Pages

சனி, நவம்பர் 26, 2016

500 ரூபாய் இல்லை: குழப்பத்தின் உச்சத்தில் மோடி அரசு!

தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ - இந்திய பொருளாதாரத்தில் மாபெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இரண்டு நாட்களில் 'உங்கள் பணத்தை உங்களுக்கு தருவோம்' என்று சொன்ன மத்திய அரசு - இப்போது புதிய பணமே இல்லாமல் ஒரு மாபெரும் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது! 

முதலில், 1000 ரூபாய் தாளை ஒழித்து, அதற்குப் பதிலாக 2000 ரூபாய்த் தாளைக் கொடுத்து - அதை எங்கேயும் மாற்ற முடியாமல் திண்டாட வைத்துள்ளார்கள்.

பின்னர், ஏடிஎம் எந்திரங்களில் எந்த அளவு பணத் தாள்களை வைக்க முடியும் என்கிற அளவே தெரியாமல் - புதிய ரூபாய் தாள்களின் அளவை மாற்றி, ஏடிஎம் எந்திரங்கள் செயல்படாமல் செய்தார்கள்.

இப்போது, 500 ரூபாய் தாள்களுக்கு பதிலாக - புதிய ரூபாய் தாள்களை அச்சடிக்கவே இல்லை என்கிற தகவல் வெளிவந்துள்ளது. அதனால்தான், 500 ரூபாய் தாள்களை தொலைக்காட்சியிலும் வாட்ஸ்அப்பிலும் மட்டும் காட்டுகிறார்கள், கைகளில் காட்டவில்லை. (இந்தியாவின் மொத்த பணத்தில் பாதி அளவாக 500 ரூபாய் தாள்கள் உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்).

"500 ரூபாய் தாள் இல்லை"

500 ரூபாய் தாள் தொடர்பாக இப்போது வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

பழைய ரூபாய் தாள்களை தடை செய்யும் முன்பு இருந்த 500 ரூபாய் தாள்களின் எண்ணிக்கை 1660 கோடி தாள்கள் ஆகும். இதன் மொத்த மதிப்பு 8 லட்சத்தி 30 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், இதுவரை மத்திய அரசு அச்சடித்திருக்கும் புதிய 500 ரூபாய் தாளின் எண்ணிக்கை 1 கோடி தாள்கள் மட்டும்தான்! (அதாவது, எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவையோ, அதில் 0.06% மட்டும்தான் அச்சடித்துள்ளார்கள். இதில் அச்சுப்பிழையுடனும் சிலவற்றை அச்சடித்துள்ளனர்).

ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான இரண்டு அச்சகங்களில் ரூபாய் நோட்டு தடைக்கு 2 மாதம் முன்பே  2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க உத்தரவிட்டதாம் மத்திய அரசு. ஆனால், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நிதி அமைச்சகத்துக்கு சொந்தமான இரண்டு அச்சகங்களுக்கு, ரூபாய் நோட்டு தடைக்கு ஒருவாரம் முன்னர்தான் உத்தரவிட்டார்களாம்.

(ரிசர்வ் வங்கிக்கும், அச்சகத்துக்கும் இடையேயான மோதல் காரணமாக இந்த தாமதம் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த அச்சகங்களுக்கான தலைமைப் பதவிக்கு ஆள் போடாமல் காலியாகவும் வைத்துள்ளதாம் மத்திய அரசு).

ஆக, இந்திய மக்களின் மிக முக்கிய பணப்பரிமாற்றமாக உள்ள, 500 ரூபாய் தாள்கள் 1660 கோடி தாள்கள் தேவைப்படும் நிலையில், வெறும் 1 கோடி தாள்களை மட்டும்தான் இதுவரை அச்சடித்துள்ளார்கள். இன்னும் 1659 கோடி தாள்களை எப்போது அச்சடிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாத புதிராக உள்ளது.

திட்டமிட்ட சதியா?

1. ஏடிஎம் எந்திரங்களுக்கு பொருந்தாத வகையில் பணம் வடிவமைப்பு, 2. சில்லரையாக மாற்றமுடியாத 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகம், 3. முக்கிய தேவையான 500 நோட்டுகளை அச்சடிக்கவே இல்லை - இவை அனைத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால், மக்கள் பணத்தை வங்கிகளில் முடக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் எல்லாம் நடப்பதாக தெரிகிறது.

"வங்கிகளுக்கு இடையே தான் பணம் மாற வேண்டும். மக்களுக்கு இடையே பணத்தாளாக மாறக்கூடாது" என்பதில் மோடி அரசு தெளிவாக இருந்துள்ளது.

விஜயமல்லயா போன்ற பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட, வராக்கடனாக போய்விட்ட பணம் 6 லட்சம் கோடிக்கு இணையாக, இப்போது மக்களின் பணம் வங்கிகளில் குவிந்துள்ளது. இதனை மீண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனாக கொடுக்கலாம்.

இதற்காகத்தான் எல்லா நாடகமும் நடக்கிறதோ!

செய்தி: Mystery of Missing Rs 500 Notes: Who is Responsible? Govt or RBI?

தொடர்புடைய சுட்டிகள்:

1. மோடி அரசின் பண ஒழிப்பு: தேச பக்தியா, தேசத்தின் மீதான தாக்குதலா?

2. மோடி அரசின் பண ஒழிப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான போர்!

3. கருப்பு பண ஒழிப்பு: ஏழைகளிடம் பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் திட்டமா?

4. மோடி அரசின் சதி: கருப்பு பண ஒழிப்பா? கார்ப்பரேட் கொள்ளையா?


5. புதிய ரூபாய் நோட்டில் ஹிந்தி திணிப்பு: மோடி அரசின் மொழிவெறி!

கருத்துகள் இல்லை: