Pages

செவ்வாய், மே 14, 2013

வட மாவட்ட வன்முறைகள்: தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு அபத்தமானது!


இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற வன்முறைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சிதான் காரணம் என்றும், இதற்கான சேதம் மதிப்பிடப்பட்டு, பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து வசூலிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் கூறலாம் என்ற எண்ணத்தில், பாட்டாளி மக்கள் கட்சி மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் அள்ளி வீசியிருக்கிறார். தமது விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில், தமக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி, பா.ம.க.வை தடை செய்வோம் என்ற அளவுக்கு ஆத்திரத்தை உமிழ்ந்திருக்கிறார். பா.ம.க. மீது முதலமைச்சர் ஜெயலலிதா எந்த அளவுக்கு வஞ்சத்தையும், பழிவாங்கும் உணர்ச்சியையும் கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே உதாரணம்.

மரக்காணம் கலவரத்திற்கும், அதன் பின் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகளுக்கும் பா.ம.க. எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை பலமுறை தெளிவாகக் கூறியிருக்கிறேன். பா.ம.க. ஒருபோதும் வன்முறைப் பாதையை கையில் எடுத்தது கிடையாது; அதற்கான தேவையும் எங்களுக்கு இல்லை. மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவிற்கு வந்தவர்கள் மீது, மரக்காணத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான். இந்தத் தாக்குதலில் கும்பகோணம் விவேக், அரியலூர் செல்வராஜ் என்ற 2 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்திலும், காவல்துறை துப்பாக்கிச் சூட்டிலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருந்தால், வடமாவட்டங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட விடுதலை சிறுத்தைகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் வாய்ப்பே கிடைத்திருக்காது. ஆனால், அதை செய்ய மறுத்துவிட்ட தமிழக அரசு, நீதிகேட்டு போராடச் சென்ற என்னை, விழுப்புரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதனால் ஏற்பட்ட சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, வடமாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், சமூக விரோதிகளும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். பேருந்துகள் மீது கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச் சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்துதல், மரங்களை வெட்டிச் சாய்த்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை விடுதலை சிறுத்தைகள்தான் அரங்கேற்றினர். பல இடங்களில் இத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பா.ம.க.வினரும், பொதுமக்களும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் அருகே தனியார் பேருந்து ஒன்றை கல்வீசித் தாக்கிய தேசிங்கு என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் அ.தி.மு.க.வின் துணை அமைப்பான அண்ணா தொழிற்சங்கத்தின் போக்குவரத்துப் பிரிவு நிர்வாகி என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே பேருந்துகளை கல்வீசி சேதப்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 15 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உத்தரவுப்படி, அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக பா.ம.க.வினர் வழக்கில் சேர்க்கப்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குறிஞ்சிப்பாடியில் பேருந்தை சேதப்படுத்தியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறையில் இருந்து நானும் மற்ற பா.ம.க. தலைவர்களும் விடுதலையான பிறகும் வன்முறைகள் தொடர்வதிலிருந்தே இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புரிந்துகொள்ள முடியும். இந்த உண்மைகளையெல்லாம் தெரிந்துகொண்டு, உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதில், பா.ம.க. மீது பழிபோடும் முயற்சியில் காவல்துறையுடன் இணைந்து, தமிழக அரசும் ஈடுபட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

விழுப்புரத்தில் நான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மே 1ம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு, அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, அறவழியில் உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என்றுதான் கூறினாரே தவிர, வன்முறையைத் தூண்டும் வகையில் ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை. கைது செய்யப்பட்ட பிறகு அளித்த நேர்காணலிலும், பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலும் அறவழியில் உணர்வுகளை வெளிப்படுத்தும்படிதான் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படியே, பா.ம.க.வினரும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்களின் வீடுகளில் கறுப்பு-க்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக, ஏராளமான வன்னியர்களும், பா.ம.க.வினரும் தங்களது வீடுகளை விட்டே வெளியேற நேர்ந்தது. இதனால், பா.ம.க.வினர் எவரும் ஊரில் இருக்க முடியாத நிலையில் அவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டனர் என்று முதலமைச்சர் கூறியிருப்பது அபத்தத்திலும் அபத்தமானதாகும்.

பா.ம.க.வைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை, தேசிய பாதுகாப்பு-ச் சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவ்வளவு பேர் மீது தடுப்பு-க் காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. வன்னியர்களை தமிழக அரசு எந்த அளவுக்கு எதிரியாக கருதுகிறது என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

தமிழக அரசின் இந்த அடக்கு முறைகளை எதிர்த்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நீதிமன்றத்தில் பா.ம.க. வழக்குத் தொடர உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசும் காவல்துறையும் செய்த தவறுகள் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில், பா.ம.க.வினர்தான் வன்முறைகளை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை சட்டப்பேரவையில் பதிவு செய்து, அதன் மூலம் நீதித்துறையை மறைமுகமாக அச்சுறுத்த தமிழக முதலமைச்சர் முயன்றிருக்கிறார்.

அரசியல் கட்சி மற்றும் அதன் தலைமைக்கான இலக்கணம் பற்றி முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். 2000&வது ஆண்டில் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரியில் வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் பேருந்துக்கு தீவைத்து 3 மாணவிகளை உயிருடன் எரித்துக் கொன்றனர். தமிழகம் முழுவதும் பேருந்துகளை தீயிட்டு எரித்தல், கல்வீசி சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டனர். இவ்வாறு கல்லூரி மாணவிகளை உயிருடன் எரித்துக்கொலை செய்ய தூண்டுவதுதான் கட்சித் தலைமைக்கான இலக்கணமா? என்பதை முதலமைச்சர் விளக்கவேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறைகள் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு ஆகும். எதிர்க்கட்சிகள், அரசு ஊழியர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவரும் இத்தகைய அடக்கு முறைகளுக்கு ஆளாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பா.ம.க.வை ஒடுக்க நினைக்கிறார். இதற்காகவே, வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, பா.ம.க. மீது பழிபோட்டு, அது ஒரு வன்முறைக்கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். இந்த முயற்சி வெற்றி பெறாது. இன்று பா.ம.க.விற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறை, நாளை மற்ற கட்சிகளுக்கு எதிராகவும் ஏவப்படும் வாய்ப்பு இருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா, தமது அதிகார எல்லையை மறந்து பா.ம.க. தடை செய்யப்போவதாக கூறியிருக்கிறார். எந்தவொரு அரசியல் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு. தமிழக அரசின் அனைத்து அடக்கு முறைகளையும், அச்சுறுத்தல்களையும் பா.ம.க. சட்டப்படி எதிர்கொள்ளும். அதே நேரத்தில் அதிகாரம் தம்மிடம் உள்ளது என்ற எண்ணத்தில் ஜெயலலிதா கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைகளை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சரியான நேரத்தில் சரியான பாடத்தை புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: