Pages

புதன், ஜூன் 20, 2012

நம்பள்கி எனும் வேடிக்கை பதிவர்! - இந்தியாவில் புகைபிடித்தால் தப்பேயில்லை!!

பதிவுலகில் 'நம்பள்கி' எனும் ஒரு பதிவர் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் இருக்கிறாராம். மருத்துவராம்.  அவர் "பொது இடத்தில சிகரெட் பிடிக்கக்கூடாது! ஆனால்,கழியலாம்!" என்று ஒரு பதிவு எழுதினார்.

அதில் "டே, முட்டாப் பசங்களா, நம்ம ஜனங்களுக்கு வேண்டிய Roti, Kapda & Makaan-கிடைக்க வழி செய்யுங்கள்! அதை விட்டு விட்டு இதுக்கு வந்துட்டானுங்க! சிகரெட் குடித்தால் தப்பாம். இதைக் கேட்டுட்டு எதுல சிரிக்கறது என்று தெரியவில்லை!" என்று எழுதினார்.

எதற்கு எதனை எடுத்துக்காட்டாக ஒப்பிடுவது என்று தெரியாமல் 'குண்டக்க மண்டக்க' எழுதுவதற்கு 'நம்பள்கி நினைவுகள்' பதிவை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

பெரிய மருத்துவமனைகளில் நீரிழிவுக்கு தனிப்பிரிவு, இதய பாதிப்புகளுக்கு தனிப்பிரிவு, பல்லுக்கு தனிப்பிரிவு, கண்ணுக்கு தனிப்பிரிவு, மூச்சுக்குழல் நோய்களுக்கு தனிப்பிரிவு - எனப் பல தனிப்பிரிவுகளும் அதற்கென்று சிறப்பு மருத்துவர்களும் உள்ளனர். தமிழ்நாடு அரசாங்கத்தில் விவசாயம், பொதுப்பணி, மின்சாரம், நலவாழ்வு, போக்குவரத்து எனப் பல தனித்துறைகளும் அதற்கென்று அமைச்சர்களும் உள்ளனர். பள்ளி பாடநூலில் மொழி, கணக்கு, இயற்பியல், வேதியல் எனப் பல தனிப்பாடங்களும் அதற்கென்று சிறப்பு ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

இப்போது திடீரென்று ஒருவர் வந்து - "மருத்துவ மனைகளில் பல பிரிவுகள் வேண்டாம், எல்லா மருத்துவர்களும் நீரிழிவு நோய்க்கு மட்டுமே சிகிச்சை பாருங்கள். மற்ற நோய்களை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்றும் - "தமிழக அரசாங்கத்தில் பல துறைகள் வேண்டாம், எல்லா துறைகளும் போக்குவரத்தை மட்டுமே பாருங்கள். மற்ற துறைகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்றும் - "பள்ளி பாடநூலில் பல பாடங்கள் வேண்டாம், எல்லா ஆசிரியர்களும் இயற்பியல் மட்டுமே கற்பியுங்கள். மற்ற பாடங்களை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்றும் - சொன்னால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு கூத்துதான் இது!

கழிவறை இல்லாமை - புகை பிடித்தல்: இரண்டு பெரும் சிக்கல்கள்

கழிவறை இல்லாமை - புகை பிடித்தல்: இவை இரண்டுமே முக்கியமான சிக்கல்கள்தான். இரண்டுமே உடல்நலம் தொடர்பானவை, இரண்டுமே உலகளவில் 'உலக சுகாதார நிறுவனத்தால்' ஒருங்கிணைக்கப் படுபவை. இரண்டுமே இந்திய மக்களை கடுமையாகப் பாதிப்பவை.

'அனைவருக்கும் கழிப்பிட வசதிகள் வேண்டும்' என்பது ஒரு மிகப்பெரிய இயக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் தொடங்கி, கிராம பஞ்சாயத்து வரை அதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த முயற்சிகள் உரிய இலக்கை அடையவில்லை என்பதற்காக மற்ற எந்த முயற்சியும் கூடாது என்பது என்ன தத்துவமோ!
அதே போன்றுதான் - 'புகையிலைத் தீமையை ஒழிக்க வேண்டும்' என்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் தொடங்கி, கிராம பஞ்சாயத்து வரை அதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த முயற்சிகளும் கூட உரிய இலக்கை அடையவில்லை. அதற்காக மற்ற எந்த முயற்சியும் கூடாது என்று கூறமுடியுமா?

இந்த இரண்டு சிக்கலில் எது மிக முக்கியமானது என்று முடிவெடுக்க முடியாது. இதற்கான பதில் ஆளுக்கேற்ப மாறுபடலாம்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்களைக் கேட்டால் "கழிப்பறை இல்லாததுதான் முக்கிய சிக்கல். ஏனெனில் ஏராளமான குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் சாகிறார்கள்" என்பார்கள். (எந்த குழந்தைகள் மருத்துவரும் புற்றுநோய் முக்கியமான வியாதி இல்லை என்று சொல்லமாட்டார்.)
அதுவே சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்களைக் கேட்டால் "புகையிலைதான் முக்கிய சிக்கல். ஏனெனில் ஏராளமான மக்கள் புற்றுநோயினால் சாகிறார்கள்" என்பார்கள். (எந்த புற்றுநோய் மருத்துவரும் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிப்பது முக்கியமான வியாதி இல்லை என்று சொல்லமாட்டார்.)
பொதுமக்களின் பார்வையில் இரண்டுமே முக்கிய சிக்கலாகத்தான் இருக்க முடியும். ஒருமனிதனுக்கு கண், காது, வாய் மூன்றுமே முக்கியமானதுதான். இதில் ஏதாவது ஒன்றுதான் முக்கியம் என்று கருதினால் - அந்தக்கருத்தை என்னவென்று சொல்வது?

கழிப்பறை இல்லாமை - ஒரு கேடு

உலகிலேயே கழிப்பிட வசதி இல்லாதோர் மிக அதிகம் உள்ள நாடு இந்தியாதான். உலகெங்கும் 260 கோடி பேர் போதுமான துப்புரவு வசதி இல்லாமல் வாழ்கின்றனர். இதில் 120 கோடி பேர்  திறந்தவெளியையே கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர்.

இந்திய மக்களில் 58% மக்கள், அதாவது சுமார் 63 கோடி பேர் திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். விடுதலை அடைந்து 64 ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரும்பான்மை மக்கள் கழிப்பிடம் கூட இல்லாமல் இருப்பது ஒரு தேசிய அவமானம்.
இந்த கழிப்பிடக் கொடுமையால் தினமும் 1000 குழந்தைகளுக்கும் மேல் வயிற்றுப்போக்கு நோயால் மாண்டு போகின்றனர்.

ஐ.நா. பொதுச்சபை - அனைவருக்கும் துப்புரவு வசதி என்பதை 2000 ஆவது ஆண்டிலேயே "புத்தாயிரமாண்டு இலக்கு 7.இ" என்ற பிரிவில் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையால் உருவாக்கப்பட்ட புத்தாயிரமாண்டு இலக்குகளில் 1990 - 2015 ஆம் ஆண்டிற்கு இடையே மேம்படுத்தப்பட்ட கழிப்பிட வசதிகள் கிடைக்காதோரின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும்" என்பது தெளிவானதொரு இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

Millennium Development Goals: 

Target 7C: Halve, by 2015, the proportion of the population without sustainable access to safe drinking water and basic sanitation.

Measurable indicator: Proportion of population using an improved sanitation facility

புகையிலை - மற்றொரு கேடு

உலகிலேயே புகையிலை பயன்படுத்துவோர் மிக அதிகம் உள்ள இரண்டாவது நாடு இந்தியாதான் (முதலிடம் சீனா). புகையிலைதான் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி. புகைபிடிப்பதாலும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலும், அடுத்தவர் விடும் புகையை சுவாசிக்க நேருவதாலும் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம்பேர் அகால மரணமடைகின்றனர். இந்தியாவில் மட்டும் இதனால் 10 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறந்து போகிறார்கள். தினமும் 2500 இந்தியர்களை புகையிலைக் கொலை செய்கிறது.
உலகிலேயே வாய்ப்புற்றுநோய் மிக அதிகமாக உள்ள நாடு இந்தியா. உலகின் ஒட்டுமொத்த வாய்ப்புற்றுநோயில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் தாக்குகிறது. 90% வாய்ப்புற்று நோய்க்கு குட்கா, பான்மசாலா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகைப் புகையிலையே காரணம்.

தற்போது புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி வருபவர்களில் - இரண்டுபேரில் ஒருவர் அதனாலேயே பாதிக்கப்பட்டு கடும் துன்பத்திற்கு பிறகு கொடிய மரணத்தை சந்திப்பார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. அதாவது, இப்போது நமது கண்ணெதிரில் இரண்டுபேர் புகையிலையப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்றால், அதில் ஒருவரை அந்த புகையிலையே கொடூரமாகக் கொலை செய்துவிடும்.

ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான உலக நலவாழ்வு அமைப்பால் உருவாக்கப்பட்ட 2004 ஆம் ஆண்டின் 'புகையிலைக் கட்டுப்பாட்டு உடன்படிக்கை' உலக நாடுகள் புகையிலைத் தீமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது.

'நம்பள்கி'யின் சவால்

நிலைமை இப்படி இருக்கும்போது - இந்தியாவில் மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய "நம்பள்கி" பதிவர் ""டே, முட்டாப் பசங்களா, நம்ம ஜனங்களுக்கு வேண்டிய Roti, Kapda & Makaan-கிடைக்க வழி செய்யுங்கள்! அதை விட்டு விட்டு இதுக்கு வந்துட்டானுங்க! சிகரெட் குடித்தால் தப்பாம். இதைக் கேட்டுட்டு எதுல சிரிக்கறது என்று தெரியவில்லை!"" என்று கூறியதால் --

-- அதற்கு நான் "இப்படி ஒரு முட்டாள் தனமான கருத்தை முன்வைக்கும் உங்களது சுயபுத்தியை நினைத்து வியக்கிறேன்" என்று சொல்லி புகைபிடிப்பதன் தீமைகளை விளக்கினேன்.

அதற்கு அவர் "உங்களுக்கு பதில்கள் கொடுக்கிறேன்! எனது வரும் இரண்டு பதிவுகளில். ஒன்றில், நான் ஒரு மருத்துவர் என்ற முறையில்! இரண்டில், நான், ஒரு மெட்ராஸ் தமிழன் என்கிற முறையில்! இந்த இரண்டு பதிவிலும், நீங்கள், அருள் கலந்து கொள்ளவேண்டும்!....எனது பதிலில், வேகம் இருக்கும், நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்! சொல்வீர்கள் என்று எதிர்பார்கிறேன்!" என்று கூறியிருந்தார்.

அதன்படி "இந்தியாவில் புகைபிடித்தால் தப்பேயில்லை; தொடர், பகுதி 1" எனும் பதிவை நம்பள்கி இட்டுள்ளார்.

அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"நமது விவாதப் பொருள், “இந்தியாவில் சிகரெட் குடிக்கலாமா? கூடாதா?” என்பது தான். என்னுடைய வாதம் "கட்டாயம் இந்தியாவில் சிகரெட் குடிக்ககலாம்!""...

"ஒன்றும் அறியா பச்சிளம் பாலகர்கள் பருவ வயது அடையுமுன் (திறந்தவெளிக் கழிப்பிட பாதிப்பால்) பலியாவதை தடுக்கும் வரை, சிகரெட் குடிப்பது தவறு என்று கூறுபவர்களை தண்டியுங்கள் நீதிபதி ஐயா அவர்களே! அல்லது குறைந்த பட்சம் அவர்கள் வாய்க்கு நிரந்தர பிளாஸ்திரியாவது போடுங்கள் நீதிபதி அவர்களே!" -- என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பள்கி பதிவிற்கு எனது பதில்:

நீ இடது பக்கம் போகிறாயா? - வலது பக்கம் போகிறாயா?
கோக் வேணுமா? - பெப்சி வேணுமா?
கே.எஃப்.சியா? - மெக்டொனால்டா?
ரஜினியா? - கமலா?
அம்மாவா? - கலைஞரா?
குடியரசுக் கட்சியா? - ஜனநாயகக் கட்சியா?

--- மேற்கண்ட கேள்விகளில் எல்லாம் அறிவுக்கு பொருத்தமான ஒரு நியாயம் தெரிகிறது.

ஆனால், "மலக் குழியில் இறங்குவதா? அல்லது சிகரட் குடிப்பதா?" என்பதில் ஒரு தொடர்பும் பிடிபடவில்லையே! மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதானோ?!

என்னைப் பொறுத்தவரை, கழிப்பரை வசதி இல்லை என்பதால் சாவதும், புகைபிடித்து சாவதும் மக்களைப் பாதிக்கும் இரண்டு சிக்கல்கள் என்றே கருதுகிறேன். இரண்டுக்கு எதிராகவுமே நான் இருக்கிறேன். அதுமட்டுமின்றி, தண்ணீர் இல்லாமை, வீட்டுவசதி இல்லாமை, மருத்துவ வசதி இல்லாமை, கல்வி நிலையங்கள் போதாமை, சாலை விபத்துகள், சாராயச் சாவுகள் என பலப்பல கேடுகள் உள்ளன.

இந்தியாவில் கழிப்பறைகள் இல்லை என்பதற்காக ஒரு பதிவிட்டால் அதனை நான் ஆதரித்துதான் எழுதுவேன். ஆனால், இதற்காக "புகைபிடிப்பதை" என்னால் ஆதரிக்க முடியாது. (எனது ஆதரவு, எதிர்ப்புக்கு எந்த மதிப்பும் இல்லை).

தெருவில் பேண்டு வைப்பதைவிட சிகரெட் சுகாதாரக் கேடு "பெரியதென்று" என்று நான் கூறவில்லை. ஆனால், பொதுஇடத்தில் புகைபிடிப்பது தெருவில் பேண்டு வைப்பதைவிடக் "குறைவான" கேடு அல்ல என்று என்னால் கூறமுடியும். பொதுஇடங்களில் புகைபிடிக்கும் பழக்கத்தால் புகைபிடிக்காத அப்பாவிகள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அது சமூகநீதிக்கும் எதிரானது.

மற்றபடி, பொதுஇடங்களில் கழியக்கூடாது என்கிற உங்களது கருத்து நியாயமானது. அதற்காக போராடுபவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். அதே நேரத்தில், நீங்கள் எதற்காக போராட வேண்டும் என்று நான் உத்தரவிட முடியாது. நான் எதற்காக போராட வேண்டும் என்று நீங்கள் உத்தரவிட முடியாது.

என்னுடையக் கருத்து மிகத்தெளிவானது. இந்தியாவில் பொதுஇடங்களில் புகைபிடிப்பது தவறு, சட்டப்படி குற்றம். இந்த தவறை ஆதரிப்போர் இந்திய இறையாண்மைக்கும் நியாயத்துக்கும் சமூகநீதிக்கும் பொதுநலனுக்கும் எதிரானவர்கள்.

நான் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். புகையிலையால் பாதிக்கப்பட்டோர் அதுபற்றி என்ன சொல்கின்றனர் என்று இங்கே காண்க: http://www.vovindia.org/

குறிப்பு: 14.6.2014 அன்று பதிவிடப்பட்ட இந்தப் பதிவு கவனக்குறைவால் நீக்கப்பட்டு, மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு உதவியாக இருந்த www.haaram.com இணையதளத்திற்கு நன்றி.

2 கருத்துகள்:

Jayadev Das சொன்னது…

சிகரெட், கண்ட கண்ட இடத்தில் பேண்டு வைப்பது ரெண்டுமே சீரியசான சுகாதார சீர்கேடுதான், நீ பேண்டு வைப்பதை நிறுத்து, நான் என் வாயில் கொள்ளி வைப்பதை நிறுத்துகிறேன் என்பதில் நியாயமே இல்லை. இந்தியால் பிறந்து படித்து வளர்ந்து, ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் மேற்க்கத்திய நாடுகளுக்கு கூலி வேலைக்குச் செல்லும் அன்பர்கள், அங்குள்ள வசதி வாய்ப்புகளை அனுபவித்த பின்னர் திரும்பி இந்தியர்களைப் பார்த்து ஹெ... ஹெ... யூ டர்டி ஃ பெலோஸ் என்று சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை. இங்கே இருந்த போது தெருவில் பேண்டு கொண்டிருந்தவர்களில் ஒருத்தன் தானே நீ? அங்கே போனதும் பெருமாயில் தலைக்கேறிப் போனதோ? நீ அங்கே என்ன கலெக்டர் வேலையா பார்க்கப் போயிருக்கே? டேட்டா என்ட்ரி வேலைதானே, அதுக்கே இந்த பில்டப்பா?

பெயரில்லா சொன்னது…

இந்த தவறை ஆதரிப்போர் இந்திய இறையாண்மைக்கும் நியாயத்துக்கும் சமூகநீதிக்கும் பொதுநலனுக்கும் எதிரானவர்கள்.
//
Amen.