Pages

வியாழன், டிசம்பர் 29, 2016

கிறுக்குத்தனமான நோபல் பரிசு: இறந்த பிறகும் ஏமாற்றப்படும் ஜெயலலிதா!

ஜெயலலிதா ஏமாற்றப்படுவதற்காகவே பிறந்தவர் போலிருக்கிறது. அவர் உயிரோடு இருக்கும் போது, ஐநா சபையின் 'தங்கத்தாரகை விருது' வழங்குவதாக சொல்லி நன்றாக ஏமாற்றினார்கள். இப்போது, அவர் இறந்த பிறகும் 'அமைதிக்கான நோபல் பரிசு' என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

இறந்தவர்களுக்கு நோபல் பரிசு கிடையாது

நோபல் பரிசு அமைப்பின் சட்ட விதிகளின் படி - உயிரோடு உள்ளவர்களுக்கு மட்டும்தான் நோபல் பரிசு வழங்கப்படும். இதனை நோபல் சட்டவிதி, பிரிவு 4 தெளிவாகக் கூறுகிறது. (Work produced by a person since deceased shall not be considered for an award. Article 4. Statutes of the Nobel Foundation)

நோபல் பரிசினை அறிவிக்கும் போது உயிரோடு உள்ள ஒருவர் - அந்தப் பரிசு வழங்கும் போது உயிரோடு இல்லாவிட்டால் மட்டுமே - இறந்தவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும். இந்த விதிகளுக்கு மாறாக, 2011 ஆம் ஆண்டில் ரால்ஃப் ஸ்டெய்ன்மென் என்ற ஒருவருக்கு நோபல் பரிசு அறிவித்தார்கள். ஆனால், அந்த அறிவிப்புக்கு மூன்று நாள் முன்னதாக அவர் இறந்துவிட்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் - நோபல் பரிசு நிருவாகக் குழுவைக் கூட்டி, ரால்ஃப் ஸ்டெய்ன்மெனுக்கு பரிசை அறிவிக்கும் போது அவர் இறந்துவிட்ட தகவல் எங்களுக்கு தெரியாது. அவர் உயிரோடு இருப்பதாகக் கருதிதான் அதனை அறிவித்தோம். நல்ல எண்ணத்துடன் அறிவிக்கப்பட்டதால், அந்த பரிசு செல்லும் என்று விளக்கம் அளித்தார்கள்.

(Following an emergency meeting of officials at the Nobel assembly, it was decided that, in this instance, the rules could be ignored. The Nobel foundation concluded that the award should stand, saying: "The Nobel prize to Ralph Steinman was made in good faith, based on the assumption that the Nobel laureate was alive.")

இவ்வாறு, இறந்தவர்களுக்கு நோபல் பரிசு இல்லை என்பது தெளிவாக உள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, அவர் இறந்தபின்னரும் ஏமாற்றுகின்றனர்.

தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருது

ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே, 2004 ஆம் ஆண்டில் அவருக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள். அப்பொது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, நாளிதழிகளில் அதிமுக அமைச்சர்கள் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள். அதை ஐநா விருதென்று அப்பொது ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார்.
உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும், அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டர்கள் (Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine). ஆனால், அந்த அமைப்பு டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை. 

(தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை)

உடன் இருப்பவர்களால் ஏமாற்றம்

உயிரோடு இருந்தபோது ஏமாற்றும் டுபாக்கூர் விருது கொடுத்தனர். இறந்த பின்னர் சாத்தியமே இல்லாத நோபல் விருது கோரிக்கையை அதிமுக பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றுகின்றனர். 

இருக்கும் போதும், இறந்த பின்பும் உடன் இருப்பவர்களாலேயே ஏமாற்றப்படுவதற்காக பிறந்தவர்தான் ஜெயலலிதாவா? 

கருத்துகள் இல்லை: