Pages

வெள்ளி, அக்டோபர் 18, 2013

தமிழ்தேசிய போராளிகள் + டெசோ கம்பெனி' நடத்தும் நாடகம்: தமிழர்கள் வலியுறுத்த வேண்டியது என்ன?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் நிலை வருமானால், 'இலங்கையில் நடைபெரும் காமன்வெல்த் கூட்டத்தில்' இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காமல் தவிர்க்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

தியாகு உண்ணாவிரதம் - டெசோ ஆதரவு

"வெற்றி அல்லது வீரச்சாவு" என்ற உறுதியுடன் "இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது, ஒரு வேளை நடந்தால் அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாது" என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தியாகு தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

"திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் உட்பட பலர் தியாகுவை சந்தித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள தியாகுவும் பழ இரசம் அருந்தி தனது உண்ணாநிலை போராட்டத்தினை முடித்துக்கொண்டார்" என்று செய்திகள் கூறுகின்றன.
இது குறித்து சுப. வீரபாண்டியன் எழுதிய கட்டுரையில் "தியாகு உயிரை இரண்டாம் முறையாக கருணாநிதி  காப்பாற்றினார்" என்று உருக்கமாக நாடகக் காட்சிகளை விவரித்துள்ளார். (இங்கே காண்க: தியாகு உயிரை இரண்டாம் முறையாகக் காப்பாற்றிய கருணாநிதி- சுபவீ)

இந்திய அரசின் தொடர் துரோகம்

இலங்கை மீதான 2012 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமை ஆணைய தீர்மானம் வந்தபோது - அதில் இலங்கையை கட்டாயப்படுத்தும் பகுதிகளை நீக்கிவிட்டு இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.

அதே போன்று 2013 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமை ஆணைய தீர்மானத்தையும் நீர்த்துப் போகச் செய்து இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரித்தது.
அதேபோல, காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்க எல்லா உதவிகளையும் செய்து, வெளியுறவு துறை சார்பில் பெரும்படையையே பங்கேற்கவும் செய்துவிட்டு - பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் பங்கேற்காமல் தவிர்க்கக் கூடும். இதையே இங்குள்ள தமிழ்தேசிய போராளிகளும் டெசோ கம்பெனியும் மாபெரும் வெற்றி என பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது.

தமிழர்களின் கோரிக்கை: பன்னாட்டு விசாரணை - ஐநாவில் இந்திய தீர்மானம்! 

தமிழ்நாட்டு தமிழர்களின் கோரிக்கை, உலகத் தமிழர்களின் கோரிக்கை என்பது - "இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த போர்க்குற்றம் - இனப்படுகொலைக் குறித்து விசாரிக்க பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைக்கும் தீர்மானத்தை 2014 மார்ச் மாதம் நடைபெரும் ஐநா மனித உரிமைக் கூட்டத்தில், இந்தியாவே கொண்டுவர வேண்டும்" என்பதுதான்.

எனவே, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளாமல் தவிர்த்தாலே அது மாபெரும் சாதனை என்பதுபோல "தமிழ்தேசிய போராளிகள், டெசோ கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் நாடகத்தில்" மயங்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை: