Pages

ஞாயிறு, மார்ச் 23, 2014

ஐநா தீர்மானம்: குழப்பத்தின் சிகரம் மே 17 இயக்கம்!  

இலங்கையில் நடந்த கொடூரங்கள் குறித்து ஒரு பன்னாட்டு விசாரணை தேவை என உலகெங்கும் வாழும் தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும் கடந்த ஐந்தாண்டுகளாக பலவிதமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் விளைவாக ஐநா மனித உரிமைப் பேரவையில் ஒரு உருப்படியான தீர்மானம் நிறைவேற்றப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் பன்னாட்டு முயற்சிகளுக்கு துணை நிற்க கடமைப்பட்ட முதல் நாடு அல்லது மக்கள் என்று பார்த்தால் - அது தமிழ்நாட்டினை உள்ளடக்கிய இந்திய நாடாகவும், தமிழ் மக்களாகவுமே இருக்க முடியும். ஆனால், வாய்ப்புக்கேடாக இங்கே தமிழர்கள் மத்தியில் இயங்கும் சில குழப்பவாதிகள் - எல்லாவற்றையும் குழப்பி, ராஜபக்சேவின் கரத்தை தெரிந்தோ தெரியாமலோ வலிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான சில எடுத்துக்காட்டுகளை காண்போம்:

கட்டுக்கதை 1: போர்க்குற்றம் என்று சொல்வது இனப்படுகொலை என்பதற்கு எதிரானது

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

//தமிழர்கள் 'இனப்படுகொலை விசாரணை' என்கிற ஒன்றைத்தவிர வேறு எதையும் ஏற்கக் கூடாது// என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், ஐநா மனித உரிமைகள் பேரவையில் 'இலங்கையில் நடந்த எல்லாவிதமான மனித உரிமை மீறல்களையும் விசாரித்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். அதற்காக ஒரு முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

பன்னாட்டு சட்டவிதி மீறல்களான - போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என எல்லாவகையான குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கான முகாந்திரத்துடன் தான் இரண்டாவது வரைவு தீர்மானம் உள்ளது.

'போர்க்குற்றம் என்பதை மட்டும் விசாரி, இனப்படுகொலையை விசாரிக்காதே' என்று வரைவுத் தீர்மானத்தின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, ஐநா மனித உரிமை ஆணையரால் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, விசாரணையில் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் வெளியானால் - சர்வதேச சமூகம் 'இலங்கையில் இனப்படுகொலை நடந்தது' என சட்டப்பூர்வமாக ஏற்கும் சூழல் வரும்.

கட்டுக்கதை 2: // 'ஒரு முறை போர்குற்றத்திற்க்கான விசாரணை என்று வந்துவிட்டால் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்தும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நாம் கோரமுடியாது' // - என்கிறது மே 17 இயக்கம்?

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

மே 17 இயக்கம் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கிலேயே பல கருத்துகளை வெளியிட்டு வருகிறது. அதற்கு இந்த வாதம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

மே 17 இயக்கத்தின் இதுதொடர்பான வாதத்தில் மூன்று பச்சைப் பொய்கள் உள்ளன: முதலாவதாக - விசாரணையின் கால எல்லையையும் குற்றத்தின் வரம்பையும் பொருத்தமில்லாத இடத்தில் உதாரணமாக்கியுள்ளனர். இரண்டாவதாக - ஐநா மனித உரிமைத் தீர்மானத்தில் இல்லாத ஒரு வார்த்தையை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவதாக - ஐநா விசாரணையை ஆணையத்தையும் குற்றவியல் தீர்ப்பாயத்தையும் ஒன்றாக்கி குழப்பியுள்ளனர்.

இவையெல்லாம் வேண்டுமென்றே செய்யப்படும் குழப்பங்களாக இருக்கலாம்.

1. முதல் குழப்பம்:

//"1994ஆம் ஆண்டின் ருவாண்டா இனப்படுகொலையை விசாரிக்க ஐநா அவையில் ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பாயத்திடம் 1997 முதல் 2003 வரையிலான இனப்படுகொலைக் குறித்து விசாரிக்கக் கோரிய போது - ஐநா மிக தெளிவாக 'இது ருவாண்டாவில் 1994ல் நடைபெற்ற இனப்படுகொலையை மட்டுமே விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம். இதற்கு அதை மட்டுமே விசாரிக்க அதிகாரமுள்ளது. வேறு எதையும் விசாரிக்க இதற்க்கு அதிகாரமில்லை. இதுதான் ஐநாவின் விதியென்று மறுத்துவிட்டது"// என்று ஒரு எடுத்துக்காட்டை அளித்துள்ளது மே 17 இயக்கம்.

அதாவது ஐநா அமைத்த ஒரு விசாரணை ஆணையம், அதற்கு அளித்த கால எல்லைக்கு உள்ளேயே விசாரணை நடத்தும். அதைத்தாண்டி விசாரணை நடத்தாது என்கிறது மே 17 இயக்கம். இது சரியான கருத்துதான்.

ஆனால், இந்த உதாரணம் இலங்கைக் குறித்த தீர்மானத்துக்கு பொருந்தாது. 'இலங்கையில் நடந்தக் குற்றங்களை உள்ளது உள்ளபடி கண்டறிய வேண்டும்' என்றே ஐநா வரைவுத் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. அதில், இனப்படுகொலையை விசாரிக்காதே என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்த விசாரணையில் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றோ, இந்தக் குற்றங்களை விசாரிக்கக் கூடாது என்றோ இல்லை. மிகக் கடுமையான சட்டமீறல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடையக் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வரைவுத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. ஆக, போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்கள், இனப்படுகொலை என வகைப்படுத்தக் கூடிய வாய்ப்புள்ள எல்லா குற்றங்களையும் விசாரிக்க ஐநா தீர்மானம் வழிசெய்கிறது.

2. இரண்டாவது குழப்பம்:

//"ஐநாவில் எந்த ஒரு தீர்மானம் வந்தாலும் அந்த தீர்மானத்தில் இறுதியாக கடைசி வரியில் THIS IS TO REMAIN SEIZE OF MATTER அதாவது இந்த பிரச்சனையை இதற்க்கு மேல் விவாதிக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முடித்திருப்பார்கள்.இதை போனவருடமோ அல்லது அதற்க்கு முந்தைய வருடமோ வந்த ஐநாவின் தீர்மானத்தில் பார்த்தால் தெரியும். எனவே ஒரு முறை போர்குற்றத்திற்க்கான விசாரணை என்று வந்துவிட்டால் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்தும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நாம் கோரமுடியாது."// என்று சொல்கிறது மே 17 இயக்கம்.

கூடவே //"எதாவது ஒன்று முதலில் வரட்டும் என்று நாம் இருந்தால் அது தீர்வை அடையாமல் போகத்தான் வழிவகுக்கும்.நமது ஆசைகள் வேறாகயிருக்கலாம் ஆனால் ஐநாவின் விதி என்ன அது மேற்க்கொண்டு இதை நகர்த்துமா இல்லை இதோடு முடித்து வைத்துவிடுமா என்பதை பாதிக்கப்பட்ட சமூகமாகிய நாம் தான் கவனமாக இருந்து ஆராயவேண்டும்"// என்றும் கூறி பேனை பெருச்சாளியாக்கி, பெருச்சாளியை பெருமாளாக்க முயற்சிக்கிறது மே 17 இயக்கம்!

ஆனால். இலங்கைக் குறித்து ஐநா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் எதிலும் THIS IS TO REMAIN SEIZE OF MATTER என்று ஒரு வார்த்தை இல்லவே இல்லை.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல - ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத உதாரணங்களைக் காட்டி குழப்புகிறது மே 17 இயக்கம். THIS IS TO REMAIN SEIZE OF MATTER என்கிற வாசகத்துடன் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானங்களைக் கொண்டுவருகிறது. (அவ்வாறு கொண்டுவரும் தீர்மானங்கள் பல பிற்காலத்தில் மாற்றப்பட்டும் உள்ளன).

ஆனால், இலங்கைக் குறித்து ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் அந்த வார்த்தை இல்லை. இல்லவே இல்லாத ஒரு வார்த்தையை இருப்பதாகச் சொல்லி - 'அய்யையோ, ஒரு முறை இப்படிச் சொன்னால், அதை மாற்ற முடியாதே' என பொய்யாக அலருகிறது மே 17 இயக்கம்.

ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்பதற்கு 2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கு பாராட்டு பத்திரம் வாசித்த அதே ஐநா மனித உரிமைப் பேரவையில் இப்போது அதற்கு எதிரான தீர்மானம் வருவதே சான்று.

(ஒரு முறை தீர்மானம் வந்துவிட்டால் அதனை மாற்ற முடியாது என்று உலகத்தில் எந்த ஒரு தீர்மானமோ, சட்டமோ இல்லை. ஒவ்வொரு தலைமுறையினரும் தமக்கு முன்னால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மாற்றும் உரிமையோடுதான் பிறக்கிறார்கள். எதிர்காலத் தலைமுறையினரின் அந்த உரிமையைப் பறிக்கும் வகையில் இருக்கும் ஒரே சட்டம் இந்தியாவின் அரசியல் சாசனம் மட்டும்தான்).

3. மூன்றாவது குழப்பம்:

ஐநாவால் அமைக்கப்படும் 'பன்னாட்டு விசாரணை ஆணையம்' என்பதும் 'பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்' என்பதும் வெவ்வேறு வகையிலானதாகும். இரண்டையும் ஒன்றாக்கி குழப்புகிறது மே 17 இயக்கம்.

‘பன்னாட்டு விசாரணை ஆணையம்’ (Commission of Inquiry - COI) என்றால் என்ன?

பன்னாட்டு விசாரணை ஆணையம் என்பது ஒரு நாட்டில் நடந்த குற்றங்கள் குறித்த உண்மை நிலையை வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவது. அரசின் குற்றங்களையும் தோல்விகளையும் பொதுவாகத் தொகுப்பது. குறுகிய காலத்தில் அறிக்கையை வெளியிடக் கூடியது. இதற்கு துள்ளியமான ஆதாரங்கள் தேவை இல்லை. பன்னாட்டு விசாரணை ஆணையம் யாரையும் நேரடியாகத் தண்டிக்காது (ஆனால், எதிர்காலத்தில் தண்டிக்க வழி செய்யும்).

'பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்' (International Criminal Tribunal - ICT) என்றால் என்ன?

இதற்கு மாறாக, 'பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்' என்பது நாட்டின் குற்றங்களையோ அரசின் தோல்விகளையோ பார்க்காது. தனி நபர்களின் குற்றங்களையே பார்க்கும். விசாரணை முடிந்து தீர்ப்பளிக்க பல ஆண்டுகள் ஆகும். இதற்கு துள்ளியமான ஆதாரங்கள் தேவை. அவற்றை சந்தேகத்துக்கு இடமின்றி மெய்ப்பிக்க வேண்டும். கடைசியில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

இலங்கையில் நடந்த குற்றம் குறித்து தற்போது சர்வதேசம் கேட்பது பன்னாட்டு விசாரணை ஆணையம் (COI) தான். 'பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்' (ICT) அல்ல.

இந்நிலையில், பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை உதாரணம் காட்டி குழப்புகிறது மே 17 இயக்கம்: //"போர்குற்றத்திற்க்கான விசாரணையா அல்லது இனப்படுகொலைக்கான விசாரணையா என்பது இங்கு அவரவர் விருப்பம் சார்ந்தது பேசப்படுகிறது. அனால் நாம் என்ன கோரிக்கையை வைத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அது தீர்வை நோக்கி நகர்த்தும் என்பதை ஐநாவின் நடைமுறை விதியை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக 1994ஆம் ஆண்டில் ருவாண்டாவில் துட்சி மக்கள் மீது அங்குள்ள இன்னொரு இனக்குழுவான ஊட்டு மக்கள் நடத்திய இனப்படுகொலைக்காக ஐநா அவையில் ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது."// என்கிறது மே 17 இயக்கம்.

தவறான இடத்தில் காட்டப்படும் தவறான உதாரணம் இதுவாகும்.

கட்டுக்கதை 3: இருதரப்பையும் விசாரித்தால் கேடு நேரும் என்பது உண்மையா?

//"போர்குற்றம் அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று ஆரம்பித்து விசாரணை நடந்தால் அது இரண்டு தரப்பில் உள்ள யாரவது ஒருவரை தண்டிப்பதில் முடியும் இல்லையேல் இரண்டு தரப்பும் தவறு செய்திருக்கிறது என்று முடியும். இதுதான் கடந்தகால வரலாறு.

ஆனால், இனப்படுகொலை விசாரணையென்று வந்தால்...இனப்படுகொலை குற்றம் செய்தவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தண்டிக்கப்படும் சூழலும் வரும்."// - என்கிறது மே 17 இயக்கம்.

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

இந்த வாதத்திலும் முன்று குழப்பங்கள் உள்ளன. முதலாவதாக - ஏதோ இனப்படுகொலைக்கு என தனி விசாரணை இருப்பது போலக் கட்டுக்கதைக் கட்டப்படுகிறது. இரண்டாவதாக - ஒரு தரப்பை விசாரிக்கும் விசாரணை முறை இருப்பதாக ஏமாற்றப்படுகிறது. மூன்றாவதாக - இனப்படுகொலை விசாரணைக்குதான் சர்வதேச சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனைக் கிடைக்கும் என்றும் நம்ப வைக்கப்பார்க்கின்றனர். இவை அனைத்தும் பொய்.

1. முதலாவது குழப்பம்:

உண்மையில் - உலகில் எங்கெல்லாம் சர்வதேச சட்ட மீறல்கள், குறிப்பாக இனப்படுகொலைக்கு விசாரணை நடத்தப்பட்டதோ, அங்கெல்லாம் - போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என எல்லாவற்றையும்தான் விசாரித்தார்கள். ருவாண்டா, யூகோசுலோவியா, சூடான் என எல்லா நாடுகளிலும் எல்லாவற்றுக்குமான விசாரணைதான் நடந்தது. இனப்படுகொலையைத் தனியாக விசாரிக்கும் முறை எங்கும் இல்லை.

2. இரண்டாவது குழப்பம்:

இருதரப்பு மோதல், போர் என்று நிகழும் நிலையில் - பாதிக்கப்பட்டவர்கள் ஒரு தரப்பினராக இருந்தாலும் - போர் குறித்த விசாரணையில் இரண்டு தரப்பினையும்தான் விசாரித்தாக வேண்டும். ஒரு பக்கத்தை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்கிற விசாரணை முறை என்று உலகில் எதுவுமே இல்லை.

ஈழப்போரில் அரசப்படையினர் மிக அதிகக் குற்றங்களை இழைத்தனர், கருணா அணியினர் அதற்கு அடுத்ததாக குற்றமிழைத்தனர். இந்த இரண்டு தரப்புக்கும் அடுத்ததாக விடுதலைப்புலிகளும் குற்றம் செய்தனர் என பன்னாட்டு அமைப்புகள் கூறுகின்றனர். இந்நிலையில், ஒருதரப்பை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று சொல்வது - விசாரணையே வேண்டாம் என்பதற்கு சமமானதாகும்.

3. மூன்றாவது குழப்பம்:

பன்னாட்டு நீதிமன்றனங்கள் பன்னாட்டு சட்ட மீறல்களை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்கின்றன. அந்த வகையில் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என மூன்று வகையான குற்றங்களுமே விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். இவை அனைத்துமே பன்னாட்டு சட்டங்களின் கீழ் கொடும் குற்றங்கள்தான்.

இன்னும் சொல்லப்போனால் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை நிரூபித்து குற்றவாளிகளைத் தண்டிப்பது எளிது. இனப்படுகொலையை மெய்ப்பிப்பது கடினம். ஒரே குற்றவாளியின் மீது மூன்று குற்றங்களையும் சுமத்தி தண்டிக்க முடியும்.

உண்மை இவ்வாறிருக்க 'இனப்படுகொலை குற்றம் செய்தவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தண்டிக்கப்படும் சூழலும் வரும்' என்று சொல்வதன் மூலம் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை செய்தவர்களை தண்டிக்க முடியாது என்பது போன்ற பொய்த்தோற்றத்தை ஏற்படுத்துகிறது மே 17 இயக்கம்.

கட்டுக்கதை 4: தமிழீழ விடுதலையை முடக்குவதற்கான முயற்சியா?

//"தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக முடக்குவதற்கான ஒரு வேலையினை, தற்பொழுது ஐ.நா.வில் முன்வைக்கும் தீர்மானத்தின் வாயிலாக மேற்கொண்டிருக்கின்றன"// என்கிறது மே 17 இயக்கம்.

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்ட மீறலகளை விசாரிப்பதன் மூலம் தமீழ விடுதலைக்கு தடை ஏற்படும் என்று எந்த அடிப்படையில் கூறுகிறார்கள்? இதற்கு எந்த ஒர் அடிப்படையும் இல்லை, ஆதாரமும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கைப் படையினரால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த இயக்கம் இலங்கையில் செயல்பாட்டு அளவில் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, இலங்கை மண்ணில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இப்போது யார் முன்னெடுத்து செல்கிறார்கள்? இலங்கையில் அப்படி ஒரு கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்து அதற்கான வேலைகளை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு வாய்ப்பில்லாத நிலையில் – ‘அய்யோ அமெரிக்கத் தீர்மானத்தால் தமிழீழ விடுதலை தள்ளிப்போகுமே’ என்பது பித்தலாட்டம் இல்லையா?

இன்றைய உலகம் மிக வேகமாக மாறிவிட்டது. இனியும் ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஒரு நாட்டின் விடுதலை என்பது நம்முடைய வாழ்நாளில் சாத்தியம் இல்லை. மேலும், வெளிநாட்டில் இருந்து விடுதலைப் போராட்டத்தை இறக்குமதி செய்யவும் முடியாது.

இன்றைய நிலையில் தமிழீழம் என்பது ஒரு கனவு மட்டும்தான். இது ஒருகாலத்தில் நனவாகலாம்.

ஆனால், இலங்கையின் சர்வதேசக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது கனவல்ல. அது கண்முன் நிற்கும் நிதர்சனம்.

அமெரிக்க தீர்மானம் தமிழீழத்தை தடுக்கிறது என்று போலிப்பிரச்சாரம் செய்கிறவர்கள், அதற்கு முன்பாக - எங்கிருந்து, எப்படி தமிழ் ஈழம் சாத்தியமாகப் போகிறது - என்பதை விளக்கி, அதனை அமெரிக்கா எப்படி தடுக்கிறது என்பதையும் நேர்மையுடன் விளக்க வேண்டும்.

கட்டுக்கதை 5: தமிழர்கள் மதச் சிறுபான்மையினர் என்கிறதா அமெரிக்கத் தீர்மானம்?

//"தமிழர்கள் என்றொரு தேசிய இனம் இல்லை என்று நிறுவும் முயற்சியில், தமிழர்களை மதச் சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டு, வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானம், தமிழர்களுடைய அரசியல் உரிமைகளை ஒட்டுமொத்தமாக மறுக்கும் ஒரு முயற்சியே"// என்கிறது மே 17 இயக்கம்.

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

மிழர்கள் தேசிய இனம் இல்லை என்று வரைவுத் தீர்மானத்தின் எந்த இடத்திலும் இல்லை. அவ்வாறு இருப்பதாகக் கூறுவது பச்சைப் பொய். திருத்தப்பட்ட வரைவின் 8 ஆவது பத்தியில் மதம், நம்பிக்கை, அல்லது இனம் என்கிற வேறுபாடுகள் இன்றி எல்லா இலங்கை மக்களும் முழு மனித உரிமையுடன் வாழ வேண்டும்' என்று கூறுகிறது.

(8) Reaffirming that all Sri Lankans are entitled to the full enjoyment of their human rights regardless of religion, belief, or ethnicity, in a peaceful and unified land

இதனை மதச்சிறுபான்மையினராக தமிழர்களைக் கூறுவதாக எப்படிக் கொள்ள முடியும்?

14 ஆவது பத்தியில் இந்து, முஸ்லீம், கிறித்தவ வழிபாட்டு இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டி, செயல்பாட்டுப் பகுதியின் 4 ஆம் பத்தியில் இத்தகைய தாக்குதல்களை விசாரிக்கக் கோரப்பட்டுள்ளது.

(14) Alarmed at the significant surge in attacks against members of religious minority groups in Sri Lanka, including Hindus, Muslims and Christians.

(4) Urges the Government of Sri Lanka to investigate all alleged attacks, by individuals and groups, on journalists, human rights defenders, members of religious minority groups, and other members of civil society, as well as on temples, mosques and churches, and further urges the Government of Sri Lanka to hold perpetrators to account and take steps to prevent such attacks in the future;

இதனை "தமிழர்களை மதச் சிறுபான்மையினர்" எனக் குறிப்பிடுவதாகத் திரிப்பது விஷமத்தனமான சதியாகும்.

கட்டுக்கதை 6: அமெரிக்கத் தீர்மானத்தில் குற்றவாளிகளைத் தண்டிக்க வழி இல்லையா?

//"தமிழீழப் போராட்டத்தை சிதைப்பதில் சர்வதேச சக்திகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வதின் ஒரு அங்கமாக இந்த ஆண்டும் அமெரிக்க அரசு ஒரு அயோக்கியத் தீர்மானத்தினை முன்வைக்கின்றது. இனப்படுகொலகளை நடத்திய கொடுங்கோலர்களையும் அவர்களுக்கு துணை நின்றவர்களையும், நிற்பவர்களையும் தண்டிக்க எந்த நகர்வினையும் பரிந்துரைக்காத இந்த அயோக்கியத் தீர்மானம்,…ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது."// என்கிறது மே 17 இயக்கம்.

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

இது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத் தனமான வாதம். மே 17 இயக்கத்தின் இந்த வாதத்தில் உண்மை இல்லை. ஐநா அவையில் அமெரிக்காவும் உறுப்புநாடுகளும் கடைசியாக விவாதித்த தீர்மான வரைவின் 8 ஆவது செயல்பாட்டுப் பத்தியில் 'இலங்கை மீது ஒரு பன்னாட்டு விசாரணையை நடத்த உத்தரவிடும்' பகுதி உள்ளது.

8. Takes note of the High Commissioner’s recommendations and conclusions regarding ongoing human rights violations and on the need for international inquiry mechanism in the absence of a credible national process with tangible results, and requests the Office of the High Commissioner:

b) to lead a comprehensive investigation into alleged serious violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka and establish the facts and circumstances of such violations and of the crimes committed with a view to avoiding impunity and ensuring accountability, with assistance from relevant experts

c) to present an oral update to the Human Rights Council at its twenty-seventh session, and a comprehensive report followed by a discussion on the implementation of the present resolution at its twenty-eighth session.

"இனப்படுகொலைகளை நடத்திய கொடுங்கோலர்களையும் அவர்களுக்கு துணை நின்றவர்களையும், நிற்பவர்களையும் தண்டிக்கும் நோக்கிலான தெளிவான நகர்வு இதுவாகும்.

இதனை மாற்ற வேண்டும். இலங்கை மீது பன்னாட்டு விசாரணை நடத்தாமல் தவிர்க்க வேண்டும் என இந்தியா கோருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

"While India is okay with the majority and substantive part of the text of the draft resolution UNHRC 25 which has been circulated in Geneva, negotiators are working on softening the language of paragraph 8 of the resolution, which calls for the need for an “independent and credible international investigation” and “investigate alleged violations and abuses of human rights and related crimes”"

http://indianexpress.com/article/india/india-others/india-to-back-unhrc-motion-on-lanka/

எனவே, தமிழர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஒரு சிறந்த தீர்மானம் வராவிட்டாலும், ஒரு நல்ல தீர்மானத்தை அமெரிக்க முன் வைத்துள்ளது. அந்தத் தீர்மானம் நிறைவேறும் வாய்ப்பிருந்தால் அது மிகச் சிறந்த ஒரு தொடக்கமாக அமையும்.

அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்கிற மூர்க்கத்தில், தமிழனுக்கு நன்மையான ஒரு தீர்மானத்தை எதிர்ப்பது - ஒரு வரலாற்றுத் துரோகம்.

(இன்றைக்கும் இந்த தீர்மானம் இதே வடிவில் வராமல் போகலாம். அப்படி நடந்தால் அதற்கு இந்தியாவே காரணமாக இருக்கும். எனவே நீதியை விரும்பும் இந்தியக் குடிமக்கள் இந்தியாவிடம் உங்களது கோரிக்கையை முன் வையுங்கள்.)

தெளிவு வேண்டும்:

ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் மே 17 இயக்கம் போன்ற அமைப்புகளின் குழப்பங்களில் இருந்து விடுபட வேண்டும். கடந்த 2012 மார்ச் மாதம் ஐநாவில் ஒரு பலவீனமான தீர்மானம் வந்தது. அப்போது தமிழ் நாடே ஓரணியில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது (அப்போதும் சில குழப்ப வாதிகள் இருந்தனர்).

இப்போது 2013 மார்ச்சில், ஒப்பீட்டளவில் முன்பைவிட வலிமையான தீர்மானம் ஐநாவில் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இன்று தமிழ்நாடு முன்பிருந்த எழுச்சியுடன் ஓரணியில் போராடவில்லை.

குழப்பவாதிகளால் குழம்பி, இலக்கில் தெளிவில்லாது போகும் மக்கள் எழுவதற்கு வாய்ப்பே இல்லை.

தொடர்புடைய சுட்டிகள்: 

1. மே 17 இயக்கத்திற்கு ஒரு பதில்: அமெரிக்கா தமிழ்த்தேசியர்களின் ஏவல் நாடா?!

2. ஐநா மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் பேச்சு: இனப்படுகொலை விசாரணை நடத்த நேரடியாகக் கோரிக்கை!

3. ஐநா தீர்மானம்: குழப்பவாதிகளிடம் இருந்து தப்புவார்களா ஈழத்தமிழர்கள்?!

4. இலங்கை: இனப்படுகொலையா? போர்க்குற்றமா? - கட்டுக்கதைகளும் உண்மையும்!

5. ராஜபக்சேவை காப்பாற்றும் தமிழ்த்தேசியப் போராளிகள்?!


6. இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை: ஐ.நா.வில் பசுமைத் தாயகம் வலியுறுத்தல்

கருத்துகள் இல்லை: