Pages

ஞாயிறு, ஜூலை 28, 2013

பத்திரிகைகள் மூடி மறைக்கும் செய்தி: பொதுச் சொத்துக்களுக்கு சேதம்- 5 அமைச்சர்கள் மீது வழக்கு!

பத்திரிகை தர்மம் செத்துவிட்டது

தமிழ்நாட்டின் ஐந்து அமைச்சர்கள், 11 எம்.எல்.ஏக்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் செய்ததாக ஒரு தகவல் நேற்று மருத்துவர் இராமதாசு அவர்களால் அறிக்கையாக வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை ஒரு நாளிதழில் கூட வெளிவந்ததாகத் தெரியவில்லை. 

அந்த செய்தி பத்திரிகைகளால் புறக்கணிக்கப்படுவதற்கு, அது மருத்துவர் இராமதாசு அவர்களின் அறிக்கை என்பது காரணம் அல்ல.  மாறாக, ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு வலுவான ஆதாரத்தை முன்வைத்த காரணத்தாலேயே வெளியிடப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

இந்த செய்தியை வெகுசில இணைய ஊடகங்கள் மட்டுமே வெளியிட்டன. (இங்கே காண்க: நக்கீரன், ஒன்இந்தியா, NewIndiaNews)
ஆனால், தமிழ்நாட்டு அச்சு ஊடகங்கள் எதுவும் இந்த அறிக்கையை வெளியிடவே இல்லை. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என 'பாமக' மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையும் அதற்காக சம்மன்கள் அனுப்புவதையும் வரிந்துக்கட்டிக்கொண்டு எழுதும் நாளிதழ்கள் இந்த செய்தியை மட்டும் வெட்கம் கெட்டத்தனமாக மறைத்துவிட்டன.

சுமார் 10 ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் தினசரி பத்திரிகை வெறும் மூன்று ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பத்திரிகைகளின் உண்மையான வருமானமும் இலாபமும் விளம்பரங்கள் மூலமே கிடைக்கின்றன. விளம்பரத்தை நம்பி மட்டுமே பத்திரிகைகள் நடத்தபடுகின்றன. எனவே, விளம்பரம் தருகிறவர்களை பாதிக்காத செய்திகள் மட்டுமே தமிழ்நாட்டு வாசகனுக்கு தரப்படும். அந்த வகையில், நாளிதழிகளின் முதன்மை விளம்பரதாரராக அரசாங்கமே இருக்கும் நிலையில், ஆள்பவர்களுக்கு எதிரான வலுவான செய்திகளை பத்திரிக்கைகளில் எதிபார்ப்பது முட்டாள்தனம்தான்.

தமிழ்நாட்டு பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்கிற தகுதியை எப்போதோ இழந்துவிட்டன. தமிழ்நாட்டில் பத்திரிகை தர்மம் செத்துப்போய்விட்டது என்பதையே இது காட்டுகிறது.

மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை

"பொதுச் சொத்துக்களுக்கு சேதம்: அமைச்சர்களை நீக்குவாரா முதல்வர்?" என தனது அறிக்கையில் கேட்டுள்ளார் மருத்துவர் இராமதாசு அவர்கள். அவரது அறிக்கை கீழே:

"கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 151 பேரில் 16 பேர் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம், மேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.சாமி, ஆண்டிப்பட்டி தங்கத் தமிழ்ச்செல்வன், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் வெற்றிவேல், கரூர் செந்தில் பாலாஜி, கோபிச் செட்டிபாளையம் கே.ஏ. செங்கோட்டையன், அரியலூர் துரை. மணிவேல், நன்னிலம் ஆர். காமராஜ், கிருஷ்ணராயபுரம் எஸ். காமராஜ், மதுரை தெற்கு செல்லூர் ராஜு, ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி. சண்முக நாதன், நெய்வேலி எம்.பி.எஸ். சுப்பிரமணியன், மானாமதுரை எம்.குணசேகரன், நாகர்கோவில் நாஞ்சில் முருகேசன், மணப்பாறை சந்திரசேகரன், சாத்தூர் ஆர்.பி. உதயக்குமார் ஆகியோர் மீது பல்வேறு கால கட்டங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த 16 பேரில் 5 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இரண்டு முன்னாள் அமைச்சர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 15-ஆம் தேதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு  பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘‘ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமானால், ஜனநாயக ரீதியில், அறவழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும்; வன்முறை மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்கமுடியாது.  கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் கடமை ஆகும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் கூறிய முதலமைச்சர் அதை தாமும் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யயாததுடன், பொதுச் சொத்துக்களை சேதப் படுத்தியவர்களையும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியவர்களையும் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக்கி அழகு பார்த்திருக்கிறார். இதன்மூலம் பேரூந்துகளை எரித்தவர்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கும் தான் அ.தி.மு.க.வில் பதவி வழங்கப்படும் என்று மறைமுகமாக கூறுகிறாரா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கி, பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பில் அவர்களையே அமர்த்துவதைவிட ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயல் எதுவும் இருக்க முடியாது. தாம் வகிக்கும் முதலமைச்சர் பதவி மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே மரியாதை இருக்குமானால், சட்டப்பேரவையில் கூறியவாறு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாற்றுக்கு ஆளாகியிருக்கும் 5 அமைச்சர்களையும், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, அ.தி.மு.க.வினரால் சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களுக்காக இழப்பீட்டை கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவே செலுத்த வேண்டும். இதற்கெல்லாம் மேலாக பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சக்திகளுக்கு அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வழங்கி ஊக்குவித்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

4 கருத்துகள்:

Karthi Keyan R சொன்னது…

mikavum arumaiyaana pathivu.....sevai thodaravum

Unknown சொன்னது…

இது நீதிஇன் குரல். முதல்வர் பதில் சொல்வார?

kamal சொன்னது…

இந்தவழக்கக முறையே யேமலதா, காயத்தரி, கோகிலவாணி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நீதிவழங்கட்டும் என கேட்டுக்கொல்கிரேன்.

kamal சொன்னது…

ஆவி உலகைத் தொடர்புகொல்வது ஒருகால் சாத்தியமென்றால் தீக்கிரையான வேலான் பல்கலை கழக மாணவியரது ஆவிகளை தொடர்பு கொண்டு நீதிகோரலாம்.