Pages

திங்கள், மே 04, 2015

மு.க. ஸ்டாலினுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்: தமிழகத்தை சீரழித்து சிதைத்ததில் தி.மு.க.வுக்கு பங்கில்லையா? 

"இராமாயணத்தை கூனி இல்லாமலும், மகாபாரதத்தை சகுனி இல்லாமலும் எப்படி எழுத முடியாதோ அதேபோல் தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை தி.மு.க. இல்லாமல் எழுத முடியாது "
அன்புள்ள தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம்... நலம், நலம் வாழ வாழ்த்துக்கள்!

தமிழகத்தின் இன்றைய நிலை தொடர்பாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை படித்தேன்... ஆனால், ரசிக்கவோ, சுவைக்கவோ முடியவில்லை.

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை

ஆட்சிப் பொறுப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு 46 மாதங்கள் வனவாசம் அனுபவித்ததாலேயே உங்களின் தவறுகளையும், ஊழல்களையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் ஊழல்கள் குறித்தும், நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீங்கள் பாடம் நடத்தியிருப்பதைப் பார்க்கும் போது ‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற பழமொழி நினைவுக்கு வந்ததை தடுக்க முடியவில்லை.
(கார்ட்டூன் - ராவணன்)
இராமாயணத்தை கூனி இல்லாமலும், மகாபாரதத்தை சகுனி இல்லாமலும் எப்படி எழுத முடியாதோ அதேபோல் தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை தி.மு.க. இல்லாமல் எழுத முடியாது என்பது தானே உண்மை. அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படும் ஒரே துறை டாஸ்மாக் தான் என்று கூறியிருக்கிறீர்கள்.

உண்மை தான். ஆனால், அதை சொல்லும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

மதுவை திணித்தது திமுக

அரசின் செலவுகளை ஈடுகட்டவும், மலிவுவிலை அரிசித் திட்டத்தை செயல்படுத்தவும் மது விற்பனையைத் தொடங்கலாம் என பேரறிஞர் அண்ணாவிடம் அதிகாரிகள் பரிந்துரைத்த போது, மக்களைக் கெடுக்கும் மதுவை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

அண்ணாவின் வழியில் நடப்பதாக கூறும் நீங்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் அவரைப் பின்பற்றினீர்களா? மது என்றால் என்ன என்பது ஒரு தலைமுறைக்கே தெரியாமல் இருந்த நிலையில், இராஜாஜி, காமராஜர் போன்ற மூத்த தலைவர்களின் அறிவுரையை மதிக்காமல், 1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்து சாராயத்தை வெள்ளமென ஓடவிட்டவர் உங்கள் தந்தை கலைஞர் தானே?
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள் என்று கோரிய போதெல்லாம் ‘நெருப்பு வளையத்தின் நடுவில் வைத்த கற்பூரம் போல தமிழ்நாடு இருக்கிறது” என்று கூறித் தானே நீங்களும், உங்கள் தந்தை கலைஞரும் தமிழக மக்களை ஏமாற்றினீர்கள். இராஜாஜியும், ஓமந்தூராரும், காமராஜரும், உங்கள் வழிகாட்டியான அண்ணாவும் இந்த நெருப்பு வளையத்திற்குள் வைத்து தானே தமிழ்நாடு என்ற கற்பூரத்தைக் காப்பாற்றினர்.

நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது மதுவிலக்கை நடைமுறைப் படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கூறவில்லையா? 23.12.2008 அன்று மருத்துவர் அய்யா தலைமையிலான குழுவின் வேண்டுகோளை ஏற்று மது விற்பனை நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்த கலைஞர், படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தாரே... நடைமுறைப்படுத்தினாரா? இப்போது கூட முழு மதுவிலக்கு குறித்து வாக்குறுதி அளிக்க முடியாத உங்களுக்கு மதுவிலக்கு பற்றி பேச என்னத் தகுதி இருக்கிறது?

தொழில் முதலீடுகள் - திமுகவுக்கு தகுதி உண்டா?

முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும், தொழில் முதலீடுகள் குறித்தும் பேசியிருக்கிறீர்கள். நல்லது தான். முந்தைய ஆட்சியில் தொழில்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்த நீங்கள், திமுக ஆட்சியில் ரூ.46,091 கோடி மதிப்புள்ள 37 தொழில்திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டிருப்பதாகவும், அதனால் 2,52,569 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினீர்கள். அப்படி கிடைத்ததா? இதுகுறித்து வெள்ளை அறிக்கை கோரியபோது அதை ஏற்க மறுத்த உங்களுக்கு தொழில் முதலீடுகள் பற்றி பேச என்னத் தகுதி இருக்கிறது?

நீங்கள் என்ன செய்தீர்களோ, அதையே தான் அ.தி.மு.க.வும் செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 46,602.72 கோடி தொழில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினார்கள். இதில் ஒரு விழுக்காடு கூட முதலீடு செய்யப்படவில்லை. இதன்மூலம் இரு கட்சிகளுமே மக்களை ஏமாற்றுவதில் ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பதை நிரூபித்திருக்கின்றன.

தமிழகத்திலுள்ள நிறுவனங்கள் இங்குள்ள ஆலைகளை மூடிவிட்டு வெளி மாநிலங்களில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன என்பதும் உண்மை தான்.  இது போன்றதொரு மோசமான நிலை தமிழ்நாட்டில் இதுவரை இருந்தது கிடையாது. இதற்குக் காரணமே நீங்கள் தானே.

வரலாறு காணாத மின்வெட்டுதான் திமுகவின் சாதனை

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின்வெட்டு ஏற்படுவதற்குக் காரணமே தி.மு.க. ஆட்சி தானே. முந்தைய ஆட்சியில் வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் 1800 மெகாவாட் மின்நிலையங்களை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, அனைத்து மின்திட்டங்களும் 30 மாதங்களில் முடிக்கப்பட்டு 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், திமுக ஆட்சியின் பதவிக் காலம் முடிந்த பிறகும் அந்த நிலையங்களின் பணிகள் முடிக்கப்படாதது தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியாதா?
உடன்குடி மின் திட்டத்திற்கு 2007 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டிய உங்கள் அரசு அதன்பின் 4 ஆண்டுகளாக எதுவுமே செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்தது உண்மையா... இல்லையா? மின்வெட்டைப் போக்க எதுவுமே செய்யாத  உங்களுக்கு மின்வெட்டு, தொழில் முதலீடு ஆகியவை பற்றியெல்லாம் பேச என்ன உரிமை இருக்கிறது?  இன்றைய நிலையில் தமிழகத்தின் மொத்த மின்தேவை 14,500 மெகாவாட் மட்டுமே. கடந்த 49 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துவரும் நீங்களும், அ.தி.மு.க.வும் இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களைக் கூட செயல்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்று தானே பொருள்?

தி.மு.க. ஊழல்கள்

ஊழல் குறித்தும் உங்கள் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதாக சர்க்காரியா கமிஷனால் சான்றளிக்கப்பட்ட தி.மு.க. ஊழல்கள் குறித்து பேசுவதும், கசாப்புக் கடைக்காரன் அகிம்சை பற்றி பேசுவதும் ஒன்று தான். தி.மு.க. ஆட்சியில் ஊழல்கள் நடைபெறவே இல்லையா? உலக அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித் தந்தது 2ஜி ஊழல் தான். இந்தியா ஊழல் நாடு என்ற தோற்றம் ஏற்பட இது தான் காரணம். ரூ.1.76 லட்சம் கோடி மதிப்புள்ள அந்த ஊழலின் காரணகர்த்தா தி.மு.க. தானே? அதுமட்டுமின்றி தமிழகத்தை நீங்கள் ஆண்டபோது துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி அனைத்து பணி நியமனங்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டதா... இல்லையா?

வாக்கு விற்பனை - திருமங்கலம் திட்டம்

இலவசங்களை வாரி இறைத்து மக்களை சோம்பேறிகளாக்கும் கலாச்சாரத்தை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, 2 ஏக்கர் நிலம் ஆகியவற்றுடன் 2006 ஆம் ஆண்டில் நீங்கள் தொடங்கினீர்கள்.
2011 ஆம் ஆண்டில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு-மாடு என ஜெயலலிதா விரிவு படுத்தினார். அதேபோல், தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கான ‘திருமங்கலம் திட்டத்தை’ நீங்கள் அறிமுகம் செய்தீர்கள். அவர்கள் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணத்துடன் மூக்குத்தி, தோடு வழங்கும் அளவுக்கு விரிவுபடுத்தி ‘திருவரங்கம் திட்டத்தை’ உருவாக்கினார்கள். ஆக மொத்தம் மக்களைக் கெடுப்பதில் இரு கட்சிகளும் போட்டிப் போடுகிறீர்கள்.

இயற்கை வளக் கொள்ளை

இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்தும் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறீர்கள். இந்தக் கொள்ளையை தொடங்கி வைத்தது தி.மு.க. தானே?  டாட்டா டைட்டானியம் ஆலையை  தூத்துக்குடிக்கு கொண்டுவந்து அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முயன்றது தி.மு.க. தானே? முந்தைய ஆட்சியில் சட்டவிரோதமாக தாது மணலை வெட்டி எடுத்ததாக ஒரு தொழிலதிபரை கைது செய்து கொடுமைப்படுத்திய நீங்கள், திடீரென அவருடன் சமாதானம் ஆகி கை குலுக்கியது ஏன்? நீங்கள் அந்த தொழிலதிபருடன் சமாதானம் செய்து கொண்டீர்கள். இப்போது அ.தி.மு.க.வினர் அவருடன் கூட்டணி அமைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

கிரானைட் கொள்ளையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்களையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த நீங்கள் இப்போது கிரானைட் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது? 1996 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. கிரானைட் வெட்டி எடுக்க சட்டவிரோதமாக அனுமதி அளித்ததாக கூறி ஜெயலலிதா மீது  வழக்குத் தொடர்ந்தது. அதனடிப்படையில்   ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காமல் விசாரணை நிலையிலேயே அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்தது ஏன்? கிரானைட் ஊழல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் இரு முறை ஆட்சி செய்த தி.மு.க. இக்கொள்ளையை தடுக்க என்ன செய்தது? கிரானைட் நிறுவனங்களுடன் இருகட்சிகளும் மாறிமாறி கூட்டணி வைத்து இமாலய ஊழல் செய்ததெல்லாம் மக்களுக்கு தெரியாததல்ல.

மணல் கொள்ளை

2003 ஆம் ஆண்டில் ஆற்று மணல் விற்பனையில் புதிய முறையை ஜெயலலிதா புகுத்தினார். அதுவே ஊழல்களுக்கும், மணல் கடத்தலுக்கும் வழிவகுத்தது என்பது உண்மை தான். 2006 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நீங்கள் ஏன் இந்த முறையை ரத்து செய்யவில்லை? பா.ம.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அதை செயல்படுத்தாமல் உயர்நீதிமன்ற ஆணையை கிடப்பில் போட்டுவிட்டு மணல் கடத்தலை ஆதரிக்க வில்லையா?

அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தனி நபர் ஒட்டுமொத்த மணல் விற்பனையையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ, அவர் தானே உங்கள் ஆட்சியிலும் மணல் கொள்ளையை தலைமையேற்று நடத்தினார். அரசியல் ரீதியாக எதிர்த்துக் கொள்ளும் அதிமுகவும், நீங்களும் இது போன்ற முறைகேடுகளில் மட்டும் ஒற்றுமையாய் இருப்பது எப்படி?

ஆவின் பால் கலப்பட ஊழலை செய்த வைத்தியநாதன் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு 104 லாரிகள் மூலம் பால் கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தை அவருக்கு வழங்கியது தி.மு.க. அரசு தானே? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் அவருக்கு உரிமம் நீடித்தது என்றால் ஊழல் தொடர்பான விஷயங்களில் இரு கட்சிகளும் ஒரே நிலையில் இருப்பதாகத் தானே பொருள்.

தமிழினத் துரோகம்

இனம், மொழி காப்பதே எங்கள் குறிக்கோள் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதற்காக என்ன செய்தது? இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டதை தடுப்பதற்காக 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியதைத் தவிர வேறு எதையாவது தி.மு.க. செய்ததா?
(முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, திமுகவினர் சென்னையில் ஒட்டிய சுவரொட்டி)

1985 ஆம் ஆண்டு டெசோ அமைப்பின் சார்பில் தமிழகம் முழுக்க பொதுக்கூட்டங்களை நடத்திய கலைஞர், ‘‘இலங்கையில் தமிழீழம் அமைய ஆதரவு அளிப்போம்’’ என்பது உள்ளிட்ட 5 உறுதிமொழிகளை தி.மு.க. தொண்டர்களுக்கு செய்து வைத்தார். அதையெல்லாம் முதலில் கலைஞரும் நீங்களும் பின்பற்றினீர்களா?

ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்த போதிலும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்ட எழுச்சியை தண்ணீர் ஊற்றி அணைத்த கட்சி தானே தி.மு.க.

தலைவர் பிரபாகரனின் தாயார்

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் உடல் நலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்தபோது, மனசாட்சியே இல்லாமல், விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல் திருப்பி அனுப்பினீர்களே இது தான் இனத்தைக் காக்கும் செயலா?
(தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட போது, சுப. வீரபாண்டியன் ஒட்டிய சுவரொட்டி)

நீங்கள் பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பினீர்கள்... ஜெயலலிதா பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்து தூக்கில் போட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். நீங்கள் இருவருமே தமிழர்களின் எதிரிகள் என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்?

காவிரிப் பிரச்சினை

காவிரிப் பிரச்சினையில் 1974 ஆம் ஆண்டில் புதுப்பித்துக் கொள்ளப்படவேண்டிய காவிரி ஒப்பந்தத்தை அப்போதைய மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்து கைவிட்டது தி.மு.க. ஆட்சி தானே; இப்போது ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த தவறு தானே காரணம். திமுக ஆட்சியில் தானே காவிரி துணை நதிகளின் குறுக்கே ஹாரங்கி, ஹேமாவதி, கபினி உள்ளிட்ட அணைகள் அனுமதியின்றி கட்டப்பட்டன. இவற்றைத் தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்ததா?

அதன்பின் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அதன் இறுதித் தீர்ப்பு 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் அத்தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடவும், அதனடிப்படையில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன்? இப்படிப்பட்ட தி.மு.க.வுக்கு மேகதாது அணை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது தவறான அணுகுமுறையை கடைப்பிடித்து தீர்ப்பு கிடைப்பதை தாமதமாக்கிய பெருமையும்  உங்களைத் தானே சாரும்.

கச்சத்தீவு

தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது, மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்து, தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் தி.மு.க தலைவர் கலைஞர் தானே? தமிழக மீனவர்கள் இப்போது அனுபவித்துவரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த துரோகம் தானே காரணம்? பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியபோது அதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தது உங்களின் தி.மு.க. அரசும், அ.தி.மு.க. அரசும் தானே?

மீத்தேன் திட்டம்

தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம் வருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே நீங்கள் தான்.  ஆனால், ஆட்சி மாறிய பின் அத்திட்டத்திற்கு எதிராக நீங்களே போராட்டம் நடத்துவது எந்த வகையில் நியாயம்.
(ஸ்டாலின் முன்னிலையில் மீத்தேன் திட்டம் கையொப்பம்)

கல்வி

1967 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே தாய்மொழி வழிக் கல்வியை  அறிமுகம் செய்யப்போவதாக தி.மு.க. கூறியது. ஆனால், அதன்பின் 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றீர்கள்... இப்போது எங்கு தமிழ் இருக்கிறது.  இந்தியாவிலேயே தாய்மொழியாம் தமிழை படிக்காமல் பட்டம் பெற்றுவிடலாம் என்ற அவல நிலை தமிழகத்தில் மட்டுமே நிலவுகிறது.

அதைவிடக் கொடுமை முந்தைய தி.மு.க. ஆட்சியில் தான் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விமுறை தொடங்கப்பட்டது. அதை இப்போது அதிமுக அரசு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறது. பத்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், அதை நிறைவேற்றுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்டு வந்த சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில வழிப்பள்ளிகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திக் கட்டணக் கொள்ளைக்கு வழிவகுத்தது திமுக தானே?

சீக்காளி சென்னை

நிர்வாக சீர்கேடுகள் குறித்தும் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டிருப்பது குறித்தும் கவலைத் தெரிவித்திருக்கிறீர்கள்.  சற்றே பின்னோக்கிச் சென்று உங்களின் நிர்வாகம் எப்படி இருந்தது என்பதையும் பாருங்கள். 1996 ஆம் ஆண்டில் சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்றீர்கள். அப்போது  சென்னையை சிங்காரச் சென்னையாக்குவது தான் நோக்கம் என்றீர்கள். அதை நிறைவேற்றினீர்களா?  மேயராக 5 ஆண்டுகள் இருந்ததுடன், உள்ளாட்சித்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் சென்னையை நிர்வாகம் செய்துவந்திருக்கிறீர்கள்.

இந்த காலத்தில் சென்னை சிங்காரச் சென்னையாக மாறவில்லை. சீக்காளி சென்னையாகவே மாறியிருக்கிறது.  சென்னையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள், சாக்கடைக் கழிவுகள், கூவம் நாற்றம், காற்று மாசு, குடிநீர் பிரச்சினை, கொசுத்தொல்லை, போக்குவரத்து நெரிசல் ஆகியவை தான் நிரம்பியுள்ளன. கூவம் ஆற்றை தூய்மைப்படுத்துவதாகக் கூறி ரூ.1400 கோடியில் திட்டம் செயல்படுத்தினீர்களே.... இப்போது கூவம் மணக்கவா செய்கிறது... இப்போது நாற்றம் தானே வீசுகிறது. நீங்களும், அதிமுகவும் கூவத்தை தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டி உங்கள் பைகளை நிரப்பிக் கொண்டதைத் தவிர வேறு உருப்படியாக வேறு எதையாவது செய்ததுண்டா?

தி.மு.க., அ.தி.மு.க - ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளில் இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியை விட மிக மிக மோசமான ஆட்சியைப் பார்க்க முடியாது. இன்றைய நிலையில் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளோ அல்லது மக்கள் நலப்பணிகளோ நடைபெறவில்லை. கோவில்களில் பூஜை செய்தல், தீச்சட்டி ஏந்துதல், காவடி எடுத்தல் போன்ற பணிகள் மட்டுமே நடக்கின்றன.
எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நிர்வாக எந்திரம் செயலிழந்து விட்டது. தமிழகத்தின் இன்றைய அவலநிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே காரணம். ஊழலையும், முறைகேடுகளையும் தி.மு.க. தொடங்கி வைத்தது. அதை அ.தி.மு.க. பிரம்மாண்டமாக்கியிருக்கிறது. இந்த குற்றத்திலிருந்து இரு கட்சிகளுமே தப்பிக்க முடியாது.

நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்த ஊழலை நீதிபதி சர்க்காரியா ஆணையம் அம்பலப்படுத்தியது. அதன்பின் 1991&96 ஆட்சியில் செய்த ஊழலுக்காகத் தான் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும்,  ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை சீரழித்ததில் அதிமுகவும், திமுகவும் தனித்தனி கட்சிகள் அல்ல... அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான்.

ஒளிமயமான தமிழ் நாடு: பாமக சாதித்துக் காட்டும்

இன்றைய நிலையில் தமிழகம் மிகுந்த நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில்(ICU)  கவலைக்கிடமாக கிடத்தப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கவலை தெரிவித்திருக்கிறீர்கள். இனி அந்தக் கவலை உங்களுக்குத் தேவையில்லை. அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் நோயாளியைக் கூட காப்பாற்றும் சக்தி மருத்துவர்களுக்கு உண்டு. அந்த வகையில் மக்கள் விருப்பப்படி பா.ம.க. ஆட்சிக்கு வந்தபின்னர் கவலைக்கிடமாக உள்ள தமிழகத்தை மருத்துவராகிய நான் குணப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வருவேன்.

நன்றி!

தங்கள் அன்புள்ள

மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

2 கருத்துகள்:

மோகன் சொன்னது…

நன்றாகள்ளது ஆனால் தினசிரி இல்லாமல்
மக்களிடம் போய் சேராது கட்சி தினசரி வேண்டும்

karthick சொன்னது…

உன்மை