Pages

சனி, மார்ச் 11, 2017

சிவபெருமானின் தந்தை வீர வல்லாள மகாராஜா

அருள்மிகு அண்ணாமலையார் மகனாக அவதரித்து மகனின் கடமை ஆற்றும் மாசி மகம் திருநாள்!
மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர். இவருக்கு சிவபெருமானே மகனாக வந்து பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இறந்து போன தனது தந்தை வல்லாள மகராஜனுக்கு மாசி மகம் நாளில் சிவபெருமானே திதி கொடுக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கோவிலில் நடந்து வருகிறது.

பின்னணி

ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு. இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை.
வல்லாள மகாராஜா சிலை, திருவண்ணாமலை கோவில்.

ஹோய்சாள மன்னர்கள் சோழர்களுடனும் பாண்டியர்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். அவர்களால் மாமன் உறவில் அழைக்கப்பட்டனர். சோழப்பேரரசை பாண்டியர்களிடமிருந்தும் காடவர்களிடமிருந்தும் இவர்கள் காப்பாற்றினர். மூன்றாம் குலோத்துங்கச் சோழனும், மூன்றாம் இராசராசனும் வல்லாள இளவரசிகளை மணந்தனர். இரண்டாம் வல்லாளன் சோழ இளவரசியை மணந்தார். மூன்றாம் வீரவல்லாளனின் தாத்தாவான ஹோய்சாள சோமேஸ்வரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரண்மணையில் வாழ்ந்தார். திருச்சிக்கு அருகே கண்ணனூரில் தலைநகரை அமைத்தார்.

வீர வன்னியர் மரபு

வன்னியர்கள் வடபால் முனிவரின் யாகத்தீயில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னிய புராணம் குறிப்பிடும் செய்தி ஆகும். இதே தொன்மக்கதையை ஹோய்சாளர்களும் கொண்டிருந்தனர்.

கி.மு. 4 ஆம் நூற்றாண்டு வாக்கில் எருமை நகரம் எனப்பட்ட மைசூர் அருகே துவரை நகரை இருங்கோவேள் என்னும் தமிழச் சிற்றரசன் ஆண்டுவந்தான். இவனைப்பற்றி புறநானூறு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

"நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்க னுடைமையிற் பாண்கட னாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்" (புறநானுறு  201)

வடபால் முனிவன் எனப்படும் சம்புமுனிவரின் ஓம குண்டத்தில் தோன்றித் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்தவன் இருங்கோவேள் ஆகும். இவனே புலிக்கடிமால் எனப்பட்டான். பாரியின் மகளிராகிய அங்கவை, சங்கவை என்பவரைக் கபிலர் இருங்கோவேள் அரசனிடம் அழைத்து வந்து மணஞ் செய்து கொள்ளும்படி கேட்டார். இருங்கோவேள் மறுத்துவிட்டான் என்று புறநானூறு கூறுகிறது.
புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் சின்னம், பேலூர்

சம்புமுனிவரின் யாகத்தீயில் தோன்றிய இருங்கோவேள் அரசன், தபங்கர் என்னும் முனிவர் தவம் செய்கையில் பாயவந்த புலியை 'ஹொய்சள' என்று கூறிய முனிவர் ஆணைப்படிக் கொன்றதால் அவன் புலிகடிமால் என்று பெயர் பெற்றான். இந்த வம்சத்தில் வந்தவர்களே ஹொய்சாளர்கள் என்பது உ.வே. சாமிநாத அய்யர், ஞா. தேவநேயப் பாவாணர், மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய அறிஞர்களின் கருத்தாகும்.

புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் என்று புறநானூற்றில் உள்ள தொன்மக்கதையை ஹொய்சாளர்கள் தங்களது சின்னமாகக் கொண்டனர். பேலூர் கோவிலிலும், அவர்கள் கட்டிய திருவண்ணாமலை கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் புலிக்கடிமால் சின்னத்தை சிலையாக வடித்துள்ளனர். புறநானூற்றில் உள்ள அதே துவரை நகரம் தான் ஹொய்சாளர்களின் தலைநகரமாக விளங்கியது. முதலில் துவாரசமுத்திரம் என்றும் பின்ன ஹளபேடு (பழைய நகரம்) என்றும் அழைக்கப்பட்டது.
புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் சின்னம், திருவண்ணாமலை கோவில்.

வன்னிய புராணம் குறிப்பிடும் வன்னியர்கள் யாகத்தீயில் தோன்றியவர்கள் என்கிற தொன்மமும், புறநானூறு குறிப்பிடும் ஹொய்சாளர்கள் யாகத்தீயில் தோன்றியவர்கள் என்கிற நம்பிக்கையும் ஒன்றாக இருப்பது வியப்பளிக்கக் கூடியது ஆகும். கல்வெட்டுகளும் அருணாசலபுராணமும் ஹொய்சாளர்களை வன்னியர்கள் என்று குறிப்பிடுகின்றன.

கர்நாடக மாநிலம் பேலூர் கல்வெட்டு ஹொய்சாளர்களை வன்னிய புத்திரர்கள் என்கிறது. கோலாரில் உள்ள 1291 ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டு ஹொய்சாளர்கள் காலத்தை வன்னியர் காலம் என்று குறிப்பிடுகிறது.

திருவண்ணாமலை கோவில் புராணமான கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம், ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்று குறிப்பிடுகிறது. 

சிவன் மகனாக பிறந்த கதை

வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிடையாலை நிகழ்த்தினார்.

திருவண்ணாமலையில் இருந்த எல்லா தேவதாசிகள் வீட்டுக்கும் சிவகணங்களை அனுப்பிய சிவபெருமான், வல்லாள மகாராஜாவிடம் சைவத் துறவி கோலத்தில் வந்து தனக்கு ஒரு தேவதாசி வேண்டும் என்று கேட்டார். வல்லாள மகாராஜாவும் தேவதாசியை அனுப்புவதாக வாக்களித்தார். ஆனால், ஊரில் உள்ள எல்லா தேவதாசிகளும் சிவகணங்களுடன் இருந்ததால் - வல்லாள மகாராஜாவால் தேவதாசியை கொண்டுவர முடியவில்லை. மன்னனின் கவலை அறிந்த வல்லாள மகாராஜாவின் இளைய ராணி, தானே தேவதாசியாக சிவனிடம் செல்ல முன்வந்தார். துறவி வேடத்தில் சிவன் இருந்த அறைக்குள் ராணி நுழைந்த போது - குழந்தையாக சிவபெருமான் காட்சியளித்தார். ராணியும் மகாராஜாவும் சிவபெருமானை தமது குழந்தையாக ஏற்றனர்.

பின்னர், வீர வல்லாள மகராஜன், மதுரை சுல்தான் மீது போர் தொடுத்தபோது கொலை செய்யப்பட்டார். வீர வல்லாள மகாராஜாவின் இறுதி கடனை இறைவனே திருவண்ணாமலையின் கீழ்த்திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார். வன்னியப்பெருமக்கள் அருள்மிகு அண்ணாமலையானை சம்மந்திமுறை ஏற்று தலைக்கட்டு நடத்தினர். வன்னியர்கள் வாழ்ந்த அந்த ஊருக்கு "சம்மந்தனூர்" என்ற பெயர் வழங்க பெற்றது.

அப்போது முதல் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரையில் சிவபெருமான் தனது தந்தைக்கு திதிகொடுக்கும் மாசி மக திருவிழா கொண்டாடப்படுகிறது. சம்மந்தனூர் வன்னியர்கள் சம்மந்தி உரிமையில் சிவனுக்கு பட்டாடை சாத்துகின்றனர். மறுநாள் வீர வல்லாள மகாராஜனுக்கு பதிலாக திருவண்ணாமலையில் சிவபெருமான் மன்னராக முடிசூடிக்கொள்கிறார். இந்த நிகழ்விலும் வன்னியர்களே காலம் காலமாக பங்கேற்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு, சிவபெருமான் வல்லாள மகராஜனுக்கு திதி கொடுக்கும் மாசி மகம் திருநாள் 11.3.3017 ஆம் நாளிலும், சிவபெருமானுக்கு முடிசூட்டு விழா 12.3.2017 ஆம் நாளிலும் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: