Pages

புதன், ஆகஸ்ட் 28, 2013

மகளின் வாழ்வில் தலையிடும் உரிமை சேரனுக்கு இல்லை - சேவ் தமிழ்சு இயக்கத்தின் பயங்கர புரட்சி!

சேரன் மகள் தாமினி காதலர் சந்துருவை விட்டுப் பிரிந்து, தனது தந்தையுடன் சென்றது மாபெரும் அநீதி, அநியாயம், கொடுமை என்கிற வகையில் பொங்கி எழுந்துள்ளது சேவ் தமிழ்சு இயக்கம்.

'சந்துரு - தாமினி காதலை பிரித்ததன் மூலம் சேரன் தனது மகளுக்கு தீங்கு செய்துவிட்டார். ஒருவேளை சந்துருவும் தாமினியும் திருமணம் செய்து பின்னர் பிரிந்து வந்தால் அவரை சேரன் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்போதே பிரித்தது அநியாயம்' என்கிறது சேவ் தமிழ்சு இயக்கம்..

சந்துரு - தாமினி காதல் போன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் ஒருத‌லைப‌ட்ச‌மாக‌வே செய‌ல்ப‌ட்டு வருகின்றன. பத்திரிகைகளும் சேரனுக்கு ஆதரவாகவே நடந்தன - என்றெல்லாம் புரட்சிகரமாக வாதிடுகிறது சேவ் தமிழ்சு இயக்கம்.

சேவ் தமிழ்சு இயக்கத்தின் புரட்சி
  • "சந்துருவுடன் தான் வாழப் போகிறேன் என்று தாமினி முடிவெடுத்தால், அப்பாவே ஆனாலும் அதில் தலையிட சேரனுக்கு உரிமை இல்லை"
  • தாமினியின் தேர்வு தோல்வியடையலாம். ஒருவேளை தாமினி சந்துருவை தேர்வுசெய்தது தவறாகவே இருந்தாலும், "நான் தான் அப்போதே சொன்னேனே" என்று ஒதுக்காமல் தாமினியை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சேரனுக்கு வந்தால் போதும்" 
  • சேரன் தன் மகளின் காதலை நீதிமன்றம் துணைகொண்டே பிரித்துவைத்துவிட்டார்... இதைவிட ஒரு தந்தையாக அவர் தன் மகளுக்கு ஒரு தீங்கை செய்ய முடியாது"
  • நீதிம‌ன்ற‌ங்க‌ளும் இது போன்ற‌ வ‌ழ‌க்குக‌ளில் ஒருத‌லைப‌ட்ச‌மாக‌வே செய‌ல்ப‌ட்டு வ‌ருவ‌து நீதி அதிகார‌த்திற்கு ஆத‌ர‌வாக‌ சாய்ந்து விட்ட‌ பிம்ப‌த்தையே ஏற்ப‌டுத்துகின்ற‌து."
  • ஊட‌க‌ங்க‌ளின் ந‌டுநிலைமை, அற‌ம் போன்ற‌வையும் இங்கே கேள்விக்குள்ளாக்க‌ப்ப‌ட‌ வேண்டும், ஒரு ம‌ணி நேர‌ம் சேர‌னின் த‌ர‌ப்பை ம‌ட்டுமே ஓளிப‌ர‌ப்பும் இவ‌ர்க‌ளுக்கு, ச‌ந்துருவின் த‌ர‌ப்பை ஒளிப‌ர‌ப்ப‌ ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் ம‌ட்டுமே கிடைக்கின்ற‌து"
சேவ் தமிழ்சு இயக்கத்தின் பயங்கர புரட்சி கட்டுரை கீழே:

திரைப்பட இயக்குநர் சேரனுக்கு ஒரு மனந்திறந்த மடல் 
- சேவ் தமிழ்சு இயக்கம்

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சமூக அக்கறையுள்ள கதையைப் படைத்து முற்போக்கு சிந்தனையை சமூகத்தில் வளரத்தெடுக்க முற்படுபவரும், சாதி மதத்தை விட உயர்வானது மனிதனின் உன்னத உணர்வு காதல் என்று காதலின் மேன்மையை தன் ஒவ்வொரு படைப்பிலும் வடித்து இயக்கி நடித்து தமிழ்ச் சமூகத்தில் நீங்கா இடம்பிடித்துள்ள இயக்குநர், நடிகர் சேரனுக்கு கனத்த மனதுடன் எழுதும் மடல் இது...
அன்பு இயக்குநர் சேரன் அவர்களே,

நீங்கள் உங்கள் இளைய மகள் தாமினி மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் தமிழ்நாட்டில் இன்று பல பெண் குழந்தைகளுக்கு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை... அவ்வளவு பாசத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டீர்கள்... உங்கள் குடும்பப் பிரச்சனை, தாமினி-சந்துரு காதல் விவகாரம் இப்படி ஒரு ஊடக முதன்மை செய்தியாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, நீங்களும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.

நீங்கள் உங்களுடைய முதல் படத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும், ஆதிக்க சாதி இளம்பெண்ணிற்குமான காதலையும், சமூகத்தில் அதன் தாக்கத்தையும் கதைக்களம் ஆக்கினீர்கள்... "காதல் காதல் காதல், காதல் போயின் சாதல்" என்று பாடிய பெருங்கவிஞரின் கவிக்காதலியை இணைத்து அந்த படத்திற்கு "பாரதி கண்ணம்மா" என்று சூட்டி படைத்தீர்கள்... நாங்கள் காதலின் பின்னால் உள்ள சமூகப் பிரச்சனையைப் புரிந்துகொண்டோம்... கண்டிப்பாக நீங்கள் சாதியினால் காதலை எதிப்பவர் அல்ல...

அதன்பின் "பொற்காலம்" படத்தில் கிராமத்தில் இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலித்தால் அந்த இரு குடும்பத்தில் எத்தகைய பிரச்சனைகள் வரும் என்பதை எங்களுக்கு உணர்த்தியதோடு இறுதியில் பிரச்சனையைத் தீர்க்க முடியாத அந்தக் கதாநாயகன் சமூகத்தின் மீது கொண்ட கோபத்தில், சமூகத்திற்கு பாடம் கற்பிக்க தன் காதலைத் துறந்து, ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணை மணமுடித்ததாகத் திரைக்கதை அமைத்துக் காதலைப் புனிதமாக்கினீர்கள். கண்ணீரோடு காதலையும், சமூகத்தையும் புரிந்து கொண்டு வெளியில் வந்தோம்... அவனுடைய தொழில் அவன் காதலுக்கு எதிரியாக நிற்கவில்லை, எனவே நீங்கள் தொழிலால் காதலுக்கு எதிரியில்லை...

"வெற்றிக்கொடிக்கட்டு", "பாண்டவர் பூமி" படங்களில் கிராமம் சார்ந்த நமதுத் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளான விவசாயத்தை விட்டு நகரம் நோக்கி குடும்பம் குடும்பமாக மக்கள் நகர்வதையும், கிராமத்தில் தொழில் வளர்ச்சி இல்லாததால் வெளிநாடு செல்ல வேண்டும் என்று துடித்து ஏமாறும் சம்பவங்களையும் வைத்து படமாக எடுத்தீர்கள்... ஆனால் இவ்விரு படங்களிலுமே, சாதியை இன்னமும் வாழவைக்கும்-சுயசாதிக்குள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படும் அகமணமுறையை எதிர்த்து காதல் திருமணம் செய்துவைக்க நீங்கள் தவறவில்லை... சில பிற்போக்குவாதிகள் போல, கிராம-நகர பொருளியல் வாழ்க்கை மாற்றம் சமூக-பண்பாட்டு ஒழுங்கை சீர்குலைக்கிறது என்றும், காதல் ஏதோ மேலைநாட்டு இறக்குமதி போலவும் காதல் திருமணங்கள் சமூகத்திற்கு இழுக்கு என்றும் ஒருபோதும் நீங்கள் சொல்லவில்லை...

உங்களை மிக உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் "ஆட்டோகிராப்ஃ", ஏன் என்று நாம் சொல்லி உங்களுக்குத் தெரியத்தேவையில்லை... சிறுவயதில் துய்க்கும் அறியா காதல், பதின்ம வயதில் வரும் இளமைக் காதல், பின்னர் வரும் நட்பு கலந்த காதல்... கிட்டத்தட்ட இதில் வரும் ஒரு காட்சியேனும் கடந்து வராதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள், சாதி மதம், மொழி, இனத்தையும் கடந்து வந்த காதலும், காதல் தோல்வியுற்றதும் கதாநாயகன் செந்தில் படும் வேதனைகளும், அவன் செல்லும் தவறான வழிகளும் எங்கள் மனதையெல்லாம் கனமடையச் செய்துவிட்டது... கதாநாயகன் செந்தில் இறுதியில் வேறொரு பெண்ணை மணந்தது யதார்த்தம் என்று எங்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை, சமூகத்தில்-பெற்றோரிடத்தில் இருக்கும் காதலுக்கெதிரான இறுக்கமான மனநிலையே இதன் காரணம் என்று புரிந்தது...

அது புரிந்துதானோ என்னவோ, உங்களின் அடுத்த படைப்பான "தவமாய் தவமிருந்து" படத்தில் பதின்ம வயதில் வந்த காதலை அத்தோடு முடித்துக்கொள்ளாமல் அதற்கு அடுத்த பருவத்தில் கதாநாயகனோடு அவரின் கல்லூரிக் காதலியோடு அவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சேர்த்துவைத்தீர்கள்... அந்த கதாநாயகன் பதின்ம வயதில் கல்லூரியில் படிக்கும் போது புகைப்பிடிப்பான், மது அருந்துவான், காதலியோடு கலவி கூட செய்வான். அதனால் அவனைத் தவறானவன், காமுகன் என்று சொன்னீர்களா? இணை ஏற்பு நடந்தபின் இருவரும் வெறும் காதலர்களாக இல்லாமல் குடும்பத் தலைவியாக, தலைவனாக மாறும்போது எப்படி பொறுப்போடு வாழ்ந்தார்கள், உழைத்து முன்னேறினார்கள், பெற்றோர்களை-சமூகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தார்கள் என்பதில் தானே உள்ளது அந்த காதலின் வெற்றி இருந்தது, அதைத்தானே உங்கள் படைப்பு சொல்லிற்று... அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையைத் துவக்க பொருளாதாரமோ, வேலையோ, சமூகத்தின் பார்வையில் உள்ள கெட்டப்பழக்கவழக்கங்களோ தடையாக இல்லையே?
சேவ் தமிழ்சு இயக்கம்
உங்கள் படைப்பிற்கு ஒரு நியாயம், உங்கள் சுய வாழ்க்கைக்கு ஒரு நியாயமா? உங்கள் திரைப்படைப்பில் அந்தக் காதலியின் பெற்றோர் அவளைத் துரத்திச் சென்று வாழ விடாமல், காதலை நிரூபிக்கவிடாமல் தடுக்கவில்லை, ஆனால் காதலிக்கும் உங்கள் மகள் தாமினிக்கு ஒரு பெற்றோராய் நீங்கள் செய்து வருவது என்ன?

உங்கள் மகளின் காதலனான சந்துருவின் மீது நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன? பல பெண்களோடு தொடர்புடையவன் (womanizer), (இரு ஆண்டுகள் நேரம் கொடுத்தும்) நிலையான(?) வேலை எதுவும் தேடாமல் பொருளாதாரத்தில் தற்சார்பு நிலை பெறாதவன்... மொத்தத்தில் பணம் பறிக்கும் நோக்கோடு காதல் புரிபவன்...

பெருமதிப்பிற்குரிய திரு.சேரன் அவர்களே, உங்கள் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் போது, உங்கள் நண்பர், இயக்குநர் அமீர் சொல்வதுபோல நிரூபிக்கும் அளவிற்கு ஆதாரங்கள் இருக்கும்போது இந்த விடயம் ஊடகத்திற்கு வருமுன்னே தண்டனைச் சட்டத்தில் அவரை காவல் நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ இழுத்து அவருக்கு தண்டனையை வாங்கிக்கொடுக்க முயற்சிக்கவே இல்லையா? நியாயமும் பணமும் அதிகாரமும் இருக்கிற உங்களுக்கு ஏன் தண்டனையை வாங்கிக்கொடுக்க முடியவில்லை? ஊடகத்தில் அவரின், சாதாரண எளிய பின்புலம் கொண்ட சந்துருவின் குடும்பத்தினரின் பெயரைக் களங்கம் ஏற்படுத்தும்படி பேசக் காரணம் என்ன? நீங்கள் பேசுவதை மக்கள் நம்பி உங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பதாலா? நீங்கள் எவ்வளவு எடுத்துக்கூறியும் சந்துருவோடுதான் வாழ விரும்புகிறேன் என்று சொல்லும் தாமினியின் மனதைக் கலைப்பதற்காகவா?

குற்றச்சாட்டு இருந்தால் காவல்நிலையத்தில், நீதிமன்றத்தில் முதலில் முறையிடாமல் ஊடகத்தின் முன்பு சந்துருவையும் அவரது குடும்பத்தாரையும் பற்றி ஏதோ தமிழ்நாட்டின் பெரிய தீயசக்தி(இயக்குநர் அமீர் ஒருபடி மேலே சென்று அரசின் உளவுத்துறை அவரைப்பற்றி விசாரிக்க ஊடகங்களில் சொல்லியிருக்கிறார்... நீங்கள் எழுதிய இந்தத் திரைக்கதையில் நகைச்சுவை பகுதி அதுதான், ஒருவேளை அவர்மேல் குற்றம் நிரூபிக்க உங்களால் முடியவில்லை என்றால் இதே ஊடகங்களைக் கூட்டி மன்னிப்புக் கேட்பீர்களா?) போல பட்டியலிடுவது சந்துரு உங்களைப் போன்று பெரிய இடம் இல்லை அதனால் குடும்பத்தோடு பயந்து ஓடிவிடுவார், தன் பலத்தை மீறி இருவரும் வாழ முடியாது என்று காட்டவா?

உங்களைக் குற்றவாளி என்று சொல்லவில்லை... உங்கள் அன்பு மகள் தாமினிக்கு அவளின் வாழ்க்கை நலமுடன் இருக்க நீங்கள் அறிவுரைகள் கூற முழு உரிமையும் உண்டு... ஆனால் முடிவாக சந்துருவுடன் தான் வாழப் போகிறேன் என்றால் அது தனிமனிதனாக அவரின் சுய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, அதில் தலையிட அப்பாவே ஆனாலும் நீங்கள் தலையிடுவது சரியன்று... நீங்கள் சொல்வது போல இது திரைப்படம் அல்ல, நீங்கள் வில்லனாக மாறி அவர்களைப் பிரித்துவைக்க... ஒருவேளை அவரின் தேர்வு நீங்கள் சொல்வது போலவே தவறாகவே இருந்தாலும், "நான் தான் அப்போதே சொன்னேனே" என்று ஒதுக்காமல் தன் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமூக சிந்தனை கொண்ட உங்களுக்கு வந்தால் போதும்... பெற்றோரின் ஏற்பாட்டுத் திருமணங்கள் தோல்வியில் முடிந்ததே இல்லையா? அவரின் தேர்வும் தோல்வியடையலாம்... அதனால் காதலே தோற்றது என்றாகாது என்பதும் உங்களுக்கே தெரியும்.

உங்கள் நண்பர்-சமூகப் போராளி-சமரசமற்ற படைப்பாளி அமீர் கூறுகிறார் "சமூக ஆர்வலர்கள் அவசரப்பட்டு தருமபுரியில் (பாமக இராமதாசின் சாதிவெறி அரசியலால்) மாண்ட இளவரசன் - அவரின் காதலி திவ்யா காதல் சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசிவிட வேண்டாம்" என்று... உண்மையில் இதைவைத்து அரசியல் செய்வது காதலை "நாடகக் காதல்" என்று சொல்லி பெண்களின் உரிமைக்கெதிராகவும், அதுவும் குறிப்பாக தலித் இளைஞர்கள் மேல் வருவது தவறு என்று மானுடத்திற்கு, தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக பேசிவரும் சாதி அரசியல் பிழைப்புவாதி இராமதாசு அவர்கள் தான்... இந்தப்போக்கு சமூக வளர்ச்சிக்கு, சமூக மாற்றத்திற்கு எதிராய் எதிர்த்திசையில் செயலாற்றுகிறது என்பது உங்களுக்கு ஒருவேளை இதுவரைப் புரியாமல் இருந்தால் இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்...

"உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தாமினி தனது செயல்களை அலசி ஆராய்ந்து, தான் செய்த தவறுகளை உணர்ந்ததுடன், சந்துரு பற்றிய உண்மைகளையும் புரிந்து கொண்டுள்ளார். இதனையடுத்து பெற்றோரான எங்களுடன் வருவதென்ற முடிவை அவர் சுயமாக எடுத்து, இன்று எங்களிடம் வந்து சேர்ந்துள்ளார். இது பெற்றோருக்கு கிடைத்த வெற்றி."

பத்து பதினைந்து நாட்கள் இடைவிடாத பாசப்போரட்டத்திற்கு(?) பின் உங்கள் மகளின் காதலை நீதிமன்றம் துணைகொண்டே பிரித்துவைத்துவிட்டீர்கள்... இதைவிட ஒரு தந்தையாக நீங்கள் உங்கள் மகளுக்கு ஒரு தீங்கை செய்ய முடியாது... நீதிம‌ன்ற‌ங்க‌ளும் இது போன்ற‌ வ‌ழ‌க்குக‌ளில் ஒருத‌லைப‌ட்ச‌மாக‌வே செய‌ல்ப‌ட்டு வ‌ருவ‌து நீதி அதிகார‌த்திற்கு ஆத‌ர‌வாக‌ சாய்ந்து விட்ட‌ பிம்ப‌த்தையே ஏற்ப‌டுத்துகின்ற‌து. அதே போல‌ ஊட‌க‌ங்க‌ளின் ந‌டுநிலைமை, அற‌ம் போன்ற‌வையும் இங்கே கேள்விக்குள்ளாக்க‌ப்ப‌ட‌ வேண்டும், ஒரு ம‌ணி நேர‌ம் சேர‌னின் த‌ர‌ப்பை ம‌ட்டுமே ஓளிப‌ர‌ப்பும் இவ‌ர்க‌ளுக்கு, ச‌ந்துருவின் த‌ர‌ப்பை ஒளிப‌ர‌ப்ப‌ ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் ம‌ட்டுமே கிடைக்கின்ற‌து ?????.

வினோத்
சேவ் தமிழ்சு இயக்கம்.

சேவ் தமிழ்சு இயக்கத்தின் பயங்கர புரட்சி கட்டுரையை இங்கே காண்க: திரைப்பட இயக்குநர் சேரனுக்கு ஒரு மனந்திறந்த மடல்
தொடர்புடைய சுட்டிகள்:

1. நாடகக் காதல்-பகுதி 2: சேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம்!

2. நாடகக் காதல் இருக்கிறது என்கிறார்கள் சேரனும் அமீரும்: உண்மைக் காதல் ஆதரவாளர்கள் எங்கே?

3. மகளின் காதலை சேரன் தடுக்கலாமா? முற்போக்கு வேடதாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்?

4. சேரன் மகள் காதலும் புதிய தலைமுறையும்: அதிமேதாவி மனுஷ்யப்புத்திரன் அரைவேக்காடு என நிரூபித்தார்!

5. சேரன்  மகள் தாமினி: காதல் திருமணங்களுக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும் 


6. ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்

செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

ஈழ இனப்படுகொலைக்கு நீதி: சென்னையில் நடந்த முன்முயற்சி கூட்டம்! ஒரு நம்பிக்கை அளிக்கும் தொடக்கம்

இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐநா உத்தரவிட வேண்டும். அத்தகைய ஒரு பன்னாட்டு விசாரணைக்கு இந்திய அரசு இனிமேலும் முட்டுக்கட்டைப் போடாத வகையில் தமிழ்நாடு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் ஒர் கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடந்தது.

"இலங்கை இனப்படுகொலை - போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை: அடுத்தது என்ன? கலந்துரையாடல்" எனும் இக்கூட்டத்தில் பங்கேற்றோர்:
எம்.ஜி.தேவசகாயம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி,
டாக்டர் செந்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,
டாக்டர் எழிலன் நாகநாதன்,
அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ்,
பேராசிரியர் டி.சுவாமிநாதன், ஐ.ஐ.டி சென்னை,
இர. அருள், பசுமைத் தாயகம்,
பாபு ஜெயக்குமார், பத்திரிகையாளர்,
சாம் ராஜப்பா, பத்திரிகையாளர்.,
கா. அய்யநாதன், நாம் தமிழர்,
வழக்கறிஞர் க. பாலு, பசுமைத் தாயகம்,
புகழேந்தி தங்கராஜ், திரைப்பட இயக்குநர்,
ஆர். மோகன், பத்திரிகையாளர்,
கே. ராஜாஸ்டாலின், உலகத்தமிழர் பதுகாப்பு இயக்கம்,
வி. பிரபாகரன், GTO (மாணவர் அமைப்பு),
வி. கனகராஜ், GTO (மாணவர் அமைப்பு),
கே. பெத்தனவேல், ஐ.ஐ.டி சென்னை (மாணவர் அமைப்பு),
எச். தினேஷ், (மாணவர் அமைப்பு)
கே. சதீஷ், (மாணவர் அமைப்பு)
அருடதந்தை அந்தோணிசாமி, வழக்கறிஞர்,
எம். நாகராஜன்,
அருண் 

- ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னணி:

அமெரிக்காவின் முன்முயற்சியால் 2013 மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22 ஆம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தில் "2013 செப்டம்பர் மாதம் நடக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்தில் வாய்வழியாக ஒரு தகவல் அறிக்கையையும், அடுத்த ஆண்டு 2014 மார்ச் மாதவாக்கில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 25 ஆம் கூட்டத்தில் முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை ஆகஸ்ட் 25 முதல் சுமார் ஒரு வாரகாலம் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.  ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், "ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்தில் வாய்வழியாக ஒரு தகவல் அறிக்கையை மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை அளிப்பார்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த 2014 ஆம் ஆண்டிலாவது ஐநா மனித உரிமைகள் அவையின் மூலமாக 'இலங்கை மீது பன்னாட்டு விசாரண நடத்தப்பட வேண்டும், அப்போது இந்தியா அதற்கு தடைப்போடக் கூடாது' என்கிற நோக்கில் தமிழ்நாட்டின் அமைப்புகள் முன்கூட்டியே வியூகம் அமைத்து செயல்பட வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

தொடர்புடைய சுட்டிகள்:

1. வரலாறு முக்கியம் அமைச்சரே! கலைஞரின் தந்திரம்: ஏற்கனவே ஐநா நிகழ்ச்சி நிரலில் உள்ளதை புதிய கோரிக்கையாக வைக்கும் விநோதம்!

2. ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!

3. ஜெனீவா ஐநா கூட்டத்தில் பசுமைத் தாயகம் பேச்சு: இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆணையம் - நேரடியாக வலியுறுத்தல்.

4. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

5. இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றம்: ஐநாவில் தொடரும் நீதிக்கான போராட்டம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

காதல் நாடக மோசடி: திருமாவளவன் மீது கோவை பெண் புகார்!

"கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சுந்தரத்தின் மகள் கவிதா. இவர், திருமணமாகி விவாகரத்து பெற்று தனியாக கணபதி பகுதியில் வசித்து வருகிறார். மேலும், எஸ்.டி.கே.எஸ் என்ற பெயரில் நர்சரி பள்ளி ஓன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கவிதா, கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் ஒன்றை அளித்தார்.

இது குறித்து கவிதா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் திருமாவளவனை சந்தித்தபோது எங்களுக்கு நட்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, என்னை திருமணம் செய்து கொளவதாக திருமாவளவன் கூறி ஏமாற்றி விட்டார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார்.
கவிதா திருமாவளவன் என்கிற பெயரில் வங்கிக் கணக்கு
மேலும், திருமாவளவன் ஆதரவாளார்கள் விஜயகுமார், சவுந்தர்ராஜன், கார்த்திக், ஜெயந்தி, சந்துரு உள்ளிட்டோர் மூலம் எனது பள்ளியை அபகரித்து விட்டனர். அதேபோல், எனது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க முயல்கின்றனர். திருமாவளவனை திருமணம் செய்து கொள்வதற்காகவே எனது கணவரை விவகாரத்து செய்தேன். ஆனால், திருமாவளவன் எனது சொத்துகளுக்காக காதல் நாடகமாடி அபரிக்க முயல்கிறார்.

அதேபோல், எனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. என்னை ஏமாற்றி வாங்கப்பட்ட சொத்துகளை மீட்டு தருவதுடன் எனக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். நான் தத்தெடுத்து வளர்த்து வரும் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கூட திருமாவளவன் கலந்து கொண்டிருக்கிறார்.
காதல் நாடகமாடி, தனது ஆதரவாளர்கள் கார்த்திக் உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் என்னை ஏமாற்றிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். கவிதாவின் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்."

- இவ்வாறு விகடன் இணையதளம் மற்றும் NewIndiaNews ஆகிய செய்து தளங்கள் கூறுகின்றன. (இங்கே காண்க: திருமணம் செய்வதாக மோசடியா?:திருமாவளவன் மீது கோவை பெண் புகார். தொல் திருமாவளவன் என்னை ஏமாற்றிவிட்டார்: கோவைப் பெண் அதிரடி புகார்)



எனினும் இந்த செய்தியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மறுத்துள்ளது. கவிதாவின் மீது விசிக புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இங்கே காண்க: திருமாவளவன் பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சி- விடுதலைச் சிறுத்தைகள்)

மேற்கண்ட செய்திகளில் எது உண்மை? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

வரலாறு முக்கியம் அமைச்சரே! கலைஞரின் தந்திரம்: ஏற்கனவே ஐநா நிகழ்ச்சி நிரலில் உள்ளதை புதிய கோரிக்கையாக வைக்கும் விநோதம்!

ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை ஆகஸ்ட் 25 முதல் சுமார் ஒரு வாரகாலம் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், ஏதோ திமுகவின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அவர் அங்கு செல்கிறார் என்கிற அளவுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதில் "இலங்கையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நவநீதம் பிள்ளை, ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்பாக ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். (இங்கே காண்க: நவநீதம் பிள்ளை ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க கருணாநிதி வலியுறுத்தல்)

ஐநா நிகழ்ச்சி நிரலில் உள்ளதையே கோரிக்கையாக வைக்கும் விநோதம்!

அமெரிக்காவின் முன்முயற்சியால் 2013 மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22 ஆம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே, "2013 செப்டம்பர் மாதம் நடக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்தில் வாய்வழியாக ஒரு தகவல் அறிக்கையையும், அடுத்த ஆண்டு 2014 மார்ச் மாதவாக்கில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 25 ஆம் கூட்டத்தில் முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. (இங்கே காண்க: 2013 Resolution on Promoting reconciliation and accountability in Sri Lanka)

அதன்படி, இப்போது ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், "ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்தில் வாய்வழியாக ஒரு தகவல் அறிக்கையை மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை அளிப்பார்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஐநா மனித உரிமைகள் அவையின் நிகழ்ச்சி நிரல் 2013 ஜூலை 24 ஆம் நாளே வெளியிடப்பட்டுள்ளது. (இங்கே காண்க: Agenda for the twenty-fourth session of the Human Rights Council)

In its resolution 22/1 on promoting reconciliation and accountability in Sri Lanka, the Human Rights Council requested OHCHR, with input from relevant special procedures mandate holders, as appropriate, to present an oral update to the Council on the implementation of that resolution. The Council will hear an oral update

ஆனால், இப்போது திடீரென கலைஞர் தனது அறிக்கையில் "நவநீதம் பிள்ளை அவர்கள் ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று கேட்டுள்ளார். அதாவது 'ஐநாவில் நவநீதம் பிள்ளை அறிக்கை அளிப்பார்' என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதையே மீண்டும் கோரிக்கையாக வைத்துள்ளார் கலைஞர்
"டெசோ சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு 2012 ஆகஸ்ட் 12-ல் சென்னையில் நடைபெற்றது.இதில் ஈழ விவகாரம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த தீர்மானங்களை ஜெனீவாவுக்கு நேரில் சென்று நவநீதம் பிள்ளையிடம் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சென்று கொடுத்தனர்.மேலும் நவநீதிமபிள்ளை இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சார்பில் அப்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இலங்கை செல்லும் நவநீதம் பிள்ளை ஈழத் தமிழர்களின் துன்பங்களையெல்லாம் நேரில் அறிந்து, ஐ.நா.முன்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கருணாநிதி கோரியுள்ளார்.

தவறான தகவலைத் தரும் கலைஞர்

தனது அறிக்கையில் "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாகவே ஐநா மனித உரிமைகள் ஆணையமே 38 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையை தயாரித்து, அதன் தலைவர் நவநீதம் பிள்ளை சமர்ப்பித்தார்." என்று குறிப்பிடுகிறார் கலைஞர்.

ஆனால், அந்த அறிக்கை, ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் நவநீதம் பிள்ளை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. (2012 Resolution on Promoting Reconciliation and Accountability in Sri Lanka)  அதாவது, 'அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாகவே அல்ல', மாறாக, 'அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததன் காரணமாகத்தான்' அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் முதல் வரியிலேயே '2012 ஆம் ஆண்டு மார்ச் தீர்மானத்தின் காரணமாக அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது' (இங்கே காண்க: Report of the Office of the United Nations High Commissioner for Human Rights on advice and technical assistance for the Government of Sri Lanka on promoting reconciliation and accountability in Sri Lanka)

The present report is submitted pursuant to Human Rights Council resolution 19/2,The present report is submitted pursuant to Human Rights Council resolution 19/2, in which the Council called upon the Government of Sri Lanka to implement the constructive recommendations made in the report of the Lessons Learnt and Reconciliation Commission and to take all necessary additional steps to fulfil its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans. 

வரலாறு முக்கியம் அமைச்சரே - அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா!

என்னவோ போங்கள்!

ஐநாவில் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப அறிக்கை விடுகிறார் கலைஞர், நாளை அவர் சொல்லிதான் எல்லாம் நடந்தது என்பார். தமிழ்நாட்டு மக்களும் நம்பித்தானே ஆகவேண்டும்.

அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா!

குறிப்பு: ஐநா மனித உரிமை ஆணையத்தில் இதே பிரச்சினையை பலமுறை எழுப்பியுள்ளது மருத்துவர் அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்ட பசுமைத்தாயகம்.

அவற்றை இங்கே காண்க:

1. ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!

2. ஜெனீவா ஐநா கூட்டத்தில் பசுமைத் தாயகம் பேச்சு: இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆணையம் - நேரடியாக வலியுறுத்தல்.


3. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!


4. இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றம்: ஐநாவில் தொடரும் நீதிக்கான போராட்டம்.

வியாழன், ஆகஸ்ட் 22, 2013

சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா? - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை!

ஆகஸ்ட் 22 ஆம் நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் சென்னை நகரம் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் எஸ். முத்தையா எழுதிய "சென்னை மறுகண்டுபிடிப்பு", நரசய்யா எழுதிய "மதராசப்பட்டினம்" ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சென்னை நகரின் வேர் தெலுங்கா?

"சென்னை மறுகண்டுபிடிப்பு" நூலில் "சென்னை நகரின் வேர் தெலுங்கு" எனும் சர்ச்சைக்குரிய தகவல் இருக்கிறது

"கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோகனும் ஃபிராசிஸ் டேயும் வெங்கடப்பா, ஐயப்பா என்ற வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக்குகள் பூந்தமல்லியில் அளித்த நிலத்தை நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் சோழமண்டலக் கடற்கரையில் பிரிட்டிஷ் ஆட்சிபீடமாக வளர்ந்த ஒரு நிறுவனத்தை அந்த இடத்தில் அமைத்தனர். சென்னையின் கதை இங்கே ஆரம்பிக்கிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

கூடவே "ஆங்கிலேயர்களுக்கு சென்னைப் பகுதியை அளித்த சந்திரகிரி ராஜாவின் உள்ளூர் நாயக்குகளான தாமர்ல சகோதரர்கள், சென்னப்ப நாயக் என்ற தங்களது தந்தையின்  ஞாபகார்த்தமாக அந்தக்குடியிருப்புக்கு சென்னப்பட்னம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினர்" என்று பெயர்க் காரணத்தைக் குறிப்பிடும் எஸ். முத்தையா, அதன் தொடர்ச்சியாக "நகரின் வேர் தெலுங்காக இருந்தாலும், தனித்தமிழ் விசுவாசிகள் இந்தப்பகுதியை சென்னை என்று அழைக்கத் தொடங்கினர்" என்கிறார். (பக்கம் 14)

இதே போன்று, ஆந்திர பிரதேசம் தோன்றியது குறித்த வீக்கிபீடியா கட்டுரையில், "வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி. ஆங்கிலேயர்கள் இங்கே தொழிற்சாலை அமைக்க 1639 இல் அனுமதி கேட்டது, இப்பகுதியை ஆட்சி செய்த வெலமா சாதியைச் சேர்ந்த தாமர்ல வெங்கடாத்ரி நாயகுடுவிடம்தான். 1920 ஆம் ஆண்டுக்கு பின்பு சென்னை மாகானத்திலும் தேசிய அரசிலும் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவாகவே சென்னை தமிழ்நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது" ன்று கூறப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மேட்டர்ஸ் எனும் நூல் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி என்கிறது. "1998 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று மாற்றும் போது 'சென்னை' என்பதன் மூலம் தமிழ் அல்ல என்பதற்கான ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த தெலுங்கு பேசும் சென்னப்ப நாயக்கர் எனும் சந்திரகிரி அரசரின் தளபதி ஆங்கிலேயருக்கு அதனை அளித்ததால்தான் அவரது பெயரில் சென்னை நகரம் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
நரசய்யாவின் மதராசப்பட்டினம் நூலில் "தாமர்ல வெங்கடாத்ரி வம்சத்தினர் காளஹஸ்தி ராஜாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவ்வம்சத்தில், ஐந்தாவதாக வந்தவர் தாமரல குமார சின்னப்ப நாயுடு என்பவர். இவர் பெயரில்தான் சென்னக்குப்பம் என்ற ஒரு இடம் இருந்ததாகவும் அறிகிறோம். இந்தப் பெயர்தான் சென்னை என்ற பெயரின் ஆரம்பமும் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 33).

ஆக மொத்தத்தில், வெங்கடப்பா நாயக்கர் என்பவர் ஃப்ரான்சிஸ் டேயிடம் சென்னையை அளித்ததாலும், அவரின் தந்தைப் பெயரே "சென்னப்ப நாயக்கர்" என்பதாலும் - அவர்கள் தெலுங்கு நாயுடு அல்லது வெலமா சாதியினர் என்கிற கருத்தில் - "சென்னை நகரின் வேர் தெலுங்கு" என்றும், "சென்னை ஆந்திராவின் பகுதி" என்றும் இப்போதும் பேசப்படுகிறது. இந்தத் தகவல் உண்மை அல்ல. 

சென்னை என்ற பெயருக்கு காரணமானவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழரே! சோழர்கள், பல்லவர்கள், காடவராயர்கள், கடைசியாக தாமல் நாயக்கர்கள் என வரலாற்றின் பெரும்பாலான காலம் தமிழர்களாலேயே சென்னைப்பகுதி ஆளப்பட்டு வந்தது. இந்த வரலாற்றை மாற்றி, சென்னை தெலுங்குப் பகுதி என பொய்யாகக் கட்டமைக்கின்றனர். அதற்கு 'சென்னை' பெயரைப் பயன்படுத்துகின்றனர்.

சென்னையை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தது எப்படி?

ஆங்கிலேயெ கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தென் இந்தியாவில் தொழிற்சாலை என்கிற பெயரில், மசூலிப்பட்டனத்தில் குடியிருப்பை அமைத்துக்கொள்ள 1611 ஆம் ஆண்டு கோல்கொண்டா முகலாய அரசர்கள் அனுமதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 1626 ஆம் ஆண்டு பழவேற்காட்டிற்கு 35 மைல் வடக்கே துர்கராயப்பட்டினத்தில் வேறொரு குடியிருப்பை அமைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அந்த இடம் ஒத்துவராததால் வேறொரு இடத்தை தேடினர்.

1636 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்பவரிடம் புதிய இடத்தை தேடும் பொறுப்பு அளிக்கப்பட்டது. மசூலிப்பட்டனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கடலோரமாக இடம் தேடி அலைந்த அவர் மதராசக்குப்பம் எனும் இடத்தை தேர்ந்தெடுத்தார். அப்போது இந்தப் பகுதியை ஆட்சி செய்தவர்தான் தாமல் வெங்கடப்பா நாயக்கர். அவரது தந்தை சென்னப்ப நாயக்கர். 

சென்னப்ப நாயக்கரின் உண்மை பின்னணி என்ன?

தாமல் நாயக்கர்கள் என்போர் தமிழ்நாட்டில் தற்போது காஞ்சிபுரத்துக்கும் ராணிப்பேட்டைக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாமல் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்த ஊர் பல்லவர் காலத்தில் தாமர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள தாமல் ஏரி பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்டது.

"தாமல், பழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி மாநகரத்தின் அரணாக விளங்கியுள்ளது. ஏனெனில், இது வடக்கு மற்றும் மேற்குப்புறத்திலிருந்து வரும் அரசர்களின் படையை காஞ்சி செல்லும் முன் எதிர்கொள்ளும் ஓர் போர்க்களமாக இருந்துள்ளது...இங்கு வன்னியர் (அல்லது நாயக்கர்) குலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்....
தாமலில் அதிகளவு காணப்படும் இனமான நாயக்கர், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் சிறந்த போர் வீரர்களாக விளங்கியுள்ளனர். இவர்களே காஞ்சிக்கு எதிரான படையெடுப்புகளை தாமலில் முறியடித்து காஞ்சியைக் காத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், ளுனர்களாகவும் மற்றும் நாயக்க அரசர்களாகவும் இருந்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறது சென்னை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசனின் வெளியீடான "வரகீசுவரர் கோவில்" எனும் தாமல் வரலாற்று நூல். இந்தநூலை எழுதியவர் சி.பி.ராமசாமி அய்யரின் வாரிசான முனைவர் நந்திதா கிருஷ்ணா.

தாமல் கிராமத்தில் இப்போதும் வன்னிய நாயக்கர்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

விஜயநகரப் பேரசின் வழிவந்தவர்களான சந்தரகிரி அரசர் இரண்டாம் வெங்கட்டாவின் ஆட்சிக்காலத்தில் அவரது தலைசிறந்த தளபதியாக விளங்கியவர் தாமல் சென்னப்ப நாயக்கர். அதன் காரணமாகவே அவர் விஜயநகர அரசின் கீழ் சிற்றரசர் நிலைக்கு உயர்ந்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் புகழைப் போற்றும் வகையில் தூசி மாமண்டூரில் சென்னசாகரம் எனும் ஏரி வெட்டப்பட்டது. அவரது பெயராலேயே சென்னக்குப்பம் எனும் ஊரும் அமைக்கப்பட்டது. அவருக்குப்பின்னர் அவரது மகன் வெங்கடப்ப நாயக்கர் சிற்றரசர் அல்லது ஆளுனராக இருந்துள்ளார். அவரை பாளையக்காரர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் சென்னை நகரில் தமது நிறுவனத்தை அமைக்க முயன்றபோது தாமல் வெங்கடப்ப நாயக்கர் வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். அவருக்கு கீழே தாமல் அய்யப்ப நாயக்கர் பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் (இந்த அய்யப்ப நாயக்கர் பெயரால் அமைந்த ஊர்தான் அய்யப்பன் தாங்கல்). இவர்களிடம் 15000 வீரர்களைக் கொண்ட பெரும் போர்வீரர் படை இருந்துள்ளது. எனவே, சந்தரகிரி அரசரிடம் மிகுந்த ஆதிக்கம் செலுத்துபவராக இவர்கள் இருந்துள்ளனர்.
பழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் இடையிலான கடற்கரை இவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களிடம் தான் ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று தமது நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். உண்மையான  சென்னையின் கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852)

"ஒருகட்டத்தில் தாமல் நாயக்கர்கள் விஜயநகர அரசரை எதிர்க்கும் அளவிற்கும் சென்றுள்ளனர். 1642 ஆம் ஆண்டில் விஜயநகர அரசுப்பொறுப்பை ஏற்ற விஜயநரத்தின் கடைசி அரசரான சிறீரங்க ராயரை தாமல் வெங்கடப்ப நாயக்கர் ஏற்கவில்லை. இதனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தார் சிறீரங்க ராயர். ஆனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தம்பியும் அவரது உறவினர்களும் நெருக்குதல் கொடுத்ததன் காரணமாக அவரை விடுதலை செய்து மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார் சிறீரங்க ராயர்" என்கிறது தஞ்சை நாயக்கர்கள் எனும் வரலாற்று நூல் (Nayaks of Tanjore, By V. Vriddhagirisan 1942)

தமிழ் வன்னிய நாயக்கர்கள் தெலுங்கு நாயுடுகளாக ஆனது எப்படி?

விஜயநகர அரசர்களின் கீழ் வடதமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் இரண்டு சிற்றரசுகள் இருந்துள்ளன. ஒன்று தாமல் வெங்கடப்பா நாயக்கர், மற்றது காளஹஸ்தி வெலுகோட்டி திம்ம நாயக்கர். இந்த இரண்டு தனித்தனி சிற்றரசுகளும் பல ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

சஞ்சை சுப்ரமணியம் என்பவர், '1600 களின் தொடக்கத்தில் விஜய நகர அரசரான வேங்கடப்பட்டி ராயருக்கும் செஞ்சி அரசரான முட்டு கிருஷ்ணப்ப ராயருக்கும் இடையேயான போரில் தாமல் மற்றும் வெலுகோட்டி சந்ததியினரின் துணைகொண்டு விஜய நகர அரசர் வெற்றிபெற்றதாக' குறிப்பிடுகிறார். (The Political Economy of Commerce: Southern India 1500-1650
 By Sanjay Subrahmanyam 1990)

அதே சஞ்சை சுப்ரமணியம் '1642 இல் நடந்த தண்டலூரு போரில் விஜய நகர அரசரான வெங்கட்டாவுடன் அவரது இரண்டு தளபதிகளான தாமல் வெங்கடப்பா நாயக்கரும் வெலுகோட்டி திம்ம நாயக்கரும் கோல்கொண்டா சுல்தானின் படையிடம் தோல்வியடைந்ததாக' குறிப்பிடுகிறார். (Penumbral Visions: Making Polities in Early Modern South India,  By Sanjay Subrahmanyam 2001)

அதே போன்று கனகலதா முகுந்த் எனும் வரலாற்று ஆய்வாளர், '1635 வாக்கில் வெலுகோட்டி குடும்பம், தாமல் குடும்பம் போன்ற தனிப்பட்ட குடும்பத்தினர் பெரும் அரசியல் சக்திகளாக மாறினர்' என்கிறார். (The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel,  By Kanakalatha Mukund 1999)

இப்படியாக, சந்தரகிரி அரசரின் கீழ் தாமல் வன்னிய நாயக்கர் பரம்பரையினர் மற்றும் காளஹஸ்தி வெலுகோட்டி பரம்பரையினர் என இரண்டு தனித்தனி பரம்பரையினர் இருந்துள்ளனர்.

இதனிடையே '1614 - 16 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு பகுதிகளில் நடந்த குழப்பமான போரின் போது தாமல் பரம்பரையை சேர்ந்தவர்கள் காளஹஸ்தியை பிடித்ததாகவும், அவர்கள் தொடர்ந்து காளஹஸ்தி ஜமீந்தார்களாக அங்கே ஆட்சி செய்வதாகவும்' ஒரு தகவல் 1938 ஆம் ஆண்டின் நெல்லூர் மாவட்ட கெசட்டீயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Gazetteer of the Nellore District: Brought Upto 1938,  By Government Of Madras Staff, Government of Madras 1942) (அதாவது, காளகஸ்தியைத்தான் தாமல் பரம்பரையினர் பிடித்தனர் என்று பிற்காலத்தில் கூறப்பட்டுள்ளது. மாறாக காளகஸ்தியிலிருந்து எவரும் வந்து தாமலைப் பிடிக்கவில்லை).

ஆக, காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் ஊரைச் சேர்ந்த சிற்றரசர்கள் வன்னிய நாயக்கர்கள். அவர்களது பெயரில்தான் சென்னை அமைந்துள்ளது.

'1756 ஆம் ஆண்டு சென்னை சைனா பசார் எனும் இடத்தில் கட்டப்பட்ட புதிய நகரக் கோவில் எனும் கோவிலுக்காக தாமல் மரபில் வந்த காளஹஸ்தி ராஜாவின் சார்பில் 100 பகோடாக்கள் அளிக்கப்பட்டதாக' சென்னையின் முந்நூறாவது ஆண்டுவிழா மலர் 1939 கூறுகிறது. (The Madras Tercentenary Commemoration Volume,  By Madras Tercentenary Celebration Committee, 1939)

ஆங்கிலேயர்களுக்கும் தாமல் வெங்கடப்பா நாயக்கர்களுக்கும் இடையேயான உடன்படிக்கை பற்றி 1852இல் விரிவாகக் குறிப்பிட்டுள்ள ஹென்றி டேவிட்சன் லவ், "தாமல் குடும்பத்தினரை இப்போது காளஹஸ்தி ராஜா பிரதிநிதிதுவப்படுத்துகிறார்" என்று குறிப்பிடுகிறார். (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852) அதாவது, தாமல் பரம்பரையினர் வலுவிழந்த பின்னர் அவர்களது உரிமைகளை காளஹஸ்தி ராஜா பயன்படுத்தியுள்ளார்.

ஆக, காளஹஸ்தியில் வாழ்ந்த தெலுங்கு வெலமா சாதி வெலுகோட்டி ஜமீந்தார்கள் பிற்காலத்தில் தாமல் மரபினர் என்று கூறப்பட்டுள்ளனர். இந்த பிற்காலத் தகவலை வைத்துக்கொண்டு - தாமல் சிற்றரசர்கள் காலஹஸ்தியைச் சேர்ந்தவர்கள் என்றும், அதனால் அவர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும் வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளனர்.
'வன்னியர்கள் வரலாற்றை தானே மறைக்கின்றனர், நமக்கென்ன?' என்று பொதுவான தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் வேடிக்கைப் பார்த்ததால் - தாமல் என்கிற தமிழ் மரபை தெலுங்கு மரபாகத் திரித்து, அதையே 'சென்னப்ப நாயக்கர்' தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று மாற்றி, பின்னர் தெலுங்கு மன்னரின் பேயரில் அமைந்த சென்னை ஆந்திராவில் ஒரு பகுதி என்று பேசுகின்றனர்.

இதே கருத்தில் சென்னை நகரில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இன்று (22.08.2013) சென்னை தினம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், சென்னையை உருவாக்கிய தாமல் ஊரில் அதன் சுவடே தெரியவில்லை!

தமிழ்ச்சாதியினர் புறக்கணிக்கப்பட்டால் தமிழன் புறக்கணிக்கப்படுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
குறிப்பு: தமிழ்நாட்டின் வரலாறு திரிக்கப்படுவதை மறுத்து இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. மற்றபடி, ஒரு மொழி எனும் அடிப்படையில் தெலுங்கு மொழியும் ஒரு சிறப்பான மொழி என்றே நான் கருதுகிறேன். அவ்வாறே, தமிழ்நாட்டில் ஒரு அங்கமாகிவிட்ட தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.தெலுங்கு மொழியையோ அந்த மொழி பேசும் மக்களையோ அல்லது ஆந்திர பிரதேசத்தையோ நான் குற்றம் சாட்டவில்லை. 

(22.08.2012 அன்று எழுதப்பட்ட வலைப்பூ கட்டுரை)

ஆதாரம்:

1. Varahishwarar Temple – Damal, CPR Publications, by Dr. Nanditha Krishna 2001.
2. Madras rediscovered, by S Muthiah2009.
3. Madrasapattinam, by Narasiah 2006.
4. Madras Matters – At home in South India, by Jim Brayley-Hodgetts 2008.
5. Indian Records Series Vestiges of Old Madras 1640-1800, by Henry Davidson Love 1852.
6. Gazetteer of the Nellore District: Brought Upto 1938, By Government Of Madras Staff, Government of Madras 1942.
7. The Madras Tercentenary Commemoration Volume, by Madras Tercentenary Celebration Committee, 1939.
8. Penumbral Visions: Making Polities in Early Modern South India, by Sanjay Subrahmanyam 2001.
9. The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel, by Kanakalatha Mukund 1999.
10. Nayaks of Tanjore, by V. Vriddhagirisan 1942.
 11. The Political Economy of Commerce: Southern India 1500-1650, By Sanjay Subrahmanyam 1990.

புதன், ஆகஸ்ட் 21, 2013

நாடகக் காதல்-பகுதி 2: சேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம்!

'அதே சென்னை உயர்நீதி மன்றம், அதே வழக்கறிஞர் சங்கரசுப்பு'  எல்லாம் ஏற்கனவே பார்த்த கதையாகவே இருக்கிறதே! 

"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தாமினி நீதிபதிகளைப் பார்த்து தெரிவித்தார். இதற்கு சந்துருவின் வக்கீல் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்தார். தாமினி மன அழுத்தத்தில் இருக்கிறார். முன்பு காதலனுடன் செல்ல சம்மதித்தவர் இப்போது மாற்றிச் சொல்கிறார். இதற்கு பெற்றோர் நிர்ப்பந்தமே காரணம். 2 வார காலத்தில் அவரது மனதை மாற்றி விட்டார்கள் என்றார்.
உடனே நீதிபதிகள் குறுக்கிட்டு, "தாமினி மேஜர் பெண். அவர் பெற்றோருடன் செல்ல சம்மதித்து இருக்கிறார். அவர் சொல்வதைத்தான் எங்களால் ஏற்க முடியும்'' என்றனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், தாமினிக்கு இன்னும் திருமணம் நடை பெறவில்லை. அதற்கு முன் அவர் மீது உரிமை கொண்டாட முடியாது. திருமணம் முடிந்து இருந்தால் கணவருடன் செல்வது பற்றி முடிவு எடுக்கலாம். திருமணம் ஆகாத பெண் பெற்றோருடன் செல்ல முடிவு எடுக்கும் போது அதைத்தான் கோர்ட்டு ஏற்க முடியும் என்றனர்.

வக்கீல் சங்கரசுப்பு வாதாடுகையில், தாமினி மனக்குழப்பத்தில் இருக்கிறார். அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்பலாம். 2 வாரமாக அவரை சட்ட விரோதமாக காவலில் வைத்து இருந்தனர். சினிமா பிரமுகர்கள் போய்பார்த்து அவர் மனதை மாற்றி விட்டார்கள் என்றார். உடனே நீதிபதிகள், எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட பின்புதான் தலைமை ஆசிரியையுடன் அனுப்ப உத்தரவிட்டோம். இப்போது எங்கள் மீதே குற்றம் சுமத்துகிறீர்களா? என்று வக்கீலைப் பார்த்து கேட்டனர்."
நாடகக் காதல் - பகுதி 2

மனதை மாற்றி விட்டார்கள், திருமணம் ஆகாத பெண், மனநல பரிசோதனைக்கு அனுப்பலாம் - இந்த வாதங்களை  எல்லாம் ஏற்கனவே ஒருமுறை இதே நீதிமன்றத்தில் பார்த்திருக்கிறோம்.

மகாபாரதக் கதைகளையும் இராமாயணக் கதைகளையும் சலிக்காமல் பலமுறைக் கேட்டிருக்கிறோம். இனி நாடகக் காதல் கதைகளையும் மீண்டும் மீண்டும் கேட்க நேரிடும் போலிருக்கிறது.

(மாலைமலர் செய்தி) "இயக்குனர் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம்"

பின் இணைப்பு: சந்துரு தாயாரின் மனு தள்ளுபடி

"நீதிபதிகள் தாமினியை அருகில் அழைத்து அவரது விருப்பத்தை கேட்டறிந்தனர். அப்போது தனது தந்தை சேரன், தாய் செல்வராணியிடம் செல்வதாக அவர் விருப்பம் தெரிவித்தார். அவரது விருப்பத்தை நீதிபதிகள் வெளிப்படையாக தெரிவித்தனர். இதற்கு சந்துருவின் வழக்கறிஞர் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.

இரண்டு முறை நடந்த வழக்கு விசாரணையின் போது காதலன் சந்துருவிடன் தான் செல்வேன் என கூறிய தாமினி, தற்போது பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்து இருப்பதில் ஏதோ சதி நடந்துள்ளது. அவரை யாரோ மூளைச்சலவை செய்துள்ளனர் என்று வாதாடினார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், தாமனி மைனர் பெண் கிடையாது. அவர் மேஜரானவர், யாரிடம் செல்ல வேண்டும் என முடிவு எடுக்க அவருக்கு முழு உரிமை உண்டு. அதில் யாரும் தலையிட முடியாது. இருப்பினும் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கிறோம் என்று தெரிவித்தனர்.

ஆனால் சேரன் மகள் பிற்பகலுக்குப் பிறகு நடந்த விசாரணையிலும் தந்தையுடன் செல்லவே விருப்பம் தெரிவித்தார். இதனை வாக்குமூலமாகவும் அளித்தார். எனவே சந்துரு தாயாரின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்."


இதுதானே இதற்கு முன்பு 'திவ்யா' வழக்கிலும் நடந்தது. 
அன்று போராடியவர்கள் இன்று எங்கே?
"இன்று என் பொக்கிஷம் திரும்பி வரும் நாள்.... அவள் இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று.... இன்று நான் காணப்போகும் வெற்றி எனக்கானது மட்டும் அல்ல... இவ்வுலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்குமானது...."

- சேரன் அளித்த பேட்டி (21.08.2013 நீதிமன்ற நிகழ்வுக்கு முன்பு)

தொடர்புடைய சுட்டிகள்:

1. நாடகக் காதல் இருக்கிறது என்கிறார்கள் சேரனும் அமீரும்: உண்மைக் காதல் ஆதரவாளர்கள் எங்கே?

2. மகளின் காதலை சேரன் தடுக்கலாமா? முற்போக்கு வேடதாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்?

3. சேரன் மகள் காதலும் புதிய தலைமுறையும்: அதிமேதாவி மனுஷ்யப்புத்திரன் அரைவேக்காடு என நிரூபித்தார்!

4. சேரன்  மகள் தாமினி: காதல் திருமணங்களுக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும் 

5. ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்

திங்கள், ஆகஸ்ட் 19, 2013

இளவரசன் மரணம் கொலை அல்ல என்கிறது பொலிஸ்: மன்னிப்பு கேட்குமா சாதிவெறிக் கூட்டம்?

தர்மபுரி கலவரம் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டன. வன்னியர்களுக்கு எதிராக பொத்தாம் பொதுவாகவும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக குறிப்பாகவும் கொடும் வெறிகொண்டு அலையும் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறிக் கூட்டத்தினர் 'தர்மபுரியில் இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்' என்று தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.

1. தர்மபுரி கலவரத்தை பாமகவினர்தான் செய்தனர்,
2. திவ்யாவை பாமகவினர்தான் கடத்தினர்,
3. இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்

- இந்த மூன்று கட்டுக்கதைகளை தமிழ்நாட்டின் வன்னியர் எதிர்ப்பு வெறிபிடித்த முற்போக்கு வேடதாரி கோயபல்ஸ் சூட்டத்தினர் மிகவும் வெற்றிகரமாக பரப்பியுள்ளனர்.

கட்டுக்கதையின் சில எடுத்துக்காட்டுகள்:

பாட்டாளி மர்டரர் கட்சி

இளவரசன் மரணம் கொலையே: வழக்கறிஞர் ரஜினிகாந்த் தகவல்

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடுகிறார்கள் : இளவரசன் தந்தை பேட்டி

கொல்லும் சாதி - கவின் மலர்

இளவரசன் - ஜெயமோகன்

இளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை - ஆதவன் தீட்சண்யா
தர்மபுரி இளவரசன்: கண்ணெதிரே ஒரு கோரக் கொலை… கையாலாகாத சாட்சிகளாய் நாம்!

இளவரசன் படுகொலை… குடிகலக்கி ராமதாசின் ரத்த வெறி தணியுமா..?

இளவரசனின் சந்தேக மரணம் - மக்கள் சிவில் உரிமைக் கழகம்

சாதிவெறியர்களால் கொலைசெயப்பட்டு தண்டவாளத்தில் வீசியெறியப்பட்ட கதாநாயகன்

உண்மையை ஒருநாளும் மறைக்க முடியாது

உண்மை ஒரு நாள் வெற்றிபெற்றே தீரும் என்கிற இயற்கை நீதியின் அடிப்படையில் இந்தக் கட்டுக்கதைகள் அனைத்தும் தகர்க்கப்படும். அந்த வகையில் "இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்" என்கிற வன்னியர் எதிர்ப்பு வெறிபிடித்த முற்போக்கு வேடதாரி கோயபல்ஸ் சூட்டத்தினரின் கட்டுக்கதையை தகர்த்து அந்த வெறிபிடித்தக் கூட்டத்தின் முகத்தில் கரிபூசியுள்ளார் தர்மபுரி மாவட்ட காவல்துறை ஆய்வாளர் அஸ்ரா கார்க். 
பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர் என்கிற கட்டுக்கதையை பரபரப்பாக வெளியிட்ட வாரமிருமுறை இதழ்கள் எல்லாம் இப்போது உண்மை வெளிவந்த பின்னர் மவுன விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். பாமகவினரே குற்றவாளிகள் என முதல்பக்கத்தில் செய்திவெளியிட்ட நாளிதழ்கள் இப்போது எட்டாம் பக்கத்தில் இந்த உண்மைச் செய்தியை வெளியிடும் நிலையில் உள்ளனர்.

உண்மை, நீதி, நியாயம், குறைந்தபட்ச நாகரீகம், அறிவு நாணய நேர்மை என ஏதாவது ஒன்று மயிரிழை அளவாவது இருக்குமானால், "இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்" என்று பிரச்சாரம் செய்த முற்போக்கு வேடதாரிக் கூட்டத்தினரும் பத்திரிகைகளும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தர்மபுரி எஸ்.பி.அஸ்ரா கார்க் அறிக்கையை கீழே காண்க:

இளவரசன் மரணம் தற்கொலை தான்: தர்மபுரி எஸ்.பி. அஸ்ராகார்க் 

(மாலை மலர் செய்தி)

இளவரசன் மரணம் தற்கொலை தான்: சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி சூப்பிரண்டு அறிக்கை தாக்கல்

தர்மபுரியில் திவ்யாவை காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் மர்மமாக இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை இளங்கோ மற்றும் உறவினர்களும் கூறினார்கள். ஆனால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதற்காக இளவரசன் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி எஸ்.பி. அஸ்ராகார்க் தாக்கல் செய்தார். தடயவியல் சோதனை முடிவு, ரெயில்வே ஊழியர்களின் வாக்குமூலம் உள்ளிட்ட விவரங்களை அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.

அந்த அறிக்கை விவரம் வருமாறு:–

இளவரசன் இறந்தது குறித்த புலன் விசாரணையின் போது, இறந்து போனவர் ஒரு தற்கொலை குறிப்பை விட்டுச் சென்றது புழக்கத்தில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. விசாரித்ததில், அந்த தற்கொலை குறிப்பை எங்களால் கொணற முடிந்தது.

இறந்து போனவரின் பேன்ட் பாக்கெட்டிலிருந்து தற்கொலை குறிப்பை சம்பவ இடத்தில் அப்போதிருந்த ஒருவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. நாங்கள் சம்பவ இடம் செல்வதற்கு முன்பே அவர் அதை எடுத்து சென்று விட்டார். அவரை விசாரணை செய்ததில், அவர் அதை ஒப்புக் கொண்டார்.

தனது இறப்பிற்கு ஒருவரும் பொறுப்பு இல்லை என, திவ்யாவிற்கும் அவருடைய சொந்த குடும்பத்திற்கும் இளவரசன் தமிழில் எழுதிய நான்கு பக்க குறிப்பு சொன்னது. அந்த கடிதத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக, அந்தக் கடிதத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துக்களையும் சரிபார்ப்பதற்காக அனுப்புகிறோம்.

அந்த தேதியில் நான் பத்திரிக்கையாளர்களுடன் பேசும் பத்திரிக்கை குறிப்பை சரி பார்த்துக் கொள்ளலாம் (நகல் இணைக்கப்பட்டுள்ளது).

அதன்படி 8–7–2013 அன்று, அந்த தற்கொலை குறிப்பு இறந்து போன இளவரசனின் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துகளுடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் மூலமாக சென்னை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. 13–7–2013 அன்று கையெழுத்து நிபுணரின் பதில் கிடைக்கப்பெற்றது. கேட்கப்பட்டு உள்ளதும் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துக்களும் ஒரே நபருடையதுதான் என சென்னை, தமிழக அரசு, தடய அறிவியல் துறையின் கையெழுத்து நிபுணர்கள் மூவர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று, 8–7–2013 அன்று வட்டார தடய அறிவியல் ஆய்வகம், சேலத்திற்கு உடல் உள்ளுருப்புகள் அனுப்பப்பட்டு, 12–7–2013 அன்று அதன் அறிக்கை பெறப்பட்டது. உடல் உள்ளுருப்புகளில் வயிறு, குடல், கல்லீரல், சிறு நீரகம், மூளை மற்றும் இரத்தத்தில் சாராயம் உள்ளதாக தடய அறிவியல் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். உடல் உள்ளுருப்பில் விஷம் இல்லை என நிபுணர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உபயோகப்படும்படியான தகவல்களை கொணருவதற்காக இறந்து போனவரின் உடலிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசியை சென்னை, தமிழக அரசு, தடய அறிவியல் துறைக்கு 10–7–2013 அன்று அனுப்பப்பட்டு, 13–7–2013 அன்று அறிக்கை பெறப்பட்டது.

இறந்து போன இளவரசன் மற்றும் திவ்யா ஆகியோருக்கிடையேயான உரையாடலின் ஒலிப்பதிவு அந்த கைபேசியில் இருந்தது. தனது இறப்பிற்கு சற்று நேரம் முன்பு தனது உறவினர் அறிவழகனுடனான தனது இரண்டு உரையாடல்களின் ஒலிப்பதிவும் அதில் உள்ளது. இதற்கிடையே, 11–7–2013 அன்று, அவர் இறப்பதற்கு சற்று முன்னர் பேசிய தனது நண்பர்களில் இரண்டு பேர் அதாவது சென்னையைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் சித்தூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோரிடம் 164 குவிசன் கீழ் அரூர் நீதிமன்ற நடுவரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தடய அறிவியல் ஆய்வகத்தால் கொடுக்கப்பட்ட ஒலிப்பதிவின்படியும் தனது இரண்டு நண்பர்கள் கார்த்திக் மற்றும் மனோஜ் குமார் ஆகியோரின் வாக்கு மூலத்தின்படியும் கீழ் கண்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

1. தன்னுடன் திவ்யா திரும்பி வர மறுத்ததால் தான் மிகவும் கலங்கியிருப்பதாக தனது நண்பர்கள் கார்த்திக் மற்றும் மனோஜ்குமாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

2. தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறமுள்ள இருப்புப்பாதையில் ஒரு வாழை மரத்தின் அருகில் அவர் மது அருந்தியுள்ளார்.

3. தற்கொலை செய்து கொள்ள அவர் விரும்பியுள்ளார்.

4. தனது இறப்பிற்குப் பிறகு தாஜ்மகாலைப் போன்று ஒரு நினைவாலயத்தை கட்டுமாறு தனது நண்பரிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

5. அந்தச் சமயத்தில் அவர் தனியாக இருந்துள்ளார்.

அதேபோன்று, இறந்து போன இளவரசனுடன் போனில் அவர் இறப்பதற்கு சற்று நேரம் முன்னதாக பேசிய அறிவழகன் (வயது 22), த/பெ சுப்பிரமணி, பாரதிபுரம், தருமபுரியை புலன் விசாரணை அதிகாரி விசாரித்துள்ளார். சித்தூருக்கு தன்னுடன் வர 4-7-2013 அன்று 12.00 மணிக்கு இறந்து போன இளவரசன் தன்னை அழைத்ததாக, காவல் துறை விசாரணையின்போது அறிவழகன் சொல்லியுள்ளார்.

தனது வீட்டிற்கு இறந்து போன இளவரசன் வராததால், 12–30 மணிக்கு அறிவழகன் அவரை அழைத்து அவரது இருப்பிடத்தை பற்றி கேட்டதற்கு, அருகில் இருப்பதாகவும், வருவதாகவும் இறந்து போன இளவரசன் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் இணைப்பை துண்டித்துள்ளார். இருப்பினும், மேற்சொன்ன அழைப்புகள் உள்ள இறந்து போன இளவரசனின் கைபேசியின் ஒலிப்பதிவு எதிராக உள்ளது. தருமபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறமுள்ள இருப்புப்பாதையில் ஒரு வாழை மரத்தின் (உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவ இடம்) அருகில் மது அருந்தி கொண்டிருப்பதாக இறந்து போனவர் அறிவழகனுக்கு தெரிவித்துள்ளதாக ஒலிப்பதிவு காண்பிக்கிறது.

4–6–2013 அன்று திவ்யா இறந்துபோன இளவரசனின் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். தனது தாயாருடன் தற்சமயம் தங்க வேண்டுமென்று திவ்யா உயர்நீதி மன்றத்தில் 6–6–2013 அன்று தெரிவித்துள்ளார். இதனால் வெறுப்படைந்து இறந்துபோன இளவரசன் 7–6–2013 அன்று, சென்னை, தி.நகர், கன்னையா தெரு, ஜெமினி ரெசிடன்சி ஓட்லில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனது இடது மணிக்கட்டில் ஒரு கூர் மையான பொருளால் அவர் காயமேற் கொண்டுள்ளார். அந்த ஓட்டலில் சந்தோஷ் மெஹ்ரா அறை பையனாக வேலை செய்து வருகிறார். 16–7–2013 அன்று, அரூர் நீதிமன்ற நடுவர் முன்பாக பதிவு செய்யப்பட்ட அவரது 164 குவிச வாக்குமூலம் இதனுடன் ஒத்துபோகிறது.

மேலும், திவ்யா தன்னை விட்டுப் போனதால் ஏற்பட்ட வெறுப்பினால் தனது கையை காயப்படுத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக இறந்து போன இளவரசனே திவ்யாவிடம் தொலை பேசியில் சொல்லியுள்ளார். திவ்யாவின் வாக்குமூலமும் புலன் விசாரணை அதிகாரியால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மேலும், இளவரசனின் கைப்பேசியில் இருக்கும் திவ்யா மற்றும் இளவரசனிடையேயான உரையாடலின் ஒலிப்பதிவும், அவர் தற்கொலை எண்ணத்தில் இருந்தார் என தெரிவிக்கிறது.

4–7–2013 அன்று, முருகன் என்பவர் இளவரசனின் இறந்த உடலை எடுப்பதற்காக தருமபுரி இருப்புப் பாதை காவல் துறைக்கு உதவியுள்ளார். இருப்புப் பாதை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, இளவரசனின் இறந்த உடலை சம்பவ இடத்திலிருந்து அகற்றுவதற்காக மேற்சொன்ன முருகன் இருந்தார். அதைப் பார்த்த இறந்து போனவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் கொண்ட உணர்வுபூர்வ மிக்க கூட்டத்தினரால் முருகன் தாக்கப்பட்டதில், அவர் காயமடைந்துள்ளார். அந்தச் சமயத்தில், முருகனின் கையுரைகள் அவரது பாக்கெட்டிலிருந்து விழுந்து விட்டது.

இறுதியாக, 13–7–2013 அன்று, புதுதில்லி, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்லூரியின் தடய அறிவியல் மருத்துவம் மற்றும் விஷமுறிவு பிரிவு துறைத் தலைவர் மற்றும் பேராசியர் தலைமையிலான நிபுணர் குழு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறு பிரேத பரிசோதனை நடத்தியது. இளவரசனின் உடல் கிடைத்த இடத்திற்கு அந்தச் குழு சென்று பார்வையிட்டு, குறிப்பு எடுத்துக் கொண்டது. ஓடும் தொடர்வண்டியின் பாதிப்பினால் உயிரழப்பு ஏற்படுத்தக்கூடிய காயங்கள் உட்பட குறிப்பிடப்பட்ட காயங்கள் ஏற்பட முடியும் என்று அவர்களின் மறு பிரேத பரிசோதனை மற்றும் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர், அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இறந்து போனவரின் உடலின் எந்தப் பகுதியிலும், கொடுமை/உடல் ரீதியான வன்மை இருந்ததற்கான தடயம் ஏதும் இல்லை.

மூளை பாதிக்கப்பட்டும், இருப்புப் பாதையின் சுற்றிலும் சிதறிக் கிடந்ததும் தெரிவிக்கப்படுகிறது. புகைப் படங்களில் இதை காண முடியும்.

இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, கேள்வித் தொகுப்பை, தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்திய குழுவிற்கு அனுப்பினார். இதுவரை நடந்த புலன் விசாரணையுடன் ஒத்துப்போகும் அந்த கேள்வித் தொகுப்பும், அந்தக் குழுவினர் கொடுத்த விளக்கங்களும் உயர்நீதிமன்ற பரிசீலனைக்காக இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, இளவரசனின் மரணம் ஒரு கொலை என்பதற்கான ஐயப்பாட்டை உருவாக்கும் சந்தர்ப்ப/ உடல் ரீதியான/ஆவணபூர்வமான எந்த ஒரு தடயமோ, இது வரையில் நடைபெற்ற புலன் விசாரணையில் வெளி வரவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

(மாலை மலர் செய்தி)

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்

இது காதலை ஆதரிக்கும் படமென்றோ அல்லது எதிர்க்கும் படமென்றோ வகைப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. இது உண்மைக் காதலைச் சொல்லும் படமா அல்லது நாடகக் காதலைச் சொல்லும் படமா என்றும் தெரியவில்லை. படத்தின் கிளைமாக்ஸ் என்பது சுபமான முடிவா அல்லது டிராஜடி முடிவா என்று கூட தெரியவில்லை.

ஆனால், காதலிக்க நினைப்பவர்கள், காதலிப்பவர்கள், காதலிப்போரின் நண்பர்கள், காதலிப்போரின் பெற்றோர்கள், காதலை ஆதரிப்போர், காதலை எதிர்ப்போர் - என எல்லோரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்று கட்டாயமாகச் சொல்லலாம்.
படிக்கும் வயதில் இருவர் காதலில் வீழ்கின்றனர், நண்பர்கள் முழு மனதோடு உதவுகின்றனர், அவர்களது காதலை குடும்பத்தினர் எதிர்க்கின்றனர், பின்னர் ஆதரிக்கின்றனர், இவர்களின் காதலில் சாதி தலையிடுகிறது, அரசியல்வாதிகள் தலையிடுகின்றனர் - பின்னர் இவர்களின் காதல் என்ன ஆனது என்பதைச் சுற்றிவளைக்காமல், சுருக்கமாகவேக் கூறி படத்தை முடித்து விடுகின்றனர்.

ஆனால், காதல் என்பது இரண்டு தனி மனிதர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை மட்டுமல்ல, அதில் அவர்களது குடும்பத்தினர், சொந்தக்காரர்கள் என ஏராளமான உயிர்களின் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை பொட்டில் அடித்தாற்போல நன்றாக உறைக்கும்படி சொல்கிறார்கள்.

இது போரடிக்கும் படம் அல்ல. விருவிருப்பான படம்தான். கட்டாயம் பாருங்கள்.

இந்திய சுதந்திரம்: ஜனநாயகத்தின் படுதோல்வி!

இந்திய நாடு விடுதலை அடைந்து 67 ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு தேசம், 'சாரே ஜகான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' (உலகின் எல்லா நாடுகளிலும் உயர்ந்தது எங்கள் இந்துஸ்தான்) என்று தனக்குத்தானே பெருமிதம் கொள்ளும்  ஒரு நாடு - உலகநாடுகளின் மத்தியில் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தால் கண்ணீரும் பெருமூச்சும்தான் பதிலாகக் கிடைக்கும்.

கேடுகெட்ட நிலையில் இந்திய நாடு

அடிப்படை சுகாதாரம், அடிப்படைக் கல்வி, கழிப்பிட வசதி, குழந்தைகள் எடை, சிசு மரணம், வாழ்நாள் என எல்லா அளவீடுகளிலும் உலகிலேயே மிகவும் கேடுகெட்ட நிலையில் இருக்கிறது இந்தியா.

உலகிலேயே மிகமோசமான நிலையில் மக்கள் வாழும் நாடுகளான ஆப்பிரிக்க சகாரா பகுதி நாடுகளுடன் ஒப்பிடும் கீழான நிலையில் இந்தியா இருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்துக்கு வெளியே உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வெறும் 16 நாடுகள்தான் மிக வறுமையான நாடுகளாகக் கணக்கிடப்படுகின்றன. அந்த 16 நாடுகளில் 10 நாடுகளுக்கும் கீழான நிலையில் இந்தியா இருக்கிறது.

தெற்காசிய நாடுகளில் மிகக் கேவலமான நிலையில் உள்ள நாடு இந்தியா தான். வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளை விடவும் பல நிலைகளில் இந்தியா பின்தங்கி இருக்கிறது.
பிரிக் (BRIC) கூட்டமைப்பு எனப்படும் இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா கூட்டமைப்பிலேயே இந்திய நாடுதான் மிகக் கீழான நிலையில் இருக்கிறது என இந்தியாவின் கேடுகளைப் பட்டியலிடுகிறார் அமார்த்யா சென். (காண்க: An Uncertain Glory: India and its Contradictions)

அரசியல் சட்டத்தின் படுதோல்வி

இந்திய அரசியல் சட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது. அந்த சட்டமே ஒரு தவறான பின்னணியில் உறுவானதுதான் படுதோல்விக்கு மிக முக்கிய காரணமாகும். 


இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவானது இந்திய மக்களை பிரநிதத்துவப் படுத்தவில்லை. இந்தக் குழுவில் 217 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், இந்திய மக்களில் சுமார் 60 சதவீதமாக இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இருந்து ஒரே ஒருவர் கூட அந்தக் குழுவில் இல்லை.
இந்தியர்களை அடிமைப்படுத்தி சுரண்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் சட்டங்களை சுதந்திர இந்தியா அப்படியே ஏற்றுக்கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் 'இந்திய அரசுச் சட்டம் 1935' சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம், இந்திய மக்களை தொடர்ந்து சர்வாதிகார முறையில் அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு ஏற்பாட்டை உறுதிப்படுத்தினர்.

பெயரளவில் இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு என்று கூறிவிட்டு, உண்மையில் ஒற்றை ஆட்சி முறையை நிலைநாட்டினர்.

அடிப்படை உரிமைகள் புறக்கணிப்பு - அப்பட்டமான மனித உரிமை மீறல்

'பசித்தவனுக்கு உணவு, நிர்வாணமான பெருங்கூட்டத்திற்கு உடை, ஒவ்வொரு இந்தியனும் அவனது திறமைக்கு ஏற்ப முழுஅளவு முன்னேற்றமடையும் வாய்ப்பு' ஆகியவற்றை அளித்து இந்திய மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் 'அரசியல் சாசனம் பொருளற்றதாகிவிடும்' என்றார் ஜவகர்லால் நேரு
நாடு விடுதலை அடைந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட இலக்குகள் அப்பட்டமான தோல்வியைத் தழுவியுள்ளன. இந்திய அரசியல் சாசனம் "நாட்டின் ஒற்றுமை, சமூகப் புரட்சி, ஜனநாயகத்தை நிலைத்திருக்கச் செய்தல்" என்கிற இலக்குகளை முன்வைத்தது. இவற்றில் நாட்டின் ஒற்றுமை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. சமூகப் புரட்சி, ஜனநாயகத்தை நிலைத்திருக்கச் செய்தல் என்ற இரண்டு இலக்குகளும் படுதோல்வியைத் தழுவியுள்ளன.

இந்திய அரசியல் அமைப்பின் மிக முக்கியமான இலக்குகள் பிரிவு 36 முதல் 51 வரை கூறப்பட்டுள்ளன. இவை அரசின் ஆளுகைக்கு அடிப்படையாக அமைய வேண்டிய கொள்கைகள் என "அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 4 இல்" கூறப்பட்டுள்ளன (இங்கே காண்க: DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY). இந்த இலக்குகளை எந்த அரசாங்கமும் மதிக்கவே இல்லை:
  • அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி.
  • அந்தஸ்து, வாய்ப்புகளில் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வைக் குறைத்தல்.
  • அனைவருக்கும் போதுமான அளவுக்கு வாழ்வாதாரங்களை உறுதி செய்தல்.
  • சொத்துக்கள் மற்றும் உற்பத்தி ஆதாரங்கள் எல்லோருக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்படுதல். 
  • பொருளாதார நடவடிக்கைகள் மூலம் சொத்தும் உற்பத்தி ஆதாரங்களும் ஓரிடத்தில் குவியாமல் தடுத்தல்.
  • குழந்தைகள் உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஏற்பாடுகள்.
  • வேலை வாய்ப்பு உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல்.
  • சுற்றுச்சூழலைக் காப்பாற்றுதல்.
  • மதுபானத்தை ஒழித்தல்.
  • உள்ளாட்சி அரசுகளை சுதந்திரமாக இயங்கச் செய்தல்.
- இவ்வாறாக, இந்திய அரசியல் அமைப்பில் "அரசாங்கங்களின் அளுகைக்கான" அடிப்படையாக உள்ள இந்த பிரிவுகள் எதுவும் 67 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டுவரும் கட்சிகளால் மதிக்கப்படவே இல்லை.

இரண்டு விதமான மனித உரிமைகள்

உலகின் மிக முதன்மையான உரிமை ஆவணம் ஐநாவின் பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம் ஆகும். (இங்கே காண்க: United Nations Universal Declaration of Human Rights) அதனை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
குடியுரிமைகள், அரசியல் உரிமைகள் (Civil and Political Rights) என்பன ஒருவிதமான மனித உரிமைகள் (இங்கே காண்க: International Covenant on Civil and Political Rights) என்றும், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகள் (Economic, Social and Cultural Rights) மறுவிதமான மனித உரிமைகள் (இங்கே காண்க: International Covenant on Economic, Social and Cultural Rights) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இரண்டுவகை உரிமைகளுமே மிக முக்கியமானவை ஆகும்.

இந்திய அரசியல் அமைப்பின் பகுதி 3-இல் குடியுரிமைகளும், அரசியல் உரிமைகளும், (இங்கே காண்க: FUNDAMENTAL RIGHTS) பகுதி 4-இல் சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளும் கூறப்பட்டுள்ளன. (இங்கே காண்க: DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY)

இவற்றில் பகுதி மூன்றினை உறுதி செய்யக்கோரி, குடிமக்கள் நீதிமன்றத்தை நாட வழி செய்யப்பட்டுள்ளதால் - குடியுரிமைகள், அரசியல் உரிமைகளை மிகக் குறைந்த அளவுக்காவது அரசாங்கங்கள் ஏற்று செயல்பட முனைகின்றன.

ஆனால், பகுதி நான்கினை உறுதிசெய்யக் கோரி நீதிமன்றத்தை நாடமுடியாது என்பதால் சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளுக்கான பிரிவுகள் 'கண்டும் காணாமல்' கைவிடப்பட்டுள்ளன.

ஆக, 67 ஆண்டுகளை அடைந்த நிலையிலும், சராசரி இந்தியக் குடிமக்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட கூட்டமாகவே வாழ்கின்றனர்.

இது இந்திய ஜனநாயகத்தின் மிக மோசமான படுதோல்வியே ஆகும்.