Pages

செவ்வாய், பிப்ரவரி 11, 2014

ராஜபக்சேவை காப்பாற்றும் தமிழ்த்தேசியப் போராளிகள்?!

ஈழத்தமிழர் இனப்படுகொலை தொடர்பில் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை உலகம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ராஜபக்சே கும்பலுக்கு ஜெனீவாவில் நெருக்கடி உருவாகியிருக்கிறது. 

இந்த நேரத்தில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளைக் குழப்பும் வேலையில் சில தமிழ் அமைப்பினரே ஈடுபட்டுள்ளனர். ராஜபக்சேவை காப்பாற்றும் வாய்ப்புள்ள இந்தச்சதிக்கு தமிழ் மக்கள் பலியாகக் கூடாது.

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமை யானுங் கெடும்."

'செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்' என்கிறார் திருவள்ளுவர்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை எதிர்க்கும் சிங்கள அமைப்பினர்
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை எதிர்க்கும் தமிழ் அமைப்பினர்

இப்போது 'ஈழத்தமிழர் உரிமைக்காக போராடுவதாக' கூறிக்கொள்ளும் சில அமைப்பினர் செய்யக்கூடாத நேரத்தில் செய்யக்கூடாத வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் மக்களைக் குழப்பும் வேலையையும் தொடங்கியுள்ளனர். இந்த ஆபத்தான போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழினத் துரோகம் - நேற்றும் இன்றும்!

தமிழர்களுக்கு ஏராளமான நாடுகள் துரோகம் இழத்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராஜபக்சேவுக்கு போரில் உதவி செய்துள்ளன. ஐக்கிய நாடுகள் அவையும் தமிழர்களுக்கு துரோகம் செய்தது. ராஜபக்சேவின் குற்றங்களைத் தடுக்காமல் ஐநா வேடிக்கைப் பார்த்திருக்கிறது.

இவர்கள் எல்லோரைவிடவும் மிகமிக அதிகமாக இந்திய அரசு துரோகம் செய்தது. இவை எல்லாமும் 2009 ஆம் ஆண்டுவரையிலான சோக நிகழ்வுகள். 
அமெரிக்க நிறுவனங்களை விரட்டக் கோரும் சிங்கள அமைப்பினர்
அமெரிக்க நிறுவனங்களை விரட்டக் கோரும் தமிழ் அமைப்பினர்

அதன்பிறகு, குறிப்பாக 2012 ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது வரை ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கத் தடையாய் இருப்பது இந்திய அரசுதான். போருக்குப் பின்னாலான இந்தக் காலகட்டத்தில் இந்தியாவுடன் சீனா, கியூபா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் இஸ்லாமிய நாடுகள் தமிழர்களுக்கு எதிரான தீவிர நிலைபாட்டில் உள்ளன.

2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐநா மன்றம் தமிழர்களுக்கு எதிராக இல்லை. இந்த மாற்றங்களை தமிழர்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

இப்போதைய தேவை என்ன?

இலங்கை அரசுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் அதனை பொத்திப் பாதுகாக்கும் கொடுஞ்செயலை இப்போதும் செய்துகொண்டிருக்கிறது இந்திய அரசாங்கம். ராஜபக்சே அரசுக்கு எந்தக் கேடும் நேரக்கூடாது என்பதில் இலங்கையை விட இந்திய அரசுதான் ஆர்வத்துடன் இருக்கிறது.

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், ஐநா மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட போது அதனைத் தீவிரமாக எதிர்த்து, அந்த தீர்மானங்களை நீர்த்துப்போக செய்தது இந்திய அரசாங்கம்தான். 

எனவே, 'இந்திய அரசுக்கு தமிழ்நாடு நிர்பந்தம் கொடுத்து, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும்' என்பதுதான் இப்போதைய தேவை.

அதிலும் குறிப்பாக 'இலங்கை மீது பன்னாட்டு விசாரணைக்கான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்' என்கிற கோரிக்கையை இந்திய அரசே முன்வைத்து "பகிரங்கமாக" அறிவிக்க வேண்டும். இதனை தமிழ்நாடு ஒன்றுபட்டு வலியுறுத்த வேண்டும்.

வேண்டாத வேலைகளுக்கு இது நேரம் அல்ல

இன்றைய நிலையில் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, ஐநா அவையோ - தமிழர்களுக்கு எதிரிகள் அல்ல. மாறாக, இலங்கையை ஆதரிக்கும் சீனா, கியூபா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் இஸ்லாமிய நாடுகள்தான் தமிழர்களுக்கு எதிரானவர்கள்.

இவர்கள் எல்லோரைவிடவும் ஆகப்பெரிய எதிரியாக இருப்பது நமது தாய்நாடு இந்தியாதான்.
ஐநாவை எதிர்த்துப் போராடும் சிங்கள அமைப்பினர்
ஐநாவை எதிர்த்துப் போராடும் தமிழ் அமைப்பினர்

இலங்கையில் சிங்கள இனவெறியர்கள் எல்லோரும் ஐநாவையும் அமெரிக்கவையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அமெரிக்காவையும், ஐநா அவையையும் எதிர்த்து தமிழர்களும் போராடுவது ராஜபக்சேவுக்கு ஆதரவாகவே முடியும்.

என்ன செய்ய வேண்டும்?

எதிரிகள் - எதிரி அல்லாதவர்கள் யார்?

1. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐநா மன்றம் ஆகியன இப்போது தமிழர்களின் எதிரிகள் அல்ல (சிங்கள இனவெறியர்களால் எதிர்க்கப்படுவோர், தமிழ் மக்களின் எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை).
இரஷ்யாவைப் பாராட்டும் சிங்களர்கள்

2. இந்தியா, சீனா, கியூபா, ரஷ்யா, ஜப்பான், பாகிஸ்தான், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளே தமிழர்களுக்கு எதிரானவர்கள்.

தமிழர்கள் எழுப்ப வேண்டிய கோரிக்கைகள்

1. இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பில் ஐநா பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து ஐநா விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும்.

2. 'இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என இந்திய அரசாங்கம் உடனடியாக, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 

- இத்தகையக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் ஓரணியில் திரண்டு இந்திய அரசை பணிய வைக்க முயற்சிக்க வேண்டும். இதைவிடுத்து அமெரிக்காவுக்கும் ஐநாவுக்கும் எதிராகப் பேசிக்கொண்டிருப்பது ராஜபகசேவைக் காப்பாற்றுவதில் போய் முடியுக்கூடும்.

கருத்துகள் இல்லை: