Pages

திங்கள், ஏப்ரல் 10, 2017

எச்சரிக்கை: வன்னியர்களை பலிகொடுக்கத் துடிக்கும் மதவெறி கும்பல்!

'கிறிஸ்தவர்களுடனும் இஸ்லாமியர்களுடனும் வன்னியர்கள் போரிட வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்கிற இடஒதுக்கீட்டை அகற்ற வேண்டும்' என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பாரதீய ஜனதா கட்சி 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறது. 

'கிருஸ்துவ வன்னியர்களை வன்னியர் சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்னியர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய வேண்டும்' என்று சத்திரியர் சாம்ராஜயம் எனும் பாஜக துணை அமைப்பின் கூட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (9.4.2017) அன்று பகிரங்கமாக பேசியிருக்கின்றனர். (வீடியோ ஆதாரம் உள்ளது)

இது வன்னியர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும் தந்திரம். பாஜக மற்றும் முன்னேறிய சாதியினரின் சுயநலத்துக்காக, தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, வன்னியர்களை இஸ்லாமியர்களுடனும், கிறிஸ்தவர்களுடனும் கலவரத்தில் இறக்கிவிட செய்யப்படும் சதி இதுவாகும். இந்தச் சதிக்கு வன்னியர்கள் எவரும் பலியாக மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

வன்னியர்களும் மதமும் - ஓர் வரலாற்றுப் பார்வை

வன்னியர் என்கிற அடையாளத்துக்கு மதம் தடையாக இருந்தது இல்லை. வன்னியர்கள் எப்போதும் - அதாவது எப்போது சாதி தோன்றியதோ அப்போதிருந்து - வன்னியர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், வன்னியர்கள் எல்லோரும் எல்லா காலத்திலும் ஒற்றை மத அடையாளத்துடன் மட்டுமே இருக்கவில்லை என்பதே உண்மை.
வன்னியர்கள் அக்னியில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னியர்களுடைய தனிப்பட்ட இனக்குழு அடையாளம். வன்னியர்கள் மட்டும்தான் நெருப்பில் தோன்றியதாகக் கருதப்படும் திரௌபதி அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்துகின்றனர். இந்துக்களில் மற்றவர்கள் இதனைச் செய்வது இல்லை.

சமண மதமும் வன்னியர்களும்

இந்து மதம் என்கிற ஒன்று உருவாவதற்கு முன்பிருந்தே வன்னியர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்துமத ஆதிக்கம் வருவதற்கு முன்பு சமணமும் பவுத்தமும் மேலோங்கி இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை. (வன்னியர்கள் பள்ளி என்று அழைக்கப்பட்டதற்கு அவர்கள் சமணர்களாக இருந்ததே காரணம் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்).

வன்னிய புராணத்தின் கதாநாயகனாக இருப்பது வாதாபி வென்ற நரசிம்மவர்ம பல்லவன். வன்னியர்களின் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நரசிம்ம வர்மனின் தந்தை மகேந்திரவர்மன் முதலில் சமணராக இருந்து பின்னர் இந்து மதத்திற்கு மாறினார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

பௌத்த மதமும் வன்னியர்களும்

பல்லவ பாரம்பரியத்தில் வந்தவர்கள் இன்றைக்கும் வன்னியர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பவுத்த மதத்தை பரப்பிய 'போதி தர்மன்' அதே பல்லவ வம்சம்தான். அந்த போதி தர்மன் ஒரு பவுத்தனாக இருந்தார்.

இஸ்லாமும் வன்னியர்களும்

'சேரமான் பெருமாள் நாயனார்' என்பவர் ஒரு வன்னிய மன்னர் என்று கருதப்படுகிறது.  நபிகள் நாயகம் வாழ்ந்த அதே காலத்தில் சேரமான் பெருமாள் மக்காவுக்கு சென்று நபிகளை நேரில் சந்தித்தவர். அவர்தான் இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை பரப்பினார்.
கேரளாவில் சேரமான் மசூதி
அவரது பெயரால் அமைந்த சேரமான் மசூதிதான் இந்தியாவின் முதல் மசூதி ஆகும். அதுவே உலகின் இரண்டாவது மசூதியும் கூட. சேரமான் என்பவரை "பள்ளி பாண பெருமாள்" என்றும் கூறுகிறார்கள். சேலம் கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா அவர்கள் 'சேரமான் பெருமாள் நாயனார்' பெயரில்தான் இந்திய விடுதலைக்கான தீவிரவாதிகள் அமைப்பை உருவாக்கினார்.

சேரமான் பெருமான் அரேபிய மண்ணிலேயே மறைந்தார் என்று கருதப்படுகிறது. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஓமன் நாட்டின் சலாலா நகரில் தர்காவாக உள்ளது.  (Dargah Name: Hazrat Syedina Tajuddin (Razi Allahu Thaalahu Anhu), Also famous as Cheraman Perumal ( Indian King) in Salalah, Sultanate of Oman)

திரௌபதி அம்மன் வழிபாட்டில் போத்துராஜா போர்மன்னன் மற்றும் முத்தால ராவுத்தன் ஆகியோர் திரௌபதியின் பாதுகாவலனாகக் கூறி வழிபடப்படுகின்றனர். இதில் போத்துராஜா என்பது பல்லவ மன்னரைக் குறிக்கும். முத்தால ராவுத்தன் என்பது ஒரு முஸ்லீம் வீரனைக் குறிக்கிறது. இந்த வழிபாட்டு முறை வன்னியர்களின் தனிப்பட்ட பண்பாடாகும்.
இஸ்லாமிய தர்காவில் திரௌபதி கரகம், பெங்களூரு
திரௌபதி அம்மன் வழிபாடு மிகப்பெரிய அளவில் நடப்பது பெங்களூரில் தான். அங்கு பெங்களூருவின் பிரதான பகுதிகளில் நகர்வலமாக செல்லும் திரௌபதி கரக ஊர்வலம், Hazrat Takwal Mastan எனும் இஸ்லாமிய தர்காவில் நின்று, மூன்று முறை சுற்றி, ஒரு எலுமிச்சைப் பழத்தை தர்காவிற்கு அளித்து, அங்கிருந்து ஒரு எழுமிச்சைப் பழத்தை வாங்கிச் செல்வது பாரம்பரிய வழக்கமாகும்.

கிறித்தவ மதமும் வன்னியர்களும்

காடவராயர் வம்சத்தில் வந்த விருதாச்சலம் முகாசாபரூர் கச்சிராயர்கள், தமிழ்நாட்டில் கிறித்தவத்தை பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் வீரமாமுனிவரை ஆதரித்தார்கள். அதற்காக கோணான் குப்பத்தில் 18 ஆம் நூற்றாண்டில் புனித பெரியநாயகி தேவாலயத்தை அமைத்தார்கள். இன்றைக்கும் இந்தக் கிறித்தவ கோவில் விழாக்களில் இந்து கச்சிராயர்களே மதிக்கப்படுகின்றனர்.
கச்சிராயர் கட்டிய கோணான் குப்பம் புனித பெரியநாயகி தேவாலயம்
இந்த தேவாலயத்தில் ஆண்டு தோறும் தேர் திருவிழா நடத்தப்படும். அப்போது வீரமாமுனிவரை ஆதரித்து கோயில் கட்ட இடமும் கொடுத்த முகாசா பரூர் பல்லவ அரசர்களை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசர் அரண்மனையில் இருந்து அரச உடையுடன்  மேள தாள முழக்கங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வருவார். அவர் வடம் தொட்ட பின்பே தேரோட்டம் தொடங்கும். இந்த பாரம்பரிய நிகழ்ச்சி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படையாட்சி கட்டிய கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயம்
இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் எனும் கிறித்தவ தேவாலயத்தை கட்டியவர் தொண்டி சீனிக்குப்பன் படையாட்சி என்பவர்தான்.

இத்தாலியில் ரோம் நகரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் மிக உயர்ந்த பதவியான போப்பாண்டவருக்கு அடுத்ததாக உள்ள பதவி கார்டினல் என்பதாகும். கார்டினல்கள்தான் போப்பாண்டவரையே தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் இருந்து கார்டினலாக தேர்வான ஒரே நபர் மறைந்த கர்தினால் லூர்துசாமி. ஒரு வன்னியர் கிறித்தவ மதத்தின் மிக உயரிய பதவியை அடைந்ததைப் போற்றி கணல் பத்திரிகையில் எழுதப்பட்டது.

மருத்துவர் அய்யா அவர்கள் 1980 ஆம் ஆண்டு அனைத்து வன்னிய தலைவர்களையும் ஒன்று சேர்த்து வன்னியர் சங்கத்தை உருவாக்கிய போது, அதில் முக்கியமாக இடம் பெற்றிருந்தவர் முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராயப்பா ஐ.ஏ.எஸ்., இவர் ஒரு கிறித்தவ வன்னியர்.

எனவே, வன்னியர் என்கிற அடையாளத்திற்கு மதம் ஒரு தடையாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. 

மருத்துவர் அய்யாவும் - கிறித்தவ வன்னியர்களும் 

திண்டுக்கல்லில் உள்ள மிகப்பெரிய தேவாலயமான புனித வளனார் ஆலயத்தில் 'கிறித்தவ வன்னியர்களுக்கும் - கிறித்தவ ஆதிதிராவிடர்களுக்கும்' இடையே சர்ச்சை உருவானது. இதனால், வன்னியர்கள் வழிபட்டுவந்த புனித வளனார் தேவாலயம் மூடப்பட்டது.

2000 ஆவது ஆண்டுவாக்கில், மூடப்பட்ட புனித வளனார் தேவாலயத்தை திறக்க வேண்டும் என்கிற போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது மருத்துவர் அய்யா அவர்கள் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தார்கள்:

"1. மூடப்பட்ட தேவாலயத்தை உடனடியாக திறக்காவிட்டால், மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் புனித வளனார் தேவாலயம் திறக்கப்படும்.

2. தமிழ்நாட்டு கிறித்தவர்களில் வன்னியர்கள் ஒரு முதன்மையான சமுதாயமாக இருப்பதால் - பிஷப் எனப்படும் மறைமாவட்ட ஆயர்களாக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் நியமிக்க வேண்டும்" - என்கிற கோரிக்கைகளுக்காக மருத்துவர் அய்யா போராடினார்கள்.
மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டத்தை தொடர்ந்து புனித வளனார் தேவாலயம் திறக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், வன்னியர் சமுதாயத்தில் ஒரு பிஷப் கூட இல்லை என்கிற கோரிக்கையையும் போப்பாண்டவரின் வாட்டிகன் அலுவலகம் கவனத்தில் கொண்டது. இது குறித்து அப்போதைய வாட்டிகன் பிரதிநிதி கார்டினல் சைமன் லூர்துசாமி அவர்கள் திண்டுக்கல் வந்து ஆய்வு செய்தார் (அவரும் ஒரு வன்னியர்).
கர்தினால் லூர்துசாமி
இதைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மறை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு, வன்னியர் ஒருவர் பிஷப் ஆக நியமிக்கப்பட்டார். ரோமன் கத்தோலிக்க மதத்தில் தமிழகத்தில் 20 மறை மாவட்டங்கள் உள்ளன. இவை மூன்று உயர் மறைமாவட்டங்களாக (ஆர்ச் பிஷப்) பிரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் அய்யா அவர்கள் போராடிய போது, வன்னியர் சமூகத்தில் ஒரே ஒரு பிஷப் கூட இல்லை. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் 4 பிஷப்கள் வன்னியர்கள். (20 மறை மாவட்டங்களும் 3 உயர்மறை மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளன. பிஷப்களுக்கும் மேலான இந்த 3 ஆர்ச் பிஷப் பதவிகளில்  2 இல் வன்னியர்கள் உள்ளனர்.)

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் ஒட்டுமொத்த 20 மறைமாவட்டங்களுக்கும் தலைவராகவும் - பிஷப் கவுன்சில் தலைவர் எனும் உயர் பொறுப்பில் வன்னியரான அந்தோணி பாப்புசாமி உள்ளார்.

மருத்துவர் அய்யா அவர்களின் அரசியல் போராட்டங்களின் விளைவாகவே கத்தோலிக்க கிறித்தவ மதத்தில் வன்னியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கிறித்தவ வன்னியர்கள் கருதுகின்றனர்.

"திண்டுக்கல் - கரியாம்பட்டி" 

2013 ஆம் ஆண்டில் திண்டுக்கல் அருகே கரியாம்பட்டியில் வன்னிய பெண்ணை கேலி செய்தது தொடர்பாக "வன்னியர் - அருந்ததியினர்" இடையே மோதல் நிகழ்ந்தது. இந்த சர்ச்சையில் தொடர்புடைய வன்னியர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். அருந்ததியினரும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்கள் என்பதால் திண்டுக்கல் பகுதியில் உள்ள வன்னிய கிராமங்களின் ஊர்த்தலைவர்கள் உடனடியாக ஒன்று கூடினர்.

திண்டுக்கல் பகுதியில் சுமார் மூன்று லட்சம் வன்னியர்கள் உள்ளனர். அவர்களில் 75% கிறித்தவர்கள். திண்டுக்கல் பகுதி வன்னியர்களில் மிகப் பெரும்பான்மையினர் கிறித்தவர்களாக இருந்தாலும், அனைத்து கிறித்தவ வன்னிய கிராம ஊர்த்தலைவர்களும், இந்து வன்னியர்களுக்கு ஆதரவாக திரண்டனர்.

எந்த மதத்தில் இருந்தாலும் நாங்கள் வன்னியர்கள் என்கிற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபட்டதனால் அப்பகுதியில் வன்னியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

"கற்றுக்கொண்ட பாடம்"

# கரியாம்பட்டி போராட்டத்தில் "இந்துக்களுக்குள்" வன்னியர் - அருந்ததியினர் இடையே சண்டை, நமக்கேன் வம்பு என கிறித்தவ வன்னியர்கள் ஒதுங்கிப் போகவில்லை.

# திண்டுக்கல் போராட்டத்தில் "கிறித்தவர்களுக்குள்" வன்னியர் - ஆதிதிராவிடர் இடையே சண்டை, நமக்கேன் வம்பு என இந்துவான மருத்துவர் அய்யா அவர்கள் ஒதுங்கிப் போகவில்லை.

மதத்தைத் தாண்டி, வன்னியர்கள் எல்லோரும் உறவினர்களாக ஒன்றுபட்டு நின்றார்கள். ஒற்றுமையே வலிமை என்பதை நிரூபித்தார்கள்.

மதவெறி கலவரத்தில் வன்னியர்களா?

'கிருஸ்துவ வன்னியர்களை வன்னியர் சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்னியர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய வேண்டும்' என்று சத்திரியர் சாம்ராஜயம் எனும் பாஜக துணை அமைப்பின் கூட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (9.4.2017) அன்று பகிரங்கமாக பேசப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.

வன்னியர்கள் எல்லா மாற்றுக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். அரசியல் ரீதியில் எதிர்எதிர் இடங்களில் இருந்தாலும், அவர்களுக்குள் உறவினர் என்கிற அடிப்படையில் மோதல் இல்லை. மருத்துவர் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டபோது, பல மாற்றுக்கட்சி வன்னியர்கள் துடிதுடித்தார்கள்.

ஆனால், பாஜக ஆதரவு வன்னியர்கள் மட்டும்தான் 'இந்துக்கள் என்றும் கிறித்தவர்கள் என்றும்' வன்னியர்களுக்குள் பிளவினை ஏற்படுத்த துடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அப்பாவி வன்னியர்களை அடியாட்களாக மாற்றத் துடிக்கின்றனர். 
முப்பதாண்டுகளுக்கு முன்பு, தெலுங்கானா போன்று இடதுசாரி நக்சலைட் தீவிரவாதிகளாக வன்னியர்கள் மாறாமல் தடுத்து அவர்களை நல்வழிக்கு திருப்பியவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அது போல இப்போது மதவெறி அரசியலுக்காக வன்னியர்களை பலிகொடுக்கும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

‘மதவெறி அரசியலின் மூலமாக பாஜக வளர வேண்டும் என்பதற்காக வன்னியச் சாதியை பலி கொடுக்கத் துடிக்கும்' இந்த மாபெரும் சதியை மருத்துவர் அய்யா அவர்கள் முறியடிப்பார்கள்.

கருத்துகள் இல்லை: