Pages

வியாழன், செப்டம்பர் 15, 2016

காவிரி கலவரம்: கர்நாடகம் மட்டும்தான் குற்றவாளியா?

காவிரி நீர் பங்கீடும், அது தொடர்பான பெங்களூரு கலவரமும் தமிழ்நாட்டில் ஓரளவுக்கு அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அதே நேரத்தில், இந்த சிக்கல் குறித்த தெளிவான புரிதல் தேவை.

இன்றைய சூழலில் - "காவிரி நீர் பங்கீடு" என்பது ஒரு சிக்கலாகவும், "தமிழர்கள் மீதான கொடும் தாக்குதல்" இன்னொரு சிக்கலாகவும் உள்ளது.
இவற்றில், 1. தமிழர்கள் மீதான தாக்குதலில் மட்டுமே கர்நாடகம் குற்றவாளி மாநிலம் ஆகும். 2. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டை ஆண்ட, ஆளூம் கட்சிகளும் - இந்தியாவை ஆண்ட, ஆளூம் கட்சிகளும் தான் குற்றவாளிகள் ஆகும்!'

திராவிடக் கட்சிகளின் பெரும் குற்றம்

1971 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில், காவிரிப் பாசனத்தின் கீழிருந்த நிலப்பரப்பு 4 லட்சத்து 42 ஆயிரம் ஏக்கர் ஆகும். இது 1990 ஆம் ஆண்டில் 21 லட்சத்து 38 ஆயிரம் ஏக்கராக அதிகரித்தது.

அதாவது, திராவிடக் கட்சிகளின் முதல் இருபதாண்டு கால ஆட்சியில் - காவிரி பாசனப்பரப்பில் 17 லட்சம் ஏக்கரை கர்நாடக மாநிலம் அதிகமாக்கியது. இதனால், கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்த்தேவை 110 டி.எம்.சி அளிவில் இருந்து 323 டி.எம்.சி ஆக அதிகரித்தது (தமிழ்நாட்டில் பாசனப்பரப்போ, நீர்த்தேவையோ அதிகமாகவில்லை. அதற்கான தேவையும் இல்லை).

கர்நாடக மாநிலத்தில் காவிரிப் பாசனப்பரப்பை அதிகமாக்கிக் கொண்டே சென்றதை கருணாநிதியோ எம்ஜியாரோ தடுக்கவில்லை. அன்றே அவர்கள் செயல்பட்டிருந்தால் - இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

தேசியக் கட்சிகளின் பெரும் குற்றம்

இந்திய உச்சநீதிமன்றம் தலையிட்டு, இப்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதையே சாக்காக வைத்து, நீதிமன்றம் தீர்வு காணும் என மத்திய அரசு மழுப்புகிறது.

ஆனால், மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் சிக்கலை தீர்க்கும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் இருக்கிறது. மத்திய அரசு எடுக்கும் முடிவில் உச்சநீதிமன்றம் கூட தலையிட முடியாது என அரசியல் சாசனத்தின் 262 ஆவது பிரிவு குறிப்பிடுகிறது.
அதே போன்று, மாநில அரசு நீர்வளங்களை கையாளும் அதிகாரத்தை, மாநிலப் பட்டியலின் 17 ஆம் பிரிவின் கீழ் பெற்றிருந்தாலும் - மத்திய பட்டியலின் 56 ஆவது பிரிவின் படி, மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகளை முறைப்படுத்தும் சட்டத்தை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது.

அதாவது, மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகளை நிர்வகிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றினால், அதன் பின்னர் மாநில அரசுகள் எதுவும் செய்ய முடியாது! (இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவரலாம் என ஏற்கனவே சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது).

மேலும், மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் மோதல் சட்டம் 1956 (Inter - State River Water Disputes Act 1956), ஆறுகள் வாரியச் சட்டம் 1956 (River Boards Act 1956) - ஆகிய சட்டங்களின் படி - இந்திய நாட்டின் இரு மாநில ஆறுகளின் நிர்வாகத்தில் மத்திய அரசு எளிதாக தலையிட முடியும்.

இத்தனை வழிகள் இருந்தும் - வேண்டுமென்றே காவிரி நீர் சிக்கலுக்கு தீர்வு காணாமல், மத்தியில் ஆண்ட, ஆளும் கட்சிகள் - குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் காலம் கடத்தி வந்துள்ளன.

விவசாயிகளின் முயற்சியும் அரசுகளின் சதியும்

மத்திய அரசும் மாநில அரசும் தங்கள் கடமையை செய்யாது காலம் கடத்திய நிலையில் - தமிழக விவசாயிகள் 1983 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் கீழ், 1990 ஆம் ஆண்டில், காவிரி நடுவர் மன்றம் (Cauvery Water Disputes tribunal - CWDT) அமைக்கப்பட்டது.

அதன் இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டில் வெளியான பின்னர், அந்தத் தீர்ப்பு 2013 ஆம் ஆண்டில் அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னர் - இன்னமும் கூட தீர்ப்பை செயலாக்கும் வகையில் - காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board), காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு (Cauvery Water Regulation Committee) ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.

என்ன தான் தீர்வு?

கர்நாடகம் தமிழ்நாட்டின் எதிரி அல்ல. கர்நாடகத்துடன் தமிழக மக்கள் சண்டை போடத் தேவையும் இல்லை. மாறாக, திராவிடக் கட்சிகளும், தேசியக் கட்சிகளும் தான் இன்றைய சிக்கலுக்கு முழு காரணம் ஆகும். இந்த கட்சிகளை பொறுப்பாக்குவதும், தண்டிப்பதுமே தீர்வாக அமையும்.

மிகவும் காலதாமதம் செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு 05.02.2007 இல் வெளியானது. அதன் பின்னரும் காலம் தாழ்த்தி 19.02.2013 இல் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டது.

ஆனால், அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board), காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு (Cauvery Water Regulation Committee) ஆகிய சட்டபூர்வ அமைப்புகளை இன்னமும் அமைக்காமல் நீதியை தள்ளிப் போடுகிறது. இந்த நீதியை இன்னும் எத்தனைக் காலம் பொறுப்பது?

ஒற்றுமையே தீர்வு

இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே தண்ணீர் தகராறுகளை தீர்க்கும் சட்டம் உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. விவசாயிகளின் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து 33 ஆண்டுகள் ஓடிவிட்டன. இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் காவிரியில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் - தமிழர்கள் அதற்காக விடாமுயற்சியுடன் ஒன்றுபட்டு பாடுபடவில்லை என்பதே காரணம்.

உரிமைக்காக போராடாத எந்த இனமும் நீடித்திருக்காது. இனியும் பொருமை காக்காமல், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கவும், அதன் மூலம் காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிமையான பங்கினை ஆண்டுதோரும் முறைப்படி வழங்கவும் - மாநில அரசும், கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

(தமிழர்கள் மீது தாக்குதல்: கர்நாடக அரசு அங்கு நடந்த கலவரத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் முழு இழப்பீடு அளிக்க வேண்டும். குற்றம் செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்)

கருத்துகள் இல்லை: