய நிலவரப்படி, 

1. ஜெயலலிதா, 
2. கருணாநிதி, 
3. அன்புமணி, 
4. விஜயகாந்த் 

- ஆகிய நான்கு பேரும், பாஜக சார்பில் 'யாரோ ஒருவர்' என்பதாக ஐந்து நபர்கள் இருக்கலாம். ஒருவேளை பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் இல்லை எனில் - இது நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் இடையேயான போட்டியாக இருக்கும்.

ஆக, ஐந்து முனைப்போட்டி அல்லது நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் இடையே போட்டி என்பதாக இருக்கும்.

3. ஐந்து முனைப்போட்டி என்பது உண்மையா?

நிச்சயமாக இல்லை. இது ஒரு காட்சிப் பிழை ஆகும். 2016 தமிழக தேர்தலில் ஐந்து முனைப்போட்டி நடப்பது போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயற்சிக்கின்றன. ஆனால், உண்மை அதுவல்ல. 

இதற்கு முன்பெல்லாம் வாக்குச்சாவடி அளவில் பினாமி முகவர்களை இறக்குவதற்காக பினாமி வேட்பாளர்களை நியமிப்பார்கள். அது போல, தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக சில பினாமி அணிகளை ஒரு கட்சி களத்தில் இறக்கி விட்டிருக்கிறது. இந்த பினாமி அணிகள் திசை திருப்புவதற்காக போடும் அட்டைக் கத்தி சண்டையை, உண்மை சண்டைப் போல ஊடகங்கள் இட்டுக்கட்டி பிரச்சாரம் செய்கின்றன. இதுவே உண்மை.

4. பினாமி அணிகள் எவை?

தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் 'விஜயகாந்த அணி' மற்றும் 'பாஜக அணி' ஆகிய இரண்டு அணிகளும், ஆளும் அதிமுகவின் B Team 1 மற்றும் B Team 2 என்று அழைக்கப்படுகின்றன. சில தனிப்பட்ட நலன்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களின் அடிப்படையில் இந்த பினாமி அணிகள் செயல்படுவதாக கருதப்படுகிறது.

5. அதிமுக 'B டீம் 1': விஜயகாந்த் அணியின் நோக்கம் என்ன?

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்றால், விஜயகாந்த் திமுகவின் பக்கம் சேர்ந்துவிடக் கூடாது என்பது அதிமுக நலன் விரும்பிகளின் நோக்கம் என்று தமிழக அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. எனவே, பாஜக மற்றும் முன்னாள் மக்கள் நலக் கூட்டணியின் மூலமாக விஜயகாந்த்துடன் பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைகளில் முன் வைக்கப்பட்ட 'பேரங்கள்' குறித்து ஊடகங்களில் பரவலாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன.
பொதுவாக, கூட்டணி பேரம் என்பது கொள்கை அடிப்படையில் நடப்பது இல்லை. யார் பக்கம் கூட்டணி சேர்ந்தால் அதிக 'லாபம்' கிடைக்குமோ - அந்தப் பக்கத்தில் சேர வேண்டும் என்கிற வியாபார நோக்கமே சில கட்சிகளிடம் இருக்கிறது.

எனவே, திமுகவுடன் கூட்டணி சேர்வதால் கிடைக்கும் 'லாபத்தை' விட, முன்னாள் மநகூவுடன் கூட்டணி சேர்ந்து 'விஜயகாந்த் அணியாக' செயல்படுவதால் - விஜயகாந்திற்கும், அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவுக்கும் 'அதிக லாபம்' என்பதால்தான் விஜயகாந்த் அணி உருவானது என்பது தமிழக அரசியலில் பலரும் அறிந்த உண்மையாக இருக்கிறது.

இந்த பேரம் குறித்து, வைகோவின் விசுவாசியாக இருந்த ஆனந்தவிகடன் திருமாவேலன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: 

"விஜயகாந்தை தர்மனாகவும், வைகோவை அர்ஜுனனாகவும், ஜி.ராமகிருஷ்ணனை நகுலனாகவும், தொல். திருமாவளவனை பீமனாகவும் தன்னை சகாதேவனாகவும் முகம்காட்டுகிறார் முத்தரசன்." 

"மக்களுக்குத் தெரியாதது ஒன்றுதான்... உங்களை இயக்கும் கிருஷ்ணன் யார்?"

- ஆனந்த விகடனின் இந்தக் கேள்வியிலும் பதிலிலும் - விஜயகாந்த் அணி என்பது அதிமுகவின் பி டீம் 1 என்பது தெளிவாகிறது.

எனவே, "விஜயகாந்த் அணியின் நோக்கம் என்ன?" என்றால், அதற்கான பதில் "அதிமுகவை வெற்றிபெற வைப்பது" என்பதுதான்.

6. அதிமுக 'B டீம் 2': பாஜக அணியின் நோக்கம் என்ன?

'அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு' என்பார்கள். அதுபோல 'பாஜகவும் அதிமுகவும் ஒன்னு அதை அறியாத தமிழக மக்கள் வாயில் மண்ணு' என்பதுதான் உண்மை.

கொள்கை, கோட்பாடுகள் அடிப்படையில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பாபர் மசூதியை பாஜக இடித்தபோது, அதற்கு தமிழ்நாட்டிலிருந்து கரசேவகர்களை அனுப்பிய ஒரே கட்சி அதிமுகதான்.

இன்றைக்கு, மத்திய அரசினை நடத்தும் மோடி அரசுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது அதிமுக தான். குறிப்பாக, நாடாளுமன்ற மேலவையில் அதிமுக ஆதரவு இல்லாமல், மோடியால் எதுவும் செய்ய முடியாது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் நடக்கவுள்ள 'நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில்' அதிமுக கணிசமான இடங்களைக் கைப்பற்றுவது மோடி அரசுக்கு முக்கியமானதாகும்.   தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகமான இடங்களில் அதிமுக வெற்றி பெற்றால், அவர்களின் நாடாளுமன்ற மேலவை இடங்களும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. 

எனவே, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செய்யும் பாரதீய ஜனதா கட்சி. தமிழக சட்டமன்றத்தில் அதிமுக முதன்மை இடத்தைப் பிடித்தால், அதன் மூலம் தேசிய அளவில் பலனடையப் போவது பாரதீய ஜனதாக் கட்சி! இரண்டு கட்சிகளும் Made for each other.

"வழக்கும் தீர்ப்பும்!"

இதற்கிடையே, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் 'கணக்குப்புகழ்' குமாரசாமி தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் - தேர்தல் நெருக்கத்தில் 'ஜெயலலிதா குற்றமற்றவர்' என்று அறிவித்து, அவரை விடுவிக்கும் வகையிலான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் கூறுகின்றன. 

இவ்வாறு 'ஜெயலலிதா நிரபராதி' என அறிவித்து தேர்தலுக்கு முன்பு தீர்ப்பு வந்தால் - அதன் விளைவு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எல்லோரும் அறிந்ததே!

(கிரானைட் கொள்ளை வழக்கில் மதுரை மாஜிஸ்ட்ரேட் ஒருவர், 'குற்றம் சாட்டப்பட்ட பி.ஆர். பழனிச்சாமி குற்றவாளி அல்ல, ர் நிரபராதி. குற்றம் சுமத்திய கலக்டர் தான் குற்றவாளி' என்று தீர்ப்பு அளித்ததை மறந்துவிடாதீர். இந்திய நீதித்துறையில் எது வேண்டுமானாலும் நடக்கும்!)

மொத்தத்தில் - "பாஜக அணியின் நோக்கம் என்ன?" என்றால், அதற்கான பதிலும் "அதிமுகவை வெற்றிபெற வைப்பது" என்பதுதான்.

பாஜக நிலைப்பாடு குறித்த சில கேள்விகள்?

பாஜகவின் நோக்கம் அதிமுகவை வெற்றி பெற வைப்பது தான் என்றால், அப்புறம் எதற்கு அவர்கள் அதிமுகவை கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். உண்மையில் இது ஒரு நுட்பமான நாடகம் ஆகும். சுமார் 15 நாட்களாகத்தான் பாஜவினர் ஒட்டுமொத்தமாக அதிமுகவை எதிர்க்கின்றனர். இதன்மூலம் - திமுக, பாமக போன்று நாங்களும் அதிமுக எதிர்ப்புக் கட்சிதான் என்று காட்டி, அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகளை பிரிப்பதே பாஜகவின் உண்மையான விருப்பம்.

இதற்குப் பதில் 'அதிமுகவுடன் பாஜக கூட்டு சேரலாமே' என்கிற கேள்வியும் எழக்கூடும். பாஜக அதிமுக கூட்டணி அமைத்தால் அதனால் அதிமுகவிற்கு இழப்புதான் அதிகம். அதிமுகவிற்கு கிடைக்கக் கூடிய சிறுபான்மை வாக்குகளை விட, பாஜகவால் கிடைக்கக் கூடிய வாக்குகள் மிக மிகக் குறைவாகும். அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்தால், ஒட்டுமொத்த சிறுபான்மை வாக்குகளும் திமுகவுக்கு போகும் வாய்ப்பு உண்டு. எனவே, எதிரிபோல நடிக்கும் நண்பனாக பாஜக செயல்படுகிறது.

(குறிப்பு: பாஜகவின் நோக்கத்திற்கும் ஜெயலலிதா வழக்கு குறித்தும் நாம் குறிப்பிட்டுள்ள தகவல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை அல்ல).

7. தமிழக தேர்தலில் நடக்கும் உண்மையான போட்டி என்ன?

2016 சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் உண்மையாக மூன்று அணிகள் மட்டுமே உள்ளன. இங்கு ஐந்து முனைப் போட்டி எதுவும் இல்லை. நடப்பது மூன்று முனைப் போட்டி மட்டுமே.

1. அதிமுக அணி

அதிமுக அணி என்பது ஒற்றைக் கூட்டணி அல்ல. அதில் மூன்று கூட்டணிகள் உள்ளன. அதிமுக கூட்டணி, விஜயகாந்த் அணி, பாஜக கூட்டணி ஆகிய இந்த மூன்றுமே - ஜெயலலிதா முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பாடுபடும் கூட்டணிகள் தான்.

இந்த அணிகளுக்குள் உள்ள வேறுபாடு என்னவென்றால், அதிமுக அணி ஒரு பக்கம் விளையாடும் போது - விஜயகாந்த் அணி, பாஜக கூட்டணி இரண்டும் எதிர்ப்பக்கத்தில் நின்று, சேம் சைட் கோல் (same side goal) போடுகின்றன.
சாராய விற்பனையை அதிகமாக்க வேண்டும். ஊழலை இன்னும் அதிகமாக்க வேண்டும். நிர்வாக சீர்க்கேட்டால் நாட்டை சின்னாபின்னமாக்க வேண்டும் என்பதே இந்த அணியின் நோக்கம்.

2. திமுக அணி

திமுக அணி என்பது தமிழின அழிப்பு அணி. ஈழத்தமிழர்களை கொன்றொழித்த காங்கிரசும், விடுதலைப் புலிகள் பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர் என்று சொன்ன சிவகாமியும் அங்கம் வகிக்கும் கொடூரமான கும்பல் அது.
ஊழலை இன்னும் அதிகமாக்க வேண்டும். நிர்வாக சீர்க்கேட்டால் நாட்டை சின்னாபின்னமாக்க வேண்டும். மிக முக்கியமாக கருணாநிதியின் குடும்பத்திற்கு தமிழ்நாட்டை பங்குபோட்டு கொடுக்க வேண்டும் என்பதே இந்த அணியின் நோக்கம்.

3. பாட்டாளி மக்கள் கட்சி

அதிமுக அணி, திமுக அணி ஆகிய இரண்டு ஊழல் மற்றும் சர்வாதிகார அணிகளுக்கு ஒரே மாற்றாக இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி அவர்களும் மட்டுமே.
மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு மற்றும் சிறந்த நிர்வாகம், கல்வி மற்றும் மருத்துவத்தை மக்கள் உரிமையாக்குதல், வீட்டுக்கு ஒரு வேலை, வேளாண்மையை முதலிடத்துக்கு கொண்டு வருதல் என தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் இருக்கும் ஒரே முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி அவர்கள் மட்டுமே.

என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டு ஊடகங்கள் பெரும்பாலும் - திமுக அணி, அதிமுக அணி - என பிரிந்து கிடக்கின்றன. அந்த அணிகளுக்கு கீழ்ப்படிந்து, சேவகம் செய்கின்றன. உண்மையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை விட அவரவர் எஜமானர்களுக்கு, அதாவது திமுக அல்லது அதிமுகவுக்கு ஆதரவாக செய்திகளை இட்டுக்கட்டுவதே பத்திரிகைகளின் தொழிலாக உள்ளது.
இந்தச் சூழலில், திமுக அணி, அதிமுக அணி ஆகிய தீய சக்திகளுக்கு ஒரே மாற்று பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி அவர்களும்தான் என்பதை - தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் மீது அக்கறைக்கொண்டுள்ள ஒவ்வொரு சாமானிய மனிதரும் சக தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 

நீதியை நம்பும் ஒவ்வொருவரும், சக மனிதன் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் - மருத்துவர் அன்புமணிக்கான தூதர்களாக மாறி, உண்மையை எல்லோரிடமும் கொண்டு செல்வதே இன்றுள்ள உடனடித் தேவை.

உண்மையான போட்டி என்பது, ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆக்கிரமித்து சீரழித்து வரும் அதிமுக - திமுக சர்வாதிகார கும்பலுக்கும்: மாற்று வளர்ச்சி அரசியலை முன்வைக்கும் மருத்துவர் அன்புமணி அவர்களுக்கும் இடையேதான்.

"அசதோ மா சத் கமய 
தமஸோ மா ஜ்யோதிர் கமய 
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய"

- என்பது உபநிஷதம் காட்டும் வழியாகும். இதன் பொருள் -

"பொய்மையிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்வாய்
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் 
அழிவில் இருந்து வாழ்வுக்கு அழைத்துச் செல்வாய்"

தமிழ்நாட்டை பொய்யிலிருந்து உண்மைக்கு, இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, அழிவிலிருந்து வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனில், அதிமுக - திமுக கும்பலை தோற்கடித்து, மருத்துவர் அன்புமணி வெற்றிபெற நாட்டு நலன் விரும்பும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

இதுவே தக்க தருணம். செய்வோமா...?