Pages

புதன், ஜூன் 01, 2011

உங்கள் சிறுசெயலும் உலகைக் காக்க உதவும்

புவி வெப்பமடைவதன் விளைவாக ஏற்படும் காலநிலை மாற்றத்தால் உலகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. எதிர்கால தலைமுறையினர் மட்டுமின்றி இப்போதைய தலைமுறையினரே எதிர்பாராத இயற்கை சீற்றத்தின் கடும் விளவுகளை சந்திக்கத் தொடங்கியுள்ளோம். பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை பெருமளவில் பயன்படுத்துவதே இன்றைய சிக்கல்களுக்கு காரணம்.

புதைபடிவ எரிபொருட்களின் மிதமிஞ்சிய பயன்பாட்டால் வளிமண்டல கரியமில வாயு அடர்த்தி கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு 275 ppm ஆக இருந்த கரியமில வாயு அடர்த்தி இப்போது 393 ஆக அதிகரித்து விட்டது (1 ppm என்பது பத்து லட்சத்தில் ஒரு பகுதி). கரியமிலவாயு சூரிய வெப்பத்தை பிடித்து வைத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதால், பூமியின் மேற்பரப்பு வெப்பமும் அதிகரித்து வருகிறது.

இதனால் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் அளவுக்கு அதிகமாக தாக்குகின்றன. எனவே, உலகைக் காக்க கரியமில வாயு அடர்த்தி மென்மேலும் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

புவி வெப்பம் அதிகரிப்பதை தடுக்க அரசின் கொள்கைகளில் மாற்றம், தொழில் நிறுவனங்களின் நடவடிக்கைகளில் மாற்றம் எனப் பல நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவற்றுடன் - தனிமனித பழக்க வழக்கங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் அவசியம். அந்த வகையில் பின்வரும் எளிய செயல்களின் மூலம் நாம் மாபெரும் பங்களிப்பை அளிக்க முடியும். உலகைக் காக்க ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய சில முன்முயற்சிகள் இதோ:
1. மின்கருவிகளை அணையுங்கள்: 
தேவையில்லாத இடத்தில் தேவையற்ற நேரத்தில் இயங்கும் மின்விசிறி, மின்விளக்கு, குளிரூட்டி (AC), தொலைக்காட்சி, கணினி போன்ற அனைத்து மின் கருவிகளையும் அணையுங்கள்.
2. ரிமோட் கருவிகளை முழுவதுமாக அணையுங்கள்: 
தொலையுணர்வு கருவி (ரிமோட்) மூலம் இயங்கக் கூடிய தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றை Standby-இல் வைக்காதீர்கள். ஏனெனில் Standby-இல் வைப்பதால் அக்கருவிகள் வெளிப்பார்வைக்கு அணைக்கப்பட்டாலும் அவை உள்ளுக்குள் இயங்குகின்றன. இப்படி Standby-இல் வைப்பதால் மட்டும் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தில் 10% முதல் 15% வரை வீணாகிறது. எனவே, Standby வேண்டாம். Switch off செய்யுங்கள்.
3. குண்டு பல்பை மாற்றுங்கள்: 
மின்விளக்கால் வெளியாகும் கரியமில வாயுவில் 88% குண்டு பல்புகளில் இருந்துதான் வருகிறது. இதற்கு பதில் CFL பல்புகளைப் பொருத்தினால் அது புவி வெப்பமடைவதைத் தடுக்க உதவும். குண்டு பல்பை விட 80% குறைவான மின்சக்தியைக் கொண்டு CFL பல்பு அதே வெளிச்சத்தை தரும்.
4. மின் சாதனங்களை கவனித்து வாங்குங்கள்:  
குழல் விளக்குகள், குளிர் சாதனப் பெட்டிகள் (பிரிட்ஜ்), குளிரூட்டிகள் (AC) போன்ற எந்த மின்சாதனத்தை வாங்கினாலும் அதில் இந்திய அரசின் ஆற்றல் சிக்கன அமைப்பின் BEE முத்திரை உள்ளதா எனப் பார்த்து வாங்குங்கள், அதிலும் 4 அல்லது 5 என அதிக நட்சத்திரங்கள் கொண்ட மின்சாதனங்களே சிறந்தவை.
5. குப்பையை குறையுங்கள்: 
புவி வெப்பமடைய குப்பை ஒரு முக்கிய காரணம். 10 நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் தயாரிக்க ஒரு கிலோ மீட்டர் மகிழுந்து பயணத்துக்கு ஈடான எண்ணெய் தேவை. குப்பை மேடுகளில் குப்பைகளை அழிகிப்போக விடுவதால் அதிலிருந்து புவியை சூடாக்கும் மீத்தேன் வாயு வெளியாகிறது. எனவே, பிளாஸ்டிக்/பாலிதீன் பைகளை ஒழிப்பதும் - குப்பை உருவாகாமல் குறைத்தல், மறு பயன்பாடு, மறு சுழற்சி என குப்பையைக் குறைப்பதும் பூமியைக் காக்கும்.
6. புதிதாக சமைத்த உணவை சாப்பிடுங்கள்: 
உள்ளூர் உணவு வகைகளை சாப்பிடுங்கள். பொட்டலங்களிலோ, டப்பாக்களிலோ அடைக்கப்பட்டு விற்கப்படும் முன் தயாரிப்பு உணவுப்பொருட்களை புறக்கணியுங்கள். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழம் காய்கறிகளை வாங்குங்கள். இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளை ஒதுக்குங்கள்.
7. புவி வெப்பமடைவது குறித்த விழிப்புணர்வை மற்றவரிடம் பரப்புங்கள்.
விழிப்புணர்வு செயல்பட தூண்டும். சுற்றுச்சூழல் காக்க உதவும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பே உயிர்வாழ்வின் ஆதாரம் - இன்றே செயல்படுங்கள்.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

No Plan B for Earth! எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் துணிப்பையில் தான் சாரி, பாத்திரங்கள் போன்றவற்றைப் போட்டு தான் சின்னப் பையனாக இருந்த காலத்தில் கொடுத்தார்களாம் என்று ஆஷ் கூறுவான். அவங்க எதுக்காக மாறினாங்க. போதீஸ் துணி பாகில் எனக்கு ஒரு முறை ஆஷம்மா துணி கொண்டு வந்திருந்தார்கள். படங்களில் கூட மஞ்சள் பை என்று காட்டி கேலி செய்யும் போது கூட துணி பாக்கை தான் காட்டுவார்கள். பிறகெப்படி பிளாஸ்டிக் அதிகமாக பாவிக்கத் தொடங்கினார்கள்.

பெயரில்லா சொன்னது…

மாதத்தில் ஒரு நாள் என்றாலும் எல்லா சாதனங்களையும் நிறுத்திவிட்டு வீட்டிற்கு வெளியே நிலவொளியில் இருந்து அரட்டை அடியுங்களேன். குடும்பமாக அரட்டையும் அடித்ததாச்சு. கொஞ்சம் புவியை காப்பாற்றியதுமாச்சு. இங்கே ஒவ்வொரு 30 / 31ல் (அடுத்த நாள் அசைட்மென்ட் சப்மிசன் இருந்தால் கூட) ஒரு மணி நேரம் டாப்டொப் உட்பட எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு வீட்டிற்கு வெளியே இருந்து அரட்டை அடிப்போம். வீட்டை விட்டு வெளியே போகும் போது எல்லா சாதனங்களையும் அணைத்துவிட்டு போவது எங்களது வழக்கம். மின்சார கட்டணமும் குறைவு, புவியஒ பாதுகாக்க ஏதோ எங்களால் ஆன சின்ன உதவி.

அலட்சியம் சோம்பேறித்தனம் இரண்டினாலும் தான் பலர் இப்படி இருக்கிறார்கள்.

இங்கே எல்லாம், பிளாஸ்டிக், கண்ணாடி, தகரம், மரக்கறிபழ கழிவுகளைப் போட தனித்தனியான பின் எல்லா வீதிகளிலும் இருக்கிறது. வீட்டிலும் இருக்கிறது. சென்னையிலும் இப்படியே தனித்தனியாக கட்டி கழிவுகளை கொடுத்த போது எல்லாவற்றையும் ஒரே வண்டியில் அலாக்காத் தூக்கிப் போட்டுட்டு போனாங்க என்று ஆஷ் புலம்பியதை கேட்டிருக்கிறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கூடல் பாலா சொன்னது…

அத்தனை ஆலோசனையும் அருமை .....தொடருங்கள்

குடந்தை அன்புமணி சொன்னது…

சமீபத்தில் மாமல்லபுரம் குடும்பத்தோடு சென்று வந்தேன். மதியம் சாப்பிட உணவு விடுதிக்கு சென்றபோது கூட்டம் அதிகமிருப்பதால் சாப்பாடு வாங்கிக்கொண்டுபோய் எங்காவது மர நிழலில் அமர்ந்து சாப்பிடலாம் என்று வாங்கினேன். அவர்கள் மக்கும் பையில் உணவுப் பொட்டலங்களை கட்டித் தந்தார்கள். சுற்றுத்தலங்களில் உணவு விடுதி வைத்திருப்பவர்கள் அனைவரும் இத்தகைய முறையை பின்பற்றினால் நலம்.

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

பதிவு அற்ப்புதம்!


/*10 நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் தயாரிக்க ஒரு கிலோ மீட்டர் மகிழுந்து பயணத்துக்கு ஈடான எண்ணெய் தேவை*/


இது உண்மையா நண்பரே!