Pages

புதன், ஜூலை 06, 2011

கல்வி: இருண்டுபோகும் தமிழ்நாட்டின் எதிர்காலம்!

"தரம் குறைந்தவை சமச்சீர் பாட நூல்கள்: உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்" என்றொரு செய்தியை தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது.அதில் "சமச்சீர் கல்வி முறையிலான பாடத் திட்டமும், பாடப் புத்தகங்களும் தரம் குறைந்தவைகளாக உள்ளன. எனவே, இந்தக் கல்வியாண்டில் அவற்றைப் பயன்படுத்த முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது."

'சமச்சீர் கல்வி பாட நூல்கள் தரம் குறைந்தவை' என்றால், அதற்கு முன்பிருந்த 'பழைய பாட நூல்கள் தரமானவையா?' என்கிற கேள்விக்கு என்ன பதில் என்று தெரியவில்லை.

வறுமை குறித்த சிந்தனையை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையோடு அபிசித் பானர்சி, எசுதர் டஃப்லோ என்போர் அண்மையில் எழுதிய POOR ECONOMICS எனும் சிறப்புவாய்ந்த நூலினை பார்க்க நேர்ந்தது.
அதில் அவர்கள் கல்விகுறித்த ஒரு சிந்திக்கதக்க செய்தியை தெரிவிக்கிறார்கள். அவை:

கேள்வி: ஏழைக் குழந்தைகள் ஏன் கல்வியில் சிறக்கவில்லை?

பதில்: பள்ளிகள் போதவில்லை, கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றெல்லாம் கூறுவது ஓரளவுக்குதான் உண்மை. மாறாக, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்கள், கற்பிக்கப்படும் முறை எல்லாமே 'மேல்தட்டு குழந்தைகளை' இலக்காகக் கொண்டவை. அந்த கல்வியால் ஏழைக் குழந்தைகளுக்கு பயனும் இல்லை, அது அவர்களுக்கு பழக்கமானதும் இல்லை.

(என்னுடைய மகள் ஒரு சென்னை தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறது. அதன் பொதுஅறிவு 'தனியார்' நூலில் அப்பாவின் உடை 'குர்த்த - பைசாமா' என்றும், அம்மாவின் உடை 'சல்வார் கமீசு' என்றும் கூறப்பட்டுள்ளது. நூலின் எந்த இடத்திலும் வேட்டி, புடவை இல்லை. அதைவிட - விளையாட்டையும் பந்தையும் ஒப்பிடு என்று கூறி 'ரக்பி' விளையாட்டை போட்டுள்ளார்கள்.)

கேள்வி: தனியார் பள்ளிகள் சிறப்பானவையா?

பதில்: இல்லை. தனியார் பள்ளிகள் அதிக வசதி வாய்ப்புள்ள குழந்தைகளையே தங்களது மாணவர்களாக சேர்த்துக்கொள்கின்றன. அல்லது அத்தகைய மாணவர்கள்தான் தனியார் பள்ளிகளில் சேருகின்றனர். 


இப்படி வசதிபடைத்த மாணவர்கள், வீட்டிலும் பெற்றோரின் கவனிப்பால் படிக்கக் கூடிய மாணவர்களை தேர்வில் வெற்றிபெறச்செய்து தனியார் பள்ளிகள் சிறந்தவை என்பதுபோல நாடகம் ஆடுகின்றன.

உண்மையில், சாதாரண ஏழைக்குழந்தைகளையும் தனியார் பள்ளிகளில் சேரச்செய்தால், தனியார் பள்ளிகளின் தரம் பல்லிளித்துவிடும்.

கேள்வி: பள்ளிகள் எப்படி அமைய வேண்டும்?

பதில்: ஏதோ சில குழந்தைகளை முதல் மதிப்பெண் பெற வைப்பது நல்ல கல்வி அல்ல. எல்லா குழந்தைகளையும் படிக்க வைப்பதுதான் சரியான கல்வி முறை. 


பள்ளிகள் வசதி வாய்ப்புள்ள குழந்தையை சேர்க்க வேண்டும் எனக் கருதக்கூடாது. மாறாக, எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாக வைத்து - வசதியுள்ள குழந்தைக்கு இணையாக ஏழைக் குழந்தைகளுக்கும் கற்பிக்கும் திறன் படைத்ததே நல்ல பள்ளி.

இதற்காக - பாட சுமையை குறைத்து அனைவருக்கும் தரமானக் கல்வி அளிக்க வேண்டும்.

- என்கிறது அந்த நூல்.

இதையே, மண்டல் குழு அறிக்கை வேறு விதமாகக் கூறியது.

ஒரு மாணவன் வசதிபடைத்த படித்த பெற்றோரின் மகனாகப் பிறந்து, நகர்ப்புறத்தில் வசித்து, அருகிலேயே பள்ளி, வீட்டில் மின்வசதி, நல்ல உணவு, தனியறை, நாளிதழ், பொது நூல்கள், பெற்றொரின் வீட்டுப்பாடத்துடன் படித்து 80 மதிப்பெண் எடுக்கிறான்.

மற்றொரு மாணவன் ஏழை படிக்காத பெற்றோரின் மகனாகப் பிறந்து, கிராமத்தில் வசித்து, மிகத்தொலைவில் பள்ளி, வீட்டில் மின்வசதி இல்லை, போதுமான உணவு இல்லை, குடும்பமே ஒரு அறை குடிசையில் வாழ்ந்து, நாளிதழ் நூல்கள் எதையும் காணாமல், தினமும் பெற்றொருக்கு உதவியாக வயலில் வேலை செய்து - இத்தனைக்கு பிறகும் படித்து 70 மதிப்பெண் எடுக்கிறான்.

இரண்டு பேரில் யார் மிகச்சிறந்தவன் ? என்று கேட்டது மண்டல் குழு அறிக்கை.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய வளம் என்பது அதன் மனித வளம்தான். அதுவும் 'மக்கள்தொகை அனுகூலம்' (Demographic Dividend) எனப்படுகிற - மொத்த மக்களில் அதிகமானோர் இளையோராக இருக்கும் நிலையில் இப்போது தமிழ்நாடு உள்ளது. இது இனி முதியோர் அதிகம் என ஆகும் (இப்போது சப்பானில் அதுதான் நிலை). அதற்குள் - எல்லோரையும் ஆற்றல்மிக்கவர்களாக வளர்த்தால்தான் தமிழகம் வளரும். இல்லையென்றால் எதிர்காலம் இருண்ட காலம்தான்.

எல்லா சிறுவர்களையும் ஆற்றல் மிக்க இளைஞர்களாக வளர்த்தெடுக்க கல்வியில் சமத்துவம் ஒரு கட்டாயமான முன்தேவை. தமிழக அரசின் போக்கைப் பார்த்தால் - இருண்டகாலமே காட்சியளிக்கிறது.

10 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

காலத்துக்குத் தேவையான சிந்தனையை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.

கல்வியின் சீர்கேடுகள் குறித்த சிந்தனை தற்போது முன்பைவிட அதிகமாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அம்மா - செல்லம் இன்று பள்ளியில் என்னடா சொல்லித்தந்தாங்க..?

மகன் - இன்று எப்படி எழுதறது என்று சொல்லித்தந்தாங்க..

அம்மா - என்ன எழுதியிருக்க..?

மகன் - எப்படிப் படிக்கறதுன்னு நாளைக்குத்தாம்மா சொல்லித்தருவாங்க.!!!!

இதுதான் இன்றைய கல்வி நிலை நண்பாரே

suvanappiriyan சொன்னது…

காலத்துக்குத் தேவையான சிந்தனையை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.

Anand சொன்னது…

‘தமிழே தெரியாத, ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டவர், எப்படி சமச்சீர் கல்வி நூல்களைப் படித்தார்?’

http://www.envazhi.com/?p=26723

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///
பள்ளிகள் வசதி வாய்ப்புள்ள குழந்தையை சேர்க்க வேண்டும் எனக் கருதக்கூடாது. மாறாக, எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாக வைத்து - வசதியுள்ள குழந்தைக்கு இணையாக ஏழைக் குழந்தைகளுக்கும் கற்பிக்கும் திறன் படைத்ததே நல்ல பள்ளி./////


சரியான வார்த்தை..
அந்த காலம் எப்போது வரும்..

தாறுமாறு சொன்னது…

என்னுடைய மகள் ஒரு சென்னை தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறது. அதன் பொதுஅறிவு 'தனியார்' நூலில் அப்பாவின் உடை 'குர்த்த - பைசாமா' என்றும், அம்மாவின் உடை 'சல்வார் கமீசு' என்றும் கூறப்பட்டுள்ளது. நூலின் எந்த இடத்திலும் வேட்டி, புடவை இல்லை. அதைவிட - விளையாட்டையும் பந்தையும் ஒப்பிடு என்று கூறி 'ரக்பி' விளையாட்டை போட்டுள்ளார்கள்.)

அருள், ஒரு கேள்வி. உங்கள் மகள் ஏன் அரசுப் பள்ளியில் படிக்காமல் தனியார் பள்ளியில் படிக்கிறார்? என்ன காரணம் எனக் கூற முடியுமா?

முரளிதீர தொண்டைமான் சொன்னது…

இங்கே பேய் ஆட்சி சென்று பிசாசு ஆட்சிவந்ததைபோலல்லவா இருக்கிறது இந்த அம்மையார் ஆட்சிமுறை! மற்ற விசயஙக்ளில் அம்மையார் எதிர்கட்சிகளின்மீது காழ்ப்புணர்ச்சியோடு இருக்கட்டும் ஆனால் மாணவர்களின் எதிர்கால வாழ்வில் விளையாடவேண்டாம் பாவம் விட்டுவிடுங்கள்!

அருள் சொன்னது…

தாறுமாறு கூறியது...

// //அருள், ஒரு கேள்வி. உங்கள் மகள் ஏன் அரசுப் பள்ளியில் படிக்காமல் தனியார் பள்ளியில் படிக்கிறார்? என்ன காரணம் எனக் கூற முடியுமா?// //

தனது குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு அரசுபள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியரிடம் எனது குழந்தையை படிக்க வைக்க நான் மூடன் அல்ல. ஆசிரியர்களின் கடைமையுணர்ச்சி, பள்ளி கட்டட வசதிகள், கட்டமைப்பு வசதிகள், கழிவறை வசதிகள் என பலவற்றையும் பார்த்தாக வேண்டும். அரசுபள்ளியில் குழந்தையை சேர்த்து இவை எல்லாவற்றுக்காகவும் நான் ஒரு தனிமனிதன் போராட முடியாது.

மாறாக, சமச்சீர் கல்வி அதுவும் அருகமைப் பள்ளி வழியில் கட்டாயமாக்கப்பட்டால் மேற்கண்ட எல்லா வசதிகளும் வந்துவிடும். அப்போது எனது குழந்தை படிக்கும் அதேபள்ளியில் அரசு உயர் அதிகாரிகள், பணம் படைத்தோரின் குழந்தைகள் படிப்பார்கள். அப்போது எனது குழந்தையின் கல்விக்காக நான் மட்டும் அல்லாடும் நிலை ஏற்படாது.

அதுமட்டுமல்லாமல், அப்போது தரமான கல்வி தரமான வசதிகளுடன் தாய்மொழி வழியிலேயே கிடைக்கும். அப்படிப்பட்ட சூழலுடன் ஒப்பிட்டால், இன்று எனது மகள் படிக்கும் -புத்தக மூட்டை ஆங்கில வழி கல்வி குறைவானதே.

இப்போது கூட, நான் சமச்சீர் கல்வியை வலியுறுத்துவதில் சுயநலம் உண்டு. உண்மையில் சென்னை தனியார் பள்ளிகள் அளவுக்கதிகமான தேவையற்ற பாடச்சுமையை திணிக்கின்றன. பச்சிளம் குழந்தைகளை தினம்தினம் சித்தரவதை செய்கின்றனர். இது சமச்சீர் பாடத்திட்டத்தால் ஒழியக்கூடும் என்கிற எதிர்பார்ப்புதான் அது.

தனிமனித மாற்றங்களால் மட்டுமே மாற்றம் வந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அரசாங்கம் பொது நன்மைக் கருதி எல்லோரையும் ஒருவழியில் நடத்தவேண்டும். சாலைவிதிகளை மதிப்பதானாலும் சமச்சீர்கல்வி ஆனாலும் அது எல்லோருக்கும் சமமாகவும் கட்டாயமாகவும் நடைமுறைப் படுத்தவேண்டும்.

virutcham சொன்னது…

சமச்சீருக்காக வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றோர் தங்கள் பிள்ளைகளை தனியாரில் படிக்க வைக்கக் கூறும் காரணங்கள் ரொம்ப ஞாயமாத் தான் இருக்கு. பாருங்க. தனியார் பள்ளிகள் அதிகப் பாடங்களை வைத்து சுமையாக்குகின்றன. இதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் பாருங்க பாடச் சுமை குறைய வேண்டும் ஆனால் மற்ற வசதிகள் வேண்டும் அது எல்லாம் அரசுப் பள்ளியில் கிடைக்காது. அதனால் என் மகளைத் தனியாரில் போட்டு வசதிகளுடன் குறைவான பாடம் என்ற சுமை குறைந்த சந்தோஷத்துடன் நான் இதை எதிர்ப்பவர்களை விமர்சித்து நடப்பேன் என்னும் மனோபாவம்.
நீங்கள் திட்டும் மக்கள் உண்மையில் விரும்பியது அரசுப் பள்ளிகளின் தரம் கல்வியோடு சேர்ந்து எல்லாவற்றிலும் உயர வேண்டும் என்பதே. அதற்கு தனியாரையும் இழுத்துக் கொண்டு போராடாமல் அரசின் செலவுகளை அரசுப்பள்ளிகளில் முழுமையாக செலவழித்தால் உங்களைப் போல் தனியார் பள்ளிக்கு பணம் கட்ட வசதியில்லாத அந்த ஏழைக் குழந்தைகள் பயன் பெற்றிருக்குமே. என் அவர்களுக்கு நல்ல கட்டிட வசதி நல்ல கழிப்பறை நல்ல வாத்தியார் அமையக் கூடாதா?

நல்ல எண்ணம் அருள்.


http://wp.me/p12Xc3-17x - நர்சரி குழந்தைகளின் மேல் அரங்கேறும் கல்வி வன்முறை

http://wp.me/p12Xc3-108 matric பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்து விட்டு நாய் படாத பாடு படும் பெற்றோர்களா நீங்கள்?

Robin சொன்னது…

//நீங்கள் திட்டும் மக்கள் உண்மையில் விரும்பியது அரசுப் பள்ளிகளின் தரம் கல்வியோடு சேர்ந்து எல்லாவற்றிலும் உயர வேண்டும் என்பதே.// இதுவும் பொய்தான்!