Pages

திங்கள், செப்டம்பர் 03, 2012

செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து! கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்


செல்பேசிக் கோபுரங்களால் குழந்தைகள், பொதுமக்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. கண்களால் பார்க்காமலும் காதால் கேட்காமலும் மனிதனின் புலன்களால் உணரப்படாமலேயே மின்காந்தக் கதிர்வீச்சால் மக்கள் தாக்கப்படுகின்றனர்.

செல்பேசிக் கோபுரத்தின் பாதிப்புகள்

செல்பேசி மின்நச்சுப்புகையை 1. செல்பேசியிலிருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சு, 2. செல்பேசிக் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்தக் கதிர்வீச்சு என இரண்டாக பிரித்துப் பார்க்கலாம். ஒப்பீட்டளவில், செல்பேசிக் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்தக் கதிர்வீச்சு மிக மோசமானதாகும்.
செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சு

செல்பேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு என்பது செல்பேசி இயக்கநிலையில் இருக்கும்போதும், காதுக்கு அருகில் வைக்கும்போதும், உடலோடு ஒட்டிய நிலையில் இருக்கும் போதும் அதிலிருந்து கதிர்வீச்சு தாக்கும். செல்பேசியை உரிய எச்சரிக்கையுடன் பயன்படுத்தினால் இந்தக் கதிர்வீச்சைத் தடுக்கலாம்.

செல்பேசிக் கோபுர மின்காந்தக் கதிர்வீச்சு

ஆனால், செல்பேசிக் கோபுரத்தின் கதிர்வீச்சு இருபத்துநான்கு மணிநேரமும் அதன் அருகே வசிப்போரைத் தாக்கிக்கொண்டே இருக்கும். இதிலிருந்து சுற்றுப்புறத்தில் வாழ்வோர் தப்ப முடியாது. செல்பேசிக் கோபுரத்திலிருந்து 50 மீட்டர் வரை இருப்பவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் 300 மீட்டர் தூரம் வரை தாக்கம் கூட பாதிப்பு இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றபடி, இரண்டுவகை கதிர்வீச்சும் ஒரே மின்காந்தக் கதிர்வீச்சுதான் (Electromagnetic Radiation).
இந்தியா முழுவதும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் கூடுதலான செல்பேசிக் கோபுரங்கள் உள்ளன. இதன்மூலம் சுமார் 90 கோடிக்கும் அதிகமான செல்பேசிகளுக்கு செவை அளிக்கப்படுகிறது. உண்மையில், செல்பேசிக் கோபுரங்கள் ஒரு மிகப்பெரிய மின்நச்சுப்புகை சிக்கலாக மாறிவிட்டன. நகரப்பகுதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

செல்பேசிக் கோபுரத்தின் கதிர்வீச்சினை வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சு (Thermal radiation), வெப்பம் சாராக் கதிர்வீச்சு (Non-thermal radiation) என்று இருவகையாகப் பிரிக்கின்றனர். வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சு என்பது சமைப்பதற்கு பயன்படுத்தும் மைக்ரோ ஓவனில் ஏற்பதும் வெப்பத்திற்கு ஈடானதாகும். செல்பேசியை காதுக்கு அருகே வைத்து நீண்ட நேரம் பேசினால் தலை சூடாவது இந்த வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சினால்தான்.

வெப்பம் சாராக் கதிர்வீச்சு இதைவிட மிக மோசமானதாகும். இது மனித உடலின் மின்காந்தப் புலத்தைப் பாதிக்கிறது. இது உயிரியல் ரீதியிலான (biological) பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் இதுவரை வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சுக்கு மட்டுமே ஓரளவுக் கட்டுப்பாடுகள் உள்ளன. வெப்பம் சாராக் கதிர்வீச்சுக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை.

செல்பேசிக் கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்

செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சால் கடுமையான உடல்நலக் கோளாறுகள் நேருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான பன்னாட்டு முகமை (IARC) 'மனிதனுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள' கதிர்வீச்சாக செல்பேசிக் கதிர்வீச்சினை வகைப்படுத்தியுள்ளது. மூளைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை செல்பேசிக் கதிர்வீச்சு ஏற்படுத்துவதாக அந்த அமைப்பு கூறுகிறது.

புற்றுநோய், ஆண்மைக் குறைவு, மூளையின் பாதுகாப்புத் தடுப்பில் பாதிப்பு, மரபணு பாதிப்பு, இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோருக்கு பாதிப்பு, உயிரணுப் பாதிப்பு, காதுக் கோளாறுகள், பார்வைக் குறைவு, எலும்புகள் வலுவிழத்தல், நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு, தூக்கம் குறைதல், குழந்தைகள் பாதிப்பு, கருவுற்ற தாய்மார்களுக்குப் பாதிப்பு, தூக்கமின்மை என ஏராளமான பாதிப்புகளை செல்பேசிக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது.
மும்பையில் மூளைப் புற்றுநோய்க்கு காரணமான செல்பேசிக் கோபுரம்
புற்றுநோய்: மும்பையின் கார்மிகேல் சாலையில் உள்ள விஜய் அப்பார்ட்மென்ட்ஸ் எனும் கட்டிடத்தின் ஏழாவது தளத்தில் ஏராளமான செல்பேசிக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு நேர் எதிரிலேயே உஷாகிரண் கட்டடம் எனும் பலமாடி அடுக்குக் குடியிடுப்பு இருந்தது. உஷாகிரண் குடியிருப்பின் 6 முதல் 10 வரையிலான தளங்கள்  விஜய் அப்பார்ட்மென்ட்டின் செல்பேசிக் கோபுரத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் நேரடித் தாக்கத்துக்கு ஆளாகின. மூன்றே ஆண்டுகளில் உஷாகிரண் கட்டடத்தின் 6, 7, 8 மற்றும் 10 ஆவது மாடியில் வசித்தோரில் 6 பேர் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று கண்டறியப்படாமல் ஏராளமான புற்றுநோயாளிகளை செல்பேசிக் கோபுரங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செல்பேசிக் கதிர்வீச்சு ஆண்மைக் குறைவை உண்டாக்கும்
ஆண்மைக் குறைவு: செல்பேசிக் கதிர்வீச்சால் அதிக அளவில் ஆண்மைக் குறைவு ஏற்படுகின்றது. எந்த அளவுக்கு அதிகமான நேரம் செல்பேசிகளை ஆண்கள் பயன்படுத்துகின்றனரோ அந்த அளவுக்கு ஆண்மைக் குறைவின் தாக்கம் அதிகரிக்கும். ஆண்களின் விந்தணுவின் தரம் குறைதல், உயிரணு எண்ணிக்கை குறைதல் எனப்பல பாதிப்புகள் செல்பேசிக் கதிர்வீச்சால் ஏற்படுகின்றது.

மூளையின் பாதுகாப்புச் தடுப்பில் பாதிப்பு: மனித மூளையில் இரத்த ஓட்டத்திற்கும் மூளையின் திசுக்களுக்கும் இடையே மெல்லிய தடுப்புச் சுவர் அமைந்துள்ளது. இரத்த மூளைத் தடுப்பு (Blood Brain Barrier) எனப்படும் இந்த அமைப்பு இரத்தத்தில் உள்ள சத்துக்களில் தேவையானவற்றை மட்டுமே மூளைக்குள் அனுமதிக்கின்றன. மிகமுக்கியமான இந்த பாதுகாப்புச் சுவர் செல்பேசிக் கதிர்வீச்சால் பாதிப்படைகிறது. தேவையில்லாத நுண்ணூட்டங்கள் உள்ளே செல்லும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பலவிதமான மூளைப் பாதிப்புகள் தாக்குகின்றன.
செல்பேசிக் கதிர்வீச்சு மூளையைப் பாதிக்கும் 
மரபணு பாதிப்பு: செல்பேசி நுண்ணலைகளால் மனித மரபணு பாதிப்படைகிறது. டி.என்.ஏ சேதமடைதல், தன்னைத்தானே சீரமைத்துக்கொள்ளும் ஆற்றலைக் குறைத்தல் போன்ற பல விளைவுகள் நேருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. மனித உயிரணுக்களில் ஏற்படும் சேதம் காலப்போக்கில் புற்றுநோயாகவும் மாற்றமடைகிறது.

இருதய அறுவை சிகிச்சை செய்தோருக்கு பாதிப்பு: விமானங்களின் தகவல் தொடர்பை செல்பேசி பாதிக்கிறது என்பதால் விமானப் பயணங்களின் போது செல்பேசியை அணைத்து வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்றுதான் மருத்துவமனைகளில் உள்ள பலவிதமான மின்னணுக் கருவிகளின் செயல்பாட்டை செல்பேசி பாதிக்கிறது. இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற சிக்கலான மருத்துவ இடங்களில் செல்பேசி அணைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இருதைய அறுவை சிகிச்சையின் போது 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டோருக்கு செல்பேசிகள் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். செல்பேசியை இயக்கும் போது அளிக்கப்படும் மின்னணுக் கட்டளைகள் பேஸ் மேக்கர் கருவியின் செயல்பாட்டில் தலையிட்டு தவறான கட்டளைகளைக் கொடுத்து பேஸ் மேக்கர் கருவியை தாறுமாறாக இயக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக அறிவியளாளர்கள் எச்சரிக்கின்றனர்.

காதுக் கோளாறுகள்: செல்பேசிகளால் காது கேட்கும் திறன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, 'ரிங்சியெட்டி' எனப்படும் ஒன்றுமில்லாமல் இறைச்சல் சத்தம் காதுக்குள் கேட்கும் துன்பத்தால் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காதின் கேட்கும் திறன் என்பது காதுக்குள் இருக்கும் 16000 இழை உயிரணுக்களின் நலத்தைப் பொருத்ததாகும். இந்த இழை உயிரணுக்கள் செல்பேசிக் கதிர்வீச்சால் சேதமடைகின்றன. இவை மீண்டும் வளருவது நின்றால் கேட்கும் திறன் குறைய ஆரம்பித்துவிடும். தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் செல்பேசியில் பேசுபவர்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் கேட்கும் திறனைக் கணிசமாக இழந்து போவார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கண்கள் பாதிப்பு: தொடர்ச்சியாக செல்பேசியில் பேசுவது கண்களைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியாதாகும். செல்பேசியை தலைக்கு அருகிலேயே வைத்துப் பேசும்போது அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் தலை சூடாகிறது. எனினும் தலைப்பகுதியில் அதிக இரத்த ஓட்டம் ஏற்பட்டு இந்த வெப்பம் மற்ற பகுதிகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதனால் தலை, காது பகுதிகள் சூட்டிலிருந்து ஓரளவுக்கு தப்புகின்றன. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடு கண்ணில் இல்லை.

மனித விழியில் சரளமான இரத்த ஓட்டம் இல்லாததால், செல்போன் கதிர்வீச்சால் கண்ணில் ஏற்படும் வெப்பம் கண்ணை சூடாக்குகிறது. வெப்பத்தின் அளவு மிக அதிகமாகும் போது விழித்திரைப் பாதிப்படைகிறது. பார்வைக் குறைபாடுகள் நேருகின்றன.

எலும்பு பாதிப்பு: மனித எலும்பு தேய்வதற்கு செல்பேசிகள் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இடுப்பில் செல்பேசியை அணிந்து செல்வோரை மருத்துவ ஆய்வாளர்கள் ஆராய்ந்து பார்த்ததில், அவ்வாறு அணியாதவர்களை விட அதிகமாக இடுப்பு எலும்புப் பகுதி தேய்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். எனவே, மனித உடலில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொலைவில் செல்பேசிகளை வைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தூக்கமின்மை: செல்பேசிகளால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு தூக்கமின்மை. குறிப்பாக நான்காம் கட்ட தூக்கம் எனப்படும், மனித உடலும் மூளையும் தன்னைதானே சீரமைத்துக் கொள்ளும் தூக்கத்தை செல்பேசிகள் கெடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
செல்பேசிக் கதிர்வீச்சு தூக்கத்தைக் கெடுக்கும் 
தூங்குவதற்கு முன்பு செல்பேசியில் பேசுவதால் தூக்கம் கெடுகிறது. தலைவலி, மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் தூங்குவதற்கு முன்பு செல்பேசியில் பேசுவதும், செல்பேசியை தலைக்கு அருகில் வைத்துத் தூங்குவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், படிப்பில் கவனமின்மை, ஆளுமையில் மாற்றம் எனப்பலக் கேடுகள் நேருகின்றன.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் செல்பேசிக் கதிர்வீச்சு
குழந்தைகள் பாதிப்பு: செல்பேசியாலும், செல்போன் கோபுரங்களாலும் சிறுவர்களும் குழந்தைகளும் அதிகமாக பாதிப்படைகின்றனர். குழந்தைகளின் சிறிய தலை, சிறிய அளவில் மூளை, மழுமையாக வளர்ச்சியடையாத எலும்புகள், மென்மையான தோல், மெல்லிய செவி என எல்லாமும் அதிக அளவுக்கு மின்காந்த கதிர்வீச்சால் பாதிப்படைகின்றன.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் - கதிர்வீச்சின் பாதிப்புகள் அவர்களை எளிதில் தாக்குகின்றன. செல்பேசிக் கருவிகளை வைத்து விளையாடும் குழந்தைகள் ஞாபக சக்திக் குறைவு, கவனக் குறைவு, கற்கும் திறன் குறைவு உள்ளிட்ட பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதி செய்யப்பட்டுள்ளாது.

எனவேதான், பெரும்பாலான மேற்குலக நாடுகள் 16 வயதுக்கு கீழுள்ளவர்கள் செல்பேசியை பயன்படுத்த பயன்படுத்த வேண்டாம் என வெளிப்படையாக அறிவுறுத்துகின்றன.

பெண்கள் பாதிப்பு: கருவுற்ற தாய்மார்கள் செல்பேசியைப் பயன்படுத்துவதும், செல்பேசிக் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பதும் மிக ஆபத்தானதாகும். கருவுற்ற தாய்மார்கள் செல்பேசி பேசுவதால் கருச்சிதைவு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறே, பிறந்த குழந்தைகளிடம் நடத்தை மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இப்படியாக - மனிதர்களுக்கு எண்ணற்ற பாதிப்புகளை செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற தாய்மார்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். 
செல்பேசிக் கோபுரம் =24 மணி நேரக் கதிர்வீச்சு
செல்பேசிகள் சில மணி நேரப் பயன்பாட்டால் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றால், செல்பேசிக் கோபுரங்கள் அதைவிட பலமடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. செல்பேசிக் கோபுரத்திலிருந்து ஒவ்வொரு நாலும் இருபத்தி நான்கு மணி நேரமும் மிக அதிக அளவான கதிர்வீச்சு வீசிக்கொண்டே இருக்கிறது. இதனால் செல்பேசிக் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எல்லா நேரமும் கதிவீச்சால் தாக்கப்படுகின்றனர்.

தொடர்புடைய சுட்டிகள்:

எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்... நன்றி சார்...

Natrayan.M சொன்னது…

செல்போன் கதிர்வீச்சால் மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகின்றன. அணுமின்சாரம் மூலமாகவும் கதிர்வீச்சு ஏற்படுவதாக கூறுகிறார்கள். நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரித்தால் சுற்றுபுறம் கெடுகிறது. காற்றாலையால் மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதில்லை. நீர்மின்சக்தி இல்லை. சோலார் மின்சக்தியால் தேவையான மின்சாரம் தயாரிக்க முடிவதில்லை. செலவும் அதிகம். ஆகையால் செல்போன் மின்சாரம் தயாரிப்பு ஆகியவற்றை தடைசெய்யவேண்டும். நமது முன்னோர்கள் போல் விளக்கெண்ணெய் மற்றும் பிற எண்ணெய்களை பயன்படுத்தி வாழ பழகிக்கொள்ள வேண்டும்.