Pages

செவ்வாய், நவம்பர் 30, 2010

கான்குன்: ஐ.நா.மாநாட்டால் உலகம்  அழியாமல் காப்பாற்றப்படுமா?

புவி வெப்பமடைதல் ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது. வரலாற்றில் இதுவரை இருந்திராத வகையில் மிக அதிக வெப்பம் நிலவும் ஆண்டாக 2010 ஆம் ஆண்டு மாறும் எனக் கணிக்கப்படுகிறது. இதனால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன.

'வரலாறு காணாத' புயல், 'வரலாறு காணாத' மழை, 'வரலாறு காணாத' வெள்ளம், 'வரலாறு காணாத' வறட்சி, 'வரலாறு காணாத' காட்டுத்தீ, 'வரலாறு காணாத' நில நடுக்கம், 'வரலாறு காணாத' பனிப்பொழிவு,  'வரலாறு காணாத' குளிர் என்பனவெல்லாம் இப்போது வழக்கமாகிவிட்டன - காரணம் காலநிலை மாற்றம்தான்.

இயற்கை சீற்றங்கள் வரலாற்றில் இல்லாத அளவாக மாறியுள்ளன. இப்படி நடக்கும் என்பதை 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. பன்னாட்டு அறிவியலாளர் குழுவின் (IPCC - Intergovernmental Panel on Climate Change) அறிக்கை தெளிவாக எச்சரித்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் கட்டுப்படுத்தவே முடியாதவையாக மாறும் நிலை தற்போது தோன்றியுள்ளது. உலகெங்கும் பல்வேறு மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. இவை ஒரு மிகப்பெரிய பேரழிவின் தொடக்கமாக இருக்கக் கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

'உலகம் அழிவதை மனிதர்களால் தடுத்து நிறுத்த முடியும்' என்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து வருகிறது. உலக அழிவை மனித சக்தியால் தடுத்து நிறுத்தவே முடியாத கட்டத்தை எட்டும் நிலை வந்துவிட்டதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், 'அறிவியல்' சுட்டிக்காட்டும் அவசர நிலையை 'அரசியல்' தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

அறிவியல் சொல்வது என்ன?

புதை படிவ எரிபொருட்கள் எனப்படும் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாய உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாலும் - காடுகளை அழிப்பதாலும், அதிக அளவு கரியமில வாயு பூமியின் வளிமண்டலத்தில் கலக்கிறது.

வளிமண்டல கரியமில வாயு அடர்த்தி 200 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 275 ppm அளவாக இருந்தது. இப்போது 392 ppm ஆக அதிகரித்துள்ளது. (ஒரு ppm என்பது பத்துலட்சத்தில் ஒரு பகுதி ஆகும்.)

வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயு, சூரியனிடமிருந்து வரும் வெப்ப சக்தியை பிடித்து வைக்கும் திறனுடையது. இதன் அடர்த்தி அதிகமாவதற்கு ஏற்ப, அது பிடித்துவைக்கும் வெப்பமும் அதிகமாகிறது. இதனால், பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாகி வருகிறது. உலகெங்கும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, இயற்கை சீற்றங்கள் கட்டுக்கடங்காத அளவு அதிகமாவதற்கு இதுவே காரணம்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை உடனடியாக குறைக்க வேண்டும். காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். இப்போதைய 392 ppm கரியமில வாயு அடர்த்தி மென்மேலும் அதிகரிக்காதவாறு வேகமாக செயல்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும். கூடவே, இதனை 350 ppm அளவுக்கு படிப்படியாக குறைத்தாக வேண்டும்.

இதுவே, பூமியில் மனித இனமும், உயிரினங்களும் தொடர்ந்து உயிர் பிழைத்திருக்க ஒரே வழி என்கின்றனர் அறிவியலாளர்கள்.

அரசியல் தலைவர்கள் செய்வது என்ன?

உலகநாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கடந்த 20 ஆண்டுகளாக ' புவி வெப்பமடைவது' குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகத் தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் - ஐ.நா. அவையை மையமாக வைத்து நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உருப்படியான முடிவு எதுவுமே எட்டப்படவில்லை.

ஐ.நா. புவி உச்சிமாநாடு 1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் கூடியபோது, அதன் ஒரு அங்கமாக "காலநிலைமாற்ற பணித்திட்ட பேரவை" (UNFCCC - United Nations Framework Convention on Climate Change) ஏற்படுத்தப்பட்டது. உலகின் பெரும்பாலான நாடுகள் பங்கேற்கும் இந்த அமைப்பின் 'அமைச்சர்கள் அளவிலான ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு' (Conference of the Parties -COP) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் கூடிய  மாநாட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க 'கியோட்டோ உடன்படிக்கை' (Kyoto Protocol ) எட்டப்பட்டது.

வளிமண்ட கரியமில வாயு அடர்த்திக்கு வரலாற்று ரீதியில் காரணமான நாடுகள் கியோட்டோ உடன்படிக்கையில் பட்டியலிடப்பட்டன. அந்த நாடுகள் கூட்டாக 1990 ஆம் ஆண்டில் எவ்வளவு கரியமில வாயுவை வெளியேற்றினவோ - அந்த அளவுக்கு கீழாக 5.2% அளவுவரை 2008 - 2012 ஆண்டுகளில் கரியமில வாயு வெளியாகும் அளவை குறைக்க வேண்டும் என்றது இந்த உடன்படிக்கை.

உலகின் மிக அதிகம் மாசுபடுத்தும் நாடான அமெரிக்கா, இந்த உடன்படிக்கையில் முதலில் இணைந்து பின்னர் வெளியேறிவிட்டது.

இதற்கு பின்னர் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா. அவையின் ஒரு அங்கமான பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு (IPCC)அறிக்கை, கரியமில வாயு வெளியாகும் அளவை 1990 ஆம் ஆண்டின் அளவுக்கு கீழாக 5.2 % குறைத்தால் போதாது, உண்மையில் 80 % குறைக்க வேண்டும் என்றது. எனவே, புதிய புரிதலுக்கு ஏற்ப புதிய வியூகத்தை வகுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பாலி வழிகாட்டி 2007 (Bali Road Map)

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு (COP 13) 2007 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலித் தீவில் கூடியபோது இருவழி பேச்சுகளைத் தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

1. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கியோட்டோ உடன்படிக்கையை அடுத்த காலகட்டத்திற்கு கொண்டு செல்வது. அதாவது, 5.2 % அளவு கரியமில வாயு வெளியாகும் அளவை 2012 க்குள் எட்டுவது என்பதை 2012 க்கு பின்னும் நீட்டிப்பது (80 % வரை). (Ad Hoc Working Group on Further Commitments under the Kyoto Protocol - KP)

2. கியோட்டோ உடன்படிக்கையில் அமெரிக்கா ஒரு உறுப்பு நாடு அல்ல என்பதால், அந்த நாட்டையும் இணைத்து 'நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயல்பாடு' குறித்து பேசுவது, என்று முடிவெடுக்கப்பட்டது. (Ad Hoc Working Group on Long-term Cooperative Action - LCA)

இரண்டுவகையாக பேசினாலும் இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். ஒன்றில் அமெரிக்கா இடம்பெறாது, மற்றதில் இடம்பெறும் - இதுதான் வேறுபாடு.

'நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயல்பாடு' (LCA) பேச்சுகளில்:

அ. கரியமில வாயு உள்ளிட்ட பசுங்கூட வாயுக்கள் வெளியாகும் அளவினைக் குறைத்தல் (Mitigation),

ஆ. மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்வது (Adaptation),

இ. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்குவது மற்றும் பகிர்ந்து கொள்வது (Technology),

ஈ. மேற்கண்ட மூன்று தேவைகளுக்குமான நிதிவளத்தை அளிப்பது (Finance) - ஆகியவை குறித்து பேசுவது என்பதே பாலி வழிகாட்டி ஆகும்.

அவ்வாறே, கியோட்டோ உடன்படிக்கையில் இணைந்துள்ள நாடுகள் அதனை 2012 ஆம் ஆண்டுக்கு பின்னும் தொடர்வதற்கான இலக்குகளை வகுப்பது பாலி வழிகாட்டியின் மற்றொரு வழிப் பேச்சுவார்த்தை.

இந்த இரண்டு வழிகளின் இலக்கும் 'காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்வது' ஆகியனதான். எனினும், கியோட்டோ உடன்படிக்கை அதன் உறுப்பு நாடுகளை சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியது. மற்றது வெறும் பேச்சுதான்

தோல்வியில் முடிந்த கோபன்ஹெகன் மாநாடு.

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு (COP 15) ஆம் 2009 ஆண்டு டென்மார்க்கின் கோபன்ஹெகன் நகரில் கூடும்போது 1. நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயல்பாடு, 2. கியோட்டோ உடன்படிக்கை இருவழி பேச்சுகளும் வெற்றி பெற்று தலைவர்கள் புதிய உடன்படிக்கையில் கையொப்பமிடும் இடமாக அது அமையவேண்டும் என்று ஏற்கனவே பாலி வழிகாட்டியில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறே நடக்கும் என்று உலகெங்கும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளின் பிடிவாதத்தால் கோபன்ஹெகன் மாநாடு தோற்றுப்போனது.

தோல்வி தொடருமா?

கோபன்ஹெகன் மாநாடு தோல்வியில் முடிந்தாலும், 2010 ஆம் ஆண்டில் உடன்படிக்கை எட்டப்படும் வகையில் பேச்சுவார்த்தைகளை தொடர்வது என்று அங்கே முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் உலக நாடுகளுக்கு இடையேயான கூட்டங்கள் முறையே 2010 ஏப்ரல், சூன், ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் மூன்று முறை ஜெர்மனியின் பான் நகரில் கூடியது. நான்காவது கூட்டம் அக்டோபர் மாதம் சீனாவின் தியான்ஜின் நகரில் கூடியது. இங்கெல்லாமும் பேச்சுவார்த்தைகளில் இழுபறியே நீடித்தது.

கான்குன் நகரில் என்ன நடக்கும்?

மெக்சிகோவின் கான்குன் நகரில் இப்போது நவம்பர் 29 முதல் டிசம்பர் 10 வரை ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு (COP 16) கூடியுள்ளது. "கோபன்ஹெகனில் தவறவிடப்பட்ட உடன்படிக்கை" உலகத் தலைவர்கள் கான்குனில் கூடும் போதாவது எட்டப்படுமா என்கிற ஆவல் இப்போது எழுந்துள்ளது.

கான்குன் மாநாடு மிகமிக முக்கியமானது - பூமியில் உயிரின வாழ்க்கை தொடருமா, அல்லது ஒரேயடியாக அழியுமா என்பதை இங்கு மேற்கொள்ளப்படும் முடிவுகள்தான் தீர்மானிக்கப் போகின்றன.

கருத்துகள் இல்லை: