Pages

பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 15, 2017

தமிழகத்தில் மதக்கலவரம் நடத்த சதி: வன்னியர்களின் வீரம் துலுக்கனிடம் செல்லுமா?

தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், இங்கும் பெரிய மதக்கலவரம் நடக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். ஆனால், இந்த மதக்கலவரத்தில் பிராமணர்களோ, முன்னேறிய சாதியினரோ பலியாகக் கூடாது. அதற்கு பதிலாக 'எளிதில் உணர்ச்சிவசப்படும்' வன்னியர்களை பலி கொடுக்க திட்டமிட்டு முனைந்துள்ளார்கள். இதற்கான கூட்டம் ஒன்று 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பெயரில் திருக்கழுகுன்றத்தில் 9.4.2017 அன்று நடந்துள்ளது.

இக்கூட்டத்தில் பிராமணரான வகுப்பை சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகருமான ஆர்.பி.வி.எஸ் மணியன் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் படுமோசமாகப் பேசியுள்ளார். "முஸ்லிம்களுடன் வன்னியர்கள் சண்டை போட வேண்டும். கிறிஸ்தவ வன்னியர்களை புறக்கணிக்க வேண்டும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை" என்று அவர் பேசியுள்ளார்.

ஆர்.பி.வி.எஸ் மணியனின் மதவெறி பேச்சு:

மணியனின் மதவெறி பேச்சு: “சிவத்துரோகம் செய்கிறவன் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்துவோம். இதுதான் வன்னியனுடைய பாரம்பரியம். ஆனால், இன்றைய வன்னியர்கள் சிலர் மதம் மாறிப்போயிருக்கிறார்கள். மதம் மாறிப்போய், மானம் கெட்டுப்போன அந்தக் கிறிஸ்தவர்களையும் சேர்த்துக்கொள்கிறோம் வன்னியன் என்பதாகச் சொல்லி. அவன் உண்மையாகவே ஹிந்துவாக இருந்தால் தானே வன்னியன். அன்னியனாகப் போனதற்கு பின்னாலே வன்னியன் என்னடா உறவு, வன்னியன். கிறித்தவ வன்னியர்களிடம் எக்காரணம் கொண்டும் நாம் உறவு கொண்டாடக் கூடாது. வன்னியர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களாக இருந்தால் அவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். ஜாதி பகிஷ்காரம் செய்ய  வேண்டும். 
அதுமட்டுமல்ல .... போராடுகிறோம், பெரிய வீர பாரம்பரியம் என்பதாகச் சொல்கிறோம். வன்னியனுக்கு இருக்கக் கூடிய வீரம் தெரியுமா? அவனுடைய வாளின் வலிமை தெரியுமா? அவனுடைய துணிச்சல் தெரியுமா? இதெல்லாம் நானும் பார்த்து விட்டேன். நம்ம ஊர்ல இருக்கிற ஒரு சில ஜாதிக்காரன் கிட்டதான் இந்த வன்னியனுடைய திமிர், இந்த வன்னியனுடைய அகம்பாவம் எல்லாம் செல்லும். யார்கிட்ட செல்வதில்லை தெரியுமா?  துலுக்கன் கிட்ட செல்லுவதே இல்லை. துலுக்கன் கிட்ட செல்லுவதே இல்லை. இஸ்லாமியனை பகைத்துக்கொண்டு வன்னியனுக்காக வாதாடுவதற்கு, போராடுவதற்கு, குரல் கொடுப்பதற்கு அமைப்புகள் இல்லை. அப்படிப்பட்ட நிலையில வெறும் அரசியல் ரீதியாக நாம பிளந்து கிடந்தால் நிச்சயமாக வன்னியச் சமுதாயத்துக்கு வலிமை கிடையாது. ஆன்மீக ரீதியாக கலாச்சார ரீதியாக சமுதாய ரீதியாக ஹிந்து என்கின்ற கண்ணோட்டத்தில் தான் நாம் அத்தனை வன்னியர்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும். அப்படி ஊரிய இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது.

ஆனால், இன்றைக்கு Most Backward (MBC) என்பதாகச் சொல்லி, நான் நான்கு பேர் கிட்ட கையேந்தினேனா? சத்திரியன் எப்படிடா கையேந்தறது? சத்திரியர்கள் எவர் கிட்டயாவது போய் ரிசர்வேஷன் கேட்பானா? சத்திரியன் தானே மற்றவர்களுக்கே வேலை கொடுக்க வேண்டியவன்? அப்படி வேலை கொடுக்க வேண்டிய சத்திரியன் இன்றைய தினம் கை நீட்டுகிறான். எனக்கு 20 சதவீதம் கொடு என்று.

நான் வேலூரில் பேசுகிற போது சொன்னேன். வன்னியர்கள் மத்தியிலும் சொன்னேன். உண்மையிலேயே நீ கேட்க வேண்டியது அரசாங்கத்திடம் 20 சதவீதம் அல்ல. மெடிக்கல் காலேஜில் 20 சதவீதம் அல்ல.

மாறாக, நீ கேட்க வேண்டியது எங்கே தெரியுமா? வேலூரில் பஜாரில் துலுக்கன் கடை வச்சிருக்கான் டா. நம்மைச் சுற்றியிலும் துலுக்கன் வியாபாரத்தில் பெருகிக் கொண்டே போகிறான். ஆனால், வன்னியரில் எத்தனை பேர்கள் வியாபாரிகள்? எத்தனை பேரிடத்தில் பணம் இருக்கிறது? ஆகவே நீங்கள் அத்தனை பேரும் வேலூர் பஜாரில் வன்னியர் மக்கள் தொகைக்கு ஏற்ப கடைகளை ஒதுக்கு. எனக்கு கடைகளைக் கட்டிக் கொடு. வியாபாரத்திற்கு பணம் கொடு. அப்படி தான் டா கேட்கனும்"

- இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியுள்ளார். Youtube காணொலியாக இந்த இணைப்பில் காண்க: https://youtu.be/W70LfxkUXak


வன்னியர் உரிமைக்கு குரல் கொடுக்குமா ஆர்.எஸ்.எஸ்?

முஸ்லிம்கள் சொத்தில் வன்னியர்கள் பங்கு கேட்கவேண்டும் என்று சொல்லும் இதே ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான், வன்னியர்களின் உரிமையை அபகரித்து வைத்துள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோவில் வன்னியர்களான பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு சொந்தமானதாகும். தினமும் இரவு பூஜை முடிந்த பிறகு பூஜை செய்யும் தீட்சிதர்கள், கோவிலை பூட்டி அதன் சாவியை பல்லக்கில் வைத்து மன்னர் குடும்பத்தின் அரண்மனையில் ஒப்படைப்பார்கள். காலையில் மீண்டும் அவ்வாறே வாங்கி வந்து கோவிலை திறப்பார்கள்.
காலப்போக்கில் மன்னர் குடும்பம் நலிவடைந்ததால், சாவியை பிராமணர்களான தீட்சிதர்களே வைத்துக்கொண்டனர். பின்னர், உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மூலம் வழக்குத் தொடுத்து - இந்தக் கோவில் பிராமணர்களுக்கே சொந்தம் என்கிற மோசடி தீர்ப்பையும் பெற்றுவிட்டார்கள்.

இப்போது, பாஜகவின் துணை அமைப்பான சத்திரியர் சாம்ராஜ்யத்தின் சார்பில், சிதம்பரம் கோவில் உரிமையை மீண்டும் பிச்சாவரம் மன்னர் குடும்பத்திடமே அளிக்க வேண்டும் என்று கோர முடியுமா?

அப்படி சிதம்பரம் கோவிலில் வன்னியர்களின் உரிமைப் பற்றி பேச வக்கற்றுப் போன இந்த கும்பல் தான் -  வன்னியர் உரிமையை அபகரித்த பிராமணர்களை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாத முஸ்லிம்களிடம் சண்டை போடுங்கள் என்று மூளைச்சலவை செய்கிறது.
திருக்கழுகுன்றத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.பி.வி.எஸ் மணியன், மற்றும் கல்யாணராமன் (நடுவில்)

பாஜகவின் துணை அமைப்பான சத்திரியர் சாம்ராஜ்யத்தின் தலைவராக, பாஜக சார்பில் 2016 தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு 2605 ஓட்டுகள் வாங்கிய வ.கோ. ரங்கசாமி உள்ளார். 'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு தமிழ் இனத்துரோகி,  போதைப்பொருள் கடத்தல்காரன்' என்று அவதூறு பிரச்சாரம் செய்த கல்யாணராமன் தான் இந்த அமைப்பின் ஆலோசகர் ஆகும் (நாயுடு வகுப்பை சேர்ந்த இவர் தன்னை வன்னியர் என்று கூறிக்கொள்வதாக சொல்கிறார்கள்).

மதவெறியை தடுக்க தமிழகம் ஒன்றிணைய வேண்டும்

வன்னியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை மூட்டும் இந்த படுபயங்கர மதக்கலவர சதியை தடுக்காமல் விட்டால், ஆயிரக்கணக்கான வன்னியர்களும், முஸ்லிம்களும் பலியாகும் ஆபத்து விரைவில் வரக்கூடும். இதனை வருமுன் தடுப்பதே, தமிழகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நலமானதாக இருக்கும்.

தொடர்புடைய சுட்டி:

ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

பங்குனி உத்திரம்: வீர வன்னியர் கதையும் விடுதலைக்கான வழியும்

ஒவ்வொரு இனமும் தனக்கான வரலாற்றையும் தோன்றிய கதைகளையும் கொண்டிருக்கிறது. இந்த புராணக் கதைகள்தான் தேசங்களையும், இனக்குழுக்களையும் கட்டமைக்கின்றன. உண்மையில், உலகின் எல்லா தேசங்களும் கற்பனையும் வரலாறும் கலந்த கதைகளின் மீதே கட்டப்பட்டுள்ளன.

தோற்றத் தொன்மம் (origin myth) என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு இனத்தை ஒரே அணியாக நிறுத்துவதாகவும், அந்த இனம் ஒன்றுபட்டு செயல்படுவதற்கு வழிவகுப்பதாகவும் தொன்மங்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களின் முடிவாகும். "தொன்மம் போன்ற வெளிப்பாடுகள் ஓர் இனத்தின் கூட்டுமனம்; அந்த இனத்தின் அன்னியோன்யமான கூட்டுத் தன்முனைப்பு; தங்களைப் பற்றிய முழு அர்த்தப்பாடு ஆகும். ஆதலின் தொன்மம் என்பது அந்த இனத்தின் கூட்டுமனப் பிரதிநிதித்துவப் பதிவாகும்" - என்கிறது "வரலாற்று மானிடவியல்" எனும் நூல்.

வலிமையான இனக்குழுக்கள் அனைத்தும் தமது தோற்றம் குறித்த பூர்வீக வரலாற்று கதைகளை மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலமும், அதனை அடையாளப் படுத்துவதன் மூலமுமே நீடித்திருக்கின்றன. உலகின் பல நாடுகளும் இப்படித்தான் தம்மைக் காத்துக்கொண்டிருக்கின்றன.

யூதர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட நிலம்

இஸ்ரேல் என்கிற நாடு உருவானதற்கும், இன்றும் தொடரும் பாலஸ்தீன சிக்கலுக்கும் அடிப்படைக் காரணம் புராணக் கதைதான். எகிப்தில் வாழ்ந்த ஆபிரகாமையும் அவரது சந்ததிகளையும் – “நான் உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நிலத்தை (promised land) காட்டுகிறேன். அதனை உங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளுங்கள்" என்று இறைவன் சொன்னதாக புனித பைபிளும், யூத வேதமும் சொல்கிறது. அவ்வாறு பைபிளில் காட்டப்பட்ட நிலத்தையே யூதர்கள் தங்களுக்கான நாடாக 'இஸ்ரேல்' நாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசீர்வதிக்கப்பட்ட நிலம் (promised land)
கிறிஸ்தவர்களும் யூதர்களும் இஸ்ரேலை உருவாக்குவது கடவுளின் வாக்குறுதியை நிறைவேற்றுவது என்று இப்போதும் நம்புகிறார்கள். அதனால்தான் - பாலஸ்தீன சிக்கல் எப்போதும் முடியாத போராக தொடர்கிறது.

ஜப்பானியர்களின் ஜிம்மு

ஜப்பானிய நாடு ஜிம்மு எனும் மன்னன் குறித்த கற்பனை கதையிலிருந்து உருவானதாகும். சூரிய வம்சத்தை சேர்ந்த ஜிம்மு எனும் மன்னன் 2600 ஆண்டுகளுக்கு முன்பு போரில் வெற்றி கொண்டு ஜப்பானிய தேசத்தை நிர்மானித்தான் என்று அவர்கள் நம்புகிறர்கள்.
ஜிம்மு
ஜிம்மு மன்னன் வெற்றியடைந்த நாள் பிப்ரவரி 11 என்று அறிவித்து, அதனை ஜப்பான் உருவான நாள் என்று இப்போதும் அந்த நாடு கொண்டாடுகிறது.

ரோம சாம்ராஜயத்தின் கதை

உலகப் புகழ்பெற்ற ரோம சாம்ராஜ்யம் கற்பனை கதையின் மீது உருவானது. செவ்வாய் கடவுளுக்கு பிறந்த குழந்தைகளான ரோமுலசும் ரெமூசும் ஆற்றங்கரையில் வீசப்பட்டார்கள். அவர்களை ஒரு ஓநாய் காப்பாற்றி வளர்த்தது.
ஓநாய் வளர்க்கும் குழந்தைகள்
வளர்ந்தவுடன் அவர்களுக்கு இடையிலான மோதலில் ரெமூசை அவனது சகோதரன் ரோமுலஸ் கொன்றான். பின்னர் ரோமுலஸ் ரோம் நகரை நிர்மானித்தான் என்பது ரோம சாம்ராஜ்யத்தின் வரலாறாகும். இந்த வரலாற்றை ரோம் நகரம் இப்போது அடையாளப்படுத்துகிறது.

ஜெர்மனியை உருவாக்கிய ஹெர்மன்

ஹெர்மன் எனும் போர் வீரன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்களை எதிர்த்து போரிட்டு, வெற்றிக்கொண்டு ஜெர்மனியை உருவாக்கினான் என்று ஜெர்மானியர்கள் நம்புகிறார்கள். இந்தக் கதைதான் ஜெர்மானிய தேசியவாதத்தின் அடையாளம் ஆகும். பலநூறு ஆண்டுகள் கழித்து 1800 களில் பிரான்சுக்கு எதிராக ஜெர்மனானிய தேசியவாததை கட்டமைக்க ஹெர்மன் கதையை பயன்படுத்தினார்கள். பிரான்சுக்கு எதிரான போரில் வெற்றியும் அடைந்தார்கள்.
மாபெரும் ஹெர்மன் சிலை
ஹெர்மன் ஜெர்மனியின் தேசத்தந்தை என்று குறிப்பிட்டு 1885 ஆம் ஆண்டில் 175 அடி உயரத்துக்கு ஒரு மாபெரும் செப்புச்சிலையை நிர்மானித்தார்கள். இந்த சிலையின் கையில் உள்ள வாளில் "ஜெர்மனியின் ஒற்றுமையே எனது வலிமை. எனது வலிமையே ஜெர்மனியின் ஒற்றுமை" என்று தங்கத்தால் எழுதி வைத்துள்ளனர். ஜெர்மனியர்கள் குடிபெயர்ந்த அமெரிக்காவில் மின்னசோட்டா, நியூயார்க், மிசௌரி என பல இடங்களிலும் ஹெர்மனுக்கு சிலை வைத்துள்ளனர்.

சிங்கப்பூரின் சிங்கம்

சிங்கப்பூர் தீவுக்கு வந்த ஸ்ரீதிரிபுவன மன்னன் கடலை கடக்கும் போது புயலில் சிக்கினான். அதிலிருந்து தப்ப தனது கிரீடத்தை கடலில் வீசினான். உடனே புயல் நின்றுவிட்டது. தீவில் இறங்கிய போது விநோதமான விலங்கை கண்டான். அது சிங்கத்தைப் போன்று இருந்ததால் அந்த இடத்துக்கு சிங்கபுறம் என்று பெயரிட்டான் என்கிறது சிங்கப்பூரின் வரலாறு.
சிங்கப்பூர் சிங்கம்
அவ்வாறே, சிங்கப்பூர் மக்களை பாதி சிங்கமும், பாதி மீனும் கலந்த ஒரு விலங்கு புயலில் இருந்து காப்பாற்றியது என்பது ஒரு நம்பிக்கை. இந்த கதைகளே அந்த நாட்டின் அடையாள சின்னமும் ஆகும்.

இது போன்று - ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறுகளை முற்றிலும் உண்மை என்று ஏற்கவும் முடியாது. முழுக்க முழுக்க பொய் என்று மறுக்கவும் முடியாது.

கட்டமைக்கப்பட்ட இந்திய நம்பிக்கைகள்

ஆரியர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக வந்து திராவிடர்களை தோற்கடித்தார்கள் என்கிற கதையின் மீதுதான் திராவிட அரசியல் கட்டமைக்கப்பட்டது. ராமராஜ்யம் என்கிற ஒன்று இருந்தது என்கிற கதையின் மீதுதான் பாஜகவின் இந்து தேசிய அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சிங்கமும் அதனை எதிர்க்கும் புலியும்

சிங்கள இனத்தின் முன்னோடி விஜயன் சிங்க வம்சத்தில் வந்தவன் என்கிறது மகாவம்சக் கதை. அதனால் இலங்கை நாடு சிங்கத்தை சின்னமாகக் கொண்டுள்ளது. இலங்கையை வெற்றிகொண்ட சோழர்கள் புலியை சின்னமாகக் கொண்டனர். சோழர்களின் ஆன்மீக தலைமையிடமான சிதம்பரம் புலிவனம் எனப்பட்டது. அங்கு முதலில் வழிப்பட்டவர் புலிக்கால் முனிவர் ஆகும். சிங்களர்கள் தமிழர்களை கொட்டியா (புலி) என்று அழைத்தனர். என்றாவது ஒருநாள் தமிழ் நாட்டு தமிழர்கள் தங்களை மீண்டும் வெற்றி கொள்வார்கள் என்கிற பயம் எப்போதுமே சிங்களர்களுக்கு இருந்தது.
புலியும் சிங்கமும் 
சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக தேசியத்தலைவர் பிரபாகரன் தொடங்கிய இயக்கம் விடுதலைப் புலிகள். அதன் சின்னம் புலிக்கொடி. இப்படியாக, சிங்கள பேரினவாதத்தின் அடையாளமாகவும், அதனை எதிர்த்து போரிடும் விடுதலைப் போரின் அடையாளமாகவும் தொன்மக் கதைகளே உள்ளன.

தமிழகத்தின் இனக்குழு தொன்மங்கள்

உணவை படைப்பதற்காக கங்காதேவி மரபாளனை உருவாக்கினாள். பசியை தீர்க்கவல்ல உழவுத் தொழிலை அவனுக்கு இந்திரன் பணித்தான். இந்திரனும் குபேரனும் அவனுக்கு பெண் கொடுத்தனர் என்பது கொங்கு வெள்ளாளர்களின் ஒரு கதை ஆகும்.

தகாத உறவில் பிறந்த கூத்தன் எனும் மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்து, ஸ்ரீவைகுண்டத்துக்கு ஓடி அங்கு கோட்டைக் கட்டி வாழ்ந்தவர்கள் கோட்டைப்பிள்ளைமார் என்பது அவர்களது கதை. இதே போன்று, பூம்புகாரில் இருந்த நகரத்தார்கள் சோழ மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்து, தங்களது எல்லா பெண்களையும் கொலை செய்துவிட்டு - ஆண்கள் மட்டுமே காரைக்குடி பகுதிக்கு தப்பிச்சென்று, அங்கு வேளாளர் பெண்களை திருமணம் செய்துகொண்டனர் என்பது நகரத்தாரின் கதை.

தேவலோகக் கன்னிகளுக்கு பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி எடுத்து வளர்த்தார். அவர்கள் வழி வந்தவர்களே நாடார்கள் என்பது ஒரு கதை ஆகும். மீன் பிடிக்க வலைவீசிய பருவதராஜா, மீனோடு சேர்த்து முனிவரையும் பிடித்துவிட்டார். அதனால் பெற்ற சாபத்தால் - பருவதராஜ குலத்தினர் மீன்பிடி தொழிலை செய்கின்றனர் என்பது அவர்களது நம்பிக்கை.

இது போன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான சாதியினருக்கு, ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தொன்மக் கதைகள் உள்ளன.

வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்

இந்தியாவின் மன்னர் பரம்பரையினர், போர் வீரர்கள் தம்மை சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம் என்று கூறிக்கொண்டனர். அந்த மரபின் படியே வன்னியர்கள் தம்மை அக்னி வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில், வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள் என்பது நம்பிக்கை ஆகும்.
வன்னியர் சின்னம்
‘அக்னி வம்சம்’ என்கிற கருத்தாக்கம், அதாவது 'யாகத்தீயில் இருந்து அவதாரம் எடுக்கும் நிகழ்வு' புறநானுறு காலத்தில் இருந்தே தமிழர் வரலாற்றில் உள்ளது. ("நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றி" - நீ வடபால் முனிவன் யாகக் குண்டத்தில் தோன்றியவன் - என்கிறது புறநானூறு பாடல் 201)  
வல்லாள மகராஜன், திருவண்ணாமலை
அருணாச்சல புராணம் திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகராஜனை, "மூவகையுள் வன்னி குலத்தினில் வரு மன்னா" என்கிறது. வில்லிபாரதம் சோழர்களை சூரிய வம்சம், பாண்டியர்களை சந்திரவம்சம், சேரர்களை அக்னி வம்சம் என்று குறிக்கிறது.

‘சோழர்களின் வீழ்ச்சிக்கு பின்பும் - விஜயநகர பேரரசின் படையெடுப்புக்கு முன்பும்’ தமிழ்நாட்டில் வன்னியர்கள் மற்றும் அக்னி வம்சம் குறித்த கருத்துக்கள் மேலோங்கியிருந்தது. அக்காலத்தில் வடதமிழ்நாடு 'வன்னியர் ராஜ்யம்' என்று பெயர்பெற்றிருந்தது. வன்னிய நாட்டை வெற்றி கொள்வதும், வன்னிய ராஜாக்களை வெல்வதும் விஜயநகரப் படையெடுப்பின் நோக்கம் என்று கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் சமஸ்கிருத காவியம் குறிப்பிடுகிறது. அதே போன்று இலங்கையிலும் வன்னியர் ஆட்சி சிறப்பு பெற்றிருந்ததை இலங்கையின் வையா பாடல் குறிப்பிடுகிறது.
திரௌபதி, பெங்களூர்
இதே போன்று, வன்னிய புராணத்திலும், வைத்தீஸ்வரன் கோவில் கல்வெட்டிலும், கம்பரின் சிலை எழுபது பாடலிலும், இலங்கையின் வையா பாடலிலும் 'வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள்' என்கிற செய்தி கூறப்பட்டுள்ளது. அக்னியில் தோன்றிய சத்திரியர்களான வன்னியர்கள் தீயில் தோன்றிய தெய்வமான திரௌபதியை வழிபடுகின்றனர். இது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத பழக்கம் ஆகும்.

வன்னிய ராஜன் கதை

வன்னிய புராணம் என்பது தமிழக மன்னர்கள் நடத்திய மாபெரும் போர்களின் தொகுப்பு. பாதாமியிலிருந்து ஆட்சி செய்த சாளுக்கிய மன்னன் புலிகேசியை பல்லவ மாமன்னன் நரசிம்மவர்ம பல்லவன் வெற்றிக்கொண்ட கதை இதில் முதன்மையானது என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். (நரசிம்மவர்ம பல்லவன் வரலாறு கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' நாவலிலும், எம்ஜிஆர் நடித்த 'காஞ்சித் தலைவன்' திரைப்படத்திலும் கூறப்பட்டுள்ளது).

மக்களுக்கு துன்பம் விளைவித்த வாதாபி சூரனை அழிப்பதற்காக, சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்புத் துளியை, சம்பு முனிவர் செய்த யாகத்தில்  விழுச்செய்தார். அக்னி குண்டத்திலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் உதயமானவர் வீர வன்னிய மகாராஜா.
'ஓம குண்டத்தில் தோன்றிய போது தலையில் மகுடமும், கையில் வில்லும் கேடயமும் வேலும்... தோளில் அம்புகளும் அம்பறாத் தூணியும்... கட்டாரியும், வாளும், செங்கழுநீர் மாலையும் அணிந்து வீரவன்னிய ராஜன் தோன்றினான்' என்கிறது 'வீர வன்னியர் கதை - வன்னிய புராண வசனம்' எனும் நூல்.

சம்பு முனிவர் செய்த யாகத்திலிருந்து வீர வன்னிய மகாராஜா தோன்றிய நாள் பங்குனி உத்திரம். யாகம் நடந்த இடம் திருவானைக்கா, அங்குள்ள கோவில் சம்புகேஸ்வரம் எனப்படுகிறது. வன்னி குச்சியை எரித்து உருவான யாகத்தில் தோன்றியதால் வீர வன்னிய மகாராஜா என்று அழைக்கப்பட்டார். வன்னிய மகாராஜன் வழி வந்தவர்கள் வன்னியர்கள் என்பது வன்னிய புராணம் கூறும் செய்தி. இது வன்னிய நாடகம், வன்னிய கூத்து வடிவிலும் நடத்தப்படுகிறது. வன்னியராஜன் கோவில்களும் சில ஊர்களில் உள்ளன.
 வன்னிய நாடகம்
வீர வன்னிய மகாராஜா அவதரித்த பங்குனி உத்திர திருநாளை வன்னியர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். வன்னியர் குறித்த வன்னிய புராண தொன்மக் கதையை பரப்பவும், குழந்தைகளுக்கு படிப்பிக்கவும் வேண்டும்.

வரலாற்று அடையாளத்தின் தேவை என்ன?

ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு இனக்குழுவும் தம்மை ஒருங்கிணைத்து, அடிமைத் தளைகளில் இருந்து விடுதலையாக வரலாறும், அந்த குழுவின் தொன்மமும் முதன்மையான கருவிகளாக உதவுகின்றன. காலம் தோரும் வரும் ஆபத்துகளுக்கு எதிராக தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ஒற்றுமை அவசியம் ஆகும்.

மனிதர்களின் மிகப்பெரிய பலம் அவர்கள் கூட்டாக செய்ல்படுவதுதான். ஒரு சிலர் அல்லது சில நூறு பேர்தான் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக அறிமுகமாகி, கூட்டாக செயல்பட முடியும். அதே நேரத்தில், லட்சக்கணக்கான மக்கள் நேரடியான அறிமுகத்தின் மூலம் தம்மை ஒரே குழுவாக அடையாளம் காண்பது சாத்தியம் இல்லை.

லட்சக்கணக்கான மக்களை 'நீயும் நானும் ஒன்று. உன்னுடைய நலனும் என்னுடைய நலனும் ஒன்று. நாம் இணைந்து ஒரே இலக்கில் பாடுபடுவோம்' என்கிற கூட்டுமனத்தை உருவாக்குவது வரலாற்று உணர்வும், தம்மை பிணைக்கும் தொன்மக் கதைகளும், அவற்றுக்கான அடையாள சின்னங்களும் தான்.

அக்னி வம்சம், அக்னி கலசம், மஞ்சள் - சிவப்பு நிறம் என்பது பல லட்சம் வன்னியர்களை ஓரணியாக உணரச் செய்யும் மாபெரும் அடையாளம் ஆகும். இந்த அடையாளத்தின் ஆணிவேறாக இருப்பது நெருப்பில் தோன்றிய வீர வன்னிய மகாராஜனின் கதை. 

வீர வன்னிய மகாராஜா அவதரித்த பங்குனி உத்திர திருநாளைக் வன்னியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்.
குறிப்பு: வன்னியர்கள் மட்டுமல்ல. இதே போன்று, தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமூகமும் தது தொன்ம வரலாற்றுக் கதையை போற்ற வேண்டும்.  ஏனெனில், தமிழ்நாட்டை சீரழிக்கும் ஆபத்துகளான, ஏக இந்தியக் கொள்கை, மதவெறி தீவிரவாதம், தமிழர் அடையாள அழிப்பு, திராவிடத் திணிப்பு, கம்யூனிச சர்வதேசியம் ஆகிய கேடுகளில் இருந்து - பன்முக அடையாளங்களே தமிழகத்தை காப்பாற்றும். இதுவே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் இருக்கும். தமிழகத்தின் புதிய தேசிய வாதம் என்கிற எழுச்சியின் ஆதாரமாக பன்முக அடையாளங்களே இருக்கும்.

சனி, மார்ச் 11, 2017

சிவபெருமானின் தந்தை வீர வல்லாள மகாராஜா

அருள்மிகு அண்ணாமலையார் மகனாக அவதரித்து மகனின் கடமை ஆற்றும் மாசி மகம் திருநாள்!
மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர். இவருக்கு சிவபெருமானே மகனாக வந்து பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இறந்து போன தனது தந்தை வல்லாள மகராஜனுக்கு மாசி மகம் நாளில் சிவபெருமானே திதி கொடுக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கோவிலில் நடந்து வருகிறது.

பின்னணி

ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு. இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை.
வல்லாள மகாராஜா சிலை, திருவண்ணாமலை கோவில்.

ஹோய்சாள மன்னர்கள் சோழர்களுடனும் பாண்டியர்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். அவர்களால் மாமன் உறவில் அழைக்கப்பட்டனர். சோழப்பேரரசை பாண்டியர்களிடமிருந்தும் காடவர்களிடமிருந்தும் இவர்கள் காப்பாற்றினர். மூன்றாம் குலோத்துங்கச் சோழனும், மூன்றாம் இராசராசனும் வல்லாள இளவரசிகளை மணந்தனர். இரண்டாம் வல்லாளன் சோழ இளவரசியை மணந்தார். மூன்றாம் வீரவல்லாளனின் தாத்தாவான ஹோய்சாள சோமேஸ்வரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரண்மணையில் வாழ்ந்தார். திருச்சிக்கு அருகே கண்ணனூரில் தலைநகரை அமைத்தார்.

வீர வன்னியர் மரபு

வன்னியர்கள் வடபால் முனிவரின் யாகத்தீயில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னிய புராணம் குறிப்பிடும் செய்தி ஆகும். இதே தொன்மக்கதையை ஹோய்சாளர்களும் கொண்டிருந்தனர்.

கி.மு. 4 ஆம் நூற்றாண்டு வாக்கில் எருமை நகரம் எனப்பட்ட மைசூர் அருகே துவரை நகரை இருங்கோவேள் என்னும் தமிழச் சிற்றரசன் ஆண்டுவந்தான். இவனைப்பற்றி புறநானூறு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

"நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்க னுடைமையிற் பாண்கட னாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்" (புறநானுறு  201)

வடபால் முனிவன் எனப்படும் சம்புமுனிவரின் ஓம குண்டத்தில் தோன்றித் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்தவன் இருங்கோவேள் ஆகும். இவனே புலிக்கடிமால் எனப்பட்டான். பாரியின் மகளிராகிய அங்கவை, சங்கவை என்பவரைக் கபிலர் இருங்கோவேள் அரசனிடம் அழைத்து வந்து மணஞ் செய்து கொள்ளும்படி கேட்டார். இருங்கோவேள் மறுத்துவிட்டான் என்று புறநானூறு கூறுகிறது.
புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் சின்னம், பேலூர்

சம்புமுனிவரின் யாகத்தீயில் தோன்றிய இருங்கோவேள் அரசன், தபங்கர் என்னும் முனிவர் தவம் செய்கையில் பாயவந்த புலியை 'ஹொய்சள' என்று கூறிய முனிவர் ஆணைப்படிக் கொன்றதால் அவன் புலிகடிமால் என்று பெயர் பெற்றான். இந்த வம்சத்தில் வந்தவர்களே ஹொய்சாளர்கள் என்பது உ.வே. சாமிநாத அய்யர், ஞா. தேவநேயப் பாவாணர், மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய அறிஞர்களின் கருத்தாகும்.

புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் என்று புறநானூற்றில் உள்ள தொன்மக்கதையை ஹொய்சாளர்கள் தங்களது சின்னமாகக் கொண்டனர். பேலூர் கோவிலிலும், அவர்கள் கட்டிய திருவண்ணாமலை கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் புலிக்கடிமால் சின்னத்தை சிலையாக வடித்துள்ளனர். புறநானூற்றில் உள்ள அதே துவரை நகரம் தான் ஹொய்சாளர்களின் தலைநகரமாக விளங்கியது. முதலில் துவாரசமுத்திரம் என்றும் பின்ன ஹளபேடு (பழைய நகரம்) என்றும் அழைக்கப்பட்டது.
புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் சின்னம், திருவண்ணாமலை கோவில்.

வன்னிய புராணம் குறிப்பிடும் வன்னியர்கள் யாகத்தீயில் தோன்றியவர்கள் என்கிற தொன்மமும், புறநானூறு குறிப்பிடும் ஹொய்சாளர்கள் யாகத்தீயில் தோன்றியவர்கள் என்கிற நம்பிக்கையும் ஒன்றாக இருப்பது வியப்பளிக்கக் கூடியது ஆகும். கல்வெட்டுகளும் அருணாசலபுராணமும் ஹொய்சாளர்களை வன்னியர்கள் என்று குறிப்பிடுகின்றன.

கர்நாடக மாநிலம் பேலூர் கல்வெட்டு ஹொய்சாளர்களை வன்னிய புத்திரர்கள் என்கிறது. கோலாரில் உள்ள 1291 ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டு ஹொய்சாளர்கள் காலத்தை வன்னியர் காலம் என்று குறிப்பிடுகிறது.

திருவண்ணாமலை கோவில் புராணமான கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம், ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்று குறிப்பிடுகிறது. 

சிவன் மகனாக பிறந்த கதை

வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிடையாலை நிகழ்த்தினார்.

திருவண்ணாமலையில் இருந்த எல்லா தேவதாசிகள் வீட்டுக்கும் சிவகணங்களை அனுப்பிய சிவபெருமான், வல்லாள மகாராஜாவிடம் சைவத் துறவி கோலத்தில் வந்து தனக்கு ஒரு தேவதாசி வேண்டும் என்று கேட்டார். வல்லாள மகாராஜாவும் தேவதாசியை அனுப்புவதாக வாக்களித்தார். ஆனால், ஊரில் உள்ள எல்லா தேவதாசிகளும் சிவகணங்களுடன் இருந்ததால் - வல்லாள மகாராஜாவால் தேவதாசியை கொண்டுவர முடியவில்லை. மன்னனின் கவலை அறிந்த வல்லாள மகாராஜாவின் இளைய ராணி, தானே தேவதாசியாக சிவனிடம் செல்ல முன்வந்தார். துறவி வேடத்தில் சிவன் இருந்த அறைக்குள் ராணி நுழைந்த போது - குழந்தையாக சிவபெருமான் காட்சியளித்தார். ராணியும் மகாராஜாவும் சிவபெருமானை தமது குழந்தையாக ஏற்றனர்.

பின்னர், வீர வல்லாள மகராஜன், மதுரை சுல்தான் மீது போர் தொடுத்தபோது கொலை செய்யப்பட்டார். வீர வல்லாள மகாராஜாவின் இறுதி கடனை இறைவனே திருவண்ணாமலையின் கீழ்த்திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார். வன்னியப்பெருமக்கள் அருள்மிகு அண்ணாமலையானை சம்மந்திமுறை ஏற்று தலைக்கட்டு நடத்தினர். வன்னியர்கள் வாழ்ந்த அந்த ஊருக்கு "சம்மந்தனூர்" என்ற பெயர் வழங்க பெற்றது.

அப்போது முதல் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரையில் சிவபெருமான் தனது தந்தைக்கு திதிகொடுக்கும் மாசி மக திருவிழா கொண்டாடப்படுகிறது. சம்மந்தனூர் வன்னியர்கள் சம்மந்தி உரிமையில் சிவனுக்கு பட்டாடை சாத்துகின்றனர். மறுநாள் வீர வல்லாள மகாராஜனுக்கு பதிலாக திருவண்ணாமலையில் சிவபெருமான் மன்னராக முடிசூடிக்கொள்கிறார். இந்த நிகழ்விலும் வன்னியர்களே காலம் காலமாக பங்கேற்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு, சிவபெருமான் வல்லாள மகராஜனுக்கு திதி கொடுக்கும் மாசி மகம் திருநாள் 11.3.3017 ஆம் நாளிலும், சிவபெருமானுக்கு முடிசூட்டு விழா 12.3.2017 ஆம் நாளிலும் நடைபெறுகிறது.

வியாழன், ஜனவரி 19, 2017

ஜல்லிக்கட்டு: பிரதமர் மோடியின் அண்டப்புளுகு!

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவசர சட்டத்தை கொண்டுவர முடியாது என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அதே போன்று, 'காளையை காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து பிரதமர் மோடி நீக்கியதாகவும், ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததாகவும்' பாஜக அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கூறிவருகிறார்.

- இவை இரண்டுமே அப்பட்டமான கட்டுக்கதைகள், அயோக்கியத்தனமான வாதங்கள் ஆகும்.

மோடியின் கட்டுக்கதை: நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியாதா?

நாடாளுமன்றத்தின் மூலமாக மக்கள் தான் சட்டத்தை உருவாக்குகிறார்கள். அந்த சட்டத்தின் படி வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். எனவே, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் படைத்தது. நீதிமன்ற வழக்கில் உள்ள விவகாரங்களிலும், நீதிமன்றம் தடைவிதித்த கருத்துகளிலும் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தால் முடியும். (A Law of Parliament can be repealed by a repealing Bill, and the rule of sub judice will not apply to such Bill.)

தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, அதை எதிர்த்து முதல் அரசியல் சாசன திருத்தத்தை செய்தது இந்திய அரசு. அதன்பிறகு, நீதிமன்ற வழக்குகளில் உள்ள எத்தனையே விவகாரங்களில் புதிய சட்டங்களை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அவ்வாறு, மோடி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வழக்கு நிலுவையில் உள்ளபோதே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றியதை - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்காக அவசர சட்டம் கொண்டு வரலாம், தமிழர்களுக்காக கொண்டுவர முடியாதா?
உண்மையில், காங்கிரசு அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிரான திருத்தத்தை கொண்டுவந்தது. மோடி அரசு அதனை தொடர்கிறது. தேசிய கட்சிகளுக்கு தமிழர்களின் பண்பாடு என்றாலே வலிக்கிறது. எப்படியாவது தமிழ் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்கிற இனப்படுகொலை நோக்கம் தவிர, இந்தியப் பேரரசின் ஜல்லிக்கட்டு எதிர்ப்புக்கு வேறு காரணம் எதுவும் இல்லை.

பாஜகவினரின் கட்டுக்கதை: காளையை நீக்கினார்களா?

 '2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் காளையை காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து பிரதமர் மோடி நீக்கியதாகவும், ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததாகவும்' பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிவருகிறார். இது ஒரு பச்சைப் பொய் ஆகும்.

காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளான (shall not be exhibited as performing animal) கரடி, சிங்கம், புலி, குரங்கு, சிறுத்தை ஆகிய விலங்குகளுடன் காளை மாடும் சேர்க்கப்பட்டதை கண்டித்துதான் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்தன. (காளையை சேர்த்தவரகள் - யானை, ஒட்டகம், குதிரையை இந்த தடைப்பட்டியலில் ஏன் சேர்க்கவில்லை?). இந்தப் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டின் கோரிக்கை.

ஆனால், 2016-ம் ஆண்டு ஜனவரி 7 ஆம் நாள் மோடி அரசு வெளியிட்ட அறிவிக்கையில் (Ministry of Environment and Forest, Notification number G.S.R. 13(E) 7.1.2016), காளை மாட்டை நீக்கி உத்தரவிடவில்லை. மாறாக, காளைகளை ஜல்லிக்கட்டில் பயன்படுத்த விதிவிலக்கு அளிப்பதாக கூறியிருந்தார்கள் (bulls may be continue to be exhibited as a performing animal). இந்த விதிவிலக்கை தான் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
மோடி அரசு வெளியிட்ட அறிவிக்கை 7.1.2016
கடந்த ஆண்டே, தடைவிதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கியிருந்தால் - ஜல்லிக்கட்டுக்கு தடை நேர்ந்திருக்காது. அப்படி செய்யாமல் ஏமாற்றிவிட்டு - இப்போது, 'தடைப் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கினோம்' என்று பச்சையாக பொய்சொல்கிறார் பாஜக அமைச்சர்.

பாஜகவின் போலி வேடம்

ஆதிசேஷனுக்கு ஆயிரம் நாக்கு என்பார்கள். பாஜக - சங்கப்பரிவார கும்பலுக்கும் ஆயிரம் நாக்குதான். ஜல்லிக்கட்டை எதிர்க்க மேனகா காந்தி, மாணவர் போராட்டத்தை எதிர்க்க சுப்ரமணியன் சாமி, சப்பைக்கட்டு கட்ட பொன். ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டை ஆதரிக்க தருண் விஜய் - என பலவேஷம் கட்டி ஆடுகிறார்கள்.

மோடி நினைத்தால் இன்றைய தினமே அவசர சட்டத்தைக் கொண்டுவர முடியும். அதனை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கவும் முடியும். அதற்கு மேலும் நீதிமன்றம் தலையிடும் என்று நினைத்தால் - அச்சட்டத்தை 'நீதிமன்றம் தலையிடாத' அரசியல் சட்டபிரிவில் (இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950, அட்டவணை 9) சேர்க்கவும் முடியும். 

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதுதான் உண்மை. ஆனால், தமிழனுக்கு என்று தனி அடையாளம், தனி பண்பாடு இருக்கிறது என்பதையே ஏற்க மறுத்து, ஏக இந்திய பண்பாட்டில் தமிழர்களை கலக்கத்துடிக்கும் இனவெறி இந்திய தேசியவாதிகள் இதனை செய்ய மாட்டார்கள் என்பதே உண்மை.

தொடர்புடைய இடுகைகள்:






புதன், ஜனவரி 18, 2017

ஜல்லிக்கட்டு: சாதி ஒழிப்பு கும்பலின் இரட்டை வேடம்!

திராவிடர் அரசியல், சாதி ஒழிப்பு அரசியல், தீவிர இடதுசாரி அரசியல் ஆகியவற்றை முன்னெடுத்த அமைப்புகள் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றன. அந்த அமைப்புகளில் சில இப்போது மாற்றிப்பேசி ஜல்லிக்கட்டு ஆதரவு போலி வேடம் போடுகின்றன.

நிலப்பிரபுத்துவ கால விளையாட்டு என்றும், சாதி ஆதிக்க விளையாட்டு என்றும் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தோர் சிலர் இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதவாக இருப்பது போல காட்டிக்கொள்கின்றனர்.

மகஇகவின் இரட்டை வேடம்

"ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?" என்று கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்தது மகஇக அமைப்பு. அதன் பல வேடங்களான புதியகலாச்சாரம், மக்கள் அதிகாரம், வினவு என்கிற பெயர்களில் எதிர்ப்பை கிளப்பியது.

"ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் ஊதிப்பெருக்குவது போல, ஜல்லிக்கட்டு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமல்ல. தென்மாவட்ட ஆதிக்க சாதியினரின் சாதித் திமிரைப் பறைசாற்றும் ஓர் ஆதிக்கப் பண்பாட்டுச் சின்னம்தான்" என்றும், "கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் இடைநிலை ஆதிக்க சாதிகளின் சாதி ஆணவத்தைப் பாதுகாக்கும் ஜல்லிக்கட்டை ஆதரிப்பது.. உழைக்கும் மக்களுக்கு ஆபத்து" - என்றும் கூறியது மகஇக.

இப்போது அதே அமைப்பினர் - டெல்லிக்கு எதிராக மல்லுக்கட்டு என்று பாடல் வெளியிட்டும், மக்கள் அதிகாரம் என்கிற பெயரில் மஞ்சுவிரட்டு நடத்த முயற்சித்தும் - இரட்டை வேட நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தி இந்துவின் இரட்டை வேடம்

ஒரு நிலபிரபுத்துவ அடையாளம் என்று சொல்லி தி இந்து நாளிதழ் ஜல்லிக்கட்டை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தது. ஜல்லிக்கட்டை தடை செய்தது சரிதான் என்று வாதிட்டு மிகக் கடுமையான தலையங்கங்களை எழுதியது தி இந்து நாளிதழ். A political misadventure (13.01.2016) Saying no to jallikattu, again (19.11.2016) - என்று தலையங்கம் எழுதியது தி இந்து.

ஆனால் இப்போது அதே இந்துவின் தி இந்து தமிழ் நாளிதழ் - "ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசை நெருக்குங்கள்!"  (13.01.2017) என்று தலையங்கம் எழுதியுள்ளது.

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் தலித், திராவிட, முற்போக்கு அமைப்புகள்

இவ்வாறு சில அமைப்புகள் நேரத்துக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் - பல தலித், திராவிட, முற்போக்கு அமைப்புகள் இப்போதும் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு ஒரு ஆதிக்க சாதி அடையாளம் என்பதே அவர்கள் வாதம் ஆகும்.

தலித் முரசு இதழ் மிக நீண்டகாலமாக ஜல்லிக்கட்டை எதிர்த்து வந்தது. சாதி ஒழிப்பு இணையமான கீற்று இப்போதும் மிகக் கடுமையாக ஜல்லிக்கட்டை எதிர்க்கிறது. "பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு செயல்தான் ஜல்லிக்கட்டு" என்று இப்போதும் எழுதிவருகிறார் கீற்று நந்தன் (ஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும் 02.01.2017).

அவ்வாறே, கொளத்தூர் தா. செ. மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம் "ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அப்பாவி இளைஞர்கள்" என்கிற தலைப்பில் ஜல்லிக்கட்டை கடுமையாக எதிர்த்துள்ளது.

ஆக மொத்தத்தில் - திராவிடர் அரசியல், சாதி ஒழிப்பு அரசியல், தீவிர இடதுசாரி அரசியல் -  அமைப்புகள் ஜல்லிக்கட்டை தீவிரிமாக எதிர்க்கின்றன.

சுற்றுச்சூழலை காப்பாற்றும் ஜல்லிக்கட்டு

மொழி, பண்பாடு, சுற்றுச்சூழல் இந்த மூன்றுவிதமான பன்மயங்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஒரு இடத்தில் நிலவும் இயற்கைச் சூழலும் அந்த இடத்தில் வாழும் மக்களின் பண்பாடும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. இயற்கை பண்பாட்டின் ஆதாரமாக இருக்கிறது. பண்பாடு இயற்கையை காக்கும் மனித அறிவின் ஓர் அங்கமாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற காளை மாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் பல பாரம்பரிய மாட்டு இனங்கள் வளர்க்கப்படுவதற்கு காரணமாக உள்ளன. ஜல்லிக்கட்டில் கிராமங்கள் சார்பில் நிறுத்தப்படும் காளைகள் அதிகம். இந்த காளைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமங்களில் உள்ள மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் அழிக்கப்பட்டால் தமிழகத்தில் மாட்டு இனமே அழியும் ஆபத்து ஏற்படும்.

ஜல்லிக்கட்டில் காங்கேயம் காளைகள் புலிக்குளம் காளைகள் பிரதானமாக உள்ளன. கூடவே மலைமாடு, கும்பகோணம், உம்பலாச்சேரி ஆகிய உள்ளூர் மாட்டு இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டு இல்லா விட்டால், இந்த மாடுகளை வளர்ப்பதற்கான தேவை இல்லாமல் போய்விடும். இவற்றை வளர்ப்பதற்கான உள்ளூர் மக்களின் பிரத்தியோகமான அறிவும் அழிந்து போகும்.

எனவே, உயிரிப்பன்மயத்தையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற, ஜல்லிக்கட்டை காப்பாற்ற வேண்டும்.

நாம் ஜல்லிக்கட்டை தீவிரமாக ஆதரிக்கிறோம்

நாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம். அதன் எல்லா நிலைகளிலும் ஆதரிக்கிறோம். ஒரு மதம் சார்ந்ததாகவோ, ஒரு இனம் சார்ந்ததாகவோ, ஒரு சாதி சார்ந்ததாகவோ - எந்த அடிப்படையில் பார்த்தாலும் ஜல்லிக்கட்டு ஆதரிக்கப்பட வேண்டியதே.

சாதி கடந்தோ, மதத்தைக் கடந்தோ - எதற்காக ஜல்லிக்கட்டை பார்க்க வேண்டும்? சாதியையோ, மதத்தையோ அடிப்படையாக வைத்து ஜல்லிக்கட்டை நடத்தினால் என்ன தவறு? முத்தரையர், மறவர், கள்ளர் போன்ற சாதியினர் இதனை தங்களது விழா என்று கொண்டாடினால், அதில் என்ன குற்றம் இருக்கிறது?

தமிழ்நாட்டின் 300 விதமான சாதிகளுக்கும் சம வாய்ப்பு அளித்து எந்த விழாவையும் நடத்த முடியாது. எனவே, சாதி கடந்து, அனைத்து தமிழர்களுக்குமான விழா என்று எதுவும் இருக்க முடியாது! (எல்லோருக்கும் பொதுவான பொங்கல் பண்டிகையைக் கூட, ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு வகையறாவிலும் ஒவ்வொரு விதமாகத்தான் கொண்டாடுகிறார்கள்.)
திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில் என எல்லாவற்றிலும் சாதி ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கவே செய்கின்றன. அதற்காக 'திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில்' என எல்லாவற்றையும் இல்லாமல் செய்துவிட முடியாது. (தீண்டாமை, சாதி அடிமைத்தனம், மனித உரிமை மீறல்கள் எந்த இடத்தில் இருந்தாலும் - அவை களையப்பட வேண்டும்)

ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார நிகழ்வுகள் ஒரு இனத்துக்காக, ஒரு சாதிக்காக, ஒரு வம்சத்துகாக, ஒரு குடும்பத்துக்காக என எந்த அளவில் நடந்தாலும் - அதனை அந்த இனத்தின், சாதியின், வம்சத்தின், குடும்பத்தின் உரிமையாக கருதி அதனை பாதுகாக்கவே வேண்டும்.

சாதிகள், இனங்கள், மதங்கள், மொழிகள், நம்பிக்கைகள் என பன்முக அடையாளங்களை அங்கீகரித்துதான் மனித சமூகம் நீடித்திருக்க முடியும். இந்த அடையாளங்களை தொலைத்துவிட்டு, மானுட சமூகம் நீடித்திருக்க வாய்ப்பே இல்லை.


தொடர்புடைய இடுகைகள்:

1. ஜல்லிக்கட்டின் அரசியல்: ஐநா சுற்றுச்சூழல் உடன்படிக்கை கூறுவது என்ன?

2. முஸ்லிம் நாட்டில் ஜல்லிக்கட்டு - எதிர்க்கும் இந்தியா: நீங்கள் அறியாத தகவல்கள்!

3. ஜல்லிக்கட்டு: உலகம் அழியாமல் தடுக்கும் உன்னதப் பண்பாடு!


4. ஜல்லிக்கட்டை எதிர்க்கும் முற்போக்கு - சாதிஒழிப்பு கும்பல்!

திங்கள், ஜனவரி 16, 2017

ஜல்லிக்கட்டின் அரசியல்: ஐநா சுற்றுச்சூழல் உடன்படிக்கை கூறுவது என்ன?

ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் உயிரின பன்மயத்தைக் காப்பாற்றும் முயற்சியில் உலகநாடுகள் ஈடுபட்டுள்ளன. அந்த முயற்சியில் ஜல்லிக்கட்டும் ஒரு உயிரிப்பன்முகத்தன்மை (biodiversity) முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாரம்பரிய விளையாட்டாக உள்ளது. 

ஆனால், இந்திய அரசும் தமிழக அரசும் இந்த சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உணராமலும், இதனை உச்சநீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலும் - ஒரு பாரம்பரிய விளையாட்டுக்கு மூடுவிழா நடத்தப்படுவதை வேடிக்கைப் பார்க்கின்றனர்.

ஜல்லிக்கட்டில் மாடும் மனிதனும் தொடர்புபட்டிருக்கிறார்கள். இந்தத் தொடர்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே தொடங்கிய பந்தம். ஏறுதழுவுதல் என்பது தமிழர் பண்பாட்டில் பன்னெடுங்காலமாக இருந்துவரும் ஒரு பாரம்பரிய விளையாட்டு. சிந்து சமவெளி நாகரிகத்திலும், தொல்தமிழர் ஓவியங்களிலும், நடுகற்களிலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் இந்த விளையாட்டு இடம்பெற்றுள்ளது.

மஞ்சு விரட்டு என்பது ஊரில் உள்ள மாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைச் சுதந்திர வெளியில் திரிய விடுவதாகும். வட மாவட்டங்களில் இவ்விளையாட்டு உயிர்ப்புடன் நிலவுகின்றது. பொங்கல் திருநாளை அடுத்து மாட்டுப் பொங்கல் கொண்டாடிய பின்னர் பொதுவாக பரிசுப் பொருள்கள் கட்டி ஊர்ப் பொதுவிடங்களில் இளைஞர் பிடிக்குமாறு விடும் ஒரு விழாவாக மாடு விரட்டுதல் நடைபெறுகிறது. 

நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மாடு விடுதல் என்னும் விளையாட்டு நடைபெறுகின்றது. ஒவ்வொரு ஊர் சார்பாக வளர்க்கப்படும் மாடுதான் இந்தப் பந்தயத்தில் பங்கு பெறுகின்றது. எந்த மாடு முதலில் வருகின்றதோ அதற்குப் பரிசு தரப்படுகிறது. அறுவடை முடிந்து மக்கள் மகிழ்ச்சியாக விளையாடி மகிழும் விளையாட்டுக்கள் இவை. இவற்றில் பயன்படுத்தப்படும் மாடுகள் போற்றப்படுகின்றன. அவற்றைப் பேணி வளர்க்கிறார்கள்.
மடகாஸ்கர் நாட்டின் ரூபாய் தாளில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு

மாடு விரட்டுதல் என்பது மிகச்சில நிமிடங்கள் நடக்கும் ஆபத்தில்லாத விளையாட்டு ஆகும். ஜல்லிக்கட்டு அதைவிட குறைவான நேரமே நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டில் காயம்படாத காளைகள்தான் இடம்பெற வேண்டும் என்பதும், பங்கேற்கும் காளைகளை காயம்படச் செய்யக் கூடாது என்பது விதிகளாக கடைபிடிக்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளில் கோயில் காளை என்பது முக்கியமானதாகும். ஊரே ஒன்று சேர்ந்து வளர்க்கும் இந்தக் காளையை யாரும் பிடிப்பது கூட இல்லை. ஆண்டில் ஓரிரு முறை மட்டுமே ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்கின்றன.

மாடுகளை துன்புறுத்தவே வாய்ப்பில்லாத இந்த விளையாட்டை, மாடுகளைத் துன்புறுத்தி கொலை செய்யும் மேற்குலக நாடுகளின் காளைச் சண்டையுடன் தொடர்புபடுத்தி தடை செய்துள்ளனர். உள்ளூர் மக்களின் கலாச்சார மனித உரிமைக்கு இந்தத் தடை எதிரானதாகும். அவ்வாறே உயிரினப் பன்மயப் பாதுகாப்புக்கும் ஜல்லிக்கட்டு தடை ஆபத்தாக மாறியுள்ளது.

ஜல்லிக்கட்டின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

உலகைக் காக்க இரண்டு உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அறிவியலாளர்களும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் கருதுகின்றனர். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், உயிரினப் பன்மயம் அழியாமல் காத்தல் ஆகியனதான் அந்த இரண்டு அதிமுக்கியமான உலகக் கடமைகள். இந்த இரண்டு நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ளப்பட்டாக வேண்டும். தவறினால் உலகம் பேரழிவைச் சந்திக்கும்.

உலகின் உயிரியல் பன்மயத்தை (biodiversity) காப்பதற்கான ஐநா பேரவை 1992 ஆம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ - டி - ஜெனிரோ நகரில் கூடிய புவி உச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்டது. உயிரியல் பன்மயம் மேலும் அழிந்துவிடாமல் காப்பாற்றுதல், வளம் குன்றா வகையில் உயிரியல் பன்மயத்தைப் பயன்படுத்துதல், அதனால் கிடைக்கும் பலன்களை எல்லா மக்களும் நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொள்ளுதல் என்பது இந்த உயிரியல் பன்மயப் பேரவை (Convention on Biological Diversity) அமைப்பின் நோக்கமாகும்.

இந்த அமைப்பு 18 ஆண்டுகாலம் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியில் 2010 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் ஒரு உடன்பாட்டை எட்டின (Nagoya Protocol). அதன்படி, உயிரினப் பன்மய அழிவைத் தடுத்தல், மரபணு வளங்களை அடைதல் மற்றும் பலன்களைப் பகிர்ந்து கொள்ளுதல் குறித்த செயல்திட்டங்களை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டுள்ளன. இந்திய நாடும் இந்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு ஏற்றுக்கொண்டுள்ளது.
உயிரியல் பன்மயப் பேரவையின் கீழ் உள்ளூர் மக்கள் உலகின் உயிர்வாழ்க்கையைக் காப்பதில் முதன்மை பங்காற்றுகின்றனர். இந்தப் பேரவையின் விதி 8 பத்தி J இன் கீழ் 'உயிரிப் பன்மயப் பாதுகாப்புடன் தொடர்புடைய பாரம்பரிய அறிவினைக் காப்பாற்றுவதும், மதிப்பதும் அரசாங்கத்தின் கடமை ஆகும்.

Convention on Biological Diversity: Article 8. (j)

Each Contracting Party shall, as far as possible and as appropriate: (j) Subject to its national legislation, respect, preserve and maintain knowledge, innovations and practices of indigenous and local communities embodying traditional lifestyles relevant for the conservation and sustainable use of biological diversity and promote their wider application with the approval and involvement of the holders of such knowledge, innovations and practices and encourage the equitable sharing of the benefits arising from the utilization of such knowledge, innovations and practices;

விதி 10 பத்தி C பிரிவின் கீழ் "பாரம்பரிய கலாச்சார வழக்கங்களுக்காக மரபுவழியில் உயிரியல் வளங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதும் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை ஆகும்.

Convention on Biological Diversity: Article 10. (c)

Each Contracting Party shall, as far as possible and as appropriate: Protect and encourage customary use of biological resources in accordance with traditional cultural practices that are compatible with conservation or sustainable use requirements;

ஐநா உயிரியல் பன்மய உடன்படிக்கை என்பது உலகநாடுகளால் ஏற்கப்பட்ட பன்னாட்டு சட்டம் ஆகும். எனவே மேற்கண்ட பன்னாட்டு சுற்றுச்சூழல் சட்டப்பிரிவுகள் பிரிவு 8 J மற்றும் பிரிவு 10 C ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டப்படியான கடமை இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உண்டு.

ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கையை நிறைவேற்றும் வகையில் 'ஆய்ச்சி இலக்கு' எனும் வியூகத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது (Aichi Biodiversity Targets). 2011 - 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் உலகின் உயிரியல் பன்மய அழிவைத் தடுப்பதற்கான செயல்திட்ட வியூக இலக்குகள் இவையாகும்.

இந்த இலக்கின் 13 ஆம் பிரிவு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இனங்கள் உட்பட, பழக்கப்பட்ட விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் மரபின வேறுபாட்டினை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

Aichi Biodiversity Targets – 13

By 2020, the genetic diversity of cultivated plants and farmed and domesticated animals and of wild relatives, including other socio-economically as well as culturally valuable species, is maintained, and strategies have been developed and implemented for minimizing genetic erosion and safeguarding their genetic diversity.

இதே இலக்கின் 18 ஆம் பிரிவு 'உயிரிப் பன்மயப் பாதுகாப்புடன் தொடர்புடைய உள்ளூர் மக்களின் பாரம்பரிய அறிவு, பாரம்பரிய கண்டுபிடிப்புகள், பழக்கங்கள் மற்றும் உயிரியல் வளங்களின் மரபுவழி பயன்பாடும் மதிக்கப்பட வேண்டும். உயிரியல் பாதுகாப்பு உடன்படிக்கையை செயல்படுத்துதலில் இவை உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் இணைக்கப்பட வேண்டும்" என்கிறது.

Aichi Biodiversity Targets – 18

By 2020, the traditional knowledge, innovations and practices of indigenous and local communities relevant for the conservation and sustainable use of biodiversity, and their customary use of biological resources, are respected, subject to national legislation and relevant international obligations, and fully integrated and reflected in the implementation of the Convention with the full and effective participation of indigenous and local communities, at all relevant levels.

ஆக, உயிரியல் பன்மயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உலகளாவிய முயற்சிகளில், உள்ளூர் மக்களின் அறிவு, அவர்களின் மரபுவழி நம்பிக்கைகள், கலாச்சார நடவடிக்கைகள், அவற்றோடு தொடர்புடைய உயிரினங்களும் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டும் அதனுடன் தொடர்புடைய உள்ளூர் மாட்டு இனங்களும் உலகளாவிய உயிரிப்பன்மய பாதுகாப்பில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

பாரம்பரிய அறிவு

ஒவ்வொரு நிலப்பகுதியிலும் நிலவும் பருவகாலம், அங்கு உள்ள தாவரங்கள், விலங்குகள், நீர்வாழ்வன, கால்நடைகள் குறித்த அறிவு அந்தப் பகுதியில் காலம் காலமாக வாழ்ந்துவரும் உள்ளூர் மக்களிடம் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வருகிறது. பேசும் மொழி, பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள், விளையாட்டுகள், கதைகள், ஓவியங்கள், நம்பிக்கைகள் என பல வழிகளிலும் ஒரு தலைமுறையின் பாரம்பரிய அறிவு அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கையின் கீழ் 'பாரம்பரிய அறிவு' என்பது 'பாரம்பரிய அறிவு, கண்டுபிடிப்பு மற்றும் பழக்கம்' என்று வரையறுக்கப்படுகிறது. பலதலைமுறையினரின் பட்டறிவிலும், செய்முறைகளிலும், பண்பாட்டு நிகழ்வுகளிலும் இந்த அறிவு பொதிந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், உள்ளூரில் பேசப்படும் மொழிக்கும் இந்த அறிவுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.

(Traditional knowledge, innovations and practices of indigenous and local communities describes the body of knowledge built by indigenous and local communities over generations. Developed from experience gained over the millennia and adapted to the local culture and environment, traditional knowledge tends to be collectively owned, transmitted orally from generation to generation and has a diversity of forms ranging from stories and folklore to agricultural and animal husbandry practices.)

எனவேதான், 'உயிரியல் வளங்களின் மரபுவழி பயன்பாடு' என்பதை ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கை மதிக்கக் கோருகிறது. 'உள்ளூர் மக்களின் அடையாளம், வாழ்வாதாரம், பண்பாடு, மொழி அனைத்தும் அவர்கள் வாழும் பகுதியின் சுற்றுச்சூழலுடனும் உயிரின வளத்துடனும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதால் - உள்ளூர் மக்களின் பண்பாடும் நம்பிக்கைகளும் கூட உயிரியல் பன்மயத்தைக் காப்பதில் ஒரு அங்கம் தான்.

(Customary use of biological resources refers to indigenous and local systems for the control, use and management of natural resources. Customary use of biological resources includes spiritual, cultural, economic and subsistence functions.)

உள்ளூர் மக்களின் பாரம்பரிய அறிவில் கால்நடைகள் வளர்ப்பு குறித்த அறிவு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பாரம்பரிய கால்நடை இனங்களின் தொடர்ச்சி என்பது ஒரு தனித்த செயல் அல்ல. பாரம்பரிய கால்நடைகளின் இருத்தல் மக்களின் பண்பாடுடனும் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுடனும் இணைந்ததாக இருக்கிறது.
உண்மையில் இந்தியாவின் மரபின கால்நடைகள் அனைத்தும் உள்ளூர் மக்கள் சமூகத்தினரின் பாரம்பரிய கண்டுபிடிப்புகளே ஆகும். அவற்றை இன்றுவரைக் காப்பாற்றி வளர்த்து வருவதும் உள்ளூர் மக்கள்தான்.

உலகளவில் வேறுபட்ட கால்நடை மரபினங்களைக் கொண்டுள்ள நாடுகளில் முதன்மையானது இந்தியா. இங்கு 45 மரபின வகையான மாட்டினங்கள், 4 வகையான ஒட்டக இனங்கள், 19 வகையான ஆட்டு இனங்கள், 39 வகையான செம்மறி ஆட்டு இனங்கள், 19 வகையான கோழியினங்கள், 11 வகையான வாத்து இனங்கள் உள்ளன.

இவை அனைத்தும் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக உள்ளூர் மக்களின் அறிவு வளத்தால் பராமரிக்கப்பட்டு வரும் பழக்கப்பட்ட வீட்டு விலங்கு வகைகள் ஆகும். கருத்தரிக்கச் செய்தல், சரியான மேய்த்தல், நோய்த்தடுப்பு என எல்லாவித பராமரிப்புகளையும் மேற்கொண்டு உள்ளூர் மக்கள் இவற்றை பாதுகாத்து வந்துள்ளனர்.

தமிழகத்தில் 6 வகையான மாட்டு இனங்கள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் காங்கேயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பர்கூர் மலைமாடு என்ற இனமும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உம்மலச்சேரி என்ற இனமும், மதுரை மாவட்டத்தில் புளியகுளம் என்ற இனமும், தேனி மாவட்டத்தில் மலைமாடு என்ற இனமும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற இடங்களில் ஆலாம்பாடி என்ற இனமும் உள்ளன. இந்த மாட்டு இனங்கள் மக்களின் பண்பாட்டில் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன.


ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற காளை மாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் பல பாரம்பரிய மாட்டு இனங்கள் வளர்க்கப்படுவதற்கு காரணமாக உள்ளன. ஜல்லிக்கட்டில் கிராமங்கள் சார்பில் நிறுத்தப்படும் காளைகள் அதிகம். இந்த காளைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமங்களில் உள்ள மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் அழிக்கப்பட்டால் தமிழகத்தில் மாட்டு இனமே அழியும் ஆபத்து ஏற்படும்.

ஜல்லிக்கட்டில் காங்கேயம் காளைகள் பிரதானமாக உள்ளன. கூடவே புலிக்குளம், மலைமாடு, கும்பகோணம், உம்பலாச்சேரி ஆகிய உள்ளூர் மாட்டு இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டு இல்லா விட்டால், இந்த மாடுகளை வளர்ப்பதற்கான தேவை இல்லாமல் போய்விடும். இவற்றை வளர்ப்பதற்கான உள்ளூர் மக்களின் பிரத்தியோகமான அறிவும் அழிந்து போகும்.

ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும்

உலகெங்கும் உள்ளூர் மக்களின் பண்பாட்டுடன் கால்நடைகள் பின்னிப்பிணைந்துள்ளன. பண்பாட்டுத் திருவிழாக்களில் கால்நடைகள் பங்கெடுப்பது கால்நடை இனங்களின் வளர்ச்சிக்கும் எதிரானது அல்ல. பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளான ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகள் மனிதனுடன் இணைந்தே வாழ்கின்றன. மனித பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் அவை இணைந்தே பயணிக்கின்றன. 
இன்றைக்கும் கிராமப்புற வீடுகளில் கால்நடைகளை வளர்க்கும் குடும்பத்தினர் கால்நடைகளையும் குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றனர். உள்ளூர் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ள காளைகள் கலாச்சார திருவிழாக்களில் பங்கேற்பதை விலங்குகளின் பாதுகாப்புக்கு எதிரானதாக சித்தரிப்பது முட்டாள்தனமானது மட்டுமல்ல, தவறான உள்நோக்கமும் கொண்டதாகும்.

தமக்கென்று ஒரு கலாச்சாரத்தை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்களும் தன்னுடைய கலாச்சாரத்தை இழந்தவர்களும் - இன்னொரு பரம்பரிய கலாச்சாரத்தை அழிக்க முயற்சிப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானதாகும்.

'விலங்குகளை வதை செய்யாதே' என்று புதிதாகக் கிளம்பியுள்ளவர்கள் எவரும் கால்நடைகளுடன் வாழ்பவர்களும் இல்லை. அதை வளர்ப்பவர்களும் இல்லை. பாரம்பரிய காலநடை வளம், அதன் வளர்ப்பு முறை போன்ற எதையும் இவர்கள் அறிந்தவர்கள் இல்லை. மிஞ்சிப்போனால், வெளிநாட்டு நாய்களை அதிக விலைகொடுத்து வாங்கி, அதனை குளிர்சாதன அறைகளில் வைத்து கொஞ்சுவதுதான் கால்நடைகளுக்கும் இவர்களுக்குமான உறவு.

பன்னெடுங்காலமாக கால்நடைகளும் தாமும் ஒன்றாகவே வாழ்ந்துவரும் பாரம்பரிய மக்களின் பண்பாட்டை இவர்கள் அறிய மாட்டார்கள். தான் பட்டினி கிடந்து மாடுகளுக்கும் உணவளிக்கும் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டு பழக்கங்களை 'காட்டுமிராண்டித்தனம்' என்று விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. அதில் நியாயம் ஏதும் இல்லை.

மற்றவர்களின் பண்பாட்டு வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் அழிக்க முயல்வதுதான் இனவெறிக்கும், இனப்படுகொலைக்கும் தொடக்கப் புள்ளியாக அமைகிறது. இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

உள்ளூர் மக்களின் பண்பாட்டு வேறுபாடுகளை அழிக்க முயலாமல், அதனை அங்கீகரித்து, பாதுகாக்க முன்வருவதே நாட்டு நலனுக்கும், மக்கள் நலனுக்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் நன்மை செய்வதாக அமையும்.

எனவே, ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல், மாடு விரட்டுதல், மஞ்சு விரட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற பாரம்பரிய இனக் கால்நடைகளுடன் இணைந்த பாரம்பரிய பண்பாட்டு விழாக்களை எதிர்ப்பதைக் கைவிட்டு - அவற்றை ஆதரித்து ஜல்லிக்கட்டு தடையை நீக்க அனைவரும் முன்வர வேண்டும்.

மனிதர்களால் தேர்வு செய்யப்பட்டு காலம் காலமாக வளர்க்கப்பட்டு வரும் 'பழக்கப்பட்ட விலங்கான ' (domesticated animals) காளைகளை மத்திய அரசு வனவிலங்காக அறிவித்த செயல் நியாயமற்றது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து காளைகளை நீக்க வேண்டும். அதன் மூலம் உயர்நீதிமன்றத்தின் தடையையும் நீக்கி, ஜல்லிக்கட்டையும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளி, ஜனவரி 13, 2017

ஜல்லிக்கட்டு: உலகம் அழியாமல் தடுக்கும் உன்னதப் பண்பாடு!


ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதல் நிகழ்ச்சிக்கு தடை விதித்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமான ஏறுதழுவுதல் விழாக்களை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானதாகும்.

உலகின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தற்போதைய முயற்சிகளில், உயிரிப்பன்மயத்தைக் காப்பது முதன்மையானதாகும். இதற்கான ஐநா உயிரிப்பன்மயப் பேரவை (Convention on Biological Diversity) 1992 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, அதன் கீழ் உலக நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கை 2010 ஆம் ஆண்டில் ஐநா அவையால் ஏற்கப்பட்டது.

உள்ளூர் மக்களுக்கும் அவர்கள் வாழும் இயற்கை சூழலுக்கும் இடையேயான பாரம்பரிய அறிவு, உயிரிப்பன்மயத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு இன்றியமையாத தேவை என ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்திய அரசு கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ள இந்த பன்னாட்டு சுற்றுச்சூழல் உடன்படிக்கையின் படி - தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டை காப்பாற்றுவது இந்திய அரசின் கடமை ஆகும். ஜல்லிக்கட்டு தடையை விலக்கத் தவறியதன் மூலம் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தமது கடமையை நிறைவேற்றத் தவறியுள்ளன.

இந்நிலையில், இயற்கையைக் காக்க பாடுபடும் அமைப்புகளும் தனிநபர்களும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முன்வர வேண்டும். ‘ஜல்லிக்கட்டு கூடவா ஒரு சுற்றுச்சூழல் சிக்கல்?' என்ற கேள்வி எழுவது இயல்பு.  'உயிரிப்பண்பாட்டுப் பன்மயம்' (Biocultural Diversity) என்பது இந்தக் கேள்விக்கு விடையாக அமைகிறது.

 'உயிரிப்பண்பாட்டுப் பன்மயம்' என்றால் என்ன?

பலகோடி பால்வெளி மண்டலங்களும் அவற்றுள் பலகோடி விண்மீன்களும் அண்டவெளியில் சுழன்றாலும், உயிர்வாழ்க்கை நிலவும் ஒரே இடமாக பூமி மட்டுமே இருக்கிறது. பூமிப்பந்தில் உயிர் வாழ்வை நீடித்திருக்கச் செய்வதுதான் மனிதன் செய்யக்கூடிய எல்லா செயல்களை விடவும், மிக மிக முதன்மையான செயல்.

உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதன் மூலமாகவே பூமியில் உயிர்வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது. எந்த ஒரு உயிரும் தனித்து வாழ இயலாது. இயற்கை அமைப்பில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு இடமும் தேவையும் இருக்கிறது. எதுவுமே வீணாகப் படைக்கப்படவில்லை. உயிரினங்களுக்கு இடையே உள்ள தொடர்பு ஒரு மாபெரும் வலைப்பின்னல் ஆகும். இந்த வலைப்பின்னலில் ஒரு கண்ணி அறுந்தால் அது மற்றதையும் பாதிக்கும்.

இவ்வாறு உயிரினங்களின் வலைப்பின்னல் பற்றி பேசினால் - அது பூமியெங்கும் உள்ள நுண்ணுயிர்களையும், தாவரங்களையும், விலங்குகளையும் குறிப்பதாக நினைக்கிறோம். ஆனால், தாவரங்களும் விலங்குகளும் மட்டும் இந்த வலைப்பின்னலில் இல்லை. கூடவே, பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்களும் இந்த உயிரின வலையத்தில் தான் வாழ்ந்து வருகிறோம்.

மனிதன் இயற்கைக்கு ஏற்ப தன்னை தகவமைத்து வாழ்ந்து வருகிறான். தனது எல்லா தேவைகளையும் இயற்கையிடம் இருந்துதான் பெறுகிறான். மனிதர்களின் மொழி, பழக்கம், பண்பாடு என எல்லாமும் அவன் வாழும் இயற்கைய சூழலை சார்ந்தே வளர்ந்து வந்துள்ளது.

ஆக, பூமியில் வாழும் உயிரினங்களைப் பற்றி பேசுவதை 'உயிரிப்பன்மயம்' (Biodiversity) என்று குறிப்பிடுவது போன்று - உயிரிப்பன்மயத்துடன் மனித வாழ்வும் இணைந்தே இருப்பதை 'உயிரிப்பண்பாட்டு பன்மயம்' (Biocultural Diversity) என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உயிரிப்பண்பாட்டுப் பன்மயத்தின் மூன்று அங்கங்கள்.

உயிரிப்பண்பாட்டுப் பன்மயம் (Biocultural Diversity)  என்பதை மூன்று பகுதிகளாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் பகுத்துள்ளனர். அவை 1. உயிரிப்பன்மயம் (Biodiversity), 2. பண்பாட்டுப் பன்மயம் (Cultural Diversity), 3. மொழிப் பன்மயம் (Linguistic Diversity) ஆகியனவாகும்.

1. உயிரிப்பன்மயம் (Biodiversity)

உயிரிப்பன்மயம் (Biodiversity) அல்லது உயிரியல் பன்மயம் (Biological Diversity) என்பது உயிரினங்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளைக் குறிப்பது ஆகும். உலகில் வாழுகின்ற நுண்ணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தது 'உயிரிப்பன்மயம்' ஆகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த அளவுக்கு உயிரின வேறுபாடு காணப்படுகிறதோ, அந்த அளவுக்கு அது உயிரிப்பன்மய வளம் மிகுந்த பகுதியாகக் கருதப்படுகிறது.

பூமிப்பந்தில் சுமார் 87 லட்சம் வேறுபட்ட உயிரின வகைகள் இருக்கலாம் என அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். உலகம் முழுமைக்குமான உயிரினங்களின் வேறுபாட்டை உயிரிக்கோளம் (Biosphere) என்றும் அழைக்கின்றனர்.

2. பண்பாட்டுப் பன்மயம் (Cultural Diversity)

பண்பாட்டுப் பன்மயம் என்பது மனிதர்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளைக் குறிப்பது ஆகும். மனிதர்களுக்கு இடையே நிலவும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், வழிபாட்டுமுறை, வாழ்வுமுறை, பேச்சுவழக்கு, உணவுமுறை, உடை என அனைத்தையும் உள்ளடக்கியது பண்பாடு.

உலகம் முழுவதுமான பல்வேறு மனித குழுவுக்கு இடையே இருக்கும் வேறுபட்ட பண்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கி மனிதப்பண்பாட்டுக் கோளம் (Ethnosphere) என்று அழைக்கின்றனர்.

இனம், மொழி, மதம், சாதி, வாழும் இடம் என பலவற்றின் அடிப்படையில் ஒருவரே வேறுபட்ட பண்பாட்டுக் குழுக்களில் இடம்பெறக்கூடும் என்பதால், பண்பாட்டு பன்முகத்தன்மையை துள்ளியமாக அளவிட இயலாது.

3. மொழிப் பன்மயம் (Linguistic Diversity)

மொழிப் பன்மயம் என்பது ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது இடத்தில் எத்தனை மொழிகளைப் பேசுகிறர்கள் என்பதாகும். உலகம் முழுவதும் சுமார் 6500 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 85% மொழிகளை பழங்குடியின மக்கள் தான் பேசுகின்றனர். உலகின் அனைத்து மொழிகளையும் உள்ளடக்கி மொழிக்கோளம் (Logosphere) என அழைக்கின்றனர்.

சுற்றுச்சூழலுக்கும் பண்பாட்டுக்கும் என்ன தொடர்பு?

மொழி, பண்பாடு, சுற்றுச்சூழல் இந்த மூன்றுவிதமான பன்மயங்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பது அறிவியலாளர்களின் ஆய்வு முடிவாகும். ஒரு இடத்தில் நிலவும் இயற்கைச் சூழலும் அந்த இடத்தில் வாழும் மக்களின் பண்பாடும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. இயற்கை பண்பாட்டின் ஆதாரமாக இருக்கிறது. பண்பாடு இயற்கையை காக்கும் மனித அறிவின் ஓர் அங்கமாக இருக்கிறது.

மனிதன் தோன்றியதில் இருந்தே இயற்கையுடன் இணைந்துதான் வாழ்கிறான். உணவு, குடிநீர், காற்று, மருத்துவம், உடை, வீடு என எல்லா பொருட்தேவைகளுக்கும் இயற்கையை சார்ந்தே வாழ்கிறான். மனம் சார்ந்த, நம்பிக்கை சார்ந்த தேவைகளுக்கும் மனிதன் இயற்கையை சார்ந்திருக்கிறான்.

இயற்கையுடனான மனிதனின் இந்த தொடர்பு தாவரங்கள், உயிரினங்கள், பருவகாலம் குறித்த புரிதலையும் அறிவையும் உருவாக்குகிறது. இந்த அறிவு அந்தந்த பகுதிக்கு ஏற்ப அமைகிறது. உள்ளூர் மக்களின் இந்த ஆழ்ந்த அறிவும் அனுபவமும் அந்தப் பகுதியில் பேசப்படும் மொழியில் செறிந்து, அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.
இவ்வாறாக, ஒரு பகுதியில் இருக்கும் உயிரிச்சூழல், மக்கள் பேசும் மொழி, அவர்களது பண்பாடு ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான உறவாக நீடிப்பதுடன் - ஒன்று மற்றொன்றை வளப்படுத்துகிறது. மொழியும் பண்பாடும் அழியுமானால், அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலும் அழிந்து போகும்.

மக்கள் பண்பாட்டில் வேறுபாடும் மொழிகளில் வேறுபாடும் மிகுதியாகக் காணப்படும் இடங்களில்தான் சுற்றுச்சூழல் வளம் அதிகமாக இருக்கிறது. ஒற்றை மக்கள் இனமும் ஒற்றை மொழியும் பேசப்படும் இடங்களில் உயிரின வளமும் குறைவாக இருக்கிறது. ஆக, எங்கே பண்பாட்டில் பன்முகத் தன்மை நீடிக்கிறதோ, அங்கே உயிரியல் பன்மயமும் நீடிக்கும்.  

எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால் - உயிரியல் பன்மயத்தைக் காப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், பண்பாட்டுப் பன்முகத் தன்மையையும் மொழிப் பன்மயத்தையும் கூட காப்பாற்றியாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

உயிரிப் பண்பாட்டு பன்மயத்துக்கு என்ன நடக்கிறது?

உயிரியல் பண்பாட்டு பன்மயச் சூழல் இப்போது அழிந்துகொண்டிருக்கிறது. அறிவியலாளர்கள் கருத்துப்படி மனித இனம் ஆறாவது பிரளத்தை நோக்கிப் பயணிக்கிறது (6th mass extinction of life on earth). அதாவது, இந்த பூமிப்பந்தில் உயிர்வாழ்க்கை இது வரை ஐந்து முறை பேரழிவைச் சந்தித்து மீண்டிருக்கிறது. கடைசியாக 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிர்வாழ்க்கை அழிந்தது. அப்போதுதான் டைனோசர்கள் அழிந்தன. அந்தப் பேரழிவில் தப்பித்த மிகச்சில உயிரிகளில் இருந்துதான் மனிதன் தோன்றினான்.

இதற்கு முன்பு நேர்ந்த பிரளயங்களுக்கும் இப்போதைய பேரழிவுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் - முந்தைய பேரழிவுகள் எல்லாம் இயற்கையாகவே நேர்ந்தன. இப்போதைய உலகப் பேரழிவு மனித செயல்களால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதனால் உலகம் பேரழிவில் சிக்கியிருப்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக காலநிலை மாற்றத்தையும் உயிரிப்பன்மய அழிவையும் சொல்லலாம்.

உயிரிப்பன்மய அழிவினை தனியாக வெறும் உயிரினங்களின் அழிவு என்று மட்டும் பார்க்க முடியாது. அதனுடன் சேர்த்து பண்பாடும் மொழியும் அழிகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகெங்கும் மொழி வேறுபாடும், கலாச்சார வேறுபாடும் அழிந்து - ஒரு சில மொழிகளையும் மிகச்சில கலாச்சாரங்களையும் பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டுக்கு பின்னாலான காலத்தில் உலக மொழிகளில் 20% அழிந்து போய்விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, சிறிய மொழிகளைப் பேசுவோர் அதனைக் கைவிட்டு பெரிய மொழிகளைக் கைக்கொள்வதால் மொழிகள் அழிந்துபோகின்றன.

பண்பாடும் மொழியும் இயற்கையுடன் இணைந்து வாழும் அறிவை ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்திவருவது காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஒரு பகுதியின் மொழியும் பண்பாடும் அழியும்போது, அந்தப்பகுதியின் இயற்கையுடனான மனித உறவில் விரிசல் ஏற்படுகிறது. இது சுற்றுச்சூழல் அழிவிற்கு வழிவகுக்கிறது.

உயிரிப் பண்பாட்டு பன்மயம் ஏன் அழிகிறது?

உயிரியல் பன்மயம், மொழிகள், பண்பாடு - இவை எப்போதும் ஒரே நிலையில் இருப்பது இல்லை. இயற்கை தொடர்ச்சியாக தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. உயிரிச்சூழலிலும், மொழிகளிலும், பண்பாட்டிலும் மாற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. எந்த ஒரு புதுச் சூழ்நிலையிலும் இயற்கை தனக்குத்தானே தகவமைத்துக் கொள்ளும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. இயற்கையுடன் இணைந்து கலாச்சாரமும் புதுமையடைகிறது.

இந்த மாற்றம் மிக மெதுவாகவும், தேவைக்கான அளவிலும் மட்டுமே இத்தனைக் காலமும் நடந்து வந்திருக்கிறது. மனித இனத்திலும், உயிரினங்களிலும், இயற்கை சூழலிலும் பல தலைமுறைகள் காலத்தில் மெதுவாக மாற்றம் நேர்ந்தது. ஆனால், இப்போது எல்லாமும் திடீரென மாறிவருகின்றன. சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் உலகம் முழுவதும் ஒரே பாதைக்கு மாற்றப்படுகிறது. ஒற்றை மயமான உலகம். ஒற்றை மயமான பொருளாதாரக் கொள்கை, ஒற்றை மயமான அரசியல். ஒரு சில மொழிகள் - என வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதுபோல, உலகில் எல்லாமும் ஒற்றைத் தன்மைக்கு மாற்றப்படுகிறது.

பன்முகப்பட்ட கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என அனைத்தும் மாற்றப்பட்டு - ஒரே வண்ணம் பூசும் நோக்கில் மாற்றங்கள் திணிக்கப்படுகின்றன. ஒரு காட்டில் எல்லா விலங்கும் சிங்கமாக இருந்தால் அங்கு சிங்கங்களின் வாழ்க்கை நீடிக்காது. ஒரு காட்டில் எல்லா மரங்களும் ஒரே வகை மரங்களாக இருந்தால் அந்த காடும் நீடிக்காது. ஒரு நிலத்தில் ஒரே பயிரை தொடர்ந்து பயிரிட்டால் அந்த நிலமும் வளம் இழந்து போகும். அதே போன்றுதான் - மனிதர்களின் சிந்தனையும் பண்பாடும் ஒரே வகையில் இருந்தால், அந்த சமூகமும் அழிந்து போகும்.

மனித நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிவேக 'ஒற்றை மய' (Monoculture) மாற்றத்திற்கு இயற்கையால் ஈடுகொடுக்க முடியவில்லை. மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு, பல லட்சம் ஆண்டுகளாக நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், சமூகங்களுக்கு சமூகம் மாறுபட்ட வழியில் நீடித்து வந்திருப்பதை இன்றைய மனித சமூகம் ஒரே தலைமுறையில் மாற்றியமைக்கிறது.

உயிரிப்பன்மயத்தில் ஒற்றைத் தன்மை என்பது இயற்கையை அழிக்கிறது. பயிரினங்களில் பல வகைகள் அழிந்து இப்போது எல்லாவற்றிலும் ஓரிரு வகைகள் வந்திருப்பதும், கால்நடைகள் வளத்தில் பல வகைகள் அழிந்து இப்போது எல்லா கால்நடைகளும் ஒரு சில வகைகளாக வந்திருப்பதும் - சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மொழி, இனம், நம்பிக்கை, பண்பாடு என்பனவற்றில் ஒற்றைத் தன்மையைத் திணிப்பதால் உலகெங்கும் போர்களும், வன்முறையும் அதிகரித்து உலகை அமைதியற்ற நிலைக்கு கொண்டு செல்கிறது.

அதே நேரத்தில் - உயிரினம், பண்பாடு, மொழி என்பனவற்றின் 'ஒற்றை மய' சீரழிவுகளில் - ஒன்றின் அழிவு மற்றவற்றின் அழிவை வேகப்படுத்துகின்றன. சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பண்பாட்டையும் மொழியையும் பாதிப்பது போலவே, மொழியிலும் பண்பாட்டிலும் ஏற்படும் அழிவு, சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.

ஜல்லிக்கட்டும் சுற்றுச்சூழலும்

தமிழ்நாட்டின் சூழலில் தமிழ் மொழியும், இங்கு கொண்டாடப்படும் பண்பாட்டு திருவிழாக்களும் இயற்கையுடன் இணைந்து இயங்குகின்றன. ஒவ்வோரு பகுதியின் ஒவ்வொரு பண்பாட்டு நிகழ்வும் பருவ காலங்களுக்கும், மக்களின் ஓய்வுக்கும் ஏற்ற வகையில் நடந்து வருகின்றன. அந்த வகையில் பொங்கல் பண்டிகை தமிழரின் இயற்கை வழிபாட்டில் ஒரு முதன்மை அடையாளமாக விளங்குகிறது.
பொங்கல் பண்டிகையும், அதன் ஒரு அங்கமான ஜல்லிக்கட்டு என்கிற ஏறுதழுவுதல் நிகழ்வும் - வேளாண்மை மற்றும் கால்நடை வளத்தை போற்றும் வகையிலும், அதனை வளர்க்கும் வகையிலும் இருக்கிறது.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் என்கிற வகையிலான கால்நடை விளையாட்டுகள், தமிழ்நாட்டின் கால்நடை வளத்தை போற்றி காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளது.

ஜல்லிக்கட்டை தடை செய்யும் போது, தமிழ்நாட்டின் கால்நடை மரபுச் செல்வமான காங்கேயம் காளை உள்ளிட்ட காளை இனங்களின் தேவை குறைகிறது. இதனால், தனித்துவம் வாய்ந்த இத்தகைய காளைகளை வளர்ப்பதற்கான தேவையும் இல்லாமல் போய் - உலகின் பல்லுயிர் வளத்தில் அரிதான கால்நடை இனங்கள் அழியும் நிலை வருகிறது.

ஒரு உயிரினத்தின் அழிவு அதனோடு முடிந்து போகாது. அது உயிர்ச்சூழல் வலைப்பின்னலில் எல்லா உயிரினங்களையும் பாதிக்கும். ஆகவே, ஜல்லிக்கட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை, அடிப்படையில் சுற்றுச்சூழலைக் காக்கும் ஒரு கோரிக்கையே ஆகும்.

என்ன செய்ய வேண்டும்?

பூமிப்பந்தில் உயிர்வாழ்வின் தொடர்ச்சி நீடித்திருக்க - தலைமுறைகளுக்கு இடையே பாரம்பரிய அறிவினை தொடர்வதும், மொழியைத் தொடர்வதும், கலாச்சாரப் பழக்க வழக்கங்களைத் தொடர்வதும் அவசியமாகும்.

உயிரிப்பண்பாட்டு பன்மயத்தைக் காப்பாற்றுவது என்றால், இப்போது எஞ்சியிருக்கும் பன்முகத் தன்மை இதற்கு மேலும் அழிந்துவிடாமல் காப்பதே உடனடித் தேவை ஆகும். இப்போது இருக்கும் உயிரியல் பன்முகத்தன்மை, பண்பாட்டு வேறுபாடு, மொழி வேறுபாடு - ஆகியன இதற்கு மேலும் அழியாமல் காப்பதே உலக மக்களின் முதன்மையான சுற்றுச்சூழல் கடமை ஆகும்.

ஒவ்வொரு சமூகத்தினரும் தம்முடைய பண்பாட்டைக் காப்பாற்ற முன்வர வேண்டும். தன்னுடைய மொழியை காத்து வளப்படுத்த வேண்டும். தான் வாழும் பகுதியின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும். சூழல், மொழி, பண்பாடு இந்த மூன்று பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தே உள்ள கடமைகள் ஆகும்.

காலாச்சாரம், பண்பாடு, மரபு என்று ஒருகாலத்தில் பேசப்பட்ட சிலவற்றை, புதிய சூழலில் கைவிட நேரலாம். ஒவ்வொரு காலகட்டத்தின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப பழைய பிற்போக்குத்தனங்கள் கைவிடப்பட வேண்டும். ஒரு காலத்தில் சமுதாயங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு நிலை அங்கீகரிக்கப்பட்டது. இப்போதைய உலகம் அதனை ஏற்பது இல்லை. ஒருகாலத்தில் குழந்தைத் திருமணங்கள் ஏற்கப்பட்டன. இப்போது ஏற்கப்படுவது இல்லை. அந்த வகையில் உள்ளூர் சமூகங்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் காலந்தோரும் மாறுதலுக்கு உட்பட்டே வந்துள்ளது.

'குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியே ஊற்ற வேண்டும் என்பதற்காக, தொட்டிக்குள் குளித்துக்கொண்டிருக்கும் குழந்தையையும் சேர்த்து வெளியே ஊற்றிவிடக் கூடாது' என்பார்கள். அவ்வாறே, மக்களின் பண்பாட்டில் இணைந்துள்ள பிற்போக்குத் தனங்கள் கைவிடப்பட வேண்டும் என்பதாற்க, பண்பாட்டையே கைவிட்டுவிடக் கூடாது.

1992 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'கரி ஓகா உள்ளூர் மக்கள் பிரகடனத்தில் (Kari Oka Declaration of the world’s indigenous peoples) "எங்கள் மூதாதையர்கள் வகுத்துத்தந்த பாதையில் நாங்கள் எதிர்காலத்தை நோக்கி நடக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம்' என் அறிவித்தனர் (“walk toward the future in the footsteps of their ancestors”). 

எனவே, சரியான புதிய பாதை என்பது பாரம்பரிய வழித்தடத்தில் தொடரும் மற்றுமொரு முயற்சியே ஆகும். பழைய பாரம்பரியத்தை அறவே துறந்து புதிய உலகம் அமையாது.

தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மக்களின் பன்முகப்பட்ட கலாச்சார வேறுபாடுகளை அங்கீகரித்து தொடர வேண்டும். வாழும் இடப்பகுதி, பின்பற்றும் மதம், சார்ந்திருக்கும் சாதி என பல அடிப்படைகளில் மக்களின் பன்முகப்பட்ட அடையாளமும் கலாச்சார வேறுபாடுகளும் மதிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் பேசப்படும் மொழியும், ஒவ்வொரு சமுதாயத்தினர் பேசும் மொழியும் போற்றி பாதுகாக்கப்படவும், வளர்க்கப்படவும் வேண்டும். ஒரு மொழியின் இடத்தில் இன்னொரு மொழியைத் திணிக்கும் அநீதியை ஒருபோதும் ஏற்கக்கூடாது.

நாடெங்கும் சுற்றுச்சூழல் வளம் காப்பாற்றப்பட வேண்டும். நீர், நிலம், காற்று மாசுபடுத்தப்படாமல் தடுத்தல், உயிரின வேறுபாட்டை பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் - ஆகிய அனைத்து சூழல் காப்பு நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில் தமிழ்நாடு, இந்தியா, உலகம் என அனைத்து நிலைகளிலும் பண்பாடு, மொழி, சுற்றுச்சூழல் என்கிற அனைத்து வழிகளிலும் உயிரிப்பண்பாட்டுப் பன்மயத்தைக் காப்பாற்றை அனைவரும் முன்வர வேண்டும்.  

சுற்றுச்சூழலை காப்பதில் ஒரு முதன்மை அங்கமாக ஜல்லிக்கட்டு தடை விலக்கப்பட வேண்டும். பாரம்பரிய கால்நடைகளும் அவற்றுக்கான பண்பாட்டு விழாக்களும் போற்றப்பட வேண்டும்.