Pages

வெள்ளி, டிசம்பர் 02, 2016

தமிழர்களின் மார்கழி மாதமும் - தாய்லாந்தின் மாபெரும் ஊஞ்சலும்!

தாய்லாந்து நாட்டில் புதிய மன்னர் முடிசூடவுள்ளார். தமிழ்நாட்டில் பல்லவர்களும் சோழர்களும் முடிசூடிய வழக்கத்தை பின்பற்றிதான் தாய்லாந்து நாட்டின் மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர். குறிப்பாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு முடிசூடும் முறையில் தாய்லாந்திலும் மன்னர் முடிசூடும் விழா நடக்கிறது.

(இதுகுறித்து "தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்!" எனும் பதிவில் விரிவாகக் காண்க)

தமிழ்நாட்டின் கோவில்களில் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. மார்கழி ஊஞ்சல் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டை பின்பற்றி, தாய்லாந்து நாட்டிலும் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பாடும் நிகழ்ச்சியும் மார்கழி ஊஞ்சல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதுகுறித்து காண்போம்:

தமிழர்களின் மார்கழி மாதம்

மார்கழி மாதம் தமிழகப் பண்பாட்டில் இணைந்திருக்கும் ஒரு முதன்மை மாதம் ஆகும். பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, பொங்கலை வரவேற்கும் விதமாக வாசலில் பெண்கள் கோலம் போட்டு பூவைத்தல் என பலவாறாக மார்கழி மாதம் கொண்டாடப்படுகிறது.

ஆண்டாளின் திருப்பாவை மார்கழி நீராடலைக் காட்டுகிறது. சங்க இலக்கியங்கள் தைநீராடலை குறிப்பிடுகின்றன. 'மார்கழி திங்கள் மதிநிறை நன்னாளில்' தொடங்கி தைப்பூசம் முழுமதி நாள் வரை தொடரும் விழாக்காலம் தமிழர் பண்பாட்டில் இருக்கிறது! இதனோடு இளம்பெண்கள் கொண்டாடும் சிறுவீட்டு பொங்கலும் இருக்கிறது.

திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்குகிறது. பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி சிவன் கோயிலுக்கு சென்று நடராஜரை வழிபடுவதும், திருவெம்பாவை பாடல்களை பாடுவதும் வழக்கம்.

'சிதம்பரத்தில் நடராஜப்பெருமான் மார்கழி திருவாதிரை நாளில்தான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். இதே நாளில் தான், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார்' - என்பது நம்பிக்கை.

மார்கழி மாதத்தில் தமிழ்நாட்டின் சிவாலயங்களிலும் அதிகாலையில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இசைக்கப்படுகின்றது. பல ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி பத்து நாள் திருவெம்பாவை விழா நடைபெறுகின்றது. சிதம்பரம் நகரில் மார்கழி மாதத்தில் நடராஜருக்கு முன்னால் திருவெம்பாவை எழுதிய மாணிக்கவாசகர் நின்று பாடும் நிகழ்ச்சி பத்து நாட்கள் நடக்கின்றன.

பல ஆலயங்களில் மார்கழி ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாக்களில் மாணிக்கவாசர் எழுதிய "திருப்பொன் ஊசல் பதிகம்" பாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருவெம்பாவை விழாவில் கபாலீஸ்வரரரும், கற்பகாம்பாளும் பொன்னூஞ்சல் ஆடும் திருவிழா நடக்கிறது. சிதம்பரத்தில் மார்கழி தரிசன விழாவின் போது திருவாபரண அலங்கார ஊஞ்சல் விழா நடக்கிறது.
அம்மன் ஊஞ்சல் விழா
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், காஞ்சிபுர ஏகாம்பரேஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயம், கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் மார்கழி மாத ஊஞ்சல் விழா நடக்கிறது. வைணவ ஆலயங்களிலும் இந்த விழாக்கள் நடக்கின்றன். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நதியில் ஆண்டாள், ரங்க மன்னருடன் ஊஞ்சலில் காட்சிதரும் நிகழ்ச்சி நடக்கிறது.

தாய்லாந்தில் திருவெம்பாவையும் ஊஞ்சலும்

தாய்லாந்து நாட்டில் மார்கழி மாதத்தில் பத்து நாட்கள் திருவெம்பாவை, திருப்பாவை விழா நடத்தப்படுகிறது. தாய்லாந்து மன்னர் குடும்பத்தின் 12 பாரம்பரிய விழாக்களில் திருப்பாவை, திருவெம்பாவை ஊஞ்சல் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.

இந்த நாட்களில் சிவபெருமானும் விஷ்ணுவும் பூமிக்கு வருவதாகவும், அவர்கள் ஊஞ்சலில் ஆடுவதாகவும் கருதி விழா நடத்தப்படுகிறது. அப்போது திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. முதலில் தமிழ் - கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த இப்பாடல்கள், தற்போது தாய்லாந்து மொழி எழுத்துகளின் வழியாக பாடப்படுகிறது.

மிகப்பெரிய ஊஞ்சலில் சிவனாக வேடமிட்டவர்கள் அமர்ந்து ஆடும் வகையில் தாய்லாந்தின் பல பகுதிகளிலும் இந்த விழா 1932 ஆம் ஆண்டுவரை கொண்டாடப்பட்டது. ஆனால், இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பெரிய ஊஞ்சலில் ஆபத்தாக ஆடும் வழக்கம் தடைசெய்யப்பட்டது. பாங்காக் நகரின் கோவிலுக்குள் தற்போது இந்த விழா நடத்தப்படுகிறது.
ஊஞ்சல் திருவிழா 1919 ஆம் ஆண்டு
உண்மையில், இந்த விழா தாய்லாந்து நாட்டின் எல்லா புராதான நகரங்களிலும் நடந்துள்ளது. அயோத்யா, சுக்கோத்தாய், சவாங்லோக், பிட்சானுலோக், நகோர்ன்-சிரிதமராஜ் என்கிற பழங்கால நகரங்களில் கி.பி. 1300 ஆம் ஆண்டுகளில் இருந்து திருவெம்பாவை, திருப்பாவை ஊஞ்சல் விழா நடந்ததற்கான ஆதராங்கள் உள்ளன.

கி.பி. 1784 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, பழங்கால மாபெரும் ஊஞ்சல் இன்னமும் பாங்காக் நகரில் இருக்கிறது. பாங்காக் நகரின் ஒரு பாரம்பரிய அடையாளச் சின்னமாக இப்போதும் திருப்பாவை, திருவெம்பாவை ஊஞ்சல் காட்சியளிக்கிறது.

தொடரும் பண்பாடு

மார்கழியும் பாவை நோன்பும் தமிழர் பண்பாட்டில் நெடுங்காலமாக நீடித்து வருகிறது. சைவ மதத்தில் திருவெம்பாவையாகவும் வைணவத்தில் திருப்பாவையாகவும் ஊஞ்சல் திருவிழாவாகவும் மாற்றமடைந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழிசை விழாவும் கர்நாடக சங்கீத விழாக்களும் நடத்தப்படும் மாதமாக மார்கழி இருக்கிறது.

தமிழர்கள் எங்கு சென்றாலும், பண்பாட்டையும் கொண்டு சென்றார்கள் என்பதற்கான அடையாளமாக தாய்லாந்தின் திருவெம்பாவை - திருப்பாவை விழா காட்சியளிக்கிறது. சிதம்பரம் கோவிலின் சோழ மன்னர் முடிசூடலை பின்பற்றும் தாய்லாந்து மன்னர்கள், அதே சிதம்பரம் கோவில் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் மார்கழி திருவெம்பாவை நிகழ்ச்சியையும் கொண்டாடுவது வியப்பளிக்கும் ஒற்றுமை ஆகும்.
பாங்காக் நகரின் மாபெரும் ஊஞ்சல் 1784 ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னர் முதலாம் இராமரால் அமைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் ஒன்பதாம் இராமரால் புதிதாக மாற்றப்பட்டது. இதன் உயரம் 21.15 மீட்டர் ஆகும்.

தொடர்புடைய சுட்டி:

தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்!

ஆதாரம்:

1. Siamese state ceremonies - their history and function, by Horace Geoffrey Quaritch Wales (1931)

2. Some Aspects of Asian History and Culture, by Upendra Thakur, (1986) 

3. A comparative study of Tiruvempavai: Tradition in Thailand and Tamil Nadu in Historical and musical contexts, by Pannipa Kaveetanathum (1995)

4. God & King, the Devarāja Cult in South Asian Art and Architecture. by Arputha Rani Sengupta, (2001)

கருத்துகள் இல்லை: