Pages

திங்கள், ஜூன் 11, 2012

இந்தி தேசிய மொழியாம் - திராவிடக்கட்சிகளின் வெளிவேடம்!

திராவிடக் கட்சிகள் தமக்கென்று ஒரு மொழிக்கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் 'இந்தித்திணிப்பை எதிர்த்தால் அரசியல் ஆதாயம் கிடைக்கும்' என்கிற தெளிவில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி பல தமிழர்களைத் பலியிட்டு இந்தித் திணிப்பு தடுக்கப்பட்டது.
'இந்தி'யர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புகொள்ள அல்லது தமிழ்நாட்டினர் 'இந்தி'யருடன் தொடர்பு கொள்ள இருமொழிக்குமிடையே மொழிப் பெயர்ப்பாளர்கள் போதும் என்று தெரிந்தும் ஆங்கிலத்தை தொடர்புமொழியாக ஆக்கினார்கள்.

ஆங்கிலம் என்பது மொழிபெயர்ப்பு கருவியா? இல்லை, அதுவும் ஒரு ஆதிக்க மொழி. 'திராவிடர்' எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் தனியார்பள்ளிகளைக் கொழிக்கவிட்டு ஆங்கிலத்தை கல்வி மொழியாகவும் ஆக்கினார்கள்

மொத்தமாக ஆராய்ந்து பார்த்தால் 'திராவிடர்களின்' மொழிக்கொள்கை என்பது 'தமிழ் மொழி ஒழிப்புக்கொள்கை' தான் என்பதை அறியமுடியும்.

"திராவிடர்கள்" வேறு என்னதான் செய்ய முடியும்? தமிழ்நாட்டில் தெலுங்கை ஆட்சிமொழி ஆக்க முடியாது. தமிழ்நாட்டில் கன்னடத்தை ஆட்சிமொழி ஆக்க முடியாது. தமிழ்நாட்டில் மலையாளத்தை ஆட்சிமொழி ஆக்க முடியாது. ஆக, அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் - தமிழை அழிப்பதுதான். தனக்கு பிள்ளை இல்லை என்பதற்காக அடுத்தவர் பிள்ளையைக் கொலை செய்யும் காட்சிகளும் உண்டுதானே!

இந்தி தேசிய மொழியா?

இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் கிடையாது.

இந்திய அரசியல் அமைப்பின் கீழ் தேவநாகரி வடிவிலான இந்தி அலுவல் மொழி எனவும், ஆங்கிலம் துணை அலுவல் மொழி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை இங்கே காண்க: Official language of the Union.

மேலும், அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையின் கீழ் தமிழ் உட்பட 22 மொழிகள் அட்டவணை மொழிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை இங்கே காண்க: EIGHTH SCHEDULE

ஆக, இந்தியாவில் இந்தி, ஆங்கிலம் ஆகிய அலுவல் மொழிகளும், மேலும் 22 அட்டவணை மொழிகளும் அதிகாரப்பூர்வமான மொழிகள் ஆகும். இவற்றில் எந்த ஒரு மொழியும் நாட்டின் தேசிய மொழி அல்ல.
இந்தி நமது தேசிய மொழி அல்ல 
இந்தி இந்திய நாட்டின் தேசிய மொழி அல்ல என்பதை 13.01.2010 அன்று குஜராத் நீதிமன்ற தீர்ப்பும் உறுதி செய்துள்ளது. (“there is nothing on the record to suggest that any provision has been made or order issued declaring Hindi as a national language of the country”) அதனை இங்கே காண்க: Sureshbhai vs Union on 13 January, 2010

இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் 03.03.2010 அன்று அளித்த பதிலில் "இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். அதனை இங்கே காண்க: Rajya Sabha 3.3.2010

தமிழ்நாட்டு பாடநூலில் வரலாற்றுப் பிழை: இந்தி தேசிய மொழியாம்.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகமும் குஜராத் நீதிமன்றமும் இந்தி தேசிய மொழி அல்ல என்று அறிவித்த பின்னரும், தமிழ்நாட்டின் சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் 253 ஆம் பக்கத்தில் "தேவநாகரி வடிவிலான இந்தி, இந்தியாவின் தேசிய மொழியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அதாவது இந்தித் திணிப்பை எதிர்த்ததாகக் கூறிக்கொள்ளும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலத்தின் அரசு பாடநூல் "இந்தி தேசிய மொழி" என்று அறிவிக்கிறது. இது திராவிடக் கட்சிகளின் தமிழ் ஒழிப்பு கொள்கையின் வெளிப்பாடன்றி வேறு என்ன?

"இந்தி தேசிய மொழி" எனக்கூறும் பாடநூல் பக்கம் இதோ

இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தி ஒரு தேசிய மொழியா? சமச்சீர் கல்வி புத்தகத்தில் தவறு

கருத்துகள் இல்லை: