Pages

செவ்வாய், ஜூன் 20, 2017

வீர சிவாஜியும் நடிகர் ரஜினி காந்தும்: வியப்பளிக்கும் வரலாற்று தொடர்பு!

மராட்டிய மாநிலத்தை பூர்வீக பூமியாகக் கொண்ட நடிகர் ரஜினி காந்த், மராட்டியர்களின் அடையாளமான வீர சிவாஜியின் படத்தை தனது வீட்டில் பிரதானமாக வைத்துள்ளார். இதனை அவரது மராட்டிய இனப்பற்றுக்கான குறியீடாகவும் கொள்ளலாம். ஆனால், இதுமட்டுமே அவருக்கும் வீர சிவாஜிக்குமான தொடர்பு அல்ல. வீர சிவாஜியின் மகனை, நல்லடக்கம் செய்தவர்கள் 'கெய்க்வாட்' சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே வகுப்பை சேர்ந்தவர் ரஜினிகாந்த் என்பது வியப்பளிக்கும் ஒற்றுமை ஆகும்.

வீர சிவாஜியின் பரம்பரையும் கெய்க்வாட் சமூகமும்

கெய்க்வாட் எனும் பெயரில் ஏராளமான தலித் மக்கள் இருக்கின்றனர். மகர் சமூகத்தவர்கள் - ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். மகர் சமூகத்தை சேர்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

பேரரசர் வீர சிவாஜியின் மரணத்துக்கு பின் அவரது மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் ஆட்சிக்கு வந்தார். இவர் 1689-ல் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் சங்கமேஷ்வர் எனும் ஊரில் சிறை பிடிக்கப்பட்டார்.  கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டார். கண்களை தோண்டி, நகங்களை பிடுங்கி, தோலை உரித்து பல நாட்கள் சித்தரவதை செய்து - பின்னர் உடலைக் கிழித்து, தலையை வெட்டி கொலைசெய்தார் ஔரங்கசீப். சத்ரபதி சாம்பாஜி மகராஜின் உடலை துண்டுகளாக்கி புனே அருகில் உள்ள துலாப்பூர் எனும் இடத்தில் பீமா ஆற்றில் வீசினர்.
சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னம்

சத்ரபதி சாம்பாஜி மகராஜின் உடலை அடக்கம் செய்யக் கூட அனைவரும் பயந்தனர். துலாப்பூர் அருகில் உள்ள வாது எனும் கிராமத்தின் கெய்க்வாட் பிரிவினர்தான், முகலாயர்களுக்கு பயப்படாமல் துணிச்சலாக இறுதி சடங்குகளை செய்தனர். அந்த ஊரினை சேர்ந்த கோவிந்த் கோபால் கெய்க்வாட் எனும் தலித் விவசாயி சாம்பாஜியின் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார்.

மறைக்கப்பட்ட வரலாறும் தலித் எதிர்ப்பும்

வாது கிராமத்தில் அமைக்கப்பட்ட சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில், "இறுதி சடங்குகளை செய்தவர் கோவிந்த் கோபால் கெய்க்வாட்" என்பது முதலில் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் அதனை அழித்து விட்டனர். இந்த வரலாற்று இருட்டடிப்புக்கு எதிராக மராட்டிய தலித் அமைப்பினர் குரல்கொடுத்து வருகின்றனர்.  சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில் மீண்டும் கோவிந்த் கோபால் கெய்க்வாட் பெயர் இடம்பெற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

வீர சிவாஜிக்கும், 'சிவாஜிராவ் கெய்க்வாட்' எனும் இயற்பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கும் இப்படியும் ஒரு பூர்வீக பிணைப்பு இருக்கிறது. 

கருத்துகள் இல்லை: