Pages

சனி, டிசம்பர் 29, 2012

நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!

'நீதானே என் பொன்வசந்தம்' இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஆற்புதமான தமிழ்த் திரைப்படம். ஒரு நல்ல திரைப்படத்தை ஆனந்த விகடனும் சில முன்னணி வலைப்பூ விமர்சகர்களும் எதற்காக மோசமாக சித்தரித்தனர் என்பது புரியாத புதிராகவுள்ளது! வலையுலகின் திரை விமர்சனங்களையும் பத்திரிகை விமர்சனங்களையும் அப்படியே நம்பிவிடக்கூடாது என்கிற ஞானோதயத்தை அளித்திருக்கிறது இத்திரைப்படம்.

மென்மையான காதல் கதைகளை முன்வைத்து ஆபாசமில்லாமல் மிகச்சிறந்த காவியமாக திரைப்படங்கள் அமைய முடியும் என்பதற்கு 'தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே' இந்தி படத்திற்கு அடுத்ததாக வந்துள்ள மிகச்சிறந்த திரைப்படம் 'நீதானே என் பொன்வசந்தம்' என்று கருதுகிறேன். ஒரு அழகான காட்சிக் கவிதையாக, நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு சிலையை வடிப்பது போன்று திரையில் செதுக்கப்பட்ட கலைவடிவம் என்று கூட இப்படத்தைச் சொல்லலாம்.
'படம் என்றால் அது மெசேஜ் சொல்ல வேண்டும். சமூக சீர்திருத்தத்திற்கு பாடுபட வேண்டும்' என்கிற எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு இல்லை. தவறான பழக்கங்களைத் திணிக்காத வகையில், ஆபாசத்தை அள்ளி வீசாத அளவுக்கு திரைப்படங்கள் இருந்தால் போதும்.

புதிய படங்கள் வெளிவரும்போது அவசரப்பட்டு பார்க்காமல், வலைப்பூ விமர்சனங்களையும் பத்திரிகை விமர்சனங்களையும் படித்துவிட்டு படம் பார்க்க போவது உண்டு. அந்தவகையில்  'நீதானே என் பொன்வசந்தம்' குறித்த சில வலைப்பூ விமர்சனங்களும் ஆனந்தவிகடன் விமர்சனமும் அப்படத்தை மோசமாகவே சித்தரித்திருந்தன. ஆனால், திரையில் படத்தைப் பார்த்தபோது அந்த விமர்சனங்கள்தான் மோசமாக தெரிந்தன. (ஆனாலும், சில வலைப்பூ விமர்சகர்கள் இது மிகச்சிறந்த படம் என்றும் கூறியுள்ளனர்)

'நீதானே என் பொன்வசந்தம்' மிகச்சிறந்த படம்

இப்போது எந்த திரைப்படத்துக்கு போனாலும், முதலில் 'புகைபிடித்தால் புற்றுநோய் வரும், புகையிலை உயிரைக் கொல்லும்' என்று விளக்கம் சொல்லி அதற்கு ஒரு சிறு படமும் போடுவார்கள் (இதற்காக போராடி நடைமுறைப் படுத்தியதில் எனக்கும் பங்குண்டு).

ஆனால், அந்த புகையிலை எதிர்ப்பு செய்தி 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் இல்லை. காரணம் புகைபிடிக்கும் காட்சியோ, புகையிலைப் பொருட்களோ எதுவும் இப்படத்தில் சிறிதளவும் இல்லை. குடிக்கிற காட்சி கூட ஒரே ஒரு காட்சியில் மறைமுகமாக உள்ளது. ஆபாசமோ, குத்தாட்டமோ கூட இல்லை. (சந்தானம் மட்டும்தான் சில இரட்டை அர்த்த வசனங்களையும் குடியையும் பேசுகிறார். அவர் நமது அன்புக்கு பாத்திரமானவர் என்பதால், அதைக் கண்டுகொள்ள தேவையில்லை)
இப்படி கெட்ட அம்சங்கள் எதுவும் இல்லாமல் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படத்தை அளிக்க முடியும் என்று மெய்ப்பித்துள்ளார் கௌதம் மேனன். படத்தில் வில்லனோ, அடிதடி சண்டையோ கூட இல்லை.

ஒவ்வொரு காட்சியும் கவிதை

ஒரு ஆண், ஒரு பெண் - இவர்களுக்கு இடையே குழந்தை, பள்ளிச் சிறுவர், கல்லூரி, வேலை, திருமணம் என வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை அற்புதமாக கோர்த்துள்ளார் இயக்குனர். (இதெல்லாம் இயல்பு வாழ்க்கையில் எல்லோருக்கும் நடந்திருக்கும் என்று கருத வேண்டியது இல்லை. அப்படி நடக்க வேண்டிய தேவையும் இல்லை என்பதை இப்படத்தை பார்க்கும்போது நம்மால் உணர முடியும்.)

சிறுவயதில் விளையாடும் குழந்தைகள் கோபித்திக் கொண்டு பிரிவது, பள்ளி வயதில் சந்திப்பது, பிரியக்கூடாது என்பதற்காக பள்ளி மாறி சேர்வது, மீண்டும் பிரிவது - என பிரிவோம், சந்திப்போமாக ஒரே பாதையில்தான் கதை பயணிக்கிறது. ஆனால், ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் உணர்ச்சிகளை அற்புதமாக வடிவமைத்துள்ளனர். 
உன்னதமான சில கவிதைகளைப் படிக்கும் போது நமது கற்பனையில் மட்டுமே காணக்கூடிய நிகழ்வுகளை நிஜத்தில் கொண்டுவந்துள்ளனர். உண்மையில் கௌதம் மேனன், இளையராஜா, சமந்தா மூன்று பேரும் ஒரு மாயாஜால கூட்டணியை அமைத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

கவனத்துடன் பார்க்காவிட்டால், இந்த படத்தில் பல நிகழ்வுகளை பார்க்காமல் விட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. படத்தின் மீது ஈடுபாட்டுடன் பார்த்தால் - ஆணின் ஏக்கம், பெண்ணின் ஏக்கம், துக்கம், மகிழ்ச்சி என எல்லாவற்றையும் பார்வையாளரின் மனதிற்குள் மென்மையாக புகுத்தி விடுகின்றனர். இந்த மாயத்தை செய்வதில் கௌதம் மேனன், இளையராஜா, சமந்தா, ஜீவா, சந்தானம் ஆகியோரின் திறமை வெளிப்படுகிறது. அவரவர் பங்கினை அவரவர் அற்புதமாக நிகழ்த்தியுள்ளனர் (இதையெல்லாம் சொல்வதற்கு திரைப்படத் துறை குறித்து நிபுணராக இருக்க வேண்டிய தேவை இல்லை).
நம்மை நாம் இன்னொருவராக மாற்றிப் பார்க்கும் தருணம் எப்போதாவதுதான் நேரும். அது துக்கமாக இருக்கலாம், வலியாக இருக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம். உண்மையில் மனிதனுக்கு இன்பம் என்பதே இன்னொன்றாக மாறுவதுதான் என்று ஜே.கே எனப்படும் ஜெ. கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுவார்.

ஒரு குழந்தை கல்லில் இடித்துக்கொண்டு கத்தினால், அதை பார்த்த அந்த நொடியில் நமக்கும் வலிக்கும். ஒரு அழகான பூ, குழந்தையின் சிரிப்பு, கடலின் நீல நிறம், பேருந்தின் சன்னலுக்கு வெளியே தெரியும் இயற்கை காட்சி, வானில் தெரியும் முழுநிலவு - இப்படி எல்லாமும் மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். அந்த மகிழ்ச்சி என்பது ஒரு வினாடி நேரம் தான். அந்த கண் இமைக்கும் நேரத்தில் அவன் 'தான்' என்பதிலிருந்து 'அதுவாக' மாறிவிடுகிறான்'.

ஒரு குழந்தையின் சிரிப்பு உங்களுக்கு இன்பத்தை தரும் அந்த ஒரு வினாடியில் நீங்கள் என்பது இல்லாமல் போய்விடுகிறது. அந்த சிரிப்பு மட்டும்தான் இருக்கிறது, நீங்கள் இல்லை. அப்படி மறந்து போகும் அந்த தருணம்தான் மகிழ்ச்சி, அன்பு எல்லாமும் என்பார் ஜே,கே. (உண்மையில் அரசியல், போராட்டம், இயக்கம், தியாகம் என்பதெல்லாம் ஒருவன் இன்னொருவனாக மாறி மற்றவரது துக்கத்தை உணர்வதுதான்).

படத்தில் தோன்றும் பாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளரும் உணரும் இடத்தில்தான் 'நீதானே என் பொன்வசந்தம்' உன்னதமான  படமாக அமைகிறது. இப்படம் குறித்த விமர்சனங்கள் பலவும் அவரவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை ஏதாவது ஒரு இடத்தில் பிரதிபலிப்பதாக கூறியுள்ளன. ஆனால், உங்களுக்கு தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, நீங்கள் ஆணோ, பெண்ணோ - எப்படியிருந்தாலும் இப்படத்தில் வரும் கதாநாயகி, கதாநாயகன் என இருவரது உணர்வுகளையும் உங்களாலும் உணர முடியும்.
இந்த படத்தில் உள்ள முக்கியமான திருப்பம் என்பது, இளம் வயதில் எதிர்காலம் குறித்த முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய தருணத்தில் - கடமைக்கும் எதிர்கால நலனுக்கும் முன்னுரிமை கொடுக்கிறோமா? அல்லது அந்தக் கால கட்டத்தின் உணர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கிறோமா? என்பதுதான்.

அதைவிட முக்கியமாக, இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதற்கான லாஜிக், அந்த முடிவு நன்மையாக முடியும் என்று நம்புவதற்கான காரணங்கள் சிக்கலானவை.

இதுபோன்ற தருணங்களில், முடிவெடுத்தல் என்பது மிக மிக வலி மிகுந்தது. அந்த வலிதான் இப்படத்தில் மையக்கரு என்று நான் நினைக்கிறேன்.

The Road Not Taken

எனக்கு ஆங்கிலக் கவிதைகள் அவ்வளவாக புரியாது. ஆனாலும், The Road Not Taken எனும் ஒரு கவிதை - இருவழி பாதையில் நிற்கும் ஒருவனது உணர்வை, குழப்பத்தை, நல்ல முடிவுதான் என்கிற சமாதானத்தை படிப்பவனின் விருப்ப்ம் போல உணர வைக்கும். (இங்கே காண்க:The Road Not Taken).
அந்த புகழ்பெற்ற கவிதையின் உணர்வை காட்சியாக அளிக்கிறது நீதானே என் பொன்வசந்தம்.

ஒரு நல்ல திரையரங்கில் கட்டாயம் பாருங்கள் 'நீதானே என் பொன்வசந்தம்' (குழந்தைகளை அழைத்துப் போக வேண்டாம்).

11 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

மிகச் சிறந்த படம் என பட்டியல்ப்படத்த முடியாவிடினும் சிறந்த படமே...

அது ஏன் சகோ குழந்தைகளை கொண்டு போக வேண்டாமென்கிறீர்கள்

தமிழ் உணர்வுள்ளவன். சொன்னது…

I thought you'll write only about politics& social issues... but you now wrote about cinema with supporting it. I couldn't understand u...

அருள் சொன்னது…

♔ம.தி.சுதா♔ கூறியது...

// //அது ஏன் சகோ குழந்தைகளை கொண்டு போக வேண்டாமென்கிறீர்கள்// //

குழந்தைகளுக்கு இந்தப் படம் பிடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. நடுநடுவே பாப்கார்ன் கேட்பார்கள்.

அருள் சொன்னது…

தமிழ் உணர்வுள்ளவன். சொன்னது…

// //I couldn't understand u...// //

திரைப்படங்களுக்கும் நடிகர்களுக்கும் நானே, நான் சார்ந்த இயக்கமோ எதிரானவர்கள் இல்லை.

குலசேகரன் சொன்னது…

யாரும் செல்லாப் பாதை என்ற கவிதைக்கும் இப்படத்துக்கும் எப்படித் தொடர்பு?

கவிதை சொல்வது: இருபாதைகள்; ஒன்று எனக்கு முன்பே பலர் சென்ற வழி; இன்னொன்று எவரும் இதுவரை சென்றிராத வழி. இரண்டாவதையே நான் தேர்ந்தெடுத்தேன். எனக்குக் கிடைத்தது வெற்றி.

இதுதான் கவிதை. இதன் உட்பொருள் என்னவென்றால், வாழ்க்கையில் மனிதர்கள் பட்ட துயரத்தையே ஏனென்று தெரியாமலே படுகிறார்கள். கொஞ்சம் முயற்சித்தால், அத்துயரங்களை நிறுத்திவிட முடியும். அம்முயற்சிக்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்.

வியக்கிறேன்!

திரைப்படம் சொல்வ்து: காதல் என்பது வாழ்க்கையில் நம் எதிர் பாலர் ஒருவரின் மேலேற்படும் ஏற்படும் கவர்ச்சியணர்வு. வாழ்க்கையில் ஆழ்ந்த உணர்வுகளைத் தெரியா அனுபவிக்கா பருவத்தில் இளமையில் வருவது. கானல் நீர். ஏனெனில் சீக்கிரம் காணாமல் போய்விடும்.

வாழ்க்கையில் நாம் தனி நபராக வாழ்வதே உண்மை வாழ்க்கை. அது கடினமானது மட்டுமன்றி; அதை நாம் நேர்கொள்ளும்போது அனைத்துக்கவர்ச்சிகளும் கற்பனைகளும் புறந்தள்ளப்பட்டே தீரவேண்டும். அப்பொழுதுதான் நமக்கு நல்லது கிட்டும்.

திரைப்படத்தின் இம்மையக்கருத்தைப் புரியாமல் படம் சிறந்தது என்று எப்படி விமர்சனம் எழுத முடியும்?

பெயரில்லா சொன்னது…

அன்புள்ள அருள்,

மிக அருமையான கவிதை மாதிரியான விமர்சனம். படத்தின் மையக் கருவை மிகச் சரியாக புரிந்து கொண்டு மட்டுமல்லாமல் அதை அழகாக வெளிப்படுத்தவும் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஒரே ஒரு சின்ன வருத்தம்தான். உங்கள் மூவர் மாயாஜாலக் கூட்டணியில் ஏன் ஜீவாவை விட்டு விட்டீர்கள் ? என்னைப் பொறுத்த வரை ஜீவா இந்தப் படத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு தேர்வு.

அருள் சொன்னது…

யாரும் செல்லாத பாதை அல்ல, 'நான் தேர்ந்தெடுக்காத பாதை' என்கிற அளவுக்குதான் இந்த கவிதை இருப்பதாகக் கருதுகிறேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று "இதுதான் கவிதை. இதன் உட்பொருள் என்னவென்றால், வாழ்க்கையில் மனிதர்கள் பட்ட துயரத்தையே ஏனென்று தெரியாமலே படுகிறார்கள். கொஞ்சம் முயற்சித்தால், அத்துயரங்களை நிறுத்திவிட முடியும். அம்முயற்சிக்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்" என்று எளிதான விளக்கத்தை கொள்வது கடினம்.

ஆங்கில கவிதை விமர்சகர்கள் இது ஒரு குழப்பமான புரிதலை ஏற்படுத்தக்கூடிய கவிதை என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, யார் எப்படி புரிந்துகொள்ள விரும்புகிறார்களோ, அப்படியே புரிந்துகொள்ளும் வடிவில் இக்கவிதை இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

"This has got to be among the best-known, most-often-misunderstood poems on the planet."

கட்டுரைக்கும் கவிதைக்குமான வேறுபாடு இதுதான். கவிதை என்பது வாசிப்பவனின் விருப்பத்தையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறது.

கவிதையின் நுட்பமான வேறுபாடுகள் குறித்து பின்வரும் இணைப்புகளில் காண்க:

http://www.gale.cengage.com/free_resources/poets/poems/road_ex.htm
http://www.sparknotes.com/poetry/frost/section7.rhtml
http://www.darkwinner.com/literature/roadAnalysis.html
http://www.essayforum.com/writing-feedback-3/interpretation-road-not-taken-robert-frost-2087/

அருள் சொன்னது…

குலசேகரன் கூறியது...

// //வாழ்க்கையில் நாம் தனி நபராக வாழ்வதே உண்மை வாழ்க்கை. அது கடினமானது மட்டுமன்றி; அதை நாம் நேர்கொள்ளும்போது அனைத்துக்கவர்ச்சிகளும் கற்பனைகளும் புறந்தள்ளப்பட்டே தீரவேண்டும். அப்பொழுதுதான் நமக்கு நல்லது கிட்டும். திரைப்படத்தின் இம்மையக்கருத்தைப் புரியாமல் படம் சிறந்தது என்று எப்படி விமர்சனம் எழுத முடியும்?// //

மனிதன் தனிநபராக வாழ்வது சாத்தியமற்றது. மனிதன் சமூகவிலங்கு. தனித்திருத்தல் சாத்தியமே இல்லை. மற்றபடி, திரைப்படத்தின் மையக்கருத்து இதுதான் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடக்கூடும்.

இப்படத்தில், ஆணின் பார்வையில் 'மேற்படிப்பைத் தேர்வு செய்யும் போது, மனம் விரும்பும் பெண்ணின் விருப்பத்திற்காக எதிர்காலத்தை சமரசம் செய்யலாமா' - என்பது ஒரு பாதை தெரிவு செய்யும் இடம். 'திருமணம் என்று வரும் போது நிச்சயித்த பெண்ணா, காதலித்த பெண்ணா' - என்பது ஒரு பாதை தெரிவு செய்யும் இடம்.

அவ்வாறே, பெண்ணின் பார்வையில் "நீ என்னைத் தேடி வந்தாயா? அல்லது நீ திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணைத் தேடி வந்தாயா?" என்பது நுட்பமான கேள்வி. இரண்டுக்குமே பதில் ஒன்றுதான் என்றாலும் - அதன் பொருள் இருவேறானது.

எந்த பாதையில் செல்வது என்று புரியாமல் குழம்பும் நிலைமை வாழவில் அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த ஒரு கணத்தில் எடுக்கும் முடிவு வாழ்வின் பாதையையே மாற்றிப்போடுகிறது. எப்போதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக நாம் தேர்ந்தெடுத்த ஒரு பாதை நமது இன்றைய ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் காரணமாகி இருக்கும். ஆனால், அந்த முடிவை எடுத்த அந்தத் தருணத்தில் அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்க மாட்டோம்.

எனவே, முடிவெடுக்கும் தருணத்தின் வலியை இப்படம் எடுத்துக்காட்டுவதாக நான் புரிந்துகொண்டேன். அப்படித்தான் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாது.

அருள் சொன்னது…

பல்ஹனுமன் கூறியது...

// //அன்புள்ள அருள், மிக அருமையான கவிதை மாதிரியான விமர்சனம். படத்தின் மையக் கருவை மிகச் சரியாக புரிந்து கொண்டு மட்டுமல்லாமல் அதை அழகாக வெளிப்படுத்தவும் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.// //

உங்கள் பாராட்டிற்கு நன்றி.

பொதுவாக திரைவிமர்சனங்களில் ஒன்று 'மிகச்சிறந்த படம் என்று ஆரம்பித்து பரவாயில்லை வரை' மதிப்பிடுவார்கள். அல்லது, 'மிக மோசம் என்று ஆரம்பித்து பரவாயில்லை வரை' மதிப்பிடுவார்கள். இந்த படம் குறித்து எதிர்எதிர் விமர்சங்கள் வலையுலகில் காணப்படுவது வியப்பளிக்கிறது.

இந்தப் படத்திற்கு மட்டும்தான் 'மிகமிக நன்று' என்றும் 'மிகமிக மோசம்' என்றும் நேரெதிராக விமர்சிக்கின்றனர். அந்த அளவில் கூட இதுஒரு சிறந்த படம்தான்.

Avargal Unmaigal சொன்னது…


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

அருள் சொன்னது…

@Prabhu Shankar
http://veeduthirumbal.blogspot.com/2013/01/blog-post_7.html?showComment=1357715150674#c8918028704544245449

நான் நினைப்பதை நீங்கள் அப்படியே கூறியுள்ளீர்கள். நன்றி

"காதலை வெளிப்படுத்தும் பொழுதும், பிரியும்பொழுதும் அவரின் துடிப்பு அழகு. கடைசி 30 நிமிடம் fentastic. ஜீவாவின் திருமண வரவேர்ப்பிற்கு சென்று அங்கு அவரின் துடிப்பு மனதை பிசைகிறது. இங்கே இளையராஜா வேறு... ஐயோ...பூங்காவில் ஜீவா திருமணத்தை பற்றி பேசும்போது...அது உன்னை பத்தி பேசுனது, கல்யாணத்த பத்தி இல்ல என்று கூறும் காட்சி...இன்னும் திரும்ப திரும்ப இப்படத்தை பார்த்துகொண்டே இருக்கின்றேன். கௌதமின் படைப்புகளில் மிகத்தரமான படைப்பும் இதுதான் என்பது என் இரசனையின் முடிவு, விண்ணைதாண்டி வருவாயாவை விட. I hate web reviewers."