Pages

திங்கள், மே 05, 2014

முற்போக்கு பாசிசம்: கருத்துரிமையை சகிக்காத தமிழ்நாட்டு முற்போக்கு கூட்டம்!

பரதவ மக்களின் வாழ்க்கையை தமிழில் இலக்கியமாக வடித்தவர் ஜோ டி குரூஸ். அவரது ஒரு கருத்து தமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக - அவரது நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிடாமல் தடுத்துள்ளது தமிழ்நாட்டு பாசிச முற்போக்குக் கூட்டம்.

"அரசியல் எதிர்ப்பினையும் விமர்சனத்தையும் சகித்துக் கொள்ளாமல் நசுக்குதல்" என்பது பாசிசத்தின் ஒரு வடிவமாகும். அதையே முற்பொக்குக் கூட்டத்தினர் இப்போது மேற்கொண்டுள்ளனர்.

ஜோ டி குரூஸ் யார்?

தூத்துக்குடி மாவட்டம் உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஜோ டி குரூஸ் 'கொற்கை', 'ஆழி சூழ் உலகு' என்கிற நூல்களை எழுதியுள்ளார்.
அவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை. (மேலும் 2013ல் வெளியான மரியான் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்). இவரது கொற்கை புதினத்திற்காக 2013ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது

ஜோ டி குரூஸ் அவர்களின் 'ஆழி சூழ் உலகு' நூலை வெளியிட புதுதில்லியின் நவயானா பதிப்பகம் முன்வந்தது. அதனை வ. கீதா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். அந்த நூல் வெளியீடு இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

ஜோ டி குரூஸ் செய்த தவறு என்ன?

ஜோ டி குரூஸ் அவரது முகநூலில் "வளர்ச்சியின் நாயகர் என்று நரேந்திர மோடி" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

(Joe D’Cruz: Why do I want Mr.Narendra Modi to be the Prime Minister of India? Being a proud son of our great nation, I want my Mother India to be strong and prosperous among the world nations… Who can do that?...I am sure he will lead the country to unprecedented zenith and regain our pride and a glory greater than our past. We want our children to be proud of our rightful choice. We want generations to thank us for giving India her best PM. Hence I want Mr.Narendra Modi to become the Prime Minister of India.)

ஜோ டி குரூஸின் 'மோடி' கருத்துக்காக 'ஆழி சூழ் உலகு' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தக வெளியீடு நிறுத்தி வைத்திருப்பதாக நவயானா பதிப்பகம் அறிவித்தது. "ஜோ டி குரூஸின் நிலைப்பாடு எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது’’ என்றும் தெரிவித்தது.
நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சமூக செயல்பாட்டாளரான வ. கீதா, ‘‘ஜோ டி குரூஸ் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டின் மூலம், ஆபத்தான கொடுங்கோலர்களிடமிருந்து பரிசு வாங்க நினைக்கிறார். அதனாலேயே என் மொழிபெயர்ப்பை கைவிட தீர்மானித்தேன்’’ என்று சொல்கிறார்.

(Navayana:"Navayana had signed up to publish a translation of Aazhi Soozh Ulagu (Ocean Ringed World), the 2005 debut novel of Joe D’Cruz, who subsequently won the Sahitya Akademi award in 2013 for his second novel Korkai. The translation was done by V. Geetha, feminist writer and translator, and the English edition was due in late 2014. In the light of D’Cruz publicly endorsing Narendra Modi’s candidacy for prime-ministership, both Navayana and Geetha have decided to cancel the agreement signed with D’Cruz and withdraw the book.")


இதுகுறித்து ஜோ டி குரூஸ், ‘‘ஒப்பந்தம் கையெழுத்தாகி நூல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் நேரத்தில் மொழிபெயர்ப்பு கைவிடப்பட்டதாக வந்த அறிவிப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. நான் ஏழைகளைப் பற்றி எழுதுவதால் நான் இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?’’ என்கிறார் ஜோ டி குரூஸ்.

முற்போக்கு பாசிசம்

ஜோ டி குரூஸ் அவர்களின் கருத்து சரியா தவறா என்பது அவரவர் நிலைபாட்டைப் பொருத்தது. ஆனால், அப்படி ஒரு கருத்தை வெளிப்படுத்தும் உரிமை அவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது மிக முக்கியமான கேள்வி ஆகும்.

மேலும், "ஆழி சூழ் உலகு" நூல் வெளியிடப்பட்ட போது இதுபோன்ற ஒரு கருத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. அந்த நூலிலும் அவர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக எதுவும் கூறவில்லை. அப்படியிருக்கையில், அவரின் இன்றைய ஒரு கருத்துக்காக - நேற்றைய நூலை முடக்குவது என்ன நியாயம்?

தமிழ்நாட்டில் கவிஞர் கண்ணதாசன் என்கிற புகழ்பெற்ற கவிஞர் இருந்தார்.

அவர் "நீதிமன்றத்தின் நீதிக்கும் நீதி சொல்வார்...நெறிகெட்டு வளைந்த தெல்லாம் நிமிர்த்தி வைப்பார்" என தந்தை பெரியாரைப் புகழ்ந்து பாடல் எழுதினார்.

அதே கண்ணதாசன் "அர்த்தமுள்ள இந்துமதம்" என்கிற ஒருநூலை எழுதினார். அந்த நூல் இந்துத்வ வாதிகளின் முக்கிய பிரச்சார நூலாக இருக்கிறது.

அதே கண்ணதாசன் கிறித்தவ மதத்துக்காக "இயேசு காவியம்" என்கிற நூலையும் எழுதினார்.
மாறுபட்ட நேரங்களில் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்த கண்ணதாசனை இந்தத் தமிழ்நாடு போற்றியது. 

இன்று மாறுபட்ட கருத்து எதையும் முன்வைக்காமல் - தனது சொந்தக் கருத்தை வெளிப்படுத்திய ஜோ டி குரூஸ் தண்டிக்கப்பட்டிருக்கிறர்.

தமிழ்நாட்டின் முற்போக்கு பாசிச கும்பல் - முசோலினிக்கும் ஹிட்லருக்கும் வாரிசுகளாக மாறிக்கொண்டிருக்கின்றனர்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சமூக செயல்பாட்டாளரான வ. கீதா, ‘‘ஜோ டி குரூஸ் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டின் மூலம், ஆபத்தான கொடுங்கோலர்களிடமிருந்து பரிசு வாங்க நினைக்கிறார். அதனாலேயே என் மொழிபெயர்ப்பை கைவிட தீர்மானித்தேன்’’ என்று சொல்கிறார்.// மேற்கூறியவை சரியே.. இங்கே கருத்துரிமையை யாரும் மறுப்பதில்லை, பச்சோந்திதனத்தைதான் எதிர்க்கிறது முற்போக்காளர்களின் குரல்...

viyasan சொன்னது…

//நான் ஏழைகளைப் பற்றி எழுதுவதால் நான் இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?’’ என்கிறார் ஜோ டி குரூஸ்.///

சரியான கேள்வி. தமிழ்நாட்டில் வலையுலகில், அல்லது எழுத்துலகில் பிரபலமடைய வேண்டுமானால், வலதுசாரியாக, பெரியாரிஸ்டாக, பார்ப்பன/இந்துமத எதிர்ப்பாளராக அல்லது தலித்தாக நடிக்க வேண்டும். இதையுணர்ந்த சில ஈழத்தமிழ் ‘எழுத்தாளர்கள்’ கூட, வலையுலகில் முன்னுக்கு வருவதற்காக, இலங்கையில் அவர்களும் “தலித்” என்று நடித்தார்களாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜோ டி குரூஸ் தனது கருத்தைக் கூறியதற்காக அவரது நூலை முடக்கி, அவரைத் தண்டித்தது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். அவர் தனது கருத்தை வெளிப்படையாகக் கூறியதால், முற்போக்குகள் எல்லாம் ஒன்று கூடி அவரை வில்லனாக்கி விட்டார்கள்.