Pages

செவ்வாய், ஜனவரி 22, 2013

மருத்துவர் அய்யா கடலூர் மாவட்டத்தில் நுழையத் தடை: வன்னிய சாதிவெறியை எதிர்ப்போர் இதனை வரவேற்காதது ஏன்?


அனைத்து சமுதாயப் பேரியக்கம் - சமூக அமைதிக்கான ஒரு முன்முயற்சி

மருத்துவர் அய்யா அவர்கள் மாவட்டம் தோரும் நடத்திவரும் "அனைத்து சமுதாயப் பேரியக்கக் கூட்டம்" சமூக அமைதிக்கான ஒரு உன்னத இயக்கமாகும். 

பள்ளி, கல்லூரி செல்லும் பதின்வயது பெண்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் ஒரு அமைப்பினரின் சதிச்செயல்களை முறியடிக்கவும், சாதி ஒழிப்பு என்கிற பெயரில் பெண்களின் கல்வி உரிமையை பறிப்போருக்கு எதிராகவும், இளம்பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்தால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஏவப்படுவதை கண்டித்தும் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

தருமபுரியில் கலவரம் நடந்த சூழலில், தமிழ்நாட்டில் இனி எங்குமே அத்தகைய நிகழ்வுகள் நடக்கக் கூடாது. காதல் நாடகம், கடத்தல், பணப்பறிப்பு, வன்கொடுமைச் சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுதல் - இதுபோன்ற செயல்களை சில அமைப்பினர் திட்டமிட்டு அரங்கேற்றும் நிலையில், கலவரத்துக்கு காரணமான இப்பிரச்சனைக்கு சனநாயக முறையில் பேச்சுவார்த்தை, அமைதிவழி போராட்டம் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே அனைத்து சமுதாயப் பேரியக்கத்தின் நோக்கம் ஆகும்.
ஆனால், சனநாயகம் என்பதன் பொருள் புரியாத சர்வாதிகார கூட்டத்தினர் இதனால் "சமூக அமைதிக்கு பங்கம் விளையும்" என்கின்றனர். மதுரை மாவட்டத்திலும் கடலூர் மாவட்டத்திலும் நுழைவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. "பதட்டமான சூழ்நிலையினை கருத்திற்கொண்டும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டும் தடைவிதிக்கப்படுவதாக" அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர்.

வன்னிய சாதிவெறியை எதிர்ப்போர் மௌனம் காப்பது ஏன்?

வன்னிய சாதிவெறி எதிர்ப்பு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள், மருத்துவர் அய்யா அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடியவர்கள் இந்தத் தடை குறித்து மௌனம் சாதிப்பது வியப்பளிக்கிறது.

வன்னிய சாதிவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தினீர்கள், உண்மை அறியும் அறிக்கைகளை வெளியிட்டீர்கள் - ஆனால், இப்போது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது எதற்காக மௌனம் சாதிக்கிறீர்கள்?
குறிப்பாக திமுக, இடதுசாரியினர், தமிழ்தேசிய வாதிகள், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் மதுரை மாவட்டத்திலும் கடலூர் மாவட்டத்திலும் நுழைவதற்கு மருத்துவர் அய்யா அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்று அறிக்கை வெளியிடாதது ஏன்?

திராவிடக் கட்சிகளே, திராவிட அமைப்புகளே, தமிழ்தேசியர்களே, பொதுவுடைமை இயக்கங்களே, மனித உரிமைப் போராளிகளே - எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தப் பக்கத்தில் நீங்கள் இல்லை. அந்தப்பக்கத்தில் நில்லுங்கள்.

ஞாயிறு, ஜனவரி 20, 2013

ஐநா மனிதஉரிமை ஆணையத்தின் 22ஆம் கூட்டம்: இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தை இந்தியா கொண்டுவரவேண்டும்!


ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 22 ஆவது கூட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெற உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாற்றுகள் மீது கடந்த ஓராண்டு காலத்தில் இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.

"போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து இலங்கை அரசு முறையாக விசாரணை நடத்தாததால், இது குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிடக்கோரும் தீர்மானத்தை இந்தியா கொண்டுவரவேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்தவேண்டும்" என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அந்த அறிக்கை:

ஐநா மனிதஉரிமை ஆணையத்தின் 22ஆம் கூட்டம் - இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தை இந்தியா கொண்டுவரவேண்டும்: மருத்துவர் இராமதாசு அறிக்கை

"இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில்,  ஒரு லட்சத்திற்கும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கைகளை இலங்கை அரசு தட்டிக் கழித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அரசே விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன்பின் ஓராண்டாகிவிட்ட நிலையில், இலங்கையின் மனித உரிமைச் சூழலில் எந்த ஒரு முன்னேற்றமும் தென்படவில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையக்குழு இலங்கை சென்ற போது, அதன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ராஜபக்சே அரசு, மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளையின் இலங்கைப் பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தர மறுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய இலங்கை அரசு, அதை செய்யாமல்  மனித உரிமைகளுக்கு எதிரான செயல்களிலும், தமிழர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நடத்திய தமிழ் மாணவர்களை கைது செய்து கொடுமைப்படுத்துதல், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துதல், தமிழ் பெண்களை கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்து அடிமைகளைப் போல நடத்துதல், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் 10 மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் படையினரை நிறுத்தி தமிழர்களின் சுதந்திரத்தைப் பறித்தல், தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்திற்கு அனுமதி மறுத்ததற்காக இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்தது, தமிழர்கள் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்குவது என இலங்கை அரசு தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

இலங்கை அரசின் இந்த போக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளையும், மற்ற உலகத் தலைவர்களும் கடுமையாக கண்டித்திருக்கின்றனர். ஆனால், இந்திய அரசு இதை இன்று வரை கண்டிக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
நவநீதம்பிள்ளை
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 22 ஆவது கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் , இந்தக் குற்றச்சாற்றுகள் மீது கடந்த ஓராண்டு காலத்தில் இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும்  விவாதிக்கப்படவிருக்கிறது. அப்போது போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து இலங்கை அரசு முறையாக விசாரணை நடத்தாததால், இது குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிடக்கோரும் தீர்மானத்தை இந்தியா கொண்டுவரவேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்தவேண்டும். 
கடந்த ஆண்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு தயங்கியது.அப்போது, தமிழக அரசியல் கட்சிகள் கொடுத்த நெருக்கடியால் தான், வேறுவழியின்றி தீர்மானத்தை ஆதரிக்க ஒப்புக்கொண்டது. அதேபோல், இப்போதும் மத்திய அரசை  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படவைக்க தமிழக கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"  என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்

வியாழன், ஜனவரி 10, 2013

பாவத்தைக் கழுவியதா ஆனந்த விகடன்: சமந்தாவுக்கு சிறந்த நடிகை விருது!

நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் குறித்து அநியாயமாக எதிர்ப்பு விமர்சனத்தை பத்திரிகைகளும் வலைப்பூ விமர்சகர்களும் எழுதினர். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று வள்ளலார் சொன்னது போல, கௌதம் மேனனின் படத்தை உள்வாங்கும் திறன் விமர்சர்களுக்கு இல்லை என்பதை இப்படம் மெய்ப்பித்தது. 

ஆனால், தாமதமாக வந்த பல வலைப்பூ விமர்சனங்கள் நீதானே என் பொன்வசந்தம் மிகச்சிறந்த திரைப்படம் என எடுத்துக்கூறின. (1. வீடு திரும்பல்,  2. யுவகிருஷ்ணா, 3. நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!)
மிகச்சிறந்த இப்படத்திற்கு 40 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்து பாவம் தேடிக்கொண்டது ஆனந்த விகடன். ஆனால், நல்ல வேலையாக 2012 ஆம் ஆண்டின் சிறந்த நடிகை என்று "நீதானே என் பொன்வசந்தம்" கதாநாயகி சமந்தாவிற்கு விருது வழங்கியுள்ளது ஆனந்த விகடன்.

"வீடு திரும்பல்" வலைப்பூவிலிருந்து ஒரு பின்னூட்டம்:

"வெளியேதெரியாமல் அமுங்கிப்போன சில நல்ல படங்களை தேடிப்பிடித்து பார்க்கவைத்தவர்கள் நம் இணையதள விமர்சகர்கள் இவர்கள் விமர்சனம் தரமானது, உண்மையானது. ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகள் தரமான படங்களுக்கு 45 மதிப்பெண்னும், குப்பை படங்களுக்கு 42 மதிப்பெண்னும் வாரி வழங்கும் வருமான விசுவாசம் இங்கே இருக்காது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருந்த நீதானே என் பொன் வசந்தத்திற்கு இவர்களின் எதிர்மறையான விமர்சனம் படத்தின் மீதான எனது ஆர்வத்தை குறைத்துவிட்டது. 
"அம் மனநிலையிலேயே படத்தை பார்த்தேன். ஆனால் படம் ஓட ஓட என்னை முழுதும் ஆக்ரமித்துவிட்டது. படம் முடிந்தும் அதில் இருந்து வெளிவர முடியவில்லை. சமந்தா- சமகால நடிகைகளிடம் இல்லாத ஒரு ஈர்ப்பு. கணகள் முழுவதும் காதல். காதலை வெளிப்படுத்தும் பொழுதும், பிரியும்பொழுதும் அவரின் துடிப்பு அழகு. கடைசி 30 நிமிடம் fentastic. 
ஜீவாவின் திருமண வரவேர்ப்பிற்கு சென்று அங்கு அவரின் துடிப்பு மனதை பிசைகிறது. இங்கே இளையராஜா வேறு... ஐயோ...பூங்காவில் ஜீவா திருமணத்தை பற்றி பேசும்போது...அது உன்னை பத்தி பேசுனது, கல்யாணத்த பத்தி இல்ல என்று கூறும் காட்சி...இன்னும் திரும்ப திரும்ப இப்படத்தை பார்த்துகொண்டே இருக்கின்றேன். கௌதமின் படைப்புகளில் மிகத்தரமான படைப்பும் இதுதான் என்பது என் இரசனையின் முடிவு, விண்ணைதாண்டி வருவாயாவை விட. I hate web reviewers. என்ன ஆச்சி உங்களுக்கு. சறுக்கியது கௌதம் அல்ல.- ரசிகர்கள்தான்." என்று அந்த வலைப்பூவில் கூறப்பட்டிருந்தது.

கொஞ்சமாவது பாவத்தைக் கழுவிய ஆனந்த விகடனுக்கு நன்றி.

செவ்வாய், ஜனவரி 08, 2013

பொங்கல் திருநாளை முன்னிட்டு சிகரெட் வாங்கினால் தங்கக்காசு! தமிழர் பண்பாட்டை இழிவுபடுத்தும் சிகரெட் நிறுவனம்

புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்திய நாடு முழுவதும் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் புகைபிடித்தலால் கொலை செய்யப்படுகின்றனர். தமது வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே இறந்து போவதால் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்காக சிகரெட் நிறுவனங்கள் பலவிதமான சட்டவிரோத விளம்பர தந்திரங்களை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் "பொங்கல் திருநாளை முன்னிட்டு சிகரெட் வாங்கினால் தங்கக்காசு பரிசு" என்கிற விளம்பரத்துடன் தமிழர் பண்பாட்டை அவமானப்படுத்தும் அவலம் சென்னை நகரில் நடந்துவருகிறது.
"காவண்டர் ஸ்பெஷல் சிகரெட் - இந்த பொங்கல் திருநாளில் வெல்லுங்கள் தங்கம்' என்கிற விளம்பரம் சென்னையில் ஏராளமான சிகரெட் விற்கும் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தக் கடைகளில் "ஹாப்பி பொங்கல்" எனும் பொங்கல் வாழ்த்துடன் காவண்டர் சிகரெட் பாக்கெட் விற்கப்படுகிறது. அதற்குள் 'பொங்கல் சலுகை தங்கக்காசு, வெள்ளிக்காசு, கடிகாரம், பணப்பரிசு' என்கிற பரிசுக் கூப்பன் இணைக்கப்பட்டுள்ளது.  பரிசுக் கூப்பனில் உள்ள பரிசும் அளிக்கப்படுகிறது.

"புகையிலைப் பொருட்களை எந்த வடிவிலும் விளம்பரப் படுத்தக்கூடாது. புகையிலைப் பொருட்களுடன் இலவச இணைப்புகள் எதையும் அளிக்கக் கூடாது" என இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விளம்பரம் செய்வோர், பரிசுகள் அளிப்போர் மீது ஐந்தாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் அச்சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டில் சிகரெட் நிறுவனங்கள் விளம்பரம் செய்வதும், மிகத் துணிச்சலாக பொங்கல் திருநாளுக்கு தங்கக்காசு பரிசு அளிப்பதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த அநியாயத்தை தமிழ்நாடு அரசு இனிமேலும் வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
இந்த சட்டவிரோதச் செயலை தமிழ்நாட் அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் முன்னாள் இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

"சிகரெட்டுடன் இலவசப் பரிசுகள் எதையும் அளிக்கக் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை பொங்கல் பரிசாக அளிப்பது மிகக் கொடுமையான செயல். தமிழர் பண்பாட்டை இழிவுபடுத்தும் இக்கொடிய செயல் புரிந்தோர் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

"காவண்டர் ஸ்பெஷல் சிகரெட் - இந்த பொங்கல் திருநாலில் வெல்லுங்கல் தங்கம்' என்கிற விளம்பரம் மற்றும் சிகரெட் பெட்டி மீது பொங்கல் வாழ்த்துடன் விற்பனை செய்யும் காவண்டர் சிகரெட் தயாரிப்பாளர்களான காட்ஃபிரே பிலிப் இந்தியா நிறுவனத்தினர், அதன் முகவர்கள், விற்பனையாளர்கள் மீது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கடைகளில் ஒட்டப்பட்டுள்ள இத்தகைய சிகரெட் விளம்பரங்களை முற்றிலுமாக அகற்றவும், பொங்கல் வாழ்த்துடன் விற்பனை செய்யப்படும் காவண்டர் சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றி அழிக்கவும் வேண்டும். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

சனி, ஜனவரி 05, 2013

புதுவை பாலியல் வன்கொடுமை: தலித் இளைஞர்களால் வன்னியப் பெண் சீரழிக்கப்பட்டால் அது சாதிவெறி ஆகாது!


சம்பவம் 1: சிதம்பரம் - சாதிவெறி 

சிதம்பரத்தை அடுத்த சென்னிநத்தம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன். பரதூர்சாவடி துர்கா. ஒரே கல்லூரியில் படித்த இருவருக்கும் இடையே இருந்த தொடர்பை கண்ட பெண்ணின் குடும்பத்தினர், பையனைக் கொலை செய்துவிட்டனர். கொலை செய்யப்பட்டவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள குடும்பத்தினர் வன்னியர்கள்.

இதற்காக "வன்னியர் சங்கத்தின் தலைவர் ஜெ. குரு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன்ர் மருத்துவர் இராமதாசு அய்யா ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில்" இந்த கொலை நடந்ததாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தலித் அமைப்பினரும், தம்மை நடுநிலையாளர்கள் என்போரும், மனித உரிமைக்காக பேசுவதாக சொல்லிக்கொள்பவர்களும் கோரிக்கை வைத்தனர். கூடவே, இது வன்னிய சாதிவெறியால் நடந்த கொலை என்றும் சொன்னார்கள்

சம்பவம் 2: புதுவை - சாதிவெறி அல்ல

புதுச்சேரி அருகே உள்ள கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அப்பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் தினமும் தனி வகுப்புக்காக வந்து சென்றுள்ளார். வில்லியனூர் சென்றுவிட்டு, வீடு திரும்ப மாணவி வழக்கமான தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தின் நடத்துநர், மாணவியின் தாயாருக்கு உடல்நிலை மோசமடைந்துவிட்டது. அவரை விழுப்புரத்தில் சேர்த்திருப்பதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அழுத மாணவிக்கு மயக்க மருந்து கலந்த கைக்குட்டையைக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார்.
விழுப்புரத்தில் ஓரிடத்தில் நடத்துநரும் அவரது கூட்டாளிகளும் மாணவியைக் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பத்தாம் வகுப்பில் 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று நன்கு படிக்கும் மாணவியை காமக்கொடூரர்கள் சீரழித்துள்ளனர். சீரழிக்கப்பட்ட மாணவி 17 வயதே ஆகும் சிறுமி.

பாலியல் வன்கொடுமையால் சீரழிக்கப்பட்ட சிறுமி வன்னியர் வகுப்பை சேர்ந்தவர். இக்கொடுமையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.
அப்பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஏற்கனவே வன்னியப் பெண் ஒருவரை நாசமாக்கியவர்தான் என்று கூறுகின்றனர். மேலும், ஒரு கூட்டமாக இத்தகைய நடவடிக்கையில் சிலர் திட்டமிட்டு ஈடுபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

தலித் இளைஞர்களால் வன்னியப் பெண் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வை ஒருவரும் சாதி வெறி என்று கூறவில்லை. யார் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கூட ஒருவரும் பேசவில்லை.

குற்றச்செயல்களை சமூகத்தோடு தொடர்புபடுத்துவது சரிதானா?

தீவிரவாதம், பயங்கரவாதம், குற்றச் செயல்களை அவை குற்றம் என்கிற அளவில் மட்டுமே பார்ப்பதுதான் நியாயமானது. அதனைக் குற்றம் இழைத்தவர்களின் சமூகத்தோடு தொடர்பு படுத்தக்கூடாது.

ஆனாலும், குண்டு வைத்தவர் இஸ்லாமியர் என்றால் அதை 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்பதும், அதுவே இந்துவாக இருந்தால் வெறுமனே 'தீவிரவாதம்' என்பதும் நாட்டில் நடைமுறையாக இருக்கிறது.

அப்படித்தான், வன்னியர்கள் தொடர்புடைய குற்றங்கள் எல்லாம் திட்டமிட்ட சாதிவெறி, அதுவே தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்புடைய குற்றங்கள் என்றால் அது தனிப்பட்ட நிகழ்வு என்பதுதான் நடுநிலைவாதம்.

வாழ்க நடுநிலைமை! வாழ்க ஜனநாயகம்! வாழ்க மனித உரிமை!

குறிப்பு: புதுச்சேரி காவல்துறையில் மிக முக்கியமான பொறுப்புகளில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அதனால்தான் வழக்கைத் திசைதிருப்பி, குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சி நடக்கிறது என்றும் கூறுகின்றனர். மேலும் குற்றம் நடந்த இடம் தமிழ்நாட்டில் உள்ளது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றுவதே நியாயமாக இருக்கும்.
தொடர்புடைய சுட்டிகள்: 

1. சாதிக்கலவர கொலைகளும் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியும்!

2. இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளே சமுதாய கொந்தளிப்புக்கு காரணம்: தீர்வு என்ன?

வெள்ளி, ஜனவரி 04, 2013

ரஜினி ஒரு மாமனிதர் - எனது அனுபவம்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் செய்தியாக "தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்.

சைதாப்பேட்டையில் ரசிகர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எரித்தனர். பொன்னேரி பகுதியில் ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வற்புறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள்.இந்த நிலையில் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் ரஜினி.
ரசிகர்கள் கூறும்போது, "தினமும் ஆறு பாக்கெட் சிகரெட் பிடிப்போம். உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். இதனால் தினமும் ரூ. 300 வரை மிச்சமாகிறது. குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள்" என்றனர். ரொம்ப மகிழ்ச்சி என்று கூறிய ரஜினி, இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றார்" என்று செய்திகள் கூறுகின்றன. (இங்கே காண்க: புகைப் பழக்கத்தைக் கைவிட்ட ரசிகர்களை நேரில் பாராட்டிய ரஜினி!)

இந்த நிகழ்வினை கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட ஒரு மாபெரும் மாற்றம் என்று நான் கருதுகிறேன்.

ஓர் நெகிழ்ச்சியான அனுபவம்.

1998 ஆம் ஆண்டு வாக்கில் மருத்துவர் அய்யா அவர்கள், புகையிலை தீமையை எதிர்த்து பசுமைத் தாயகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆணையிட்டார்கள். அது தொடர்பான வேலைகளில் ஈடுபட்ட காலத்தில் 2000 ஆவது ஆண்டுவாக்கில், 'சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளால் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாகிறது' என சில அறிவியல் ஆய்வுகள் வெளிவந்ததைக் காண முடிந்தது. எனவே, பசுமைத் தாயகம் சார்பில் 'சினிமாவும் புகைபிடிக்கும் பழக்கமும்' என்கிற கருத்தில் நாட்டம் செலுத்தத் தொடங்கினோம்.

நடிகர் சூர்யா புகைபிடிக்கும் காட்சி - உலகின் முதல் போராட்டம்!

2002 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று நடிகர் சூர்யா நடித்த 'ஸ்ரீ' திரைப்படம் வெளிவர இருந்தது. இதற்கான மிகப்பெரிய விளம்பர பேனர்,  நடிகர் சூர்யா புகைபிடிக்கும் காட்சியுடன் சென்னை அண்ணா சாலையில் தேவி திரையரங்கின் எதிரே மே மாதமே அமைக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து போராட வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தெரிவித்தார்கள்.
மே 31 உலக புகையில எதிர்ப்பு நாளை முன்னிட்டு அந்த பதாகையை மறைத்து பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் எதிர்ப்பு பதாகையைக் கட்டப்பட்டது. மறுநாள் பத்திரிகைகளில் அது செய்தியாக வெளியானது. உண்மையில் சினிமாவில் புகைபிடிப்பதை எதிர்த்து உலகில் நடந்த முதல் போராட்டம் அதுதான்.

பாபா பட எதிர்ப்பு போராட்டம்

2002 ஆகஸ்ட் 15 அன்று வெளிவர இருந்த பாபா திரைப்படத்தின் முதன்மை விளம்பரம் நடிகர் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் படத்துடன் வெளிவந்திருந்தது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் பசுமைத் தாயகம் சார்பில் கோரப்பட்டது. பாபா திரைப்படத்தின் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் அய்யா அவர்கள் 2002 ஆகஸ்ட் 11 அன்று பூம்புகாரில் நடந்த மாநாட்டில்  பேசினார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஒரு அரசியல் சக்தியாக பார்க்கப்பட்ட அக்காலத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது. மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவர் அய்யா அவர்களை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
பின்னர், சினிமாவில் புகைபிடிப்பதற்கு எதிரான ஆய்வுகளும் வெளியாயின. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது. (Effect of Smoking on Movies - THE LANCET 2003) இந்தியத் திரைப்படங்களில் சிகரெட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு புகைபிடிக்கும் காட்சிகள் திணிக்கப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை கூறியது. (“BOLLYWOOD” VICTIM OR ALLY- WHO 2003)
அதே ஆண்டில் (2003) உலக புகையிலை எதிர்ப்பு நாள் முழக்கமாக "புகையில்லா சினிமா" எனும் கருத்தை முன்வைத்தது உலக சுகாதார நிறுவனம். (World No Tobacco Day 2003: Tobacco free film)

அதன் பிறகு, திரைப்படங்களில் புகைபிடிக்கும் எல்லா நடிகர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் போராடியது. தமிழ் திரைப்பட நடிகர்களில் திரு. கமலஹாசன், திரு. சூர்யா, திரு. விஜய், திரு. விக்ரம் ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தனர். ஏ.வி.எம் நிறுவனம் புகைபிடிக்கும் காட்சிகளுடன் இனி திரைப்படங்கள் எடுக்க மாட்டோம் என்று அறிவித்தது.
(மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இந்திய நலவாழ்வுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிராக சட்ட விதிகளை உண்டாக்கினார். பலவிதமான சட்ட போராட்டங்களுக்கு பின்னர் இப்போது - திரைப்படங்களில் புகையிலை எச்சரிக்கை, விழிப்புணர்வு விளம்பரம், புகைபிடிக்கும் காட்சி வரும்போது அதற்குள் எச்சரிக்கை என அந்த விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.)
விஜய் 'துப்பாக்கி' படத்தில் புகைபிடிக்கும் காட்சியுடன் சுவரொட்டி வெளியானதற்கு பசுமைத் தாயகம் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்படத்தில் அக்காட்சி இடம்பெறவில்லை.

ரஜினி - மாபெரும் மனமாற்றம்

மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையின் பேரில், சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு எதிராக பசுமைத் தாயகம் அமைப்பு தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில், தனது 63ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் "சிகரெட் பிடித்தனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்சினை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான். தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டுவிடுங்கள்" என்று கோரினார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள், முன்பு அவர் 'பாபா' படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்தற்கு மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை சூசகமாகக் குறிப்பிட்டு "ஆவர் சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்கு பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை" என்றும் குறிப்பிட்டார்.

மருத்துவர் அய்யா அவர்கள் ரஜினிகாந்த் அவர்களைத் தனிப்பட்ட முறையிலோ, உள்நோக்கத்துடனோ எதிர்க்கவில்லை. ஒரு நியாயமான நோக்கத்திற்காக, ரஜினிகாந்த் எதிர்க்கவே முடியாதவர் என்று கருதப்பட்ட நேரத்தில், இதற்காக பலராலும் தூற்றப்படுவோம் என்று தெரிந்தும் மருத்துவர் அய்யா அவர்கள் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் காட்சிகளை எதிர்த்தார். அன்று பலரும் மருத்துவர் அய்யாவுக்கு ஏன் இந்த வேலை என்று கேட்டனர். அந்தக் கேள்விக்கு இன்று ரஜினிகாந்த் அவர்களே பதில் சொல்லிவிட்டார்.

ஒருகாலத்தில் புகைபிடிப்பதை ஒரு ஸ்டைலாக அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த அவர்கள், இன்று புகைபிடிப்பதைக் கைவிடுவதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறார். இந்த மாற்றம் வரவேற்க தக்கதாகும். அதுமட்டுமில்லாமல், தவறான நிலைபாடுகளில் வீம்பாக இருக்கும் சராசரி மனிதர்களைப் போன்று இல்லாமல் - தவறுதான் என தன்னைத் திருத்திக்கொண்டு, தவறு செய்யவேண்டாம் என அடுத்தவருக்கும் போதிக்கும் ரஜினிகாந்த் அவர்கள் மாமனிதர்தான்.
மேலே உள்ள சுவரொட்டி ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சென்னையில் ஒட்டப்பட்டது. இதனைப் பார்த்துவிட்டு மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 'நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்று கூறினாராம். வாழ்க ரஜினி.

புதன், ஜனவரி 02, 2013

தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம் ஓர் புத்தாண்டுக் கனவு 2013

அரசியல் என்பது சாக்கடை. அது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம். ரவுடிகளும் கட்டைப் பஞ்சாயத்து தாதாக்களும்தான் அரசியலுக்கு வர முடியும் என்று பலவிதமான கருத்துகள் மக்களிடையே உலாவருகின்றன. இவையெல்லாம் உண்மையில் ஒருவிதமான 'பயங்கரவாத' கருத்துகள் என்றே நான் கருதுகிறேன்.

ஏனேனில், நாம் ஒரு ஜனநாயக அமைப்பில் வாழ்கிறோம். இங்கு வாழ்வின் மிக அடிப்படையான அம்சம் அரசியல்தான். எப்படி மனிதன் காற்றும் நீரும் உணவும் இன்றி உயிர் வாழமுடியாதோ, அப்படியே அரசியல் இல்லாமல் ஜனநாயக நாடுகள் இருக்க முடியாது. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களது எண்ணம், கருத்து, நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அரசியல் இல்லாமல் நீங்கள் உயிர்வாழ இயலாது. 'நான் உண்டு, என் வேலை உண்டு' என்பதால் மட்டும் உங்கள் வாழ்க்கை நடந்து விடாது.

ஒருவினாடி கண்ணை மூடி சிந்தித்து பாருங்கள். தினமும் உணவு, தண்ணீர், மின்சாரம், வேலைக்கு போக போக்குவரத்து என வாழ்க்கையில் பலவிதமான தேவைகள் இருக்கின்றன. பிள்ளைகள் பள்ளிக்கு போகின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவ மனைகளுக்கு செல்கின்றீர். வீடு, சொத்து என்கிற வசதிகளை காத்து வைக்கிறீர்கள். வங்கிகளின் சேவைகளை பயன்படுத்துகின்றீர்கள். உங்களுக்கும் உடமைகளுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு இருக்கும் என்று நம்புகிறீர்கள் - இப்படியாக அன்றாட வாழ்க்கை பலவிதமான சேவைகள் மற்றும் தேவைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது அரசியல்தான்.

அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. நாடு, அரசாங்கம், பொருளாதாரம், பாதுகாப்பு, அடிப்படை உரிமைகள் என எல்லாமும் அரசியல் கட்சிகள் எனும் அச்சாணியின் மீதுதான் இயங்குகின்றன. இந்த உணமையை உணராமல் எல்லோரும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறோம். அரசியல் என்பது சாக்கடை என்று சொல்வீர்கள் என்றால், அதையே நம்பி வாழும் மானிட சமுதாயத்தை என்னவென்று சொல்வது?

அரசியலே உலகின் மிக உன்னதமான கண்டுபிடிப்பு

மனிதன் உருவாக்கிய எல்லாவிதமான கருத்துகளிலும் மிக உன்னதமானது, உயர்வானது அரசியல்தான். அரசியல் வாழ்வில் பங்கெடுக்கும் போதுதான் மனிதன் முழுமை அடைகிறான் என்று சொன்னார் அறிஞர் அரிஸ்டாட்டில்.
முட்டாள் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான 'இடியட்' (idiot) என்பதன் பொருள் 'பொதுநலனில் அக்கறை இல்லாதவர், அரசியலில் அக்கறை இல்லாதவர்' என்பதாகும் (having bad judgment in public and political matters). பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் 'யார் ஆட்சி செய்தால் எனக்கென்ன?' என்று அரசியலில் ஆர்வம் இல்லாதவர்களாகவும் அரசியல்வாதிகளைக் குறைசொல்பவர்களாகவும் மட்டுமே இருப்பது உண்மையானால், இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது! இந்த அவலநிலை 2013 ஆம் ஆண்டில் மாற வேண்டும்.

அரசியல் கனவுகள் மிகப்பெரியவை

தமிழ்நாட்டின் அரசியல் நலமாக அமைந்தால்தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். பெற்றோர் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்க நினைப்பதை விட, தமிழ்நாட்டு அரசியல் சூழல் நலமாக அமைய வேண்டும் என்று நினைக்க வேண்டியது மிகமிக முக்கியமாகும்.

தனிமனிதனின் கனவுகளை விட அரசியல் கனவுகள் மிகப்பெரியவை. உண்மையில், அரசியல் கனவுகள் தனிமனிதக் கனவுகளை சின்னாபின்னமாக்கக் கூடிய ஆபத்து எப்போதும் உண்டு. இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் - ஈழம், ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளில் தனிமனித கனவுகளுக்கும் தனிமனித விருப்பங்களுக்கும் என்ன மதிப்பிருக்கிறது என்று பாருங்கள்.

சராசரி மனிதர்களை விட அரசியல் கட்சிகளில் பங்கெடுப்போர் ஒரு படி மேலானவர்களே. ஏனெனில், அவர்கள் 'தான், தனது' என்கிற சிந்தனை ஒருபக்கம் இருக்கும் போது - அதையும் தாண்டி 'நாம், நமது' என்கிற நிலைபாட்டுக்கு வருகின்றனர். அரசியல் இயக்கங்கள் என்பவை அடிப்படையில் மிக உன்னதமானவை. ஏனெனில், அவை பல்லாயிரக்கணக்கான தனிநபர்களின் 'நாம், நமது' என்கிற பொது சிந்தனைக்கு செயல் வடிவம் அளிக்கின்றன.
ஆனால், எங்கோ ஒரு தடுமாற்றம், ஏதோ ஒரு குளறுபடி இத்தகைய நல்ல நோக்கத்தை சிதைத்து விடுகிறது. புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் விபத்தில் சிக்கி உயிரழப்பது போன்று உன்னதமான அரசியலே சில நேரத்தில் சீரழிவுக்கும் காரணமாகிவிடுகிறது. இந்த அவலச் சூழலுக்கு முடிவு கட்ட முயற்சிக்க வேண்டும்.

தமிழக அரசியலில் தேவைப்படும் மாபெரும் மாற்றம்.

தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியலை உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். அதற்காக 1. அரசியலில் கட்சிகளுக்கிடையே நல்லுறவு, 2. கட்சிகளுக்குள் ஜனநாயகம், 3. அரசியலில் பண ஆதிக்கத்தை ஒழித்தல் ஆகிய குறைந்தபட்ச தேவைகளை அரசியல் கட்சிகள் ஏற்பதும், அதனை தமிழக மக்கள் வலியுறுத்துவதும் அவசியமாகும்.

1. அரசியலில் கட்சிகளுக்கிடையே நல்லுறவு

ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது என்பது கட்சிகளின் ஒற்றை இலக்காக இருந்தாலும் அதைவிட மேலானதாக நாட்டின் நலனும் நாட்டு மக்களின் நலனும் இருக்கிறது. நாட்டிற்கும் மக்களுக்கும் என்ன  தேவை என்பதை மக்கள் தாமாகத் தீர்மானிப்பது இல்லை. கட்சிகளுக்கு இடையேயான போட்டி மற்றும் கருத்து மோதல்களின் விளைவாகவே சட்டங்கள் உருவாகின்றன, செயல்படுத்தப்படுகின்றன.

போட்டியும் கருத்து மோதலும் ஜனநாயகத்தின் அடிப்படை. ஒவ்வொரு கட்சிக்கு பின்னாலும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. ஒவ்வொரு குழுவுக்கு என்றும் தனிப்பட்ட கருத்து, விருப்பம், நம்பிக்கை இருக்க முடியும். அந்த உணர்வுகளுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும். வேறுபாடுகள் பகையாக மாறக்கூடாது. கட்சிகள் ஒன்றை ஒன்று எதிரிகளாகப் பார்க்கும் மனோநிலை முற்றிலுமாக மாற வேண்டும்.
மாறுபட்ட கருத்துகள் வெளிப்படையாகவும் பயமின்றியும் விவாதிக்கப்படுவதற்கான சூழல் இருந்தால் மட்டுமே நல்லுறவு சாத்தியமாகும். ஒருவரின் அடிமையாக இன்னொருவர் இருப்பதோ, ஒருவரைக் கண்டு மற்றவர் பயம்கொண்டு வாழ்வதோ நல்லிணக்கம் ஆகாது - உன்னுடையக கருத்தை நான் ஏற்காவிட்டாலும் அந்தக் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை நான் ஏற்கிறேன் என்கிற நிலையில் மட்டுமே நல்லிணக்கம் சாத்தியமாகும்.

அரசியல் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாக மாறக்கூடாது. அத்தகைய ஒரு நல்லசூழல் தமிழ் நாட்டில் வரவேண்டும். அதற்கு முதற்படியாக பிறந்தநாள், திருமணம், முக்கிய நாட்கள் போன்ற நிகழ்வுகளின் அடிப்படையிலாவது, எதிர் எதிர் நிலைகளில் உள்ள தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, கலந்து பேச முன்வர வேண்டும். மக்களிடையே உள்ள அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு கட்சிகளுக்கிடையேயான கருத்து பரிமாற்றங்கள் மூலம் தீர்வு காண முடியும்.

2. கட்சிகளுக்குள் ஜனநாயகம்

"எல்லா கட்சிகளிலும் தலைவர் வைத்ததே சட்டம். தொண்டர்கள் கருத்துக்கோ, பொதுமக்கள் விருப்பத்திற்கோ இடமே இல்லை" என்கிற ஒரு நிலை தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் முதலாளித்துவக் கட்சிகள் என்று விமர்சிக்கப்படுகின்றன. இன்னும் ஒருபடி மேலே போய், மன்னராட்சி மனோபாவத்திலிருந்து தமிழகக் கட்சிகள் மாறவில்லை என்கிற கருத்து உள்ளது.

இதற்கு கட்சித் தலைமையை மட்டும் குறை சொல்ல முடியாது. மக்களும் தொண்டர்களும் அப்படித்தான் உள்ளனர். இங்கு யாரும் கட்சி என்கிற அமைப்பையோ, கொள்கையையோ பார்ப்பது இல்லை. தலைவரைத்தான் பார்க்கின்றனர். அதுவும் முற்காலத்தின் மன்னர்களின் வழியிலும் தற்போது திரைப்பட கதாநாயகர்கள் வடிவிலும் தலைவர்கள் பார்க்கப்படுகின்றனர்.
ஈழப்போரில் தேசியத்தலைவர் பிரபாகரனை யாரும் தலைவராகப் பார்க்கவில்லை. கதாநாயகராகத்தான் பார்த்தனர். எனவேதான், இறுதிப் போரின் போது 'கதாநாயகன்தான் வெற்றி பெறப்போகிறார், நாம் நம் வேலையைப் பார்ப்போம்' என்று இருந்துவிட்டனர்.  உண்மையான போராட்டத்திற்கும் திரைப்படத்துக்குமான வேறுபாடு கூட தமிழ் சமூகத்திற்கு தெரியவில்லை.

தமிழ்நாட்டில் கட்சிகளின் கொள்கைகளை தீர்மானிப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பொதுமக்களோ அல்லது பொதுமக்கள் சார்பிலான குடிமைச்சமூக அமைப்புகளோ மக்களின் வாழ்வை பாதிக்கும் சிக்கல்கள் குறித்த விவாதங்களை, ஆலோசனைகளை முன்வைக்கின்றனரா என்றால் இல்லவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

எனவே, மிகச்சில அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டின் எல்லா மக்களுக்காகவும் யோசிக்கவும், தமது வட்டாரத்திற்குள் விவாதிக்கவும், முடிவெடுக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றே கருத வேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பதில் மக்களுக்கு அக்கறையில்லாத சூழலில் - கட்சிகளும் ஜனநாயகமற்ற அமைப்புகளாக விளங்குவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இந்த நிலை மாற வேண்டும். அரசியல் கட்சிகளுக்குள் கீழிருந்து மேலாக - முழுமையான சனநாயக முறையில் படிப்படியாக கட்சி நிருவாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதும், கட்சியின் அனைத்து மட்டத்திலும் கட்சியின் கொள்கைகள் விவாதிக்கப்படுவதும் அவசியமானதாகும். அவ்வாறே, கட்சிகளின் நிலைபாடுகள் குறித்து பொதுமக்களும் அக்கறை காட்டும் ஒரு வளர்ந்த சமூகமாக தமிழ்நாடு மாற வேண்டும்.

3. அரசியலில் பண ஆதிக்கத்தை ஒழித்தல் 

இந்திய அரசியலிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் ஊழல் முக்கியமான சிக்கலாகப் பார்க்கப்படுகிறது. பிரதானக் கட்சிகளின் தேர்தல் தோல்விகளுக்கு ஊழல் முக்கியக் காரணமாக உள்ளது. ஆனாலும், அரசியல் கட்சிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையேயான பண உறவுதான் ஊழலுக்கான மிகப்பெரிய பின்னணி என்பதை முன்வைத்துப் போராட ஒருவரும் முன்வரவில்லை. குறிப்பாக "அரசியல் நிதியளிப்பு" குறித்துப் பேச எவரும் தயாராக இல்லை.

அரசியலில் பணம் என்பதுதான் இந்தியாவின் புற்றுநோய். ஊழல், நிருவாகச் சீர்கேடு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு, வளர்ச்சியின்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு, வறுமை என எந்தக் கேட்டினை எடுத்துக்கொண்டாலும் அதன் ஆரம்பமாக இருப்பது அரசியலுக்கும் பணத்துக்குமான உறவுதான். குறிப்பாக, பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையேயான கள்ள உறவுதான் நாட்டைப் பாதிக்கும் பெரும் கேடு. இதற்கு முடிவு கட்டாவிட்டால் நாட்டின் எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு காண்பது சாத்தியமே இல்லை.
எனவே, பணத்தின் அடிப்படையில் சட்டங்கள் உருவாவதும், செயலாக்கப்படுவதும், நிருவாக இயந்திரம் பணத்திற்காக பணிந்து போவதும் ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும். அரசியல் கட்சிகளுக்கான வருமானம் மற்றும் செலவுகள் குறித்து வெளிப்படைத் தன்மை வேண்டும். இதுவே, நாட்டுக்கும் சனநாயகத்துக்கும் மிக முக்கியமானத் தேவை ஆகும். கூடவே, தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், கட்சித் தொண்டர்களுக்கு பூத் செலவுக்காக பணம் கொடுப்பதும் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும்.

- ஆக, 2013 ஆம் ஆண்டில் ஜனநாயகத்தின் குறைந்தபட்ச தேவைகளான - அரசியலில் கட்சிகளுக்கிடையே நல்லுறவு, கட்சிகளுக்குள் ஜனநாயகம், அரசியலில் பண ஆதிக்கத்தை ஒழித்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு சிறிதளவாவது முன்னேற வேண்டும் என்பதே நமது புத்தாண்டுக் கனவாக இருக்கட்டும்.

இது சாத்தியம் தானா என்று நீங்கள் நினைக்கலாம். மாபெரும் சாதனைகள், அவை சாதிக்கப்படும் வரை சாத்தியமற்றவை என்றே கருதப்படுகின்றன.