Pages

திங்கள், ஏப்ரல் 18, 2011

இலங்கையின் போர்க்குற்றம் - ஓர் எச்சரிக்கை

கேள்வி: ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை எதிர்த்து மே 1 ஆம் நாள் சிங்களர்களை அணி திரள சொல்கிறார் ராசபட்சே. அதே நாளில் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்???

ஐ.நா நிபுணர்குழு அறிக்கையால் இலங்கையில் கடைசி கட்ட போரில் நடந்த அப்பட்டமான மனிதப்படுகொலைகள் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் காலம் வந்துகொண்டிருக்கிறது. 


இதன் மூலம் இலங்கை அரசு உலக அரங்கில் குற்றவாளியாக்க படவும், மனிதப்பேரவலத்தை நடத்திய கொடுங்கோலர்கள் தண்டிக்கப்படவும் உகந்த காலம் விரைவில் வரும். அதனை பின்வரும் பேட்டிகள் உறுதிசெய்கின்றன.

தன்னிச்சையான பன்னாட்டு விசாரணை ஓர் உடனடி தேவை எனும் அம்னெஸ்டி அமைப்பின் பேட்டி(Video)(இங்கே சொடுக்கவும்):
போஸ்னிய கொடூரத்தின் போது ஸ்றேபிறெனிகாவில் 8000 போஸ்னிக் ஆண்கள் மற்றும் சிறுவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். இது ஐ.நாவின் தோல்வி. இந்தத் தோல்வி சிறிலங்காவிலும் நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில்,  இறுதிக்கட்ட போரின் போது இலங்கையில் ஐ.நா செய்தித்தொடர்பாளராக இருந்த கார்டன் வெய்ஸ் பேட்டி(Video)(இங்கே சொடுக்கவும்):
ஐ.நா. மூலமான பன்னாட்டு விசாரணையை தடுக்க இப்போது இலங்கை அரசு சீனா, இரசியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை நாடி தூது ஆட்களை அனுப்பி வருகிறது. இந்த நேரத்தில் உலகத் தமிழர்கள் ஒன்று திரண்டு ஐ.நா அறிக்கையை வெளியிடவும், அதன் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்தவும் குரல்கொடுக்க வேண்டும்.

ஓர் எச்சரிக்கை

ஐ.நா. குழு அறிக்கை இலங்கை அரசை மட்டும் குற்றம் சாட்டவில்லை. கூடவே, விடுதலைப் புலிகளையும் குற்றம் சாட்டுகிறது. இந்த நேரத்தில் - விடுதலைப் புலிகள் குறித்த குற்றச்சாட்டுகளை மறுப்பதும், அதன் மூலமாக - ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதும் தமிழர்களுக்கு பாதகமாகவே அமையும்.


எனவே, புலிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதைவிட - இலங்கை அரசின்மீதான குற்றச்சாட்டுகளை வெளிச்சம்போட்டு காட்டுவதே அவசரம் ஆகும். 




3 கருத்துகள்:

Yoga.s.FR சொன்னது…

உண்மையில் எப்போதுமே முந்துவது பலன் தராது என்பதை இப்போது ஆட்சியாளர்கள்?!புரிந்து கொண்டிருப்பார்கள்.உள் நாட்டில் ஆதரவை திரட்டுவதற்காக,ஐ.நா (பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்க அவரே நியமித்த குழு)வின் அறிக்கையை கசிய விட்டதன் மூலம் "எங்களுக்கு அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடும் கஷ்டத்திலிருந்து விடுவித்திருக்கிறார்கள்!எப்படியாயினும் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்துக்கு பான் கி மூனை தள்ளியிருக்கிறார்கள்!நல்லது தானே?மேலும், நிபுணர் குழு அறிக்கை இரண்டு தரப்பினருமே குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாகவே சொல்கிறது!கடைசி நிமிடத்தில் சரணடைந்தோரை ஐ.நா மற்றும் மேற்குலகு காப்பாற்றி விடக் கூடுமென்று கருதி "தம்பி"கொல்வதற்கு உத்தரவிட்டார்!அது மீண்டும் நாம் "மோட்டுச் சிங்களவரே" என நிரூபித்திருக்கிறது!இப்போது அரசும்,எதிர் தரப்பு அரசியல் வாதிகள்,பெளத்த?!பிக்குகள் துள்ளுவது அறிக்கையிக் கூறப்பட்டிருக்கும் "போர்க்குற்றம்"சம்பந்தமாக அல்ல!அவர்களின் கூற்று இலங்கையின் "உள் நாட்டு விடயம்" என்பது எதனைக் குறிக்கிறது என்றால் நிபுணர்கள் குழு,அறிக்கையில் கடைசில் குறித்திருக்கும் இன முரண்பாட்டுக்கான தீர்வு குறித்தே!தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்கி அதனைக் கண்காணிக்க "சர்வதேச "மட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரையே அதிர்ச்சியளிப்பதாக இலங்கை அரசு சொல்கிறது!உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய காலம் இப்போது முகிழ்ந்திருக்கிறது.அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட பின்,புலம்பெயர் தமிழர்கள் அவரவர் வாழும் நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் முனைப்புகளில் மீண்டும் ஈடுபட வேண்டும்.இப்போது விட்டால் எப்போதுமே இல்லை!போர்க் குற்றங்களிலிருந்து விடுபடுவதற்காகவே மகிந்தர் உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு என்று ஒரு உப்புச் சப்பில்லாததை(அதிகாரமற்றதை)உருவாக்கினார்.அது சேடம் இழுக்கிறது.த.தே.கூ வுடன் பேசுகிறோமென்று புலுடா விடுகிறார்,சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க.அவர்களும் இழுபடுகிறார்கள்!எந்த வகையிலும் மகிந்தர் ஆயுததாரிகளை ஒழித்து விட்டு,தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவேனென்று சர்வதேசத்துக்குக் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்து விட்டது என்ற முடிவுக்கு வந்த சர்வதேசம் ஐ.நா செயலருக்கு ஆலோசனை வழங்க அவரே நியமித்த குழு மூலம் தீர்வினை சொல்லியிருக்கிறது!இதன் மூலம்,இந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம்,விடுதலைப் புலிகளும் குற்றம் இழைத்தார்கள் என்று ஏற்றுக் கொள்வதன் மூலம் எங்கள் இனத்துக்கு விடிவு கிடைக்கலாம்,கிடைக்க வேண்டும்!அதற்காக எங்கள் மாவீரர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவதாக அர்த்தமாகாது!அவர்கள் எங்கள் விடுதலையை இலட்சியமாகக் கொண்டு மாவீரர் ஆனார்கள்!இந்த விடுதலை அவர்களால் கிடைத்தது என்று இந்தப் பூமிப் பந்து உள்ளவரை மறக்கப்படாது என்பது உண்மை.

ராஜ நடராஜன் சொன்னது…

//கேள்வி: ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை எதிர்த்து மே 1 ஆம் நாள் சிங்களர்களை அணி திரள சொல்கிறார் ராசபட்சே. அதே நாளில் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்???//

அருள்!மல்யுத்தத்தில் எதிரிக்கு இணையாக இன்னொரு குத்து விடுவது,அடி வாங்கிக்கொண்டே ஒரே அடியில் கவுண்ட்டவுன் சொல்வது என்று இன்னொரு முறையும் இருக்கிறது.இரண்டாவதாக சொன்ன மாதிரி வெல்வதற்கு Beat him என்ற ஒருமித்த ஆதரவுக்குரல் தேவை.

இதற்கு தமிழகத்திலிருந்தும்,புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் எழும் குரலை விட ஈழ மண்ணிலிருந்து மெல்லிய குரலாவது எழும்ப வேண்டும்.ஆனால் அதற்கு தடையாக எமர்ஜென்சி என்ற வலுவான ஆயுதத்தை ராஜபக்சே கையில் வைத்துள்ளார்.எனவே மாற்று குரல் தமிழகமும்,புலம்பெயர்ந்த நாடுகளுமே.லண்டன் துவக்க விழாவை துவங்கலாம்.

எப்படியோ ராஜபக்சே பயப்படுகிறார் என்ற முதல் அறிகுறியாக மின்சார நாற்காலியில் உட்காரவும் தயார் என்ற மக்களை உசுப்பி விடும் குரல் அவரிடமிருந்து எழும்புவது சைக்காலஜிக்கலா நமக்கு சாதகமானதுதான்.

ஆறாம்பூதம் சொன்னது…

அறிக்கையின் ஒரு பகுதி மட்டுமே வெளியாகி உள்ளது. முழு அறிக்கையும் வெளியான பின்பே அதன் சாதக பாதக அம்சங்கள் குறித்து தீர்க்கமான முடிவெடுத்து அதனடியில் உலகத் தமிழினம் செயலாற்ற முடியும். தமிழர் அமைப்புகள் அமைதி காப்பதன் நோக்கம் இதுவாகத்தான் இருக்கும்.