Pages

புதன், மார்ச் 06, 2013

டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக நாளுக்கொரு அறிக்கை விடுகிறார். மூன்று நாட்களுக்கு ஒரு முறை போராட்டமோ நிகழ்ச்சியோ நடத்துகிறார். வள்ளுவர் கோட்டம் முற்றுகை, தில்லியில் டெசோ கூட்டம், தமிழ்நாட்டில் முழு அடைப்பு என்று போகிறது அவரது அரசியல். ஆனாலும், அவர் "வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக" இதைச் செய்வதாக சராசரி தமிழன் நினைக்கிறான்.

கலைஞரின் புதிய நடவடிக்கைகளால் அவர் மீது வீழ்ந்துள்ள வரலாற்று பழி நீங்காது. அவர் கொஞ்சமாவது பாவத்தைக் கழுவ வேண்டும் என்றால் - அவர் செய்ய வேண்டிய உருப்படியான காரியங்கள் வேறுசில இருக்கின்றன. அவற்றை கடைசியில் பார்ப்போம்.

கலைஞரின் கருப்பு வரலாறு

கலைஞர் எத்தனை ஆண்டுகாலம் அரசியலில் கோலோச்சினார் என்பது முக்கியமில்லை. அவரது பெயர் வரலாற்றில் எப்படி இடம்பிடிக்கப் போகிறது என்பதுதான் முக்கியமானதாகும். அவர் தமிழ் இனத்துக்கு செய்த நன்மைகளைப் பட்டியலிட முடிகிறதோ இல்லையோ, அவரால் நேர்ந்த கேடுகளைப் பட்டியலிட முடியும். அதில் முதல் இடம் பிடிக்கக் கூடியது ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம்தான்.
ஈழத்தமிழினத்தின் சோகத்துக்கு காரணமானவர்களில் ஒவ்வொரு தமிழனும் குற்றவாளியாக இருக்கிறான். ஒவ்வொரு அரசியல் கட்சியும் இருக்கிறது. இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்தியவராக கலைஞர் இருக்கிறார். ஈழப்போர் உச்சக் கட்டத்தை எட்டிய காலத்தில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக அவர் இருந்தார். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு - புதுவையின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு பக்க பலமாக நின்றனர்.

அப்படிப்பட்ட வலுவான நிலையில் கலைஞரைத் தவிர வேறு யார் முதலமைச்சாராக இருந்திருந்தாலும் - ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை வெறுமனே வேடிக்கைப் பார்த்திருப்பார்களா? என்கிற கேள்வி வரலாறு நெடுகிலும் கேட்கப்படும்.

கலைஞர் செய்த பெரும் குற்றம் 1: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட பேரிழப்பை தடுக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று வந்தது. "ஈழத்தமிழர்கள் அழிப்பை இந்தியா இரண்டு வாரங்களில் தடுக்காவிட்டால், தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது" என்று அப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எல்லா கட்சிகளும் கலைஞர் தலைமையில் ஒருமனதாக முடிவெடுத்தனர். (End Lanka war in two weeks, else TN MPs will quit: Karunanidhi)
அந்த ஒரு முடிவுமட்டும் நிறைவேற்றப் பட்டிருந்தால் - இலங்கையில் மாபெரும் மனிதப் பேரழிவு நிகழ்ந்திருக்காது. ஏனெனில், இலங்கையில் போரை முன்னின்று நடத்திய நாடு இந்தியா தான். குறிப்பாக காங்கிரசு கட்சிதான் இந்தப் போரை நடத்தியது. தமிழ் நாட்டின் 40 உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தால் அதன் பிறகு காங்கிரசு அரசு பிழைத்திருக்காது, இலங்கையில் போரும் தொடர்ந்திருக்காது.

ஆனால். கெடு முடிவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் போது அக்டோபர் 26 அன்று காலை பிரணாப் முகர்ஜி இலங்கையின் பசில் ராஜபட்சேவுடன் பேச்சு நடத்தினார். பின்னர் சென்னை வந்து கலைஞரிடம் மூன்று மணி நேரம் பேசினார். திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் - என்று பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.  (Karunanidhi will not insist on MPs' resignation: Mukherjee) 

இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அளித்த உறுதி மொழியின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா முடிவை கைவிட்டார் கலைஞர் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கு பின்னர்தான் ஒரு லட்சம் தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

(DMK resignation threat blows over: Karunanidhi has assured he would not precipitate a crisis for UPA government over Sri Lankan Tamils issue after the Centre apprised him of steps being taken by the island nation's governments to ensure safety of Tamil civilians.)

ஈழத்தமிழினம் பேரழிவில் இருந்து காப்பாற்றப்படும் கடைசி வாய்ப்பு 'எதற்காகவோ' கைவிடப்பட்டது. இந்த வரலாற்று பெரும்பழி ஒருநாளும் மறையாது.
கலைஞர் அவரது 'நெஞ்சுக்கு நீதியின்' அடுத்த பாகத்தை எழுதும் வாய்ப்பிருந்தால் - 2008 அக்டோபர் 26 அன்று பிரணாப் முகர்ஜியிடம் மூன்று மணி நேரம் என்னவெல்லாம் பேசினார் - என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும். ஒரு லட்சம் மக்களின் படுகொலைக்கு காரணமான அந்த மூன்று மணி நேர பேச்சின் விவரம் வெளி உலகிற்கு சொல்லப்பட்டாக வேண்டும். 

(பிற்காலத்தில், அதே பிரணாப் முகர்ஜி இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என முந்நின்று பாடுபட்டவரும் கலைஞர்தான்)

கலைஞர் செய்த பெரும் குற்றம் 2: சாகும்வரை உண்ணாவிரதம்

"உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் அறிவித்த போதிலும், இலங்கை அரசு அதனை ஏற்காததைக் கண்டித்து, இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி" 2009 ஏப்ரல் 27 அன்று சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் கலைஞர். "ராஜபக்சேவின் கடைசி பலியாக தான் இருக்கட்டும்" என்றும், "ஈழத்தமிழர்களுக்காக தன் உயிரைத் தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும்" தெரிவித்தார்.
ஆனால், உண்ணாவிரதம் தொடங்கிய மூன்று மணி நேரத்தில் அதனைக் கைவிட்டார் கலைஞர். கூடவே, இந்திய அரசின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் அறிவித்தார். (Karunanidhi calls off indefinite hunger strike)

"இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது" என்று கூறினார் கலைஞர்.

கலைஞரின் போர்நிறுத்த அறிவிப்புக்கு பின்னர்தான் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மேலும் அதிகரித்தது. அதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது "மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்றார் கலைஞர். 

"மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அதைப் போல எல்லா போர் முனைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் இதுபோல நடக்கக் கூடும். அதுபோல நடந்திருக்கும் என்று கருதுகிறேன்" என்று மனசாட்சியை அடகுவைத்து பேசினார் கலைஞர்.

இன்று அவர் கண்ணீர் வடிக்கும் "பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டது அந்த தூவானத்தில்தான்". (This is proof, beyond reasonable doubt, of the execution of a child – not a battlefield death) "நிராயுதபாணிகளாக நடேசனும் புலித்தேவனும் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பின்பு சித்தரவதை செய்து கொல்லப்பட்டதும் அந்த தூவானத்தில்தான்". (The final atrocity: Uncovering Sri Lanka’s ‘white flag incident’)
- இப்படியாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழமண்ணில் பேரவலம் உச்சக்கட்டத்தை எட்டுவதற்கு முன்னால் 2008 அக்டோபர் 26 அன்று ஒருமுறையும், 2009 ஏப்ரல் 27 அன்று மறுமுறையும் கலைஞர் நடத்திய நாடகங்கள் வரலாற்றின் கருப்பு பக்கங்களில் என்றென்றும் இடம் பிடித்திருக்கும்.

உண்மையில், தமிழகத்தில் எழுந்த மக்கள் பேரெழுச்சியை தணிப்பதற்காக - அதாவது ராஜபக்சேவின் கொடூரங்களுக்கு ஆதரவாக - கலைஞரின் நாடகம் நடத்தப்பட்டதா என்கிற கேள்வியை எதிர்காலத் தலைமுறை கேட்கும்.

பாவத்தைக் கழுவ என்ன வழி?

தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்த பிழையால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர் (தெரியாமல் செய்த பிழை 2004 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு கட்சியின் தலைமையில் ஆட்சி அமைய 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்தது டெல்லிக்கு அனுப்பியது. தெரிந்து செய்த பிழை - கலைஞரின் தலைமையில் 2009 ஆண்டு படுகொலைகளை வேடிக்கைப் பார்த்தது). இந்தப் பாவச்செயலுக்கு ஒரு போதும் மன்னிப்பு இல்லை. குறிப்பாக, கலைஞரை வரலாறு மன்னிக்காது.

ஆனாலும், பாவங்களை ஓரளவுக்கு கழுவ அவருக்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு, இலங்கை குறித்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தால் போதும். இப்போதும் இந்திய அரசு கலைஞரின் ஆதரவில்தான் நடக்கிறது என்பதால் - அந்த மாற்றம் சாத்தியமாகக் கூடியதுதான்.

முதலாவதாக, பன்னாட்டு விசாரணையிலிருந்து இலங்கையை இந்திய அரசு காப்பாற்றக் கூடாது. அடுத்ததாக, நவம்பர் மாதம் கொழும்பில் நடபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும். இதற்கு கலைஞர்தான் பொறுப்பு.

1. பன்னாட்டு விசாரணையை இந்தியா தடுக்கக் கூடாது.

'இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு, அது ஒரு ஜனநாயக நாடு' என்கிற வாதங்கள் பன்னாட்டு அரங்கில் காலாவதியாகிவிட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கையை ஆதரித்த பல நாடுகள் அந்த நிலைபாட்டை இப்போது மாற்றிக் கொண்டுவிட்டன.

ஐநா மனித உரிமைகள் ஆணையரே, ஐநா மனித உரிமைக் குழுவிற்கு அளித்த தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் "இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்து ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும்" என்று தெளிவாகக் கோரியுள்ளார் (UN Human Rights Commissioner Report on promoting reconciliation and accountability in Sri Lanka). இந்த கோரிக்கையை இப்போது வரை தடுத்துவரும் ஒரே நாடு இந்தியா தான்.
அமெரிக்க தீர்மானத்தில் தலையிட்டு - இலங்கையின் உள் விவகாரங்களில் பன்னாட்டு தலையீடு கூடாது என்று இந்திய அரசு லாபி செய்து வருகிறது. திமுக ஆதரவுடன் நடக்கும் காங்கிரசு அரசின் இந்த அநீதியான போக்கினை கலைஞர் தடுக்க வேண்டும்.

"தமிழர்களுக்கு எதிரான போரின்போது நடந்த குற்றங்கள் குறித்து ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு இந்தியா தடை போடக்கூடாது" என்கிற மிக நியாயமான கோரிக்கையை காங்கிரசு அரசு ஏற்க செய்ய வேண்டிய கடமை கலைஞருக்கு மட்டுமே இருக்கிறது.

2. கொழும்பு காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை (நவம்பர் 2013) இந்தியா புறக்கணிக்க வேண்டும்

காமன்வெல்த் என்பது இங்கிலாந்திடம் காலனியாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பாகும். மனித உரிமைகளை கொஞ்சமும் மதிக்காத இலங்கையில் நடைபெரும் காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இக்கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது.

"கொழும்பு காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்க கூடாது" என்கிற மிக நியாயமான கோரிக்கையை காங்கிரசு அரசு ஏற்க செய்ய வேண்டிய கடமையும் கலைஞருக்கு மட்டுமே இருக்கிறது.

கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா?

கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் இருந்தால் இப்படிப்பட்ட உருப்படியான கடமைகளை அவர் செய்ய வேண்டும். "வள்ளுவர் கோட்டம் முற்றுகை, தில்லியில் கூட்டம், தமிழ்நாட்டில் முழு அடைப்பு" என்கிற போராட்டங்கள் எல்லாம் எதிர்கட்சிகள் செய்ய வேண்டியவை. இந்தியாவை ஆளுங்கட்சிகளில் ஒன்றான திமுக இதைச் செய்ய தேவையே இல்லை.
கலைஞர் அவர்களே, தில்லியில் நடக்கும் ஆட்சி உங்களுடையதும்தான்.

உங்களடைய இந்திய அரசு பன்னாட்டு விசாரணையிலிருந்து இலங்கையை காப்பாற்றுவதைத் தடுத்து நிறுத்துங்கள்.

உங்களடைய இந்திய அரசு நவம்பர் மாதம் கொழும்பில் நடபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தடுத்து நிறுத்துங்கள்.

மக்கள் உங்களிடம் உறுதியான செயலைத்தான் வேண்டுகிறார்கள். நாடகங்களை அல்ல.

தொடர்புடைய சுட்டி:

ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

செவ்வாய், மார்ச் 05, 2013

ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

ஐநாவில் இலங்கை மீது ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்க உள்ளது அமெரிக்கா. 'புதிய பானையில் பழைய கள்' என்பது போன்றுதான் இந்த தீர்மானம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பலவீனமான தீர்மானத்தைக் கூட ஒரேயடியாக உப்பு சப்பில்லாமல் செய்யும் சதியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசுக்கு தமிழர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு என்று புரியவில்லை!

தமிழர்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் முக்கிய கோரிக்கையான "சுயேச்சையான பன்னாட்டு விசாரணை" என்கிற கோரிக்கையை உள்ளடக்கியதாக அமெரிக்க தீர்மானம் இருக்காது. அதே நேரத்தில், நம்பிக்கை இழக்கும் அளவுக்கு பலவீனமாகவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா செய்யும் சதி என்ன?

இந்திய நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அமெரிக்க தீர்மானத்தை பார்த்துவிட்டுதான் முடிவு செய்வோம் என்பது போல மேலோட்டமாக பேசினாலும், இந்தியாவுக்கு எல்லாம் தெரியும். உண்மையில் அமெரிக்க தீர்மான விவரங்களை தெளிவாக தெரிந்துகொண்டு, திரைமறைவாக தமிழர்களுக்கு எதிரான ராஜதந்திர போரில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசு. அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ய மிகக் கடினமான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்க தீர்மானம் கூறுவது என்ன?

அமெரிக்கா 2012 ஆம் ஆண்டில் கொண்டுவந்த தீர்மானத்தைக் காட்டிலும் ஒருபடியாவது மேலானதாகவே புதிய தீர்மானம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு தீர்மானத்தில் கூரப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளும் புதிய தீர்மானத்தில் மீண்டும் வலியுறுத்தப்படும். கூடவே, ஐநா மனித உரிமைகள் சிறப்பு விசாரணை வல்லுநர்களை (special rapporteurs) இலங்கைக்கு அனுப்ப அமெரிக்க தீர்மானம் வலியுறுத்தும் என்று தெரிகிறது.

குறிப்பாக, நீதித்துறையின் சுதந்திரம், மனித உரிமை செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம், கூட்டமாகக் கூடும் உரிமை, சட்டவிரோதமான விசாரணை இல்லாத அரச படுகொலைகள், சிறுபான்மையினர் உரிமை, காணாமல் போவோர் நிலை, பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறை என ஒவ்வொரு மனித உரிமை களநிலைமை குறித்தும் ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்பதும், அவர்களுக்கு இலங்கை அரசு கட்டுப்பாடற்ற அனுமதி அளிக்க  வேண்டும், விரும்பிய இடங்களுக்கு அவர்கள் செல்லவும் எல்லோரையும் விசாரிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்பதும் அமெரிக்காவின் புதிய தீர்மானத்தில் இடம் பெறும் என்று தெரிகிறது.

இவ்வாறு மனித உரிமை துறைகள் சார்ந்த சிறப்பு விசாரணை வல்லுநர்கள் தரும் அறிக்கைகளின் அடிப்படையில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் மீண்டும் ஐநா மனித உரிமைக் குழுவிற்கு அறிக்கை தரவேண்டும் என்று புதிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இலங்கை அரசு வெளியிலிருந்து சுயேச்சையான விசாரணை வல்லுநர்களை அனுமதிக்காமல் நீண்டகாலமாக ஏமாற்றி வந்துள்ளது. இதற்கு ஒரு முடிவு கட்ட முயல்கிறது அமெரிக்க தீர்மானம். ஏற்கனவே, ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் - ஐநா சிறப்பு விசாரணை வல்லுநர்களை இலங்கை அரசு நீண்டகாலமாக அனுமதிக்காததன் காரணமாகவே தானும் அங்கு செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் சதி

இலங்கைக்கு இந்தியா ஒரு அண்டை நாடு என்கிற அடிப்படையிலும், தெற்காசியாவில் இந்தியா ஒரு முக்கியமான சக்தி என்பதாலும் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலைபாட்டை முக்கியமாகக் கருதுகின்றன. கூடவே, அமெரிக்க அரசு இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதால் அவர்களும் இந்திய கருத்துக்கு மதிப்பளிக்க விரும்புகின்றனர்.

இந்த ஒரு நல்வாய்ப்பை நீதிக்கும் நியாயத்துக்கும் மனித உரிமைக்கும் ஆதரவாக பயன்படுத்துவதற்கு பதிலாக, தமிழ் மக்களை பழிவாங்க நினைக்கிறது இந்திய அரசு.
உலகில் எல்லா நாடுகளுக்கும் அந்தந்த நாடுகளின் மனித உரிமை நிலையை ஆய்வு செய்ய வெளியிலிருந்து சுயேச்சையான ஐநா விசாரணை வல்லுநர்களை அனுப்புவது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றாலும் - இலங்கைக்கு வலுக்கட்டாயமாக ஐநா விசாரணை வல்லுநர்கள் அனுப்பப்படுவதை எதிர்க்கிறது இந்தியா.

இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு. அங்கு அந்நிய தலையீடு கூடாது என்கிற வழக்கமான பல்லவியைப் பாடி ஐநா விசாரணை வல்லுநர்கள் அனுப்பப்படாமல் தடுக்க சதி செய்கிறது இந்திய அரசு. (புலிகளுக்கு எதிரான போருக்கு மட்டும் அந்நிய உதவி இருக்கலாம். ஆனால் மனித உரிமையில் இருக்கக் கூடாதாம்)

தமிழகமே திரண்டு இலங்கைக்கு எதிராகப் போராடும் போது இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உடலில் இருந்து உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்திய அரசில் தமிழர்களுக்கு இல்லை என்பதை இது உறுதி செய்கிறது.

அமெரிக்க தீர்மானம்: தமிழர்களுக்கு வெற்றியா? தோல்வியா?

அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியா? தோல்வியா? என்பது அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. நீதி, நியாயம் என்கிற அறம் சார்ந்த தத்துவங்களின் அடிப்படையில் பார்த்தால் அந்த தீர்மானம் ஒரு நல்ல தீர்மானம் அல்ல. மனிதகுலம் இதுவரை சந்தித்திராத ஒரு பேரவலத்தை சந்தித்த மக்களுக்கு அது நீதி வழங்காது.

ஆனால், தனக்கென பேச ஒரு நாடு இல்லாத தமிழர்களின் பரிதாப நிலையில் இருந்து பார்த்தால் அந்த தீர்மானம் ஒரு முன்னேற்றம் தான். 

இந்தியாவும் ஐநா தீர்மானமும் - துரோகத்தின் வரலாறு

அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானம் இலங்கை மீது ஐநா மனித உரிமைக் குழு கூட்டத்தில் வைக்கப்படும் நான்காவது தீர்மானம் ஆகும். 

முதல் தீர்மானம்

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது ஐரோப்பிய நாடுகளின் முன்முயற்சியில் இலங்கை குறித்த ஒரு சிறப்புக் கூட்டம் ஐநா மனித உரிமைக் குழுவில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக 30 நாடுகள் சேர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டின் தலைமையில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தன (இங்கே காண்க: Resolution by Switzerland and 30 Countries)
இவ்வாறு ஒரு முயற்சி நடப்பது தெரிந்த உடனேயே இந்தியா, கியூபா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகள் கூட்டு சேர்ந்து இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளை தொடங்கின. இதுகுறித்து 15 மே 2009 அன்று, அதாவது போர் உச்சத்தில் இருந்த பொது, இந்த நாடுகள் தம்மை இலங்கையின் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டன (இங்கே காண்க: India, Cuba NAM Letter to UNHRC)

இரண்டாவது தீர்மானம்

இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டப்பட்ட அதே கூட்டத்தில், இலங்கையைப் பாராட்டி, இலங்கையே ஒரு தீர்மானம் கொண்டுவர வைத்து, அதனை வெற்றிகரமாக நிறைவேற்றவும் வழிசெய்தது இந்தியா (இங்கே காண்க: Resolution by Sri Lanka, India and 11 Countries). "விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை விடுதலை செய்ததற்காக இலங்கையை பாராட்டுகிறோம்" என்று இந்த தீர்மானம் மிகக் கேவலமாக கூறியது.

அமெரிக்காவல் வந்த மாற்றம்

இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா - என ஒரு ரவுடிகள் கூட்டம்  ஐநா மனித உரிமைக் குழுவில் ஆதிக்கம் செலுத்தி இலங்கையைக் காப்பாற்றிய அக்காலத்தில் அமெரிக்கா அக்குழுவில் ஒரு உறுப்பு நாடாக இல்லை. 2006 ஆம் ஆண்டில் ஐநா பொதுச்சபையால் உருவாக்கப்பட்ட ஐநா மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா சேரவில்லை. 2009 ஆம் ஆண்டு இக்குழுவில் சேர ஒபாமா விருப்பம் தெரிவித்தார். அதன்படி செப்டம்பர் 2009 இல் அமெரிக்கா ஐநா மனித உரிமைக் குழுவில் இணைந்தது.

மூன்றாவது தீர்மானம்

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடிய ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 19 ஆவது கூட்டத்தில் இலங்கை மீது ஓரளவு நெருக்கடியை சுமத்தும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. (இங்கே காண்க: Promoting Reconciliation and Accountability in Sri Lanka)

1. இலங்கை அரசு தானே அமைத்த "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission)" பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். பன்னாட்டு மனித உரிமை, மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது குறித்து நியாயமான விசாரணை நடத்தி குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து இலங்கை மக்களுக்குமான நீதி, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் உறுதி செய்யப்பட வேண்டும்

2. "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு" பரிந்துரைகளை நிறைவேற்றுதற்கான மற்றும்  பன்னாட்டு மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான திட்டம் மற்றும் கால அட்டவணையை கூற வேண்டும்.
3. மேற்கண்ட பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் உதவ வேண்டும். கூடவே, இதனைக் கண்காணித்து, ஐ.நா மனித உரிமைக்குழுவின் 22 ஆவது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று அமெரிக்க தீர்மானம் கோரியது.

அதே நேரத்தில் 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையானது பன்னாட்டு சட்டங்களின்படி சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை போதுமான அளவுக்கு எதிகொள்ளவில்லை' என்பதையும் அமெரிக்க தீர்மானம் தெளிவாகச் சுட்டிக்காட்டியது.

"அமெரிக்கா முதலில் முன்மொழிந்த தீர்மானத்தில் 'ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டும் (the Government of Sri Lanka to accept)" என்கிற, ஒப்பீட்டளவில் உறுதியான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை இந்தியா தலையிட்டு "ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியும், இலங்கை அரசுடன் கலந்தாலோசனை நடத்தி, அந்நாட்டின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் (in consultation with, and with the concurrence of, the Government of Sri Lanka)" என்று மாற்றியது. இந்தியாவின் இந்த உதவிக்கு இலங்கை பாராட்டும் தெரிவித்தது. (இந்திய திருத்தம் - இங்கே காண்க: Oral Revision-Promoting Reconciliation and Accountability in Sri Lanka)
இந்திய துரோகத்துடன், ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் வெற்றி பெற்றுது.  Promoting Reconciliation and Accountability in Sri Lanka எனும் அத்தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகள் வாக்களித்தன. எதிர்த்து 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

2012 தீர்மானத்திற்கு பிறகு நடந்தது என்ன?

2012 ஆம் ஆண்டு மே மாதத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான ஒரு Task Force அமைத்தது இலங்கை அரசு. அதன் பிறகு ஒரு தேசிய செயல் திட்டத்தையும் (National Action Plan) அறிவித்தது. இவற்றின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மிகச்சில பரிந்துரைகளை செயல்படுத்துவோம் என்று அறிவித்தது.

இலங்கையின் நிலைமையை ஆராய்வதற்காக ஒரு மூன்று நபர் குழுவை செப்டம்பர் மாதத்தில் அனுப்பினார்  ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை. அதன் அடிப்படையில் ஒரு அறிக்கையையும் 2013 பிப்ரவரி 11 அன்று வெளியிட்டார். (இங்கே காண்க: United Nations Human Rights Commissioner Report on promoting reconciliation and accountability in Sri Lanka)

இலங்கை அரசு இம்மியளவும் திருந்தவில்லை என்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்டும் இந்த அறிக்கை மார்ச் 20 ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

நான்காவது தீர்மானம்

இந்த முறை கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க தீர்மானம் நான்காவது தீர்மானம் ஆகும். இது கட்டாயம் வெற்றியடையும்.

ஏனெனில், 47 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட  ஐநா மனித உரிமைகள் குழுவில் இலங்கையை எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நாடுகளான கியூபா, சீனா, ரசியா ஆகிய நாடுகளின் பதவிக்காலம் 2012 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. அவை இப்போது ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினர்களாக இல்லை. இலங்கையும் அதில் உறுப்பினராக இல்லை.

இந்த தீர்மானம் மார்ச் 21 அல்லது 22 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரக்கூடும். மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவு மிகக் குறைவு என்பதனால் புதிய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது. சர்வதேச அரங்கில் கொஞ்சமாவது நல்லபெயர் வாங்குவதற்காக இந்தியாவின் ஆலோசனைப்படி, இலங்கையும் அத்தகைய நிலையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது ஐநா மனித உரிமைக் குழுவில் எஞ்சியுள்ள இலங்கையின் ஒரே தீவிர ஆதரவு நாடு இந்தியா மட்டும்தான். 

மீண்டும் மாட்டப்போகும் இலங்கை

அமெரிக்காவின் புதிய தீர்மானத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் அவர்கள், தீர்மானத்தின் செயலாக்கம் தொடர்பில் இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2014 தொடக்கத்தில் கூடும் 25 ஆவது கூட்டத்தில் மற்றுமொரு முழு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மீண்டும் சர்வதேச அரங்கில் எதிரொலிக்கும்.

ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க தீர்மானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும், ஆதரவு ஏதுமற்ற தமிழர்களுக்கு அது ஒரு முன்னேற்றமான தீமானமாக அமையும் என எதிர் பார்க்கலாம். இந்தியாவின் ஆதரவு மட்டும் இருக்குமானால் இலங்கை மிக எளிதாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டுவிடும். தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வும் எளிதில் கிடைத்துவிடும். 
ஆனால், அதற்கு நேர்மாறாக தீர்மானம் முன்வைக்கப்படுவதற்கு முன்பாகவே, அமெரிக்காவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கட்டைப் பஞ்சாயத்து செய்து தீர்மானத்தை நீர்த்துப் போக இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது (அதாவது இந்தியா தமிழர்களின் சார்பில் அமெரிக்காவிடம் பேசவில்லை. இலங்கை அரசின் சார்பில் பேசுகிறது. வெட்கக்கேடு!). இனியும் இந்த தீர்மானத்தை மேலும் பலவீனப்படுத்த இந்தியா முயலும்.

இனி என்ன?

பன்னாட்டு மனித உரிமைகள் அரங்கில் ஒரு நீண்ட போராட்டத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும். அது ஒன்றுதான் எஞ்சியுள்ள ஒரே வழி. அந்த வகையில் அமெரிக்கா எந்த நோக்கத்தில் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தாலும் இதனை வரவேற்கத்தான் வேண்டும்.

அமெரிக்க நாட்டின் ஏகாதிபத்திய சுயநலமும் தமிழர்களின் நீதிக்கான வேட்கையும் ஏதேனும் ஒரு புள்ளியில் இணைந்துதான் ஆகவேண்டும். இது முரண்பாடாகத் தோன்றினாலும் வேறு வழி எதுவும் இல்லை.


சனி, பிப்ரவரி 23, 2013

மறுபடியும் குமுதம் ரிப்போர்ட்டரின் குறுக்குபுத்தி: செய்தியை அருவருப்பாக்கும் அவலம்!

குறுக்குபுத்தி 1: குஷ்பு மீது வன்மம்

குமுதம் ரிப்போர்ட்டர் நடிகை குஷ்புவை "இன்னொரு மணியம்மை" என்று அநாகரீகமாக விளித்து தன்னை ஒரு சாக்கடை பத்திரிகை என மெய்ப்பித்தது. இப்படி கேவலமாக செய்தி வெளியிட்டதற்கு அடுத்த இதழில் (24.02.2013), வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக - மீண்டும் குஷ்புவை தாக்கும் விதமாக தமிழருவி மணியனின் பேட்டியை வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர்.
அதில் "திமுகவில் குஷ்பு தவிர்க்க முடியாத சக்தி. 'உன் தலைக்கு மேல் வேண்டுமானால் பறவை பறக்கட்டும். ஆனால், அது உன் தலையில் கூடு கட்டிக் கொள்ளாமல் பார்த்துக்கொள்' என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. கருணாநிதி, பறவை மேலே பறக்க மட்டுமல்ல...தலையில் கூடுகட்டிக் கொள்ள அனுமதித்து விட்டார்" - என்று தமிழருவி மணியன் பேட்டியில் கூறியுள்ளார். (இந்த பழமொழிக்கும் இப்போதைய குஷ்பு சர்ச்சைக்கும் என்ன தொடர்பு என்பதை தமிழருவி மணியன்தான் விளக்க வேண்டும்)

திமுகவில் நடக்கும் குஷ்பு தொடர்பான சர்ச்சை என்பது தி.மு.க.வின் உட்கட்சி பிரச்சினை. அது அடிதடியாக மாறுவது மட்டுமே மற்றவர்கள் கவலைப்பட வேண்டிய தகவல் ஆகும். அதை விட்டுவிட்டு - குமுதம் ரிப்போர்ட்டரும் தமிழருவி மணியனும் 'ஒளிவுமறைவாக' பெண்களை இழிவுபடுத்தி பேசுவது நாகரீகம் அல்ல.

குறுக்குபுத்தி 2:மருத்துவர் அய்யா மீது வன்மம்

நடிகை குஷ்புவை "இன்னொரு மணியம்மை" என்று குமுதம் ரிப்போர்ட்டர் எழுதியதைக் கண்டித்து "நான்காவது தூண்கள் நாகரீகம் தவறக் கூடாது" என அறிக்கை வெளியிட்டார் மருத்துவர் இராமதாசு அய்யா.

இதற்கு பதிலடியாக குமுதம் ரிப்போர்ட்டர் (24.02.2013) இதழில் "ஸ்பாட் லைட்" என்ற தலைப்பில் "1 ஆக்ஷன் - 4 ரியாக்ஷன்" என்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். நகைச்சுவை என்ற போர்வையில் குமுதம் ரிப்போர்ட்டர் ஒரு அருவெறுப்பான, உண்மைக்கு புறம்பான கருத்தை அநாகரீகமாக வெளியிட்டுள்ளது.

14 வயது, 15 வயது சிறுமிகள் எல்லாம் காதல் வலையில் வீழ்வது குறித்து "கல்வி, வேலை போன்ற வாழ்வின் அடித்தளங்களை கட்டமைக்க வேண்டிய வயதில் காதல் நாடகங்களால் சீரழிவதைத் தடுக்கும் வகையில், 21 வயதுக்கு முன்பு காதல் திருமணங்கள் வேண்டாம். 21 வயதுக்கு பின் வைத்துக் கொள்ளுங்கள்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் கூறிவருகிறார்.

மருத்துவர் அய்யா அவர்களின் கருத்தில் "21 வயதுக்குப் பின்" என்பதை "வயதான பின்" என்று மாற்றி மிகக் கேவலமாக சித்தரித்துள்ளது குமுதம் ரிப்போர்ட்டர். அதனைக் கீழே காண்க:

"21 வயதுக்குப் பின்" என்பதை, "வயதான பின் காதல் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறியதாக (அதாவது 50 வயது, 60 வயதில் என்கிற பொருளில் கூறியதாக) திரித்து -கேவலப்படுத்துகிறது குமுதம் ரிப்போர்ட்டர்.

அதில் ஒரு ரியாஷன் மிகக் கேவலாக "அய்யாவுக்கு புதுசா எதுவும் சிக்கிருச்சு போல" என்று கூறுகிறது.

இதுதான் ஒரு அரசியல் தலைவரை நகைச்சுவையாக விமர்சிக்கும் லட்சணமா? இதுதான் பத்திரிகை தர்மமா? வெட்கக்கேடு.
பத்திரிகை சுதந்திரத்தை மக்கள் மதிக்கவே விரும்புகிறார்கள். அந்த சுதந்திரம் எல்லை மீறாமல் கட்டுப்படுத்த வேண்டிய கடமை பத்திரிகையாளர் சங்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டால் அதற்காகப் போராடும் அமைப்புகள் - இதுபோன்ற அநாகரீகங்களைத் தடுக்கவும் முன்வர வேண்டும்.

செவ்வாய், பிப்ரவரி 19, 2013

பிரபாகரன் மகன் கொடூரக் கொலை: ராஜபக்சேவை கூண்டில் ஏற்றவேண்டும் - மருத்துவர் இராமதாசு


மருத்துவர் இராமதாசு அவர்களின் அறிக்கை:

"இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களப்படையினரிடம் சிக்கிய விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்களை லண்டனிலிருந்து வெளியாகும் தி இண்டிபெண்டண்ட் நாளிதழும், சேனல் - 4 தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளன.

No Fire Zone/Channel 4 CHILLING DETAILS: 
Digital image analysis by an expert for Channel 4 has confirmed that this photograph showing 12-year-old Balachandran Prabakaran before and after he was shot dead, were taken with the same camera.


அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள 4 புகைப்படங்களில் முதல் இரு படங்களில், இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான பதுங்கு குழியில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டிருக்கும்  சிறுவன் பாலச்சந்திரன் கவலை தோய்ந்த முகத்துடன் ரொட்டி போன்ற ஒன்றை தின்று கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அடுத்த இரண்டு படங்களில் உடல் முழுவதும் குண்டு பாய்ந்த காயங்களுடன் அச்சிறுவன் இறந்து கிடக்கும் காட்சிகள் உள்ளன. 

பால் மனம் மாறாத பச்சைக் குழந்தையை சிங்கள இனவெறியர்கள் எவ்வளவு கொடூரமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதை இந்த புகைப்படங்கள் விளக்குகின்றன. சிங்களப்படையினரின் இந்த மிருகத்தனமான செயல் கடுமையாக கண்டிக்கத் தக்கது.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டு கிடக்கும் படங்களை சேனல்4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதற்கு சர்வதேச அரங்கில் கடும் கண்டனம் எழுந்த போது விடுதலைப் புலிகளுக்கும் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் சிக்கி பாலச்சந்திரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு காரணம் கூறியது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை ஆய்வு செய்த புகழ் பெற்ற தடயவியல் வல்லுனர் டெரிக் பவுண்டர், இந்த புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும், பாலச்சந்திரனை முதல் குண்டிலேயே சுட்டு சாய்த்துவிட்டு, அச்சிறுவன் பின்புறமாக தரையில் வீழ்ந்து கிடந்த நிலையில் மேலும் 4 குண்டுகளை நெஞ்சில் சுட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட விதத்தை நினைத்து பார்க்கும்போதே நெஞ்சம் பிளக்கிறது; ஈரக்குலை நடுங்குகிறது.

ஐ.நா தூதர்களிடமும், இந்திய அரசிடமும் தகவல் தெரிவித்து விட்டு வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் உள்ளிட்டோர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது, மருத்துவ உதவி கூட வழங்காமல் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையை  மன உளைச்சலுக்கு ஆளாக்கி கொன்றது, போரின் இறுதிக் கட்டத்தில் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களை சித்திரவதைக்கூடத்தில் வைத்து இன்றுவரை கொடுமைப்படுத்தியும், கொலை செய்தும் வருவது என சிங்களப் படையினரின் போர்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து வருகின்றன.

இலங்கை அரசின் இத்தகைய போர்க்குற்றங்களுக்கு இதுவரை எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன; போர்க்குற்றங்களை எத்தனையோ சர்வதேச அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால், இலங்கை அரசு இதுவரை திருந்தவில்லை. இதற்குக் காரணம் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையை எச்சரிக்காமல், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வரும்போதெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருப்பது தான்.

இப்போது வெளியாகியுள்ள கொடூரமான ஆதாரங்களுக்குப் பிறகாவது இலங்கை மீது கடுமையான அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, கடுமையான தண்டனை பெற்றுத்தரவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திங்கள், பிப்ரவரி 18, 2013

இனவெறிப் போக்கை கைவிடுமா இந்தியா டுடே: கவின்மலரின் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி!

"அதிகரிக்கும் காதல் கொலைகள்" எனும் ஒரு கவர்ஸ்டோரி இந்தியா டுடே பிரவரி 27 இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கவின்மலர் என்பவர் எழுதியுள்ள அந்த முதன்மைக் கட்டுரையில் ஏழு காதல் மோதல்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஆறு நிகழ்வுகள் கொலை மற்றும் தற்கொலையில் முடிந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆறு சம்பவங்களில் ஐந்து சம்பவங்களில் தொடர்புடையவர்களாக வன்னியர் சமூகத்தவர்கள் காட்டப்பட்டுள்ளனர். இவை அனைத்திலும் வன்னியர்கள் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டுள்ளனர். வன்னியர் சமூகத்தை கிரிமினல் கூட்டமாகக் காட்ட வேண்டும், அதன் மூலம் தான் சார்ந்த சமூகத்தின் கிரிமினல் நடவடிக்கைகளை மூடி மறைக்க வேண்டும் என்கிற கட்டுரையாளரின் ஆழமன ஆசை இந்தக் கட்டுரையில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. (தன்னை தாழ்த்தப்பட்டோருடன் அடையாளப் படுத்திக்கொள்வதாகக் கூறுகிறார்கள்.  - இங்கே காண்க - அதில் தவறும் இல்லை. பெற்றோர் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் புதியசாதி உருவாகிவிடாது).  இந்தியா டுடே இதழ் இனவெறி சக்திகளின் சதிக்கு பலியானது வருத்தப்பட வேண்டிய விடயம்தான்.

இந்தியா டுடேவின் செலக்டிவ் அம்னீஷியா
  • இந்தியா டுடேவின் கவர்ஸ்டோரியில் குறிப்பிடப்படும் அதே காலத்தில்தான் - புதுச்சேரியில் ஒரு வன்னிய மாணவி தலித் இளைஞர்களால் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆக்கப்பட்டார். சம்பவம் நடந்த இடம் - இந்தியா டுடே மாய்ந்து மாய்ந்து எழுதும் அதே விழுப்புரம் மாவட்டத்தில்தான் வருகிறது. இந்த நிகழ்வு இந்தியா டுடே கவர்ஸ்டோரியில் ஏன் இடம்பெறவில்லை?
  • தருமபுரி கலவரம் என்று தேய்ந்த ரெக்கார்டர் போன்று மீண்டும் மீண்டும் பொங்கி எழும் இந்தியா டுடே - அதற்கு அருகிலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14 வயது வன்னிய சமுதாயப் பெண்ணை தலித் இளைஞர் கடத்திச் சென்றது மட்டுமின்றி, மீட்டு அழைத்துவந்த பெண்ணின் பெரியப்பாவை கொலை செய்த நிகழ்வு குறித்து எழுத மறந்தது ஏன்?
  • கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் தனலட்சுமி எனும் 16 வயது வன்னியப் பெண்ணை தொரவளூர் காலனி பிரபு எனும் தலித் இளைஞர் கடத்திச் சென்றார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பிரபுவை கைது செய்து விழுப்புரம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். அவர் ஜாமினில் வெளிவந்த நிலையில், தனலட்சுமி கடந்த பிப்ரவரி 3ம் தேதி புதுக்காலனி அருகே முட்புதரில் கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்தார். கடலூர் மாவட்டத்தின் இந்த நிகழ்வு இந்தியா டுடே கவர்ஸ்டோரியில் ஏன் இடம்பெறவில்லை?
பாதிக்கப்படுவது தலித்தாகவும் பாதிக்கச் செய்பவர் வன்னியராகவும் இருந்தால் பொங்கி எழும் இந்தியா டுடே - பாதிக்கப்படுவது வன்னியராகவும் பாதிக்கச் செய்பவர் தலித்தாகவும் இருந்தால் மட்டும் கண்டும் காணாமல் போவது ஏன்? கவின்மலரின் சாதிப்பாசமா? இந்தியா டுடேவின் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியா? அல்லது இந்தியா டுடே ஆசிரியர் குழுவுக்கு ஏற்பட்டுள்ள செலக்டிவ் அம்னீஷியாவா?

கவர்ஸ்டோரி எனும் மோசடி

"அதிகரிக்கும் காதல் கொலைகள்" கவர்ஸ்டோரியில் குறிப்பிடப்படும் ஒரு சம்பவம் 'சேத்தியாதோப்பு சென்னிநத்தம் கோபாலகிருஷ்ணனின் மரணம்' - இது தொடர்பான உண்மையை விவரிக்கும் அப்பகுதி மக்கள், இந்தக் கொலை காதல் தொடர்பான கொலை என்பதையே மறுக்கின்றனர். காதல் என்றால் அதற்கு கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கம் இருக்கும். ஆனால், இங்கு வேறு மாதிரியான தொடர்பு என்று கூறுகிறார்கள் (திருமணம் ஆனவர்கள் மற்றவருடன் தொடர்பில் இருந்தால் அதை கள்ளத் தொடர்பு எனலாம். திருமணம் ஆகாதவர்களின் தொடர்பை என்னவென்பது?)


இந்த சம்பவத்தை விவரிக்கும் போது "இரவு 7 மணிக்கு மின்சாரம் இல்லாமல் ஊர் இருட்டாக இருந்ததால் துணைக்கு வீடுவரை வருமாறு துர்கா கோபாலகிருஷ்ணனை அழைக்க, அவரும் தெருமுனை வரை துணைக்கு சென்றிருக்கிறார்" என்று தனது சொந்தக் கருத்தை எழுதிகிறார் கவின்மலர்.

ஆனால், அடுத்த வரியிலேயே "'என் வீட்டில் அவரைப் பார்த்துவிட்டதால், அவரைத் தாக்கத் தொடங்கினார்கள்' என்று துர்கா காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது - சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணும், காவல்துறையும் "துர்காவின் வீட்டில்" என்று குறிப்பிடுகின்றனர். அதை மறைத்து, "தெருமுனை வரை துணைக்கு சென்றார்" என்று எழுதுகிறார் கவின்மலர்.

ஏன் இந்த பித்தலாட்டம்? - ஆள் இல்லாத வீட்டில், இரவில் ஒரு இளம் பெண்ணுடன் ஒரு வாலிபர் இணைந்திருப்பதும், தெருமுனை வரை துணைக்கு வருவதும் - இரண்டும் ஒன்றா?

எது எப்படியோ - எந்த ஒரு காரணத்துக்காகவும் கொலை செய்வதை ஏற்க முடியாது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணனின் குடும்பத்திற்கு இரண்டரை லட்சம் பணம், இரண்டு ஏக்கர் நிலம வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் ஒருவரும் பாட்டாளி மக்கள் கட்சியிலோ, வன்னியர் சங்கத்திலோ எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. ஆனால், கொல்லப்பட்ட கோபாலகிருஷ்ணனின் சகோதரி கூறுவதாக "இதற்கெல்லாம் காரணம் ராமதாஸும் காடுவெட்டி குருவும்தான்" என்று எழுதியுள்ளார் கவின்மலர். கவின்மலருக்கு ஏன் இந்த சாதிவெறி?

கவின்மலரின் விஷமம்

கவின்மலர் கூறியுள்ள ஏழு சமபவங்களில் ஆறு சம்பவங்கள் கொலை, தற்கொலை என்று முடிந்துள்ளது. எனவே, எல்லா சம்பவத்திலும் மருத்துவமனைக்கு ஒரு தொடர்பு இருக்கும். மருத்துவ உதவிக்கோ, பிரேதப் பரிசோதனைக்கோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், ஒரே ஒரு சம்பவத்தை தவிர வேறு எதிலும் மருத்துவமனையைக் குறிப்பிடவில்லை. அந்த ஒரு சம்பவத்தில் மட்டும் மருத்துவமனையைக் குறிப்பிட ஒரு காரணம் இருக்கிறது.
வன்னிய காதலரை மணம் முடித்த தலித் பெண் மரண நிகழ்வினைக் குறிப்பிடும் கவின்மலர் "திண்டிவனத்துல இருக்குற டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரியில் அவ பிணம் கெடக்குறதா சொன்னாங்க...இவங்கதான் ஏதோ பண்ணிட்டாங்க" என்று ஒரு பேட்டியாக எழுதுகிறார். இந்த இடத்தில் மருத்துவமனையின் பேரை கவின்மலர் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? 'டாக்டர் ராமதாஸ்' என்கிற பெயரே எங்கேயோ எரிச்சலைத் தருகிறது என்பதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்?

இந்தியா டுடேவின் இன்னொரு அபத்தம்.

கவின்மலரின் கட்டுரைக்கு ஆதரவாக ராஜீவ் பி.ஐ என்பவர் 'தமிழ் மனதின் மீது படியும் ரத்தக் கறை' எனும் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

அதில் ""தலித் பெண்ணோ பையனோ சம்பந்தப்படாத கலப்பு திருமணங்களில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று அவர் (மருத்துவர் இராமதாசு) யோசிக்காமலோ போகிற போக்கிலோ சொன்னதாக இருக்க முடியாது." என்று விஷமத்தனமாகக் கூறப்பட்டுள்ளது.

தலித் - தலித் அல்லாதோர் காதல் திருமணத்தை மருத்துவர் அய்யா எதிர்ப்பதாகக் கூறுவது அப்பட்டமான பித்தலாட்டம்.

அனைத்து சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் முதன் முதலாக 2.12.2012 அன்று சென்னை எழும்பூரில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தின் தீர்மானம் மிகத்தெளிவாக: "நாகரீக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்பு திருமணங்களுக்கோ தடை போடுவது சரியாக இருக்காது. இத்தகைய திருமணங்களை நாங்கள் எதிர்க்கவும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. இதே கருத்து ஒவ்வொரு மாவட்டக் கூட்டத்திலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. காதல் திருமணம் அல்லது கலப்பு திருமணம் என்றாலே அது தலித் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான்.

உண்மை இவ்வாறிருக்க, 'தலித் கலப்புத் திருமணத்தை மட்டும்' மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்ப்பதாக இந்தியா டுடே விஷம் கக்குவது ஏன்?

கவின்மலரின் நுட்பமான இனவெறி

இதே கவர்ஸ்டோரியில், "தர்மபுரிக்கு பின்" என்கிற ஒரு பெட்டிச்செய்தியை வெளியிட்டுள்ளார் கவின்மலர். அதில் தலித் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்று 18 சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ளார். இதில் மிகக் கவனமாக 'பாதிக்கப்பட்ட பெண்களை மட்டும் தலித் பெண்கள்' என்று குறிப்பிட்டுவிட்டு - குற்றமிழைத்தவர்களை சாதி இந்துக்கள் என்று குறிப்பிடுகிறார்.

அதாவது - பிரதானக் கட்டுரையின் ஆறு சம்பவங்களில் வன்னியர்களைக் குற்றப்பரம்பரையினராகக் குறிப்பிடும் கவின்மலர், பெட்டிச்செய்தியில் உள்ள 18 சம்பவங்களில் மட்டும் எதிர்தரப்பை சாதி இந்துக்கள் என்கிறார்.
இதன் பின்னுள்ள சதி மிக நுட்பமானது. இந்த 18 குற்றச் செயல்களில் தலித் அல்லாத பல்வேறு சாதியினரும் சம்மந்தப்பட்டுள்ளனர். அதனைச் சுட்டிக்காட்டினால், 'வன்னியர்கள் மட்டுமே கொடூரமானவர்கள்' என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட தனது கவர்ஸ்டோரியின் இனவெறி நோக்கம் சிதைந்துவிடும் என்று கருதி, மிகக் கவனமாக 'சாதி இந்துக்கள்' என்கிற ஒரே வட்டத்திற்குள் வன்னியர்களையும் மற்ற சாதிகளையும் கொண்டுவருகிறார்.

அடிப்படை நெறிகளை மீறும் இந்தியா டுடே

பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை நெறிகளை மீறும் வகையில் இந்தியா டுடே கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 

முதலாவதாக - ஆதாய முரணுடன் (conflict of interest) பத்திரிகையாளர் எழுதக்கூடாது. கவின்மலர் என்பவர் ஏற்கனவே வன்னியர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுபவர் என்பது பரவலாக அறியப்பட்ட செய்தி. தர்மபுரி கலவரத்தை "முள்ளிவாய்க்காலைப் போலவே மிகமோசமான தாக்குதல் இது" என ஜீனியர் விகடனில் எழுதியமைக்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்தவர்தான் இந்தக் கவின்மலர் (70,000 பேர் குண்டுவீசிக் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலும் 40 வீடுகள் எரிக்கப்பட்ட தர்மபுரியும் ஒரே அளவான நிகழ்வாம் - விடுதலைப் புலிகளுக்கு எதிரான கூட்டத்தைச் சேர்ந்தவரான கவின்மலர் முள்ளிவாய்க்கால் பேரழிவைக் கொச்சைப்படுத்துவது வியப்பளிக்கக் கூடியது அல்ல).
சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் எனும் ஒரு அமைப்பை நிறுவி வன்னியர்களுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருகிறார் இதே கவின்மலர். இப்படியாக 'இந்தியா டுடேவுக்கு வெளியே' ஏற்கனவே வன்னியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியுடன் இயங்கிவரும் கவின்மலரை - வன்னியர்கள் குறித்த ஒரு கட்டுரை எழுதுமாறு இந்தியா டுடே ஆசிரியர் குழு பணித்தது எப்படி? இது conflict of interest இல்லையா?

அடுத்ததாக, "சமூக மோதல்கள் முரண்பாடுகள் குறித்து எழுதும்போது பத்திரிகையாளர் தனது சொந்த விருப்பு வெறுப்புகளை அதில் திணிக்கக் கூடாது" என்பது இந்திய பத்திரிகைக் கவுன்சிலின் நடத்தை நெறியாகும்.

Press Council of India “NORMS OF JOURNALISTIC CONDUCT”- Covering communal disputes/clashes: “ The author has to ensure that not only are his or her analysis free from any personal preferences, prejudices or notions, but also they are based on verified, accurate and established facts and do not tend to foment disharmony or enmity between castes, communities and races.”

இதை மீறும் வகையில் -  ஏற்கனவே வன்னியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கும் கவின்மலர் தனது தனிப்பட்ட வெறுப்பை இந்தியா டுடே மூலம் உமிழ்ந்துள்ளார். இந்திய பத்திரிகைக் கவுன்சிலின் நடத்தை நெறியைப் பின்பற்றும் கடமை இந்தியா டுடேவுக்கு இல்லையா?

வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி பிடித்த இந்தியா டுடேவுக்கு சில கேள்விகள்

1. நவம்பர் 7, 2012 தருமபுரி கலவரத்துக்கு முன்பாக தமிழ்நாட்டில் காதல் திருமணம் தொடர்பான கொலைகள் எதுவும் நடக்கவே இல்லையா? அதற்கு முன்பெல்லாம் தலித் பிரிவினர் பாதிக்கப்பட்டது இல்லையா? தருமபுரி நிகழ்வுக்கு பிறகுதான் காதல் கொலைகள் அதிகரித்துவிட்டன என்பதற்கு என்ன ஆதாரம்? அரசின் குற்றப்பதிவு ஆவணங்கள் அப்படிக் கூறுகின்றனவா?

2. காதல் திருமணம் தொடர்பான குற்றங்களில் வன்னியர்கள் மட்டும்தான் ஈடுபட்டுள்ளனரா? வன்னியர்கள் மக்கள் தொகைக்கும் காதல் குற்றங்களுக்கும் இடையேயான ஒப்பீடுகள் ஏதாவது வன்னியர்களை குற்றப்பரம்பரையினராக எடுத்துக் காட்டுகின்றனவா?

3. காதல் தொடர்பான குற்றங்கள், கொலைகள் என்று காதலர் அல்லது தம்பதிகளுக்கு எதிரான குற்றங்களை மட்டுமே குறிப்பிடுவது ஏன்? பள்ளிக் கல்லூரி மாணவிகளை, சட்டபூர்வ வயதுக்கு முன்பே ஆசைவார்த்தைக் காட்டி ஏமாற்றி சீரழிப்பது காதல் குற்றத்தில் சேராதா? அதனால் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கள், ஆட்கடத்தல், பணப்பறிப்பு இதெல்லாம் காதல் தொடர்பான குற்றங்கள் இல்லையா?

4. வன்னியர்கள் தலித் இளைஞர்களை பாதிப்படையச் செய்தனர் என்பதை பட்டியலிடும் இந்தியா டுடே, வன்னியர்கள் தரப்பினர் தலித் இளைஞர்களால் பாதிப்படைந்த நிகழ்வுகளை மட்டும் மிகக் கவனமாக மறைப்பது ஏன்?

5. சிறுமிகளை ஏமாற்றும் நோக்கில் நடத்தப்படும் காதல் நாடகம், பெண்களின் கல்வி சீரழிப்பு, கட்டப்பஞ்சாயத்து, பணப்பறிப்பு ஆகியவற்றைதான் எதிர்க்கிறோம். காதல் திருமணங்களுக்கோ, கலப்பு திருமணங்களுக்கோ நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மீண்டும் மீண்டும் மீண்டும் கூறிய பின்னரும் - இன்னமும் அவரை 'காதலின் எதிரி' என்று சித்தரிப்பது ஏன்?

6. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நிருபர் (அல்லது அந்த சமூகத்துக்கு ஆதரவானவர் என்று கூறிக்கொள்கிற), அவர் சார்ந்த சமூகத்திற்கு எதிரான நிலையில் இருப்பதாக பரவலாகக் கருதப்படும் இன்னொரு சமுதாயத்தைப் பற்றி கட்டுரை எழுத அனுமதிப்பது நியாயம்தானா? இப்படி கலவரத்தை தூண்டும் நோக்கில இந்தியா டுடே செயல்படலாமா? சிங்கள இனவெறியரான ராஜபட்சே தமிழ் சமூகத்தைப் பற்றி கட்டுரை எழுதுவதற்கும், கவின்மலர் வன்னியர்களைப் பற்றி கட்டுரை எழுதுவதற்கும் என்ன வேறுபாடு? இதுபோன்ற இனவெறி போக்கை இந்தியா டுடே ஆதரிக்கலாமா?


7. "சமூக மோதல்கள் முரண்பாடுகள் குறித்து எழுதும்போது பத்திரிகையாளர் தனது சொந்த விருப்பு வெறுப்புகளை அதில் திணிக்கக் கூடாது" எனும் இந்திய பத்திரிகைக் கவுன்சிலின் நடத்தை நெறியைப் பின்பற்ற இந்தியா டுடே தவறியது ஏன்? கவின்மலர் தனது சொந்த வெறுப்பைக் கொட்டி சமூக மோதல் குறித்து எழுத அனுமதிக்கப்பட்டது எப்படி?

ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

நான்காவது தூண்கள் நாகரீகம் தவறக் கூடாது: மருத்துவர் இராமதாசு அறிக்கை


இந்திய ஜனநாயகத்தின் மூன்று தூண்களாகத் திகழும் நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகியவை தங்களின் கடமைகளில் இருந்து விலகிச் சென்று விட்டால் கூட, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஊடகங்களுக்கு உள்ளது. அதனால் தான் அவற்றை ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று பெருமையுடன் அழைக்கிறோம்.

உலக அளவில் ஏற்றுக்கொண்ட 9 இதழியல் தர்மங்களின்படி ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் உண்மையானதாகவும், குடிமக்களுக்கு விசுவாசமானதாகவும், சமுதாயத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் -செய்திகளை ஒன்றுக்கு பல முறை சரி பார்த்து வெளியிட வேண்டும் -இவற்றுக்கெல்லாம் மேலாக செய்திகள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைய நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் இந்த இலக்கணத்திற்கு உட்பட்டு நடக்கவில்லை என்பது தான் வேதனையான உண்மை ஆகும்.
வாரமிருமுறை புலனாய்வு இதழ் ஒன்றில் ‘இன்னொரு மணியம்மை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்கட்டுரை இதழியல் தர்மங்களையெல்லாம் குழிதோண்டி புதைத்துவிடும் தன்மை கொண்டதாக உள்ளது. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான கலைஞரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம் ; ஆனால், அவரது வயது அனைவராலும் மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதேபோல் நடிகை குஷ்புவின் நிலைப்பாடுகளும், பேச்சுக்களும் பல நேரங்களில் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானவையாகவும், கண்டிக்கத்தக்கவையாகவும் இருந்துள்ளன; ஆனால் அவரது தனியுரிமையும் , குடும்ப உறவும் மதிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் மதிக்காமல், பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவோ அல்லது பழைய பகையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ மனம் போன போக்கில் அருவருக்கத்தக்க வகையில், ஒரு தலைவரையும், அவரது இயக்கத்தில் உள்ள ஒரு பெண்ணையும் கொச்சைப்படுத்தி எழுதுவது என்பது அனைத்து தரப்பினராலும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

அதுமட்டுமின்றி, தந்தைப் பெரியாருக்கும், அவர் உடல் நலிவுற்றிருந்த காலத்தில் அவருக்கு அருந்தொண்டாற்றிய அன்னை மணியம்மையாருக்கும் இடையிலான உறவை கொச்சைப்படுத்த முயன்றிருப்பதும் கீழ்த்தரமான சிந்தனையாகும். இதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் ஊடகங்கள் ஆற்ற வேண்டிய ஆக்கபூர்வமான பணிகள் ஏராளமாக உள்ளன. மாநிலம் முழுவதும் நிலவும் மின்வெட்டு, காவிரி பாசன மாவட்டங்களில் நிலவும் வறட்சி, விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், மணல் கொள்ளை, கிரானைட் ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு  போன்ற மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய பிரச்சினைகள் பற்றியெல்லாம் ஊடகங்கள் எழுதலாம். இவற்றைப் பற்றியெல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியல் புலனாய்வு என்ற பெயரில் கட்டுக்கதைகளை புனைவது எவ்வளவு தவறு என்பதையும், இது சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் எத்தகைய பாதிப்புகளையும், வேதனைகளையும் ஏற்படுத்தும் என்பதை ஊடகங்கள் சிந்திக்க வேண்டும். பொதுவாழ்வுக்கு வந்துவிட்டவர்கள் என்பதாலேயே ஒருவரைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்றால், அது நல்லவர்கள் பொதுவாழ்வுக்கு வருவதை தடுக்குமே தவிர, நாட்டிற்கு நன்மை எதுவும் கிடைக்காது.

எனவே, ஊடகங்கள் வணிகத்திற்காக வரைமுறையின்றி எழுதுவதை விடுத்து உண்மையின் உரைகல்லாக திகழ வேண்டும்; இல்லாவிட்டால் வாசகர்கள் வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள் என்பதை இதுபோன்று செய்தி வெளியிடும் ஊடகங்கள் உணரவேண்டும்.

செவ்வாய், பிப்ரவரி 12, 2013

இந்தியா டுடேவின் பெண் உடல் வியாபாரமும் கவின்மலரின் இரட்டை வேடமும்: பல துணைகள், உறவுச்சுமை இல்லாத செக்ஸ் புரட்சி!


கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்கிற தத்துவத்தை முன்வைத்து புரட்சிகரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது இந்தியா டுடே! 

தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் வாய்ப்புள்ள உயர் நடுத்தர வர்க்கத்தினரின் தாறுமாறான ஆசைகளை முன்வைத்து வியாபாரம் செய்யும் (வேறு மாதிரியாகவும் சொல்லலாம்) இந்தியா டுடே இந்த ஊதாரிக் கூட்டத்தினரின் வக்கிரமான ஆசைகளே ஒட்டுமொத்த இந்திய மக்களின் விருப்பம் என்று பேசி வருகிறது.

(கட்டுப்பாடற்ற காதலோ, செக்ஸ் புரட்சியோ தமிழர்களுக்கு புதியன அல்ல. சங்ககால இலக்கியங்களும், அகத்திணைப் பாடல்களும் இதனைப் பலமுறைப் பேசியுள்ளன. ஆனால், இவை எல்லாமும் விதிவிலக்காகத்தான் கூறப்பட்டன. விதியாக அல்ல. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பவற்றை - பரவலாக நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாக சித்தரிக்கும் கேவலமான வேலையைச் செய்கிறது இந்தியா டுடே)


பெண் உடலையும் காமத்தையும் விற்பனைப் பொருளாக்குவது இந்தியா டுடேவுக்கு எப்போதும் வாடிக்கைதான் (அப்புறம் யார்தான் 20 ரூபாய் கொடுத்து வாங்குவார்கள்?). அந்த வகையில், இப்போது "பல துணைகள், உறவுச் சுமை இல்லாத செக்ஸ் என்று காதலை இளம் நகர்ப்புற இந்தியா மறுவரையறை செய்கிறது" என்கிற தலைப்பில் ஒரு புரட்சிகரமான (!) கட்டுரையை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே.

இந்தியா டுடே'வின் பாலியல் புரட்சிகள்

"உறவுச் சுமை இல்லாத செக்ஸ், பல துணைகள்" கட்டுரையில் கூறப்பட்டுள்ள புரட்சிகளில் சில:

"இளைஞர்கள் இப்போது புதிய தேடலுக்கும், பரிசோதனைக்கும் தயாராய் இருக்கிறார்கள். தங்கள் நண்பர்கள் படுக்கையைப் பகிர்வது குறித்து எவரும் அதிர்ச்சி அடைவதில்லை" என்கிறது இந்தியா டுடே (நண்பர் எதிர்ப்பு தெரிவித்தால் அது ரேப் கேசாகிவிடும் என்பது இந்தியா டுடே சொல்லாத செய்தி)

"இந்தியா டுடே எடுத்த சர்வேயின் படி அதில் பங்கேற்றோரில் 28 சதவீதத்தினர் காஷூவல் செக்ஸில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் பலருடன். 41 சதவீதத்தினர் தனக்கும் அந்த வாய்ப்பு வராதா என்று காத்திருக்கின்றனர்" என்கிறது இந்தியா டுடே (எத்தனை பேர் அவர்களது கணவரோ மனைவியோ காஷூவல் செக்ஸில் -அதுவும் பலருடன் - ஈடுபடுவதை சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள்? - என்று கேட்கும் துணிவு இந்தியா டுடேவுக்கு இல்லை)
"பெங்களூரைச் சேர்ந்த 27 வயது பொறியாளர் ஜெயந்த் ஸ்ரீவத்சவா 'இரண்டு ட்ஜன் (24) பெண்களுடன் பாலுறவு வைத்துவிட்டு ஒரு அரேன்ஞ்ட் மேரேஜிக்கு' போகிறார்"

"பெற்றொரும்...பிள்ளைகளின் செயல்களை கண்டும் காணாதுபோல இருந்து விடுகிறார்கள். சண்டிகரைச் சேர்ந்த 50 வயது ஷோபா கபூருக்கு 19 வயதிலும் 17 வயதிலும் மகன்கள் உண்டு. அவர்களின் கேர்ள் ஃபிரண்டுகள் குறித்து அவருக்குத் தெரிந்திருந்தாலும் அவர் எதுவும் இது குறித்து அவர்களிடம் பேசுவதில்லை. 'அவர்களுக்கு அழுத்தங்கள் அதிகம். அதிலிருந்து விடுவித்துக்கொள்வதற்காக அவர்கள் இப்படி இருக்கிறார்கள். எதைச் செய்தாலும் பிரச்சினை வராமல் பாதுகாப்பாக செய்தால் சரி' என்கிறார்."

...இப்படியெல்லாம் போகிறது இந்தியா டுடேவின் அட்டைப்படக் கட்டுரை. பெண்களின் பெயரில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க ஆணாதிக்க மனப்பான்மையுடன் உள்ளது.
  • ஒரு ஆண் 24 பேருடன் பாலுறவு கொண்டுவிட்டு அதன் பிறகு வேறொரு பெண்ணை அரேன்ஞ்ட் மேரேஜ் செய்து கொள்வதாக எழுதும் இந்தியா டுடே, அதேபோன்று 'ஒரு பெண் 24 பேருடன் பாலுறவு கொண்டுவிட்டு அதன் பிறகு அரேன்ஞ்ட் மேரேஜ் செய்து கொள்வதாக' எழுதுமா?
  • தனது இரண்டு மகன்கள் 'அழுத்தங்களிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக கேர்ள் ஃபிரண்டுகளுடன்' தொடர்பு வைத்துக்கொள்வது சரிதான் என்று ஒரு தாய் கூறுவது போல - பெண் குழந்தைகளைப் பெற்ற ஒருதாய் தனது மகள்கள் 'அழுத்தங்களிலிருந்து விடுவித்துக்கொள்வதற்காக பாய் ஃபிரண்டுகளுடன்' தொடர்பு வைத்துக்கொள்வது சரிதான் என்று கூறுவதாக எழுத முடியுமா?
கட்டுரையில்தான் இப்படிப் புரட்சி என்றால், கருத்துக்கணிப்பில் புரட்சி மிதமிஞ்சுகிறது. பலருடன் தற்செயலாக செக்ஸ் உறவு கொள்வது சகஜமானது என்று 33 சதவீதத்தினரும், கூட்டமாக குழுஉறவு நிலையில் இருப்பதை விரும்புவதாக 25 சதவீதத்தினரும் கூறுகிறார்களாம்.

கவின்மலரும் அறிவார்ந்த சிந்தனையும்

காதலை கொத்துபரோட்டா போடும் இந்தியா டுடே கவர்ஸ்டோரியின் அடுத்த பக்கத்தைத் திருப்பினால் அங்கே "கொண்டாட்டமும் எதிர்ப்பும்" என ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் கவின்மலர். அதில் தமிழ்நாட்டில் காதலுக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அந்த எதிர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் களம் இறங்குவதாகவும் கூறியுள்ளார்.

இக்கட்டுரையில் "சமூகத்தைப் பிற்போக்கு சக்திகள் பின்னுக்கு இழுக்கும் போது மக்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் அதை முன்னுக்கு இழுக்கும் வேலையைச் செய்ய வேண்டும்" என்று ஒரு வரி வருகிறது.
சமூகத்தை முன்னுக்கு இழுப்பது என்றால் எப்படி என்று தெரியவில்லை? ஒருவேளை "ஒரு ஆண் 24 பேருடன் பாலுறவு கொண்டுவிட்டு அதன் பிறகு வேறொரு பெண்ணை அரேன்ஞ்ட் மேரேஜ் செய்து கொள்வதுதான்" முன்னுக்கு இழுப்பதாக இருக்கும் போலிருக்கிறது?

"காதலர் தினம் மட்டுமல்ல, எந்த தினமும் கொண்டாட்டத்துடன் மட்டும் நின்றுவிடாமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மாறுவது என்பது சமூகம் அறிவார்ந்து சிந்திக்கிறது என்பதன் அடையாளம்தான்" என்று கூறியுள்ளார் கவின்மலர்.

அப்புறம் என்ன? கட்டற்ற பாலியல் சுதந்திரத்துக்காக போராட சிலர் முன்வந்தால் அதை அறிவார்ந்த சிந்தனை என்றுதானே வகைப்படுத்த முடியும்!

கவின்மலர்: அது போன மாதம் (ஆனந்த விகடன்), இது இந்த மாதம் (இந்தியா டுடே)

இந்தியா டுடே'வின் பெண் உடல் வியாபாரத்துக்கு ஆதரவாகவும் அதற்கு ஒரு முற்போக்கு முகமூடியைக் கொடுத்தும் இப்போது எழுதியுள்ள இதே கவின்மலர்தான் சென்ற மாதத்தில் "பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்க்கிறார்களே" என கண்ணீர் மல்க "அன்பானவர்களுக்கு ஒரு கடிதம்" கட்டுரையை ஆனந்த விகடனில் தீட்டினார். (இங்கே காண்க: 1. டைம்பாஸில் அருவருப்பு வியாபாரம்...! விகடனில் அறிவுரை வியாபாரம்.....!!  2. விகடனுக்கு என்ன தண்டனை, கவின்மலர் ?)

அதில்:

"இந்த குடும்ப அமைப்பும் சமூகமும் பெண்கள் குறித்து என்ன பார்வையை வளரும் குழந்தையின் மனதில் பதிய வைக்கிறது?....பாலினம் கடந்த நட்பு என்கிற ஒன்று சாத்தியம் இல்லாமல் செய்யும் இந்தப் பிரிவினைகள், பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்க்கச் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
"பொழுது போக்கச் செல்லும் திரைப்படங்களும், விளம்பரங்களும் பெண்களை நுகர்வுப் பொருளாகச் சித்தரிக்கின்றன. இத்தகைய துறைகளில் பெண்களைச் சித்தரிக்கும் விதம் குழந்தைகளின் மனங்களில் ஆழமாகப் பாதிகின்றன...ஆகவே, வாய்ப்புக் கிடைக்கும்போது பாலியல் குற்றங்களில் ஈடுபட இவையெல்லாம் ஏற்கனவே அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன"..."மாற்றங்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். நம் துறையில் இருந்து தொடங்க வேண்டும்"

....இப்படி மாற்றங்களை பத்திரிகைத் துறையிலிருந்து தொடங்க வேண்டும் என்று கூறிய கவின்மலர்தான் இப்போது இந்தியா டுடேவின் பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் போக்கிற்கும் சப்பைக்கட்டு கட்டுகிறார்.

கவின்மலரின் இரட்டை வேடம்

"பல துணைகள், உறவுச் சுமை இல்லாத செக்ஸ்" என்று பேசும் இந்தியா டுடே கவர்ஸ்டோரியில் தானும் ஒரு கட்டுரை எழுதிய அதே கவின்மலர் 

"காதலை ஓர் உன்னத உணர்வாக நமக்கு போதித்த சங்க இலக்கியத்தின் மேன்மையைக் கொண்டாடும் தமிழகத்தில், தற்போது காதலுக்கு எதிராகத் தலை தூக்கியிருக்கும் சாதீய பயங்கரவாதத்துக்கு எதிராக" ஒரு கவியரங்கத்தை அவரே ஒருங்கிணைக்கப்போவதாகக் கூறுகிறார். 

14.2.2013 அன்று "வன்மத்தில் சிறைபடுமோ காதல்" என்ற பெயரில் அந்தக் கவியரங்கம் நடக்கிறதாம். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?

காதலும் வேண்டாம், கத்திரிக்காயும் வேண்டாம், செக்ஸ் மட்டுமே போதும். ஒரு ஆண் பல டஜன் பெண்களுடன் பாலுறவு வைத்துக் கொள்ளலாம். கூட்டமாக குழுசெக்ஸில் ஈடுபடலாம். ஆணோ பெண்ணோ தனது துணையை நாளுக்கு நாள் மாற்றிக் கொள்ளலாம். திருமணத்துக்கு வெளியே சக ஊழியருடனோ, முதலாளியுடனோ பெண்கள் தொடர்பில் இருக்கலாம் - இது எல்லாமே இயல்பானதுதான் என்கிறது இந்தியா டுடே.  
இதுதான் காதலை ஓர் உன்னத உணர்வாக நமக்கு போதித்த சங்க இலக்கியத்தின் மேன்மையைக் கொண்டாடும் அழகா?

இதுதான் சமூகத்தை முன்னுக்கு இழுப்பதா? இந்தியா டுடே பெண்கள் குறித்து என்ன பார்வையை வளரும் குழந்தையின் மனதில் பதிய வைக்கிறது? வாய்ப்புக் கிடைக்கும்போது பாலியல் குற்றங்களில் ஈடுபட இது வழிவகுக்காதா? ஆனாலும், இந்தியா டுடேவின் செக்ஸ் புரட்சி எதையுமே தவறு என்று கவின்மலர் கூறவில்லை.

'ஒருவர் பலருடன் கட்டற்ற செக்ஸ் உறவுக்காகப் போராடும்' இந்தியா டுடேவில் குப்பைக் கொட்டும் கவின்மலருக்கு 'காதல் ஒரு உன்னத உணர்வு' என்று பேசும் தகுதி இருக்கிறதா?

"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்." - (மத்தேயு 7:3- 5) புனித பைபிள்.