Pages

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

சாதி மாநாட்டுக்கு ஜெயலலிதா வாழ்த்து: திராவிடக் கட்சிகளின் சாதி அரசியல்!

அதிமுக - திமுக கட்சிகள் தற்போது போட்டிப்போட்டுக் கொண்டு சாதிச் சங்க மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. பாமகவை சாதிக்கட்சி என்று பேசும் திராவிடக் கட்சிகள்  'தெலுங்கு செட்டியார்' சாதிச்சங்க மாநாடுகளை நடத்துகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா இந்த சாதி மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக தெலுங்கு செட்டியார் மாநாடு

மதுரையில் இன்று நடைபெறும் 24 மனை தெலுங்கு செட்டியார் சங்க மாநாட்டுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், "மதுரையில் தங்களுடைய அமைப்பின் சார்பில் 27.12.2015 அன்று நடைபெறும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பு மாநாடு வெற்றி பெற எனது நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களிடையே கல்வி, பொருளாதார, அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்கி, அதன் மூலம் அனைவருக்கும் நலம் பயக்கும் செயல்கள் நடைபெறத் தாங்கள் நடத்தும் மாநாடு பயன் அளிக்கும் என்று உறுதிபட நம்புகிறேன்." என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

(இதே போன்று "கல்வி, பொருளாதார, அரசியல் விழிப்புணர்ச்சியை" உருவாக்கும் நோக்கில்தான் வன்னியர் சங்க மாநாடுகளும் நடந்தன. அவற்றை எல்லாம் திராவிடக் கட்சிகள் தூற்றியது ஏன்?)


திமுக தெலுங்கு செட்டியார் மாநாடு

அதிமுக ஆதரவு தெலுங்கு செட்டியார் மாநாட்டுக்கு போட்டியாக, ஒருவாரம் முன்பு 20.12.2015 அன்று திண்டுக்கல்லில், திமுகவின் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி தலைமையில் அதே 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சாதிச்சங்க மாநாட்டை நடத்தியுள்ளனர்.
இந்த மாநாட்டில் "24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சமுதாயத்திற்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்" - என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.


திராவிடக் கட்சிகளின் சாதி அரசியல்: முற்போக்கு வேடதாரிகள் ஓடி ஒளிந்தது எங்கே?

'24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கம்' என்ற பெயரில் திமுகவினரும், ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுக்கேட்ட '24 மனை தெலுங்கு செட்டியார்கள் ஒருங்கிணைப்புச் சங்கம்' என்ற பெயரில் அதிமுகவினரும் சாதிச்சங்க மாநாட்டை நடத்துகின்றனர்.

"24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சமுதாயத்திற்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று தீர்மானமும் நிறைவேற்றுகிறார்கள்.

பாமகவை பார்த்து 'சாதி அரசியல்' என்று கொந்தளிக்கும் முற்போக்கு வேடதாரிகள் இப்போது ஓடி ஒளிந்திருப்பது எங்கே
-----------------------------------
(குறிப்பு: எந்த ஒரு சாதிச்சங்க மாநாட்டையும் நாம் எதிர்க்கவில்லை. ஒவ்வொரு சாதியும் அணி திரள்வதை ஆதரிக்கிறோம். மாறாக, திராவிடக் கட்சிகள் மற்றும் முற்போக்கு வேடதாரிகளின் போலி வேடத்தையே விமர்சிக்கிறோம்).

2 கருத்துகள்:

அணில் சொன்னது…

தமிழ்ச் சமூகத்தில் சாதி வேறூரூன்றியிருப்பது வெளியில் தெரிந்தளவு, அவைமீது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு வெளிப்படையாக தெரிவதில்லை. பிராமணர்களை மட்டுமே குறிவைக்கும் திராவடர் கழக அறிஞர்கள் இது குறித்து வாய்திறக்க சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு மாநிலத்தின் முதல்வர் இதுபோன்ற சங்கங்களை ஊக்குவிப்பது வெட்கக் கேடானது.

குமாரவேல். சி சொன்னது…

ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் துணை அமைப்பாக அந்தந்த சாதி மற்றும் மதத்தை சார்ந்தவர்களை வைத்து சிறுபான்மையினர் பிரிவு, SC/ST பிரிவு என வைத்து நெடுங்காலமாகவே சாதியை மையப்படுத்திதான் கட்சியை நடத்திவருகின்றன. வன்னியர்சங்கம் மட்டுமே அவர்களின் பிரிவில் இல்லை. அந்தந்த கட்சிகளில் உள்ள சிறு பிரிவினருக்கு கூட முன்னுரிமை கொடுக்கும் கட்சிகள் பெரும்பான்மையான வாக்கு வங்கி உள்ள இவர்களுக்கு முன்னுரிமை தராமலே தங்கள் கட்சியினை நடத்தி செல்கின்றனர். ஆனால், பா.ம.க. மட்டுமே சாதி கட்சி என மக்களின் மனதில் பதிய வைத்துள்ளனர்.