Pages

சனி, ஜனவரி 26, 2013

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடையை நீக்க வேண்டும் - மருத்துவர் இராமதாசு அய்யா

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடையை நீக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளார்:

"தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் நேற்று வெளியிடப்படுவதாக இருந்த நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு திடீரென தடை விதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் இப்படத்தை வெளியிடுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருப்பதாகவும், அதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்பதால் தான் இப்படத்திற்கு தற்காலிக தடை விதிக்கப் பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் கதை பற்றியோ அல்லது காட்சி அமைப்புகள் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது என்பதாலும், இது குறித்த வழக்கு  நீதிமன்றத்தில் இருப்பதாலும் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால், நடிகர் கமலஹாசன் மதங்களைக் கடந்த கலைஞர். எந்த மதத்தினர் எந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர். 1992 -ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதை கடுமையாக கண்டித்ததுடன், அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை நேரில் சந்தித்து , இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தியவர். 
இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் முக்கியப் பொறுப்பில் இருந்து பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இப்படிப்பட்ட கமலஹாசன் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் திரைப்படம் எடுத்திருக்க மாட்டார் என்று நம்பலாம். அதுமட்டுமின்றி , விஸ்வரூபம் திரைப்படம்  நடுநிலையான இஸ்லாமியர்களை பெருமையடையச் செய்யும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கமலஹாசன் கூறியுள்ள நிலையில், இதை பொதுவான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ரசிகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவது தான் சரியானதாக இருக்கும். மாறாக படத்தை முடக்க முயல்வது எதிர்மறையான எண்ணத்தையே ஏற்படுத்தும்.
இத்திரைப்படத்திற்கு தமிழக அரசு திடீரென தடைவிதித்ததன் பின்னணியில் அரசியலும் கலந்திருப்பதாக கருதுகிறேன். விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் , தமிழக அரசு தலையிட்டு, யாருடைய கருத்தையும் கேட்காமல் தடை விதித்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும். 

அண்மைக்காலமாகவே தமிழக அரசு கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகிறது. சட்டம் - ஒழுங்கிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றால், அதை சமாளிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்; இதற்காக திரைப்படத்திற்கு தடை விதிப்பது முறையல்ல.

எனவே, விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு உடனடியாக நீக்கவேண்டும். எனது அன்பிற்குரிய இஸ்லாமிய அமைப்புகளும் இந்தப் பிரச்சினையை உணர்ச்சி வேகத்தில் அணுகாமல் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி யதார்த்தமான தீர்வை எட்ட முன்வரவேண்டும்."

- என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளார்:

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

இஸ்லாமிய நண்பர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துக்கொள்ள வேண்டும். கோவையில் குண்டுவெடித்தப்போது, இஸ்லாமிய மக்கள் மீது நட்த்தப்பட்ட அரசு வன்முறைக்கு எதிராகவும், சோதனைச்சாவடி என்ற பெயரில் தினசரி இஸ்லாமிய மக்களை கொடுமைப்படுத்தியதைக் கண்டித்துப் போராடி, சோதனை சாவடியை த்கர்த்து எறிந்து சிறை சென்றவர்தான் எங்கள் இனமானக் காவலர் மருத்துவர் அய்யா என்பதை உங்கள் மதப் பெரியவர் பழனி.பாபா அவர்களோடு இருந்தவர்களுக்குத் தெரியும். திரு.பழனி.பாபா அவர்களின் சொற்பொழிவில் அதைப் பதிவு செய்திருக்கிறார்.

அழகாபுரம்.இரா.தங்கதுரை.

பெயரில்லா சொன்னது…

பாபா படத்தப்போ மருத்துவருக்கு இது தோணலையா?

சார்வாகன் சொன்னது…

நண்பர் அருள்,
வணக்கம் நம்ப முடியவில்லையே!! ஒருவழியா தமிழ்குடிதாங்கி[?] மருத்துவர் அய்யா நல்ல கருத்து தெரிவித்து இருக்கிறார்.ம்ம்ம் நல்ல விடயம் யார் செய்தாலும் பாராட்டுவோம்!!


வாழ்க வளமுடன்.

நன்றி!