Pages

வியாழன், ஏப்ரல் 07, 2016

வைகோ சாதிவெறிப் பேச்சின் வரலாற்று பின்னணி: மன்னிக்க முடியுமா?

"உலகத்தின் மிகப்பழமையான தொழிலை (விபச்சாரம்) கலைஞர் செய்யலாம். கலைஞருக்கு நாதஸ்வரம் வாசிக்கும் தொழிலும் தெரியும். அதனால் சொல்கிறேன்" - என்று வைகோ கூறியுள்ளார். 

'நாதஸ்வரத்தையும் விபச்சாரத்தையும்' இணைத்து வைகோ பேசியிருப்பது 'பலரும் கவனிக்கத் தவறிய' ஒரு கொடூரமான சாதிவெறி நிகழ்வாகும். உலக வரலாறெல்லாம் பேசும் வைகோ - தமிழ்நாட்டு வரலாற்றையும் அறிந்தவர். எனவே, தெரிந்தே செய்த அவரது இந்தச் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல.
ஆனால், வைகோவின் பேச்சில் ஒரு மாபெரும் வரலாற்றுக் கொடுமை ஒளிந்திருப்பதை கவனிக்காதது போல, 'மன்னிப்பு' எனும் வார்த்தையைக் காரணம் காட்டி பல முற்போக்கு போராளிகள் சர்வ சாதாரணமாக கடந்து போகிறார்கள். எனவே, இந்த நேரத்தில் பழைய வரலாற்றை சுட்டிக்காட்டுவது நமது கடமை ஆகிறது.

('மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் நியாயமான பேச்சுகளை இட்டுக்கட்டி, அதற்கு சாதிச் சாயம் பூசுவதுடன் நிற்காமல், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பேசும் அதே முற்போக்கு வேடதாரிக் கூட்டம் - வைகோ பேசியுள்ள அப்பட்டமான சாதிவெறி பேச்சினைக் கண்டும் காணாமல் போகிறது)

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கருப்பின மக்களைக் குறிக்கும் நிக்கர் (Nigger, Negro) எனும் வார்த்தையை தடைசெய்திருக்கிறது. ஜெர்மன் நாட்டில் நாசிகள் என்கிற வார்த்தையை மற்றவர்களை நோக்கி பேசுவதில்லை. ஹிட்லர் ஆரிய இன மேம்பாட்டைக் குறிக்கும் விதமாக பயன்படுத்திய 'தந்தையர் தேசம்' (Fatherland) போன்ற வார்த்தைகள் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலும் சில சாதிகளை, சில மொழி பேசுவோரை இழிவுபடுத்தும் விதமான சொற்களும், சொற்றொடர்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, வன்னியர்களை 'பள்ளி' என்று சொல்வது இழிவுபடுத்தும் சொல் என்கிறது வன்னிய புராணம். இதுபோன்று, சமூகத்தால் ஏற்கப்படாத சொற்களை வரலாற்று ரீதியிலான நேர்மையான ஆய்வுகள் தவிர, வேறு எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது.

அந்த வகையில், நாதஸ்வரம் என்பதையும் விபச்சாரத்தையும் இணைத்துப் பேசுவது தமிழ்நாட்டில் ஏற்க முடியாததும், ஏற்கக் கூடாததும் ஆகும். 

இசையும் இசை வேளாளர்களும்

தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான நபர்கள் இசை வேளாளர் மரபிலிருந்து வந்தனர். பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி எனப்படும் மாபெரும் இசை மேதை இந்த சமூகத்தை சேர்ந்தவர். இவரது பெயரில் உள்ள எம்.எஸ். என்பது அவரது தந்தை பெயர் அல்ல. அது மதுரை சண்முகவடிவு அம்மாள் என்கிற அவரது தாயார் பெயராகும். சுப்பிரமணிய அய்யர் என்பவர்தான் தனது தந்தை என்று எம். எஸ். சுப்புலட்சுமி பிற்காலத்தில் அவராக கூறியுள்ளார்.

மதுரை புஷ்பவனம், காரைக்குடி சாம்பசிவ அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், சுப்ரமணிய அய்யர் உள்ளிட்டவர்களுக்கு மதுரை சண்முகவடிவு அம்மாளுடன் உறவு இருந்ததாக டி.ஜெ.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ்: இசையில் ஒரு வாழ்க்கை’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது (MS - A Life in Music, 2004 T. J. S. George). 
காங்கிரசு கட்சியை சேர்ந்த கல்கி சதாசிவம் கட்சிப்பணிக்காக சென்னையிலிருந்து மதுரைக்கு சென்றபோது அவருக்கும் எம். எஸ். சுப்புலட்சுமிக்கும் 1936 ஆம் ஆண்டில் தொடர்பு ஏற்பட்டது. தனது 20 ஆவது வயதில் தாயை விட்டு பிரிந்து, மதுரையிலிருந்து சென்னைக்கு ஓடிவந்து ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருந்த 32 வயது சதாசிவத்துடன் சேர்ந்து கொண்டார் சுப்புலட்சுமி. நான்காண்டுகளுக்கு பின்னர் சதாசிவத்தின் மனைவி அபிதகுசலாம்பாள் இறந்த பின்னர் அவர் சுப்புலட்சுமியை இரண்டாம் மணம் செய்துகொண்டார்.

சதாசிவத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்கப் போன சுப்புலட்சுமி, கதாநாயகன் ஜி.என்.பாலசுப்ரமணியம் எனும் திரைப்பட கதாநாயகரை காதலித்தார். எனினும் அது திருமணத்தில் முடியவில்லை.

- மிகவும் வலிமிகுந்த தேவதாசி வாழ்க்கை முறையிலிருந்து வந்த எம்.எஸ். சுப்புலட்சுமிதான் பிற்காலத்தில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதைப் பெற்றார்.

இசை வேளாளர்களின் வலி மிகுந்த வரலாறு

இந்தியா என்பது ஒரு விலங்குக்காட்சி சாலை போன்றது. இந்திய சமூகத்தில், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஒவ்வொன்றும் வேறுபட்டது. ஒரு சாதியினரின் வலியை மற்ற சாதியினரால் உணரவே முடியாது என்பதுதான் இந்திய நாட்டின் தனித்தன்மை ஆகும்.

சில சாதிகள் சமூகப் படிநிலையில் எப்போதும் மேல்நிலையில் இருந்து வருகின்றன. சில சாதிகள் மேலான நிலையில் இருந்து வஞ்சிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில சாதிகள் மிகவும் கீழான நிலையில் இருந்து போராடி ஓரளவுக்கு மேலே வந்துள்ளனர். சில சாதியினர் இன்னமும் கீழான நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சமூக படிநிலையில் இருக்கும் இடம் மற்றும் இடப்பெயர்வுக்கு ஏற்ப சாதிகள் குறித்த எண்ணமும் வலியும் வேறுபடுகிறது. அந்த வகையில் இசை வேளாளர் சமூகத்தின் வரலாறும் வலி மிகுந்ததே ஆகும்.
இசை வேளாளர்களை 'மேளக்காரன்' சாதி என்று தென்னிந்திய குலங்களும் குடிகளும் நூலில் (1855) எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். தஞ்சை மாவட்டத்தில் இருந்த அனைத்து கோவில் நாட்டியப் பெண்களும் தமிழ் மேளக்கார சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று எட்கர் தர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

(தேவதாசிகள் என்போர் உலகின் மிகப்பழைய தொழிலை செய்தனர் என்றும், அவர்களே இசையின் மூலமாக இருந்தனர் என்றும் 1855 ஆம் ஆண்டிலேயே எட்கர் தர்ஸ்டன் கூறினார். அதே வார்த்தைகளை இன்று வைகோ பயனபடுத்தியுள்ளார்.

Dēvadāsis are dancing-girls attached to the Tamil temples, who subsist by dancing and music, and the practice of ‘the oldest profession in the world'. The dancing-girl castes, and their allies the Mēlakkārans, are now practically the sole repository of Indian music, the system of which is probably one of the oldest in the world.- Castes and Tribes of Southern India, Volume 2, 1855, By Edgar Thurston)

சி.ஆர். டே எனும் ஆய்வாளர் தனது The music and musical instruments of southern India and the Deccan, 1891 (C. R. Day) நூலில், "பெரிய மேளம் என்பது கோவிலில் இசையை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. நாதஸ்வரத்தை முதன்மையாகக் கொண்ட இக்குழுவில் ஒத்து, தவில், தாளம், சங்கு என பல இசை வாத்தியங்கள் உண்டு என்கிறார். அதே நேரத்தில் சின்ன மேளம் எனப்படுவது நாட்டியமாடும் பெண்களும் இசை வாத்தியக்குழுவும் அடங்கியது" என்கிறார்.

இசை வேளாளர் என்பது ஒரே சாதீய வழியில் வந்த சமூகம் அல்ல என்று கருதப்படுகிறது. பொதுவாக கைக்கோளர் மற்றும் வெள்ளாளர் சமூகங்களில் இருந்து வந்தவர்கள் இசை வேளாளர்கள் ஆயினர் என்று எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். இவர்கள் தம்மை 'பிள்ளை' என்றும் 'முதலியார்' என்றும் அழைத்துக்கொண்டனர். 

தஞ்சை மாவட்டத்தில் இருந்த இசை வேளாளர்கள் தம்மை 'கள்ளர், வெள்ளாளர், அகமுடையோர்' சமூகத்திலிருந்து எதிபாராத விபத்தாக இசை வேளாளர் சமூகமாக மாறியவர்கள் என்று கூறிக்கொண்டனர்.

நெசவுத் தொழிலில் ஈடுபட்ட கைக்கோளர் வகுப்பிலிருந்து பிரிந்தவர்கள் தேவதாசிகள் என்றும், நட்டுவாங்கம் எனப்பட்ட தேவதாசி சமூக ஆண்கள் விலை கொடுத்து வேற்று சாதியினரின் பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கி தேவதாசிகள் ஆக்கினர் என்றும் Francis Buchanan என்பவர் 1807 ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார் (A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar, 1807)

தமிழ்சினிமாவின் தொடக்க கால நடிகைகள் பலரும் இசைவேளாள சமூகத்தினர்தான். டி.ஆர். ராஜகுமாரி, எம்.என். மதுரம் என அக்காலத்தில் புகழ்பெற்ற முதல் தலைமுறை நடிகைகள் இவர்களே. தில்லானா மோகனாம்பாள் எனும் புகழ்பெற்ற திரைப்படம் இச்சமூகத்தின் துயர நிலையை காட்டுவதாக உள்ளது.

இசை வேளாளர் மக்கள் தொகை 1901 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 10,727 பேர் ஆகும்.

கர்நாடக சங்கீதம், நாட்டியத்தின் அவலம்

இன்று கர்நாடக சங்கீதமும் நாட்டியமும் புகழப்படுகிறது. பல பெண்கள் அதனை பெருமையாக நினைக்கின்றனர். ஆனால், நூறாண்டுகளுக்கு முன்பு நிலைமை இதற்கு தலைகீழானதாகும். அக்காலத்தில், பொது அரங்கில் பாடும், ஆடும் பெண்கள் அனைவருமே தேவதாசி சமூகத்தினராக இருந்தனர். இன்றிருப்பது போல பிராமணப் பெண்களோ மற்ற சாதியினரோ பாடவும் ஆடவும் முன்வரவில்லை. ஏனெனில், அக்காலத்தில் பாடலும் ஆடலும் பாலியல் சுரண்டலுடன் இணைந்திருந்தது.

ஒருபக்கம் கர்நாடக சங்கீதத்தையும் நாட்டியத்தையும் ஆடற்கலையையும் காப்பாற்றி வளர்க்கும் சமூகமாக அவர்கள் பார்க்கப்பட்டனர். இன்னொரு பக்கம் பிராமணர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் தாசிகளாக அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேவதாசி முறைக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் இந்தியாவின் முதல் சட்டசபை பெண் உறுப்பினரும் அவர்தான்.  இவரது தந்தை நாராயணசாமி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். (அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை தோற்றுவித்தவரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிதான். சுந்தர ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டதால், இவர் 'ரெட்டி' என்று அழைக்கப்பட்டார்).
தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போராடிய போது தமிழ்நாட்டின் பிராமணர்களும், காங்கிரசு கட்சியினரும், ஜமீன்தார்களும் அதனை கடுமையாக எதிர்த்தனர். 1927 ஆம் ஆண்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த போது, அதனை எதிர்த்தவர்களில் தீரர் சத்தியமூர்த்தி, சி.பி. இராமசாமி அய்யர் பொன்ற புகழ்பெற்ற நபர்களும் இருந்தனர். 

சத்தியமூர்த்தி அவர்கள், "தேவதாசிகள் என்பவர்கள் ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள், அவர்கள் தேவர்களின் அதாவது தெய்வங்களின் அடிமை என்கிற புனிதத்தன்மை பெற்றவர்கள். அதை ஏன் ஒழிக்க வேண்டுமென்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, "தேவதாசி முறை புனிதமானது என்றால், தேவதாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றால், அந்தத் தொழிலை எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? உங்கள் பிராமணக் குடும்பத்திலிருந்து எந்தப் பெண்ணையாவது தேவதாசி ஆக்குங்களேன்!" என்று கேட்டார்.

ஆனாலும் பிராமண தலைவர்கள் தேவதாசி முறையை ஒழிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பாரம்பரியமான இசை அழியும், நாட்டியம் அழியும், இந்துமத பண்பாடு அழியும் என்றெல்லாம் இவர்கள் மிரட்டினர். கூடவே, கோவில் நிலங்கள் தேவதாசிகள் பெயரில் உள்ளன. அந்தச் சொத்துக்களை இழக்க நேரிடும் என்று கூறினர்.

அதைவிட ஒருபடி மேலே சென்று 'எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் தாயார் மதுரை சண்முகவடிவு மூலமாக, அக்காலத்தில் சென்னையில் புகழ்பெற்றிருந்த வீணை தனம்மாள் உள்ளிட்ட இசைவேளாள மரபினரை ஒன்று திரட்டி, தேவதாசி முறையை ஒழிக்கக் கூடாது' என்று 1929 ஆம் ஆண்டில் போராட்டம் நடத்தினர்.

கடைசியில் நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் 1947 ஆம் ஆண்டில்தான் தேவதாசி முறை சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டது. தேவதாசி முறையை ஒழிக்கப்போராடியதும் இசைவேளாளர் வகுப்பை சார்ந்த முத்துலட்சுமி ரெட்டியும், மூவாலூர் இராமாமிர்தம் அம்மாளும்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுதந்திர இந்தியாவில் நிலை என்ன?

இசைவேளாளர், சின்ன மேளம், பெரிய மேளம், நட்டுவாங்கம், மேளக்காரர் என்று அழைக்கப்பட்ட சமூகங்களும் தேவதாசி முறையும் நெருங்கிய தொடர்புடையாதாக இருந்தது. 1947 ஆம் ஆண்டில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும், தேவதாசிகளாக இருந்த பெண்களின் சோகம் மறையவில்லை.
சில பெண்கள் தம்மை சராசரி சமூகத்துடன் ஏதோ ஒரு வழியில் இணைத்துக்கொண்டனர். சிலர் பிராமணர்களுடன் இணைந்தனர். பலர் இரண்டாம் மனைவியாக வாழ்ந்தனர். ஆனால், வெளி சமூகத்தில் தமது சாதியை சொல்ல வெட்கப்பட்டனர். இதுகுறித்து கனடா நாட்டின் மெக்ஹில் பல்கலைக்கழக பேராசிரியர் தவேஷ் சொனேஜி எழுதிய Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India, 2011 ஆய்வு நூலில் தேவதாசி முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிற்கால நிலையை விரிவாக பதிவு செய்துள்ளார்.
பள்ளிகளின் பெண் குழந்தைகளை இசை வேளாளர் என்று பதிவு செய்யக்கூட பெண்கள் அஞ்சினர் என்று குறிப்பிடும் தவேஷ் சொனேஜி; அரசியல் ரீதியில் ஆண்கள் மட்டும் உச்சநிலைக்கு வளர்ந்தனர் என்கிறார். அதற்கு உதாரணமாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக வந்த அண்ணாதுரையும் கருணாநிதியும் இசைவேளாளப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகிறார். (அறிஞர் அண்ணா அவர்களின் தாயார் பங்காரு அம்மாள் கோயில் பணியாளர் என்பது சொனேஜி தவேசின் ஆய்வு கருத்தாகும்)
வைகோவின் இனவெறிப் பேச்சு

இந்த வரலாற்று பின்னணியில் இருந்து 'நாதஸ்வரத்தையும் விபச்சாரத்தையும்' இணைத்து வைகோ பேசியிருப்பதை கவனித்தால் -  அவரது பேச்சின் சாதிவெறிக் கொடூரத்தை புரிந்துகொள்ள முடியும்.

ஒரு கொடூரமான பாலியல் சுரண்டலில் இருந்து போராடி மீண்ட சமூகம்; அதன் பழைய நினைவுகளை முற்றிலுமாக மறக்க விரும்பும் காலத்தில், கிண்டலும் கேலியுமாக சமூகத்தை கொச்சைப் படுத்தியது உண்மையில் ஒரு இனவெறி கருத்தாகும். வைகோ மன்னிக்க முடியாதவர்.

ஆதாரம்:

1. Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India, 2011, Davesh Soneji

2. From the Tanjore Court to the Madras Music Academy, A Social History of Music in South India, 2006  Lakshmi Subramanian

3. MS - A Life in Music, 2004 T. J. S. George

4. The music and musical instruments of southern India and the Deccan, 1891,  C. R. Day, 1860-1900

5. Castes and Tribes of Southern India 1855, By Edgar Thurston

6. A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar, 1807, Francis Buchanan, 

தொடர்புடைய இடுகைகள்:

1. வைகோவின் சாதிவெறி: வேடிக்கை பார்க்கும் கொம்யூனிஸ்ட் கும்பல்!

2. தேர்தல் 2016: தமிழக அரசியலின் உண்மை நிலை என்ன?

3 கருத்துகள்:

மானுடன் சொன்னது…

நான் மருத்துவர் ராமதாஸ் அவர்களையும் வழக்கறிஞர் பாலு மற்றும் உங்களைப் போன்றவர்களையும் ’உண்மையான’ சாதி வெறியர்களாக ஏற்க மனம் ஒப்பாதவன்.பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஏன் எல்லா ஒடுக்கப்பட்ட சாதியினரின் வலியை உங்களால் நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.அந்த வகையில் தாழ்த்தப்பட்டவர்கள் என்போரும் சற்றே மிகுந்த வலிகளை,வேதனைகளை தமது வாழ்வில் சுமந்து வாழ்பவர்கள்.ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட வன்னியர் தாழ்த்தபட்டவர் ஓட்டுக்களை இணைத்து அரசியல் வெற்றியை எட்ட முடியும் என்கிற யதார்த்தத்தில் இருந்தும் ஒரு வர்ணாசிரம எதிர்ப்பு நிலையில் இருந்தும் பிற்படுத்தபட்டோர் தலித் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த இயக்கம் தான் உங்களது பாமக.இன்றைக்கு ஒரு ‘எதிரியாக’ தலித்துகளை உருவாக்கினால் தான் வன்னியர் ஒட்டுக்களையேனும் உறுதிபடுத்திக் கொள்ள முடியும் என்கிற ‘உத்தியை’ வகுத்து செயல்படும் உங்களது மனங்களில் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு ஆழ்ந்த புரிதல் இந்த கட்டுரை மற்றும் மருத்துவர் வெளிப்படுத்துவது ஒரு ஆறுதல் அளிக்கும் செயலாகும்.ஆனால் தேர்தல் காலத்தில் வைகோ அல்லது ம ந கூட்டணியினரையும் ஒரு சாதிவெறி சக்தியாக அடையாளம் காட்டி உங்களது தற்கால உத்தியை ஒரு ”சின்ன கோடாக” மாற்றிக் கொள்ளும் முயற்சி என்றும் பார்க்கமுடியும் என்றாலும் அப்படி குறுக்கி பார்க்காமல் இருப்பதே ஒரு நம்பிக்கை வெளிப்பாடு என்கிற அளவில் உங்களது இந்த பதிவை வரவேற்கிறேன்.

Unknown சொன்னது…

அருமையான ஆராய்ச்சிப் பதிவு ...வை கோ இப்படி பேசியிருக்கக் கூடாது !
ஒரு சிறியத் திருத்தம் ..திருமதி .எம் என் ராஜம் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் சாதிப் பிரிவை சேர்ந்தவர் அல்ல !

Unknown சொன்னது…

AN EXHAUSTIVE ANALYSIS JI KEEP IT UP YOUR GOOD WORK JI