Pages

புதன், செப்டம்பர் 14, 2016

வன்னிய மாமன்னன் கோப்பெருஞ்சிங்கன்: 767 ஆவது பிறந்தநாள் இன்று

ஓர் இனக்குழுவை அழிக்க வேண்டுமானல் அதன் வரலாற்று அடையாளங்களை அழிக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் இனக்குழுவின் வரலாற்றை அழிப்பதை, 'இனவெறியின் ஓர் அங்கம்' என்றும் சொல்லலாம்.
சிதம்பரம் கோவிலில் உள்ள கோப்பெருஞ்சிங்கன் சிலை (சிலை முன்பு நான்)
தமிழர்களின் வரலாற்றை அழிப்பதிலும் மறைப்பதிலும் தமிழ் நாட்டிற்குள் சிலர் எப்போதும் மும்முரமாக இருந்து வருகின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு மறைக்கப்பட்ட காடவராய கோப்பெருஞ்சிங்கன் வரலாறு ஆகும்.

காடவராயர்கள்

பல்லவப் பேரரசின் முடிவுக்குப் பின்னர், சிதறுண்ட பல்லவர்கள் சம்புவராயர்கள் மற்றும் காடவராயர்கள் எனப் பிரிந்து தனக்கென தனித்தனி சிற்றரசுகளை உருவாக்கினர். சம்புவராயர்கள் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனர். காடவராயர்கள் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.

காடவராயர்கள் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 13 ஆம் நூற்றாண்டுவரை (கி.பி.1076 - கி.பி. 1279) வடதமிழ் நாட்டை ஆண்டனர். வடக்கே ஆந்திர மாநில கிருஷ்ணா நதி, தெற்கே நன்னிலம், கிழக்கே வங்கக்கடல், மேற்கே சேலம், தருமபுரி மாவட்டங்கள் வரை காடவராயர்கள் ஆட்சி செய்தனர்.

சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் தெற்கு கோபுரத்தை புதுப்பித்தும், கிழக்கு கோபுரத்தை புதிதாக அமைத்தும், தில்லைக் காளிக்கோவில், கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி ஆகியவற்றைக் அமைத்தும் பல சாதனைகளைச் செய்தவர்கள் காடவராயர்கள்.

புதுச்சேரி திருபுனை ஏரி, ஒழுகரை ஏரி என பல இடங்களிலும் நீர்மேலாண்மை பணிகளை காடவராயர்கள் செய்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன.

கோப்பெருஞ்சிங்கன்

காடவ அரசன் மணவாளப் பெருமான் விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தனி அரசை உருவாக்கினார். கி.பி 1195 ல் சேந்தமங்கலத்தை தலை நகராகத் தோற்றுவித்தார் என்று அவரது 5ம் ஆண்டு ஆட்சிக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
சேந்தமங்கலத்தில் உள்ள இசைக்குதிரை சிலைகள்
சேந்தமங்கலத்தில் வாணிலைக் கண்டேசுவரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினார் (இக்கோவில் குளத்தருகில் உள்ள கருங்கல் குதிரை சிலைகள், ஒவ்வொரு இடத்தில் தட்டும் போதும் வெவ்வேறு ஒலியை எழுப்பும் இசைக் குதிரைகள் ஆகும். காண்க படம்). இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் இவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயன்.

காடவராய மன்னர்களில் புகழ்பெற்றவர் கோப்பெருஞ்சிங்கன் ஆகும். கோப்பெருஞ்சிங்கன் சோழ இளவரசியை தில்லையில் வைத்து மணம் புரிந்தார். அதே கோப்பெருஞ்சிங்க காடவராயன், கி.பி. 1216 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தனது மைத்துனனான சோழ அரசன் மூன்றாம் இராசராச சோழனை கைது செய்து சேந்தமங்கலத்தில் சிறை வைத்தார்.
"காடவராய கோப்பெருஞ்சிங்கன், பல்லவர் வம்ச சிற்றரசனான சம்புவராயனுக்கும் உறவினனாக இருந்தான். மலையமான் சிற்றரசன் இராசராச சேதிராயனுக்கு தனது மகளை மணம் செய்து கொடுத்தான். சோழப்பேரரசின் இறுதிக்காலத்தில் சம்புவராயன், காடவராயன், வானகோவரையன், சேதிராயன் எல்லோரும் சோழப்பேரரசின் கீழே வலிமைபெற்ற தனி அரசர்கள் ஆகினர்" என்கிறார் வரலாற்று பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் (பிற்கால சோழர் சரித்திரம் II - பக்கம் 177)
இதனை உறுதி செய்யும் விதமாக தமிழகம் குறித்த ஆய்வுகளை வெளியிட்டுள்ள நோபுரு கரஷிமா, கி.பி. 1100 ஆம் ஆண்டுகளில் தொடங்கி, 1250 ஆம் ஆண்டுகளுக்குள் சம்புவராயர்கள், காடவராயர்கள், வானகோவரையர்கள், சேதிராயர்கள், கச்சிராயர்கள், நீலங்கரையர்கள் உள்ளிட்ட சிற்றரசர்கள் வலிமை படைத்தவர்களாக மாறியதை Ancient to Medieval: South Indian Society in Transition எனும் நூலில் உறுதி செய்கிறார். கூடவே, இவர்களில் பலரும் தம்மை 'பள்ளிகள்' என்று கூறிக்கொண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாறு மறைக்கப்பட்டவர்கள்

வன்னியர்கள் என்று தம்மை வெளிப்படையாக அழைத்துக் கொண்டக் காரணத்தால் - தமிழ்நாட்டு வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டவர்கள் காடவராயர்கள்.

அவர்களது சந்ததியினரான கச்சிராயர்கள் இப்போதும் விருத்தாசலம் அருகில் உள்ள முகாசாபரூரிலும் கடலூரின் அருகில் உள்ள தியாகவல்லியிலும் வாழ்கின்றனர்.

இன்றைய நாள், 14.09.2016 ஆவணி திருவோண நட்சத்திரம், காடவராய மாமன்னன் கோப்பெருஞ்சிங்கனின் 767 ஆவது பிறந்தநாள் ஆகும்.

கருத்துகள் இல்லை: