Pages

திங்கள், ஜூன் 19, 2017

ஆங்கிலேயர் ஆட்சிக்கு வித்திட்ட நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள்!


இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய வெற்றிக்கும், மேற்கு இந்திய பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி அமைவதற்கும் வழிவகுத்தவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள் ஆகும்.

1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் படைக்கும், மராட்டிய பேஷ்வாக்களின் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர். இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்காக போரிட்டவர்கள் மராட்டிய மாநிலத்தின் மகர் சமூகத்தினர் ஆகும். இவர்கள் கெய்க்வாட் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பெரும் விழாவாக இப்போதும் கொண்டாடி வருகின்றனர். அதே மகர் சமூகத்தின் பிரிவான மராட்டிய கெய்க்வாட் வகுப்பை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும்.

ஆங்கிலேயர்களின் மாபெரும் வெற்றி

வீர சிவாஜியின் மராட்டிய பேரரசில் பிரதம மந்திரிகளாக இருந்தவர்கள் பேஷ்வாக்கள். பின்னர் மராட்டிய பேரரசின் மன்னர்களாக ஆயினர். முகலாயர்களை தோற்கடித்து இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர். வீர சிவாஜியின் காலத்தில் பேஷ்வாக்களின் படையில் மகர் சமூகத்தினரும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால், பின்னர் வந்த பேஷ்வா மன்னர்கள் தமது பிராமண மேலாதிக்கத்தின் காரணமாக - மகர் சமூகத்தினரை இராணுவத்தில் சேர்க்க மறுத்து, அவர்களை தீண்டத்தகாக மக்களாக மாற்றி, சாதீய கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்காக, மராட்டிய பேஷ்வாக்கள் மீது போர் தொடுத்தனர். பேஷ்வாக்களுக்கு எதிராக போரிடுவதற்காக பிரிட்டிஷ் படையில் மகர் சமூகத்தவரை ஆங்கிலேயர்கள் இணைத்துக்கொண்டனர். 1818 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், புனே நகருக்கு அருகில் கோரேகான் எனும் இடத்தில் நடந்த போரில், வெறும் 800 மகர் படையினர், பேஷ்வா மன்னரின் 20,000 வீரர்களைக் கொண்ட பெரும் படையை தோற்கடித்தனர். இந்த போரின் மூலம்தான் மேற்கு இந்திய பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சி நிலை நாட்டப்பட்டது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம்

இந்தப் போரில் 275 மகர் வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கான நினைவுத் தூணை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1851 ஆம் ஆண்டு பீமா கோரேகான் கிராமத்தில் அமைத்தனர். பின்னர் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் இந்த நினைவுத் தூண் இடத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வினை நடத்தினார். அப்போது முதல் ஆண்டுதோரும் ஜனவரி 1 ஆம் நாள் மராட்டிய மாநில தலித் அமைப்பினர் ஆயிரக்கணக்கில் இங்கு கூடி, ஆங்கிலேய வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினி காந்தின் கெய்க்வாட் எனும் சாதிப்பெயரினை உள்ளடக்கிய மகர் சமூகத்தினர் தான் - மேற்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தனர் என்பது வரலாற்று உண்மை ஆகும். சாதிக் கொடுமைகளை தம்மீது திணித்த பேஷ்வாக்களை ஆங்கிலேயருடன் சேர்ந்து மகர் சமூகத்தினர் வீழ்த்தியதன் மூலம், தமது விடுதலைக்கும் அவர்கள் வழிவகுத்தனர் என்பது ஒரு மிக முதன்மையான வரலாற்று நிகழ்வாக இப்போதும் கோண்டாடப்படுகிறது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம் முன்பாக அண்ணல் அம்பேத்கர்

(பிரிட்டிஷ் ராணுவத்தில் மகர் ரெஜிமெண்ட் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ராணுவப்பள்ளியில் அண்ணல் அம்பேத்கரின் தந்தை ஆசிரியராக பணியாற்றினார். அங்கு ராணுவ கண்டோன்மென்டில்தான் அம்பேத்கர் சிறுவயதில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

ரஜினி: தலித் தலைவர்  

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.
காலா திரைப்படத்தில் MH BR 1956

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: