Pages

புதன், ஜூலை 06, 2011

கல்வி: இருண்டுபோகும் தமிழ்நாட்டின் எதிர்காலம்!

"தரம் குறைந்தவை சமச்சீர் பாட நூல்கள்: உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்" என்றொரு செய்தியை தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது.அதில் "சமச்சீர் கல்வி முறையிலான பாடத் திட்டமும், பாடப் புத்தகங்களும் தரம் குறைந்தவைகளாக உள்ளன. எனவே, இந்தக் கல்வியாண்டில் அவற்றைப் பயன்படுத்த முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது."

'சமச்சீர் கல்வி பாட நூல்கள் தரம் குறைந்தவை' என்றால், அதற்கு முன்பிருந்த 'பழைய பாட நூல்கள் தரமானவையா?' என்கிற கேள்விக்கு என்ன பதில் என்று தெரியவில்லை.

வறுமை குறித்த சிந்தனையை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையோடு அபிசித் பானர்சி, எசுதர் டஃப்லோ என்போர் அண்மையில் எழுதிய POOR ECONOMICS எனும் சிறப்புவாய்ந்த நூலினை பார்க்க நேர்ந்தது.
அதில் அவர்கள் கல்விகுறித்த ஒரு சிந்திக்கதக்க செய்தியை தெரிவிக்கிறார்கள். அவை:

கேள்வி: ஏழைக் குழந்தைகள் ஏன் கல்வியில் சிறக்கவில்லை?

பதில்: பள்ளிகள் போதவில்லை, கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றெல்லாம் கூறுவது ஓரளவுக்குதான் உண்மை. மாறாக, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்கள், கற்பிக்கப்படும் முறை எல்லாமே 'மேல்தட்டு குழந்தைகளை' இலக்காகக் கொண்டவை. அந்த கல்வியால் ஏழைக் குழந்தைகளுக்கு பயனும் இல்லை, அது அவர்களுக்கு பழக்கமானதும் இல்லை.

(என்னுடைய மகள் ஒரு சென்னை தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறது. அதன் பொதுஅறிவு 'தனியார்' நூலில் அப்பாவின் உடை 'குர்த்த - பைசாமா' என்றும், அம்மாவின் உடை 'சல்வார் கமீசு' என்றும் கூறப்பட்டுள்ளது. நூலின் எந்த இடத்திலும் வேட்டி, புடவை இல்லை. அதைவிட - விளையாட்டையும் பந்தையும் ஒப்பிடு என்று கூறி 'ரக்பி' விளையாட்டை போட்டுள்ளார்கள்.)

கேள்வி: தனியார் பள்ளிகள் சிறப்பானவையா?

பதில்: இல்லை. தனியார் பள்ளிகள் அதிக வசதி வாய்ப்புள்ள குழந்தைகளையே தங்களது மாணவர்களாக சேர்த்துக்கொள்கின்றன. அல்லது அத்தகைய மாணவர்கள்தான் தனியார் பள்ளிகளில் சேருகின்றனர். 


இப்படி வசதிபடைத்த மாணவர்கள், வீட்டிலும் பெற்றோரின் கவனிப்பால் படிக்கக் கூடிய மாணவர்களை தேர்வில் வெற்றிபெறச்செய்து தனியார் பள்ளிகள் சிறந்தவை என்பதுபோல நாடகம் ஆடுகின்றன.

உண்மையில், சாதாரண ஏழைக்குழந்தைகளையும் தனியார் பள்ளிகளில் சேரச்செய்தால், தனியார் பள்ளிகளின் தரம் பல்லிளித்துவிடும்.

கேள்வி: பள்ளிகள் எப்படி அமைய வேண்டும்?

பதில்: ஏதோ சில குழந்தைகளை முதல் மதிப்பெண் பெற வைப்பது நல்ல கல்வி அல்ல. எல்லா குழந்தைகளையும் படிக்க வைப்பதுதான் சரியான கல்வி முறை. 


பள்ளிகள் வசதி வாய்ப்புள்ள குழந்தையை சேர்க்க வேண்டும் எனக் கருதக்கூடாது. மாறாக, எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாக வைத்து - வசதியுள்ள குழந்தைக்கு இணையாக ஏழைக் குழந்தைகளுக்கும் கற்பிக்கும் திறன் படைத்ததே நல்ல பள்ளி.

இதற்காக - பாட சுமையை குறைத்து அனைவருக்கும் தரமானக் கல்வி அளிக்க வேண்டும்.

- என்கிறது அந்த நூல்.

இதையே, மண்டல் குழு அறிக்கை வேறு விதமாகக் கூறியது.

ஒரு மாணவன் வசதிபடைத்த படித்த பெற்றோரின் மகனாகப் பிறந்து, நகர்ப்புறத்தில் வசித்து, அருகிலேயே பள்ளி, வீட்டில் மின்வசதி, நல்ல உணவு, தனியறை, நாளிதழ், பொது நூல்கள், பெற்றொரின் வீட்டுப்பாடத்துடன் படித்து 80 மதிப்பெண் எடுக்கிறான்.

மற்றொரு மாணவன் ஏழை படிக்காத பெற்றோரின் மகனாகப் பிறந்து, கிராமத்தில் வசித்து, மிகத்தொலைவில் பள்ளி, வீட்டில் மின்வசதி இல்லை, போதுமான உணவு இல்லை, குடும்பமே ஒரு அறை குடிசையில் வாழ்ந்து, நாளிதழ் நூல்கள் எதையும் காணாமல், தினமும் பெற்றொருக்கு உதவியாக வயலில் வேலை செய்து - இத்தனைக்கு பிறகும் படித்து 70 மதிப்பெண் எடுக்கிறான்.

இரண்டு பேரில் யார் மிகச்சிறந்தவன் ? என்று கேட்டது மண்டல் குழு அறிக்கை.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய வளம் என்பது அதன் மனித வளம்தான். அதுவும் 'மக்கள்தொகை அனுகூலம்' (Demographic Dividend) எனப்படுகிற - மொத்த மக்களில் அதிகமானோர் இளையோராக இருக்கும் நிலையில் இப்போது தமிழ்நாடு உள்ளது. இது இனி முதியோர் அதிகம் என ஆகும் (இப்போது சப்பானில் அதுதான் நிலை). அதற்குள் - எல்லோரையும் ஆற்றல்மிக்கவர்களாக வளர்த்தால்தான் தமிழகம் வளரும். இல்லையென்றால் எதிர்காலம் இருண்ட காலம்தான்.

எல்லா சிறுவர்களையும் ஆற்றல் மிக்க இளைஞர்களாக வளர்த்தெடுக்க கல்வியில் சமத்துவம் ஒரு கட்டாயமான முன்தேவை. தமிழக அரசின் போக்கைப் பார்த்தால் - இருண்டகாலமே காட்சியளிக்கிறது.