Pages

புதன், நவம்பர் 23, 2016

இடைத்தேர்தல் முடிவுகளும் எதிர்கால அரசியலும்: வடக்கில் இருக்கிறது நம்பிக்கை!

'இருப்பதை இல்லை என்பதும், இல்லாததை இருப்பதாக சொல்வதும்' ஊடகங்களுக்கு கைவந்த கலை! அதனால்தான், 'இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக மூன்றவது இடம்' என்று எழுதுகிறார்கள். கூடவே, 'பாமக காணாமல் போய்விட்டது' என்றும் சொல்கிறார்கள். இதையே உண்மை என்று நம்பும் சில பாமக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் நொந்து புலம்புவதையும் பார்க்க முடிகிறது.

புள்ளி விவரங்கள் உண்மையானவை. ஆனால், அதனை எடுத்துக்காட்டும் விதத்தில் ஏமாற்று வித்தைகளை அரங்கேற்றுகிறார்கள். எனவே, உண்மை என்ன என்பதை பக்க சார்பற்று ஆராய வேண்டும்.

இடைத்தேர்தல் முடிவுகள் காட்டும் 'உண்மை' என்ன?

1. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்தில் மூன்றாவது கட்சிகள் காலியாகிவிட்டன.

திமுக, அதிமுக கட்சிகள் இரண்டும் சேர்த்து, தஞ்சையில் 93.32 %, அரவக்குறிச்சியில் 92.64 %, திருப்பரங்குன்றத்தில் 90.29 % வாக்குகளை பெற்றுள்ளன. இந்த மூன்று தொகுதிகளிலும் திமுக அல்லாத எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து 10 % வாக்குகளைக் கூட பெற முடியவில்லை.

அதாவது, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் - மூன்றாவது கட்சி என்பதே இல்லை என்கிற நிலை நேர்ந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி, முறையே அரவக்குறிச்சியில் 1.92 %, தஞ்சையில் 2.04 %, திருப்பரங்குன்றத்தில் 3.41 % வாக்குகளை பெற்றுள்ளது.

கண்ணாடி குவளையில் அரைக் குவளை அளவு தண்ணீர் இருந்தால் - "அரைக் குவளை தண்ணீர் இருக்கிறது" என்று நல்ல விதமாகவும் சொல்லலாம். "அரைக் குவளை காலியாக இருக்கிறது" என்று கெட்ட விதமாகவும் சொல்லலாம். 

பாஜக மிகக்குறைந்த அளவு வாக்குகளை வாங்கிய நிலையில் கூட - அந்தக் கட்சிதான் மாற்று என்பது போல, நம்பவைக்கும் கோயபல்ஸ் பிரச்சாரத்தை சங்கப்பரிவாரம் மேற்கொண்டுள்ளது. ஆனால், 2016 சட்டமன்ற தேர்தலில் இதைவிட மிக அதிக அளவு வாக்குகளை வாங்கியுள்ள பாமக, ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

2. பாமகவின் உண்மை நிலை என்ன?

தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. இந்த தொகுதிகளில் பாமகவுக்கு என ஆதரவு தளம் எதுவும் இல்லை. அங்கு பாமக அமைப்பு ரீதியில் வலிமையாக இல்லை. எனவே, பாமக மிகக் குறைவான வாக்குகளை பெற்றதில் எந்த வியப்பும் இல்லை. (எடுத்துக்காட்டாக, அரவக்குரிச்சியில் பாமக தனித்து போட்டியிட்ட, 1991 தேர்தலில் 550 வாக்குகளையும் 1996 தேர்தலில் 737 வாக்குகளையும் மட்டுமே பெற்றது. இரண்டு தேர்தல்களிலும் தஞ்சாவூரில் பாமக போட்டியிடவே இல்லை)

அதே நேரத்தில், வடக்கு மாவட்டங்கள் அனைத்திலும், பாட்டாளி மக்கள் கட்சி பலமாக இருக்கும் கட்சியாகும். உண்மையில், திமுக - அதிமுக கட்சிகளுடன் மூன்றாவது ஒரு கட்சி மோதும் நிலை வடக்கு மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அத்தகைய வலிமையை கொண்டுள்ள ஒரே கட்சி பாமக மட்டுமே.

இந்த இடைத்தேர்தலில் பாஜக அதிகபட்சமாக 3.41% வாக்குகளை வாங்கியதற்கே, அக்கட்சி வலிமை அடைந்து விட்டதாக கூறுகிறவர்கள் - சட்டமன்ற தேர்தலில், பாமக 80 தொகுதிகளில் இதை விட அதிக வாக்கு விழுக்காட்டினை  பெற்றது என்கிற உண்மையை மறைத்து விடுகின்றனர். அதிலும் 50 தொகுதிகளில் 10% வாக்குகளுக்கும் மேலாக பாமக பெற்றது. சில தொகுதிகளில் இது 30% அளவுக்கும் கூடுதலாகும்.

ஒரு தொகுதியில் 3% வாக்கு வாங்கிய பாஜகவே மாற்றாக வந்தது என்றால், 80 தொகுதிகளில் அதை விட அதிக வாக்கு வாங்கிய பாமக மாற்று இல்லையா? பாஜக விடயத்தில் "அரைக் குவளை தண்ணீர் இருக்கிறது" என்று சொல்லும் ஊடகம், பாமக விடயத்தில் "அரைக் குவளை காலியாக இருக்கிறது" என்று பிரச்சாரம் செய்கிறது. இதுதான் உண்மை.

3. இனி வரும் அரசியல் என்ன?

பல கட்சி அரசியல் முறையில் (multi-party system) இருந்து, சர்வாதிகாரமான இரு கட்சி அரசியல் முறைக்கு (two-party system) தமிழ்நாடு மாறுகிறது. அதிமுக - திமுக என்கிற இருகட்சி சர்வாதிகாரத்துக்கு மாற்றாக, மூன்றாவது கட்சி ஒன்று எழுந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். 
இடைத்தேர்தல் முடிவுகளின் படி - இரண்டாம் இடத்தை பிடித்த திமுகவின் வாக்குகளுடன் அதற்கு பின்னால் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் வாக்குகளையும் கூட்டினால் கூட, அது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதாக இல்லை. அதாவது, எல்லா எதிர்க்கட்சிகளும் திமுகவுடன் ஓரணியில் நின்றால் கூட, அதிமுகவின் இடைத்தேர்தல் வெற்றியை தடுத்திருக்க முடியாது.

இந்த நிலைமைக்கு மாற்றாக இருப்பது வட தமிழ்நாடும் பாட்டாளி மக்கள் கட்சியும் மட்டும்தான். வெற்றி பெறும் கட்சிக்கும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் கட்சிக்கும் இடையிலான வாக்கு வேறுபாடுகளை விட, மூன்றாவது கட்சி அதிகமாக வாக்குகளை வாங்கும் நிலைமை வட தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. அந்த மூன்றாவது கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே உள்ளது.

"வடக்கில் இருக்கிறது நம்பிக்கை!"

வட தமிழ்நாட்டில் பாமக பெற்றுள்ள வலிமையில் இருந்து மட்டுமே - அதிமுக - திமுக என்கிற இருகட்சி சர்வாதிகாரத்துக்கு எதிரான எழுச்சி உருவாக முடியும். அதுதான், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றும் ஒரே வாய்ப்பாகவும் அமையும்.

அதாவது, வட தமிழ்நாட்டில் பாமக வலிமையான கட்சியாக மாற்றம் பெற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் திமுக - அதிமுகவுக்கு எதிரான சக்திகள் பாமகவுடன் அணிதிரள வேண்டும். அதுவே தமிழ்நாட்டின் விடிவுக்கு ஒரே வழி.

தொடர்புடைய சுட்டி: 

கருத்துகள் இல்லை: