Pages

வியாழன், நவம்பர் 17, 2016

மோடி அரசின் பண ஒழிப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான போர்!

இந்திய குடும்பங்கள் தங்களது ஆண்டு செலவில் 96% பணத்தாள் மூலமாக செலவிடுகிறார்கள். இந்திய பொருளாதாரம் முழுக்க முழுக்க பணத்தாளின் மூலம் தான் இயங்குகிறது. 

இவ்வளவு முக்கியமான பணத்தாளில் 87% தாள்கள் செல்லாது என்று ஒரே இரவில் அறிவித்துவிட்டது அரசாங்கம். இப்போது, செல்லாது போய்விட்ட பணத்தில் பாதியைக் கூட இனி பணத்தாளாக திருப்பித் தரமுடியாது என்று அடம் பிடிக்கிறது மோடி அரசு.

இது இந்திய பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர். பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும் தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலின் விளைவுகள் மிக மோசமாக இருக்கக் கூடும்.

நினைத்தது என்ன?

கருப்பு பணத்தை ஒழிக்கும் ஒரு வழியாக, 1000 ரூபாய், 500 ரூபாய் ஒழிக்கப்பட்டதை நாம் வரவேற்கிறோம். பெரும்பாலான மக்களும் வரவேற்றார்கள். அதாவது, மக்களிடம் பணமாக உள்ள 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்களை வாங்கிக்கொண்டு, அரசாங்கம் புதிய பணத்தாளை கொடுக்கும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

தற்போது 14 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் பழைய தாள்கள் புழக்கத்தில் இருப்பதால் - அவற்றில் ஓரிரு லட்சம் கோடிகள் கருப்பு பணம் என்று கருதி ஒதுக்கினாலும் கூட - மீதமுள்ள சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் பழைய தாள்களை அரசாங்கம் பெற்றுக்கொண்டு, உடனடியாக புதிய தாளாக கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பாப்பு.

நடப்பது என்ன?

பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்களை எவ்வளவு வேண்டுமானாலும் வங்கிகளில் செலுத்தலாம். ஆனால், குறைந்த அளவுதான் புதிய தாள்களை பெற்றுச்செல்லலாம் - என பணப்பரிமாற்றத்தை ஒருவழி பாதையாக மாற்றி விட்டது மோடி அரசு. 

தற்போதைய மதிப்பீட்டின் படி, இந்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள ரூ. 2000 மற்றும் ரூ. 500 தாள்களின் மொத்த அளவு, அதாவது இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிட்டு வழங்கக் கூடிய அளவு, அதிகபட்சமாக 5 லட்சம் கோடி என்கிறார்கள். இந்த 5 லட்சம் கோடி ரூபாய் தாள்களைக் கூட, மக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் சக்தியற்ற நிலையில் வங்கிகளும் ஏடிஎம் எந்திரங்களும் உள்ளன.
அதாவது, ரூ. 12 லட்சம் கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு தேவை. ஆனால், ரிசர்வ் வங்கியால் அளிக்க முடிகிற அதிக பட்ச அளவோ ரூ. 5 லட்சம் கோடி மட்டுமே. அப்படியானால், மீதம் தேவைப்படும் ரூ. 7 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகளுக்கு என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? 

அரசாங்கத்திடம் புதிய ரூபாய் தாள்கள் போதுமான அளவில் இல்லாததால், ரூபாய் நோட்டுகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

நாட்டின் நிலைமை என்ன?

இந்திய பொருளாதாரம் என்பது ரூபாய் நோட்டுகளால் இயங்கும் பொருளாதாரம் ஆகும். இங்கு மக்களின் பணப்பரிமாற்றத்தில் 87% பணத்தாளின் மூலமாக மட்டுமே நடக்கிறது. அதாவது, பணத்தாள் இல்லாவிட்டால் - இந்திய பொருளாதாரம் இயங்காது.

இந்திய மக்களில் ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும், 15 வயதுக்கு மேற்பட்ட மக்களின் அளவு 35% மட்டுமே. அவர்களில் 9% மக்கள் மட்டுமே டெபிட் கார்ட் வைத்துள்ளனர். 2% மக்கள் மட்டுமே கிரெடிட் கார்ட் வைத்துள்ளனர். 7% மக்கள் மட்டுமே காசோலையை பயன்படுத்தியுள்ளனர். 2 % மட்டுமே மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். ஆக மொத்தத்தில், இந்தியாவின் எல்லா பணப்பரிமாற்றங்களிலும், வெறும் 5% அளவுக்கு குறைவாகத்தான் மின்னணு முறையில் நடக்கிறது. (ஆதாரம்: THE COST OF CASH IN INDIA, by The Institute for Business in the Global Context)

பணத்தை விட்டுவிட்டு, மின்னணு முறையிலும் காசோலைகள் வாயிலாகவும் பணப்பரிமாற்றம் நடப்பது நல்லதுதான். ஆனால், அதற்கு இன்னமும் இந்திய நாடு தயாராகவில்லை. மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்வோரும், கிரெடிட் கார்ட் பயன்படுத்துவோரும் கூட - மிக அதிக தேவைகளுக்கு பணத்தாளையே பயன்படுத்துகின்றனர். 

இந்தியாவில் மக்கள் பொருட்களை வாங்கும் கடைகள்/ இடங்களின் எண்ணிக்கை ஒரு கோடி ஆகும். அவற்றில் வெறும் 10 லட்சம் இடங்களில் மட்டும்தான் 'கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட்' அட்டைகளை பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. இங்கும் கூட மக்கள் பணத்தாளைத்தான் அதிகம் கொடுக்கின்றனர்.

இவ்வாறு, பணத்தாளின் மீது இயங்கும் பொருளாதாரத்தின் மீது - போர் தொடுத்துள்ளது மோடி அரசு. ஒவ்வொரு வீட்டிலும் தங்களது 96% செலவுகளுக்கு பணத்தாள்களையே இந்தியர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த பணத்தாளை ஒழித்ததன் மூலம் - பொருளாதாரத்தையே முடக்கியுள்ளார்கள்.

மோடி அரசின் வலுக்கட்டாய பணப்பறிப்பு

இந்திய பொருளாதாரத்தில் சுழலும் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் தாளில், குறைந்தபட்சம் 7 லட்சம் கோடியை வங்கிகளின் கணக்கில் குவிக்கப்போகிறது மோடி அரசின் பண ஒழிப்பு திட்டம். இந்தப் பணத்தை பணத்தாளாக தர முடியாது என்று மறுப்பதன் மூலமாக - வங்கிகள் பெரும் பணக்காரர்களுக்கு கடன்களை வாரி வழங்கவும், அவற்றை வராக்கடன் ஆக்கவும் போகிறார்கள்.

மோடி அரசால் இந்திய பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதல் முறியடிக்கப்பட வேண்டும்.
குறிப்பு: கருப்பு பணத்தை ஒழிக்க பழைய பணத்துக்கு பதிலாக புதிய தாள்களை தரவேண்டும். அதனை விட்டுவிட்டு, மக்களை கட்டாயப்படுத்தி மின்னணு பணப்பரிமாற்ற முறைக்கு மாற்றலாம் என்பது ஒரு மூடநம்பிக்கை. தடைசெய்யப்பட்ட சுமார் 14 லட்சம் கோடி மதிப்பிலான பணத்தாள்களுக்கு இணையாக, புதிய பணத்தாள் புழக்கத்துக்கு வராமல், இந்திய பொருளாதாரம் ஒருபோதும் சீரடைய வாய்ப்பே இல்லை.

தொடர்புடைய சுட்டிகள்:

1. கருப்பு பண ஒழிப்பு: ஏழைகளிடம் பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் திட்டமா?

2. மோடி அரசின் சதி: கருப்பு பண ஒழிப்பா? கார்ப்பரேட் கொள்ளையா?

3. புதிய ரூபாய் நோட்டில் ஹிந்தி திணிப்பு: மோடி அரசின் மொழிவெறி!

கருத்துகள் இல்லை: