Pages

புதன், அக்டோபர் 12, 2011

தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்

உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர்.
ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா? அந்த மாபெரும் தியாகம் குறித்த இரண்டாவது கட்டுரை இதுவாகும்: இதர இரண்டு கட்டுரைகளை இந்த இணைப்புகளில் காணலாம்:

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம் - சாமி நாகப்பன் படையாட்சி! 
3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி

கட்டுரை 2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்

தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் உருவாக்கிய ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை எதிர்த்து காந்தி 1906 ஆம் ஆண்டில் போராட்டம் அறிவித்தார். காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். காந்தி முதன்முதலாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். அவரது அறிவிப்பை மீறி 1907 ஆம் ஆண்டு அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் இச்சட்டத்துக்கு எதிராக 1909 ஆம் ஆண்டில்தான் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது .
தென் ஆப்பிரிக்காவில் காந்தி
இதே காலகட்டத்தில்தான் காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த் தியாகமாக சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்தார். கடைசியில் 1914 ஆம் ஆண்டில் காந்திக்கும் செனரல் ஸ்முட்ஸ் என்கிற டிரான்சுவால் அரசின் செயலாளருக்கும் இடையேயான உடன்படிக்கையின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய நிவாரண சட்டம் என்கிற புதிய சட்டத்தின் படி இந்திய சமூகத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் இந்த போராட்டம் வரலாற்று நோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, இரண்டு கண்டங்களில் இருக்கும் இரண்டு நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி அதுதான். அகிம்சை முறையிலான இந்திய சுதந்திரப்போராட்டத்தின் வழிகாட்டி இந்த போராட்டம்தான். நெல்சன் மண்டேலா அவர்களின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் வழிகாட்டியும் இந்த போராட்டம்தான்.

இரண்டாவதாக, அமெரிக்க குடியுரிமை போராட்டமான மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் போராட்டம் தொடங்கி, அதற்கு பின் இன்றுவரை உலகெங்கும் நடக்கும் அகிம்சை வழி போராட்டங்கள் அனைத்திற்கும் தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் இந்த போராட்டம்தான் முன்னோடியாகும்.

தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே மகாத்மா காந்தியை உருவாக்கியது, அதுவே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். "காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் - ஆனால் தென் ஆப்பிரிக்காதான் காந்தியை 'உருவாக்கியது'" என்றார் அவர்.

1925 ஆம் ஆண்டு கான்பூர் காங்கிரசு மாநாட்டில் பேசிய காந்தி "தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் என்னை உங்களுக்கு (காந்தியை இந்தியாவுக்கு) அளித்ததாகக் கூறுகிறார்கள். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். அது முற்றிலும் உண்மை. இப்போது என்னால் இந்தியாவுக்காக என்னென்ன பணிகளை எல்லாம் செய்ய முடிகின்றதோ, அவை எல்லாம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவை" என்று கூறினார்

எட்டாண்டுகள் நடந்த தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் சத்தியாகிரகப் போரில் இருபதாயிரம் இந்தியர்கள் பங்கேற்றதாக காந்தி தெரிவிக்கிறார். இவர்கள் எல்லோரும் தத்தமது வேலைகளை விட்டுவிட்டு - வருமானத்தை இழந்து - பலநாட்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். எத்தனை துன்பம் வந்தாலும் அதனை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்
இப்போராட்டத்திற்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் என்று நான்கு பேர்களை குறிப்பிடுகிறார் காந்தி.

1. சாமி நாகப்பன் படையாட்சி: காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "ஏசியாட்டிக் பதிவு சட்டத்தின்படி பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும்,  தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார் சாமி நாகப்பன் படையாட்சி.
சாமி நாகப்பன் படையாட்சி
முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். அப்போது அவரின் வயது 18. சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் சாமி நாகப்பன் படையாட்சியின் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக அடக்கம் செய்தனர்.
 நாராயணசாமி
2. நாராயணசாமி: 1910 ஆம் ஆண்டு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற இவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தண்டனைக்கு ஆளானார். எனினும் டர்பன் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்பட்ட நாராயணசாமி, அங்கிருந்து போர்ட் எலிசபெத், கேப் டவுன், மீண்டும் டர்பன் என தென் ஆப்பிரிக்க கடல் பகுதியிலேயே ஆறு வாரங்கள் அலைகழிக்கப்பட்டார். கடும் குளிரில் கப்பலின் மேல்தளத்தில் போதுமான அளவு குளிருக்கான உடையோ உணவோ இல்லாமல் வாடிய அவர் கரையிறங்கவும் அனுமதிக்கப் படவில்லை. இதனால் மரணமடந்த நாராயணசாமிக்கு அப்போது வயது 19.
அர்பத் சிங்
3. அர்பத் சிங்: சத்தியாகிரகப் போராட்ட காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது அர்பத் சிங்கின் வயது 75. முதுமையின் காரணமாக அவர் சிறையில் மரணமடைந்தார்.
வள்ளியம்மா முனுசாமி முதலியார்
4. வள்ளியம்மா முனுசாமி முதலியார்: தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று 1913 டிசம்பர் 22 அன்று தனது தாயாருடன் கைது செய்யப்பட்டார். மூன்று மாத சிறைத்தணடனைப் பெற்று காந்தியின் துணைவியார் கசுதூரிபா காந்தியுடன் சிறையில் இருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்ட போதும் வெளிவர மறுத்தார். எனினும் சத்தியாகிரக போராட்டம் வெற்றி பெற்றதால் 1914 சனவரி 11 அன்று விடுதலை ஆனார். சிறையில் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் 1914 பிப்ரவர் 22 அன்று மரணமடைந்தார். அப்போது வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் வயது 16. தமிழ்நாட்டில் அவர் 'தில்லையாடி வள்ளியம்மை' என்று அறியப்படுகிறார்.

இந்த நான்கு பேரின் உயிர்த் தியாகத்தைதான் காந்தி பலமுறை குறிப்பிட்டுள்ளார். பல வரலாற்று ஆவணங்கள் சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய இரண்டுபேரை மட்டுமே உயிர்த் தியாகம் செய்தவர்களாகக் குறிப்பிடுகின்றன.  எனினும் வரலாற்று ஆய்வாளர்கள் இன்னும் பலர் உயிர்த்தியாகம் செய்திருக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, 1913 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள், மவுண்ட் எட்ச்காமே எனும் இடத்தில் 'சத்தியாகிரகம் முடியும் வரை தோட்ட வேலைக்கு வரமாட்டோம்' என்று கூறிய ஆறு தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டதாக செய்தி பத்திரிகைகள் தெரிவித்தன.  பச்சையப்பன், ராகவன், செல்வன், குருவாடு, சுப்புராய கவுண்டர் மற்றும் பெயர்தெரியாத மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பச்சையப்பன் மனைவி
மேற்குறிப்பிட்டவர்களில் செல்வத்தின் மனைவி தமிழ் நாட்டிற்கு திரும்பியதாகவும், செல்வத்தின் மகன் அந்தோணிமுத்து காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்தில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
 செல்வத்தின் மனைவி, மகன் 
உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டமான 'தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் போராட்டம்' என்பது உண்மையில் தமிழர்களின் போராட்டமாகவே நடந்தது. அதிலும் காவிரி வடிநிலப்பகுதியை சேர்ந்த, மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதி தமிழர்கள்தான் தென்னாப்பிரிக்காவில் அதிகம் இருந்தனர். அவர்களே போராட்டத்திலும் பங்கெடுத்தனர். சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய மூன்று பேருமே மயிலாடுதுறை பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான்.

காந்தி தென் ஆப்பிரிக்காவை விட்டு 1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். 1915 ஆம் ஆண்டு சனவரி 9 ஆம் நாள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். அவரது முதல் இந்திய பயணங்களில் ஒன்றாக 1915 ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தார் காந்தி.

தமிழ் நாட்டிலிருந்து 7100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஜொகனெஸ்பர்க் நகரில், சூலு எனும் ஒரு ஆப்பிரிக்க மொழியும் ஆங்கிலமும் பேசப்படும் நாட்டில், அதிகம் கல்வி கற்காத ஏழை எளிய தமிழர்கள் காந்தியின் முதல் போராட்டத்தை முந்நின்று நடத்தினர்.

"தமிழர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக மற்ற இந்திய சமூகத்தினரை தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த நன்றிக்கடன் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழர்கள் தம்மீதான புகழ் பேரொளியை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு இந்தியர்கள் எப்படி இந்த நன்றி கடனை திருப்பியளிக்கப் போகிறார்கள்?


தமிழர்களிடம் இந்திய சமூகத்தினர் பாடம் கற்க வேண்டும். தமிழர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். தாய்நாட்டுக்காக அமைதியாக துன்பத்தை ஏற்பது எப்படி என்பதை இந்தியர்கள் தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இதை செய்யத் தவறினால் இந்தியர்கள் தமக்குத் தாமே பழியை சுமப்பார்கள்" என 22.10.1910 அன்று இந்திய ஒப்பீனியன் இதழில் எழுதினார் காந்தி.

1915 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று பர்மாவின் ரங்கூன் நகரில் தி இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த காந்தி "தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைக்கு செல்லாவிட்டால் அது தமக்கு அவமானம் என தமிழர்கள் ஒவ்வொருவரும் நினைத்தனர். பொது நோக்கிற்காக சிறை செல்லாமலிருப்பது அவமானம் என்கிற இந்த மனப்பான்மை தமிழ் சமூகத்தைத் தவிர வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரிடமும் இல்லை. நான் முதன்முதலாக தமிழ் சமூகத்தினரை சந்தித்த போது அவர்களை நினைத்து பெருமிதம் அடைந்தேன். அடுத்தடுத்த சந்திப்புகளின் அவர்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. நான் என்னை வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரை விடவும் தமிழர்களுடன் தான் இணைத்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார் காந்தி.

(அன்றைய காந்தி, 'தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்ட இந்தியா, அந்த நன்றிக்கடனை எப்படி தீர்க்கப்போகிறது?' என்று கேட்டார். இன்று???)

மகாத்மா காந்தியால் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்கும் லட்சணம் இதுதானா? 


காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையில் ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?

குறிப்புகள்:


1. மகாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இடங்களில் இருந்துள்ளார். மயிலாடுதுறை கூட்டத்தில் பேசும்போது "தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன். ஒரு தியாகியின் மனைவியை பார்த்துவிட்டேன். இன்னொரு தியாகியின் மனைவியை நான் சென்னை மாகாணத்தைவிட்டு செல்வதற்கு முன்பு பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி 3.5.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது. அவர் நாகப்பன், நாராயணசாமி ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கலாம்.


காந்தி அப்போது மயிலாடுதுறை பகுதியில் எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது தெரிந்தால் ஒருவேளை சாமி நாகப்பன் படையாட்சியின் தமிழக பூர்வீக ஊர் தெரியவரலாம். அவர் நாகப்பனின் விதவை மனைவியை சந்தித்தார் என்று சிலர் எழுதியுள்ளனர். எனினும் ஆதாரபூர்வமான தகவல் தெரியவில்லை.


2. காந்தியின் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் சில இடங்களில் சாமி நாகப்பன் படையாட்சி குறித்து தனியாகவும் சில இடங்களில் வள்ளியம்மா முனுசாமி முதலியார், நாராயணசாமி ஆகியோருடன் சேர்த்தும் பேசியிருக்கிறார்.


3. வரலாற்று ஆவணங்களில் சாமி நாகப்பன் படையாட்சி "Swami Nagappen Padayachee, Summy Nagappen, Nagappan" என்கிற பெயர்களிலும், வள்ளியம்மா முனுசாமி முதலியார் "Valliama R Munuswami,  Valliamma Munusamy Moodaliar, Valliamma Munusamy Mudliar" என்கிற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். (தில்லையாடி வள்ளியம்மை என்கிற பெயர் எங்கும் இல்லை.)  நாராயணசாமி "Narayanasamy" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.


ஆதாரம்:

1. Satyagraha in South-Africa, Mohandas K. Gandhi, Published by Yann FORGET on 26th April 2003
2. GANDHIJI'S VISION OF A FREE SOUTH AFRICA, by E. S. REDDY
3. Gandhi Out of Africa: It is in the details that thespirit of the Mahatma lives on in Johannesburg, by Dilip D’Souza  Forbes India Magazine of 26 August, 2011.
4. Rethinking Gender and Agency in the Satyagraha Movementof 1913, by Kalpana Hiralal, University of Kwazulu-Natal, South Africa
5. ABOUT GANDHI IN JOHANNESBURG, Arts, Culture and Heritage Department,Johannesburg City
6. Martyrs graves at Braamfontein, by Romaana Naidoo 08September 2011
7. Valliamma Munusamy Mudliar – Child Martyr, by Yana Pillai, Natal Tamil Vedic Society, South Africa
8. Legacy of struggle, The Hindu, 19.10.2003
9. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 10
10. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 11
11. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 12
12. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 14
13. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 16
14. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 17

2 கருத்துகள்:

ஓசூர் ராஜன் சொன்னது…

இந்தியாவில் நாகப்பன் போல மறைக்கப்பட்டவர்களே அதிகம்.உண்மைகளை மறைத்து விட்டு,பொய்களை வெளிச்சம் போட்டு, காட்டுவதே,இந்தியாவில் வரலாறாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.நல்லதொரு கட்டுரையை வழங்கி உள்ளீர்கள்.நன்றி!

SOUNDRARAJAN KSR சொன்னது…

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பதிவு. மிக்க நன்றி