Pages

திங்கள், ஜூன் 21, 2010

சரித்திரம் மறக்கலாமா ? - அஞ்சலை அம்மாளின் வரலாறு

சரித்திரம் மறக்கலாமா ? - அஞ்சலை அம்மாளின் வரலாறு
சந்தனமுல்லை




”விடுதலைக்கு மகளிரெல்லாம் 
வேட்கை கொண்டனம்” - என்று பாரதி, பெண் விடுதலைக்கு அறைகூவல் விட்ட காலகட்டத்தில் பெண் விடுதலையை விட தாய்நாட்டின் விடுதலை முக்கியம் என்று களத்தில் குதித்தவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் தெய்வத்தாய் என்றும் வேலு நாச்சியார் என்றும் போற்றப்படும் திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்கள். 1921ல் இந்திய சுதந்திரப் போர் அரங்கில் இறங்குகிறார். சாதாரண நெசவு குடும்பத்தில் பிறந்தவர். குறைந்த படிப்பறிவு இருந்தாலும் அறிவும் துணிவும் அனுபவமும் எப்படி வந்திருக்கும்? இவை இந்த சமூகம் பாய்ச்சிய வீர ரத்தத்தின் வெளிப்பாடு அல்லவா! 

”விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை 
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்” - என்று பாரதி முழங்கிய கனவை நனவாக்கியவர் அல்லவா இவர். சமகால பெண்ணிய எழுத்தாளர் அம்பை மிகவும் ஆதங்கத்துடன் ஒரு கதையில் சொல்வார் -இந்தப் பெண்கள் அறிவையும், திறமையையும், சமையலறையிலே முடக்கி வைத்துக் கொள்கிறார்களே - தோராயமாக ஒரு பெண்ணின் ஆயுள் காலத்தில் 2,92,000 தோசை சுடுபவளாக இருக்கிறாளே! ஆனால், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மரபு என்னும் விலங்கை உடைத்தெறிந்துவிட்டு வாழ்வு என்பது குடும்ப வாழ்வு மட்டுமல்ல, சமுதாய வாழ்வும்தான் என்று முழங்கி குடும்பத்தினருடான் வீதியில் இறங்கியவர் அஞ்சலை அம்மாள்.

ஆம், இவர் நேருவின் குடும்பம் போல என்று சிலர் சிலாகித்து எழுதுகின்றனர். பேசுகின்றனர். ஆனால், இவர்கள் இன்னும் ஒருபடி மேல் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும். நேருவுக்கு பொருளாதார பலம் இருந்தது. குடும்பமும் சிறிய குடும்பம்தான். ஆனால், இவர் குடும்பமோ பெரிய குடும்பம். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பம். அன்றைய உழைப்புதான் அன்றைய சாப்பாடு என்றிருக்கும் போது எந்த துணிவில் அவர் சுதந்திர போரில் இறங்கியிருப்பார்? அதுவும் அந்த காலத்தைச் சேர்ந்த பெண்! பெண்களை நான்கு சுவர்களுக்குள்ளேயே வைத்து வெட்டி வீரம் பேசும் சமூகம்! ஆய்வுக்குரிய சிந்தனையாக எடுத்துக் கொள்ளவும். அமெரிக்க பெண்கள் விடுதலை போராட்ட வீராங்கனை பெட்டி ஃப்ரைடன் நீண்ட நாள் போராட்ட அனுபவத்திலிருந்து சொல்வது - “ஆண்கள் ஒரு தனி வர்க்கமல்ல. பெண்கள் ஒரு தனிவர்க்கமல்ல. பெண்கள் மட்டும் தனியாக முன்னேறலாம் என்று நினைப்பது தவறு”. தான் மட்டுமல்லாமல், கணவருடன், குழந்தைகளுடன் போராட்டத்தில் இறங்குகிறார்.

கணவர் - முருகப் படையாச்சி
பெண் - லீலாவதி
மகன்கள் - காந்தி,ஜெயில்வீரன்(தற்போது ஜெயவீரன்) 

கர்ப்பிணியாக சிறைபுகுந்து பேறுகாலத்தில் அனுமதியுடன் வெளியே வந்து ஆண் மகவுடன் மறுபடியும் சிறை புகுகிறார், சிறை அதிகாரிகள், ஜெயில் வீரன் என்று குழந்தைக்கு பெயரிட்டு இப்போது ஜெயவீரனாக கடலூரில் வசிக்கிறார். 

எப்படி ஒரு பெண்ணால் இது சாத்தியமாயிற்று?

“நாங்கள் இந்தியப் பெண்மணிகள்
நாங்கள் மலரினும் மென்மையானவர்
நாங்கள் சுட்டெரிக்கும் தீச்சுடர்கள்” - என்ற ஒரு பெண் கவிஞரின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்திய விடுதலைக்காக தீவிரவாதியாக மாறிய மாடம் காமா, நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து போராடிய அருணா ஆசிப் அலிக்கும் சற்றும் குறைந்தவரல்லர் அஞ்சலை அம்மாள்.


1921 - சுதந்திர போராட்டத்தில் இறங்குகிறார்.
1927 - நீலன் சிலை அகற்றும் போரில் ஒரு வருடம் சிறை தண்டனை - சென்னையில்
1931 - உப்புக்காய்ச்சல் போராட்டத்தில் ஆறுமாத சிறை தண்டனை - கடலூரில்
1933 - மறியல் போரில் மூன்று மாத சிறை - கடலூரில்
1940 - தனி நபர் சத்தியாகிரகத்தில் முதலில் 6 மாதம்
1940 - 18 மாதங்கள் - வேலூர்
1943 - 8 மாதம் 2 வாரம் - பெல்லாரி

ஆக, நான்கு வருடம் ஐந்தரை மாதம் சிறைவாசம். தமிழ்நாட்டில் முதன் முதலில் சத்தியாகிரகத்தில் சிறை புகுந்த பெண்கள் என்ற பெருமைக்குரியவர்கள் : 

1. அஞ்சலை அம்மாள்
2. மதுரை பத்மாசனி அம்மாள்

கள்ளுக்கடை இருக்குமிடமெல்லாம் அச்சிட்ட (குடியை கைவிடத் தூண்டும்) நோட்டீஸ்களை வழங்கிக் கொண்டே அஞ்சலை அம்மாள் மறியல் செய்வார். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மகாநாட்டுக்கு தலைமை தாங்கி ஒரு பெண்கள் படையுடன் அஞ்சலையம்மாள் கைதானார். பிறகு ஜில்லாபோர்டு உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து 20-06-1961 இல் அமரரானார். 

இவருடைய மகள் அம்மாப்பொண்ணு என்கிற லீலாவதி (காந்தி இட்ட பெயர்) 
தன்னுடைய 9வது வயதில் நீலன் என்ற கொடுங்கோலன் சிலையை அகற்றுவதற்காக தாயுடன் சென்னை வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவர்களுடன் தந்தையும் போராடும் போது அனைவரும் கைது செய்யப்பட்டு லீலாவதி செனனி சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார். 1931ல் விடுதலையான பிறகு காந்தியின் வார்தா ஆசிரமத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சேவையில் ஈடுபட்டார். 

இவருடைய கண்வர் திரு.ஜமதக்னி வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்தில் உள்ள கடப்பேரி என்ற சிற்றூரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். காந்தியடிகளில் முதல் இயக்கம் முதல் இறுதி இயக்கம் வரையில் எல்லாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தவர். தமிழ்,ஆங்கிலம்,இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றில் புலமை பெற்று பல விருதுகளை குவித்தவர். ஜமதக்னி அவர்களின்நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைப் பற்றி ஆர்வியின் தளத்தில் காணலாம். 
இவர்களுடைய புதல்வி திருமதி.சாந்தி பெரியார் சிந்தனையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று சென்னையில் வசிக்கிறார்.

ஆக, இவ்வளவு தியாகங்கள் செய்த குடும்பம் வரலாற்று ஏடுகளில் எங்கே உள்ளது? இந்த சரித்திர சுவடுகள் பெண்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில்/ தென்மாவட்டத்தில் சுதந்திரபோராட்டத்திற்கு பங்களித்த எத்தனை பெண்கள் உடனே நம் நினைவுக்கு வருகின்றனர்? பெண்களின் போராட்டங்களை இந்த சமூகம் மறைக்கிறது அல்லது மறக்கிறது! 

சிறையில் அடைபட்டிருக்கும்போது கடலூரில் அஞ்சலை அம்மாளின் வீடு ஏலத்திற்கு வந்தபோது, ஒரு முஸ்லீம் குடும்ப நண்பர் சமயத்தில் உதவி செய்கிறார். அஞ்சலை அம்மாளின் குழந்தைகளை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. பொருளாதார பிரச்சினை ஒரு புறம், பாதுகாப்பின்மை ஒரு புறம் - அதன் தாக்கம் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.

அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது? யார் இதை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பது? யார் யாருக்கோ சிலை நிறுவும் அரசாங்கம் அவர்களை எப்படி மறக்கலாம்?இவர்கள் சாதி, மதங்கள் தாண்டி வெளியில் வந்து போராடியவர்கள் ஆயிற்றே! History என்பது his-story மட்டுமல்ல her-storyயையும் உள்ளடக்கியது தானே! அரசு செய்ய மறந்தால் அல்லது மறுத்தால் இந்த சமுதாயமாவது அன்னாருக்கு சிலையெடுத்து சரித்திரத்தை திரும்பி பார்க்க வைக்கட்டும்! 


”போற்றித்தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
”போற்றித்தாய்” என்று பொற்குழலூதடா!!


நன்றி: சந்தனமுல்லை
http://www.tamilmanam.net/printer_friendly.php?id=565960

விடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்




இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போயின. வரலாற்றுத் தரப்படி நிலையில் இத்தகைய பிழைகள் இன்று வரைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவர்தான் விடுதலைப் போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்பாள்.


கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ஆம் எண் இல்லத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள் திண்ணைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெணமணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும். 


1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே அஞ்சலையம்மாளின் பொது வாழ்க்கைத் தொடங்கி விட்டது. 1927 ஆம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம், 1930-உப்பு சத்தியாகிரகப்போர், 1933-கள்ளுக் கடை மறியல், 1940- தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு கடலுர், திருச்சி வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் நானகரை ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றவர். குறிப்பாக வேலுர் பெண்கள் சிறை அவர் அடிக்கடி சென்று வந்த சிறையாகும். 1932 ஆம் ஆண்டு வேலுர் பெண்கள் சிறையில் 727 ஆம் எண் கைதியாக அஞ்சலையம்மாள் இருந்த போது அவர் நிறை மாத கர்ப்பிணி, சிறையிலேயே குழந்தை பிறந்துவிடுமென்பதால் அவரை வெளியில் அனுப்பி குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனால் சிறையில் குழந்தை பிறந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை.

 அப்போது பிறந்தவர்தான் ஜெயவீரன் இன்றும் கடலூர் முதுநகரில் சின்னஞ்சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள நற்குணம் என்ற சிற்றூரில் முருகப்படையாட்சி என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். அஞ்சலையம்மாளின் அரசியல் பணிக்கு உறுதுணையாகக் கணவரும் கடலுரிலேயே தங்கி விடுதலைப் போரில் பங்கேற்று அவரும் பல முறை சிறை சென்றுள்ளார். இவர்களின் மூத்த மகள் அம்மாப்பொண்ணு ஒன்பது வயதிலேயே நீலன் சிலையகற்றும் போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அவரை காந்தியடிகள் வார்தாவுக்கு அழைத்துச் சென்று லீலாவதி எனப் பெயர் சூட்டி சபர்மதி ஆசிரமத்தில் வளர்த்தார். அங்கு செவிலியர் படிப்பை முடித்து சென்னை வந்ததும் தன்னைப்போலவே இளம் வயதில் விடுதலைப் போரில் ஈடுபட்ட பன்மொழிப் புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்து கொண்டார். 



காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அஞ்சலையம்மாள் அரும்பாடு பட்டுள்ளார். கடலூரில் அஞ்சலையம்மாளின் இல்லம் எப்போதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த வண்ணமிருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்காக செலவிட்டிருக்கிறார். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது நல்ல உள்ளம் கொண்ட சிலர் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலையம்மாள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.

1946 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. "கதர் என்று மகாத்மா கொண்டு வந்தார், கிராமங்களில் நூற்றால் ஒரு சிட்டம் இரண்டரை அணா விற்கிறது. இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போகாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கத்திலே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமில்லாமல் கவுரவமாய் இருப்போம்... கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப்
போய்விடுவார்கள். பத்து மணிக்கு அவர்களுக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டு இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" .(சட்டமன்ற அவைக்குறிபு தொகுதி-1,பக்.317,மே,ஜூன்-1946) ஏழைப் பணக்காரர் நிலையை ஒப்பிட்டு பேசியது அவரின் பொது உடைமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. 



உழவு, நெசவு ஆகிய இரு தொழில்களையும் அவர் குடும்பத்தினர் செய்துள்ளனர். இருப்பினும் நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாகச்செய்துள்ளனர். இவர் கணவர் முருகப்படையாட்சி 1932 ஆம் ஆண்டு கடலுர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு வயது 56 தொழில் நெசவு என்று சிறைப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஞசலையம்மாளும் அவர் கணவர் முருகப்படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தரி நெசவு செய்து நீண்டநாள் கட்சிப்பணி செய்துள்ளனர். நெசவு செய்த கைத்தரி துணிகளைச் சுமந்து கொண்டு தந்தைப் பெரியாரோடு சென்று சிற்றூர்களில் விற்றுள்ளனர். அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றியுள்ளார். அப்போது அவரின் முயற்சியால் தான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ் கதிர் கருவி கொண்டுவரப் பட்டுள்ளது. ஒரு முறை கடலூருக்கு காந்தியடிகள் வந்த போது அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு மாறு வேடத்தில் காந்தியடிகளை குதிரை வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளை தென்னாட்டின் ஜான்ஸிராணி என அழைத்தாராம்.


பண்ணுருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் நல்ல குடி நீர் கிடைக்காமல் மக்கள் நரம்பு சிலந்தி நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அத்தகைய சிற்றூர்களில் அஞ்சலையம்மாள் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார். வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்கு பாசன நீர் செல்லும் பெரிய வாய்க்காலில் ஒரு கிளை வாய்க்காலை ஏற்படுத்தி தீர்த்தாம்பாளையம் என்ற சிற்றூருக்கு பாசன வசதி செய்தார் அவ்வாய்க்கால் இன்றும் அஞ்சலை வாய்க்கால் என்றே குறிப்பிடப் படுகிறது. 


இத்தகைய வரலாற்று நாயகியை நம் வரலாற்றுப் பாட நூல்கள் எப்படி சிறப்பித்துள்ளது தெரியுமா? கடலூர் அஞ்சலையம்மாள் விடுதலை வீரர்களுக்குக் காவல் துறை வளாகத்திலேயே உணவு சமைத்துக் கொடுத்தார் அதனால் அவர் சிறைத் தண்டனைப் பெற்றார் என எழுதப்பட்டுள்ளது அஞ்சலையம்மாளின் வரலாறு. 


பெண் என்பவள் சமைக்கப் பிறந்தவள் என்னும் ஆணாதிக்கப் பொதுப் புத்தியின் வெளிப்பாடுதான் இது.


நன்றி: http://cuddaloreseidhi.blogspot.com/2010/01/blog-post_03.html

செவ்வாய், ஜூன் 15, 2010

ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு அஞ்சுவது யார்?

நடப்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஜாதிவாரியான மக்கள் தொகை புள்ளி விவரங்களையும் அரசு திரட்டும் என்று மத்திய அரசு அறிவித்தது முதல், இது நாட்டிற்குக் கேடு பயக்கும் என்றும், ஜாதிச் சண்டைகளை இது பெருமளவில் ஏற்படுத்தும் என்றும் கூறி ஊடகங்கள் ஒரு பெரும் தவறான பரப்புரையை மேற்கொண்டன. தற்போது நிலவும் குழப்பத்தைப் போக்கி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், அவர்களுக்கான நலஉதவித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும், ஜாதிவாரி மக்கள் தொகை புள்ளி விவரங்கள் மிகுந்த உதவியாக இருக்கும் என்று ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாக இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பது என்ற முடிவை அரசு தானாக மேற்கொள்ளவில்லை. நாடு முழுவதிலும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் தலைவர்கள் அதைக் கோரினர். ஜாதிவாரி மக்கள் தொகையின் சரியான புள்ளி விவரங்களைப் பெறுவதற்கு ஏற்றவாறு மக்கள் தொகைக் கணக்-கெடுப்பை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள உச்ச நீதி-மன்றம் ஆணையிட்டு இருந்தது.

2001 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் கூட இவ்வாறு ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டும் என்ற பலமான கோரிக்கை இருந்தது. இந்தப் புள்ளி விவரங்கள் திரட்டப்படும் என்று உதவிப் பிரதமர் எல்.கே.அத்வானி கூறியது பதிவாகியுள்ளது. ஆனால் வலதுசாரி ஆதிக்க சக்திகள் குறிப்பாக சமூக இயலாளர்கள் மற்றும், மனித-இயல்பு இயலாளர்களின் குழு ஒன்று, அத்தகைய கணக்கெடுப்பு ஆளும் உயர்ஜாதி மற்றும் சமூகங்களின் நலனுக்கு எதிரானது என்பதால், அதை மேற்கொள்ள வேண்டாம் என்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஆலோசனை கூறினர்.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உயர்ஜாதியினர்தான் எதிர்க்கின்றனர்

அதிகார மய்யங்களை இன்னமும் தங்களின் பிடியில் வைத்திருக்கும் உயர்ஜாதியினரிடமிருந்துதான் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்-கான எதிர்ப்பு வருகிறது. இதர ஜாதியினர் எப்போதுமே அதை எதிர்த்தது இல்லை. கொள்கை வகுப்பவர்களுக்கும், பொது மக்களுக்கும் ஒவ்வொரு ஜாதியிலும் இருக்கும் மக்கள் தொகை தெரிய வந்தால், சமூகம் மேலும் பிளவுபட்டுப்போகும் என்ற விவாதம் தவறாக வழிகாட்டுவதாகும்.

தங்கள் ஜாதி மக்கள் தொகை அதிகம் என்று ஒவ்வொரு ஜாதியினரும் கூறுவதை எவ்வாறு மறுக்க முடியும்?

ஜாதி கலாச்சாரம் நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் இருக்கிறது. உயர்ஜாதி மக்கள் மொத்தத்தில் 15 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர் என்று தாழ்த்தப்பட்ட பிரிவினர் கூறுகின்றனர். இது தவறாகவும் கூட இருக்கலாம். கீழ் ஜாதிகள் பலவற்றில் மக்கள் தொகை எண்-ணிக்கை மிகைப்படுத்திக் கூறப்படு-கின்றது. ஒவ்வொரு ஜாதியும் தங்களின் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்று உரிமை கோரி தங்களுக்குச் சேரவேண்டிய சரியான பங்கினை அளிக்கக் கேட்கின்றனர். அவர்களின் கோரிக்கை தவறானது என்று அவர்களுக்கு எவ்வாறு கூறுவது? அன்றாட வாழ்க்கை முறையில் ஜாதி என்பது இது போன்ற ஒரு முக்கியமான அம்சமாக விளங்கும் நிலையில், உங்கள் ஜாதியில் இவ்-வளவு மக்கள் தொகைதான் உள்ளது, இதற்கு மேல் நீங்கள் உரிமை கோரமுடியாது என்று அவர்களிடம் சொல்வதற்கு, ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் கையில் தயாராக இருக்க வேண்டும்.

ஜாதியின் அடிப்படையிலேயே அனைத்தையும் விநியோகிக்க நம்மால் முடியாது என்பது உண்மைதான். கல்வி அறிவு பெற்றவர் விகிதாசாரம் மற்றும் பிரதிநிதித்துவ அளவு ஆகியவை குறித்த ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள்தான் சரியான அடிப்படையாக இருக்கும். மக்கள் தொகைக் கணக்கை நாம் ஒரு முறை சொல்லிவிட்டால், அந்த ஆதாரத்திற்கு எந்த எதிர்ப்பும் இருக்க முடியாது.

மேல் ஜாதியினரின் அச்சம்

கீழ் ஜாதி மக்கள் தொகை பற்றிய விரிவான புள்ளி விவரங்கள் ஒரு முறை கிடைத்து விட்டால், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற துறைகளில் சரியான அளவு விகிதாசார பிரதி-நிதித்துவம் கோருவதற்கான அடிப்படையாக ஆகிவிடுமே என்று உயர்ஜாதியினர் அஞ்சுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் ஒரு முறை கிடைத்துவிட்டால், இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 விழுக்காடு உயர் அளவு பற்றி கேள்வி எழுப்பப் பட-லாம். ஒட்டு மொத்த தாராளமான மக்களாட்சி நடைமுறை நீடித்து நிலைக்க இது உதவும். எண்ணிக்-கையின் அடிப்படையிலான மக்களாட்சி இன்னும் ஆழம் நிறைந்ததாக ஆகிவிடும்.

மக்களாட்சி முறையே எண்ணிக்கையின் அடிப்படையிலானதுதானே?

கம்யூனிசம் போல் அல்லாமல் மக்களாட்சி என்பது உண்மையில் ஓர் எண்ணிக்கை முறையாகும். ஓர் அரசை ஏற்படுத்தும்போது கம்யூனிசம் எண்ணிக்கையைப் பார்ப்பதில்லை. மக்களாட்சி முறையில், அரசு ஒரு தேர்தல் நடைமுறை மூலம் உருவாக்கப்படுகிறது. இது போன்றதொரு நடைமுறையில், பால், இனம், மதம், ஜாதி போன்ற அனைத்து கோணங்களிலும் மக்கள் எண்ணப்படவேண்டும். எண்ணிக்கையின் அடிப்படையிலான மக்களாட்சி முறையில், சமூகத்தின் எந்தப் பிரிவினர் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரமுடியும்.

மதவாரி கணக்கெடுப்பு இல்லாமல் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்று எப்படி தெரியவந்தது?

மதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதால், இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஆட்சி அதிகாரத்துக்கு அவர்கள் உரிமை கோருகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, நாடு பிரிவதைத் தடுக்க முகம்மது அலி ஜின்னாவை இந்தியாவின் முதல் பிரதமராக ஆக்க வேண்டும் என்று காந்தி கேட்டபோது, இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு நாடு இந்தியா என்பதால், ஒரு முஸ்லிம் பிரதமரை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஜவஹர்லால் நேருவும், சர்தார் படேலும் கூறினர். இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள் என்ற கண்ணோட்டம் எங்கிருந்து வந்தது? அது எண்ணிக்கையில் இருந்து வந்தது.

எண்ணிக்கை அடிப்படையில் பெண்கள் அதிகாரத்துக்கு வரமுடியாதா?

இதே வாதத்தையே வைத்துக் கொண்டு, மதப் பிரிவினையைக் கடந்து, பெண்கள் தங்களை எண்ணிக்கொண்டு, ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதிகாரத்துக்கு வந்தால், அதில் என்ன தவறு இருக்க முடியும்? மொத்த மக்கள் தொகையில் பெண்கள் 50 விழுக்காடு இருக்கின்றனர். பாலியல் மக்களாட்சிக்கு போராட அவர்கள் விரும்பினால், அவர்களாலும் அதிகாரத்திற்கு வரமுடியும். அப்படிப் பார்த்தால், பால் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் எழவேண்டும் அல்லவா?

மக்கள் ஆட்சி முறையில் உயர்ஜாதியினர் தனிமைப்படுத்தப்பட்டு விடவும் கூடும் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், கீழ் ஜாதி மக்களின் உறுதியான ஆதரவுடன் இந்தியாவின் மக்களாட்சி சிறப்பாக செயல்படும். தங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தங்களின் பங்கைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். இந்த மாதிரியான ஒரு மாற்றம் ஏற்பட்டால், மக்களாட்சி முறையில் இருந்தே உயர்ஜாதியினர் தனிமைப்படுத்தப்பட்டுவிடக்கூடும். பெண்களால் ஆளப்படும் ஒரு மாநிலத்தையோ அல்லது நாட்டையோ பெண்களாட்சி முறை என்று அவர்களால் அழைக்க முடியுமா?

அனைத்து கோட்பாடுகளுமே, வசதியான இடம் என்று அறியப்பட்டுள்ள ஒரு வசதியின் மீது கட்டமைக்கப்பட்டவைதான் என்று ஆழ்ந்த சிந்தனையின்பால் வெளிப்பட்ட சமூகமனோதத்துவம் கூறுகிறது. சிவப்பு நிறம் கொண்ட உயர்ஜாதியினர் வெள்ளையர் சமூகத்தில் வாழ்ந்தால், அவர்கள் காணும் சிவப்பு நிறத்தின் அடியில் கருப்பு நிறமும் மறைந்து இருப்பதைக் காண்பர். வெள்ளையர் சமூகத்தில் சிவப்பு நிற மனிதர்கள் இணக்கமாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. ஆனால், இந்தியாவில் தங்கள் சிவப்பு நிறத்தைப் பெருமையாகக் கருதும் அவர்கள் கருப்பு நிறத்தவர்களை இணக்கமாக ஏற்றுக் கொள்வதில்லை.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன் இந்தியாவில் ஜாதியே இருக்கவில்லையா?

ஆங்கிலேயர் காலனி நாடுகளில் மேற்கொண்ட நடைமுறைதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியைக் கணக்கிடுவது என்று உயர்ஜாதி அறிவாளிகள் பலர் கூறுகின்றனர். ஆங்கி-லேயர் இத்தகைய ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முறையை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பு இந்தியாவில் ஜாதியே இல்லாமல் இருந்தது போல அவர்கள் பேசுகின்றனர். இந்த வாதத்தை வைத்துப் பார்த்தால், மதவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தும் முன், இந்தியாவில் மதங்களே இல்லாமல் இருந்திருக்க வேண்டுமே? இது போன்ற கருத்துப் பார்வையற்ற கரும்புள்ளிகள் இந்தியாவில் பல இடங்களில் இருப்ப-தால்தான், நாம் இன்றும் அறிவியல் களத்தில் பின்தங்கியே இருக்கிறோம்.

நமது மக்களாட்சி நடைமுறை பலம் பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் மட்டுமன்றி அனைத்து ஜாதியினருமே கணக்கிடப்பட வேண்டும். எனது கோட்பாடும் கரும்புள்ளியாக இருக்கலாம்; ஆனால் அது தீங்கை நீக்கும் ஓர் எதிர்மறை பாதிப்பாகவும் இருக்கக் கூடும்.

நன்றி: டெக்கான் கிரானிகல்,
11.6.2010 இல்காஞ்சா அய்லய்யா அவர்கள் எழுதிய கட்டுரை
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்--"விடுதலை” 14-6-2010

நன்றி: தமிழ்ஓவியா

http://thamizhoviya.blogspot.com/2010/06/blog-post_15.html

வெள்ளி, மே 07, 2010

மாபெரும் வெற்றி: சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் ஒப்புதல்.

சாதிவாரிக் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நடுவண் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்த முடிவினை விரைவில்  மத்திய அமைச்சரவை மேற்கொள்ளும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அவையில் உறுதி கூறியுள்ளார்.

எதிர்கட்சிகள் அனைத்தும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரியதாலும், காங்கிரஸ் கட்சியிலேயே பலர் இதற்கு ஆதரவு தெரிவித்ததாலும் அரசு பணிந்துள்ளது.

1960களின் கலேல்கர் குழுவும், 1980களின் மண்டல் குழுவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உடனே தேவை என்று பரிந்துரை செய்து பல ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இக்கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது.  எனினும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க, மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக நீண்ட நாளாக போராடிவரும் கட்சி பாட்டளி மக்கள் கட்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக தீர்ப்பும் பெற்றுள்ளது பா.ம.க.

வெள்ளி, ஏப்ரல் 30, 2010

அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயக்கர்

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தியாவின் தென்பகுதியில் நிர்வாகம் என்பது பல்வேறு குழப்பங்களுக்கு உட்பட்டதாக அமைந்திருந்தது. பல்வேறு சிற்றரசுகள். பாளையக்காரர்கள், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆகிய பிறன் அதிகாரத்திற்கு இந்நிலப்பகுதி ஆட்பட்டிருந்தது. விஜயநகர மன்னர்கள், மராட்டியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என்று பலரும் அரசதிகாரத்தைப் பங்குபோட்டுக்கொண்டிருந்தார்கள்.

இச்சூழலில் கிராம அளவிலான நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கும். அரசாங்க அளவில் நிர்வாகம் செய்தவர்களுக்கும் இடையில் இடைவெளி உருவானது. நேரடியாக வரி வசூல் செய்வதில் சிக்கல்கள் உருவாயின. இந்தப் பின்புலத்தில். நிலம் தொடர்பான உறவுகளில் பல புதிய தன்மைகள் உருவாயின. நிலத்தில் யார் பயிடுவது? நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை எப்படிப் பகிர்வது? நிலத்தை எப்படி அளப்பது? ஆகிய பிற கேள்விகள் எழுந்தன. அவ்வப்போது ஏற்பட்ட பஞ்சங்கள். இக்கேள்விகளின் முக்கியத்துவத்தை அதிகக்கச் செய்தன. இச் சூழலில், பிரித்தானியன் கிழக்கிந்திய கம்பெனிக்கும் திப்பு சுல்தானுக்குமான இறுதிப் போர் நடந்து கொண்டிருந்தது.

1792இல் கிழக்கிந்தியக் கம்பெனி. தென்னிந்திய நிலப்பகுதியை விடுவித்து. அவர்களின் அதிகாரத்தில் கொண்டு வந்தனர். 1799இல் திப்பு சுல்தான் மறைவோடு, அவர்கள் நிம்மதியாகச் செயல்படத் தொடங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் வெவ்வேறு இடங்களில். வெவ்வேறு வகையில் போர் நடந்து கொண்டிருந்தது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில். மதறாஸ் இராஜதானியை பிரித்தானியர்கள் உருவாக்கியதின் மூலம் போர்கள் நின்றன.

இவ்விதம் சுமார் 250 ஆண்டுகளின் தொடர்ச்சியான போல், பிரித்தானியர்கள் வெற்றியடைந்த பின் பல்வேறு நிர்வாக அமைப்புகளை உருவாக்கத் தொடங்கினர். ரெவின்யூ போர்டு ஒன்றை 1794இல் உருவாக்கினர். சுங்க இலாகா ஒன்றை 1806இல் உருவாக்கினர். பஞ்சங்களால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து விரிவான அறிக்கைகளைத் தயாரித்தனர். ஒய்.டபில்யூ. எல்லீஸ் 1874இல் 'மிராசுதா’ முறை குறித்த விரிவான ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். அரசர்கள். ஜமீன்தாரர்கள். பாளையக்காரர்கள் ஆகியோருடன் கொள்ளும் உறவுமுறை குறித்தும் விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதிகமான வவசூலிப்பு, கொள்ளை மற்றும் திருட்டு மிகுதியாக உருவாகி இருந்தன.

பல கிராமங்களில் வாழ்ந்த மக்கள். மேற்குறித்த நிலைமைகளுக்கு அஞ்சி, தாம் குடியிருந்த இடங்களைக் காலிசய்துவிட்டு. காடுகளில் சென்று வாழ்க்கையைத் தொடங்கினர். இவ்வகையில் 'கர்நாடகம்’ மற்றும் 'மலபார்’ என்று அழைக்கப்பட்ட இன்றைய தென்னிந்தியப் பகுதிகளின் அரசியல் வரலாறு பலரால் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஆனால் பொருளாதார வரலாறு பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. 'மதறாஸ்’ இராஜதானியின் ஒரு பகுதியான தொண்டை மண்டலப் பகுதியில் வாழ்ந்த அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் என்பவர் குறித்த நமது உரையாடல் மூலம். தொண்டை மண்டலப் பகுதியின் 19ஆம் நூற்றாண்டுப் பொருளாதார வரலாற்றைப் புந்து கொள்ள முயலலாம். இம்மனிதர் குறித்த உரையாடலைப் பின்கண்ட வகையில் அமைத்துக் கொள்ளலாம்.

1872இல், அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் எழுதிய ‘பாயக்காகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாகியிருக்கிற விவாதம்’ என்னும் நூல் அடிப்படையில் தொண்டை மண்டலப் பொருளாதார வரலாற்றைப் புரிந்துகொள்ளல்.

1883இல் 'தத்துவ விவேசினி’ இதழ் மூலம் கிடைக்கும் அவரது கடிதங்கள் வழி அறியப்படும் செய்திகள்.

1882இல். இவர் எழுதி வெளியிட்டுள்ள 'இந்துமத ஆசார ஆபாச தசினி’ எனும் நூல் மூலம் பெறப்படும் செய்திகள்.

அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் மறைந்தபோது 'அக்னிகுல க்ஷத்திய மித்திரன்’ (18.09.1857) எனும் இதழ் வெளியிட்ட செய்தியின் சில பகுதிகளைக் கீழே தருகிறேன். இதன் மூலம் இவர் குறித்துப் புரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.
'’வேங்கடாசல நாயகர் செங்கற்பட்டு மாவட்ட, அத்திப்பாக்கத்தில் சுமார் கி.பி. 1800 ஆம் ஆண்டில் பிறந்து. சென்னையில் வளர்ந்து, தமிழ்மொழியை நன்கு கற்று. முதலில் மிஷினெரிப் பள்ளியில் உபாத்திமைத் தொழிலில் அமர்ந்து மிக்க சிறப்புற்று யாவராலும் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். பின்பு மூலக் கொத்தளம் சுண்ணாம்புக் காளவாயில் பெரிய வியாபாரஞ் செய்து பொருளீட்டினார். அவர் வியாபாரக் கூட்டத்தினார்க்கு இவர் தலைவராயிருந்து அவர்களுக்கும் நலஞ்செய்தனர்’’. (வே. ஆனைமுத்து. 1993: xxxiv)

இவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கல்விபெறும் வாய்ப்பு பெற்றவர். நமது கட்டிடக்கலை வரலாற்றில், சுண்ணாம்பு பயன்படுத்துதல் எப்போது தோன்றியது என்ற விவரம் அறிய வேண்டும். பிற்காலச் சோழர் காலங்களில் (கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குப் பின்) காரைக்கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவ்விதம் சுண்ணாம்புக் காரையை சாதாரண மக்களும் பயன்படுத்தி. கட்டிடங்கள் கட்டும் வழக்கம் பதினெட்டாம் நூற்றாண்டு இறுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவலாயிருக்க வேண்டும். இன்றைக்கு சிமிட்டியைப் பயன்படுத்துவதைப் போல, அன்றைக்கு சுண்ணாம்பைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இவ்வகையில் சுண்ணாம்பைத் தயாரித்தவர்கள் இன்றைய சென்னையில், சூளை என்று அழைக்கப்படும் பகுதியில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சுண்ணாம்புச் சூளையால். அப்பகுதி சூளை என்று அழைக்கப்பட்டதாகக் கருதலாம்.

சுண்ணாம்பு வணிகத்தை வன்னியர்கள் செய்து வந்திருக்கிறார்கள். அதில் அவர்கள் இலாபம் ஈட்டி வளமுடன் வாழ்ந்து வந்திருப்பதையும் அறிய முடிகிறது. வளமுடன் வாழ்ந்த வன்னிய சமூகத்தில் ஒரு பிரிவினர் ஆங்கிலக் கல்வி பெற்றவர்களாகவும் இருந்தனர். இதன் மூலம் சமயம் மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் மேற்குறித்த பின்புலத்தில் வாழ்ந்தவர்கள் ஈடுபட்டதை அறிய முடிகிறது. இப்பின்புலத்தில்தான் வேங்கடாசல நாயகர், பு. முனிசாமி நாயகர், சோமசுந்தர நாயகர் ஆகியோர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். வன்னியர் சமூகம் வணிகத்தில் ஈடுபட்டதையும் அதற்கு வேங்கடாசல நாயகர் உதவியதையும் பின்வரும் குறிப்பு உறுதிப்படுத்துகிறது.

''இத்தரும சீலர் வடநாட்டின்கண் கும்மிடிபூண்டி முதலிய இடங்களிலிருந்து வணிகத் துறையில் வண்டிகளில் சரங்குகளை ஏற்றிவரும் ஏழைகளாகிய வன்னியர்களைத் தங்கசாலைக்கு அடுத்து வடபுலத்திலிருக்கும் தம் சொந்த வண்டித் தொட்டியில் இருக்கச் செய்து, உணவு முதலியன தந்து அவர்களுடைய சரக்குகளை உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றி மோசம் செய்ய வொட்டாது அவர்களது கஷ்ட நஷ்டங்களைப் பார்த்துத் தாமே முன்னின்று விற்பனை செய்து அவர்களிடம் ஒப்புவித்து எச்சக்கையாய்ப் போகும்படி அடிக்கடி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவந்தார். இதனால் அவ்வேழைகளும் மிக்க அன்புடன் அவரது வாழ்நாள் முழுவதும் நமக்கு யாதொரு தீங்கும் நேடாதென்று வாழ்த்திப் போவார்கள். (மேற்படி:xxxiv)

இவ்வகையில். செயல்பட்டு வந்த அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் எழுதிய ''பாயக்காகளுக்கும் மிராசுதர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்’’ அல்லது செங்கற்பட்டு ஜில்லா றிவினியு (ஏர்(ற்)ப்பாட்டைக் குறித்து மேற்படி ஜில்லாவிலிருக்கும் பாயக்கா சுகவாசிகளுக்கு ஏஜெண்டாகிய அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகரால் தமிழில் இயற்றப்பட்டு... இங்லீஷில்... 'இந்திய அசோசிஏஷன் சபை’ யாருக்கு அப்பீஸ் செய்த இவ்விஷயங்கலை பாயக்கா சுகவாசி முதலானவர்களுக்கும்... புங்கத்தூர் ம. சபாபதி முதலியாரது கல்வி விளக்க அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப் பட்டது’. இந்நூல். இவர் முன்னரே ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழில் மொழிபெயர்த்தது ஆகும். இந்நூலின் செய்தியைப் பின்கண்டவாறு நாம் தொகுத்துக் கொள்ளலாம்.

பிரித்தானியர் உருவாக்கிய ரெவின்யூ போர்டு போன்ற அமைப்புகள், சாதாரண மக்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை அவர்களே பாத்தியம் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தின.

ஏழை வன்னியர்கள் மற்றும் பறையர்கள் காலம் காலமாகப் பயன்படுத்திய அந்நிலப் பகுதிகளை தெலுங்கு மற்றும் மராட்டியப் பார்ப்பனர்களும் பிறரும் எடுத்துக் கொண்டனர்.

சொந்த நிலத்திலேயே அவர்களை உழைக்கச் செய்து, அவர்களுக்குத் தற்காலிகமாக குத்தகைக்கு விட்டிருப் பதாக ஆவணங்களை உருவாக்கினர். இவ்வகையில் தற்காலிகமாகப் பயன்படுத்துவதையே 'பாயக்கா’ என்றும் குறிக்கின்றனர்.

பாயக்காகள் அல்லது சுகவாசிகளுக்கு அவர்களது நிலத்தை மீண்டும் பெறச் செய்வதற்காக, ஏஜெண்டாக வேங்கடாசல நாயகர் செயல்பட்டார்.

தொண்டை மண்டலப் பகுதியின், பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பொருளாதார வரலாற்றை அறிய உதவும் ஆவணமாக அமைந்திருக்கும் இந்நூல், டிசம்பர் 2000ஆம் ஆண்டில் முனைவர் க. ரத்னம் அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 'பாயாக்காகள் மிராசுதாரர்களோடு செய்த போராட்டம்’ 1860லேயே "தலித் இனமக்களின் முதல் எழுச்சிக்குரல்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. (நூலின் மூலத் தலைப்பு முன்னர் கொடுத்தவாறு.) இந்நூலை மறு அச்சு செய்த பதிப்பகத்தாரும் பதிப்பாசியரும் பெரிதும் பாராட்டுக்குயவர்கள். வன்னியர்களையும் 'தலித்’ என்று பதிப்பாசியர் கருதுவது கவனத்தில் கொள்ளத்தக்கது. இச்சிறு நூலின் முக்கியத்துவத்தைப் பின்காணும் வகையில் நாம் தொகுத்துக் கொள்ள முடியும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு. தொண்டை மண்டலப் பொருளாதார வரலாறு எழுதுதற்கான அடிப்படைத் தரவு நூலாக அமைகிறது.

பிரித்தானியர்களின் நிர்வாக செயல்பாடுகள் எவ்வகையில் அமைந்திருந்தன என்ற புதலுக்கு உதவுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் ஆட்சிபுந்த தெலுங்கர், மராட்டியர், குறிப்பாக இச்சாதி பார்ப்பனர்கள் மற்றும் ரெட்டி. நாயுடு போன்ற மிராசுதாரர்கள், சாதாரண மக்களை எப்படி அடிமைப்படுத்தினர் என்ற வரலாறு அறிய முடிகிறது.
பிரித்தானியர்கள், மிராசுதாரர்களிடமும் சாதாரண மக்களிடமும் எவ்வகையான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தார்கள் என்ற வினாவை எழுப்பும்போது, பிரித்தானிய அதிகாரிகள், சாதாரண மக்கள் மீது அநுதாபம் செலுத்தியவர்களாக இருந்திருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தை இந்நூல் உருவாக்குகிறது. திரு. வேங்கடாசல நாயகர் அப்பகுதி மக்களின் நிலம் தொடர்பான செய்திகளை அராசங்கத்துக்குத் தெயப்படுத்தியுள்ளார். இதன்மூலம் பிரித்தானியர் காலத்திற்கு முந்தைய நில உறவிற்கும் பிரித்தானியர் கால நில உறவிற்குமான வேறுபாடுகளை நாம் அறிய முடிகிறது. இந்நூலில் வேங்கடாசல நாயகர் பின்கண்டவாறு எழுதுகிறார்.

1. 1863ஆம் வருஷம் மிராசு நிலம் என்பதை எடுத்துவிட்டு சர்க்கார் நிலத்தைக் குடிகள் கைப்பற்றிச் சாகுபடி பண்ணுகிறபடியால் எல்லா நிலமும் சர்க்காருடையது என்று ஸ்தாபித்தும்,

2. மிராசு பட்டா, பாயக்கா பட்டா என்றில்லாமல் நெம்பர் பட்டாவாய்ப் போட்டு வைத்தும்,

3. அடிக்கடி தர்காஸ்து ரூலை பிறப்பித்து தர்க்காஸ்தைக் காயப்படுத்தியும், (தர்காஸ்து அடமானம்)

4. இராசா கொடுத்து கொள்ளையிட்டுக் கொண்டு வந்த கிராமங்களை நபாக்தி பட்டா பண்ணியும்,

5. ஒருவன் கைப்பற்றும் நிலத்தைப் பட்டாதாரன் அப்புறப்படுத்தக் கூடாதென்றும்,

6. பட்டாதாரன் குடிகள் கட்டிய தீர்வைப் பணத்தைத் தான் கட்டாமல் குடிகள் கைப்பற்று நிலத்தை ஏலம் போட்டு அபகரிக்கிறதைத் தடுக்க மேற்படி கைப்பற்று நிலத்துக்குடைய குடிகள் கட்டினாலும் சர்க்காரில் கட்டிக் கொள்ளும்படி உத்தரவு பண்ணியும்,

7. பலவித வசா பண்ணிக்கொண்டு நிலத்தை அடக்கட்டிக் கொண்டிருந்ததற்கு யாதொரு வசாவும் கொடாமல் தீர்வை கட்டாவிட்டால் நிலத்தை ராஜினாமா கொடுக்கிறதென்றும்,

8. சொற்ப பாக்கிக்கும் மிராசு பாத்தியம் என்னும் நிலத்தை ஏலத்தில் விற்கவும்,

9. நான்கு வருஷம் ஐந்து வருஷம் பணம் கட்டாமல் நாதாரால் பாக்கியென்று அபகரித்துக்கொண்டு வந்ததற்கு கிஸ்திப் பிரகாரம் பணங்கட்டாவிட்டால் வட்டி டிண்டு படியுடன் உடனுக்குடனே வசூல் பண்ணவும்,

10. பாயக்காகள் காட்டில் கொம்பும் புளியன் பனை மர முடியானதில் தொடவொட்டாமல் அதில் ஆயிரம், ஐம்பது நூறு வரும்படி பண்ணிக்கொண்டிருந்த மேற்படி காடு மரம் வகையறாக்களை சர்க்காரில் சேர்த்துக் கொண்டும் விஸ்தாரம் குடிகளால் சாகுபடியாக்கச் செய்கிறார்கள். அவனவன் கைப்பற்று நிலத்திற்கு நபாகதி பட்டா பண்ண உத்தரவாகியிருக்கிறதை நிறைவேற்றாமல் இருக்கிறதைக் குறித்தும் மிட்டா சுரோத்திரயம், சாகீர் முதலானதைக் குறித்துக் கவர்மெண்டார் ஆலோசனையிலிருக்கிறார்கள்.
(க. ரத்னம். (பதிப்பு): 2000: 5-6)

மேற்குறித்த பகுதியில் வரும் பல சொற்கள் இன்றைய சூழலில் பொருள் விளங்குவதற்குச் சிக்கலாக இருக்கலாம். ஆனால். அவர் கூறியுள்ள செய்திகள் அடிப்படையில் நாம் புந்து கொள்வது இதுதான்.

பிரித்தானியர்கள். பிரித்தானியர்களுக்கு முற்பட்ட காலத்து அரசர்கள். பிற பாளையக்காரர்கள், மிராசுதாரர்கள் ஆகிய இரு பிரிவில், பிரித்தானியர்கள் சாதாரண மக்களுக்கு ஓரளவு ஆதரவாக இருப்பதும், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மிராசுதாரர்கள் போன்றவர்கள் மக்களுக்கு எதிராக இருப்பதையும் தெரிந்துகொள்கிறோம். பிற்காலத்தில் அயோத்திதாசர், பெரியார் ஆகியோர் பிரித்தானியர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மனநிலையும் வேங்கடாசலநாயகர் பிரித்தானியர்கள் பற்றி எழுதுவதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

பாரம்பரியமாக தொடர்ந்து வரும் சாதிய ஆதிக்கம் எவ்வகையில் பொருளாதார ஆதிக்கமாக வடிவம் பெறுகிறது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. பிரித்தானியர் அணுகுமுறை சாதியச் சட்டங்களைக் கொண்டு செயல்படாமையால் ஏற்படும் விளைவுகளையும் இங்கு புரிந்துகொள்ளமுடியும். நவீனத் தன்மைகளோடு உருவாகி வந்த காலனியமும் காலம் காலமாக இருந்துவரும் சாதியமும் இங்கு முரண்படுவதைக் காண முடிகிறது. இதில் ஆதிக்க சாதியினர் எல்லாக் காலங்களிலும் தமது ஆதிக்கத்தை எவ்வெவ்வகையில் கட்டமைத்துக் கொள்கிறார்கள் என்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டு, தொண்டை மண்டல நிகழ்வுகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வகையில் வேங்கடாசல நாயகன் பதிவு காலனியத்தையும் நிலப்பிரபுவத்தையும் இன்றைய வளர்ச்சியோடு பந்துகொள்ள உதவும் அரிய ஆவணமாக அமைந்திருக்கிறது. அவர் எழுதும் கீழ்க்காணும் பகுதி. நமது கருத்தை உறுதிப்படுத்துகிறது.

1858ஆம் வருஷத்தில் நம்முடைய அரசி ராணி விக்டோரியம்மன் அவர்கள் இந்த இந்து தேசமெல்லாம் பாடசாலை வைத்து ஏழைப் பிள்ளைகளை வாசிக்கச் செய்கிறதென்று அனுப்பின உத்திரவை மாற்றி இந்தப் பின்புலத்தில் கடைசிப் பக்கத்தில் சொல்கிறபடி முக்கியமாய் நம்முடைய சாதிப்பிள்ளைகளுக்கு உதவவொட்டாமல் செய்து பார்ப்பார் முதலானவர்கள் தங்கள் பிள்ளைகளையே வாசிக்கச் செய்து கொண்டார்கள். அதைப் பற்றி நான் என்ன முயற்சி பண்ணியும் அப்போது நடவாமல் இப்போது கர்த்தாவுக்குத் தயவு பிறந்த மின்ஸ்பால் (முனிசிபல்) கமிசனரவர்களால் கிராமங்கள் தோறும் பாடசாலை ஏற்படுத்தி ஏழைப் பிள்ளைகளும் வாசிக்க உத்தரவாகி முயற்சி நடக்கிறது. (மேற்படி: 3-4)

இவ்வகையில் பிரித்தானியர்களது செயல்பாடுகளைப் பதிவுசெய்யும் நாயகர், செங்கற்பட்டு பகுதி முழுவதும் இருந்த நிலப்பகுதி குறித்து மிராசுதார் - வன்னியர் ஆகிய இரு பிரிவினடத்தும் இருந்த முரண்பாடுகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். மன்னவேடு, பாயக்கா, சுகவாசி, உட்குடிகள் ஆகிய சொற்களால் ஏழை வன்னியர்களை நாயகர் குறிப்பிடுகிறார். இவர்களுக்கு நிலம் கிடைக்கவேண்டும் என்பதற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகளின் பதிவாக அமைந்துள்ள இந்நூலில், பிரித்தானியர்களிடம் அவர் வைத்த கோக்கைகள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரித்தானிய அதிகாரிகள், தொன்மையான மரபை உணராமல், மிராசுதாரர்களின் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சில வேளைகளில் செயல்படுகிறார்கள் என்றும் அவ்விதம் செயல்பட்ட துரைமார்களின் செயல்பாடுகள் குறித்தும் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். செங்கற்பட்டு ஜில்லாவில் 4இல் 3 பங்கு மிராசுதார்களிடத்தில்தான் உள்ளன. மிராசுதாரர்கள் எவ்விதம் நிலத்தைப் பெற்றார்கள் என்பதை வேங்கடாசல நாயக்கர் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
''மூன்றாவது சப்ளிமெண்டு மிமோயத்தில் பாயக்கா ஏஜெண்டு சுருக்கமாய் காண்பிக்கிறதென்னவென்றால்:

1. மிராசுதாரென்று சொல்லப்பட்டவர்களுக்கு ஊழிய மானியம் அல்லது மிராசு நிலங்கள் தவிர பாயக்கா சுகவாசிகள் காடு கரம்பு திருத்தி சாகுபடிக்குக் கொண்டு வந்த நிலங்களுக்கு எவ்வளவும் பாத்தியமில்லையென்று காண்பித்திருக்கிறார்கள். இந்த மிராசுதாரென்று சொல்லப்பட்டவர்கள் கவர்ன்மெண்டாரை மோசஞ் செய்கிறதுமல்லாமல் பாயக்காகளிடத்திலிருந்து துண்டு வாரம். தீர்வை சாஸ்தி. அமிஞ்சி. தெண்டம் முதலானதுகளை வகுத்தப்படுத்தி வசூல் செய்கிறபடியால், அவர்களை மிதித்துத் தூசியாலும் நிர் மூலமாக்கிப் போடுகிறார்கள்.

2. ஏரிகளை மராமத்து செய்கிறதற்கும் சாகுபடிக்கு மேன் காவலாயிருக்கிறதற்கும் நாட்டுவருக்கு சுரோத்தியங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அந்த ஏற்பாடுகளை நிறைவேற்றவில்லை. பாயக்காகள் தங்களுடைய இஷ்டமாயிருந்தும் சக்தியை உடைத்தாயிருந்தும் மேற்படி கொள்ளைக்காரர்களால் தடுக்கப்படுகிறார்கள். (மேற்படி 65-66.)

பிரித்தானிய ஆட்சியாளர்கள், இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தும் நிலம் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் விரிவாக அறிந்து வேங்கடாசல நாயகர் பதிவு செய்துள்ளார். தாம் பல்வேறு ஆங்கிலப் பத்திகைகளில் எழுதிய தகவல்களையும் தொகுத்துத் தந்திருக்கிறார். மிராசுதாரர்கள் எந்தெந்த வகையில் எல்லாம் அரசாங்கத்தை ஏமாற்றி வரி கொடாமல் இருக்கிறார்கள் என்ற விவரங்களை எழுதியுள்ளார். மாறாக பாயக்காகள் நேர்மையாகச் செயல்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார். மிராசுதாரர்கள் நடவடிக்கைகள் பற்றி, பிரித்தானிய அதிகாரிகள் பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்.
அவர்கள் பிளேசு, எல்லீசு, ஆட்சன், வாலீசு, ஆரீஸ், லசிங்ட்டனி, தாக்கி, காம்பல், சர்தாமஸ் மன்றோ ஆகியவர்கள்.

நாயகரின் வாதம் என்பது, மிராசுதர்களுக்கும் நிலத்திற்கும் உறவு கிடையாது. இடையில் வந்து தந்திரமாக நிலங்களை கைப்பற்றிக் கொண்டவர்கள், இவர்கள் பார்ப்பனர்கள். குறிப்பாக தெலுங்கு, மராட்டிய பார்ப்பனர்கள், வேளாளர்கள், முதலிகள், ரெட்டிகள், நாயுடுகள். இவர்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி மன்னவேடு வன்னியர்களின் சாகுபடிக்குக் கொடுக்க வேண்டும் என்பதே. இதில் உள்ள வரலாற்று பூர்வமான நியாயங்கள். நடைமுறைச் செயல்பாடுகள் ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

இந்நியாயங்களை உறுதிப்படுத்தி. 'தத்துவவிவேசினி’ எனும் இதழிலும் 'கடிதம்’ எனும் தலைப்பில் ஒன்பது வாரங்கள் எழுதியுள்ளார். இதனைத் தொகுத்து திரு.வே.ஆனைமுத்து ''பார்ப்பாரும் வேளாளரும் பறித்துக்கொண்ட வன்னியன் மன்னவேடு ஊர்கள்’’ (1993) என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். அக்கடிதங்களிலிருந்து ஒரு பகுதி வருமாறு:
''கஞ்ச தேசம் அல்லது செங்கற்பட்டு இந்த ஜில்லா கிராமங்களெல்லாம் அக்கிறாரம், மன்னர்வேடு, நந்தமென்று நாளது வரையிலும் சர்க்கார் ரிக்கார்டுகளினாலும் அந்தக் கிராமக்குடிகள் சாதாரணமாய்ச் சொல்லி வழங்கிக்கொண்டு வருவதினாலும்,

அந்தந்த கிராம எல்லைக்கல்லில் பதிந்திருக்கிற சின்னங்களினாலும் காணியாவினாலும் நிலக்குறிப்பினாலும் அக்கிறாரம் பார்ப்பார சாதியாருடையதென்றும், மன்னவேடு வன்னிய சாதியாருடையதென்றும், நத்தம் வெள்ளாழ சாதியாருடையதென்றும் விளங்கும். அப்படி அந்தந்தச் சாதிக்கும் பொதுவாய் அந்தந்த சாதியாரே அனுபவித்த கிராமங்களைப் பார்ப்பார் பிடுங்கிக் கொண்டு மிராசு பாத்தியமென்று ஏற்படுத்தி, மிராசு தங்களுடையதென்று வரவரத் தங்கள் சொல் சாமர்த்தியத்தினால் புரட்டி. இராஜாங்கத்தாரையும் குடிகளையும் துரோகம் செய்தார்கள் என்று கவரன்மெண்டார் சித்தத்துக்கு விசிதமாகும். (வே. ஆனைமுத்து. பதிப்பு 1993: 87-88)

'தத்துவவிவேசினி’ இதழ் 1882-1888 ஆண்டுகளில் வெளிவந்த சுயாக்கியானச் சங்கத்தினர் இதழ் ஆகும். இதன் ஆசிரியர் ப. முனுசாமி நாயகர் ஆவார். தமிழில் வெளிவந்த முதல் நாத்திக இதழ் இதுவாகும். இவ்விதழில் வேங்கடாசல நாயகர் எழுதியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மிராசுதாரர்களுக்கு எதிரான வேங்கடாசல நாயகர் செயல்பாடுகள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வே. இதில் இவர் வெளிப்படுத்தும் விவரங்கள் பல. வேறு பலராலும் காலங்களிலும் விவாதிக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. 1941இல் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள 'சென்னை இராஜதானியின் பொருளாதார நிலைமைகள் (1800-1850)’ எனும் ஆங்கில நூல், முனைவர் எ. சாரதா ராஜு அவர்களால் எழுதப்பட்டது. ஆய்வேடு நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் வேங்கடாசல நாயகர் கூறும் பல விவரங்களையும் காண முடிகிறது. குறிப்பாக 'மிராசுதா’ முறை மூலம் சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளை இவ்வாய்வோடு விரிவாகப் பேசியிருப்பதைக் காண்கிறோம்.

யூஜின்.எப்.இர்ஷிக் எழுதியுள்ள ‘Dialogue and History - constructing South India - (1795-1895) எனும் நூலும் (1994) வேங்கடாசல நாயகர் கூறும் தகவல்களை வேறு கோணத்தில் அணுகி ஆய்வு செய்திருப்பதைக் காணமுடிகிறது. இவ்விரு ஆய்வாளர்களுக்கும் நாயகரது ஆங்கிலம் அல்லது தமிழ் நூலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர்கள். பிரித்தானியர்களின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்திருக்கின்றனர். இவர்கள் ஆய்வுகளும். வேங்கடாசல நாயகர் செய்துள்ள பதிவுகளும் பலவகையில் ஒத்த கருத்துடையதாக அமைந்திருப்பதைப் பார்க்கின்றோம். ஆங்கில நூல்கள், செங்கற்பட்டுப் பகுதியில் வாழ்ந்த பறையர்கள் குறித்தும் பேசியிருப்பதைக் காண்கிறோம்.

'பறக்குடிகள்’ எனும் தொடர் புழக்கத்தில் இருந்திருப்பதைக் காண்கிறோம். இவர்களுக்கு நிலம் உriமையுடையதாக அமைந்திருப்பது குறித்தும் ஆங்கில நூல்கள் வழி அறியமுடிகிறது. வேங்கடாசல நாயகர், ஒரு சில இடங்களில் பறையர் குடிகள் பற்றிய குறிப்புகளைக் கொடுத்தாலும், அவர்களுடைய நிலவுரிமை குறித்து எவ்விடத்திலும் பேசாமல் இருப்பதைக் காண்கிறோம். பள்ளிகள் என்று அழைக்கப்பட்ட, வன்னியர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்த இப்பெருமகன். வன்னியர்களைப்போல், ஒரு சில தருணங்களில் அவர்களைவிடவும் கொடுமையாக ஒடுக்கப்பட்ட பறையர் மக்களைப் பற்றி மௌனம் சாதித்திருப்பதைக் காண்கிறோம். நல்ல வேளையாக அவர்களை இழிவாகப் பதிவு செய்யவில்லை. அயோத்திதாசர் சக்கிலியர் மக்களைப் பற்றி இழிவாகப் பேசியதைப்போல் இவர் பேசவில்லை என்று அமைதியடையலாம்.

தங்களை ஒடுக்கும் ஆதிக்க சாதிக்கு எதிராகப் போராடியவர்களான வேங்கடாசல நாயகர், அயோத்திதாசர் போன்றவர்கள், தங்களைவிடக் கீழாக உள்ளவர்கள் குறித்து கொண்ட மௌனம், இந்தியச் சாதி அமைப்பின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பிற்காலங்களில் பார்ப்பனர் அல்லாதவர்களின் உரிமைக்குப் போராடிய பெரியாருக்கு முன்னோடியாக ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்திற்கு அயோத்திதாசரும் வன்னியர் சமூகத்திற்கு வேங்கடாசல நாயகரும் போராடியிருக்கிறார்கள். அண்மையில் அயோத்திதாசர் அறியப்பட்டதுபோல், வேங்கடாசல நாயகர் பெரிதும் அறியப்படவில்லை. தமிழகச் சாதிப் படிநிலைகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒன்றாக வன்னியர் சமூகம் இருந்ததை நாம் மறப்பதற்கில்லை. சானார் சமூகம் இவ்விதம் ஒடுக்கப்பட்ட சமூகமே. இவைகள், இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி தங்களது ஒடுக்குமுறைகளிலிருந்து படிப்படியாக விடுதலை பெற்று வருகிறார்கள். அந்தந்த சமூகம் அவை ஒடுக்கப்பட்ட காலங்களில், அதற்காகப் போராடியவர்கள் பலர். இவ்வகையில் வேங்கடாசல நாயகர் முக்கியமான ஆளுமையாகவே கருதவேண்டியவர்.

பறையர் மக்களின் நில உறவு குறித்து அண்மைக்காலங்களில் விரிவாக விவாதிக்கப்படுகிறது. 'பஞ்சமி நிலம் அல்லது Depressd Class Land குறித்த விவரங்கள் அறியப்பட்டு, அந்நிலங்களை மீட்கும் போரில் தலித் இயக்கங்கள், தற்போது ஈடுபட்டு வருகின்றன. 1891 இல் செங்கற்பட்டு ஆட்சியாளராக இருந்த ஜே.எச்.ஏ. ட்ரெமென் ஹரே என்பவர் கொண்டு வந்த சட்டத்தின் மூலம் பறையர் சமூகத்திற்கான நிலவுரிமை கிடைத்தது. அதனை ஆதிக்கச் சாதியார் பறித்துக் கொண்டனர். 1844இல் அடிமைமுறை சட்டப்படி ஒழிக்கப்பட்டாலும், பண்பாட்டுத் தளத்தில் அதனை நடைமுறைப்படுத்தி, பறையர் சமூக மக்களை அடிமைகளாகவே நடத்தினர். அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களுக்கே வழங்கக்கோரும் போராட்டங்கள் அண்மைக்காலங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.

இதே போராட்டத்தை ஒடுக்கப்பட்ட வன்னியர்களை முன்னிருத்தி 1860களிலே செயல்படுத்தி யிருக்கிறார் திரு வேங்கடாசல நாயகர். இவ்வகையில் வரலாற்றில் குறிப்பிடத்தக்க செயலைப் புரிந்தவராகவே இருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலங்களில். தங்களது ஒடுக்குமுறைக்கு எதிராக வன்னியர் சமூகம் விழிப்புற்றதைக் காண்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பறையர் சமூகம் விழிப்புணர்வு பெற்றதாலும், ஓரளவு அவர்களது உரிமைகள் மதிக்கப்படுகின்றன என்று கூறமுடியும். மன்னவேடு நிலமீட்புப் போராட்டம், பஞ்சமி நிலமீட்புப் போராட்டம் ஆகியவை நமது சாதிய சமூகத்தின் பொருளாதார வேர்களைப் புரிந்துகொள்ள உதவும் செயல்கள் ஆகும். இவை குறித்த மேலும் விரிவான விவரங்களை ஆவணப்படுத்த வேண்டிய தேவை நமக்குண்டு.

வன்னிய மக்களின் நிலவுரிமைக்குப் போராடிய வேங்கடாசல நாயகரின் இன்னொரு பரிமாணம் அவர் எழுதிய 'இந்துமத ஆசார ஆபாச தசினி’ நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்நூல் பற்றிய அறிவிப்பு ஒன்றை 'தத்துவ விவேசினி’ (15.4.1883) இதழில் அ. வேங்கடாசல நாயகர் வெளியிட்டுள்ளார். அப்பகுதி வருமாறு:

''இந்தப் பத்திரிக்கையைப் பார்வையிடுகிற நமதன்பரெல்லாருக்கும் வந்தனம். இதனடியிற்கண்ட 'இந்துமத ஆசார ஆபாச தசினி’ யென்னும் புத்தகம் விருத்தப்பாவால் வெள்ளிய நடையாய் இயற்றப்பட்டிருக்கின்றது. இதில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற சொத்தை அன்னியர்களுடைய மந்திர தந்திர பகட்டு வேஷங்களாகிய விபரீத சடங்கு முதலானங்களுக்கே அழித்து நாமும் நம்ம குடும்பங்களும் சகல சவுக்கிய சம்பத்தையுமிழந்து நாசப்படுகிறோமென்றும்; மற்ற எந்தத் தேசகண்டத்தாரும் நம்ம தேசத்தாரைப் போலில்லாமல் விவேக மனந்து சகல சவுக்கிய சம்பத்துடனிருக்கிறார்கள் என்றும், நம்முடைய தேசஆதி அரசர்கள் முதல் நம்ம வரையில் சொல்ப வீண் கல்பனை விஷயங்களுக்கெல்லாம் பயந்து ஒடுங்கி திகிலடைந்து எதிலும் துணிவில்லாமல், எதுவும் தோற்றாமல் விதிவினை செயலென்றெ முயற்சியில்லாமல் இருக்கிறதினால். நம்முடைய தேச செல்வத்தை அன்னிய தேசத்தார் கைக்கொள்ளவுள்ளாகி வறுமையில் இருக்கிறோமென்றும், அனுபோக திருட்டாந்த பிரத்தியட்சங்களினால் காட்டியிருக்கிறோம். இதை வாங்கி வாசித்துப் பார்ப்பீர்களாகில். அனேக ஆச்சர்ய அனுமான அதிசய ஆபாசங்களை எல்லாங் கண்டு தேர்ச்சியுண்டாகி திட சித்தராய் அல்லலற்று நீடுழி காலம் குடும்பத்தோடு நித்திய சவுக்கியத்தை அடையலாம். (தத்துவ விவேசினி:15.4.1883)

இந்நூல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்து மதம் குறித்த கடுமையான விமசனங்களைப் பாடல் வடிவில் முன்வைத்த நூல். இந்நூலை, திராவிட இயக்கத் தொண்டர் திரு. குரு. இராமலிங்கம் அவர்கள் 1948 இல் மறுபதிப்புச் செய்துள்ளார். இந்நூலுக்கு மதிப்புரையை குடியரசில் (16.02.1930) எழுதிய பெரியார் ''50 வருடத்துக்கு முன் சுயமயாதை இயக்கம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். (வே. ஆனைமுத்து: 1993: 8) 'தமது இயக்கக் கொள்கைகளையே முக்கியமாய் வைத்துப் பாடின பாடல்கள்’ இந்நூலில் அனேகம் இடம் பெற்றிருப்பதாகவும் பெரியார் எழுதியுள்ளார். (மேற்படி). அ. வேங்கடாசல நாயகர், 1872இல் தாம் வெளியிட்ட நூலின் முகப்பில் 'கடவுள் குறித்த விமசனங்கள் அடங்கிய நூலாக இருப்பதைக் காண முடிகின்றது. 1878இல் சென்னையில் உருவான ‘Free Thought Association’ எனும் லௌகிக சங்கமும், இலண்டனில் பிராட்லா தலைமையில் இயங்கிய நாத்திக சங்கத்தின், சென்னைக் கிளையாக 'இந்து சுயாக்கியான சங்கமும்’ செயல்பட்டது. இவ்வமைப்பின் இதழ்களே 'தத்துவ விவேசினி’யும். ‘Thinker’ எனும் ஆங்கில இதழும். இவற்றில் நாயகர் தொடர்ந்து எழுதியுள்ளார். இவ்விதழ் தீவிரமான நாத்திக இதழாகச் செயல்பட்டுள்ளது. இவ்வமைப்பின் தாக்கம் அவடம் ஏற்பட்டுள்ளது என்று கருத வாய்ப்பிருக்கின்றது. இவரது 'இந்து மத ஆசார ஆபாச தசினி’ நூலில் காணப்படும் சில பாடல்களைக் கீழே தருகிறேன்:

''பஞ்சாங்க மொன்று கட்டிப் பலமுறை படித்துக்காட்டி
அஞ்சாமல் இதனிற் சொல்வ தனுசத் திடுவோர் நாளும்
துஞ்சாமல் வாழ்வா என்று துணிவுடன் பணம் பறித்தற்
கொஞ்சாமற் புரட்டுப் பேசி யிரண்டொரு சுலோகஞ் சொல்லி”

''வஞ்சகர் மொழியினாலே மாநிலத் துழல்வோ ரெல்லாம்
பஞ்சமுற் றிழிதல் நோக்கிப் பதபித்திரங்கி நாளும்
நெஞ்சகங் குழைந்து வாழும் நீர்மையால் நெடுநூல் கற்றுப்
பஞ்சலட் சணமுந் தேர்ந்த பாவலர் பொறுப்பர் மாதே”
(வே. ஆனைமுத்து: 1993: 51. 53)

இந்நூல் மதங்கள், சோதிடம், பல்வேறு மூடநம்பிக்கைகள், நால்வருணம், புராணக்கதைகள் ஆகியவை குறித்த கடுமையான விமசனங்களை முன்வைத்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை வாழ்த்தி வரவேற்றுள்ளார். காலனியம் மூலம் உருவான நவீன தன்மைகள், குறிப்பாக ஆங்கில மொழி அறிவு ஆகியவற்றை விதந்து பேசுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி, காலனியம் மூலம் பல புதிய தன்மைகள் உருவாயின. இதனை சமயவாதிகள் எதிர்கொண்ட முறைக்கு முற்றிலும் மாறாக, வேங்கடாசல நாயகர் எதிர்கொண்டார். இவரது இத்தன்மை பெரிதும் கவனத்தில் கொள்ளவேண்டிய செயலாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து, அந்நூற்றாண்டின் இறுதியில் மறைந்த (1800-1897) அ. வேங்கடாசல நாயகர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ்ச்சமூகம் குறித்த புரிதலுக்குக் குறியீடாய் அமைகிறார். தமிழ்ச்சமூக வரலாற்று மாணவனுக்கு வேங்கடாசல நாயகர் பின்கண்ட கூறுகளில் கவனத்துக்குரியவராக அமைகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் நிலப்பகுதியின் பொருளாதார வரலாறு குறித்த புரிதலுக்கு இவரது ஆய்வுகள் அடிப்படை ஆவணங்களாக அமைகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் நிலங்களை மிராசுதாரர்கள் மற்றும் ஆதிக்க சாதியினர் பறித்துக்கொண்டனர். இதற்கு போராட்டத்தை முதன்முதல் கையில் எடுத்த பெரியவர்.

காலனியச் செல்வாக்கால் உருவான நவீன சிந்தனைகளை உள்வாங்கி, நாத்திக மனநிலையில் செயல்பட்டவர்.
அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் போன்று, தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட பலர் குறித்த பதிவுகள், அச்சு வடிவில் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றைத்தேடி எடுத்து மீண்டும் உரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய தேவை நமக்குண்டு.

ஆதார நூல்கள்:

ஆனைமுத்து.வே (பதிப்பு) - பார்ப்பனரும் வேளாளரும் பறித்துக்கொண்ட வன்னியன் மன்னவேடு ஊர்கள் - மார்க்சிய பெரியாயப் பொதுவுடைமை கட்சி வெளியீடு - சென்னை:14 1993

ஆரோக்கிய மணிராஜ். ச.ப. முருகேசன். ஐ.ஜா.ம. இன்பகுமார் - பஞ்சமி நிலமீட்பு: சட்டநடைமுறைக் கையேடு - அனித்ரா அறக்கட்டளை - சித்தூர் - 2006

ரத்னம். க. (பதிப்பு) - பாயக்காரிகள் மிராசுதார்களோடு செய்த போராட்டம் - ஐந்திணைப் பதிப்பகம் - சென்னை - 2000

Irschick.F.Eugene- Dialogue and History constructing South India: 1795-1985,- University of California Press, London- 1994

Sarada Raju. A-Economic Conditions in the Madras Presidency (1800-1850) - University of Madras-1941

இதழ்கள்:

தத்துவ விவேசினி (1882-1888)

Thinker (1882-1885)




இக்கட்டுரை "கவிதாசரண்" (ஜனவரி - ஜூலை 2007) இதழில் வீ. அரசு அவர்கள் எழுதியது. "கீற்று"வில் வெளியானது. 


மிகவும் முக்கியமானாதாக இருப்பதால் இங்கு மறுபடியும் வைத்துள்ளேன்.


நன்றி: திரு. வீ. அரசு, நன்றி: "கவிதாசரண்", நன்றி: "கீற்று"

http://xn--clc0da2dh4e.com/kavithaasaran/jan07/arasu.php

சனி, ஏப்ரல் 10, 2010

மகளிர் இடஒதுக்கீடு: வழிகாட்டும் உலக நாடுகள்.

பெண்கள் அரசியல் அதிகாரத்தை பெறவேண்டும் என்பது ஒரு கனவு. பல நாடுகளில் அது இன்னும் கனவாகவே நீடிக்கிற‌து. உலகின் ஒட்டுமொத்த நாடாளுமன்ற் உறுப்பினர்களில் 18.8 % பேர்தான்  பெண்கள். இந்தியாவில் வெறும் 11 % பேர்தான் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இந்த அநீதியை மாற்ற இடஒதுக்கீடு மட்டும்தான் ஒரே வழி.

நாடாளுமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை தனிப்பட்ட பெண்களின் பொறுப்பாக வைக்காமல் அரசின் கடமையாக்குவதுதான் இடஒதுக்கீட்டின் அடிப்படை.

மகளிர் இடஒதுக்கீடு உலகில் மூன்று விதமாக நடைமுறைபடுத்தப்படுகிறது.

1. கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் இடஒதுக்கீடு. (இதனை சட்டப்படி இடஒதுக்கீடு, கட்சிகள் தானாக முன்வந்து இடஒதுக்கீடு என இரண்டாக பிரிக்கலாம்.)

2. நாடாளுமன்ற இடங்களில் மகளிர் இடஒதுக்கீடு.

3. ஆண், பெண் இருபாலருக்கும் இடஒதுக்கீடு (இம்முறையில் 40 % க்கு குறையாமலும் 60 % க்கு மிகாமலும் இருபாலருக்கும் இடஒதுக்கீடு செய்யப்படும்.)

மகளிர் இடஒதுக்கீட்டில் உல‌கின் வழிகாட்டியாக ருவாண்டா, சுவீட்ன், கோஸ்டாரீகா ஆகிய நாடுகள் விளங்குகின்றன.

ருவாண்டாவில் நாடாளுமன்ற இடங்களில் சட்டப்படி மகளிர் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பெண்கள் கட்டாயமாக தேர்வு செய்யப்படவேண்டும் என்பது கட்டாயம். இந்த முறையால் அங்கு நாடாளுமன்றத்தின் 56.3 % இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். உலகிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது ருவாண்டா.

சுவீடனில் அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து பெண்களுக்கு இடம் அளிக்கின்றன. கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் ஏறக்குறைய ஒவ்வொரு இரண்டாவது பெயரும் பெண் வேட்பாளர் என்ற நிலை சுவீடனில் உள்ளது. இதனால் அங்கு நாடாளுமன்றத்தின் 47.3 % இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். உலகிலேயே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது சுவீடன்.

கோஸ்டாரீகா நாட்டில் அரசியல் கட்சி வேட்பாளர் பட்டியலில் சட்டப்படி இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அங்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியளில் 40 % பெண்களுக்கு ஒதுக்க வேண்டியது கட்டாயம். இந்த முறை மூலம் அங்கு நாடாளுமன்றத்தின் 38.6 % இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். உலகிலேயே எட்டாவது இடத்தை பிடித்துள்ளது கோஸ்டாரீகா.

நாடாளுமன்றத்தில் பெண்கள் = உலகின் முதல் 15 நாடுகள்.

1. ருவாண்டா 56.3 %
2. சுவீடன் 47.3 %
3. தென்ஆப்பிரிக்கா 44.5 %
4. கியூபா 43.2 %
5. ஐஸ்லாந்து 42.9 %
6. பின்லாந்து 42.0 %
7. அர்ஜென்டினா 40.0 %
8. கோஸ்டாரீக்கா 38.6 %
9. நார்வே 37.9 %
10. டென்மார்க் 37.4 %
11. அங்கோலா 37.3 %
12. பெல்ஜியம் 36.7 %
13. நெதர்லாந்து 36.7 %
14. ஸ்பெயின் 36.3 %
15. மொசாம்பிக் 34.8 %

(சட்டப்படியான இடஒதுக்கீடு. அரசியல் கட்சிகளில் இடஒதுக்கீடுஇடஒதுக்கீடு இல்லை. தகவல் இல்லை.)

மேற்கண்ட பட்டியலில் 11 நாடுகளில் இடஒதுக்கீட்டின் மூலமாகத்தான் பெண்களுக்கு உரிய இடம் கிடைத்துள்ளது. எனவே, இடஒதுக்கீடு இல்லாமல் பெண்கள் அதிகாரம் பெறுவது சாத்தியம் இல்லை.

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது யார்?

இந்தியாவில் மகளிர் இடஒதுக்கீட்டை இரு பிரிவினர் எதிர்க்கின்றனர்.

1. மனுதர்மத்தை வெளிப்படையாக வலியுறுத்தும் சிலர் பெண்களுக்கு அரசியல் அதிகாரம் தேவையில்லை, அது ஆபத்தானது என்கின்றனர். இதில் முதன்மையானவர் 'துக்ள்க்' சோ.

2. சூத்திரர்களுக்கு அதிகாரம் தேவை இல்லை என்போர் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இரண்டாவது கூட்டம். இதில் வெளிப்படையானது பி.ஜெ.பி., மறைமுகமாக‌ எதிர்ப்போர் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க.

மற்றபடி முலாயம், லாலு, மாயாவதி, மம்தா போன்ற யாரும் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. இவர்கள் எல்லோரும் "உள் ஒதுக்கீடு" தான் கேட்கின்றனர். உள்ஒதுக்கீடு என்பதும் பெண்களுக்காகவே கேட்கப்படுவதால், அதனை இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு என்பது திசைதிருப்பும் வாதமாகும்.

வியாழன், ஏப்ரல் 08, 2010

பென்னாகரத்தை பற்றி பேச மறந்தது ஏன்?

பென்னாகரத்தில் தி.மு.க 13 கட்சிகள் கூட்டணியுடன் போட்டிபோட்டது.

4 ஆண்டுகளில் எந்த இடைதேர்தலுக்கும் போகாத கலைஞர் பென்னாகரம் போனார்.

இதுவரை இல்லாத தொகையாக ரூ. 70 கோடியை தி.மு.க செலவிட்டது.

20 அமைச்சர்கள் அங்கேயே தங்கினர்.

ஆனால் தி.மு.க முதல்முதலாக 50% க்கும் கீழாக 45% ஓட்டு வாங்கியுள்ளது.

அனைத்து இடைத்தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணி பெற்ற ஓட்டுகள்:

மதுரை மத்திய தொகுதி 56.11%
மதுரை மேற்கு 51.68%
திருமங்கலம் 57.47%
பர்கூர் 68.38%
தொண்டாமுதூர் 56.61%
இளையான்குடி 71.97%
திருவைகுண்டம் 63.70%
கம்பம் 73,64%
வந்தவாசி 59.38%
திருச்செந்தூர் 67.81%
பென்னாகரம் 45.40%

மிக அதிக உழைப்பு + செலவு, ஆனால் மிக குறைந்த வெற்றி (உண்மையில் தொல்வி) என்ற நிலைக்கு தி.மு.க சென்றது ஏன்?

இதுபற்றி பத்திரிகைகள்/பதிவாளர்கள் பேச மறந்தது ஏன்?