Pages

மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 15, 2017

தமிழகத்தில் மதக்கலவரம் நடத்த சதி: வன்னியர்களின் வீரம் துலுக்கனிடம் செல்லுமா?

தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், இங்கும் பெரிய மதக்கலவரம் நடக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். ஆனால், இந்த மதக்கலவரத்தில் பிராமணர்களோ, முன்னேறிய சாதியினரோ பலியாகக் கூடாது. அதற்கு பதிலாக 'எளிதில் உணர்ச்சிவசப்படும்' வன்னியர்களை பலி கொடுக்க திட்டமிட்டு முனைந்துள்ளார்கள். இதற்கான கூட்டம் ஒன்று 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பெயரில் திருக்கழுகுன்றத்தில் 9.4.2017 அன்று நடந்துள்ளது.

இக்கூட்டத்தில் பிராமணரான வகுப்பை சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகருமான ஆர்.பி.வி.எஸ் மணியன் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் படுமோசமாகப் பேசியுள்ளார். "முஸ்லிம்களுடன் வன்னியர்கள் சண்டை போட வேண்டும். கிறிஸ்தவ வன்னியர்களை புறக்கணிக்க வேண்டும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை" என்று அவர் பேசியுள்ளார்.

ஆர்.பி.வி.எஸ் மணியனின் மதவெறி பேச்சு:

மணியனின் மதவெறி பேச்சு: “சிவத்துரோகம் செய்கிறவன் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்துவோம். இதுதான் வன்னியனுடைய பாரம்பரியம். ஆனால், இன்றைய வன்னியர்கள் சிலர் மதம் மாறிப்போயிருக்கிறார்கள். மதம் மாறிப்போய், மானம் கெட்டுப்போன அந்தக் கிறிஸ்தவர்களையும் சேர்த்துக்கொள்கிறோம் வன்னியன் என்பதாகச் சொல்லி. அவன் உண்மையாகவே ஹிந்துவாக இருந்தால் தானே வன்னியன். அன்னியனாகப் போனதற்கு பின்னாலே வன்னியன் என்னடா உறவு, வன்னியன். கிறித்தவ வன்னியர்களிடம் எக்காரணம் கொண்டும் நாம் உறவு கொண்டாடக் கூடாது. வன்னியர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களாக இருந்தால் அவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். ஜாதி பகிஷ்காரம் செய்ய  வேண்டும். 
அதுமட்டுமல்ல .... போராடுகிறோம், பெரிய வீர பாரம்பரியம் என்பதாகச் சொல்கிறோம். வன்னியனுக்கு இருக்கக் கூடிய வீரம் தெரியுமா? அவனுடைய வாளின் வலிமை தெரியுமா? அவனுடைய துணிச்சல் தெரியுமா? இதெல்லாம் நானும் பார்த்து விட்டேன். நம்ம ஊர்ல இருக்கிற ஒரு சில ஜாதிக்காரன் கிட்டதான் இந்த வன்னியனுடைய திமிர், இந்த வன்னியனுடைய அகம்பாவம் எல்லாம் செல்லும். யார்கிட்ட செல்வதில்லை தெரியுமா?  துலுக்கன் கிட்ட செல்லுவதே இல்லை. துலுக்கன் கிட்ட செல்லுவதே இல்லை. இஸ்லாமியனை பகைத்துக்கொண்டு வன்னியனுக்காக வாதாடுவதற்கு, போராடுவதற்கு, குரல் கொடுப்பதற்கு அமைப்புகள் இல்லை. அப்படிப்பட்ட நிலையில வெறும் அரசியல் ரீதியாக நாம பிளந்து கிடந்தால் நிச்சயமாக வன்னியச் சமுதாயத்துக்கு வலிமை கிடையாது. ஆன்மீக ரீதியாக கலாச்சார ரீதியாக சமுதாய ரீதியாக ஹிந்து என்கின்ற கண்ணோட்டத்தில் தான் நாம் அத்தனை வன்னியர்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும். அப்படி ஊரிய இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது.

ஆனால், இன்றைக்கு Most Backward (MBC) என்பதாகச் சொல்லி, நான் நான்கு பேர் கிட்ட கையேந்தினேனா? சத்திரியன் எப்படிடா கையேந்தறது? சத்திரியர்கள் எவர் கிட்டயாவது போய் ரிசர்வேஷன் கேட்பானா? சத்திரியன் தானே மற்றவர்களுக்கே வேலை கொடுக்க வேண்டியவன்? அப்படி வேலை கொடுக்க வேண்டிய சத்திரியன் இன்றைய தினம் கை நீட்டுகிறான். எனக்கு 20 சதவீதம் கொடு என்று.

நான் வேலூரில் பேசுகிற போது சொன்னேன். வன்னியர்கள் மத்தியிலும் சொன்னேன். உண்மையிலேயே நீ கேட்க வேண்டியது அரசாங்கத்திடம் 20 சதவீதம் அல்ல. மெடிக்கல் காலேஜில் 20 சதவீதம் அல்ல.

மாறாக, நீ கேட்க வேண்டியது எங்கே தெரியுமா? வேலூரில் பஜாரில் துலுக்கன் கடை வச்சிருக்கான் டா. நம்மைச் சுற்றியிலும் துலுக்கன் வியாபாரத்தில் பெருகிக் கொண்டே போகிறான். ஆனால், வன்னியரில் எத்தனை பேர்கள் வியாபாரிகள்? எத்தனை பேரிடத்தில் பணம் இருக்கிறது? ஆகவே நீங்கள் அத்தனை பேரும் வேலூர் பஜாரில் வன்னியர் மக்கள் தொகைக்கு ஏற்ப கடைகளை ஒதுக்கு. எனக்கு கடைகளைக் கட்டிக் கொடு. வியாபாரத்திற்கு பணம் கொடு. அப்படி தான் டா கேட்கனும்"

- இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியுள்ளார். Youtube காணொலியாக இந்த இணைப்பில் காண்க: https://youtu.be/W70LfxkUXak


வன்னியர் உரிமைக்கு குரல் கொடுக்குமா ஆர்.எஸ்.எஸ்?

முஸ்லிம்கள் சொத்தில் வன்னியர்கள் பங்கு கேட்கவேண்டும் என்று சொல்லும் இதே ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான், வன்னியர்களின் உரிமையை அபகரித்து வைத்துள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோவில் வன்னியர்களான பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு சொந்தமானதாகும். தினமும் இரவு பூஜை முடிந்த பிறகு பூஜை செய்யும் தீட்சிதர்கள், கோவிலை பூட்டி அதன் சாவியை பல்லக்கில் வைத்து மன்னர் குடும்பத்தின் அரண்மனையில் ஒப்படைப்பார்கள். காலையில் மீண்டும் அவ்வாறே வாங்கி வந்து கோவிலை திறப்பார்கள்.
காலப்போக்கில் மன்னர் குடும்பம் நலிவடைந்ததால், சாவியை பிராமணர்களான தீட்சிதர்களே வைத்துக்கொண்டனர். பின்னர், உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மூலம் வழக்குத் தொடுத்து - இந்தக் கோவில் பிராமணர்களுக்கே சொந்தம் என்கிற மோசடி தீர்ப்பையும் பெற்றுவிட்டார்கள்.

இப்போது, பாஜகவின் துணை அமைப்பான சத்திரியர் சாம்ராஜ்யத்தின் சார்பில், சிதம்பரம் கோவில் உரிமையை மீண்டும் பிச்சாவரம் மன்னர் குடும்பத்திடமே அளிக்க வேண்டும் என்று கோர முடியுமா?

அப்படி சிதம்பரம் கோவிலில் வன்னியர்களின் உரிமைப் பற்றி பேச வக்கற்றுப் போன இந்த கும்பல் தான் -  வன்னியர் உரிமையை அபகரித்த பிராமணர்களை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாத முஸ்லிம்களிடம் சண்டை போடுங்கள் என்று மூளைச்சலவை செய்கிறது.
திருக்கழுகுன்றத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.பி.வி.எஸ் மணியன், மற்றும் கல்யாணராமன் (நடுவில்)

பாஜகவின் துணை அமைப்பான சத்திரியர் சாம்ராஜ்யத்தின் தலைவராக, பாஜக சார்பில் 2016 தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு 2605 ஓட்டுகள் வாங்கிய வ.கோ. ரங்கசாமி உள்ளார். 'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு தமிழ் இனத்துரோகி,  போதைப்பொருள் கடத்தல்காரன்' என்று அவதூறு பிரச்சாரம் செய்த கல்யாணராமன் தான் இந்த அமைப்பின் ஆலோசகர் ஆகும் (நாயுடு வகுப்பை சேர்ந்த இவர் தன்னை வன்னியர் என்று கூறிக்கொள்வதாக சொல்கிறார்கள்).

மதவெறியை தடுக்க தமிழகம் ஒன்றிணைய வேண்டும்

வன்னியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை மூட்டும் இந்த படுபயங்கர மதக்கலவர சதியை தடுக்காமல் விட்டால், ஆயிரக்கணக்கான வன்னியர்களும், முஸ்லிம்களும் பலியாகும் ஆபத்து விரைவில் வரக்கூடும். இதனை வருமுன் தடுப்பதே, தமிழகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நலமானதாக இருக்கும்.

தொடர்புடைய சுட்டி:

திங்கள், ஏப்ரல் 10, 2017

எச்சரிக்கை: வன்னியர்களை பலிகொடுக்கத் துடிக்கும் மதவெறி கும்பல்!

'கிறிஸ்தவர்களுடனும் இஸ்லாமியர்களுடனும் வன்னியர்கள் போரிட வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்கிற இடஒதுக்கீட்டை அகற்ற வேண்டும்' என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பாரதீய ஜனதா கட்சி 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறது. 

'கிருஸ்துவ வன்னியர்களை வன்னியர் சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்னியர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய வேண்டும்' என்று சத்திரியர் சாம்ராஜயம் எனும் பாஜக துணை அமைப்பின் கூட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (9.4.2017) அன்று பகிரங்கமாக பேசியிருக்கின்றனர். (வீடியோ ஆதாரம் உள்ளது)

இது வன்னியர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும் தந்திரம். பாஜக மற்றும் முன்னேறிய சாதியினரின் சுயநலத்துக்காக, தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, வன்னியர்களை இஸ்லாமியர்களுடனும், கிறிஸ்தவர்களுடனும் கலவரத்தில் இறக்கிவிட செய்யப்படும் சதி இதுவாகும். இந்தச் சதிக்கு வன்னியர்கள் எவரும் பலியாக மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

வன்னியர்களும் மதமும் - ஓர் வரலாற்றுப் பார்வை

வன்னியர் என்கிற அடையாளத்துக்கு மதம் தடையாக இருந்தது இல்லை. வன்னியர்கள் எப்போதும் - அதாவது எப்போது சாதி தோன்றியதோ அப்போதிருந்து - வன்னியர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், வன்னியர்கள் எல்லோரும் எல்லா காலத்திலும் ஒற்றை மத அடையாளத்துடன் மட்டுமே இருக்கவில்லை என்பதே உண்மை.
வன்னியர்கள் அக்னியில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னியர்களுடைய தனிப்பட்ட இனக்குழு அடையாளம். வன்னியர்கள் மட்டும்தான் நெருப்பில் தோன்றியதாகக் கருதப்படும் திரௌபதி அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்துகின்றனர். இந்துக்களில் மற்றவர்கள் இதனைச் செய்வது இல்லை.

சமண மதமும் வன்னியர்களும்

இந்து மதம் என்கிற ஒன்று உருவாவதற்கு முன்பிருந்தே வன்னியர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்துமத ஆதிக்கம் வருவதற்கு முன்பு சமணமும் பவுத்தமும் மேலோங்கி இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை. (வன்னியர்கள் பள்ளி என்று அழைக்கப்பட்டதற்கு அவர்கள் சமணர்களாக இருந்ததே காரணம் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்).

வன்னிய புராணத்தின் கதாநாயகனாக இருப்பது வாதாபி வென்ற நரசிம்மவர்ம பல்லவன். வன்னியர்களின் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நரசிம்ம வர்மனின் தந்தை மகேந்திரவர்மன் முதலில் சமணராக இருந்து பின்னர் இந்து மதத்திற்கு மாறினார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

பௌத்த மதமும் வன்னியர்களும்

பல்லவ பாரம்பரியத்தில் வந்தவர்கள் இன்றைக்கும் வன்னியர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பவுத்த மதத்தை பரப்பிய 'போதி தர்மன்' அதே பல்லவ வம்சம்தான். அந்த போதி தர்மன் ஒரு பவுத்தனாக இருந்தார்.

இஸ்லாமும் வன்னியர்களும்

'சேரமான் பெருமாள் நாயனார்' என்பவர் ஒரு வன்னிய மன்னர் என்று கருதப்படுகிறது.  நபிகள் நாயகம் வாழ்ந்த அதே காலத்தில் சேரமான் பெருமாள் மக்காவுக்கு சென்று நபிகளை நேரில் சந்தித்தவர். அவர்தான் இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை பரப்பினார்.
கேரளாவில் சேரமான் மசூதி
அவரது பெயரால் அமைந்த சேரமான் மசூதிதான் இந்தியாவின் முதல் மசூதி ஆகும். அதுவே உலகின் இரண்டாவது மசூதியும் கூட. சேரமான் என்பவரை "பள்ளி பாண பெருமாள்" என்றும் கூறுகிறார்கள். சேலம் கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா அவர்கள் 'சேரமான் பெருமாள் நாயனார்' பெயரில்தான் இந்திய விடுதலைக்கான தீவிரவாதிகள் அமைப்பை உருவாக்கினார்.

சேரமான் பெருமான் அரேபிய மண்ணிலேயே மறைந்தார் என்று கருதப்படுகிறது. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஓமன் நாட்டின் சலாலா நகரில் தர்காவாக உள்ளது.  (Dargah Name: Hazrat Syedina Tajuddin (Razi Allahu Thaalahu Anhu), Also famous as Cheraman Perumal ( Indian King) in Salalah, Sultanate of Oman)

திரௌபதி அம்மன் வழிபாட்டில் போத்துராஜா போர்மன்னன் மற்றும் முத்தால ராவுத்தன் ஆகியோர் திரௌபதியின் பாதுகாவலனாகக் கூறி வழிபடப்படுகின்றனர். இதில் போத்துராஜா என்பது பல்லவ மன்னரைக் குறிக்கும். முத்தால ராவுத்தன் என்பது ஒரு முஸ்லீம் வீரனைக் குறிக்கிறது. இந்த வழிபாட்டு முறை வன்னியர்களின் தனிப்பட்ட பண்பாடாகும்.
இஸ்லாமிய தர்காவில் திரௌபதி கரகம், பெங்களூரு
திரௌபதி அம்மன் வழிபாடு மிகப்பெரிய அளவில் நடப்பது பெங்களூரில் தான். அங்கு பெங்களூருவின் பிரதான பகுதிகளில் நகர்வலமாக செல்லும் திரௌபதி கரக ஊர்வலம், Hazrat Takwal Mastan எனும் இஸ்லாமிய தர்காவில் நின்று, மூன்று முறை சுற்றி, ஒரு எலுமிச்சைப் பழத்தை தர்காவிற்கு அளித்து, அங்கிருந்து ஒரு எழுமிச்சைப் பழத்தை வாங்கிச் செல்வது பாரம்பரிய வழக்கமாகும்.

கிறித்தவ மதமும் வன்னியர்களும்

காடவராயர் வம்சத்தில் வந்த விருதாச்சலம் முகாசாபரூர் கச்சிராயர்கள், தமிழ்நாட்டில் கிறித்தவத்தை பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் வீரமாமுனிவரை ஆதரித்தார்கள். அதற்காக கோணான் குப்பத்தில் 18 ஆம் நூற்றாண்டில் புனித பெரியநாயகி தேவாலயத்தை அமைத்தார்கள். இன்றைக்கும் இந்தக் கிறித்தவ கோவில் விழாக்களில் இந்து கச்சிராயர்களே மதிக்கப்படுகின்றனர்.
கச்சிராயர் கட்டிய கோணான் குப்பம் புனித பெரியநாயகி தேவாலயம்
இந்த தேவாலயத்தில் ஆண்டு தோறும் தேர் திருவிழா நடத்தப்படும். அப்போது வீரமாமுனிவரை ஆதரித்து கோயில் கட்ட இடமும் கொடுத்த முகாசா பரூர் பல்லவ அரசர்களை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசர் அரண்மனையில் இருந்து அரச உடையுடன்  மேள தாள முழக்கங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வருவார். அவர் வடம் தொட்ட பின்பே தேரோட்டம் தொடங்கும். இந்த பாரம்பரிய நிகழ்ச்சி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படையாட்சி கட்டிய கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயம்
இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் எனும் கிறித்தவ தேவாலயத்தை கட்டியவர் தொண்டி சீனிக்குப்பன் படையாட்சி என்பவர்தான்.

இத்தாலியில் ரோம் நகரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் மிக உயர்ந்த பதவியான போப்பாண்டவருக்கு அடுத்ததாக உள்ள பதவி கார்டினல் என்பதாகும். கார்டினல்கள்தான் போப்பாண்டவரையே தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் இருந்து கார்டினலாக தேர்வான ஒரே நபர் மறைந்த கர்தினால் லூர்துசாமி. ஒரு வன்னியர் கிறித்தவ மதத்தின் மிக உயரிய பதவியை அடைந்ததைப் போற்றி கணல் பத்திரிகையில் எழுதப்பட்டது.

மருத்துவர் அய்யா அவர்கள் 1980 ஆம் ஆண்டு அனைத்து வன்னிய தலைவர்களையும் ஒன்று சேர்த்து வன்னியர் சங்கத்தை உருவாக்கிய போது, அதில் முக்கியமாக இடம் பெற்றிருந்தவர் முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராயப்பா ஐ.ஏ.எஸ்., இவர் ஒரு கிறித்தவ வன்னியர்.

எனவே, வன்னியர் என்கிற அடையாளத்திற்கு மதம் ஒரு தடையாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. 

மருத்துவர் அய்யாவும் - கிறித்தவ வன்னியர்களும் 

திண்டுக்கல்லில் உள்ள மிகப்பெரிய தேவாலயமான புனித வளனார் ஆலயத்தில் 'கிறித்தவ வன்னியர்களுக்கும் - கிறித்தவ ஆதிதிராவிடர்களுக்கும்' இடையே சர்ச்சை உருவானது. இதனால், வன்னியர்கள் வழிபட்டுவந்த புனித வளனார் தேவாலயம் மூடப்பட்டது.

2000 ஆவது ஆண்டுவாக்கில், மூடப்பட்ட புனித வளனார் தேவாலயத்தை திறக்க வேண்டும் என்கிற போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது மருத்துவர் அய்யா அவர்கள் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தார்கள்:

"1. மூடப்பட்ட தேவாலயத்தை உடனடியாக திறக்காவிட்டால், மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் புனித வளனார் தேவாலயம் திறக்கப்படும்.

2. தமிழ்நாட்டு கிறித்தவர்களில் வன்னியர்கள் ஒரு முதன்மையான சமுதாயமாக இருப்பதால் - பிஷப் எனப்படும் மறைமாவட்ட ஆயர்களாக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் நியமிக்க வேண்டும்" - என்கிற கோரிக்கைகளுக்காக மருத்துவர் அய்யா போராடினார்கள்.
மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டத்தை தொடர்ந்து புனித வளனார் தேவாலயம் திறக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், வன்னியர் சமுதாயத்தில் ஒரு பிஷப் கூட இல்லை என்கிற கோரிக்கையையும் போப்பாண்டவரின் வாட்டிகன் அலுவலகம் கவனத்தில் கொண்டது. இது குறித்து அப்போதைய வாட்டிகன் பிரதிநிதி கார்டினல் சைமன் லூர்துசாமி அவர்கள் திண்டுக்கல் வந்து ஆய்வு செய்தார் (அவரும் ஒரு வன்னியர்).
கர்தினால் லூர்துசாமி
இதைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மறை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு, வன்னியர் ஒருவர் பிஷப் ஆக நியமிக்கப்பட்டார். ரோமன் கத்தோலிக்க மதத்தில் தமிழகத்தில் 20 மறை மாவட்டங்கள் உள்ளன. இவை மூன்று உயர் மறைமாவட்டங்களாக (ஆர்ச் பிஷப்) பிரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் அய்யா அவர்கள் போராடிய போது, வன்னியர் சமூகத்தில் ஒரே ஒரு பிஷப் கூட இல்லை. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் 4 பிஷப்கள் வன்னியர்கள். (20 மறை மாவட்டங்களும் 3 உயர்மறை மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளன. பிஷப்களுக்கும் மேலான இந்த 3 ஆர்ச் பிஷப் பதவிகளில்  2 இல் வன்னியர்கள் உள்ளனர்.)

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் ஒட்டுமொத்த 20 மறைமாவட்டங்களுக்கும் தலைவராகவும் - பிஷப் கவுன்சில் தலைவர் எனும் உயர் பொறுப்பில் வன்னியரான அந்தோணி பாப்புசாமி உள்ளார்.

மருத்துவர் அய்யா அவர்களின் அரசியல் போராட்டங்களின் விளைவாகவே கத்தோலிக்க கிறித்தவ மதத்தில் வன்னியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கிறித்தவ வன்னியர்கள் கருதுகின்றனர்.

"திண்டுக்கல் - கரியாம்பட்டி" 

2013 ஆம் ஆண்டில் திண்டுக்கல் அருகே கரியாம்பட்டியில் வன்னிய பெண்ணை கேலி செய்தது தொடர்பாக "வன்னியர் - அருந்ததியினர்" இடையே மோதல் நிகழ்ந்தது. இந்த சர்ச்சையில் தொடர்புடைய வன்னியர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். அருந்ததியினரும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்கள் என்பதால் திண்டுக்கல் பகுதியில் உள்ள வன்னிய கிராமங்களின் ஊர்த்தலைவர்கள் உடனடியாக ஒன்று கூடினர்.

திண்டுக்கல் பகுதியில் சுமார் மூன்று லட்சம் வன்னியர்கள் உள்ளனர். அவர்களில் 75% கிறித்தவர்கள். திண்டுக்கல் பகுதி வன்னியர்களில் மிகப் பெரும்பான்மையினர் கிறித்தவர்களாக இருந்தாலும், அனைத்து கிறித்தவ வன்னிய கிராம ஊர்த்தலைவர்களும், இந்து வன்னியர்களுக்கு ஆதரவாக திரண்டனர்.

எந்த மதத்தில் இருந்தாலும் நாங்கள் வன்னியர்கள் என்கிற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபட்டதனால் அப்பகுதியில் வன்னியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

"கற்றுக்கொண்ட பாடம்"

# கரியாம்பட்டி போராட்டத்தில் "இந்துக்களுக்குள்" வன்னியர் - அருந்ததியினர் இடையே சண்டை, நமக்கேன் வம்பு என கிறித்தவ வன்னியர்கள் ஒதுங்கிப் போகவில்லை.

# திண்டுக்கல் போராட்டத்தில் "கிறித்தவர்களுக்குள்" வன்னியர் - ஆதிதிராவிடர் இடையே சண்டை, நமக்கேன் வம்பு என இந்துவான மருத்துவர் அய்யா அவர்கள் ஒதுங்கிப் போகவில்லை.

மதத்தைத் தாண்டி, வன்னியர்கள் எல்லோரும் உறவினர்களாக ஒன்றுபட்டு நின்றார்கள். ஒற்றுமையே வலிமை என்பதை நிரூபித்தார்கள்.

மதவெறி கலவரத்தில் வன்னியர்களா?

'கிருஸ்துவ வன்னியர்களை வன்னியர் சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்னியர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய வேண்டும்' என்று சத்திரியர் சாம்ராஜயம் எனும் பாஜக துணை அமைப்பின் கூட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (9.4.2017) அன்று பகிரங்கமாக பேசப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.

வன்னியர்கள் எல்லா மாற்றுக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். அரசியல் ரீதியில் எதிர்எதிர் இடங்களில் இருந்தாலும், அவர்களுக்குள் உறவினர் என்கிற அடிப்படையில் மோதல் இல்லை. மருத்துவர் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டபோது, பல மாற்றுக்கட்சி வன்னியர்கள் துடிதுடித்தார்கள்.

ஆனால், பாஜக ஆதரவு வன்னியர்கள் மட்டும்தான் 'இந்துக்கள் என்றும் கிறித்தவர்கள் என்றும்' வன்னியர்களுக்குள் பிளவினை ஏற்படுத்த துடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அப்பாவி வன்னியர்களை அடியாட்களாக மாற்றத் துடிக்கின்றனர். 
முப்பதாண்டுகளுக்கு முன்பு, தெலுங்கானா போன்று இடதுசாரி நக்சலைட் தீவிரவாதிகளாக வன்னியர்கள் மாறாமல் தடுத்து அவர்களை நல்வழிக்கு திருப்பியவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அது போல இப்போது மதவெறி அரசியலுக்காக வன்னியர்களை பலிகொடுக்கும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

‘மதவெறி அரசியலின் மூலமாக பாஜக வளர வேண்டும் என்பதற்காக வன்னியச் சாதியை பலி கொடுக்கத் துடிக்கும்' இந்த மாபெரும் சதியை மருத்துவர் அய்யா அவர்கள் முறியடிப்பார்கள்.

ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

பங்குனி உத்திரம்: வீர வன்னியர் கதையும் விடுதலைக்கான வழியும்

ஒவ்வொரு இனமும் தனக்கான வரலாற்றையும் தோன்றிய கதைகளையும் கொண்டிருக்கிறது. இந்த புராணக் கதைகள்தான் தேசங்களையும், இனக்குழுக்களையும் கட்டமைக்கின்றன. உண்மையில், உலகின் எல்லா தேசங்களும் கற்பனையும் வரலாறும் கலந்த கதைகளின் மீதே கட்டப்பட்டுள்ளன.

தோற்றத் தொன்மம் (origin myth) என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு இனத்தை ஒரே அணியாக நிறுத்துவதாகவும், அந்த இனம் ஒன்றுபட்டு செயல்படுவதற்கு வழிவகுப்பதாகவும் தொன்மங்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களின் முடிவாகும். "தொன்மம் போன்ற வெளிப்பாடுகள் ஓர் இனத்தின் கூட்டுமனம்; அந்த இனத்தின் அன்னியோன்யமான கூட்டுத் தன்முனைப்பு; தங்களைப் பற்றிய முழு அர்த்தப்பாடு ஆகும். ஆதலின் தொன்மம் என்பது அந்த இனத்தின் கூட்டுமனப் பிரதிநிதித்துவப் பதிவாகும்" - என்கிறது "வரலாற்று மானிடவியல்" எனும் நூல்.

வலிமையான இனக்குழுக்கள் அனைத்தும் தமது தோற்றம் குறித்த பூர்வீக வரலாற்று கதைகளை மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலமும், அதனை அடையாளப் படுத்துவதன் மூலமுமே நீடித்திருக்கின்றன. உலகின் பல நாடுகளும் இப்படித்தான் தம்மைக் காத்துக்கொண்டிருக்கின்றன.

யூதர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட நிலம்

இஸ்ரேல் என்கிற நாடு உருவானதற்கும், இன்றும் தொடரும் பாலஸ்தீன சிக்கலுக்கும் அடிப்படைக் காரணம் புராணக் கதைதான். எகிப்தில் வாழ்ந்த ஆபிரகாமையும் அவரது சந்ததிகளையும் – “நான் உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நிலத்தை (promised land) காட்டுகிறேன். அதனை உங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளுங்கள்" என்று இறைவன் சொன்னதாக புனித பைபிளும், யூத வேதமும் சொல்கிறது. அவ்வாறு பைபிளில் காட்டப்பட்ட நிலத்தையே யூதர்கள் தங்களுக்கான நாடாக 'இஸ்ரேல்' நாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசீர்வதிக்கப்பட்ட நிலம் (promised land)
கிறிஸ்தவர்களும் யூதர்களும் இஸ்ரேலை உருவாக்குவது கடவுளின் வாக்குறுதியை நிறைவேற்றுவது என்று இப்போதும் நம்புகிறார்கள். அதனால்தான் - பாலஸ்தீன சிக்கல் எப்போதும் முடியாத போராக தொடர்கிறது.

ஜப்பானியர்களின் ஜிம்மு

ஜப்பானிய நாடு ஜிம்மு எனும் மன்னன் குறித்த கற்பனை கதையிலிருந்து உருவானதாகும். சூரிய வம்சத்தை சேர்ந்த ஜிம்மு எனும் மன்னன் 2600 ஆண்டுகளுக்கு முன்பு போரில் வெற்றி கொண்டு ஜப்பானிய தேசத்தை நிர்மானித்தான் என்று அவர்கள் நம்புகிறர்கள்.
ஜிம்மு
ஜிம்மு மன்னன் வெற்றியடைந்த நாள் பிப்ரவரி 11 என்று அறிவித்து, அதனை ஜப்பான் உருவான நாள் என்று இப்போதும் அந்த நாடு கொண்டாடுகிறது.

ரோம சாம்ராஜயத்தின் கதை

உலகப் புகழ்பெற்ற ரோம சாம்ராஜ்யம் கற்பனை கதையின் மீது உருவானது. செவ்வாய் கடவுளுக்கு பிறந்த குழந்தைகளான ரோமுலசும் ரெமூசும் ஆற்றங்கரையில் வீசப்பட்டார்கள். அவர்களை ஒரு ஓநாய் காப்பாற்றி வளர்த்தது.
ஓநாய் வளர்க்கும் குழந்தைகள்
வளர்ந்தவுடன் அவர்களுக்கு இடையிலான மோதலில் ரெமூசை அவனது சகோதரன் ரோமுலஸ் கொன்றான். பின்னர் ரோமுலஸ் ரோம் நகரை நிர்மானித்தான் என்பது ரோம சாம்ராஜ்யத்தின் வரலாறாகும். இந்த வரலாற்றை ரோம் நகரம் இப்போது அடையாளப்படுத்துகிறது.

ஜெர்மனியை உருவாக்கிய ஹெர்மன்

ஹெர்மன் எனும் போர் வீரன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்களை எதிர்த்து போரிட்டு, வெற்றிக்கொண்டு ஜெர்மனியை உருவாக்கினான் என்று ஜெர்மானியர்கள் நம்புகிறார்கள். இந்தக் கதைதான் ஜெர்மானிய தேசியவாதத்தின் அடையாளம் ஆகும். பலநூறு ஆண்டுகள் கழித்து 1800 களில் பிரான்சுக்கு எதிராக ஜெர்மனானிய தேசியவாததை கட்டமைக்க ஹெர்மன் கதையை பயன்படுத்தினார்கள். பிரான்சுக்கு எதிரான போரில் வெற்றியும் அடைந்தார்கள்.
மாபெரும் ஹெர்மன் சிலை
ஹெர்மன் ஜெர்மனியின் தேசத்தந்தை என்று குறிப்பிட்டு 1885 ஆம் ஆண்டில் 175 அடி உயரத்துக்கு ஒரு மாபெரும் செப்புச்சிலையை நிர்மானித்தார்கள். இந்த சிலையின் கையில் உள்ள வாளில் "ஜெர்மனியின் ஒற்றுமையே எனது வலிமை. எனது வலிமையே ஜெர்மனியின் ஒற்றுமை" என்று தங்கத்தால் எழுதி வைத்துள்ளனர். ஜெர்மனியர்கள் குடிபெயர்ந்த அமெரிக்காவில் மின்னசோட்டா, நியூயார்க், மிசௌரி என பல இடங்களிலும் ஹெர்மனுக்கு சிலை வைத்துள்ளனர்.

சிங்கப்பூரின் சிங்கம்

சிங்கப்பூர் தீவுக்கு வந்த ஸ்ரீதிரிபுவன மன்னன் கடலை கடக்கும் போது புயலில் சிக்கினான். அதிலிருந்து தப்ப தனது கிரீடத்தை கடலில் வீசினான். உடனே புயல் நின்றுவிட்டது. தீவில் இறங்கிய போது விநோதமான விலங்கை கண்டான். அது சிங்கத்தைப் போன்று இருந்ததால் அந்த இடத்துக்கு சிங்கபுறம் என்று பெயரிட்டான் என்கிறது சிங்கப்பூரின் வரலாறு.
சிங்கப்பூர் சிங்கம்
அவ்வாறே, சிங்கப்பூர் மக்களை பாதி சிங்கமும், பாதி மீனும் கலந்த ஒரு விலங்கு புயலில் இருந்து காப்பாற்றியது என்பது ஒரு நம்பிக்கை. இந்த கதைகளே அந்த நாட்டின் அடையாள சின்னமும் ஆகும்.

இது போன்று - ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறுகளை முற்றிலும் உண்மை என்று ஏற்கவும் முடியாது. முழுக்க முழுக்க பொய் என்று மறுக்கவும் முடியாது.

கட்டமைக்கப்பட்ட இந்திய நம்பிக்கைகள்

ஆரியர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக வந்து திராவிடர்களை தோற்கடித்தார்கள் என்கிற கதையின் மீதுதான் திராவிட அரசியல் கட்டமைக்கப்பட்டது. ராமராஜ்யம் என்கிற ஒன்று இருந்தது என்கிற கதையின் மீதுதான் பாஜகவின் இந்து தேசிய அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சிங்கமும் அதனை எதிர்க்கும் புலியும்

சிங்கள இனத்தின் முன்னோடி விஜயன் சிங்க வம்சத்தில் வந்தவன் என்கிறது மகாவம்சக் கதை. அதனால் இலங்கை நாடு சிங்கத்தை சின்னமாகக் கொண்டுள்ளது. இலங்கையை வெற்றிகொண்ட சோழர்கள் புலியை சின்னமாகக் கொண்டனர். சோழர்களின் ஆன்மீக தலைமையிடமான சிதம்பரம் புலிவனம் எனப்பட்டது. அங்கு முதலில் வழிப்பட்டவர் புலிக்கால் முனிவர் ஆகும். சிங்களர்கள் தமிழர்களை கொட்டியா (புலி) என்று அழைத்தனர். என்றாவது ஒருநாள் தமிழ் நாட்டு தமிழர்கள் தங்களை மீண்டும் வெற்றி கொள்வார்கள் என்கிற பயம் எப்போதுமே சிங்களர்களுக்கு இருந்தது.
புலியும் சிங்கமும் 
சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக தேசியத்தலைவர் பிரபாகரன் தொடங்கிய இயக்கம் விடுதலைப் புலிகள். அதன் சின்னம் புலிக்கொடி. இப்படியாக, சிங்கள பேரினவாதத்தின் அடையாளமாகவும், அதனை எதிர்த்து போரிடும் விடுதலைப் போரின் அடையாளமாகவும் தொன்மக் கதைகளே உள்ளன.

தமிழகத்தின் இனக்குழு தொன்மங்கள்

உணவை படைப்பதற்காக கங்காதேவி மரபாளனை உருவாக்கினாள். பசியை தீர்க்கவல்ல உழவுத் தொழிலை அவனுக்கு இந்திரன் பணித்தான். இந்திரனும் குபேரனும் அவனுக்கு பெண் கொடுத்தனர் என்பது கொங்கு வெள்ளாளர்களின் ஒரு கதை ஆகும்.

தகாத உறவில் பிறந்த கூத்தன் எனும் மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்து, ஸ்ரீவைகுண்டத்துக்கு ஓடி அங்கு கோட்டைக் கட்டி வாழ்ந்தவர்கள் கோட்டைப்பிள்ளைமார் என்பது அவர்களது கதை. இதே போன்று, பூம்புகாரில் இருந்த நகரத்தார்கள் சோழ மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்து, தங்களது எல்லா பெண்களையும் கொலை செய்துவிட்டு - ஆண்கள் மட்டுமே காரைக்குடி பகுதிக்கு தப்பிச்சென்று, அங்கு வேளாளர் பெண்களை திருமணம் செய்துகொண்டனர் என்பது நகரத்தாரின் கதை.

தேவலோகக் கன்னிகளுக்கு பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி எடுத்து வளர்த்தார். அவர்கள் வழி வந்தவர்களே நாடார்கள் என்பது ஒரு கதை ஆகும். மீன் பிடிக்க வலைவீசிய பருவதராஜா, மீனோடு சேர்த்து முனிவரையும் பிடித்துவிட்டார். அதனால் பெற்ற சாபத்தால் - பருவதராஜ குலத்தினர் மீன்பிடி தொழிலை செய்கின்றனர் என்பது அவர்களது நம்பிக்கை.

இது போன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான சாதியினருக்கு, ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தொன்மக் கதைகள் உள்ளன.

வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்

இந்தியாவின் மன்னர் பரம்பரையினர், போர் வீரர்கள் தம்மை சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம் என்று கூறிக்கொண்டனர். அந்த மரபின் படியே வன்னியர்கள் தம்மை அக்னி வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில், வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள் என்பது நம்பிக்கை ஆகும்.
வன்னியர் சின்னம்
‘அக்னி வம்சம்’ என்கிற கருத்தாக்கம், அதாவது 'யாகத்தீயில் இருந்து அவதாரம் எடுக்கும் நிகழ்வு' புறநானுறு காலத்தில் இருந்தே தமிழர் வரலாற்றில் உள்ளது. ("நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றி" - நீ வடபால் முனிவன் யாகக் குண்டத்தில் தோன்றியவன் - என்கிறது புறநானூறு பாடல் 201)  
வல்லாள மகராஜன், திருவண்ணாமலை
அருணாச்சல புராணம் திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகராஜனை, "மூவகையுள் வன்னி குலத்தினில் வரு மன்னா" என்கிறது. வில்லிபாரதம் சோழர்களை சூரிய வம்சம், பாண்டியர்களை சந்திரவம்சம், சேரர்களை அக்னி வம்சம் என்று குறிக்கிறது.

‘சோழர்களின் வீழ்ச்சிக்கு பின்பும் - விஜயநகர பேரரசின் படையெடுப்புக்கு முன்பும்’ தமிழ்நாட்டில் வன்னியர்கள் மற்றும் அக்னி வம்சம் குறித்த கருத்துக்கள் மேலோங்கியிருந்தது. அக்காலத்தில் வடதமிழ்நாடு 'வன்னியர் ராஜ்யம்' என்று பெயர்பெற்றிருந்தது. வன்னிய நாட்டை வெற்றி கொள்வதும், வன்னிய ராஜாக்களை வெல்வதும் விஜயநகரப் படையெடுப்பின் நோக்கம் என்று கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் சமஸ்கிருத காவியம் குறிப்பிடுகிறது. அதே போன்று இலங்கையிலும் வன்னியர் ஆட்சி சிறப்பு பெற்றிருந்ததை இலங்கையின் வையா பாடல் குறிப்பிடுகிறது.
திரௌபதி, பெங்களூர்
இதே போன்று, வன்னிய புராணத்திலும், வைத்தீஸ்வரன் கோவில் கல்வெட்டிலும், கம்பரின் சிலை எழுபது பாடலிலும், இலங்கையின் வையா பாடலிலும் 'வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள்' என்கிற செய்தி கூறப்பட்டுள்ளது. அக்னியில் தோன்றிய சத்திரியர்களான வன்னியர்கள் தீயில் தோன்றிய தெய்வமான திரௌபதியை வழிபடுகின்றனர். இது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத பழக்கம் ஆகும்.

வன்னிய ராஜன் கதை

வன்னிய புராணம் என்பது தமிழக மன்னர்கள் நடத்திய மாபெரும் போர்களின் தொகுப்பு. பாதாமியிலிருந்து ஆட்சி செய்த சாளுக்கிய மன்னன் புலிகேசியை பல்லவ மாமன்னன் நரசிம்மவர்ம பல்லவன் வெற்றிக்கொண்ட கதை இதில் முதன்மையானது என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். (நரசிம்மவர்ம பல்லவன் வரலாறு கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' நாவலிலும், எம்ஜிஆர் நடித்த 'காஞ்சித் தலைவன்' திரைப்படத்திலும் கூறப்பட்டுள்ளது).

மக்களுக்கு துன்பம் விளைவித்த வாதாபி சூரனை அழிப்பதற்காக, சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்புத் துளியை, சம்பு முனிவர் செய்த யாகத்தில்  விழுச்செய்தார். அக்னி குண்டத்திலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் உதயமானவர் வீர வன்னிய மகாராஜா.
'ஓம குண்டத்தில் தோன்றிய போது தலையில் மகுடமும், கையில் வில்லும் கேடயமும் வேலும்... தோளில் அம்புகளும் அம்பறாத் தூணியும்... கட்டாரியும், வாளும், செங்கழுநீர் மாலையும் அணிந்து வீரவன்னிய ராஜன் தோன்றினான்' என்கிறது 'வீர வன்னியர் கதை - வன்னிய புராண வசனம்' எனும் நூல்.

சம்பு முனிவர் செய்த யாகத்திலிருந்து வீர வன்னிய மகாராஜா தோன்றிய நாள் பங்குனி உத்திரம். யாகம் நடந்த இடம் திருவானைக்கா, அங்குள்ள கோவில் சம்புகேஸ்வரம் எனப்படுகிறது. வன்னி குச்சியை எரித்து உருவான யாகத்தில் தோன்றியதால் வீர வன்னிய மகாராஜா என்று அழைக்கப்பட்டார். வன்னிய மகாராஜன் வழி வந்தவர்கள் வன்னியர்கள் என்பது வன்னிய புராணம் கூறும் செய்தி. இது வன்னிய நாடகம், வன்னிய கூத்து வடிவிலும் நடத்தப்படுகிறது. வன்னியராஜன் கோவில்களும் சில ஊர்களில் உள்ளன.
 வன்னிய நாடகம்
வீர வன்னிய மகாராஜா அவதரித்த பங்குனி உத்திர திருநாளை வன்னியர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். வன்னியர் குறித்த வன்னிய புராண தொன்மக் கதையை பரப்பவும், குழந்தைகளுக்கு படிப்பிக்கவும் வேண்டும்.

வரலாற்று அடையாளத்தின் தேவை என்ன?

ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு இனக்குழுவும் தம்மை ஒருங்கிணைத்து, அடிமைத் தளைகளில் இருந்து விடுதலையாக வரலாறும், அந்த குழுவின் தொன்மமும் முதன்மையான கருவிகளாக உதவுகின்றன. காலம் தோரும் வரும் ஆபத்துகளுக்கு எதிராக தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ஒற்றுமை அவசியம் ஆகும்.

மனிதர்களின் மிகப்பெரிய பலம் அவர்கள் கூட்டாக செய்ல்படுவதுதான். ஒரு சிலர் அல்லது சில நூறு பேர்தான் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக அறிமுகமாகி, கூட்டாக செயல்பட முடியும். அதே நேரத்தில், லட்சக்கணக்கான மக்கள் நேரடியான அறிமுகத்தின் மூலம் தம்மை ஒரே குழுவாக அடையாளம் காண்பது சாத்தியம் இல்லை.

லட்சக்கணக்கான மக்களை 'நீயும் நானும் ஒன்று. உன்னுடைய நலனும் என்னுடைய நலனும் ஒன்று. நாம் இணைந்து ஒரே இலக்கில் பாடுபடுவோம்' என்கிற கூட்டுமனத்தை உருவாக்குவது வரலாற்று உணர்வும், தம்மை பிணைக்கும் தொன்மக் கதைகளும், அவற்றுக்கான அடையாள சின்னங்களும் தான்.

அக்னி வம்சம், அக்னி கலசம், மஞ்சள் - சிவப்பு நிறம் என்பது பல லட்சம் வன்னியர்களை ஓரணியாக உணரச் செய்யும் மாபெரும் அடையாளம் ஆகும். இந்த அடையாளத்தின் ஆணிவேறாக இருப்பது நெருப்பில் தோன்றிய வீர வன்னிய மகாராஜனின் கதை. 

வீர வன்னிய மகாராஜா அவதரித்த பங்குனி உத்திர திருநாளைக் வன்னியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்.
குறிப்பு: வன்னியர்கள் மட்டுமல்ல. இதே போன்று, தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமூகமும் தது தொன்ம வரலாற்றுக் கதையை போற்ற வேண்டும்.  ஏனெனில், தமிழ்நாட்டை சீரழிக்கும் ஆபத்துகளான, ஏக இந்தியக் கொள்கை, மதவெறி தீவிரவாதம், தமிழர் அடையாள அழிப்பு, திராவிடத் திணிப்பு, கம்யூனிச சர்வதேசியம் ஆகிய கேடுகளில் இருந்து - பன்முக அடையாளங்களே தமிழகத்தை காப்பாற்றும். இதுவே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் இருக்கும். தமிழகத்தின் புதிய தேசிய வாதம் என்கிற எழுச்சியின் ஆதாரமாக பன்முக அடையாளங்களே இருக்கும்.

சனி, மார்ச் 11, 2017

சிவபெருமானின் தந்தை வீர வல்லாள மகாராஜா

அருள்மிகு அண்ணாமலையார் மகனாக அவதரித்து மகனின் கடமை ஆற்றும் மாசி மகம் திருநாள்!
மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர். இவருக்கு சிவபெருமானே மகனாக வந்து பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இறந்து போன தனது தந்தை வல்லாள மகராஜனுக்கு மாசி மகம் நாளில் சிவபெருமானே திதி கொடுக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கோவிலில் நடந்து வருகிறது.

பின்னணி

ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு. இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை.
வல்லாள மகாராஜா சிலை, திருவண்ணாமலை கோவில்.

ஹோய்சாள மன்னர்கள் சோழர்களுடனும் பாண்டியர்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். அவர்களால் மாமன் உறவில் அழைக்கப்பட்டனர். சோழப்பேரரசை பாண்டியர்களிடமிருந்தும் காடவர்களிடமிருந்தும் இவர்கள் காப்பாற்றினர். மூன்றாம் குலோத்துங்கச் சோழனும், மூன்றாம் இராசராசனும் வல்லாள இளவரசிகளை மணந்தனர். இரண்டாம் வல்லாளன் சோழ இளவரசியை மணந்தார். மூன்றாம் வீரவல்லாளனின் தாத்தாவான ஹோய்சாள சோமேஸ்வரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரண்மணையில் வாழ்ந்தார். திருச்சிக்கு அருகே கண்ணனூரில் தலைநகரை அமைத்தார்.

வீர வன்னியர் மரபு

வன்னியர்கள் வடபால் முனிவரின் யாகத்தீயில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னிய புராணம் குறிப்பிடும் செய்தி ஆகும். இதே தொன்மக்கதையை ஹோய்சாளர்களும் கொண்டிருந்தனர்.

கி.மு. 4 ஆம் நூற்றாண்டு வாக்கில் எருமை நகரம் எனப்பட்ட மைசூர் அருகே துவரை நகரை இருங்கோவேள் என்னும் தமிழச் சிற்றரசன் ஆண்டுவந்தான். இவனைப்பற்றி புறநானூறு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

"நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்க னுடைமையிற் பாண்கட னாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்" (புறநானுறு  201)

வடபால் முனிவன் எனப்படும் சம்புமுனிவரின் ஓம குண்டத்தில் தோன்றித் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்தவன் இருங்கோவேள் ஆகும். இவனே புலிக்கடிமால் எனப்பட்டான். பாரியின் மகளிராகிய அங்கவை, சங்கவை என்பவரைக் கபிலர் இருங்கோவேள் அரசனிடம் அழைத்து வந்து மணஞ் செய்து கொள்ளும்படி கேட்டார். இருங்கோவேள் மறுத்துவிட்டான் என்று புறநானூறு கூறுகிறது.
புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் சின்னம், பேலூர்

சம்புமுனிவரின் யாகத்தீயில் தோன்றிய இருங்கோவேள் அரசன், தபங்கர் என்னும் முனிவர் தவம் செய்கையில் பாயவந்த புலியை 'ஹொய்சள' என்று கூறிய முனிவர் ஆணைப்படிக் கொன்றதால் அவன் புலிகடிமால் என்று பெயர் பெற்றான். இந்த வம்சத்தில் வந்தவர்களே ஹொய்சாளர்கள் என்பது உ.வே. சாமிநாத அய்யர், ஞா. தேவநேயப் பாவாணர், மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய அறிஞர்களின் கருத்தாகும்.

புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் என்று புறநானூற்றில் உள்ள தொன்மக்கதையை ஹொய்சாளர்கள் தங்களது சின்னமாகக் கொண்டனர். பேலூர் கோவிலிலும், அவர்கள் கட்டிய திருவண்ணாமலை கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் புலிக்கடிமால் சின்னத்தை சிலையாக வடித்துள்ளனர். புறநானூற்றில் உள்ள அதே துவரை நகரம் தான் ஹொய்சாளர்களின் தலைநகரமாக விளங்கியது. முதலில் துவாரசமுத்திரம் என்றும் பின்ன ஹளபேடு (பழைய நகரம்) என்றும் அழைக்கப்பட்டது.
புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் சின்னம், திருவண்ணாமலை கோவில்.

வன்னிய புராணம் குறிப்பிடும் வன்னியர்கள் யாகத்தீயில் தோன்றியவர்கள் என்கிற தொன்மமும், புறநானூறு குறிப்பிடும் ஹொய்சாளர்கள் யாகத்தீயில் தோன்றியவர்கள் என்கிற நம்பிக்கையும் ஒன்றாக இருப்பது வியப்பளிக்கக் கூடியது ஆகும். கல்வெட்டுகளும் அருணாசலபுராணமும் ஹொய்சாளர்களை வன்னியர்கள் என்று குறிப்பிடுகின்றன.

கர்நாடக மாநிலம் பேலூர் கல்வெட்டு ஹொய்சாளர்களை வன்னிய புத்திரர்கள் என்கிறது. கோலாரில் உள்ள 1291 ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டு ஹொய்சாளர்கள் காலத்தை வன்னியர் காலம் என்று குறிப்பிடுகிறது.

திருவண்ணாமலை கோவில் புராணமான கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம், ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்று குறிப்பிடுகிறது. 

சிவன் மகனாக பிறந்த கதை

வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிடையாலை நிகழ்த்தினார்.

திருவண்ணாமலையில் இருந்த எல்லா தேவதாசிகள் வீட்டுக்கும் சிவகணங்களை அனுப்பிய சிவபெருமான், வல்லாள மகாராஜாவிடம் சைவத் துறவி கோலத்தில் வந்து தனக்கு ஒரு தேவதாசி வேண்டும் என்று கேட்டார். வல்லாள மகாராஜாவும் தேவதாசியை அனுப்புவதாக வாக்களித்தார். ஆனால், ஊரில் உள்ள எல்லா தேவதாசிகளும் சிவகணங்களுடன் இருந்ததால் - வல்லாள மகாராஜாவால் தேவதாசியை கொண்டுவர முடியவில்லை. மன்னனின் கவலை அறிந்த வல்லாள மகாராஜாவின் இளைய ராணி, தானே தேவதாசியாக சிவனிடம் செல்ல முன்வந்தார். துறவி வேடத்தில் சிவன் இருந்த அறைக்குள் ராணி நுழைந்த போது - குழந்தையாக சிவபெருமான் காட்சியளித்தார். ராணியும் மகாராஜாவும் சிவபெருமானை தமது குழந்தையாக ஏற்றனர்.

பின்னர், வீர வல்லாள மகராஜன், மதுரை சுல்தான் மீது போர் தொடுத்தபோது கொலை செய்யப்பட்டார். வீர வல்லாள மகாராஜாவின் இறுதி கடனை இறைவனே திருவண்ணாமலையின் கீழ்த்திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார். வன்னியப்பெருமக்கள் அருள்மிகு அண்ணாமலையானை சம்மந்திமுறை ஏற்று தலைக்கட்டு நடத்தினர். வன்னியர்கள் வாழ்ந்த அந்த ஊருக்கு "சம்மந்தனூர்" என்ற பெயர் வழங்க பெற்றது.

அப்போது முதல் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரையில் சிவபெருமான் தனது தந்தைக்கு திதிகொடுக்கும் மாசி மக திருவிழா கொண்டாடப்படுகிறது. சம்மந்தனூர் வன்னியர்கள் சம்மந்தி உரிமையில் சிவனுக்கு பட்டாடை சாத்துகின்றனர். மறுநாள் வீர வல்லாள மகாராஜனுக்கு பதிலாக திருவண்ணாமலையில் சிவபெருமான் மன்னராக முடிசூடிக்கொள்கிறார். இந்த நிகழ்விலும் வன்னியர்களே காலம் காலமாக பங்கேற்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு, சிவபெருமான் வல்லாள மகராஜனுக்கு திதி கொடுக்கும் மாசி மகம் திருநாள் 11.3.3017 ஆம் நாளிலும், சிவபெருமானுக்கு முடிசூட்டு விழா 12.3.2017 ஆம் நாளிலும் நடைபெறுகிறது.

புதன், டிசம்பர் 28, 2016

பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு: மருத்துவர் அன்புமணி பங்கேற்றது ஏன்?

பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் பங்கேற்றதை வைத்து, முஸ்லிம்களுக்கு பாமக ஏன் வக்காலத்து வாங்க வேண்டும் என்று சிலர் கொந்தளித்தார்கள்.

ஆனால், முஸ்லிம்களுக்காக மட்டும் பாமக அந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. மாறாக, பாமகவின் கொள்கையே 'பொது சிவில் சட்ட எதிர்ப்புதான்' என்கிற அடிப்படையிலேயே அவர் பங்கேற்றார்.

பாஜகவுடன் கூட்டணியாக தேர்தலை சந்தித்த 2014 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே - பொதுசிவில் சட்ட எதிர்ப்புதான் பாமகவின் நிலைப்பாடு என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. (படத்தில் காண்க). இதனை 9.11.2016 அன்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிக்கை 9.11.2016

இஸ்லாமிய சகோதரர்கள் கோரிக்கை விடுக்காவிட்டாலும் கூட பொது சிவில் சட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறது; எதிர்க்கிறது; எதிர்க்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளையும், அதன் அரசியல் பயணத்தையும் அறிந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாக புரியும். 

இந்தியாவில், பொருளாளர் பதவியை இஸ்லாமிய சமூகத்திற்காக ஒதுக்கீடு செய்த முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். பா.ம.க.வின் இந்த கொள்கையைத் தான் இன்று மேலும் பல கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றன. இஸ்லாமியர்களின் நலனுக்காக சமூக சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தியது, இஸ்லாமியர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதெல்லாம் அதை எதிர்த்து போராடியது, கோவை கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் சீர்குலைக்கப்பட்ட போது அதற்கு எதிராக போராடி வெற்றி பெற்றது என இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளை எதிர்த்து போராடி வருகிறது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அதை எதிர்த்து பா.ம.க. போராடி வந்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் உட்பட பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்த போதும் கூட, பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே பா.ம.க எடுத்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூட,‘‘பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை. ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
2014 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை
பொது சிவில் சட்டத்திற்காக பாஜக அணிந்திருக்கும் புதிய முகமூடி ‘‘தலாக் நடைமுறையால் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்பதாகும். தலாக் நடைமுறையால் இஸ்லாமியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதற்கான தீர்வு தலாக் நடைமுறையில் உள்ள குறைகளை களைவது தானே தவிர பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அல்ல. இது காலில் உள்ள புண்ணை குணப்படுத்துவதற்கு பதிலாக காலையே வெட்டி வீசுவதற்கு சமமாகும். 

இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

- இவ்வாறு 9.11.2016 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் பாமகவின் பொது சிவில் சட்ட எதிர்ப்பு நிலைப்பாட்டை மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்  தெளிவு படுத்தியுள்ளார்கள்.

திங்கள், செப்டம்பர் 05, 2016

திருட்டுப் பிள்ளையாரும் வன்னியர் வரலாறும்: வியக்க வைக்கும் பின்னணி!

வீட்டிலோ, கோவிலிலோ பிள்ளையாரை வைத்து வழிபட விரும்புகிறவர்கள் - அதனை வேறொரு இடத்திலிருந்து திருடிக் கொண்டுவர வேண்டும் என்பது மக்களின் விநோதமான நம்பிக்கை. ஆனால், இந்த நம்பிக்கைக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. அதில் வன்னியர்களின் வீர வரலாறும் இணைத்திருக்கிறது. வியப்பாக இருந்தாலும் இது உண்மை.

திருட்டுப் பிள்ளையார்

"புதிதாகப் பிள்ளையார் கோயில் கட்டி மூர்த்திப் பிரதிஷ்டை செய்வதில் வேடிக்கையாக ஒரு உலக வழக்கு இருக்கிறது. அதாவது புதிதாகப் பிள்ளையார் விக்கிரஹம் அடிக்கக் கொடுக்காமல், ஏற்கனவே ஒரு கோயிலில் இருக்கிற பிள்ளையாரைத் திருடிக் கொண்டு வந்துதான் புதுக்கோயில் வைக்கவேண்டும் என்பார்கள்" - என்று சொல்கிறார் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராசாரியார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான "கிரீடம்" படத்தில் பிள்ளையாரை திருடுவது ஒரு முதன்மையான காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும்.

பிள்ளையார் திருட்டும் தமிழ் மன்னர்களின் போரும்

பிள்ளையார் சிலையை திருடுவதின் பின்னணியில் உள்ள வரலாற்று நிகழ்வு, சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த பெரும் போராகும். கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' நாவலும், எம்ஜிஆர் நடித்த 'காஞ்சித் தலைவன்' திரைப்படமும் இந்த போரின் கதைதான்.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

மக்கள் எல்லோரையும் போர்க்குணம் மிக்கவர்களாக மாற்றியதன் பலனாக, பெரும் படைத் திரட்டி புலிகேசி மீது போர்த்தொடுத்தான் நரசிம்மவர்மன். கி.பி.642 ஆம் ஆண்டில் பல்லவப் பெரும்படையால் புலிகேசியின் 'பாதாமி நகர்' தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் 'வாதாபி'). 

ஒரு மன்னன் எதிரி நாட்டை வெற்றி கொள்ளும் போது, அவனது தலைநகரை அழித்து, கோட்டைகளை இடித்து, ஊரை எரிப்பது வழக்கமாகும். அவ்வாறு, பாதாமி நகரை அழித்து நிர்மூலமாக்கும் நிகழ்வை "வாதாபி சூரனின் இரத்தினாபுரி நகரை அழிப்பதாக" வன்னிய புராணம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.
திருச்செங்காட்டன் குடி உத்திராபதீஸ்வரர் கோவில்
புலிகேசியின் பாதாமி நகரைத் தாக்கி அழித்து அதன் நினைவாகக் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவர்தான் பிள்ளையார். நரசிம்மவர்மனின் படைக்கு தலைமையேற்று சென்ற பரஞ்சோதி, பாதாமி நகரில் இருந்த பிள்ளையார் சிலையை கொண்டுவந்து, அவரது சொந்த ஊரான திருச்செங்காட்டன் குடியில் வைத்தார்.

பல்லவர்களின் படைத்தளபதியாக இருந்த பரஞ்சோதிதான் பிற்காலத்தில் சைவ சமயத்தின் "சிறுத்தொண்ட நாயனார்" ஆக மாறினார். சிறுத்தொண்டர் தான் பிள்ளையாரை கொண்டுவந்தார் என்பதை -

"பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட் டாக 
கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே"

- என்று திருஞ்சானசம்பந்தர் பாடுகிறார்.

வாதாபியில் - கணபதி இல்லாத கோவில்

தமிழ்நாட்டில் இப்போதும் பிள்ளையாரை வாதாபி கணபதி என்று அழைக்கிறார்கள். முத்துச்சாமி தீட்சிதர் "வாதாபி கணபதிம் பஜே" என்கிற புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலாகவும் இதனை அமைத்துள்ளார்.

இவ்வாறாக, வாதாபி கணபதி என்றும், திருட்டுப்பிள்ளையார் என்பதாகவும் சுமார் 1400 ஆண்டுகளாக, நரசிம்மவர்மன் வெற்றி பெற்றதன் தாக்கம் இன்னமும் தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
திருச்செங்காட்டன் குடியில் வாதாபி கணபதி சிலை

திருவாரூர் அருகே திருசெங்காட்டன்குடியில் இப்போதும் வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட அதே சிலை உள்ளது. 
பாதாமியில் சிலை இல்லாமல் இருக்கும் கணபதி கோவில்.

ஆனால், உண்மையான வாதாபியில் உள்ள கணபதி கோவிலில் இப்போது கணபதி சிலை இல்லை. பாதாமி நகரில் எந்தக் கோவிலில் இருந்து சிலையை எடுத்தார்களோ - அதே கோவில் இப்போதும் சிலை இல்லாத கோவிலாகவே இருக்கிறது. (அக்கோவில் இப்போது கீழ் சிவாலயம் -Lower Shivalaya- என்று அழைக்கப்படுகிறது)

தொடரும் பாரத மரபு

பல்லவ மன்னர்கள் உருவாக்கிய பாரதம் படிக்கும் பழக்கத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாடெங்கும் திரௌபதி அம்மன் கோவில்கள் ஏற்பட்டன. கூத்துக் கலை உருவானது. கூத்தாண்டவர் வழிபாடு வந்தது. கோவில் திருவிழாக்களில் இப்போதும் நடக்கும், பாரதம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

தமிழ் மன்னர்களின் போர்களின் தொகுப்பாக உள்ள வன்னிய புராணம், சாளுக்கிய மன்னன் புலிகேசியை வாதாபி சூரனாக சித்தரித்து, அவனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட கதையாக பரவியிருந்தது. இப்போதும் பல ஊர்களில் வன்னிய புராணம் நாடகமாக நடத்தப்படுகிறது. வீரவன்னிய ராஜனின் கோவில்களும் உள்ளன.

தமிழர் வீரத்தின் அடையாளம்

கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் விநாயகர் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் அப்படி ஒருவர் குறிக்கப்படவில்லை.
சிலை இல்லாமல் இருக்கும் கணபதி கோவிலின் பின்னணியில் பாதாமி நகரம்

தமிழகத்தின் பிள்ளையார் வழிபாடு என்பது வட இந்திய பழக்கம் இல்லை. மாறாக, வட இந்திய மன்னர்களை தமிழ் மன்னர்கள் வெற்றி கொண்டதன் அடையாளம். அது இந்துக்களின் வீரத்தையோ இந்தியர்களின் வீரத்தையோ கொண்டாடுவது அல்ல. மாறாக, தமிழர்களின் வீர அடையாளம் ஆகும்

இதனை இந்து மதவெறிக் கருத்தாகவோ, மாற்று மதத்தினருக்கு எதிரான பிரச்சாரமாகவோ மாற்ற அனுமதிப்பது - தமிழர்களின் வீரத்துக்கும் மானத்திற்கும் இழுக்காகும்.

சனி, ஆகஸ்ட் 20, 2016

சாதியும் பிவி சிந்துவும்: ஒலிம்பிக்கால் இந்தியர்களின் போலி வேடம் ஒழிந்தது!

ஒலிம்பிக் போட்டியில் பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்ற அதே காலக்கட்டத்தில், கூகுள் தேடுதளத்தில் - சிந்துவின் சாதி என்ன? - என்று லட்சக்கணக்கான மக்கள் தேடியுள்ளனர்.

தெலுங்கானா, ஆந்திரத்தில் இருந்து மிக அதிகமானோரும், அகில இந்தியாவில் இருந்து பெருமளவினரும், வளைகுடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து கணிசமானவர்களும் - சிந்துவின் சாதி என்ன? (PV Sindhu caste) - என்று கூகுளில் தேடியுள்ளனர்.

அதாவது, பிவி சிந்துவின் சாதனை, அவரது வரலாறு என்பதை விட - அவர் என்ன சாதி என்பதில்தான் மிக அதிக இந்தியர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
படம்: சிந்துவின் சாதியை அதிகமானோர் தேடியுள்ளனர்.
படம்: ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தியா முழுவதும் சிந்துவின் சாதியை அதிகமானோர் தேடியுள்ளனர்.

சாதியை தேடியதில் தவறேதும் இல்லை

பெருமளவு இந்தியர்கள் சிந்துவின் சாதியைத் தேடியதில் தவறேதும் இல்லை. ஆனால், இந்த உண்மையை மறைத்து, தமக்கு சாதி உணர்வே இல்லை என்று இவர்கள் போலிவேடம் பூணுவதுதான் தவறாகும்.

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தினர் - சிந்து தங்களது மாநிலத்தின் குழந்தை என கொண்டாடி வருகின்றனர். பிறப்பால் ஆந்திர மாநிலத்தவராகவும் வளர்ப்பால் தெலுங்கானா மாநிலத்தவராகவும் உள்ள பிவி சிந்துவை இந்த மாநிலங்கள் கொண்டாடுகின்றன. இதனால் - மற்ற மாநிலங்கள் அவரைக் கொண்டாடவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

அதே போல - சிந்து ஒரு குறிப்பிட்ட சாதி என்பதற்காக, அந்த சாதியினர் கொண்டாடினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? அதற்காக மற்ற சாதியினர் அந்தச் சாதனையை மறுக்க வேண்டுமா?

தலித் ஒருவர் எதற்காக பாதிக்கப்பட்டாலும் - அது தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் என்று கொந்தளிப்பதும், அதுவே குற்றம் செய்தவர் தலித்தாக இருந்தால், அவர் குற்றவாளியே இல்லை, தலித் குற்றமே செய்யவே மாட்டார் என்று பொங்கி வழிவதும் - வாடிக்கையாக உள்ள நாடுதான் இது.

எனவே, சாதனை படைக்கும் நபரின் சாதியை தேடுவதில் குற்றம் எதுவும் இல்லை.

படம்: சிந்துவின் சாதியை அதிகமானோர் தேடியுள்ளனர்.

சாதி இல்லை என்போர் சாதி வெறியர்கள்

ஏக இந்தியாவும், இந்தியாவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களும் சாதி உணர்வில்தான் ஊறியுள்ளனர் என்பதை "சிந்துவின் சாதி என்ன?" - என்கிற கூகுள் தேடல் மெய்ப்பித்துள்ளது.

சாதி இருக்கிறது என்பதையும், எதிர்காலத்திலும் சாதி இருக்கும் என்பதையும் நேர்மையாக ஒப்புக்கொண்டு - சாதியால் ஏற்படும் கேடுகளை ஒழிக்கவும், சாதிகளுக்கு இடையே சமத்துவத்துக்காகவும் போராடுகிறவர்கள் தான் நேர்மையானவர்கள்.

சாதி இல்லை என்றும், சாதியை எதிர்க்கிறேன் என்றும் பேசுகிற எல்லோருமே போலி வேடம் போடும் சாதி வெறியர்கள் தான். குறிப்பாக, திராவிடம், கம்யூனிசம், போலித் தமிழ்த்தேசிய கும்பல்கள் அனைத்தும் தமக்குள் சாதி வெறியுடன் தான் அலைந்து கொண்டிருக்கிறனர்.

எனவே, "அய்யோ, அதிகமான இந்தியர்கள் சிந்துவின் சாதியை தேடுகிறார்களே! இது வெட்கக் கேடு இல்லையா?" - என்று ஊடகங்கள் போலி வேடம் போடுவது தேவையில்லாதது!

படம்: வளைகுடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சிந்துவின் சாதியை கணிசமானோர் தேடியுள்ளனர்.

வேறுபாடு இயற்கையானது

மனிதரில் பன்முகத்தன்மை என்பது இயல்பானது. மதம் இருக்கிறது. இனம் இருக்கிறது. தேசியம் இருக்கிறது. அதுபோல சாதியும் இருக்கவே செய்யும். எப்படி மதம், இனம், தேசியத்தை எல்லாம் ஒழிக்க முடியாதோ, அதே போன்று சாதியையும் ஒழிக்க முடியாது.

மதம், இனம், தேசியம், சாதியைக் கடந்து - சமத்துவம், ஜனநாயகம், மனித உரிமைகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். கிடைக்க வேண்டும். அதற்காக பாடுபடுவோம்.

புதன், ஆகஸ்ட் 17, 2016

முஸ்லிம் நாட்டில் ஜல்லிக்கட்டு - எதிர்க்கும் இந்தியா: நீங்கள் அறியாத தகவல்கள்!

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் 'ஜல்லிக்கட்டு' கோலாகலமாக நடத்தப்படுகிறது. ஆனால், இந்துக்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் அதே 'ஜல்லிக்கட்டு' தடை செய்யப்பட்டுள்ளது. உங்களால் நம்ப முடியாமல் போனாலும் இது முற்றிலும் உண்மை
கரப்பான் சாப்பி போட்டி
ஜல்லிக்கட்டு: தமிழ்நாட்டிலும் இந்தோனேசியாவிலும்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையும், அதன் ஒரு அங்கமான ஜல்லிக்கட்டு நிகழ்வும் - வேளாண்மை மற்றும் கால்நடை வளத்தை போற்றும் வகையில் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டுக்கு இணையாக இந்தோனேசியாவில் 'கரப்பான் சாப்பி' எனும் திருவிழா நடத்தப்படுகிறது. (கரப்பான் சாப்பி - Karapan Sapi - எனும் இந்தோனேசிய வார்த்தையின் பொருள் "மாடு விரட்டுதல்" என்பதாகும்).

இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள தீவு "மதுரா". நெல் விளைவிப்பது முதன்மை விவசாயமாக உள்ள இத்தீவில், நெற்பயிர் அறுவடை முடியும் போது, அதனை கொண்டாடும் வகையில் கரப்பான் சாப்பி போட்டி நடத்தப்படுகிறது.
கரப்பான் சாப்பி போட்டி
கரப்பான் சாப்பி போட்டியின் போது, மாடுகள் இரண்டு இரண்டாக - மரக்கம்பினால் ஆன ஒரு இணைப்பில் பிணைக்கப்படுகின்றன. அதனை இயக்கும் போட்டியாளர் ஒருவர் அந்த கம்பின் மீது நின்றுகொண்டு மாடுகளை விரட்டுகிறார். சுமார் நூறு மீட்டர் தூரத்தை விரைவாக இந்த மாடுகள் ஓடி கடக்க வேண்டும் என்பதுதான் போட்டியாகும்.

ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்படும் போட்டிகளில் முன்னணியில் வரும் மாடுகள், அடுத்தக்கட்ட போட்டிக்கு செல்கின்றன. இறுதிப்போட்டியில் சுமார் நூறு அணி மாடுகள் பங்கேற்கின்றன. இதில் வெற்றி பெரும் மாட்டுக்கு, ஜனாதிபதி கோப்பை எனும் விருதும், பெரும் பணமும் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.

கரப்பான் சாப்பி: ஒரு மாபெரும் கொண்டாட்டம்

மாடுகள் ஓடுவது மட்டுமல்ல திருவிழா. ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என பல நிகழ்ச்சிகள் இதனுடன் இணைந்துள்ளன. ஓட்டப்போட்டிக்கு முன்பாக, பெண்களின் நடனத்துடன் அலங்கரிக்கப்பட்ட மாடுகளின் அணி வகுப்பு நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெரும் மாடும் அதனை ஓட்டியவரும் உள்ளூரில் கதாநாயகர்களாக கொண்டாடப்படுகின்றனர்.
கொண்டாட்டம்
"மாடு விரட்டுதல்" விழாவுக்கு என பிரத்தியோகமாக மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு தனி உணவு முறைகளும் பராமரிப்பு முறைகளும் உள்ளன. தினமும் எண்பது முட்டைகளைக் கொண்டு சத்துணவுகள் தயாரித்து அளிக்கின்றனர். போட்டியில் ஓடும் முன்பு உள்ளூர் மதுபான வகைகளை மாடுகளுக்கு கொடுக்கின்றனர்.

இந்தோனேசிய ஜல்லிக்கட்டின் வரலாறு

இந்தோனேசியாவில் கரப்பான் சாப்பி எனும் ஜல்லிக்கட்டு சுமார் 800 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. கடந்தூர் இளவரசன் என்பவன் மதுரா தீவில் நெற்பயிர் விவசாயத்தை உருவாக்க முயன்றதாகவும், அதற்காக - காடாக கிடந்த நிலைத்தை உழுது வயலாக்கும் நோக்கில் - கரப்பான் சாப்பி திருவிழாவை உருவாக்கியதாகவும் உள்ளூர் கதையில் கூறுகிறார்கள்.

இந்தோனேசியா - தமிழகத் தொடர்பு

ஜல்லிக்கட்டிற்கும், கரப்பான் சாப்பி போட்டிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த இயலாது. ஆனால், தமிழ்நாட்டில் தனித்தனி மாடுகள் ஓடுகின்றன. இந்தோனேசியாவில் ஜோடி ஜோடியாக ஓடுகின்றன. தமிழ்நாட்டில் மாட்டை பிடிப்பது போட்டி. இந்தோனேசியாவில் மாட்டை வேகமாக ஓட்டுவது போட்டி. இதைத்தவிர - ஜல்லிக்கட்டிற்கும், கரப்பான் சாப்பிக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
சுரபயா விமான நிலையத்தில் உள்ள கரப்பான் சாப்பி விளம்பரத்துடன் நான்
அறுவடைத் திருவிழா, மாடுகள் அலங்கரிப்பு, போட்டியின் தொலைவு, மக்களின் மைதான அலங்கரிப்பு, மக்களின் கொண்டாட்டம், வெற்றிபெற்றவர்களின் பெருமிதம் - என எல்லாமும், தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டைப் போன்றே, இந்தோனேசியாவின் மதுராவிலும் நடக்கிறது.

இந்தோனேசியாவுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தமிழர்கள். ஒரு முஸ்லிம் நாடாக இந்தோனேசியா இருப்பதற்கும் தமிழக முஸ்லிம்களே காரணம். சோழ மண்டல கடற்கரையில் இருந்து, சோழ மன்னர்களின் ஆதரவுடன் கிழக்காசியாவில் வர்த்தகம் செய்த மரைக்காயர்களே - இந்தோனேசியாவை முஸ்லிம் நாடாக மாற்றினர் என்பது வரலாறு.

ஏராளமான தமிழ் ஊர்ப்பெயர்களும், தமிழ்க் கல்வெட்டுகளும் நிறைந்திருக்கும் இந்தோனேசியாவுக்கு - ஜல்லிக்கட்டும் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கலாம்.

அரசாங்கம் செய்வது என்ன?

இந்தோனேசிய அரசங்கம் 'கரப்பான் சாப்பி மாடு விரட்டுதல்' திருவிழாவைக் கொண்டாடுகிறது. வெற்றி பெரும் அணிக்கு, அரசின் சார்பில் ஜனாதிபதி கோப்பையை வழங்குகிறார்கள்.
சுரபயா நகர பிரதான சாலையில் உள்ள சிலை
இந்தோனேசிய நகரங்களில் கரப்பான் சாப்பிக்கு சிலைகளை வைத்துள்ளனர். இந்தோனேசிய சுற்றுலா விளம்பரங்களில், கரப்பான் சாப்பியை முக்கிய திருவிழாவாக கோண்டாடுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு ஜல்லிக்கட்டை கொண்டாடும் போது - இந்தியாவை ஆளும் இந்துக்கள் கட்சி ஜல்லிக்கட்டை எதிர்க்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016

இஸ்லாம் கட்டற்ற காதலை அனுமதிக்கிறதா? - மமக ஜவாஹிருல்லா பதில் சொல்ல வேண்டும்!

மருத்துவர் அய்யா அவர்கள் மட்டும்தான் சாதி ஒழிப்பு நாடகக் காதலை எதிர்ப்பது போலவும் - அதேநேரத்தில், இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் ஏதோ மதம் கடந்த காதலை விழுந்து விழுந்து ஆதரிப்பது போலவும் ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்த, மமகவின் ஜவாஹிருல்லாவும், விசிகவின் ஆளூர் ஷாநவாசும் நாடகம் ஆடுகின்றனர்.

எனவே, கட்டற்ற காதல் என்கிற பெயரில் - முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களை திருமணம் செய்வதை இஸ்லாம் ஏற்கிறதா? என்கிற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

மமக ஜவாஹிருல்லாவின் காதல் ஆதரவு

தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளைப் படிக்க விடாமல், காமக்கொடூரர்கள் காதல் நாடகம் ஆடி, வாழ்க்கையையும் குடும்பங்களையும் சீரழிக்கும் ஆபத்து அதிகரித்துவரும் நிலையில் - 'எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல' நாடகக் காதல் கும்பலுக்கு ஆதரவாக, தி இந்து பத்திரிகையில் கருத்து கூறியுள்ளார் மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா.

"ஆணும் பெண்ணும் சாதி கடந்து, மதம் கடந்து காதலிப்பது இயற்கை, பொதுவாக நடப்பதுதான். இது எல்லா சமூகங்களிலும் நடக்கிறது" என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். (“It is common for young men and women to fall in love beyond caste and religion. The fact is that it is happening in all sections of society. - MMK leader M.H. Jawahirullah, The Hindu 16.8.2016)

நாட்டில் நடக்கிறது என்பதற்காகவே எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் நடக்கின்றன என்பதாலேயே, அவையெல்லாம் நியாயம்தான் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?

மற்றவர்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். முஸ்லிம் பெண்களோ, ஆண்களோ - முஸ்லிம் அல்லாத பிரிவினரை மதம் கடந்து திருமணம் செய்வதை ஜவாஹிருல்லா ஆதரிக்கிறாரா? ஜவாஹிருல்லா சார்ந்துள்ள மனித நேய மக்கள் கட்சியும் முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் - மதம் கடந்த திருமணங்களை ஆதரிக்கின்றனவா?

தலித் சமூகத்தவரையோ, தலித் அல்லாத பிற சாதி இந்துக்களையோ - இஸ்லாமிய பெண்கள் அல்லது ஆண்கள் காதலித்து திருமணம் செய்வதை, முன்நிபந்தனை ஏதுமின்றி, ஜவாஹிருல்லா ஆதரிக்கிறாரா?

(நாட்டில் இதெல்லாம் நடக்கிறது என்று சொல்லி மழுப்பாமல் - இதனை அவர் ஏற்கிறாரா? இல்லையா? என்பதைக் கூற வேண்டும்)

மதம் கடந்த திருமணத்தை இஸ்லாம் ஏற்கவில்லை

இஸ்லாமியர்கள் திருக்குர்ஆனை பின்பற்றுகிறர்கள். உலகில் எந்த இடத்திலும் இஸ்லாமிய சட்டங்கள் 'மதம் கடந்த' திருமணத்தை அனுமதிப்பது இல்லை. 

இஸ்லாமிய விதிகளின் படி, முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் பெண்களையும், கிறிஸ்தவ, யூத பெண்களையும் திருமணம் செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் ஆண்களை மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
திருக்குர்ஆன்

"இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.'' (திருக்குர்ஆன், அத்தியாயம் 2 - அல்பகறா, 221)

- இஸ்லாமிய விதிகளின் படி, முஸ்லிம் பெண்கள் இந்து ஆண்களை திருமணம் செய்துகொள்ள முடியாது. இஸ்லாம் காட்டும் வழி இதுதான். 

இதனை ஜவாஹிருல்லா ஏற்கிறாரா? இல்லையா? இதனை மனிதநேய மக்கள் கட்சி ஏற்கிறதா? இல்லையா? இதனை முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்கிறதா? இல்லையா?

பதில் சொல்லிவிட்டு, பாமகவை குற்றம் சாட்டுங்கள்.