Pages

செவ்வாய், செப்டம்பர் 27, 2016

ஐநாவில் இந்தி: இந்திய வெளியுறவு அமைச்சரின் இனவெறி பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐநா பொதுச்சபையில் நேற்று (26.09.2016) இந்தி மொழியில் பேசியிருக்கிறார். இந்தியாவின் மொழி பன்முகத்தன்மை மீதான தாக்குதலாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட வேண்டும்.  

இந்தி - தேசிய மொழி அல்ல 

இந்தியாவில் 41% மக்கள் இந்தி பேசுகிறார்கள். 69% மக்களின் மொழி இந்தி அல்ல. எனவே, இந்தி பேசாத மக்கள் அதிகமாக உள்ள இந்திய நாட்டில் - அதிகாரப்பூர்வ இணைப்பு மொழியாக ஆங்கிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களுடன், நடுவண் அரசு இந்தி அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளலாம் என்பதும், தமிழ்நாட்டுடன் ஆங்கிலத்தில் மட்டும்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது சட்டம் ஆகும். மேலும் இந்திய நாட்டின் உச்சநீதி மன்றத்தின் மொழி ஆங்கிலம் மட்டும்தான். இந்தி அல்ல.

இந்தியாவில் 'தேசிய மொழி' என்று எதுவும் இல்லை. இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆகும்.

இந்தி - ஐநாவின் மொழியும் அல்ல

ஐநாவில் ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக், ரஷ்யன், சீன மொழி - ஆகிய ஆறு மொழிகள்தான் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆகும். இந்த மொழிகளுக்கு மட்டும்தான் நிரந்தரமான மொழிபெயர்ப்பாளர்கள் ஐநாவில் உள்ளனர். குறிப்பாக ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக் ஆகிய மொழிகள்தான் அதிகமான நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.

ஐநாவில் ஆங்கிலத்தில் பேசும் போது, அங்கு பெரும்பாலானோர் அதனை நேரடியாக புரிந்துகொள்வார்கள். பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக், ரஷ்யன், சீன மொழி ஆகிய மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்த்து காதொலிப்பான் (headphone) மூலம் ஒலிபரப்புவார்கள்.

ஐநாவின் மொழி அல்லாத மொழியில் பேச, முன் அனுமதி பெற்று மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும். அந்த மொழிபெயர்ப்பாளர், ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதை - அதிலிருந்து பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக் உள்ளிட்ட ஐநா மொழிகளுக்கு மாற்றுவார்கள். இப்படி தலையை சுற்றி மூக்கைத் தொடுவதால், பேசும் கருத்து முழுமையாக உணரப்படாத நிலைமை ஏற்படுகிறது.

ஐநா அவையின் 193 நாடுகளில், இந்தி மொழியை பயன்படுத்தும் நாடு எதுவுமே இல்லை. அப்படிப்பட்ட இடத்தில் சென்று வம்படியாக இந்தியில் பேசுவதன் நோக்கம் என்ன? உலக நாடுகளுக்கும் இந்தி மொழிக்கும் என்ன தொடர்பு?

இந்தி - இனவெறியின் வெளிப்பாடு

1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், இந்தியாவில் இந்தி பேசுவோர் அளவு 36.99% இதுவே 2001 இல் 41.03% ஆக அதிகரித்துள்ளது. ஆனால் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை இதே காலக்கட்டத்தில் 6.88 அளவில் இருந்து 5.91 ஆக குறைந்துள்ளது. இதுபோன்று பெங்காலி, மராத்தி, தெலுங்கு, உருது பேசுவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைந்துள்ளது.

சுஷ்மா சுவராஜ் - உலகநாடுகளுக்காக இந்தியில் பேசவில்லை. மாறாக, இந்தியாவில் இந்தி பேசாத மக்களை எச்சரிப்பதற்காகவே இந்தியில் பேசியுள்ளார். இந்தியாவின் ஒரே மொழி இந்தி மட்டும்தான். இதனை இந்தி பேசாத மாநில மக்கள் ஏற்றுக்கொண்டு, இந்திக்கு மாற வேண்டும் என்பதுதான் இதன் உண்மை பொருள் ஆகும்.
இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகள்தான். இவை அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும் என 2010 ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த முறை ஐநாவில் இந்தியில் பேசிய சுஷ்மா சுவராஜ், அடுத்தமுறை தமிழிலோ, தெலுங்கிலோ அல்லது அவருக்கு நன்கு பேசத்தெரிந்த கன்னடத்திலோ, பேச முன்வருவாரா? (சுஷ்மா சுவராஜ் ஆங்கிலம் பேசத் தெரியாதவர் அல்ல)

பன்னாட்டு அரங்கிலும், விளம்பரங்கள் மூலமும், அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் வாயிலாகவும் இந்திய அரசு வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது ஆபாத்தான போக்கு ஆகும். இந்த இனவெறி போக்கு தடுக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: