Pages

ஞாயிறு, ஜூலை 06, 2014

திராவிட இயக்கத்தின் வன்னியர் எதிர்ப்பு இனவெறி: ஒரு VANNIYAPHOBIA ஆதாரம்!

திராவிட இயக்கம் என்பது பெரும்பான்மைச் சாதிகளை ஒழிக்கும் இயக்கமாகவே இருந்துள்ளது. வன்னியர்களை ஒழிப்பதிலும், வன்னியர்களின் வரலாற்றை மறைப்பதிலும் திராவிட இயக்கத்தினர் எப்போதும் முனைப்பாக இருந்துள்ளனர். 

அந்த வகையில், திராவிட இயக்கத்தினரின் வன்னியர் எதிர்ப்பு இனவெறி (VANNIYAPHOBIA) வன்னியஃபோபியாவுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு. 

மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப் போரில் முதல் ஆளாக உயிர்த்தியாகம் செய்த அவரது 105 ஆம் நினைவு நாளில் (6.7.2014), நாம் திராவிட இயக்கத்தினரின் துரோகத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு

1906 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் அடக்குமுறைச் சட்டத்தை கொண்டுவந்தது.

இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் எனப்படும் இதுதான் உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆகும்.
காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி.

சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார்.   உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் சிறையில் ஏற்பட்ட பாதிப்புகளால் மரணத்தை தழுவினார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. தமிழ்நாட்டில் அவரது சொந்த ஊர், நாகை மாவட்டம் பூம்புகார் - மேலையூர் அருகில் இருக்கும் கீழப்பெரும்பள்ளம் ஆகும்.

திராவிட இயக்கத்தின் துரோகம்

தென் ஆப்பிரிக்காவில் தமிழர்களின் போராட்டத்தையும், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தையும் திராவிட இயக்கத்தினர் நன்கு அறிந்திருந்தனர். குறிப்பாக, கலைஞர் கருணாநிதி இதனை அறிந்திருந்தார். 

1970 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் "தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" என்கிற விளம்பரத்துடன் தமிழக அரசின் சார்பில் ஒரு தேர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. 

அந்தத் தேரில் "1. நாகப்பன், 2. நாராயணசாமி. 3. வள்ளியம்மை" என வரிசையாக எழுதப்பட்டுள்ளது. கூடவே, மகாத்மா காந்திக்கு அருகில் நாகப்பன், நாராயணசாமி ஆகியோர் நிற்பது போலவும், சிறைக் கம்பிகளுக்கு பின்னால் வள்ளியம்மா நிற்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
1970 தி.மு.க ஆட்சியில் "தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" தேர் ஊர்வலம் 
அதாவது, 1970 ஆம் ஆண்டில், சாமி நாகப்பன் தான் என்பதை முதல் தியாகி என்பதை நன்கு அறிந்து, அதனைக் குறிப்பிட்டு ஊர்வலமும் நடத்தியுள்ளனர். ஆனால்,  அதற்கு அடுத்த ஆண்டே அந்த வரலாற்றை மூடி மறைத்துவிட்டனர்.

1971 இல் - தில்லையாடி கிராமத்தில் 'வள்ளியம்மை நகர், வள்ளியம்மை மண்டபம், வள்ளியம்மை உயர்நிலைப்பள்ளி' ஆகிய நினைவு கட்டிடங்களை 13.8.1971 அன்று அப்போதைய அமைச்சர் இரா.நெடுஞ்செழியன் திறந்து வைத்தார். தில்லையாடி வள்ளியம்மை சிலை அமைக்கப்பட்டது.
தில்லையாடி வள்ளியம்மை சிலை
தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை
1982 இல் சென்னையில் கோ-ஆப் டெக்சின் கட்டடத்திற்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என பெயரிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

ஆனால், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்துக்கு பட்டை நாமம் சாத்தப்பட்டது.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் எதற்காக மறக்கப்பட்டது?

1971 ஆம் ஆண்டில் தில்லையாடி வள்ளியம்மை நினைவிடங்கள் அனைத்தையும் அப்போதைய அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் திறந்து வைத்துள்ளார். ஆனால், வள்ளியம்மா முனுசாமி முதலியாருக்கு இணையாக சாமி நாகப்பன் படையாட்சிக்கு நினைவிடங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.
வள்ளியம்மா முனுசாமி முதலியார்
முதலியார் சமூகத்தை சேர்ந்தவரான நாவலர் நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தை சேர்ந்த வள்ளியம்மைக்கு மட்டுமே நினைவிடங்கள் அமைத்தார் - வன்னியரான முதல் தியாகியின் தியாகத்தை மறைத்தார்.

1997 இல் மீண்டும் திராவிடத் துரோகம்

1915 ஆம் ஆண்டில் ஜொகனஸ்பர்கில் மகாத்மா காந்தி திறந்து வைத்த சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடங்கள் தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சிதைக்கப்பட்டன. அவை 20.4.1997 அன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டன.

அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு திறந்து வைத்தார். சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார்" என இரண்டு பேருக்காகவும்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. (சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடத்தில் பின்னர் 1997 ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜரால் அஞ்சலி செலுத்தினார்)
 ஜொகனஸ்பர்க் - சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம்
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற வகையில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் கலைஞர்.  அந்த வாழ்த்துச் செய்தியில் வள்ளியம்மையின் வீரத்தை புகழ்ந்து எழுதியுள்ளார். ஆனால், சாமி நாகப்பன் படையாட்சி குறித்து அவர் ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. 

வரலாறு மறைக்கப்பட வன்னியர் என்பதே காரணம்

நினைவிடங்களில் மறைக்கப்பட்டு, வரலாற்று பாடநூல்களில் மறைக்கப்பட்டு, இப்போது எல்லா இடங்களிலும் சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் ஒரேயடியாக மறக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் ஒரு வன்னியர் என்பதே காரணம்
வரலாறு மறைக்கப்பட வன்னியர் என்பதே காரணம்
இப்போதும் தென் ஆப்பிரிக்காவின் விடுதலை வரலாற்றில சாமி நாகப்பன் படையாட்சியும் வள்ளியம்மா முனுசாமி முதலியாரும் இடம் பெற்றுள்ளார்கள். ஆனால் 'தில்லையாடி வள்ளியம்மை' மட்டும்தான் தமிழ்நாட்டில் அறியப்படுகிறார். சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
  • மகாத்மா காந்தியால் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? 
  • உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்க மறந்தது ஏன்?
  • காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையில் ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?
இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதில்தான். அதுதான் வன்னியஃபோபியா.

வன்னியஃபோபியாவும் திராவிட இயக்கமும்

ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரமும், உண்மை மறைப்பும் 'இனவெறியின் ஓர் வடிவம்' ஆகும். அதுவே ஒரு மனநோயும் கூட. 

யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது. அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம்.

VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars.

இந்த மனவியாதி பிடித்தவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு மனநிலையை' பரப்பி வைத்துள்ளனர். வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் உண்மை மறைப்புக்கும் இந்த 'வன்னியஃபோபியா' மனநோய் தான் காரணம் ஆகும். 

அப்படிப்பட்ட வன்னியர்களுக்கு எதிரான மனநோய் பீடித்துள்ள 'திராவிட இயக்கத்தினர்தான்' சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாற்றை மறைத்துள்ளனர்.
குறிப்பு: "பாடபுத்தகத்தில் நாடார்களின் வரலாறு கொச்சைப் படுத்தப்பட்டுள்ளது, அதனை மாற்ற வேண்டும்" என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் முன்பு அறிக்கை வெளியிட்டார்கள். உடனே, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் பின் தொடர்ந்து அறிக்கைவிட்டார்கள். வார இதழ்கள் கட்டுரைத் தீட்டின. 

இப்போது, "9 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் விடுதலைப்போரின் முதல் களப்பலி தில்லையாடி வள்ளியம்மை என தவறாக உள்ளது. அதனை சாமி நாகப்பன் படையாட்சி என்று திருத்த வேண்டும்" என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். 

இப்போது, எந்த அரசியல் கட்சித் தலைவரும் பின் தொடர்ந்து அறிக்கை விடவில்லை. வார இதழ்கள் கட்டுரைத் தீட்டவில்லை. நாடார்களின் வரலாறு தவறாக இருப்பதற்காக குரல் கொடுத்தவர்கள், வன்னியர் வரலாறு தவறாக இருப்பதற்காக குரல் கொடுக்கவில்லை. அதுதான் வன்னியஃபோபியா. 

தொடர்புடைய சுட்டிகள்:




கருத்துகள் இல்லை: