Pages

வியாழன், ஜனவரி 19, 2017

ஜல்லிக்கட்டு: பிரதமர் மோடியின் அண்டப்புளுகு!

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவசர சட்டத்தை கொண்டுவர முடியாது என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அதே போன்று, 'காளையை காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து பிரதமர் மோடி நீக்கியதாகவும், ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததாகவும்' பாஜக அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கூறிவருகிறார்.

- இவை இரண்டுமே அப்பட்டமான கட்டுக்கதைகள், அயோக்கியத்தனமான வாதங்கள் ஆகும்.

மோடியின் கட்டுக்கதை: நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியாதா?

நாடாளுமன்றத்தின் மூலமாக மக்கள் தான் சட்டத்தை உருவாக்குகிறார்கள். அந்த சட்டத்தின் படி வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். எனவே, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் படைத்தது. நீதிமன்ற வழக்கில் உள்ள விவகாரங்களிலும், நீதிமன்றம் தடைவிதித்த கருத்துகளிலும் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தால் முடியும். (A Law of Parliament can be repealed by a repealing Bill, and the rule of sub judice will not apply to such Bill.)

தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, அதை எதிர்த்து முதல் அரசியல் சாசன திருத்தத்தை செய்தது இந்திய அரசு. அதன்பிறகு, நீதிமன்ற வழக்குகளில் உள்ள எத்தனையே விவகாரங்களில் புதிய சட்டங்களை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அவ்வாறு, மோடி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வழக்கு நிலுவையில் உள்ளபோதே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றியதை - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்காக அவசர சட்டம் கொண்டு வரலாம், தமிழர்களுக்காக கொண்டுவர முடியாதா?
உண்மையில், காங்கிரசு அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிரான திருத்தத்தை கொண்டுவந்தது. மோடி அரசு அதனை தொடர்கிறது. தேசிய கட்சிகளுக்கு தமிழர்களின் பண்பாடு என்றாலே வலிக்கிறது. எப்படியாவது தமிழ் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்கிற இனப்படுகொலை நோக்கம் தவிர, இந்தியப் பேரரசின் ஜல்லிக்கட்டு எதிர்ப்புக்கு வேறு காரணம் எதுவும் இல்லை.

பாஜகவினரின் கட்டுக்கதை: காளையை நீக்கினார்களா?

 '2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் காளையை காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து பிரதமர் மோடி நீக்கியதாகவும், ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததாகவும்' பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிவருகிறார். இது ஒரு பச்சைப் பொய் ஆகும்.

காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளான (shall not be exhibited as performing animal) கரடி, சிங்கம், புலி, குரங்கு, சிறுத்தை ஆகிய விலங்குகளுடன் காளை மாடும் சேர்க்கப்பட்டதை கண்டித்துதான் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்தன. (காளையை சேர்த்தவரகள் - யானை, ஒட்டகம், குதிரையை இந்த தடைப்பட்டியலில் ஏன் சேர்க்கவில்லை?). இந்தப் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டின் கோரிக்கை.

ஆனால், 2016-ம் ஆண்டு ஜனவரி 7 ஆம் நாள் மோடி அரசு வெளியிட்ட அறிவிக்கையில் (Ministry of Environment and Forest, Notification number G.S.R. 13(E) 7.1.2016), காளை மாட்டை நீக்கி உத்தரவிடவில்லை. மாறாக, காளைகளை ஜல்லிக்கட்டில் பயன்படுத்த விதிவிலக்கு அளிப்பதாக கூறியிருந்தார்கள் (bulls may be continue to be exhibited as a performing animal). இந்த விதிவிலக்கை தான் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
மோடி அரசு வெளியிட்ட அறிவிக்கை 7.1.2016
கடந்த ஆண்டே, தடைவிதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கியிருந்தால் - ஜல்லிக்கட்டுக்கு தடை நேர்ந்திருக்காது. அப்படி செய்யாமல் ஏமாற்றிவிட்டு - இப்போது, 'தடைப் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கினோம்' என்று பச்சையாக பொய்சொல்கிறார் பாஜக அமைச்சர்.

பாஜகவின் போலி வேடம்

ஆதிசேஷனுக்கு ஆயிரம் நாக்கு என்பார்கள். பாஜக - சங்கப்பரிவார கும்பலுக்கும் ஆயிரம் நாக்குதான். ஜல்லிக்கட்டை எதிர்க்க மேனகா காந்தி, மாணவர் போராட்டத்தை எதிர்க்க சுப்ரமணியன் சாமி, சப்பைக்கட்டு கட்ட பொன். ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டை ஆதரிக்க தருண் விஜய் - என பலவேஷம் கட்டி ஆடுகிறார்கள்.

மோடி நினைத்தால் இன்றைய தினமே அவசர சட்டத்தைக் கொண்டுவர முடியும். அதனை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கவும் முடியும். அதற்கு மேலும் நீதிமன்றம் தலையிடும் என்று நினைத்தால் - அச்சட்டத்தை 'நீதிமன்றம் தலையிடாத' அரசியல் சட்டபிரிவில் (இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950, அட்டவணை 9) சேர்க்கவும் முடியும். 

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதுதான் உண்மை. ஆனால், தமிழனுக்கு என்று தனி அடையாளம், தனி பண்பாடு இருக்கிறது என்பதையே ஏற்க மறுத்து, ஏக இந்திய பண்பாட்டில் தமிழர்களை கலக்கத்துடிக்கும் இனவெறி இந்திய தேசியவாதிகள் இதனை செய்ய மாட்டார்கள் என்பதே உண்மை.

தொடர்புடைய இடுகைகள்:






கருத்துகள் இல்லை: