Pages

வியாழன், நவம்பர் 25, 2010

சாதியும் முதல்வர் பதவியும்: காப்பாற்றப்பட்ட முதல்வர், பதவியிழந்த முதல்வர், பதவிபெற்ற முதல்வர்.

1. காப்பாற்றப்பட்ட முதல்வர் - எட்டியூரப்பா

லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எட்டியூரப்பாவின் பதவியை பறிக்க அவரது கட்சித்தலைமை (BJP) வெளிப்படையாக முயற்சி செய்தது. அவர் பதவி விலகுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். பத்திரிகைகளும் அவ்வாறே சத்தியம் செய்தன. ஒரு கட்டத்தில் பதவி விலகல் கடிதத்தை அவர் கொடுத்துவிட்டதாகவும் கூறினர்.

இந்த நேரத்தில் அவரைக்காப்பாற்ற முன்வந்தது அவரின் லிங்காயத் சாதி. லிங்காயத் சமூகத்தினரின் ஆன்மீகத் தலைவரான பேஜாவர் மடத்தின் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி எட்டியூரப்பாவை பதவி நீக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கினார். அவருடன் இன்னும் இரண்டு லிங்காயத் மடாதிபதிகளும் எட்டியூரப்பாவை ஆதரித்தனர். எந்த கட்சியையும் சாராத இவர்களது கோரிக்கையைப் போலவே, பாரதீய சனதா கட்சியின் லிங்காயத் சாதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் எட்டியூரப்பாவை ஆதரித்தனர்.

இன்னுமொரு வேடிக்கையாக - எட்டியூரப்பாவை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு தலைமையேற்றவர் ரேணுகாச்சார்யா. அவரும் ஒரு லிங்காயத் என்பதால் - சாதிப்பாசத்தால் அல்லது தனது சாதிக்கு பயந்து - கடைசி நேரத்தில் எட்டியூரப்பாவுக்கு ஆதரவாளராக மாறினார்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளதால், லிங்காயத்துகளை பகைக்க மனமின்றி பி.ஜே.பி'யும் சாதிக்கு அடிபணிந்தது.

எட்டியூரப்பா முதல்வராகத் தொடர காரணம் - சாதி

2. பதவியிழந்த முதல்வர் - ரோசையா

ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்ததை அடுத்து ரோசையா என்கிற குனிசெட்டி ரோசையா ஆந்திர மாநிலத்தில் 15ஆவது முதலமைச்சர் ஆனார். ஆனால், ஜகன் மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதனை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்ததால், ஜகன் மோகன் ரெட்டி தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆறுதல் யாத்திரை என்கிற பெயரில் அவர் மக்களைத் திரட்டுகிறார். எனவே, மீண்டும் ஒரு ரெட்டி சமூகத்தவரை அட்சியில் அமர்த்த, ரோசையா காங்கிரஸ் கட்சியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ரோசையா முதல்வர் பதவி இழக்க காரணம் - சாதி

3. பதவிபெற்ற முதல்வர் - கிரண் குமார் ரெட்டி

ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி மீது ரெட்டி சமூகத்தினரிடையே பெருகி வரும் அபிமானத்தைத் தடுத்து நிறுத்த மீண்டும் காங்கிரஸ் தலைமை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த கிரண் குமாரை முதல்வராக்கியிருக்கிறது.

கிரண் குமார் ரெட்டி முதல்வர் பதவி பெற காரணம் - சாதி

கருத்துகள் இல்லை: