Pages

புதன், ஆகஸ்ட் 07, 2013

சட்டத்தை மீறும் வேந்தர் மூவிஸ் தலைவா திரைப்படம்: பதில் சொல்வாரா விஜய்?

அரசின் சட்டங்கள், விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை விஜய் நடித்த தலைவா திரைப்படம் அப்பட்டமாக மீறியுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தை புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தும் பாரிவேந்தரின்  'வேந்தர் மூவிஸ்' வெளியிடுகிறது.
விஜய் நடித்த தலைவா திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆக.9)வெளியாக உள்ளது. ஆனால் அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 

இந்நிலையில் சென்னை நகரில் உள்ள திரையரங்குகள் தலைவா பட நுழைவுச் சீட்டு முன்பதிவை திடீர் என்று இன்று நிறுத்தியுள்ளன என்றும் செய்திகள் வந்தன. மறுபுறம் சென்னையில் உள்ள திரையரங்குகளுக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை என்ற அமைப்பினர் பெயரில் வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சட்டத்தை மீறும் தலைவா திரைப்படம்

விஜய் நடிப்பில், புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தும் பாரிவேந்தரின்  'வேந்தர் மூவிஸ்' வெளியீட்டில் வெளியாகும் தலைவா திரைப்படத்துக்கான விளம்பர பதாகைகள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஒற்றன்செய்தி எனும் இணையச் செய்தியில் வெளியாகியுள்ள தகவல்:
"சில வருடங்களுக்கு முன்பு அதாவது 2007-ல் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் பிரமாண்ட பேனர்கள் சென்னை மாநகரை அலங்கரித்து. அதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு சினிமா மற்றும் வணிக ரீதியான பேனர்கள் மற்றும் பிரமாண்ட விளம்பர பலகைகளை பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்க கூடாது என்றும், வைத்தாலும் அதிகபட்சம் மூன்று நாட்கள் மட்டுமே வைத்து, பின் அகற்றிவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதற்கு அரசிடமிருந்து எழுத்துபூர்வமாக அனுமதி கடிதம்  பெறவேண்டும். அரசியல் கட்சிகள் கூட இரண்டு மூன்று நாட்களில் பேனர்களை அகற்றி விடுகிறது. இந்த மாதிரி பேனர்கள் வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடித்து, விபத்துகள் உருவாவதற்கு காரணமாகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் மிஸ்ரி ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் தலைவா படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பிரமாண்டமான, அகலமான பேனர்கள் சென்னை நகரின் முக்கிய சாலைகளிலும், பெரிய கட்டிடங்களின் மேலும் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி சட்ட அதிகாரியிடம், பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு அவர் ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள சொன்னார். சென்னை மாநகரில் பேனர்கள் வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் சார்பில் எந்த அனுமதியும் கோரப்படவும் இல்லை, நாங்கள் அனுமதியும் கொடுக்கவில்லை என்று ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றவும், சட்டத்தை மீறியவர்கள் மீது தகுந்த நடவடிக்கையும் எடுப்பார்களா சம்பந்தபட்ட அதிகாரிகள்?" - என்று கேட்கிறது ஒற்றன்செய்தி!

ஒற்றன்செய்தி: சென்னை நகரை அனுமதியின்றி ஆக்கிரமித்திருக்கும் விஜய்’யின் “தலைவா” விளம்பர பலகைகள்

கருத்துகள் இல்லை: