Pages

வெள்ளி, மே 24, 2013

வேண்டாம் இந்த விபரீதம்: புதிய சட்டமன்ற கட்டடத்துக்கு நேர்ந்த கதி மோனோ ரயிலுக்கும் நேருமா? 

'மோனோ ரயில் திட்டம் முதல்வர் தலைமையில் ஆய்வு' என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. "'சென்னையில், மோனோ ரயில் சேவை துவக்கப்படும்' என, 2011ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், சென்னையில், மோனோ ரயில் சேவை, இரண்டு கட்டங்களாக, 111 கி.மீ., தூர அளவில், அமைக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக, வண்டலூர் -வேளச்சேரி, பூந்தமல்லி - கத்திப்பாரா, பூந்தமல்லி-வடபழனி இடையே, மூன்று வழித்தடங்களில், 8,500 கோடி ரூபாய் செலவில், 57 கி.மீ., தூரம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

திட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பணி எதுவும் துவக்கப்படவில்லை. இது தொடர்பாக, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.' என்கிறது அந்த செய்தி.

மோனோ ரயில்: வேண்டாம் இந்த விபரீதம்

தமிழ்நாடு அரசு எதற்காக இந்த மோனோ ரயில் திட்டத்தை பிடித்துக்கொண்டு தொங்குகிறது என்று தெரியவில்லை. ஒன்றுமட்டும் நிச்சயமாக சொல்லலாம். இந்த திட்டம் ஒருபோதும் சாத்தியமாகாது. ஒரு வீம்புக்கு நிறைவேற்றினாலும் புதிய சட்டமன்றக் கட்டடம் பயன்படாமல் போன நிலைதான் இதற்கும் ஏற்படும். 

இன்னும் சொல்லப்போனால, அந்தக் கட்டடத்தையாவது மாற்றுத் தேவைகளுக்கு பயன்படுத்திடும் வாய்ப்பு உண்டு. ஆனால், மோனோ ரயிலை எதற்குமே பயன்படுத்த முடியாது. இப்போது மதுரவாயிலில் நிற்கும் துறைமுகச்சாலைத் தூண்களைப் போல, இதற்கு முன்பு பல ஆண்டுகளாகக் கிடந்த வீராணம் குழாய்களைப் போன்று - எதிர்கால சென்னையில் 'நடுத்தெருவை அடைத்துக்கொண்டு நிற்கும் மோனோ ரயில் தூண்களை மட்டும்தான்' காணக்கூடியதாக இருக்கும். மோனோ ரயில் அபத்தம் குறித்து நான் முன்பு  (ஜூன் 03, 2011) எழுதிய பதிவு கீழே:

சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.
சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம்.

அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம். இதைப் படிக்கும் போது மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.

சென்னை மோனோ ரயில் - ஒரு உலக அதிசயம்

மோனோ ரயில் திட்டத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

அவை இதோ:

1. உலகம் முழுவதும் மொத்தம் 60 மோனோ ரயில் திட்டங்களே உள்ளன (தற்போது புதிதாக அமைக்கப் படுபவைகளையும் சேர்த்து). அவற்றின் ஒட்டுமொத்த தூரம் வெறும் 400 கிலோ மீட்டர் மட்டும்தான்.

உலகிலேயே அதிக மோனோ ரயில் திட்டங்கள் உள்ள நாடு ஜப்பான் - அங்கு மொத்தம் 108 கிலோ மீட்டருக்கு மோனோ ரயில் உள்ளது. சீனா உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளிலும் மொத்தம் 164 கிலோ மீட்டர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மொத்தம் 38 கிலோ மீட்டர், அனைத்து வட அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 54 கிலோ மீட்டர், அனைத்து தென் அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 24 கிலோ மீட்டர், ஆப்பிரிக்காவில் 6 கிலோ மீட்டர், ஆஸ்திரேலியாவில் 7 கிலோ மீட்டர் என்ற அளவில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன.

ஆனால், சென்னையில் மட்டுமே 300 கிலோ மீட்டருக்கு தமிழ்நாடு அரசு மோனோ ரயில் திட்டத்தை அமைக்கப் போகிறதாம்!

2. உலகின் பெரும்பாலான திட்டங்கள் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. வெறும் 12 திட்டங்கள் மட்டுமே 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூடுதலாக உள்ளன. 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகமாக ஒரேஒரு திட்டம் கூட இல்லை. 

உலகின் மிகப்பெரிய மோனோ ரயில் திட்டம் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள திட்டம் ஜப்பானின் ஒசாகா மோனோ ரயில் ஆகும். இதன் நீளம் வெறும் 28 கிலோ மீட்டர்தான்.

உலக நிலவரம் இப்படி இருக்கையில் - சென்னையில் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.


மோனோ ரயில் - கேடுகளே அதிகம்.

உலகில் மோனோ ரயில் என்பது சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க சின்னஞ்சிறு அளவில் அமைக்கப் படுபவை. பயணிகள் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் எல்லா திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மலேசியாவின் கோலாலம்பூர், இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, அமெரிக்காவின் சீயாட்டில் என எல்லா திட்டங்களும் காலதாமதம் மற்றும் நிதிச்சுமை என்கிற சுழலில் சிக்கித்தவிக்கின்றன.
மலேசியாவின் 9 கிலோ மீட்டர் மோனோ ரயிலை அமைக்க 5 ஆண்டுகள் ஆயின. அதனை 8 மாதம் இயக்குவதற்கு மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அந்த நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது.

சீயாட்டில் நகர மோனோ ரயில் திட்டத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 450 கோடி ரூபாய் செலவானது. இதனால் 22 கிலோ மீட்டருக்கு தொடங்கப்பட்ட திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

இப்படி உலகெங்கும் மொனோ ரயில் திட்டங்கள் பல்லிளிக்கின்றன. ஆனாலும், மலேசியாவில் உள்ள மோனோ ரயில் நிறுவனங்கள் உலகின் இதர நாடுகளில் பலவிதமான தந்திரங்களைக் கையாண்டும், பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி ஆசை வார்த்தைக் காட்டியும் ஏமாற்றி வருகின்றன.

இப்போது - மலேசியா மற்றும் ஜப்பானின் மோனோ ரயில் நிறுவனங்களுக்கு "உலகிலேயே மிகப்பெரிய இரை" சிக்கியிருக்கிறது. அது வேறு யாருமல்ல - அப்பாவி தமிழ்நாட்டு மக்கள்தான். ஒருபோதும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தமிழக மக்கள் இழக்க இருக்கின்றனர்.

வாழ்க ஜனநாயகம்!

(ஜூன் 03, 2011)


தொடர்புடைய சுட்டி:

குழப்பும் வினவு: கார்களைக் கட்டுப்படுத்தினால் ஏழைகளுக்கு ஆபத்தாம்!  

1 கருத்து:

கும்மாச்சி சொன்னது…

உங்களது கருத்து நியாயமானது. இது ஒரு போதும் சாத்தியமில்லை.